World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : சீனா

US and Japan exploit "missile crisis" to heighten tensions in North East Asia

அமெரிக்க, ஜப்பான் அரசாங்கங்கள் வட கிழக்கு ஆசியாவில் பதட்டங்களை அதிகரிப்பதற்கு "ஏவுகணை நெருக்கடியை" பயன்படுத்துகின்றன

By John Chan
11 July 2006

Back to screen version

வடகொரியாவின் ஏவுகணை சோதனைகளை பற்றி, புஷ் நிர்வாகத்தின் வலுவான ஆதரவுடன் கடந்த வாரம் ஜப்பானால் வரைவு செய்யப்பட்ட ஐக்கிய நாடுகள் சபை தீர்மானம், வட கிழக்கு ஆசியாவில் பதட்டங்களை இன்னும் கூடுதலாக எரியூட்டும் வகையில் உள்ளது.

இரண்டாம் உலகப் போரின் முடிவிற்கு பின்னர் முதல் முறையாக ஒரு பெரிய சர்வதேச நெருக்கடியில் ஜப்பான் ஒரு முக்கிய பங்கை கொண்டுள்ளது. கடந்த வாரம் அது பாதுகாப்பு குழுவிற்கு வழங்கிய வரைவுத் தீர்மானம் ஏவுகணைச் சோதனைகளை சர்வதேச சமாதானத்திற்கு ஓர் அச்சுறுத்தல் என்றும், ஏவுகணைகள் செலுத்துவதற்கு உடனடி முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் என்றும், பியோங்யாங்கிற்கு எதிராக பொருளாதாரத் தடைகள் கொண்டுவரப்படவேண்டும் என்றும் கோரியுள்ளது.

"வட கொரிய ஏவுகணை மற்றும் பிற பேரழிவு ஆயுதத் திட்டங்களுக்கு உதவக் கூடிய நிதிய ஆதாரங்கள், செயற்பாடுகள், தளவாடங்கள், பொருட்கள் மற்றும் தொழில்நுட்பம் ஆகியவை அந்நாட்டிற்கு மாற்றப்படுவதை" உறுப்பு நாடுகள் தடுக்க வேண்டும் என்று வரைவுத் தீர்மானம் கூறியுள்ளது. ஐ.நா. வரைவின் 7வது அத்தியாயத்தை தளமாகக் கொண்டு, இத்தீர்மானம் பொருளாதாரத் தடைகளால் உறுப்பு நாடுகள் அனைத்தையும் கட்டுப்படுத்தவேண்டும் என்றும் தேவையானால் இராணுவ நடவடிக்கை எடுப்பதற்கும் வழிவகை செய்யவேண்டும் என்றும் கூறுகிறது. ஈரானுடைய அணுசக்தி திட்டத்தை கண்டித்து இத்தகைய ஐ.நா. தீர்மானத்தைத்தான் அமெரிக்காவும் கோரிவருகிறது.

ஐ.நா. பாதுகாப்புக்குழு உறுப்பு நாடுகளில் பிரான்ஸ், பிரிட்டன் உட்பட 13 நாடுகள் இத்தீர்மானத்திற்கு ஆதரவு கொடுத்து வாக்களிப்பதாக குறிப்பிட்டுள்ளனர். ஆனால் வீட்டோ எனப்படும் இரத்து அதிகாரத்தை கொண்டுள்ள சீனாவும், ரஷ்யாவும் சாசனத்தின் 7வது அத்தியாயத்துடன் இத்தீர்மானம் இணைக்கப்படுவதையும், வட கொரியா மீது பொருளாதாரத் தடைகள் சுமத்தப்படுவதையும் பகிரங்கமாக எதிர்க்கின்றன. சீனாவின் வேண்டுகோளின்பேரில் வாக்கெடுப்பு தாமதப்படுத்தப்பட்டுள்ளது; இது வட கொரியாவிற்கு ஒரு சீனத் தூதர் சென்று புதிதாக பலதரப்பு பேச்சுவார்த்தைகளை பியோங்யாங் பங்கு கொள்வதற்கு அழுத்தம் கொடுப்பதற்கு உதவும். சீனாவும், ரஷ்யாவும் ஏவுகணைச் சோதனைகள் பற்றி, ஐ.நா. பாதுகாப்புக் குழுவின் கட்டுப்பாடற்ற தலைமை அறிக்கை ஒன்றை ஏவுகணை சோதனைகள் பற்றி வெளியிடலாம் என்ற கருத்தை முன்வைத்துள்ளன.

ஏவுகணைச் சோதனைகள் பற்றி பல அமளிகள் இருந்தபோதிலும்கூட, எந்த சர்வதேச் சட்டத்தையும் உண்மையில் வட கொரியா மீறவில்லை. உண்மையில் கடந்த ஞாயிறு பாக்கிஸ்தான், சீனா நாடுகளுள் சென்று தாக்கக் கூடிய ஒரு புதிய அக்னி-3 எனப்படும் நீண்ட தூர பாலிஸ்டிக் ஏவுகணை சோதனையை இந்தியா நடத்தியது. ஆனால் புஷ் நிர்வாகம் ஒன்றும் புது டெல்லியை இதற்காக கண்டிக்கவில்லை; அதற்குக் காரணம் இந்தியாவுடன் "மூலோபாயரீதியிலான கூட்டினை" சீனாவிற்கு எதிராக அது கொண்டுள்ள விரும்பம்தான்; இந்த நடவடிக்கை வட கொரியாவின் மிகக் குறைந்த இராணுவத் திறனைக் காட்டிலும் மிக அதிகமான வகையில் "உலக சமாதானத்திற்கு" அச்சுறுத்தலாகும்.

ஆரம்பத்திலிருந்தே, புஷ் நிர்வாகம் வட கொரியாவின் ஏவுகணை அல்லது அணுசக்தி திட்டங்களை பற்றிய பயங்களை பெரிதுபடுத்தியுள்ளது; இதற்குக் காரணம் பியோங்யாக் ஆட்சியை தனிமைப்படுத்துவதற்கு இது ஒரு வழிவகையாகும்; மேலும் அப்பகுதியில் மூலோபாயரீதியில் போட்டி சக்திகளை, குறிப்பாக சீனாவை பலமிழக்க செய்யவேண்டும் என்ற கருத்தும் உள்ளது. கிளின்டன் நிர்வாகத்தில் இருந்த ஒரு முன்னாள் அமெரிக்கத் துணைப் பாதுகாப்புச் செயலர் கிரகாம் ஆலிசன் ஜூலை 6ம் தேதி Financial Times இற்குக் கூறியுள்ளபடி, "புஷ்ஷின் இலக்கு என்பது சீனாவிற்கு தீயகனவு போல் ஆகும். வட கொரியாவில் ஆட்சி மாற்றத்தை புஷ் விரும்புகிறார். இதனால் சீனாவிற்கு ஏற்படக்கூடிய மோசமான விளைவு தற்போதைய ஆட்சி கவிழ்ந்து, வட கொரியாவில் வேறு ஒரு ஆட்சி வரக்கூடும், அது அமெரிக்க நட்புக் குழுவை இதன் எல்லையின் அருகே கொண்டுவந்துவிடும் என்பதுதான்."

2001ல் பதவியை ஏற்றவுடனேயே, புஷ் நிர்வாகம் பியோங்காங்குடன் சீனா உறவுகள் கொள்ளுவதை உடனடியாக நிறுத்தியது. 2002ம் ஆண்டில், வட கொரியாவை தீயஅச்சின் ஒரு பகுதிதான் என்று புஷ் முத்திரையிட்டார். 2003ம் ஆண்டு சீனா, ஜப்பான், ரஷ்யா, தென் கொரியா உட்பட்டிருந்த "ஆறு நாடுகள் " பேச்சுவார்த்தைகள் வட கொரியாவுடன் நடத்தப்பட வேண்டும் என்ற கருத்திற்கு புஷ் ஆதரவு கொடுத்தார்; ஆனால் மற்ற "பங்கு நாடுகளை" பியோங்யாங்கிற்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு அழுத்தம் கொடுத்தார். வட கொரியாவின் குறைவான சர்வதேச நிதிய நடவடிக்கைகளை நெரித்துவிடும் வகையில் வாஷிங்டனுடைய ஆத்திரமூட்டும் முயற்சிகள் இருந்ததால், கடந்த செப்டம்பர் மாதத்தில் இருந்து பேச்சு வார்த்தைகள் நடக்கவில்லை. புதிய பொருளாதார கட்டுப்பாடுகள் அகற்றப்படும் வரை தான் ஆறு நாடுகள் மாநாட்டில் கலந்து கொள்ள பியோங்யாங் மறுத்துவிட்டது.

ஜப்பானிய தீர்மானம் பெய்ஜிங்கிற்கு பெரும் சங்கடத்தை கொடுத்திருப்பது வியப்பல்ல. ஐ.நா.விற்கு சீன தூதரான வாங் குவாங்யா அறிவித்ததாவது: "இந்த தீர்மானம் வாக்கெடுப்பிற்கு விடப்பட்டால், பாதுகாப்பு குழுவில் ஒற்றுமை இருக்காது என்பது உறுதி." வடக்கு எல்லையில் வசதியான தாங்கிநாடாக இருக்கும் வட கொரியாவை சீனா கைவிட்டுவிடமுடியாது. அதே நேரத்தில் பியோங்யாங்கின் கோபமூட்டும் சொற்களும், பொறுப்பற்ற நடவடிக்கைகளுமான அரசியல் ஆதாயத்திற்காக அபாயகரமாக மேற்கொள்ளப்படும் செயல்கள் கடுமையான பொருளாதாரத் தடைகளும் இராணுவ நடவடிக்கையும் வேண்டும் என்று வலியுறுத்தும் டோக்கியோ மற்றும் வாஷிங்டனில் உள்ள வலதுசாரிக் கூறுபாடுகளின் கைகளில் வசதியாக அமைந்துவிடும்; அமை கின்றன.

ஆனால் தீர்மானம் பற்றி சமரசத்தை ஜப்பான் நிராகரித்துவிட்டது. ஞாயிறன்று NHK என்னும் தேசிய தொலைக்காட்சியில் ஜப்பானிய வெளியுறவு மந்திரி டாரோ ஆசோ "பல நாடுகள் உடன்பட்டாலும், ஒரு நாடு, (சீனா), அதன் இரத்து அதிகாரத்திற்காக எங்கள் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளுவது ஒரு தவறாகிவிடும்." பாதுகாப்புக் குழுவில் சீனா ஒதுக்கப்படக்கூடும் என வரவுள்ள நிலையைப் பற்றி TV Asahi இடம் ஆசோ கூறுகையில் பெய்ஜிங்கை நெருக்கி ஒரு மூலையில் தள்ளவிடக் கூடாது என்றார். ஆனால் அதைத்தான் டோக்கியோ செய்து கொண்டிருக்கிறது. ரஷ்யா தீர்மானத்திற்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என்றும் ஆசோ வலியுறுத்தனார்; செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் வரவிருக்கும் G8 மாநாட்டில் அது ஒதுக்கப்படுவதும் தவிர்க்கப்பட வேண்டும் என்றார்.

ஜப்பானுக்குள் "ஏவுகணை நெருக்கடி" பிரதம மந்திரி ஜூனிசிரோ கொய்சுமி, மற்றும் அவருடைய அரசாங்கத்திற்கு இன்னும் கூடுதலான அரசியல் வெடிமருந்தை கொடுத்துள்ளது; புஷ் நிர்வாகத்தின் ஆதரவுடன் இது இன்னும் கூடுதலான முறையில் வட கிழக்கு ஆசியாவில் ஆக்கிரோஷ நிலைப்பாட்டை கொள்ளுவதற்கு உதவியுள்ளது. இவருடைய பதவிக் காலத்தில் கொய்சுமியும் அவருடைய கூட்டாளிகளும் ஜப்பானிய அரசியலமைப்பை திருத்தி அதில் சமாதான விதி என்று அழைக்கப்படுவதையும் திருத்தி, 1930 களின் ஜப்பானிய இராணுவவாதத்தின் அடையாளங்களை புதுப்பித்து, தென் கொரியா, சீனா ஆகியவற்றுடனான அண்டை கடல் பகுதிகளிலும் தன்னுடைய உரிமையை ஆக்கிரோஷத்துடன் நிலைநிறுத்த முயல்கின்றனர்.

செப்டம்பரில் கொய்சிமிக்கு பதிலாக பதவிக்குப் போட்டியிடுபவர்களில் முக்கியமாக இருக்கும் தலைமை மந்திரிசபை செயலாளரான ஷின்சோ அபே, இந்த ஏவுகணை சோதனைகள் கொடுத்துள்ள வாய்ப்பை உடனடியாக பயன்படுத்தி வடகொரியாவில் ஏவுகணை செயற்பாடுகளுக்கு எதிரான தவிர்க்க முடியாத தாக்குதல்களை நடத்தும் திறன் ஜப்பானுக்கு இருக்க வேண்டும் என்று வாதிட்டுள்ளார். "ஒரு ஏவுகணைத் தாக்குதலை தடுப்பதற்கு நம்மிடம் வேறு ஒரு கருவியும் இல்லை என்பதை ஒப்புக் கொண்டால், ஏவுகணை தளங்களை தற்காப்பிற்காக தாக்குதல் என்பது சட்டபூர்வமான தற்காப்பு நடவடிக்கை என்று வாதிட முடியும்." என்று நேற்று அவர் கூறினார். ஜப்பானின் பாதுகாப்புத் துறைத் தலைவரான புகுசிரோ நுகானா, "ஒரு எதிரி நாடு ஜப்பானை தாக்குவதற்கு விசையை அழுத்த தயாராக, உறுதியுடன் உள்ளது என்றால்" அதைத் தவிர்ப்பதற்கான தவிர்க்கமுடியாத தாக்குதல்களை மேற்கொள்ளப்பட வேண்டியது பற்றி ஜப்பான் பரிசீலிக்க வேண்டும்" என்று கூறியதை அடுத்து ஒரே நாள் இடைவெளியில் அபேயின் கருத்துக்கள் வந்துள்ளன.

நெருக்கடியின் தீவிரத்தைக் குறைக்க வேண்டும் என்று சீனாவை போலவே நினைக்கும் தென் கொரியாவிலும் ஜப்பானுடைய ஆக்கிரோஷ போக்கு சீற்றமான எதிர்விளைவை கொடுத்துள்ளது. "இத்தகைய முரட்டுத்தனமான ஜப்பானிய போக்கை பற்றி பரபரப்பு கொள்ள வேண்டிதில்லை; ஆனால் இதற்கு எதிராக செயல்பட்டால், அது முற்றிலும் பொருத்தம்தான்." என்று தென் கொரிய ஜனாதிபதி ரோ மூ ஹைனின் அலுவலகக் குறிப்பு தெரிவிக்கிறது. வட கொரியாவிற்கு எதிரான கடுமையான பொருளாதார நடவடிக்கையை எதிர்த்து, அதே நேரத்தில் வாஷிங்டனுடனும் நட்பைத் தொடர வேண்டும் என்ற சமப்படுத்தும் தன்மையை தென்கொரிய அரசாங்கம் முயலுகிறது. தற்காலிகமாக சியோல், பியோங்யாங்கிற்கான உதவிகளை நிறுத்தி வைத்துள்ளது.

புஷ் நிர்வாகத்தின் பங்கு

ஜப்பான் ஒரு முக்கிய பங்கைக் கொள்ள வேண்டும் என்று அழுத்தம் கொடுக்கும் வகையில், புஷ் நிர்வாகம் ஜப்பானில் இராணுவவாதத்தை தீவிரமாக ஊக்குவிப்பதுடன், சீனாவின் மீதான அழுத்தத்தையும் உயர்த்தி வருகிறது. "இராஜதந்திர முறையிலான தீர்வு" என்ற அதன் வார்த்தைஜாலம் முற்றிலும் அவநம்பிக்கைத்தன்மை உடையதுதான். கடந்த செப்டம்பரில் இருந்து தாக்கமடைந்துள்ள வடகொரிய பொருளாதாரத்தின் மீது வேண்டுமென்றே சுருக்குக் கயிறை இறுக்கும் வகையில் அமெரிக்கா சர்வதேச வங்கிகள், நிதிய அமைப்புக்கள் வட கொரியாவுடன் உறவுகளை துண்டித்துவிட வேண்டும் என்ற அழுத்தம் கொடுத்துள்ளது. வட கொரியாவின் "சட்ட விரோத" நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பது அமெரிக்கப் பிரச்சாரத்தின் பெயரளவு முயற்சியாக இருந்தாலும், அதன் உண்மையான இலக்கு பொருளாதார வகையில் அந்நாட்டை நெரித்துவிட வேண்டும் என்பதேயாகும்.

Yale Global Online ல் ஜூன் 6ம் தேதி வந்த கட்டுரை ஒன்று அமெரிக்கா மேற்கொண்டுள்ள "நிதியத் தடுப்புமுறை" அதன் "முறையான பொருளாதாரத்திற்கு" பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதால், வட கொரியாவின் "முரட்டுத்தன நடவடிக்கையை" அதிகரித்துள்ளது என்ற எச்சரிக்கையை விடுத்துள்ளது. பியோங்யாங்கில் உள்ள ஒரே வெளிநாட்டு வங்கியான, டேடாங் நிதிய வங்கியின் பொது மேலாளர் நைஜல் கோவி கூறியதாவது: "வட கொரியாவுடன் வணிகத்தை வங்கிகள் நடத்தக் கூடாது எனப்படும் நடவடிக்கைகளில் விளைவு, குற்றஞ்சார்ந்த நடவடிக்கைகள் மறைமுகமாக செயல்படும், கண்டுபிடிக்க முடியாதவையாகப் போய்விடும்; அதே நேரத்தில் முறையான வணிகம் சோர்ந்து, தளர்ந்துவிடும் அல்லது சந்தேகத்திற்கு உரியது எனத் தோன்றும் திருட்டுத்தனமாக வழிவகைகளை மேற்கொண்டுவிடும்."

பியோங்யாங்கில் உள்ள ஸ்ராலிச ஆட்சி 1998ல் இருந்து உலகளாவிய மூலதனத்தை தழுவ முயற்சிக்கிறது என்றும் ஏற்கனவே சந்தைமுறைக்கு ஆதரவான நடவடிக்கைகள் பலவற்றையும் எடுத்துள்ளது என்றும் இக்கட்டுரை சுட்டிக்காட்டியுள்ளது. கிராமப்புற சந்தைகள் திறக்கப்பட்டுள்ளது, விலைகள், ஊதியங்கள் மீதான கட்டுப்பாடு தளர்த்தப்படுதல், தடையற்ற வணிகப் பகுதிகளை நிறுவியுள்ளது என்பவை இதில் அடங்கும். நியூயோர்க் பங்குச்சந்தை உட்பட சந்தைப் பொருளாதாரத்தை பற்றி ஆய்வதற்காக வட கொரிய அதிகாரிகள் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்; முலாளித்துவ முறை ஆய்வு பற்றிய மையம் ஒன்றும் வட கொரியாவில் நிறுவப்பட்டுள்ளது.

ஆனால், தென்கொரியா, சீனா, ஐரோப்பிய நாடுகள் வடகொரிய பொருளாதாரத்துடன் வணிக உறவுகளை பெருக்கும் முயற்சிகள் அனைத்தும் புஷ் நிர்வாகத்தின் இடைவிடப் பிரச்சாரமான அழுத்தங்களை தூண்டுவதினால் சேதத்திற்கு உட்பட்டுவிட்டன. உதாரணமாக அதன் கேசாங் தொழிற்பேட்டை 2012இற்குள் ஒரு மில்லியன் தொழிலாளர்களுக்கு வேலைகொடுக்கும் வகையில் திட்டமிடப்பட்டிருந்தது. அமெரிக்க அச்சுறுத்தல்களின் விளைவாக இப்பகுதியின் ஒரு சில ஆயிரம் தொழிலாளர்களும், சிறு எண்ணிக்கையிலான தென்கொரிய ஆலைகளும்தான் உள்ளன. இந்த ஆண்டின் முற்பகுதியில் வாஷிங்டன், தென்கொரியாவும் வட கொரியாவும் பேச்சு வார்த்தைகள் நடத்தி அதன் விளைவாக தென் கொரியா பெற்றுவரும் கேசாங்கில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை வாங்குவதை நிறுத்த வேண்டும் என்று கோரியுள்ளது.

Yale Global கட்டுரை கூறியிருப்பதாவது: "சந்தைப் பொருளாதாரம், உலகந்தழுவிய முறை என்பதற்கு வார்த்தையளவிலேனும் பெரிதும் பிணைத்துக் கொண்டிருக்கும் ஒரு நிர்வாகம் அத்திசையில் வடகொரியா எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் விரோதப் போக்கு காட்டுவது விந்தைதான். ஆனால் கடுமையான போக்காளர்ககளின் பார்வையில் வட கொரியாவிற்கு ஊக்கம் கொடுப்பது இருக்கும் ஆட்சியை தொடரவைக்கும். சட்ட விரோத அல்லது சட்டபூர்வ வெற்றிகரமான பொருளாதார நடவடிக்கை என்பது ஆட்சிச் சரிவை தாமதப்படுத்தும்; அதைத்தான் கடுமையான போக்காளர்கள் இரு தசாப்தங்களாக எதிர்பார்த்து நிற்கின்றனர்.

புஷ் நிர்வாகத்தின் தந்திரோபாயங்கள் வெளிப்படையாகவே தெரிகின்றன; வடகொரியா மீதான பொருளாதார அழுத்தங்களை இறுக்கி அரசியல் சரிவை முன்கூட்டியே கொண்டுவரவேண்டும்; அதே நேரத்தில் வட கொரியாவின் "அச்சுறுத்தலைப்" பயன்படுத்தி இன்னும் கூடுதலான முறையில் வலிமையுடன் உள்ள ஜப்பானுடன் சீனாவிற்கு எதிராக நெருக்கமான இராணுவக் கூட்டை கொள்ள வேண்டும். ஐ.நா. பாதுகாப்புக் குழுவில் ஜப்பான் கொண்டுவந்துள்ள தீர்மானத்திற்கு வாஷிங்டன் பெரும் திருப்தியுடன் ஆதரவு கொடுத்துள்ளது; ஏனெனில் அதன் மூலோபாயத்தைத்தான் இது வலுவடையச் செய்யும். அமெரிக்க உதவி அரச செயலாளரான கிறிஸ்டோபர் ஹில் ஜப்பான், தென்கொரியா, வட கொரியா ஆகியவற்றுடன் பேச்சுவார்த்தைகள் நடத்த வடகிழக்கு ஆசியாவிற்கு அனுப்பப்பட்டுள்ளார். அமெரிக்காவும் ஆறு நாடுகளின் கூட்டம் மீண்டும் தொடரப்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளது; ஆனால் அப்பேச்சு வார்த்தைகளை முன்கூட்டிய அழிக்கும் வகையில் வட கொரியாவிற்கு எந்தவித சலுகைகளும் கொடுக்கப்படமாட்டாது என்றும் கூறிவிட்டது.

அதே நேரத்தில் புஷ் நிர்வாகம் இராணுவத் தலையீட்டையும் இல்லை என்று கூறிவிடவில்லை. "ஏவுகணை நெருக்கடியை" ஒரு போலிக் காரணமாக பயன்படுத்தி, தன்னுடைய பாலிஸ்டிக் எதிர்ப்பு ஏவுகணைத் திட்டம் என்றும் பிரச்சினைக்குரிய முறையை "செயலாற்றும் முறைக்கு" முதல் தடவையாகக் கொண்டுவந்துவிட்டது. வடகொரிய ஏவுகணைச் சோதனைகளுகளுக்கு முன்பே பென்டகன் வட கொரியாவின் தொலைதூர ஏவுகணைகளை சுட்டுவிடலாம் என குறிப்பிட்டது; அது எப்படியாயினும், ஏவப்பட்ட ஒரு நிமிஷத்திற்குள்ளேயே தோல்வியடைந்துவிட்டது. புஷ் நிர்வாகத்திற்கு முக்கிய ஜனநாயகக் கட்சியினர் ஆதரவு கொடுத்துள்ளதோடு மட்டும் இல்லாமல் இன்னும் கூடுதலான வகையில் பொறுப்பற்ற இராணுவ நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் கூறுகின்றனர்.

ஜூன் 22 அன்று வாஷிங்டன் போஸ்ட்டில் வெளியிட்ட கருத்து ஒன்றில், கிளின்டனுடைய முன்னாள் பாதுகாப்புச் செயலர் வில்லியம் பெரி மற்றும் உதவிப் பாதுகாப்புச் செயலர் ஆஷ்டன் கார்ட்டரும் வடகொரிய ஏவுகணைத் தளத்தின் மீது அமெரிக்க இராணுவம் தவிர்க்கவியலாத தாக்குதலை நடத்த வேண்டும் என்று கோரியுள்ளனர். இத்தகைய நடவடிக்கை கொரியத் தீபகற்பத்தில் "முழுப் போர்" விளையும் ஆபத்தை ஏற்படுத்திவிடும் என்றாலும் அவர்கள் அவ்விதக் கருத்தைக் கூறியுள்ளனர். பெரியும் கார்ட்டரும் ஜூலை 8 அன்று தங்களுடைய நிலைப்பாட்டை டைம் இதழில் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.

"புஷ் நிர்வாகத்தின் உறுப்பினர்கள் உட்பட, எமது கட்டுரையை பற்றிக் விமர்சித்துள்ளவர்கள் தவிர்க்க இயலாத தாக்குதல் என்பது கூடுதலான ஆபத்தை கொடுக்கக்கூடும் என்கின்றனர். ஆனால் வடக்கு கொரியாவில் தன்னுடைய போக்கை அமெரிக்கா நிலைநிறுத்தவேண்டும் என்றால் அப்படி செய்வதுதான் மிகக் குறைந்த ஆத்திரமூட்டும் தன்மை உடையதாகும்; அடுத்த முறை என்பது இன்னும் கூடுதலான ஆபத்துக்களை தரும். இன்னும் கூடுதலான முறையில் வரவிருக்கும் ஆபத்தின் தன்மையை உணர்ந்து அமெரிக்கா செயல்படுவதற்கு வலிமையை பயன்படுத்துவதை தவிர, வட கொரியாவின் விழைவுகளை தடுப்பதற்கு வேறு கருவி ஒன்றும் கிடையாது." என்று அவர்கள் மேலும் கூறியுள்ளனர்.

அமெரிக்க ஆளும் வட்டங்களில் இந்த தந்திரோபாயத்தை பற்றிய விவாதத்தில் சிறிதும் பொருட்படுத்தப்படாத விடயம் வடகிழக்கு ஆசியாவின் நூற்றுக்கணக்கான மில்லியன் மக்களுக்கு ஒரு "முழுப் போரினால்" விளையக்கூடிய பேரழிவுகள்தாம்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved