World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

The logic of trade union politics

"Left" publications in Germany defend strike-breaking by Verdi union leaders

தொழிற்சங்க அரசியலின் தர்க்கம்

ஜேர்மனியில் ''இடது'' வெளியீடுகள் வெர்டி தொழிற்சங்க தலைவர்கள் வேலைநிறுத்தத்தை உடைத்ததை ஆதரிக்கின்றன

By Ulrich Rippert
29 June 2006

Back to screen version

ஜூலை மாத நடுவில் சிறிது வெற்றியுடன் முடிவடைந்த பல்கலைக் கழக மருத்துவமனைகளில் பணிபுரியும் ஜேர்மன் மருத்துவர்களின் மூன்று மாதகால வேலை நிறுத்தம் ஜேர்மனிய வரலாற்றில் போருக்குப் பிந்தைய கால வரலாற்றில் வேலை நிறுத்தங்களை முறிக்கும் முயற்சிகளில் மிக அப்பட்டமான வெளிப்பாட்டின் உதாரணங்களில் ஒன்றாக அமைந்தது காணப்பட்டது. Verdi (Vereinigte Dienstleistungsgewerkschaft) எனப்படும் பொது சேவைத்துறை தொழிற்சங்கம் மற்றும் அதன் தலைவர் Franz Bsirske இணைந்து மருத்துவர்களால் நடத்தப்பட்ட வேலைநிறுத்தத்தை திட்டமிட்டு தாக்கி அழிவிற்குள்ளாகினர்.

வேலை நிறுத்தத்தின்போது Bsirske உம் Verdi நிர்வாகக் குழுவின் மற்ற உறுப்பினர்களும் "மருத்துவ தொழிலுக்கு கொடுக்கப்படும் மிகக்கூடுதலான சலுகைகளைப் பற்றி" எச்சரிக்கை விடுத்ததுடன் தாதியர்களையும் மற்றைய மருத்துவமனை ஊழியர்களையும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த மருத்துவர்களுக்கு எதிராக தூண்டிவிடவும் முயன்றனர். "மருத்துவர்களின் விஷேட சலுகைகள்" மற்ற தொழிலாளர்களின் செலவில் கொடுக்கப்படுகிறது என வாதிட்ட வெர்டியின் நிர்வாகச் செயல் உறுப்பினர்கள், "மருத்துவமனைகளுக்கு கொடுக்கப்படும் வரவுசெலவுத்திட்ட தொகை" ஒரு குறிப்பிட்டளவே என்றும் நிர்ணயிக்கப்பட்டள்ளது என்றும் ஊழியர்களின் ஒரு பிரிவினருக்கு கூடுதலாக வழங்குவது என்றால் அது மற்றவர்களின் இழப்பினால்தான் என்றும் வாதிட்டனர்.

Verdi யின் தந்திரபாயங்களால் அச்சமடைவதற்கு மருத்துவர்கள் மறுத்தபோது, தொழிற்சங்கம் ஒரு படி மேலே சென்றது. 22,000 மருத்துவமனை மருத்துவர்களில் பெரும்பாலானவர்கள் மற்றொரு சங்கமான மார்பேர்க் கூட்டமைப்பு (Marburg Federation) உறுப்பினர்களாக இருக்கையில், தன்னுடைய சங்க உறுப்பினர்கள் இல்லை என்றாலும் அவர்களுக்காக தான் கூட்டாக பேரம் பேசும் நிலையை Verdi ஏற்றுக்கொண்டது.

அனைத்து விதங்களிலும், அரச வேலைகொடுப்போர் சங்கம் கொடுக்கத் தயாராக இருந்த ஒப்பந்தத்தில் இருந்து Verdi பேரம் பேசியிருந்த ஒப்பந்தம் பின்னடைவைத்தான் கொண்டிருந்தது; வேலைநிறுத்தம் செய்திருந்த மருத்தவர்கள் இதை ஏற்கனவே நிராகரித்திருந்தனர். ஆயினும்கூட Verdiயும் அரச தொழில் வழங்குனர்களும் மருத்துவர்கள் தங்கள் வேலைநிறுத்தத்தை கைவிட்டு சுமத்தப்படும் ஒப்பந்தத்தை ஏற்க வேண்டும் என்று இறுதி எச்சரிக்கை விடுத்தனர். தொழிற்சங்க அதிகாரத்துவத்திற்கு இதில் வெற்றி கிடைக்கவில்லை. மருத்துவர்கள் தங்கள் போராட்டத்தை தொடர்ந்து இறுதியில் சற்றே கூடுதலான நலன்கள் கொண்ட ஒப்பந்தத்தை அடைந்தனர்.

உலகம் முழுவதும் காணக்கூடிய வளர்ச்சியான முதலாளிக்கு ஒரு போலீஸ் கையாட்கள் போல் தொழிற்சங்கங்கள் தங்களை மாற்றிக் கொள்ளுதல் நடந்தாலும், Verdi இவ்வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த மருத்துவர்களின் விவகாரத்தில் செய்ததுபோல் அவை அந்த அளவிற்கு அப்பட்டமானதாக இல்லை. இதையொட்டி, தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் பாவாடையினை பிடித்துக்கொண்டு தொங்கும் ஏராளமான "இடது" தீவிரவாதக் குழுக்களுக்கு Verdi எடுத்த நிலைப்பாடு கணிசமான இடர்பாடுகளை தோற்றுவித்தது.

1960 களின் கடைசிப் பகுதியில் இருந்து வெளிவரும் மாதாந்திர ஏடான Sozialismus (சோசலிசம்) என்பதை பொறுத்த வரையில் இது குறிப்பிடத்தக்க வகையில் உண்மையாகும். இடது சார்பு உடைய தொழிற்சங்க அதிகாரிகளின் கருத்தை கூறும் பதிப்பாக இது கருதப்படுகின்றது. அண்மையில் தொழில் மற்றும் சமூக நீதிக்கான தேர்தல் மாற்றீடு (Electional Alternative Labour and Social Justice-WASG) அமைப்பின் வளர்ச்சியின் ஒரு முக்கிய பங்கை இது கொண்டுள்ளது.

தன்னுடைய ஜூன் மாதப் பதிப்பில் Sozialismus பத்திரிகையின் இணைஆசிரியர் மிகையில் வென்டல் (Michael Wendl), Verdi இன் ஊதிய ஒப்பந்தம் பற்றி விரிவாக ஆராய்ந்துள்ளார். மருத்துவர்கள்பால் Verdiயின் விரோதப் போக்கை வெளிப்படையாக இவர் விவாதித்தாலும், தொழிற்சங்கம் வேலைநிறுத்தத்தை உடைத்த குற்றம் செய்ததாக வெண்டலால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை; எனவே பொதுப் பணித்துறை உறுப்பினர்களின் சார்பாக Verdi கொண்ட உடன்பாட்டை பற்றி அவர் ஏதும் குறைகூறவில்லை. மருத்துவர்கள் சங்கத்தின் சார்பாக பேரம் பேசிப் பெறப்பட்ட "மிகக் குறைவான மருத்துவர்களின் ஊதிய உயர்வு" Verdiக்கு ஒரு வெற்றி; ஏனெனில் "வேலைபுரியும் மற்றைய குழுக்களின் இழப்பில் இந்தப் மறுபகிர்வு நடைபெறவில்லை" என்று அவர் கூறுகிறார்.

மிகக் குறைவான ஊதிய உயர்வு, அதாவது முறையான கோரிக்கைகள் ஒடுக்கப்பட்டது என்பது இப்பொழுது தொழிலாளர்களிடையே ஒற்றுமை உணர்வு தேவையென்பதாக கண்ணுறப்படுகிறது! இதுகாறும் இத்தகைய வகையிலான பிரச்சாரம் முதலாளிகளுக்காக மட்டுமே வாதிடும் ஆதரவாளர்களால்தான் கூறப்பட்டு வந்தது.

மார்பேர்க் கூட்டமைப்புடன் இல்லாமல் Verdiயுடன் மருத்துவர்களுக்கான ஒழுங்கு உடன்பாட்டிற்கு வந்தது" என்பது "உயர்ந்த அளவு அடையாள முக்கியத்துவத்தை" கொண்டுள்ளது என்று வெண்டல் குறிப்பிட்டுள்ளார். Verdiயின் வேலைநிறுத்தத்தை உடைக்கும் பங்கினை வெண்டல் ஆதரிக்கிறார் என்பதைத்தான் இந்த அறிக்கையில் இருந்து நாம் முடிவாக எடுத்துக் கொள்ளமுடியும்.

பப்லோவாத ஐக்கிய செயலகத்துடன் (Pabloite United Secretariat) இணைந்துள்ள Avanti (முன்னேறுவோம்) என்னும் இதழ், Sozialismus பத்திரிகை எடுத்த அரசியல் நிலைப்பாட்டிற்கு ஒப்பான முடிவைத்தான் எடுத்துள்ளது; ஆனால் இன்னும் வெளிப்படையான முறையில் அது பேசுகிறது. மருத்துவர்கள் "குழு விஷேடசலுகைகளை" தக்க வைத்துக்கொள்ளுகின்றனர், "ஏதோ ஒரு நல்ல வேலையை குறைவான ஊதியத்திற்குச் செய்து கொண்டிருப்பது போல்" நடந்து கொள்ளுகின்றனர் என்றும் ஏடு குற்றம் சாட்டியுள்ளது.

Avanti தொடர்ந்து எழுதியுள்ளதாவது: "மற்றவர்களை போலவே மருத்துவமனையில் ஈடுபட்டுள்ள தொழில்களில் ஒருவர்தாம் என்பதை, முக்கியமாக மருத்துவமனை ஊழியர்கள் உணர மறுக்கும் வரையிலும், போராடுவதற்கு அவர்கள் தயாராக இல்லாத நிலையிலும், மார்பேர்க் கூட்டமைப்பில் உள்ளது போலன்றி Verdi சங்கத்தின் உறுப்பினர்களாக இருக்கும் 600 மருத்துவர்களைப்போல் மருத்துவமனை நிலைமைகளில் மொத்தமாக முன்னேற்றத்திற்கு அனைத்துப் பிரிவினருடனும் போராடவேண்டும் என்று நினைக்கவில்லை என்றால், அவர்களுடைய நடவடிக்கைகள் தங்களுடைய குழு நலன்களை மத்தியத்துவப்படுத்துவதைத்தான் காட்டுகிறது என்று பொருள்படுவதோடு, அரசியல்ரீதியாக பிற்போக்குத்தனமானது ஆகும்."

இப்படிப்பட்ட வகையில் Franz Bsirske கூட கூறியிருக்க முடியாது. Verdiயின் ஆணைகளுக்கு தாழ்ந்து மருத்துவர்கள் நடக்காவிட்டால், அவர்களுடைய போராட்டம் "அரசியரீதியாக பிற்போக்கானது." என அவர் கூறினார்.

உண்மை என்னவென்றால், மார்பேக் கூட்டமைப்பு சில ஆண்டுகளுக்கு முன்பு Verdiயினால் பேரம் பேசப்பட்டிருந்த ஊதியக் குறைப்புக்கள், மோசமான வேலை நிலைமைகள் இவற்றை மருத்துவர்கள் பொறுத்துக் கொள்ளத் தயாராக இல்லை என்பதால் அத்துடன் உறவை முறித்துக் கொண்டது. ஆனால் மாவட்ட மருத்துவ மனைகளில் புதிய வடிவில் 70,000 டாக்டர்கள் புதிய வேலைநிறுத்தத்தில் இப்பொழுது ஈடுபட்டுள்ளதன் மூலம் தொடரும் மருத்துவர்கள் காட்டும் போர்க்குணத்தை வரவேற்பதற்கு பதிலாக, இதை முழுப் பொது சேவைதுறையின் மீதான தாக்குதலுக்கு எதிரான போராட்டத்தின் அடிப்படை என்று கொள்ளாமல் Sozialismus உம், Avanti உம் Verdi அதிகாரத்துவத்தின் ஆணைகளுக்கு நிபந்தனையற்ற சரணடைந்து நிற்காமல் இருப்பதற்காக மருத்துவர்களை கண்டிக்கின்றன.

மார்பேக் கூட்டமைப்பிற்கு எதிராக Verdi கையாண்ட தந்திரோபாய வகைகளை சிறப்பாக வெண்டல் விளக்கியுள்ளார். மருத்துவர்களுடைய ஊதியத்தை பற்றிய பேச்சுவார்த்தைகள் தம் மூலம் தான்தான் கொண்டு வரவேண்டும் என்பதற்காக Verdi, முதலாளிகளுக்கு அதற்கு "ஒப்புமையில் எளிதான உடன்பாட்டிற்கு தயாராகியது". வேறுவிதமாகக் கூறினால், பொதுச்சேவைத்துறையில் தங்களுடைய ஏகபோக பேரம் பேசும் உரிமையை முதலாளிகள் ஒப்புக் கொள்ள வேண்டும் என்பதற்காக, Verdi நீண்டநேர வேலை, போட்டிமுறையுடைய குறைவூதியங்கள் மற்றும் முழுப் பொதுச்சேவை பிரிவின் நிலைமைகளையும் இல்லாதொழிக்கும் கணக்கற்ற உபவிதிகளுக்கும் உடன்பட்டுள்ளது.

அத்தகைய மோசடித்தனமான நிலைப்பாடு கூட, ஊதிய பேச்சுவார்த்தைகள் மீது Verdi தான் முழுக்கட்டுப்பாடு காட்ட வேண்டும் என்பதற்கு ஆதரவு தரவேண்டும் என்ற கருத்திலிருந்து Sozialismus, Avanti போன்றவற்றை தடுக்கவில்லை. இரண்டு ஏடுகளுமே அதன் உறுப்பினர்களை அது பல காலமாக குறுகிய கட்டுப்பாட்டினுள் வைத்துள்ள பொதுச்சேவை தொழிற்சங்க ஒற்றுமையை கண்மூடித்தனமாக மிகைப்படுத்துகின்றன. இப்பொழுது மற்றைய துறைகளில் நடைபெறும் போராட்டங்களை ஊதிய பேச்சுவார்த்தைகளில் தனது நிலையை பலப்படுத்திக்கொள்ள பயன்படுத்துவதுடன், Verdi தொழிலாள வர்க்க இயக்கத்தின் எவ்விதமான சுயாதீன முயற்சியையும் ஒடுக்க முனைகின்றது.

தொழிற்சங்க முன்னோக்கின் தர்க்கம்

"இடது" தொழிற்சங்கவாதத்தின் கருவிகள் என்று தங்களை நீண்ட நாளாகக் கூறிக் கொண்டிருக்கும் Sozialismus, Avanti இரண்டும், அந்த வடிவமைப்பிற்குள் தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் மீது சில குறைகளை கூறத் தயாராக இருந்து, இப்போது வேலைநிறுத்தத்தை உடைக்கும் வகையில் நடந்து கொள்ளும் Verdiக்குப் பின்னால் தயக்கமின்றி செல்வதை எவ்வாறு ஒருவர் விளங்கிக்கொள்வது?

தொழிற்சங்க அதிகாரத்துவத்துடன் தனிப்பட்ட நெருக்கமான தொடர்புகள் ஒரு முக்கியமான பங்கை இங்கு வகிக்கின்றது என்பதில் ஐயமில்லை. Sozialismus உடன் நெருக்கமான தொடர்பை கொண்டுள்ள WASG தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் ஊழல் நிறைந்த சூழ்நிலையில் இருந்துதான் ஆட்சேர்ப்பை நடத்துகின்றது.

ஆனால் இத்தகைய தனிப்பட்ட தொடர்புகளை காட்டிலும் முக்கியமானது Sozialismus மற்றும் Avanti பிரதிபலிக்கும் அரசியல் முன்னோக்கு ஆகும். தொழிலாள வர்க்கம் சோசலிசத்தை நோக்கி வளர்ச்சி அடைவது என்பது தொழிற்சங்கங்கள் மூலம்தான் இயலும் என்று இரண்டுமே கருத்துடையவை ஆகும். வர்க்கப் போராட்டத்தை அவர்கள் முற்றும் முதலும் தொழிற்சங்க போராட்டமாக கருதி சமூக ஜனநாயகம் மற்றும் தொழிற்சங்கங்களில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ள விரும்பும் அரசியல் இயக்கத்தை நிராகரிக்கின்றன. அவற்றைப் பொறுத்தவரையில், தொழிற்சங்க அதிகாரத்துவம் மற்றும் சமூக ஜனநாயகத்தின் ஆற்றலிழக்க செய்யும் செல்வாக்கிற்கு எதிரான போராட்டம் "குறுங்குழுவாதம்'' ஆகும்.

இந்த முன்னோக்கு தன்னுடைய தவிர்க்கமுடியாத தர்க்கத்தை கொண்டுள்ளது. தமது வலதுசாரி கொள்கைகளினால் தொழிற்சங்கங்கள் பெருகிய முறையில் உறுப்பினர்களை இழக்கும் நேரத்தில், Sozialismus, Avanti ஆகியவை இதற்கு விடையிறுக்கும் வகையில் தொழிற்சங்க அதிகாரத்துவத்திற்கு நெருக்கமாக நகர்கின்றன. அவற்றை பொறுத்தவரையில், துருப்பிடித்த தொழிற்சங்கக் அதிகாரத்துவத்திற்கு பெருகி வரும் எதிர்ப்பை, தொழிலாளரின் சுயாதீன இயக்கத்திற்கான முதல் படியாக கொண்டு ஒரு அரசியல் திசையை ஊக்குவிக்காது தாங்கள் போற்றிவரும் தொழிற்சங்கள் மீதான தாக்குதல் என்று கருதுகின்றன.

இதுதான் மருத்துவர்களின் வேலைநிறுத்தத்தை அவர்கள் எதிர்கொள்ளும் தன்மை பற்றி விளக்குகிறது. இளம் மருத்துவர்கள் மருத்துவமனைகளில் இருக்கும் பொறுத்துக் கொள்ள முடியாத நிலைமைகள் மற்றும் Verdi ஆணையிடும் வறிய ஊதியங்களை சகித்துக் கொள்ள முடியாமல் இருக்கும் பின்னணியில், இந்த ஏடுகள் மார்பேர்க் கூட்டமைப்பின் செயல்களை தொழிற்சங்க ஒற்றுமை மீதான தாக்குதல் என்றும் மற்றும் மிகமிஞ்சிய தன்னல நலன்களாகத்தான் காண்கின்றன; இலாப அமைப்புக்கு வாழ்வின் ஒவ்வொறு கூறுபாட்டையும் அடிபணியச்செய்யும் நிலைமைக்கு எதிரான கிளர்ச்சியின் ஆரம்பமாக அவர்கள் இதை காணவில்லை. இந்த கிளர்ச்சி அரசியல்ரீதியாக வளர்க்கப்பட்டு, விரிவுபடுத்தப்பட்டு ஒரு சோசலிச திசையில் வழிகாட்டப்பட வேண்டும்; அத்தகைய பணி தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் சிதைந்து வரும் செல்வாக்கிற்கு எதிரான போராட்டத்தின் மூலம்தான் முடியும்.

சோசலிச தொழிலாளர்கள் இயக்கத்தின் முழு வரலாற்று அனுபவமும் தொழிற்சங்கங்கள் தொடர்ச்சியாக அரசியலில் வலதுபுறம் சாய்வதை காட்டியுள்ளன; வர்க்கப் போராட்ட காலங்களில் வெளிப்படையாவே பிற்போக்குத்தனத்தின் கட்சியில் அவை நிற்கின்றன.

தன்னுடைய அரசியல் வாழ்வில் பெரும் பகுதியில் ஜேர்மனிய மார்க்சிஸ்டுகளில் மிக உயர்ந்தவர்களில் ஒருவராகிய ரோசா லக்ஸம்பேர்க் சோசலிச தலைமையிலான தொழிற்சங்க மாநாடுகள் என்று பகட்டாக கூறிக் கொள்ளும் மாநாடுகளில் பேசத் தடைவிதிக்கப்பட்டிருந்தார். சரியாக நூறாண்டுகள் முன்பு "வெகுஜன வேலைநிறுத்தம்" பற்றிய விவாதம் ஒன்றில் லக்சம்பேர்க் உட்பட சோசலிச இயக்கத்தின் புரட்சிப் பிரிவு அனைத்தின்மீதும் தொழிற்சங்கக் அமைப்பு காட்டிய குரோத உணர்வு வெறித்தன்மையைக் கொண்டிருந்தது. செப்டம்பர் 1906ல், மான்ஹைம் நகரில் நடைபெற்ற சமூக ஜனநாயக கட்சி (SPD) மாநாட்டில் தொழிற்சங்க தலைவர்கள் கட்சியின் நிர்வாகக் குழு வருங்காலத்தில் அனைத்துப் பிரச்சினைகளையும் தங்கள் தலைமையுடன் விவாதிக்க வேண்டும் எனக் கூறிய தீர்மானத்தை இயற்றினர்.

பின்னோக்கிப்பார்த்தால், நீண்டகால நோக்கில் இந்த முடிவு பேரழிவுதரக்கூடிய விளைவுகளைத்தான் கொடுத்துள்ளது; அதாவது ஆகஸ்ட் 1914ல் போருக்கான கடன்கள் பெறுவதற்கு ஜேர்மன் சமூக ஜனநாயக கட்சி கொடுத்த உடன்பாடு, இறுதியாக 1933 ஏப்ரல் மாதம் ஹிட்லர் ஆட்சியுடன் ஒத்துழைப்பதாக ஜேர்மனிய தொழிற்சங்க கூட்டமைப்பு அளித்த உறுதி ஆகியவை இதில் இருந்து வந்தவைதாம்.

இப்படி தொடந்த முறையில் வலதுபக்கத்திற்கு தொழிற்சங்கங்கள் பாய்வது தனிப்பட்ட மனிதர்களின் ஊழலின் விளைவு அல்ல; ஆனால் இறுதி ஆய்வில் இது தொழிற்சங்கங்களின் தன்மையில் இருந்து விளைவதாகும். அவை பொருளாதாரத் துறையில் தொழிலாளர்களை பிரதிபலிக்கின்றனர், அவர்களுடைய உழைப்பின் விற்பனையாளர்போல் செயல்படுகின்றனர்; இதற்காக மிக உயர்ந்த விலையையும் அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

1988ம் ஆண்டு தொழிற்சங்கங்கள் வரலாறு பற்றிய உரையில் உலக சோசலிச வலைத் தள ஆசிரியர் குழுவின் தலைவரான டேவிட் நோர்த் பின்வருமாறு விளக்கினார்: "முதலாளித்துவ உற்பத்தி உறவுகளின் அடிப்படையில் நின்றுகொண்டு, தொழிற்சங்கங்கள் தங்கள் இயல்பிலேயே வர்க்கப் போராட்டத்தின்பால் அடிப்படை ரீதியாக குரோதப் போக்கை கொள்ள நிர்பந்திக்கப்படுகின்றன.

தொழிலாளர்களிடம் இருந்து உபரிமதிப்பு கறந்தெடுக்கப்பட வேண்டிய பொது நிலைமைகளை உறுதிசெய்யவும் உழைப்புச் சக்தியின் விலையை நிர்ணயிக்கவும் முதலாளிகளுடன் உடன்பாடுகளை உத்திரவாதம் செய்வதை நோக்கிய தங்களது முயற்சிகளை வழிநடத்தும் வகையில், தொழிற்சங்கமானது பேசப்பட்ட ஒப்பந்தங்களின் விதிமுறைகளுக்கு ஏற்ப தங்களது உறுப்பினர்கள் தங்களது உழைப்புச் சக்தியை அளிப்பதை உத்திரவாதம் செய்வதற்கு கடப்பாடுடையனவாக இருக்கின்றன. கிராம்ஸ்கி குறிப்பிட்டபடி, "தொழிற்சங்கங்கள் சட்டநெறியைப் பிரதிபலிக்கின்றன; தங்கள் உறுப்பினர்கள் அந்தச் சட்டத்தை மதிக்குமாறு செய்யும் இலக்கைக் கொண்டுள்ளன.''

"சட்ட நெறி பாதுகாப்பு என்றால் வர்க்கப் போராட்டத்தை ஒடுக்குதல் என்று ஆகும். அது அவற்றின் இயல்பான தன்மையின் காரணமாக அர்த்தப்படுத்துவது என்னவெனில் தொழிற்சங்கங்கள் இறுதியாக அவை உத்தியோகபூர்வமாக அர்ப்பணம் செய்துள்ள வரம்புக்குட்பட்ட குறிக்கோள்களைக்கூட நிறைவேற்றும் அவற்றின் திறனை பலவீனப்படுத்துகின்றது என்பதாகும். இங்குதான் தொழிற்சங்கம் தடுமாறுவதின் முரண்பாட்டின் அடிப்படை நன்கு புலப்படும்''.

நோர்த் முடிவுரையாக கூறுவது: முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் தவிர்க்கமுடியாத கூட்டாளி என்று கற்பனை செய்வது ஒரு புறம் இருக்கட்டும், அவற்றை சார்ந்திருக்க வேண்டியவையாக கற்பனை செய்தல் என்பது, முக்கியமாக சோசலிசவாதிகளுக்கு பெரும் துன்பகரமானது என்பதில் பிரமை ஒன்றும் இருக்க முடியாது.''.

எட்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்த உரையில் கொடுக்கப்பட்டுள்ள ஆய்வு ஒவ்வொரு விதத்திலும் உறுதியாக்கப்பட்டுள்ளது. வலதுபக்கத்திற்கு பாயும் தன்மை, தொழிற்சங்கங்களின் சரிவு என்பது ஒரு பொது சர்வதேச நிகழ்வுப்போக்காகிவிட்டது. தொழிற்சங்கங்கள் தங்கள் வேறுபாடுகளை ஐரோப்பாவில் உள்ள வலதுசாரி பழைமைவாத அரசாங்கங்களுடன் பெருகிய முறையில் விரோதப் போக்கை கொண்டுள்ள மக்களுக்கு எதிராக அரசியல் ஒழுங்கில் தங்கள் சக்தி என்னும் தலையீட்டால் களைந்து கொள்ளும் நிலையை உருவாக்கிக் கொண்டிருப்பதை காணமுடிகிறது.

பிரான்சில் தொழிற்சங்கங்கள், வேலைகள் அழிப்பிற்கு எதிராக நடந்த வெகுஜன ஆர்ப்பாட்டங்களுக்கு விடையிறுக்கும் வகையில் உள்துறை மந்திரி நிக்கோலா சார்கோசியுடன் பேச்சு வார்த்தைகளுக்கு உடன்பட்டன; இதன் விளைவாக கோலிச இயக்கத்தின் மிக வலதுசாரி அடக்குமுறைகளை வலுப்படுத்தின. இத்தாலியின் தொழிற்சங்கங்கள் நிபந்தனையற்ற முறையில் ரோமானோ போடியின் அரசாங்கத்திற்கு ஆதரவு கொடுக்கின்றன. அதன் அரசியல் செயற்திட்டமும் அங்கேலா மேர்க்கலின் தலைமையில் உள்ள ஜேர்மனியின் பழைமைவாத-சமூக ஜனநாயக கட்சி கூட்டணியின் கொள்கைக்கு ஒத்துத்தான் இருக்கிறது. பிரேசிலில் "இடது" எனக் கூறிக் கொள்ளும் தொழிற்சங்க அமைப்புக்களின் தலைவராகிய லூலாவும் ஒரு புதிய நம்பிக்கை என்று Sozialismus இனால் புகழப்பட்டவர். இவர் ஒரு வலதுசாரி அரசாங்கத்தை நிறுவியுள்ளார்; அது சர்வதேச நாணய நிதியத்தின் முழு நம்பிக்கையையும் அனுபவித்து வருகிறது.

பார்க்கவும்: மார்க்சிசமும் தொழிற்சங்கங்களும் . A lecture by David North


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved