World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : மத்திய கிழக்கு

Seven Palestinian civilians killed on Gaza beach

The political calculations behind Israel's latest atrocity

காசா கடற்கரையில் ஏழு பாலஸ்தீனிய குடிமக்கள் கொல்லப்பட்டனர்

இஸ்ரேலின் சமீபத்திய கொடுமைக்குப் பின்னணயில் இருக்கும் அரசியல் கணிப்பீடுகள்

By Rick Kelly
12 June 2006

Back to screen version

ஜூன் 9ஆம் தேதியன்று மாலை வடக்கு காசாவிலுள்ள கடற்கரையொன்றில் இஸ்ரேலியரின் பீரங்கிக் குண்டுத் தாக்குதலால் ஏழு பாலஸ்தீனியக் குடிமக்கள் கொல்லப்பட்டதுடன் 35 பேர் காயமுற்றனர். ஒரு 18 மாதப் பெண் குழந்தை, ஒரு கைக்குழந்தை உட்பட கடற்கரைக்குச் சென்ற ஏழு பேர் கொலை செய்யப்பட்டமை, பாலஸ்தீனிய மக்களுக்கு எதிராக இஸ்ரேலிய அரசாங்கம் இழைத்த மற்றொரு கொடூரமான செயலாகும்.

வெள்ளியன்று நிகழ்த்தப்பட்ட படுகொலை வேண்டுமென்றே திட்டமிடப்பட்ட ஒரு அரசியல் ஆத்திரமூட்டலாகும். இது ஆக்கிரமிப்பு பகுதிகளின் மீது நான்கு மாத காலம் நீடித்திருக்கும் இஸ்ரேலிய இராணுவத் தாக்குதல் மற்றும் பொருளாதார தடைகளை தொடர்ந்த செயலாகும். இதற்கு டெல் அவிவின் அமெரிக்க ஐரோப்பிய நட்பு நாடுகளின் முழு ஆதரவும் உள்ளது.

Fatah, Hamas மற்றும் இஸ்லாமிய ஜிஹாத் போராளிகளுக்கு இடையே சமாதானம் ஏற்படும் முயற்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்று டெல் அவிவ் நம்புகிறது; அத்தகைய சமாதானம் இஸ்லாமியர்கள் இஸ்ரேலை அங்கீகரித்து "இரண்டு நாடுகள்" என்ற தீர்வின் அடிப்படையில் சமாதானத்திற்கு பேச்சு வார்த்தைகள் நடத்தலாம் என்ற நோக்கத்தை கொண்டிருந்தது.

கடற்கரையில் குண்டு வீச்சு நடத்தி, போர்நிறுத்த ஒப்பந்தத்தை கைவிட்டு போராளிகள் மீண்டும் பதிலடித் தாக்குதல்களை தொடக்குவதற்கு தூண்டும் வகையில் நடந்து கொண்டதால், இஸ்ரேலிய அரசாங்கம் ஆக்கிரமிப்புப் பகுதிகளில் முழு அளவுத் தாக்குதல் நடத்துவதற்கு தக்க காரணத்தை தேடியுள்ளது. இஸ்ரேலிய தரைப்படைகள் மீண்டும் காசாவை ஆக்கிரமிக்கும் எண்ணமும் இதில் அடங்கியுள்ளது.

கடற்கரையில் குண்டுவீச்சு பற்றிய படத்தொகுப்புக் காட்சி என்பது சர்வதேச பார்வையாளர்களுக்கு பாலஸ்தீனியர்கள் மீதான இஸ்ரேலிய அடக்குமுறை எவ்வாறு நாளாந்த எதார்த்தமாக உள்ளது என்பதை காட்டும் அபூர்வ நிகழ்வுகளில் ஒன்றாகும்.

கொல்லப்பட்ட ஏழு பேரில் ஆறு நபர்கள் ஹாலியா குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். குண்டுவீச்சு நிகழ்ந்தபோது ஏற்பட்ட கொடூரமான நிகழ்வுகளை காசா செய்தியாளர் சாமி யூசுப் கீழ்க்கண்டவாறு விவரிக்கிறார்: "கடற்கரையில் எங்கு பார்த்தாலும் உடலுறுப்பு சிதறல்கள் இருந்தன. மூன்று குழந்தைகள் அங்கு இருந்தன; இரண்டிற்கு தலையில் ஆழ்ந்த வெட்டுக்காயங்கள் ஏற்பட்டன. ஒரு பெண் தன்னுடைய தந்தையாரை கதறி அழைத்தாள்... இப்படி நடக்கும் என்று எவரும் எதிர்பார்க்கில்லை. தங்களுடைய தேர்வுகளை அப்பொழுதுதான் குழந்தைகள் முடித்து விட்டு குடும்பத்துடன் கடற்கரைக்கு சூரிய ஒளியில் மகிழ வந்திருந்தனர். கூட்டங்களில் இருந்தும் குழப்பங்களில் இருந்தும் தொலைவில் உள்ள இவ்விடத்திற்குத்தான் மக்கள் களிப்பாக இருப்பதற்கு வருவர். சில மணி நேரம் கழித்து இஸ்ரேலிய ஜெட் விமானங்கள் காசா ஆகாயத்தில் முழக்கமிட்டுச் சென்றன." என்று அவர் BBC இடம் தெரிவித்தார்.

காசாவின் கடல் எல்லையை ரோந்து வரும் இஸ்ரேலிய கடற்படை துப்பாக்கிப் படகுகள்தான் இத்தாக்குதலுக்குக் காரணம் என்று ஆரம்ப தகவல்கள் கூறின. ஆனால் இக்குண்டுகள் இஸ்ரேலின் பலஸ்தீனத்துடனான கிழக்கு எல்லைப்பகுதியில் குவித்து வைக்கப்பட்டுள்ள படைகளில் இருந்து சுடப்பட்டவை என்று இப்பொழுது தெரிய வருகிறது. இத்தாக்குதல் ஒரு தற்செயலான நிகழ்வு, பீரங்கிக் குண்டு திசை மாறியிருக்கக் கூடும் அல்லது "வெடிச் சாதனம் தவறாக கையாளப்பட்டிருக்கக்கூடும்" என்று மேஜர் ஜெனரல் Yoav Galant கூறியுள்ளார்.

இது நம்பகத் தன்மை உடையது அல்ல. கடந்த வாரம் இஸ்ரேல் தன்னுடைய பீரங்கித் தாக்குதல் மற்றும் ஏவுகணை தாக்குதலை வடக்கு காசாப்பகுதியில் அதிகப்படுத்தியுள்ளது. கடற்கரையில் குண்டு வீசப்பட்ட அன்றே நான்கு இஸ்ரேலிய ஏவுகணை தாக்குதல்கள் மூன்று சந்தேகத்திற்குரிய பலஸ்தீனிய போராளிகளை தாக்கிக் கொன்றன. அதற்கு முன்தினம் மற்றும் நான்கு போராளிகள் கொல்லப்பட்டனர்; இதில் மக்கள் எதிர்ப்புகுழு தலைவரான ஜமால் அபு சம்ஹடனாவும் அடங்குவார்.

400 கஜதூர இலக்கை இந்த குண்டுகள் கொண்டதாக இஸ்ரேலிய அதிகாரி கூறினார். இது உண்மையானாலும்கூட, பாலஸ்தீனியரின் உயிருக்கு டெல் அவிவ் காட்டும் பெரும் மதிப்பின்மையைத்தான் இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு விடையிறுக்கும் வகையில் ஹமாசின் இராணுவப் பிரிவு 2005 பெப்ரவரியில் இருந்து அது கடைப்பிடித்து வரும் "சமாதான காலத்திற்கு" முற்றுப்புள்ளி வைப்பதாக அறிவித்துள்ளது. "சியோனிச படுகொலைக்காரர்கள் சண்டையை தொடக்கியுள்ளனர். இதன் பொருள் சியோனிய நகரங்களில் மீண்டும் நில நடுக்கம் இருக்கும் என்பதுதான்." என்று ஹமாஸ் ஒரு அறிக்கையில் கூறியுள்ளது.

வார இறுதியில், முன்னொருபோதுமில்லாத வகையில் காசா எல்லைப் பகுதியிலுள்ள இஸ்ரேலிய குடியிருப்புக்களில் 32 ராக்கட்டுக்கள் செலுத்தப்பட்டன. ஹமாசின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் "Sderot நகரத்தை ஒரு பேய் நகரமாக்குவது என்று முடிவு செய்துள்ளோம். அவர்கள் புறப்படும் வரை நாங்கள் ராக்கெட் ஏவுவதை நிறுத்தப் போவதில்லை" எனக் கூறினார்.

இதற்குப் பதிலடி கொடுப்பதில் இஸ்ரேல் விரைவாக செயல்பட்டது. இரண்டு ஹமாஸ் போராளிகள் பெய்ட் லாகியாவிற்கு அருகே நிகழ்த்தப்பட்ட ஒரு இஸ்ரேலிய விமானத் தாக்குதலில் கொல்லப்பட்டனர்; மற்றொரு நிகழ்வில் வடக்கு காசா நகரப்பகுதியான ஜாபாலியாவில் இஸ்லாமிய ஜிகாத் உறுப்பினர் ஒருவர் கொல்லப்பட்டார்.

இஸ்ரேலிய அரசாங்கம் எதிர்பார்த்தது போலவேதான் ஹமாசின் விடையிறுப்பும் வந்தது. கடந்த சில வாரங்களாக ஆக்கிரமிப்பு பகுதிகளில் நிகழ்ந்த செயல்களுக்கு நேரடி விடையிறுப்பாகத்தான் காசா கடற்கரை பகுதிமீது நடத்தப்பட்ட பீரங்கித் தாக்குதல் ஆகும்.

இஸ்ரேலின் ஹடாரிம் சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த Fatah, ஹமாஸ் மற்றும் இஸ்லாமிய ஜிகாத் போராளிகள் கடந்த மாதம் ஒரு கூட்டறிக்கை வெளியிட்டு காசாப் பகுதியிலும் மேற்கு கரையிலும் போராளிகளுக்கு இடையே நிகழும் பூசல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று கோரினர். இந்த 18 அம்ச ஆவணம் ஹமாசுக்கும் இஸ்லாமிய ஜிகாத்திற்கும் பாலஸ்தீனிய விடுதலை இயக்கத்தில் சேருமாறும், பல போராளிக்குழுக்கள் ஒரே குடையின் கீழ் அமைக்கவிருக்கும் "பாலஸ்தீனிய எதிர்ப்பு முன்னணியில்" சேருமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மேலும் Fatah-ஹமாஸ் பாலஸ்தீனிய அதிகாரக் கூட்டணி அரசாங்கம் ஒன்று தோற்றுவிக்கப்பட வேண்டும் என்றும் கோரியுள்ளனர்.

முக்கிய Fatah போராளியான மார்வான் பர்கெளத்தினால் தயாரிக்கப்பட்ட இந்த "கைதிகள் ஆவணம்" ஜெருசலத்தை தலைநகராக கொண்டுள்ள மேற்குக்கரை, காசாப் பகுதி உள்ள பாலஸ்தீனிய நாடு நிறுவப்படுவதை ஏற்குமாறும் அழைப்பு விடுத்துள்ளனர்; Fatahவின் ஆதரவிற்கு உட்பட்ட இந்த ஆவணம் இஸ்ரேல் அழிக்கப்பட வேண்டும் என்று கூறும் ஹமாஸ் அத்தகைய கருத்தை கைவிடவேண்டும் என்பதை வலியுறுத்துகிறது.

பாலஸ்தீனிய விடுதலை இயக்கத்திற்கு (PLO) ஆதரவை பெருக்குவதற்கும் தன்னுடைய ஆதிக்கம் அதன் மீது உறுதியாக இருப்பதற்கும் பர்கெளடி முயன்றுள்ளார்; ஆனால் இதைவிட முக்கியமானது கடந்த ஜனவரி மாத சட்டமன்ற தேர்தல்களில் ஹமாஸ் வெற்றியடைந்ததை அடுத்து பாலஸ்தீனிய அதிகாரத்தின் மீது சுமத்தப்பட்ட சர்வதேச பொருளாதார பகிஸ்கரிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதாகும். ஹமாஸ் முறையாக இஸ்ரேலுக்கு அங்கீகாரம் கொடுப்பது பாலஸ்தீனியத்திற்கும் அரபு நாடுகள், ஐரோப்பா, வாஷிங்டன் கூட பாலஸ்தீனத்திற்கு ஆதரவைக் கொடுக்கக் கூடும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். "ஹமாஸ் மற்றும் இஸ்லாமிய ஜிகாத்தின் ஒப்புதல் பெற்ற முதல் ஆவணமாகும் இது; இது '67ம் ஆண்டு எல்லைகளை கொண்ட பாலஸ்தீனிய நாட்டின் தோற்றத்தை அங்கீகரிக்கிறது. இது முக்கியமானது; ஏனெனில் சர்வதேச அங்கீகாரம் என்ற நோக்கத்திற்காக பல பிரிவுகளையும் ஒருங்கிணைக்கிறது" என்று இத்தாலிய நாளேடான Corriere della Sera விடம் அவர் கூறினார்.

தன்னுடைய பங்கிற்கு பலஸ்தீனிய ஜனாதிபதியான முகம்மது அபாஸ் கைதிகளின் கோரிக்கையை எடுத்துக் கொண்டு, ஹமாஸ் தலைமையிலான பாலஸ்தீனிய அதிகாரத்திற்கு அதிக அழுத்தம் கொடுத்து போராளிக் குழுக்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று வாஷிங்டனும் டெல் அவிவும் கூறியிருப்பதற்கு இயன்றதை தான் செய்துவருவதாகக் காட்டிக் கொள்ளுகிறார். இந்த ஆவணத்திற்கு ஒப்புதல் தரவேண்டும் அல்லது 40 நாட்களுக்குள் சர்வஜனவாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும் என்று ஹமாஸிற்கு அபாஸ் இறுதி எச்சரிக்கை கொடுத்துள்ளார்.

அபாஸின் மிரட்டலுக்கு பணிவது ஒருபுறம் இருக்க பொது நிலைப்பாட்டிற்காக கூட ஹமாஸ் கையெழுத்திட வாய்ப்பில்லை என்பதை கடந்த வெள்ளிகிழமை கொடூரம் முடிவாகக் காட்டியுள்ளது. சர்வஜனவாக்கெடுப்பு பற்றி கடிமா கட்சியின் தலைமையிலான பிரதம மந்திரி எகுட் ஓல்மர்ட்டின் அரசாங்கம் சம்பிரதாயத்திற்காக நடுநிலையை கொண்டுள்ளது. ஹமாசை வழிக்குக் கொண்டுவருவதில் அபாஸ் மேற்கொண்டுள்ள முயற்சியை எதிர்ப்பவர்கள் என்று காட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை. ஆக்கிரமிப்பு பகுதிகளில் நிலைமை எதிரெதிராக இருக்க உதவும் வரைதான் உண்மையில் டெல் அவிவ் அப்பாசின் நடவடிக்கைக்கு ஆதரவு கொடுத்துள்ளது. ஆனால் இஸ்ரேலுக்கு அங்கீகாரம் பற்றிய நிலைப்பாட்டை ஹமாஸ் மாற்றிக் கொள்ளுவதை அது நிச்சயமாக விரும்பவில்லை.

ஹமாஸ் தேர்ந்தெடுக்கப்பட்டதை போலிக் காரணமாக பயன்படுத்தி இஸ்ரேல், பாலஸ்தீனியர்களுக்கு எதிரான தாக்குதல்களை அதிகரித்துள்ளது. கடிமாவும் அதன் ஏரியல் ஷரோனின் தலைமையிலான முன்னோடி அமைப்பான லிகுட்டும் நீண்டகாலமாகவே பாலஸ்தீனிய குழுக்களிடையே மோதல்கள் பெருகுவதை விரும்பி வந்துள்ளன; ஏனெனில் அத்தகைய மோதல்கள் பாலஸ்தீனிய அதிகாரத்தையே அழிவிற்கு தள்ளிவிடும்.

காசா கடற்கரையில் பீரங்கித் தாக்குதல் ஹமாஸ் மற்றும் இஸ்லாமிய ஜிகாத் இரண்டும் கைதிகளின் ஆவணத்திற்கு ஆதரவு கொடுப்பதை ஓரே அடியில் வீழ்த்தி விட்டது. ஹமாசுக்கும் Fatahக்கும் இடையே மோதல்கள் காசாப் பகுதியில் ஜூன் 10 அன்று வெடித்தன. ஜிகாத் காசா நகரில் இருந்த தங்கள் பாதுகாப்பு அதிகாரிகள் ஒருவரான பசிம் அல்-குதும் என்பவரை கொன்றதாக Fatah குற்றம் சாட்டியது. Fatah எதிர்ப்பாளர்களும் ஹமாசுடனும் இணைந்த போலீசாரும் பின்னர் அல்-குதுமின் இறுதி ஊர்வல வண்டிகள் நகரத்தின் தெருக்களில் சென்றபோது துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டனர்.

இஸ்ரேலிய எல்லைகள் ஒருதலைப்பட்சமாக வரையும் கடிமாவின் திட்டத்தை ஓல்மர்ட் பலமுறையும் ஆதரித்துள்ளார்; அவருடைய கருத்தில் இங்கு பாலஸ்தீனிய "சமாதானப் பங்களார்" எவரும் இல்லை என்ற அடிப்படையில் இவ்வாதரவு உள்ளது. இஸ்ரேலை அங்கீகரிக்காததற்காக ஹமாஸ் தீண்டத்தகாததாக செய்யப்பட்டுவிட்டது; அதே நேரத்தில் அபாஸ் அதிகாரம் இல்லாமல் இருப்பதற்காக கண்டிக்கப்படுகிறார்; ஏனெனில் வன்முறையின் மூலமாகவாவது ஹமாஸின் ஆயுதங்கள் களையப்படவேண்டும் என்ற இஸ்ரேலின் கோரிக்கையை அவரால் செய்யமுடியாதுள்ளது.

இந்த அடிப்படையில் கிழக்கு ஜெருசலம் மற்றும் மேற்குக் கரையில் 10 சதவிகிதம் முறையாக இணைக்கப்படும். இஸ்ரேலும் ஜோர்டன் பள்ளத்தாக்கின் மீதான தன்னுடைய ஆக்கிரமிப்பை தக்க வைத்துக் கொள்ள முடியும்; அது இன்னும் 30-35 சதவிகிதம் என்று நிலப்பரப்பில் உள்ளது. இவை அனைத்தும் சர்வதேச சட்டம் மற்றும் பல ஐக்கிய நாடுகள் சபை தீர்மானங்களுக்கு முரணாக இருந்தாலும், ஓல்மெர்ட்டுடைய திட்டத்திற்கு வாஷிங்டனுடைய முழு ஆதரவு உள்ளது.

அரசியல் சிக்கல்களை தோற்றுவிப்பதில் ஹமாசின் நிலைப்பாடு மாறக்கூடாது என்பதில் அவர் உறுதியாக உள்ளார்; ஏனென்றால் அபாசை பலப்படுத்துவதற்கான சர்வஜனவாக்கெடுப்பிற்கு அமெரிக்காவின் ஆதரவு உள்ளது; இதைத்தவிர, இஸ்ரேலின் திட்டத்தின்படி இறுதியான முடிவிற்கு வர ஒரு இராணுவத்தாக்குதல் நடத்துவதற்கு ஐரோப்பிய ஆதரவு இருப்பதும் வலுவிழந்துவிடக் கூடாது என்றும் அவருடைய கருத்தாகும்.

ஜூன் 4ம் தேதி நடந்த மந்திரிசபைக் கூட்டத்தில் உள்நாட்டுப் பாதுகாப்பு மந்திரியான ஆவி டிட்சர் வடக்கு காசாப் பகுதியை மீண்டும் ஆக்கிரமிக்க வேண்டும் என்று கோரினார். "தேவையானால் வடக்கு காசா நகரமான பெய்ட் ஹனோனை ஒரு பேய் நகரமாக மாற்றுவோம்" என்றும் "அச்சுறுத்தும் சமநிலைக்கு நாமும் திரும்பவேண்டும்" என அவர் தன்னுடைய சக மந்திரிகளிடம் கூறினார்.

இதற்கு விடையிறுக்கும் வகையில் சர்வதேச பிரதிபலிப்பு எவ்வாறு இருக்கும் என்பது பற்றிய உணர்வு தேவை என்று ஓல்மெர்ட் வலியுறுத்தினார். "எமது ஆயுதக் கிடங்கில் சில வழிவகைகள் உள்ளன; ஆனால் சில நேரங்களில் சர்வேதேசக் கருத்தையும் கணக்கில் கொள்ளும்போது அவ்வழிவகைகள் திறனற்றவை. பொதுமக்களை தாக்குவது நல்லது அல்ல; எனவே பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை குறைந்த வகையில் கவனத்தை கொண்டுள்ளது. நன்கு ஆராய்ந்து, திறமையான வகையில் எப்பொழுது செயல்பட வேண்டுமோ அப்படிச் செயல்பட வேண்டும். தீவிர நடவடிக்கைகள் தேவை என்றால், நாம் அவற்றைப் பயன்படுத்துவோம்." என்றார்.

வெள்ளியன்று நிகழ்ந்த படுகொலைகளுக்கு பலஸ்தீனத்தின் தவிர்க்க முடியாத பதில் தாக்குதல்கள் "தீவிர நடவடிக்கைகளை" நியாயப்படுத்த போதுமானதாக இருந்தன; இதைத்தான் ஓல்மெர்ட் தன்னுடைய திட்டமிட்ட பிரிட்டன், பிரான்ஸ், ஜேர்மனி பயணங்களின்போது வாதிட்டுக் கூறுவார்.

ஜூன் 10ம் தேதி வெளியான Financial Times, Indpendent இரண்டும் கூட்டாகக் கண்ட பேட்டியில் ஓல்மெர்ட் திட்டமிடப்பட்டுள்ள வாக்கெடுப்பின்பால் தான் கொண்ட விரோதப் போக்கை முற்றிலுமாக வேளிப்படுத்தினார்.

"இந்த வாக்கெடுப்பு விவகாரம் இரு பிளவுகளுக்கு இடையே உள்ள உள் விளையாட்டு ஆகும். நமக்கும் பலஸ்தீனியர்களுக்கும் இடையே நிகழக்கூடிய பரந்த தன்மை உடைய உரையாடல் பின்னணியில் இது பொருளற்றது," என்று அவர் அறிவித்தார்.

இதற்குப் பதிலாக அமெரிக்கா முன்வைத்திருந்த "சாலை வரைபடத்தின்" அடிப்படைக் கொள்கைகளுக்கு ஓல்மெர்ட் தன்னுடைய ஆதரவைக் கூறியுள்ளார்.

புஷ் நிர்வாகத்தின் ஆதரவுடன் இஸ்ரேலிய அரசாங்கம் சாலை வரைபடத்தின் கருத்துக்களை மீண்டும் வரையறுத்துக் கூறியுள்ளது. எனவே அதைப் பொறுத்த வரையில் இப்பொழுது முக்கியமானது என்ன என்றால் பலஸ்தீனிய அதிகாரம் ஹமாசையும் மற்றப் போராளிக் குழுக்களையும் ஆயுதங்கள் களைய வைக்கும் வரை வேறு எதுவும் செய்வதற்கில்லை என்பதாகும்.

பலஸ்தீனிய அதிகாரத்தின் தலைவரான மகம்மது அபாஸுடன் நிகழ்த்தவுள்ள பேச்சு வார்த்தைகளில் தோல்வியுற்றால்(இது நடக்கக் கூடியதுதான்) இஸ்ரேலின் எல்லைகளை ஒருதலைப்பட்சமாக நிர்ணயிக்கும் தன்னுடைய திட்டங்களுக்கு ஐரோப்பிய ஆதரவைத் தான் நாட இருப்பதாக ஓல்மெர்ட் கூறியுள்ளார்.

இந்த மாத இறுதிக்குள் தான் அபாஸைப் பார்க்க இருப்பதாகவும், அதன் முன்னேற்றம் சாலை வரைபட விதிகளுக்கு அபாஸ் கட்டுப்பட்டிருப்பதைப் பொறுத்துத்தான் இருக்கும் என்று ஓல்மெர்ட் கூறினார். ஹமாஸ் ஆயுதம் களையப்பட்டால் பலஸ்தீனியத்தில் உள்நாட்டுப் போர் ஏற்படும் வாய்ப்பு என்று உண்மை இருக்கும்போது அவர் அதைக் கோருவாரா என்று ஓல்மெர்ட் வினவப்பட்டார். "ஆம். இதுதான் கொள்கை. ... எனவே சர்வதேசச் சமூகம் வரையறுத்துள்ள அடிப்படைக் கோட்பாடுகளில் இருந்து பெரிதும் பிறழ்ந்துள்ள நிலையை ஏற்கும் வாக்கெடுப்பை நடத்துமாறு நான் கட்டாயப்படுத்தப்பட்டேன் என்று பின்னர் அபாஸ் தப்பிக்க முடியாது." என்றார்.

ஐரோப்பிய சக்திகள் ஒருதலைப் பட்சப் பிரிவினைக்கு ஆதரவு கொடுக்கத் தன்னால் அவற்றை நம்பவைக்கமுடியும் என்பதில் ஓல்மர்ட் குறிப்பிட்ட வகையில் வலியுறுத்தினார். "இறுதியில் ஐரோப்பிய அரசாங்கங்கள் முற்றிலும் தேக்க நிலை, விட்டுக்கொடுக்காத நிலை மற்றும் இப்போது இருக்கும் நிலை தொடர்ந்து இருக்குவேண்டும் என விரும்பும் என நான் நினைக்கவில்லை. ஒரு ஐரோப்பியத் தலைவர்கூட, ஒரு முக்கிய ஐரோப்பியத் தலைவர்கூட பலஸ்தீனியர்கள் தங்கள் கோரிக்கைகள் 100 சதவிகிதத்தையும் பெற்றால் ஒழிய சமாதானம் இருக்கும் என்று கூறமாட்டார்."

அமெரிக்க, ஐரோப்பிய ஆதரவைப் பெறமுடியும் என்ற நம்பிக்கை இஸ்ரேலிய அரசாங்கத்திற்கு உள்ளது. பெட் லஹியா கடற்கரையில் நிகழ்ந்த பீரங்கித் தாக்குதல்கள் போன்ற கொடுமைக்கு எவ்வித எதிர்விளைவுகளும் வராது என்றும் நம்புகிறது. இத்தாக்குதலுக்கு "சர்வதேசச் சமூகத்தை" பொறுத்தவரையில், இது வாடிக்கையாக நடக்கும் செயல்தான் என்ற முடங்கிய விடையிறுப்புத்தான் இருந்தது. இது ஒன்றும் முதல்தடவயாக இஸ்ரேல் நடத்தும் கொடூரம் அல்ல; இது கடைசியும் அல்ல என்பதை அனைவரும் அறிவர்.

ஒரு சிறிய அறிக்கையில் புஷ் நிர்வாகம் "இரு புறத்தாரும் நிதானமாக இருக்க வேண்டும்" என்று கோரி, இஸ்ரேலியர்களும் பாலஸ்தீனியர்களும் நெருக்கடிகளை அதிகரிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்றும் கோரியது. பாலஸ்தீன அதிகாரத்திற்கு வாஷிங்டனால் கொடுக்கப்பட்ட ஒரேயொரு கோரிக்கை "காசாப் பகுதியில் இருந்து ஏவுகணைகள் ராக்கெட்டுக்கள் விடுவது உட்பட அனைத்து பயங்கரவாதச் செயல்ளும் தடை செய்யப்படவேண்டும்" என்று உத்தரவு இடவேண்டும் என்பதுதான்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved