World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : அவுஸ்திரேலியா & தென்பசுபிக்

Solomon Islands prime minister bows to Australia's dictates

ஆஸ்திரேலிய கட்டளைகளுக்கு சொலமன் தீவுகளின் பிரதம மந்திரி அடிபணிகிறார்

By Will Marshall
10 July 2006

Back to screen version

கடந்த வாரம் சொலமன் தீவுகளுக்கு ஆஸ்திரேலிய நிதி மந்திரி பீட்டர் கோஸ்டெல்லோ சென்றிருந்தது தெற்கு பசிபிக் நாடுகளின்மீது ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்று கன்பரா உறுதிகொண்டுள்ளதை உயர்த்திக் காட்டியதுடன், இத்திட்டங்களுக்கு உடன்பட வேண்டிய கவலை நிலையில் புதிய சொலமன் அரசாங்கம் இருப்பதையும் உயர்த்திக் காட்டியுள்ளது.

பசிபிக் வட்டார நிதி மந்திரிகளின் ஆண்டுக்கூட்டத்தில் கலந்து கொள்ளுவதற்காக சொலமன் தீவுகளின் தலைநகரான ஹோனியராவிற்கு வந்திருந்த கொஸ்டெல்லோ, "தோல்வியுற்ற நாடுகள் திட்டமிடப்பட்ட குற்றங்கள், கறுப்புப் பணத்தை வெள்ளை ஆக்கல், இவற்றுடன் பயங்கரவாதத்திற்கு நிதியளிப்பது" ஆகியவற்றிற்கு உடன்படும் தன்மையில் உள்ளன என்று கூறினார். இதேபோன்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கள் ஜூலை 2003ல் சொலமன் தீவுகளுக்கு ஆஸ்திரேலிய படைகள் அனுப்பப்பட்ட போதும் கூறப்பட்டிருந்தன.

கொஸ்டெல்லோ (RAMSI) Regional Assistnce Mission to Solomon Islands எனப்படும் சொலமன் தீவுகளுக்காக அனுப்பப்பட்டுள்ள ஆஸ்திரேலிய தலைமையிலான வட்டாரப் பணியகத்தின் தலைமையிடத்தை சுற்றிப்பார்த்தார்; இதில் இப்பொழுது கிட்டத்தட்ட 300 போலீஸ், 180 ஆட்சிப் பணி "ஆலோசகர்கள்", "கருத்துரைப்பவர்கள்" மற்றும் இராணுவ அதிகாரிகளின் குழு ஆகியவை அடங்கியுள்ளன. இச்சிறுநாட்டின் நிதி அமைச்சகம், நீதிமன்றங்கள், சிறைகள் என்று அனைத்து முக்கிய நிறுவனங்களையும் RAMSI திறமையுடன் கட்டுப்பாட்டிற்குள் வைத்துள்ளது.

கிட்டத்தட்ட 400 ஆஸ்திரேலிய துருப்புக்கள் ஏப்ரல் 18, 19ல் ஹோனியராவில் நிகழ்ந்த கலகங்களை அடுத்து RAMSI அமைப்பை வலுப்படுத்துவதற்கு அனுப்பப்பட்டன; பிரதம மந்திரியாக ஸ்னைடர் ரினியை பாராளுமன்றம் தேர்ந்தெடுத்ததை அடுத்து அக்கலகங்கள் ஏற்பட்டன. முன்பு துணைப் பிரதமராக இருந்த ரினி, ரம்சியுடன் ஒத்துழைத்த ஊழல் நிறைந்த உயரடுக்கின் பகுதியாக பரந்த அளவில் கருதப்பட்டார்.

அதிருப்தியை குறைக்கும் முயற்சியாக, எட்டு நாட்களுக்கு பின்னர் ரம்சியை விமர்சிப்பவராக காட்டிக் கொண்ட, "வெளியேறுவதற்கான மூலோபாயத்திற்கு" அழைப்புவிடுத்த மனசே சோகவரேவை தேர்ந்தெடுப்பதற்கு வழிவிடும் வகையில், ரினி பதவியில் இருந்து விலகினார்.

கொஸ்டெல்லாவுடன் பேசிய பின்னர், சோகவரே தன்னுடைய அரசாங்கம் ரம்சி (RAMSI) தொடர்ந்து இருக்கலாம் என விரும்புவதாக கூறியுள்ளார். "இங்கு காலக்கெடு வைக்க நாங்கள் விரும்பவில்லை; பணி முழுமை அடையவேண்டும் என்றுதான் விரும்புகிறோம். அதற்கு 10 ஆண்டுகள் ஆனாலும், அப்படியே ஆகட்டும்" என்று அவர் கூறினார்.

ரம்சியுடன் ஒத்துழைப்பதற்கு தான் தயாராக இருப்பதின் சான்றைக் காட்டும் வகையில், தன்னுடைய அரசாங்கம் ஊழலை ஒழித்துக் கட்டுவதற்கு உழைத்துக் கொண்டிருப்பதாகவும், கடந்த மாதம் இரண்டு புதிய காபினெட் மந்திரிகளை, அவர்களுக்கு முன்னால் பதவியில் இருந்தவர்கள் ஏப்ரல் கலகங்களுக்காக கைது செய்யப்பட்ட பின்னர், நியமித்துள்ளதாகவும் கூறினார்.

மே 5ம் தேதி, தன்னுடைய மீறும் தன்மையை காட்டிக் கொள்ளும் வகையில், சோகவரே ரம்சியினால் காவலில் வைக்கப்பட்டிருந்த இரண்டு பாராளுமன்ற பிரதிநிதிகளை தன்னுடைய மந்திரிசபையில் நியமித்தார். சார்ல்ஸ் டெளசபீயை தேசிய பாதுகாப்பு மற்றும் போலீஸ் மந்திரியாகவும், நெல்சன் நீயை, பண்பாடு, சுற்றுலாத்துறைகளின் மந்திரியாகவும் அவர் நியமித்தார்.

சான்றுகள் அனைத்தும் கலகத்தை தூண்டும் வகையில் பாராளுமன்றத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டக்காரர்கள்மீது கண்ணீர்ப்புகை வீச்சை நடத்துமாறு ரம்சி அதிகாரிகள் நடந்து கொண்டனர் என்று காட்டியபோதிலும், இவ்விருவரும் ஏப்ரல் 18-19 கலகங்களை தூண்டிவிட்டனர் என்ற போலிக்குற்ச்சாட்டுக்களின் பேரில் சில நாட்களுக்கு முன்பு காவலில் வைக்கப்பட்டிருந்தனர்.

இந்த நியமனங்களை ஆஸ்திரேலிய வெளியுறவு மந்திரியான அலெக்சாந்தர் டெளனர் "இழிவு தருபவை" என உடனடியாக கண்டித்து, நியமனங்கள் "சொலமன் தீவுகளின் நேர்மையை உள்ளூரிலும் சர்வதேச அளவிலும் இழிவுபடுத்திவிட்டன" என்று கூறி, நிதி உதவிகளை நிறுத்திவிடும் உட்குறிப்புக் கொண்ட அச்சுறுத்தலையும் வெளியிட்டார்.

கான்பராவின் தலையீட்டை வலுவாக ஆதரித்திருந்த நியுசிலாந்து அரசாங்கத்தின் பிரதம மந்திரி ஹெலன் கிளார்க்கும் இதில் சேர்ந்து கொண்டு எச்சரிக்கை விடுத்தார்: "இந்த நியமனங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டால் சொலமன் தீவுகளுக்கு மட்டுமின்றி, இத்தீவுகளின் சர்வதேச புகழிற்கும் பெரும் பாதிப்புக்கள் ஏற்படக்கூடும் என்ற நியுசிலாந்து அரசாங்கத்தின் வலுவான கருத்துக்கள் வெளியிடப்படுக்கூடும்."

இக்குறைகூறல்களை ஆரம்பத்தில் சோகவரே எள்ளி நகையாடினார். டெளனருடைய கருத்துக்கள் தீவிரக் குறுக்கீட்டுச் செயல்கள் என்றும், நாடுகளுக்கு இடையே உள்ள உறவுகளை நிர்ணயிக்கும் வியன்னா மரபுகளை மீறுவதாகும் என்றும், மே 8ம் தேதி அவர் விவரித்தார். பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களின் ஐயத்திற்குரிய தன்மையை பற்றியும் சோகவரே குறிப்பிட்டு ஆஸ்திரேலிய ஒளிபரப்பு நிலையத்திடம், "எந்த நீதிமன்றத்திலும் ஏற்க வகையில்லாத முறையில் சாட்சியங்கள் எடுக்கப்பட்டுள்ளது பற்றி நாங்கள் அறிவோம், எங்கள் வழக்கறிஞர்கள் இதைப் பற்றி ஆலோசித்து வருகிறார்கள்" என்றார்.

ஆஸ்திரேலியர்களால் நியமிக்கப்பட்டுள்ள அரசாங்க குற்றவியல் நடவடிக்கைகள் இயக்குனர் ஜோன் கெளச்சிக்கும், ஆஸ்திரேலியரால் முன்மொழியப்பட்ட, நீ மற்றும் டெளசாபிக்கு வெளியே வர அனுமதியை மறுத்த நீதிபதிகளுக்கும் இடையே உள்ள உறவு பற்றி விசாரிக்க ஒரு விசாரணைக்குழு நியமிக்கப்பட வேண்டும் என்று தான் விரும்பவுதாக மே 12 அன்று தேசிய பாராளுமன்றத்தில் சோகவரே தெரிவித்தார். நீதித்துறையின் சுதந்திரத்தன்மை "கேள்விக்குரியதாகி விட்டது" என்றும் சோகவரே கூறினார்.

ஆனால் சோகவரேயின் எதிர்ப்புக்கள் சிறிது காலம்தான் இருந்தன. டெளனர் மற்றும் நியூசிலாந்து வெளியுறவு மந்திரி இருவரும் மே 19 அன்று வின்ஸ்டன் பீடர்சுக்கு வருகை புரிவதற்கு சற்று முன்பு பல முறை பெயில் மறுக்கப்பட்டுவிட்ட டெளசாபி மற்றும் நீக்குப் பதிலாக வேறு இரு இடைக்கால மந்திரிகளை அவர் நியமித்தார்.

சொலமன் தீவுகளின் பாராளுமன்றம் புதிய சட்டத்தை ஜூலை 23 அன்று புதுப்பித்து ரம்சி தலையீட்டை நெறியாக்க உள்ள நிலையில், டெளனரும் பீட்டர்சும் சோகவரேக்கு இன்னும் அப்பட்டமான செய்தியை கொடுத்தனர்; சோகவரே நாட்டின் நிதிகள் பற்றிக் கடுமையான கட்டுப்பாட்டுக்களை கொண்டிருக்கும் ரம்சியின் போக்கு பற்றியும் நிறைய அறிக்கைகளை கொடுத்திருந்தார்.

ரம்சியின் பிடி எவ்விதத்திலும் சற்றேனும் தளர்த்தப்பட்டால், ஆஸ்திரேலியா இந்த வறிய நாட்டை அதன் விதிக்கு விட்டுவிட்டு நீங்கிவிடும் என்றும் அதன் விளைவு "பேரழிவு" தரக்கூடியதாக இருக்கும் என்றும் பகிரங்கமாக டெளனர் அறிவித்தார். சோகவரேயின் அரசாங்கம் ரம்சி நிலைப்பாடு பற்றி போலித்தனனமான "பரிசீலனை" செய்ய அனுமதித்தாலும்கூட, டெளனர் அரசாங்கம் "முழு நிலைமையையும்" ஏற்றுக் கொள்ளாவிட்டால் ரம்சி அங்கு தொடர்ந்து இருப்பதில் பயனில்லை என்று கூறிவிட்டார்.

மே 21ம் தேதி, ஆஸ்திரேலியா திரும்பியவுடன், தொலைக்காட்சிக்கு பேட்டி கொடுத்த டெளனர், தன்னுடைய எச்சரிக்கையை மீண்டும் வலியுறுத்தினார். "சொலமன் தீவுகள் அரசாங்கத்தில் சிலருக்கு நிதி அமைச்சகம் சற்று பொறுத்துக் கொள்ள முடியாததாக இருக்கிறது" என்று அவர் சாடினார். இந்தப் பிரச்சினை "திருப்திகரமாக தீர்க்கப்பட்டுவிடும், ஆனால் நான் சொலமன் தீவுகளில் இருந்தபோது அது பற்றிய குறிப்பைக் கூற விரும்பினேன்" என்று நம்பிக்கை தெரிவித்தார்.

சோகவரே மூன்று வாரங்களுக்கு பின்னர் ஜூன் 12ல், இரண்டு சிறையிலடைக்கப்பட்டுள்ள மந்திரிகள் பற்றி முற்றிலும் மாறுபட்ட நிலையைக் கொண்டார்; இடைக்கால மந்திரிகள் ஐசக் இநோக்கும், பென்ட்லி ராகோசமனியும், முறையே போலீஸ் மந்திரி, சுற்றுலா, பண்பாட்டு மந்திரிகளாக நிரந்தர நியமனம் பெறுவர் என்று அவர் அறிவித்தார்.

கருவூலச்செயலர் கொஸ்டெல்லோ கடந்த வாரம் சொலமன் தீவுகளுக்கு வந்தபோது, சொகவரே அரசாங்கம் புதிய வெளியீட்டு மூலதனச் சட்டங்களின் தொடக்கத்தை புகழ்ந்தது; இவை நிதி அமைச்சகத்திலுள்ள ரம்சியின் "பொருளாதார சீர்திருத்த பிரிவு" மற்றும் அதன் மற்ற 17 மூத்த "ஆலோசகர்கள், முறையான அதிகாரிகளால்," தயாரிக்கப்பட்டவையாகும்.

இச்சட்டம் இன்னும் கூடுதலான முறையில் வெளி முதலீட்டில் இருந்து பாதுகாக்கப்பட்ட பிரிவுகளை 83ல் இருந்து 14 ஆகக் குறைத்துவிட்டதுடன், வெளி முதலீட்டு மனுக்களுக்கு ஒப்புதல் கொடுக்கும் கால கெடுவையும் மூன்று மாதங்களில் இருந்து ஐந்தே நாட்களாக குறைத்தும் விட்டது. சொலமன் தீவுகளின் தங்கம் மற்ற தாதுப்பொருட்கள் இருப்புக்கள், மீன்வளம், தோட்டங்கள், காடுகள், சுற்றுலாத் திட்டங்கள் ஆகியவற்றில் ஆஸ்திரேலிய மற்றும் சர்வதேச தொடர்புகனின் வாய்ப்புவளங்கள் பெருகுவதற்கு உதவும்.

உலக வங்கி இச்சட்டங்களை உடனடியாக "சொலமன் தீவுகளில் முதலீட்டுச் சூழலை முன்னேற்றுவிப்பதற்கு இச்சட்டங்கள் முக்கியமான படிகளாகும்" என்று வரவேற்றது. உலக வங்கியில் உள்ள ஒரு குழுவான வெளி முதலீடுகள் ஆலோசனைப் பணி - Foregin Investment Advisory Service FIAS - இன் முக்கிய பொருளாதார வல்லுனரான ரசல் மூய்ர் இச்சட்டம், "புதிய அரசாங்கம் இத்திட்டத்திற்கு கொடுத்துள்ள ஊக்கத்தின் அடையாளம் ஆகும்" என்று கூறினார்.

"சொலமன் தீவுகள் : ஒரு தீவின் பொருளாதாரத்தை மறுபடியும் கட்டமைத்தல்" என்ற அறிக்கையில் கோடிட்டு காட்டப்பட்டுள்ள "பொருளாதார சீர்திருத்தத் திட்டம்" அலெக்சாந்தர் டெளனரால் 2004ல் ஆரம்பிக்கப்பட்டது; இதில் "இடர்பாடுகள் தரும் மூலதனம் பற்றிய கட்டுப்பாடுகளும்" தொழிலாளர் சந்தையை கட்டுப்பாட்டில் இருந்து அகற்றி தொழிலாளர்களின் ஊதியங்கள், நிலைமைகள் குறைக்கப்பட வழிவகுக்கப்பட்டிருந்தன; இவை அகற்றப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். மேலும் இத்திட்டத்தில் தொலைத்தொடர்புகள், மின், நீர் வசதிகள், பொது நில பாதுகாப்புக்கள் ஆகியவை தனியார் மயமாக்கப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.

இச்செயற்பட்டியல் ஒரு சிறிய உள்ளூர் தொழில் முயல்வோர்கள் அடுக்கிற்கு நலன் தரும்; ஆனால் வறிய மக்களின் பெரும்பான்மையுடனான பிளவை அதிகரிக்கும்; அவர்களுக்கு முறையான வேலைகள் இல்லை; உதவித் தொகை பெறும் விவசாயத்திலும், கிராம, சமூக உறவுகளிலும், உறவினர் ஆதரவிலும் அவர்கள் வாழ்க்கையை நடத்துகின்றனர்.

வெகு விரைவில் கன்பராவின் கட்டளைகளை சொகவரே ஏற்றது, ரம்சி செயற்பாட்டிலுள்ள நவீன காலனித்துவ தன்மையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது; மேலும் உள்ளூர் அரசியல் உயரடுக்கினர் அதை எதிர்க்க முடியாத நிலையையும் காட்டுகிறது. சொலமன் தீவுகளின் இறைமையை மதிப்பதாக கூறிக்கொள்ளும் பாசங்குத்தனங்கள் அனைத்தும் இருந்தாலும், ஆஸ்திரேலியா இத்தீவு நாட்டின் மீது தன்னுடைய பிடியை இறுக்குகிறது.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved