World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

The case of the USS Liberty: anatomy of an Israeli provocation

இஸ்ரேலிய ஆத்திரமூட்டல் ஒன்றை பகுத்து ஆய்தல்: USS லிபேர்ட்டி பற்றிய தகவல்

By Shannon Jones
27 July 2006

Back to screen version

லெபனானில் ஐ.நா. புறக் காவல் கூடம் ஒன்றை இலக்கு வைத்து நான்கு கண்காணிப்பாளர்களை செவ்வாய்க்கிழமயன்று இஸ்ரேல் கொன்றதை மறைப்பதற்கு அது கொடுத்த மறுப்புக்களும் பொய்களும் மற்றொரு நன்கு அறியப்பட்டுள்ள நிகழ்வை நோக்காளர்களின் நினைவிற்கு கொண்டுவருகிறது. ஜூன் 1967ல் ஆறு நாட்கள் போரின் இடையில், இஸ்ரேலிய விமானங்களும் கப்பல்களும் அமெரிக்க உளவுத்துறை கப்பல் ஒன்றை தாக்கி, மொத்தம் இருந்த 292 குழுவினரில் 34 மாலுமிகளை கொன்றதுடன் 171 பேரைக் காயத்திற்கும் உட்படுத்தின.

USS லிபேர்ட்டி என்னும் கப்பல் எகிப்து, ஜோர்டான், சிரியா, ஈராக் மீதான ஜூன் 4ம் தேதி திடீர் தாக்குதல்களை இஸ்ரேல் நடத்தியதை அடுத்து போரிடுபவர்களின் தொடர்புகளை கண்காணிக்கும் பொருட்டு கிழக்கு மத்தியதரை கடலுக்கு அனுப்பப்பட்டிருந்தது. இரண்டாம் உலகப் போரில் முன்பு பயன்படுத்தப்பட்டிருந்த இந்தப் போர்க்கப்பல், பெயரளவிற்கு "தொழில்நுட்ப ஆய்வு" என அழைக்கப்பட்டாலும், தேசிய பாதுகாப்புக் குழுவினால் மிகச் சமீபத்திய மின்னணு கண்காணிப்பு கருவிகள் பொருத்தப்பட்டிருந்த நிலையில் இருந்தது; இதனால் கடற்படை தொழில்நுட்ப வல்லுனர்கள் ஆகாயத்திலும், தரையிலும் நிகழும் வானொலி உரையாடல்களை இடைமறித்து ஒற்றுக் கேட்டுப் பதிவு செய்ய முடியும்.

லிபேர்ட்டி கப்பல் பற்றி இஸ்ரேலிய விமானப் படை நன்கு அறிந்திருந்தது. வானம் தெளிவாக இருந்ததுடன் கப்பல் ஒரு பெரிய அமெரிக்க கொடியையும் கொண்டிருந்து, எகிப்தின் சினாய் தீபகற்ப கடற்கரை அருகே சர்வதேச நீர்நிலையில் பயணித்து வந்தது. இஸ்ரேலிய போர் விமானங்கள் இக்கப்பலை சுற்றி வலம் வந்த வண்ணம் இருந்தன. சில விமானங்கள் மிக நெருக்கமாக வந்த அளவில், மாலுமிகள் விமான ஓட்டுனர்களை பார்த்து கையசைக்க முடிந்தது; அவர்களும் பதிலுக்கு கையசைத்தனர். சிறிதும் கவலைப்படாமல், அமெரிக்க மாலுமிகள் கப்பலின் மேல் தளத்தில் சூரிய ஒளியில் குளித்துக் கொண்டிருந்தனர்.

ஜூன் 8ம் தேதியன்று, எந்த எச்சரிக்கையும் இல்லாமல், குறைந்த உயரத்தில் பறந்துவந்த இஸ்ரேலிய போர் விமானங்கள் USS லிபேர்ட்டி கப்பலை ராக்கெட்டுக்கள், நாபாம் மற்ற குண்டுகளை கொண்டு தாக்கின. இந்த தாக்குதல் 20 நிமிடங்களுக்கு நீடித்தது. கப்பலின் தளத்தை கிழித்த ராக்கெட்டுக்கள் பல மாலுமிகளை கொன்றன, காயப்படுத்தின; கப்பலே தீப்பிடிக்குமாறும் செய்தன. காயமுற்றவர்களுள் ஒருவர் கப்பலின் தலைமை மாலுமியான வில்லியம் மக்கோனகிள் ஆவார்.

தாக்கும் படகுகளும் தாக்குதலை தொடர்ந்தன. தாக்குதலை நிறுத்துவதற்கு இஸ்ரேலியர்களிடம் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் அசட்டை செய்யப்பட்டன. மாறாக, இஸ்ரேலிய தாக்கும் படகுகள் லிபேர்ட்டியை தொடர்ந்து தாக்கின. இதில் ஒன்று கப்பலின் உளவுத் துறைப் பிரிவை தாக்கியதில் 25 அமெரிக்க மாலுமிகள் உடனே இறந்து போயினர். இதன்பின் அப்படகுகள் வெகு அருகில் வந்தன; அந்த தூரத்தில் லிபேர்ட்டியின் அடையாளங்கள் பற்றி படகில் இருந்தவர்களுக்கு தெரியாமல் போகாது. இவை கப்பலை வட்டமிட்டு இயந்திரத் துப்பாக்கி சூட்டையும் நடத்தி தீயணைத்துக் கொண்டிருந்த மாலுமிகளையும் இலக்கு வைத்தன.

கப்பலில் தண்ணீர் நுழைந்து மூழ்கத் தொடங்கியவுடன் அதைக் கைவிட்டு விடுவதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இரப்பர் உயிர்காக்கும் மிதவைப்படகுகள் கடலில் எறியப்பட்டபோது அம்மாலுமிகள் மீது எந்திரத்துப்பாக்கிகளால் நீட்டுவாக்கில் நெடுகச்சுட்டு, அவர்கள் முயற்சியை கைவிட்டு, மேல்தளத்தில் இருந்து கீழ்த்தளத்திற்குச் செல்லும்படி நிர்பந்திக்கப்பட்டனர்.

ஆரம்பத்தில் இஸ்ரேலியர்கள் வானொலி அலை இடைவழிகளை சீர்குலைத்ததால் லிபேர்ட்டி உதவிக்கு அழைப்புக் கொடுக்க முடியவில்லை. இறுதியில் USS Saratoga என்னும் விமானங்கள் ஏவும் கப்பலை தொடர்பு கொள்ள முடிந்தது. உடனடியாக ஒரு விமானப்படைப் பிரிவு லிபேர்ட்டியின் மீதான தாக்குதலை விரட்ட உதவிக்கு அனுப்பப்பட்டது. ஆனால் அந்த விமானங்கள் வந்து சேரவில்லை. வாஷிங்டனில் இருந்து வெளிவந்த மர்மமான உத்தரவின் பேரில் அவை திருப்பி அழைக்கப்பட்டிருந்தன. அமெரிக்க மாலுமிகளின் உயிரைக் காப்பாற்றுவதைவிட, இஸ்ரேலுக்கு சங்கடம் ஏற்படுத்தவதை தவிர்க்க வேண்டும் என்ற அக்கறையைத்தான் வாஷிங்டன் காட்டியது.

தாக்குதல் மற்றும் ஒரு மணி நேரம் பதினைந்து நிமிடங்களுக்கு நீடித்தது. இஸ்ரேலியர்கள் பின்வாங்கிய பின்னர், லிபேர்ட்டி கப்பல் புகைப்படலத்தில் இருந்தது; அதன் குழுவில் இருந்தவர்களில் மூன்றில் இரு பகுதியினர் இறந்துவிட்டிருந்தனர் அல்லது காயமுற்றிருந்தனர். இதற்கு ஒரு மணி நேரத்திற்கு பின்னர் இஸ்ரேலிய கப்பல்கள் மீண்டும் வந்து ஏதேனும் உதவி தேவையா என்று லிபேர்ட்டி மாலுமிகளைக் கேட்டனர். வெறுப்புடன் அந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

இரண்டு அமெரிக்க அழிக்கும் கப்பல்கள் தாக்குதலுக்கு உள்ளாகியிருந்த கப்பலை அடைந்து குழுவினரை மீட்பதற்கு 16 மணி நேரம் ஆயிற்று. எவரிடமும் தாக்குதல் பற்றி விவாதிக்க வேண்டாம் என்று உயிர்பிழைத்திருந்தவர்களுக்கு உடனடியாக உத்திரவு இடப்பட்டது.

இந்த நிகழ்ச்சி பற்றி உடனடியாக ஒரு உத்தியோகபூர்வ இஸ்ரேலிய/அமெரிக்க மூடிமறைத்தல் ஆரம்பமானது. அமெரிக்கக் கப்பல் ஒன்றை தற்செயலாக தன்னுடைய படைகள் தாக்கிவிட்டதாக இஸ்ரேல் ஓர் அறிக்கையை வெளியிட்டது. முன்வைக்கப்பட்ட காரணங்கள் எடுத்த எடுப்பிலேயே அபத்தமானவை என்று தெளிவாயிற்று; லிபேர்ட்டி தெளிவான அடையாளங்களை கொண்டிருந்தது; தாக்குதல் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடந்தது; ஓர் அமெரிக்கக் கப்பல் என்று முன்னர் சரியாகவே அடையாளம் காணப்பட்ட தெளிவான குறிப்புக்களும் இருந்தன.

உத்தியோகபூர்வமற்ற வகையில், இத்தாக்குதல் வேண்டுமென்றே நடைபெற்றது என்று அமெரிக்க அதிகாரிகளுக்கு நன்கு தெரியும். மற்றவர்களுடன் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் டீன் ரஸ்க்கும் லிபேர்ட்டி வேண்டுமேன்றே தாக்குதலுக்கு இரையாகியது என்றுதான் நம்பினர். இஸ்ரேலிய பாதுகாப்பு மந்திரி மோஷே தயான் தான் நேரடியாகத் தாக்குதலுக்கு உத்தரவிட்டார் என்று ஒரு CIA அறிக்கை வலியுறுத்திக் கூறியது.

ஆயினும் கூட தொலைக்காட்சியில் ஜனாதிபதி லிண்டன் ஜோன்சன் தோன்றி 10 அமெரிக்க மாலுமிகள் ஆறு நிமிஷ தற்செயல் தாக்குதலில் கொல்லப்பட்டார்கள் என்று அறிவித்தார். நிகழ்ச்சி நடைபெற்று மூன்று வாரங்களுக்குப் பின் வெளிவந்த அறிக்கை ஒன்று சற்றும் திறனாய்வின்றி இந்த நிகழ்வு பற்றிய பொய்யுரைகளை ஏற்றது; இஸ்ரேல் இறுதியில் அற்பமான 6 மில்லியன் டாலர்களை இழப்புத் தொகையாக கொடுத்த வகையில் நிகழ்வு முடிவிற்கு வந்தது.

தங்கள் நிகழ்வுகளை பிறருக்கு கூறவந்த குழு உறுப்பினர்கள் இஸ்ரேலிய சார்புடைய குழுக்களால் செமிடிய எதிர்ப்பாளர்கள் என்ற தாக்குதலுக்கு உட்படுத்தப்பட்டனர். உதாரணமாக உத்தியோகபூர்வமாக நிகழ்வு மூடி மறைக்கப்பட்டமை பற்றி விமர்சித்து எழுதிய புத்தகத்திற்காக லிபேர்ட்டியில் ஒரு அதிகாரியாக இருந்த ஜேம்ஸ் என்னெஸ் "அரேபிய பிரச்சாரகர்" என்று முத்திரையிடப்பட்டார்.

கப்பலின் மாலுமிகள் தலைவரான மக்கோனகிள் காயமுற்ற குழு உறுப்பினர்களை மீட்ட பணியில் பங்கு கொண்டதற்காக Medal of Honour என்ற சட்ட மன்ற விருதைப் பெற்றார். ஆனால் கிட்டத்தட்ட இரகசியமாகவே இந்த நிகழ்வு நடைபெற்றது. இன்று வரை தாக்குதலில் தப்பித்தவர்கள் கோரிய புதிய விசாரணை வேண்டும் என்பது மறுக்கப்பட்டுள்ளது.

லிபேர்ட்டி ஏன் தாக்கப்பட்டது? இஸ்ரேலியர்கள் பலவற்றை மறைக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர். கப்பல் சேகரித்திருந்த உளவுத் தகவல்கள் தங்களுடைய பொய்க்கூற்றுக்களை, 1967ம் ஆண்டில் கைப்பற்றப்பட்ட பெரும் அளவிலான அரபுநிலங்கள் மற்றும் இந்நீண்டகால திட்டத்திற்குட்பட்டிருந்த மின்னல் தாக்குதல் ஆகியன தற்காப்பு நடவடிக்கை என்ற பொய்யான கூற்றுக்களை வேரறுத்துவிடும் என்று இஸ்ரேலியர்கள் அஞ்சினர்.

போரின் தொடக்கத்தில் தொடர்புகளை கண்காணிக்கும் நிலையில் லிபேர்ட்டி இருந்தது. அதையொட்டி இஸ்ரேல்தான் ஆக்கிரமிப்பாளர் என்பது நிரூபணம் ஆகியிருக்கும். இதைத்தவிர கப்பல் போர்க்குற்றங்கள் பற்றிய தொகுப்புக்களை சான்றாவணமாக சேகரிக்க முடியும்; இதில் கைப்பற்றப்பட்ட எகிப்திய மாலுமிகள் விசாரணையின்றி கொலைசெய்யப்பட்டது வெளிவந்துவிடும்.

லிபேர்ட்டி கப்பல் மூழ்கடிக்கப்பட்டது சிரியாமீது இஸ்ரேல் தாக்கி கோலான் குன்றுகளை கைப்பற்றியதற்கு ஒரு நாள் முன்னர் நடந்தது. கப்பல் செயல்முறையில் இருந்திருக்குமேயானால், சிரியாதான் முதலில் தாக்குதலை தொடர்ந்தது என்று பின்னர் இஸ்ரேல் கூறிய கருத்துக்களை நிராகரிக்கும் சான்றுகள் வெளிப்பட்டிருக்கும்.

இழிந்த முறையில், திமிர்த்தனமாக இஸ்ரேலின் குற்றங்களை அமெரிக்கா மறைத்தமை, லிபேர்ட்டியை மூழ்கடித்ததில் இருந்து, கணக்கிலடங்கா பாலஸ்தீனிய லெபனிய மக்களை கொன்றமை, அண்மையில் ஐ.நா. புறக்கண்காணிப்பு நிலையத்தை தாக்கியமை வரை, அனைத்துமே ஒரே நூலில் இழைக்கப்பட்ட செயல்களாகும். தன்னுடைய சிப்பாய்களை கொன்றாலும் கூட, மத்திய கிழக்கில் அமெரிக்க ஏகாதிபத்திய நலன்களுக்கு அது காப்பு நாடாக இருக்கும் வரை இஸ்ரேல் என்ன குற்றங்களைச் செய்தாலும் அமெரிக்கா அவற்றை மன்னிக்கத் தயாராக இருக்கிறது.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved