World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

Germany: Ten thousand demonstrate against university fees

ஜேர்மனி : பல்கலைக் கழக கட்டணங்களை எதிர்த்து 10,000 பேர் ஆர்ப்பாட்டம்

By Helmut Arens and Francoise Thull
6 July 2006

Back to screen version

கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் (Christian Democratic Union-CDU) மாநில நிர்வாகம் ஒரு தவணைக்கு 500 யூரோக்கள் பொதுக்கட்டணம் எனக் கொண்டுவரவுள்ள திட்டத்தை எதிர்த்து ஹெஸ்ஸ மாநிலம் முழுவதிலிருந்தும் வீஸ்பாடன் நகரத்தில் பல்கலைக்கழக மாணவர்கள், ஆசிரியர்கள், பள்ளி மாணவர்கள் பெற்றோர்கள் என்று 10,000க்கும் மேலானவர்கள் ஜூன் 29 அன்று ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர். பட்டப் படிப்புக்களுக்கு பருவத்திற்கு 1,500 யூரோக்கள் வரம்பாக நிர்ணயிக்கப்படலாம் என்றும் இது ஐரோப்பிய ஒன்றியத்தின் மற்ற பகுதிகளில் இருந்து வரும் மாணவர்களுக்கும் பொருந்தும் என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜூலை மாதம் மாநிலச் சட்டமன்றத்தில் இதற்கான சட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

அத்தகைய பல்கலைக்கழக கட்டணத்தை எதிர்த்து நாடுதழுவிய நடவடிக்கை தினத்தின் ஒரு பகுதியாகத்தான் வீஸ்பாடன் ஆர்ப்பாட்டம் இருந்தது. அதே நாளில் தவணைக்கு 500 யூரோக்கள் என்று பயிற்சிக் கட்டணத்தை அறிமுகப்படுத்த இருக்கும் கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் தலைமையில் இருக்கும் நகர மன்றத்தின் முடிவிற்கு எதிராக ஹம்பர்க்கில் 3,500 மாணவர்கள் எதிர்ப்புக்கள் தெரிவித்தனர்.

இதுவரை கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் ஆளும் மாநிலங்களான பவேரியா, பாடன்-வூட்டெம்பேர்க், நோர்த் ரைன்-வெஸ்ட்பாலியா மற்றும் லோயர் சாக்சனி ஆகியவையும் பயிற்சிக் கட்டணம் பற்றி அறிமுகப்படுத்தியுள்ளன அல்லது முடிவு எடுத்து விட்டன.

அனைத்து ஹெசியன் பல்கலைக்கழகங்களிலும் நிகழ்வுற்ற, கிட்டத்தட்ட இரு மாத கால பிரச்சாரத்தின் உச்சக் கட்டமாகத்தான் வீஸ்பாடனின் நடவடிக்கை தினம் அமைந்தது. மாநிலத்தின் அரசியலமைப்பு இலவசப் பள்ளி மற்றும் பல்கலைக்கழக படிப்பிற்கு உறுதியளித்தாலும்கூட, மாநில அரசாங்கம் மே 5ல் இருந்து கட்டணப் பயிற்சியை அறிவிக்கும் முடிவு எடுத்ததில் இருந்து எதிர்ப்பு பிரச்சாரம் தொடங்கியது.

அப்பொழுது முதல் ஆயிரக்கணக்கான மாணவர்கள் திரண்டிருந்த கூட்டங்களும் பரந்த வகையிலான எதிர்ப்பு நடவடிக்கைகளும் கிட்டத்தட்ட அன்றாடச் செயலாக ஹெஸ்ஸி முழுவதும் நடைபெற்று வருகின்றன: மார்பெர்க்கில் பல்கலைக்கழக நிர்வாக அலுவலகங்கள் பல நாட்கள் ஆக்கிரமிக்கப்பட்டன; கார்பாதைகள், டிராம் வழிகள் மற்றும் முக்கிய சந்திகள் அனைத்தும் மார்பர்க் மற்றும் பிராங்பேர்ட்டில் தடுப்பிற்கு உட்படுத்தப்பட்டன.

ஹெஸ்ஸியாவின் அறிவியல் துறை மந்திரியான யூடோ கோர்ட்ஸ் மாணவர்கள்மீது சுமத்தப்பட்ட கட்டணம் "நியாயமானது" என்று அறிவித்தார்: ஏனெனில் புதிய சட்டம் மாணவர்களை கல்வி முடியும் வரை திருப்பிக் கொடுக்கத் தேவையில்லாத கல்விக் கடன்களை வாங்க அனுமதிக்கிறது என்றார்.

மாநில அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள நிபந்தனைகளை கடந்து செல்வதற்கான சட்டபூர்வமான மன்னிப்பாக கடனை பயன்படுத்ததுதல் ஹெஸ்ஸிய அரசாங்கத்தால் மேற்கோளிடப்பட்டது. சட்டத்தின் தன்மைகளை பற்றி ஆராய்வதற்கு முக்கியமான பேர்லின் வக்கீல் ஒருவருக்கு மாநில அதிகாரம் உத்திரவிட்டிருந்தது. சமூக ஜனநாயக கட்சி (SPD) இன் கல்விப்பிரிவு செய்தித் தொடர்பாளரான மைக்கேல் சீபெல் இந்நடைமுறையை, "ஒரு ஒழுங்கான விளைவிற்கு" வழிவகுக்கும் என்று நியாயப்படுத்தியுள்ளார்.

ஜேர்மன் மாணவர்கள் குழு இத்தகையை கருத்துக்களை நிராகரித்தது; மேலும் இக்கட்டணம் என்பது ஜேர்மனியில் கல்வி பயில்வதற்கான "செலவினத்தை அதிகரித்து கடினமாக்கிவிடும்" என்ற முடிவிற்கு வந்துள்ளது. அனைத்து மாணவர்களிலும் கிட்டத்தட்ட 25 சதவிகிதத்தினர் மாதம் ஒன்றுக்கு 600 யூரோக்களுக்கும் குறைவான வருவாயில் தப்பித்து வாழ்கின்றனர் என்று மாணவர் குழுவின் தலைவரான ஹான்ஸ் டீடெர் ரின்கென்ஸ் கூறினார். "எனவே பெரும்பாலான மாணவர்களுக்கு கூடுதலான 500 யூரோக்கள் செலவினம் என்பது ஒன்றும் சிறியளவு பணமல்ல" என்றும் அவர் தெரிவித்தார்.

வீஸ்பாடன் ஆர்ப்பாட்டத்தில் பல பதாகைகளும் சுவரொட்டிகளும் கல்வி என்பது ஒரு அடிப்படை உரிமை என்று பறைசாற்றின. ஒரு பதாகை கூறியது: "பயிற்சிக் கட்டணத்திற்கு எதிராக -- ஏனெனில் கல்வி என்பது ஒரு அடிப்படை மனித உரிமை". மற்றொன்றில் எழுதப்பட்டிருந்ததாவது: "செல்வம் கொழிக்கும் தத்தெடுக்கும் பெற்றோர்களை தேடுகிறேன்"; மற்றும் ஒரு பதாகை மாநில முதலமைச்சர் ரோலண்ட் கொக் இனை சித்திரித்துக் கூறியது: "கவிஞர்களினதும் தத்துவவாதிகளினதும் நாட்டினை தூக்கிலிடுபவர்".

ஆர்ப்பாட்டத்தில் முக்கிய பேச்சாளராக இருந்த, கீஸன் நகர பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவரான உமுட் சோன்மெஸ் மாநில அரசாங்கத்தின் திட்டங்கள் "ஒரு பெரும் சவால்" என்றும் தக்க முறையில் அதற்கு விடையிறுக்கப்படும் என்றும் கூறினார். மாநில அரசாங்கம் மற்றும் பிரதமர் கோக் கல்வியில் சமவாய்ப்பை நாசப்படுத்துகின்றனர் என்றும் அரசாங்கத்தின் அரசியல் போக்கு முழுவதற்கும் எதிராக போராட்டம் நடத்தப்பட வேண்டும் என்றும் கூறினார். "எனவேதான் நாம் பயிற்சிக் கட்டணத்தை தடுத்து நிறுத்துவது மட்டுமல்லாது; சமவாய்ப்புக்களை நாம் கட்டாயமாக பெருக்க வேண்டும்."

ஆஸ்திரியாவில் இதேபோன்ற மாணவர் கட்டண உயர்வு அனுபவங்கள், பல பிரிவுகளிலும் மாணவர் சேர்க்கையை 15 சதவிகிதம் குறைத்ததையும், இதனால் பண வசதி குறைந்த குடும்பங்களில் இருந்து இன்னும் குறைவாக விண்ணப்பிக்கப்பட்டன என்றும் காட்டுகிறது.

பல்கலைக்கழகங்களுக்கு இந்த வருவாய் நலன் தரும், அதையொட்டி மாணவர்களுக்கு கூடுதலான வசதிகள் கொடுக்கப்படலாம் என்று கூறுபவர்களின் வாதத்தையும் சோன்மெஸ் நிராகரித்தார். இது குறுகிய காலத்தில் ஏற்படலாமே ஒழிய, நீண்டகால அடிப்படையில் மாநில வரவுசெலவுத் திட்டத்தில் நெருக்கடியான நிலையில் பொதுக்கல்விக்கு நிதி கொடுப்பதில் இன்னும் சரிவைத்தான் ஏற்படுத்தும் என்று அவர் கூறினார்.

Frankfurter Rundschau பத்திரிகையின் கருத்தின்படி மற்ற நாடுகளில் இருந்து கிடைக்கும் உதாரணங்களும் மாணவர் கட்டண வசூலிப்பு அறிமுகம் பல்கலைக்கழகங்களின் நிதி நிலையைக் குறைவான காலத்திற்குத்தான் உயர்த்துகிறது எனக் காட்டுகின்றன. நீண்ட கால அடிப்படையில், அத்தகைய கட்டண அறிமுகம் அரச நிதியுதவியில் இருந்து தனியார் நிதியியளிப்பிற்கு உறுதியாக கல்விப் போக்கை மாற்றி விடுகிறது.

அதிகாரபூர்வ அரசியல் வட்டங்கள் எதிர்கால வளர்ச்சிக்கு நல்ல கல்விமுறைதான் திறவு கோல் என்று கூறினாலும், கூட்டாட்சி புள்ளிவிவர அலுவலகத்தில் இருந்து கிடைக்கும் புள்ளிவிவரங்கள் கல்விக்காக அதிகாரபூர்வ அரசாங்க நிதிய ஒதுக்கீடு 2002ல் இருந்து குறைந்துவருவதை காட்டுகின்றன.

ஜூல் 22 அன்று நள்ளிரவில் ஹெசியப் போலீசார் மாணவர்கள் எதிர்ப்பிற்கு எதிராகப் பெரும் ஆத்திரமூட்டலை மேற்கொண்டனர். எதிர்ப்புக்களின் ஆரம்பத்தின்போது போலீசார் ஒப்புமையில் நிதானமாகத்தான் இருந்தனர். ஆனால் கால்பந்து உலகக்கோப்பை விளையாட்டுக்கள் தொடங்கியதும், போலீசார் எதிர்ப்பு இயக்கத்தை அச்சுறுத்த முற்பட்டனர். பிராங்பேர்ட் போலீஸ் தலைமை அதிகாரி வெளிப்படையாகவே ஆர்ப்பாட்டக்காரர்களை குற்றவாளிகள் போல் நடத்துவேன் என்று கூறினார்.

மீண்டும் ஆர்ப்பாட்டங்கள் ஜூன் 21ல் பிராங்க்பேர்ட் பல்கலைக் கழக வளாகத்தில் நடைபெற்றபோது, அந்த ஒற்றுமைக் கூட்டத்தை போலீசாரின் இரு பிரிவுகள் வன்முறையாக தாக்கின. மாணவர் மையத்தின் பாதுகாப்பாளர் உட்பட 47 பேர்களை அவர்கள் கைதுசெய்து, பிளாஸ்டிக் கயிற்றினால் கட்டி, பத்து மணி நேரம் காவலில் வைதத்திருந்து அவர்களுடைய உடமைகளையும் பறிமுதல் செய்துவிட்டனர்.

இந்தச் செயலுக்கு போலிக் காரணமாக அருகிலுள்ள புத்தகக் கடையொன்றிலும், சுற்றுலாப் பயண அலுவலகம் ஒன்றிலும், இரண்டு ஜன்னல்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன என்று போலீசார் கூறினர்.

உலக சோசலிச வலைத் தளத்தின் நிருபர்கள் வீஸ்பாடன் ஆர்ப்பாட்டத்தில் பங்கு பெற்றுக் கொண்டிருக்கும் பல மாணவர்களுடன் தொடர்பு கொண்டனர்:

மைன்ஸ் பல்கலைக்கழகத்தில் சமூகவியல் பயிலும் ஆண்ட்ரியாஸ் பிராங்க்பேர்ட்டில் வசிக்கிறார். அவர் கூறியது: "பிராங்க்பேர்ட்டில் நடக்கவுள்ள எதிர்ப்புக்களைப்பற்றி கடந்த வாரம் அறிந்தேன். உலகக் கால்பந்துப் போட்டியை ஒட்டி பாதுகாப்பு எச்சரிக்கை நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட்ட விதமும், போலீசாரின் அச்சுறுத்தலும், அதன் பின்னர் பிராங்க்பேர்ட்டின் மாணவர் மையத்தை ஒட்டியிருக்கும் உணவுவிடுதி தாக்கப்படுதலும், என்னுடைய கருத்தில் நாம் இருப்பதாகக் கூறிக்கொள்ளும் ஜனநாயக முறைக்கு கண்ணியம் தருவதாக இல்லை."

''இது ஒன்றும் அடிப்படை சமூக ஒருமித்த உணர்வைக் காப்பதுடன் எத்தொடர்பையும் கொண்டிருக்கவில்லை. அரசியலமைப்பையும் மீறி ஹெஸ்ஸவில் மாணவர் கட்டணம் வசூலிக்கப்படுவதைக் காணும்போது, ஆர்ப்பாட்டம் நடத்தும் உரிமை போன்ற அடிப்படை உரிமைகளை போலீஸ் தலைமை அதிகாரியும் உள்துறை மந்திரியும் காலின்கீழ் போட்டு துவைப்பதை நான் காணும்போது, சமூக ஒருமித்த உணர்வை எவர் குறைமதிப்பிற்கு உட்படுத்துகின்றனர் என்றுதான் நான் வியக்கிறேன். மாணவர்கள் அல்ல மாநில அரசாங்கமும் போலீஸ் தலைமை அதிகாரியும்தான் இதில் ஈடுபட்டுள்ளன. இது எனக்குப் பெரும் வேதனையாக உள்ளது என்றுதான் கூறவேண்டும். ஏதோ தீயவற்றைச் செய்வதற்காகவே மாணவர்கள் புறப்பட்டதாக அவர்களே நினைத்துக் கொள்ளுகின்றனர். உண்மையில் மாணவர்கள் செய்வது அதற்கு மாறானது."

ஹானெஸ் செய்தித் துறைக் கல்வி, விளையாட்டுப்பிரிவு கல்வியையும் லைப்சிக்கில் கற்கிறார். அவர் கூறியதாவது: "லைப்சிக்கில் இருந்து கிட்டத்தட்ட 60 பேர் அடங்கிய குழுவாக நாங்கள் வந்தோம். நாங்கள் இலவசக் கல்விக்காக ஆர்ப்பாட்டம் நடத்தி மாணவர் பயிற்சிக் கட்டணம் நிறுத்தப்படவேண்டும் என்று கோருகிறோம்.

"லைப்சிக் மாணவர்கள் கட்டண உயர்வினால் பாதிப்பு அல்லது அச்சுறுத்தப்படும் மாணவர்களுக்கு தங்கள் ஒற்றுமையைக் காட்ட விரும்புகின்றனர். இன்னும் ஒரு படி மேலே சென்று எங்கள் அடையாள ஒற்றுமையைக் காட்டுவது மட்டுமின்றி எதிர்ப்புக்களில் தீவிரமாகப் பங்கு பெறவும் முடிவு செய்தோம்."

"இது முற்றிலும் எதிர்பார்க்கக் கூடியதுதான். அண்டை மாநிலங்களில் கட்டணங்கள் சுமத்தப்பட்டால் சாக்சனி மாநில அரசாங்கத்திற்கும் அவ்வாறு செய்யவேண்டும் என்ற அழுத்தும் பெருகும். எனவே நாங்கள் நாடு முழுவதும் உள்ள மாணவர் எதிர்ப்புக்களை இணைக்கவேண்டும் என விழைகிறோம்.

"எதிர்ப்பின் வடிவம் மற்றும் அதனை ஒழுங்கமைத்த அமைப்பு ஆகியவற்றில் பிரான்சில் இருந்த நிலைமையுடன் ஐயத்திற்கு இடமின்றி சில ஒற்றுமைகள் உள்ளன. கொள்கையளவில் இது பிரான்சில் கட்டமைக்கப்பட்டுள்ள விதம்போல விரைவான, தன்னியல்பான எழுச்சி சாத்தியமாகும். இந்த அலை, நோர்த் ரைன் வெஸ்ட்பாலிய மற்றும் ஹெசிக்கு வந்துள்ளது என்பது தெளிவு. கணிசமான எதிர்ப்புக்கள் இங்கு வளர்ச்சியுற்றன; ஆனால் ஒப்புமையில் தேசிய அளவில் அணிதிரட்டுவது கடினமாகவுள்ளது. எனவே வீஸ்பாடன் மற்றும் ஹாம்பேர்க்கில் திட்டமிடப்பட்டுள்ள ஆர்ப்பாட்டங்கள் வெற்றிகரமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்; அந்த முன்னோக்கில் இருந்து ஜூலை 6 பிராங்க்பர்ட் ஆர்ப்பாட்டம் ஒரு பெரும் வெற்றியாகும்.

"கொன்ஸ்டன்டைன் மைன்சில் சமூகவியல் கற்கிறார். அவர் WSWS இடம் கூறியதாவது: "மைனில் உள்ள முக்கியமான பாலங்கள் ஒன்றைத் கடந்தோம். என்னை ஒரு பொலிஸ்கார பிடித்து என்னைப் பற்றிய விவரங்களைக் கேட்டார். என்னுடைய கையில் ஒலிபெருக்கி கருவி இருந்ததால், குழுத் தலைவர் நான் என்று நினைக்கப்பட்டேன்.

"என்னிடம் ஒரு செல்லிட (மொபைல்) தொலைபேசி இருந்தது; போலீசார் புகைப்படம் எடுக்கப்படுவதில் இருந்து தங்களைக் காத்துக் கொள்ளும் உரிமை இருக்கிறது என்ற காரணம் கூறி அவர்கள் அதை என்னிடம் இருந்து எடுத்துக் கொண்டுவிட்டனர். படங்கள் ஏதும் இல்லை என்பதைக் கண்டவுடன் அவர்கள் மன்னிப்புக் கோரவேண்டியும், செல்லிட (மொபைல்) தொலைபேசியை திருப்பிக் கொடுக்கவும் நேரிட்டது. பாதுகாப்புப் படையினர் மிக மிக பதட்டமாக உள்ளனர் என நினைக்கிறேன். அவர்கள் பயப்படுகிறார்கள், உறுதியற்று உள்ளனர்.

"இன்று போலீசார் அமைதியாக இருப்பார்கள் என்று நம்புகிறோம். நாங்கள் அமைதியான மாணவர்கள், எங்கள் கல்விப் பயிற்சிக்கு கட்டணம் கொடுக்க வேண்டியதில்லை என்பதைக் காக்க விரும்புகிறோம். அவைதான் எங்களுடைய கோரிக்கைகள். எனவேதான் இங்கு நாங்கள் உள்ளோம்; ஆர்ப்பாட்டம் நடத்தும் அடிப்படை உரிமையைப் பயன்படுத்துகிறோம். அமைதியான ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது ஏன் தேவையற்று இத்தனை கடுமையாக அவர்கள் நடந்து கொள்ளுகின்றனர் என்பது நம்பமுடியவில்லை."


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved