World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

Sixth week of German public sector strike

ஆறு வார ஜேர்மன் பொதுத்துறை வேலை நிறுத்தம்

By Ulrich Rippert
18 March 2006

Back to screen version

ஜேர்மனியின் பொதுத்துறை தொழிலாளர்களது வேலைநிறுத்தம் இப்போது அதன் ஆறாவது வாரத்தை தொடங்கிவிட்டதானது பெருகி வரும் மோதல் வடிவத்தை எடுத்துள்ளது. சென்ற வாரக் கடைசியில் பொது சேவை தொழிற்சங்கமான வேர்டிக்கும் (Verdi) மாநில சம்பள தீர்வு சங்கத்திற்கும் (TdL) இடையிலான பேச்சுவார்த்தைகள் எந்தவிதமான முன்னேற்றம் இல்லாமல் முறிவுற்று, காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டன.

சென்ற சனிக்கிழமையன்று நடைபெற்ற கூட்டு சமரச பேச்சுவார்த்தைகளில், அரசின் தலைமை உடன்பாட்டு பேச்சாளரான, லோயர் சாக்சோனி நிதியமைச்சர் ஹார்முட் மோல்ரிங் (கிறிஸ்துவ ஜனநாயக யூனியன்- CDU) தொழிற்சங்கத்திற்கு ஒரு இறுதி எச்சரிக்கை விடுத்து பேச்சுவார்த்தைகள் தோல்வியடைவதற்கு வழியமைத்தார்.

தொழில்வழங்குனர் எழுப்பியிருந்த பிரதான, கோரிக்கையான - வாராந்திர பணி தற்போதுள்ள அளவான 38.5 மணி நேரத்திலிருந்து, 40 மணி நேரமாக உயர்த்துவது - ஒரு சமரசப் பேச்சு வார்த்தைக்குள்ள கோரிக்கையே அல்ல, என்று தொழிற்சங்க பிரதிநிதிகளிடம், மோல்ரிங் கூறிவிட்டதாக பத்திரிகைகள் செய்தி வெளியிட்டிருக்கின்றன. தொழிற்சங்கங்கள் பின்வாங்கிக் கொள்ளவில்லை என்றாலும் கூட தொழிற்சங்கத்துடன் உடன்பாடு செய்து கொள்ளாமலே பணியாற்றும் நேரம் நீடிக்கப்படும் என்று அவர் மேலும் தெளிவுப்படுத்தினார்.

மோல்ரிங் மேற்கொண்டுள்ள மோதல்போக்கு மாநில சம்பள தீர்வுசங்கத்திற்குள் ஓரளவிற்கு எதிர்ப்பை கிளப்பி விட்டிருக்கிறது. ஞாயிறன்று, மாநில சம்பள தீர்வுசங்க துணைத்தலைவரும் சமூக ஜனநாயக கட்சியைச் சேர்ந்த சிலேஸ்விக்-ஹோல்ஸ்டைன் மாநில உள்துறை அமைச்சருமான ரால்ப் ஸ்டீக்னர், ஜேர்மனி தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தபோது, மோல்ரிங் மேற்கொண்ட உடன்பாட்டு பேச்சுவார்த்தைகள் பாணியை தள்ளுபடி செய்தார். அது தொழிற்சங்கங்கள் "ஒரு சரணாகதி பிரகடனத்தில்" கையெழுத்திடுவதற்கு கட்டாயப்படுத்தும் நோக்கத்தை கொண்டிருப்பதாக ஸ்டீக்னர் தெரிவித்தார். ரைன்லான்ட்-ஃபால்ஸ் மாநில சமூக ஜனநாயகக் கட்சி முதலமைச்சர் குர்ட் பெக்கோடு சேர்ந்து ஒரு உடன்பாட்டு பேச்சாளராக மோல்ரிங் நீடிப்பதற்கான தகுதியை ஸ்டீக்னர் ஆட்சேபித்தார். இந்த தகராறை தீர்த்து வைப்பதற்கு "நடுநிலை சமரச பேச்சாளரை" நியமிக்க வேண்டும் என்று இருவரும் கோரினர்.

இந்த கண்டனத்தை மோல்ரிங் தள்ளுபடி செய்து ஸ்டீக்னர் விசுவாசம் இல்லாதவர் என்று குற்றம் சாட்டினார். மற்றும் அவருக்கு பதிலாக மற்றொருவரை தனக்கு துணையாக நியமிக்குமாறு கேட்டுக்கொண்டார். ஒரு நடுநிலை சமரசக்காரருக்கு விடுக்கப்பட்ட அழைப்பையும் தள்ளுபடி செய்தார்.

மார்ச் 13 திங்களன்று, சமூக ஜனநாயக கட்சிக்குழு இந்த மோதலை மேலும் மோசமடைய செய்வதற்கு எதிராக எச்சரித்துள்ளது. மற்றும் ஒரு சமரச பேச்சுவார்த்தை நடைமுறைக்கு ஆதரவாக, சமூக ஜனநாயக கட்சி தலைவர் மத்தியாஸ் பிளாட்செக் வாதாடினார். இதற்கு, பதிலளிக்கின்ற வகையில் ஜேர்மன் அரசாங்க பேச்சாளரான உல்ரிச் வில்லியம், அதிபர் அங்கேலா மேர்க்கல் (CDU) பேச்சு வார்த்தைகளில் தலையிடமாட்டார் என்று அறிவித்தார். என்றாலும், அவர் இந்தத் தகராறை விரைவில் ஒரு முடிவிற்கு கொண்டு வருவதற்கு பேச்சு வார்த்தைகளை மீண்டும் தொடக்குமாறு எதிரெதிர் தரப்புக்களுக்கு ஆலோசனை கூறுவார். அதிபர் அலுவலகத்திலிருந்து வந்திருக்கும் இந்த அறிவிப்பு, எந்த சமரச ஏற்பாட்டையும் மேர்க்கல் ஏற்றுக் கொள்ளவில்லை என்று பரவலாக கருதப்படுகிறது.

இந்தத் தகராறு முற்றிக் கொண்டிருப்பது, ஒரு நாளைக்கு கூடுதலாக 18 நிமிடங்கள் பணியாற்றுவது, மற்றும் கிருஸ்துமஸ், விடுமுறை நாட்களுக்கான ஊதிய வெட்டுக்கள் ஆகியவற்றிற்கு மேலான ஆபத்துக்கள் உள்ளடங்கியிருக்கின்றன என்பதை தெளிவுப்படுத்துவதாக உள்ளது. மோல்ரிங் மேற்கொண்டுள்ள ஆத்திரமூட்டுகின்ற போக்கை பவேரியா பிரதமர் எட்மண்ட் ஸ்ரொய்பர் (கிறிஸ்துவ சமூக குழு - CSU) போன்ற முன்னணி யூனியன் கட்சிகளின் அரசியல்வாதிகள் ஆதரிக்கின்றனர். தூருங்கியா மாநில முதலமைச்சரான டீட்டர் அல்ட்கவுஸ் (CDU) வாரத்திற்கு 42 மணிநேரம் பணி வேண்டும் என்று கோரினார். அவரும் பொதுத்துறை தொழிலதிபர்கள், தொழிற்சங்கங்களுக்கு விட்டுக் கொடுக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்ட சுதந்திர சந்தையை தாராளவாத ஜனநாயக கட்சி (FDP) தலைவரான கீடோ வெஸ்ட்டர் வெல்லவும் மோல்ரிங்கை ஆதரித்துள்ளார்.

ஜேர்மனியின் முக்கிய தொழிலதிபர்கள் சங்கங்கள் இந்த வேலைநிறுத்தத்தை Verdiக்கு ஒரு படிப்பினையை கற்பிப்பதற்கான ஒரு வாய்ப்பாக மட்டுமே பார்க்கவில்லை. ஆனால் ஒட்டுமொத்தமாக தொழிற்சங்கங்களுக்கு, ஒரு தோல்வியை ஏற்படுத்துகின்ற, ஒரு வாய்ப்பாக கருதுகின்றன. தற்போது நடைமுறையிலள்ள தொழிலாளர் உறவுகளுக்கான கட்டுக்கோப்பை சிதைத்துவிட்டு பாரியளவிற்கு ஆட்குறைப்பு செய்யவும், சமூக நலன்புரி திட்டங்களை வெட்டவும் அத்துடன், பொது சேவை ஊழியர்களது வாழ்க்கை தரங்களை குறைக்கவும், சலுகைகளை வெட்டவும் ஒரு வாய்ப்பாக கருதுகின்றன.

இந்தப் பின்னணியில் சில அடிப்படை உண்மைகளை வெளிப்படையாக எடுத்து வைப்பது அவசியமாகும். தொழிற்துறை மற்றும் நிர்வாகத்தில் தொழிற்சங்கங்கள் ஒரு பங்காளிகள் என்று அமைப்புரீதியில் கூட்டுழைப்பிற்கு ஒழுங்கு செய்யப்பட்டிருக்கும் பாரம்பரிய சமூக கட்டமைப்பை சிதைப்பதற்கு ஒரு சமரச அதிகாரியுடனோ அல்லது அவர் இல்லாமலோ இந்த மோதல் பயன்படுத்தப்படும். தேவைப்பட்டால் ஒரு கூட்டு உடன்பாடு இல்லாமல் ஒரு பேரத்தை தான் கொண்டு வருவதாக மோல்ரிங் அறிவித்துள்ளார். அத்துடன், ஜேர்மனியின் பல்வேறுபட்ட 16 மாநிலங்களிலும் ஒரே சீரான நடைமுறைகளை கொண்டு வருவதற்கு அவருக்கு ஆர்வமில்லாமை தற்போது நாட்டில் நடைபெற்றுக்கொண்டுள்ள கூட்டாட்சி அமைப்புமுறையை சீர்திருத்துவது பற்றிய விவாதங்களோடு இணைத்து ஆராய்ந்தாக வேண்டும்.

ஜேர்மனியின் கூட்டாட்சி சீர்திருத்தம் பற்றிய சட்டங்களின் தொகுப்பு, பல குறிப்பிட்ட துறைகளை மத்திய கூட்டாட்சி நிர்வாகத்திடம் இருந்து தனிப்பட்ட மாநிலங்களுக்கு மேலும் சுதந்திரமான நடவடிக்கை எடுக்கும் உரிமைகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டது. பணக்கார, வசதி படைத்த மாகாணங்கள் சிறிது காலமாக அத்தகையதொரு சீர்திருத்தத்தை வலியுறுத்தி வருகின்றன. அப்படி வலியுறுத்தி வருவதற்கு காரணம், கல்வி, சுற்றுசூழல் மாசுக்கட்டுப்பாடு முதலிய நிர்வாகப் பிரிவுகளில் மாநிலங்களுக்கிடையே போட்டியை ஊக்குவிக்கும் நோக்கத்திலாகும்.

இந்த சீர்திருத்தத்தின் ஒரு இரண்டாவது கட்டத்தில், பணக்கார, வசதி படைத்த மாகாணங்கள் தங்களது ஏழையான, வசதி குறைந்த பக்கத்து மாகாணங்களுடனான தங்களது இணைப்பை துண்டித்துக் கொள்ள விரும்புகின்றன. மற்றும் தற்பொழுது நடைமுறையிலுள்ள இழப்பீட்டு நிதி ஏற்பாடுகளை ஒழித்துக்கட்டவும் விரும்புகின்றன. இதன் ஒரு விளைபயனாக, மேற்குப் பகுதி மாகாணங்களைவிட இரண்டு மடங்கு வேலையில்லாதவர்கள் நிறைந்துள்ள கிழக்கு பகுதி மாகாணங்கள் மட்டுமல்லாமல், மிகப்பெருமளவிற்கு வேலையில்லாதவர்கள் அதிகமாகவுள்ளதும் குறைந்த சமூக தரங்கள் உள்ள மேற்குப்பகுதி மாகாணங்கள் தங்களைத் தாங்களே காப்பாற்றிக் கொள்ளவேண்டிய நிலையில் விடப்படுவதால் இந்த மாநிலங்களில் நிலவுகின்ற வறுமை விகிதம் படுவேகமாக அதிகரிக்கவே செய்யும்.

மாநிலங்களுக்கிடையில் போட்டி தீவிரமாகி வரும் இந்த பின்னணியில் பார்க்கும் போது, பொது சேவை ஊழியர்கள் தொடர்பாக நாடு தழுவியதொரு கூட்டு உடன்படிக்கை செய்து கொள்வது ஒரு தடைக்கல்லாக செயல்படக்கூடும்.

இந்தக் கண்ணோட்டத்தில் பார்க்கும்போது, பொதுத்துறை தொழிலதிபர்களும் வேலைவாய்ப்பு அதிகாரிகளும் எடுத்து வைக்கின்ற முக்கிய வாதமான ''தங்களது கஜானா காலியாக உள்ளது'' என்பதற்கு கூடுதல் முக்கியத்துவம் வழங்கவேண்டும். இந்தக் கொள்கையின் அடிப்படையில், ஒருவரது கஜானாவில் இருப்பதைத்தான் தரமுடியும் என்ற நிலையில், மேற்குப் பகுதி சார்லாந்து மாகாணத்தில் -அது ஏழை மாகாணம் அல்லது கிழக்குப்பகுதி தூருங்கியா மாநிலத்தில் பணியாற்றுகின்ற ஒருவருக்கு தென்பகுதியை சேர்ந்த பவேரியா அல்லது பாடன்-வூட்டம்பேர்க் போன்ற பணக்கார வசதிபடைத்த மாகாணங்களில் பணியாற்றுகின்ற ஊழியர்களுக்கு சமமாக ஏன் ஊதியம் வழங்கப்பட வேண்டும்? என விவாதிக்கப்படுகின்றது.

முந்திய சமூக ஜனநாயக- பசுமைக்கட்சி கூட்டணி அரசாங்கங்கள் பல ஆண்டுகளுக்கு மேலாக அரசு மற்றும் நகர சபைகளின் கஜானாக்களை சூறையாடிக்கொண்டு வந்திருக்கின்றன. அவை மிகப்பெரும் பணக்கார தனிமனிதர்களுக்கும், பெருவர்த்தக நிறுவனங்களுக்கும் வரிகளை குறைத்து உள்ளூர் நிர்வாகங்கள், இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் ஒரு சாதனை அளவாக உயர்ந்துவிட்ட வேலையில்லாதோர் நிலையை சமாளிப்பதற்கு தேவையான நிர்வாக செலவினங்களை ஏற்க வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டு, அவற்றின் சுமைகள் அதிகரித்தன.

சென்ற கோடைகாலத்தில் தாராளவாத ஜனநாயக கட்சி மற்றும் யூனியன் கட்சிகளின் ஒத்துழைப்போடு முன்னனி வர்த்தக வட்டாரங்கள் தொடக்கிய தாக்குதலின் ஒரு பகுதிதான் மோல்ரிங் மேற்கொண்டுள்ள மோதல் போக்கு.

சமூகவெட்டுக்கள் - ஹார்ட்ஸ் IV சட்டங்கள் மற்றும் செயல்திட்டம் 2010 என்ற பெயரால் சமூக ஜனநாயக கட்சியைச் சேர்ந்த ஹெகார்ட் ஷ்ரோடர் தலைமையிலான அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகள் அதிகரித்துவரும் எதிர்ப்பை எதிர்நோக்குகையில், பெருவர்த்தக நிறுவனங்களும், எதிர்கட்சிகளும் தொழிலதிபர்களின் கோரிக்கைகளை திட்டவட்டமாக நிறைவேற்றுகின்ற ஒரு அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டுவர முயன்றன. சென்ற ஆண்டு புதிதாக தேர்தல்கள் நடத்தப்பட்டதற்கான பின்புல நோக்கம் இதுதான். என்றாலும் யூனியன் கட்சிகள் மற்றும் தாராளவாத ஜனநாயக கட்சியின் பிற்போக்குத்தனமான நோக்கங்கள் தேர்தல் பிரசாரத்தின் போது தெளிவான பின்னர், அவர்களது வாக்காளர் ஆதரவு சரிந்தது. மற்றும் ஷ்ரோடருக்கு பரவலான எதிர்ப்பும் அவர் மீது விரக்தியும் ஏற்பட்டிருந்தாலும், வலதுசாரி அணி தான் நம்பிக்கொண்டிருந்த யூனியன் கட்சிகள் மற்றும் தாராளவாத ஜனநாயக கட்சி அடங்கிய கூட்டணியை உருவாக்க இயலவில்லை.

அதே சமூக விரோத கொள்கையை, செயல்படுத்துவதற்கு தற்போது இறுதியாக உருவானதுதான் CDU-CSU-SPD அடங்கிய ஒரு பெரும் கூட்டணியாகும். சமூக ஜனநாயக கட்சி புதிய கூட்டணி அரசாங்கத்தில் முக்கிய துறைகளுக்கு பொறுப்பேற்றுள்ளது. மற்றும் இந்த பிற்போக்குத்தனமான கொள்கைகளை செயல்படுத்துவதில் முக்கிய பங்களிப்பு செய்கிறது. இதற்கு ஒரு அண்மைக்கால எடுத்துக்காட்டு, தொழிலாளர் மற்றும் சமூக அமைச்சர் பிராங்க் முண்டபெயரின் (SPD) ஓய்வுபெறுவதற்கு முன் ஒரு தொழிலாளி பணியாற்றி தீரவேண்டிய ஆண்டுகளை அதிகரித்திருப்பதும், ஓய்வூதியங்கள் மீது தாக்குதல்களை தொடுத்திருப்பதும் ஆகும்.

ஒரு சில சமூக ஜனநாயக கட்சி அரசியல்வாதிகள் மோல்ரிங் மேற்கொண்ட ஆத்திரமூட்டும் உடன்பாட்டு பேச்சுதந்திரங்களை கண்டித்திருக்கின்ற உண்மை எதையும் மாற்றப்போவதில்லை. மூன்று ஜேர்மனி மாநிலங்களான ரைன்லாந்து-பால்ஸ், பாடன்-வூட்டம்பேர்க் மற்றும் சாக்சோனி - அன்கால்டில் இந்த மாதக் கடைசியின் தேர்தல்கள் நடைபெறவிருக்கின்றன. மற்றும் தற்போது சமூக ஜனநாயக கட்சி மத்திய கூட்டாட்சி தேர்தல் பிரசாரத்தில் செய்ததைத்தான் இப்போதும் செய்து கொண்டிருக்கிறது. சமூகவிரோத கொள்கைகளை தாக்கி வருகிறது, ஆனால் அதே கொள்கைகளை, அத்தகைய நடவடிக்கைகளை முன்னின்று முன்மொழிந்த பிரதான உந்து சக்தியாக செயல்பட்டதும் அதே கட்சிதான்.

பொதுத்துறை தொழிலதிபர்கள் தரப்பிலிருந்து, இந்த உடன்பாட்டு பேச்சுவார்த்தைகளில் கலந்து கொண்டவர்களில் சிலர் மிக செல்வாக்கு படைத்த சமூக ஜனநாயகக் கட்சிகாரர்கள் என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும். ஜேர்மனி நகரசபைகளுக்காக உடன்பாட்டு பேச்சாளராக கலந்து கொண்டவர் மற்றும் மான்ஹெயம் நகர மேயர் ஹெகார்ட் விட்டர் ஆகியோராவர். விட்டர் தமது நகரத்தில் நகரசுத்தி தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தை முறியடிப்பதற்காக, தனியார்துறை குப்பை கூட்டுபவர்களை கருங்காலிகளாக பயன்படுத்தினார். மற்றும் இதர மேயர்களும் அவ்வாறே செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மேலும் அவர், வேலைநிறுத்தத்தின் முடிவு ஒரே ஒரு விளைவைத்தான் தரும்: அது உள்ளூர்சேவைகளை தனியார்மயமாக்குவதை தீவிரப்படுத்துவதாகவே அமையும் என்று இடைவிடாது கூறிக்கொண்டு வந்தவர்.

தொழிலதிபர்கள் மிரட்டுவதற்கும், தாக்குதல்களை தொடுப்பதற்கும் எதிராக Verdi தலைமையிடம் எந்த பதிலும் இல்லை. அதன் தலைவர் பிராங்க் பியர்ஸ்க பசுமைக்கட்சியில் ஒரு உறுப்பினரும் மற்றும் Verdiயின் தலைமை நிர்வாகிகள் அனைவருமே சமூக ஜனநாயக கட்சியுடன் நெருக்கமான தொடர்புகளை வைத்திருக்கின்றனர். Verdi முன்னாள் சமூக ஜனநாயக கட்சி-பசுமைக்கட்சி அரசாங்கத்தின் தாக்குதல்களை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கடுமையாக எதிர்க்கவில்லை. இந்த அரசாங்கமே குறிப்பாக வாழ்க்கைத்தரம் படிப்படியாக வீழ்ச்சியடைவதற்கும், பொதுத்துறை ஊழியர்களின் வாழ்க்கைத்தரம் வீழ்ச்சியடைவதற்கும் பொறுப்பாகும். ஒரு சில சொற்ப கண்டனங்களை, Verdi சமூக ஜனநாயக கட்சி-பசுமைக்கட்சி அரசாங்கக் கொள்கைகளுக்கு எதிராக ஏற்பாடு செய்து வந்தாலும், அவை பொதுமக்களது எதிர்ப்புகளை ஒரு கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பதற்கு ஒரு பாதுகாப்பு தடுப்பாகவே பயன்பட்டது.

பல ஆண்டுகளுக்கு மேலாகவே ஆட்குறைப்புக்கள் நடைபெற்றுக் கொண்டுள்ளது பற்றி இப்போது பல Verdi நிர்வாகிகள் வருந்துவதுடன் மற்றும் கண்டித்து வருகின்றனர். ஆனால் உண்மையிலேயே, தொழிற்சங்கத்தின் ஊழியர் குழுக்களின் நெருக்கமான ஒத்துழைப்போடும், உடன்பாட்டோடும் தான் அவை செயல்படுத்தப்பட்டன. பல தொழிற்சாலைகளில் உருவாக்கப்பட்ட எண்ணிறந்த உடன்படிக்கைகளில் Verdi தொழிற்சங்கத் தலைவர்களது கையெழுத்தோடு நலன்புரி அரசு சலுகை வெட்டுக்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. சென்ற ஆண்டு தொழிற்சங்கம் உருவாக்கிய ஒரு கூட்டு உடன்படிக்கை குறைந்த ஊதியப் பிரிவுகளை தொழிலாளர்களிடையே உருவாக்கியதுடன், 2007 வரை ஊதியங்களை முடக்குவதற்கும் வகை செய்தது. அந்த உடன்படிக்கையின் ஒரு துணைப்பிரிவை, பணிக்கால நெறிமுறை தொடர்பாக சேர்த்துக் கொள்ள வகை செய்தது. அது நடைமுறையிலுள்ள கூட்டு ஒப்பந்தத்தை தொழிலதிபர்கள் ரத்து செய்ய வகை செய்தது.

தற்போது நடைபெற்றுக் கொண்டுள்ள வேலைநிறுத்தத்தில், Verdiயின் பிரதான கவலை தொழிற்சங்கம் ஸ்திரத்தன்மையிலும் அரசியலமைப்பு ரீதியிலான நடவடிக்கையிலும் ஒரு காரணி என்பதை வலியுறுத்தி காட்டுவதற்குத்தான். மோல்ரிங் மேற்கொண்ட தடைக்கல் நடவடிக்கை, போக்கிற்கு பதிலளிக்கும் வகையில் பியர்ஸ்க்க விடுத்துள்ள எச்சரிக்கையில் மாநில சம்பள தீர்வுசங்கத்தில் (TdL) கட்டுக்கோப்பு சிதைகிறது என்றால், எதிர்காலத்தில் தனித்தனி மாநிலங்களை சேர்ந்த ஊழியர்கள் தங்களது சொந்த கோரிக்கைகளை முன்வைத்து கண்டனங்களை நடத்த முடியும். இது "வீட்டுக்கு வீடு போரை உருவாக்கிவிடும்" அப்போது ஒருவரும் அதை கட்டுப்படுத்த முடியாது என்று எச்சரித்தார்.

அதே நேரத்தில் ஹாம்பேர்க் நகரத்தில் மேற்கொள்ளப்பட்ட கூட்டு ஊதிய உடன்படிக்கையை Verdi சுட்டிக்காட்டியது. அது ஒரு சமரசத்திற்கு வருவதற்கு Verdi தயாராக உள்ளதை எடுத்துக் காட்டுவதாகும்.

மூன்று வார வேலைநிறுத்தத்திற்கு பின்னர் ஹம்பேர்க்கில் ஒரு பேரம் உருவாக்கப்பட்டது. அதன்படி வருமானம், குடும்ப அந்தஸ்த்து மற்றும் வயதிற்கு ஏற்ப பணியாற்றும் காலம் அதிகரிக்கப்படும். குறைந்த ஊதியப் பிரிவுகளில் பணியாற்றும் ஊழியர்கள் 50 வயதிற்கு குறைந்தவர்களாக இருந்து, 12 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளை வைத்திருந்தால் அவர்கள் வாரத்திற்கு 38.5 மணிநேரம் பணியாற்ற வேண்டும். ஆனால் குழந்தைகள் 12 வயதை கடக்கும் போது இது மாறிவிடும். அதற்குப்பின்னர் வாராந்திரப்பணி 39 மணிநேரம் வரை உயரும். மற்றும் உயர் ஊதியப் பிரிவுகளை சார்ந்த ஊழியர்கள், 39.5 மணிநேரம் அல்லது 40 மணிநேரம்கூட வாராந்திர பணி செய்ய வேண்டும்.

குறைந்த ஊதியப் பிரிவுகளை சார்ந்த தொழிலாளர்கள் 50 வயதிற்கு மேற்பட்டவர்களாக, இருந்தால் மட்டுமே வாராந்திர பணிக்காலம் 38 மணி நேரமாகும். அதே நேரத்தில், இந்த பிரிவுகளை சார்ந்த ஊழியர்களது வேலைவாய்ப்புக்கள்தான் முதலில் வெட்டப்படும். இதர பிரிவுகளை சார்ந்த தொழிலாளர்கள் கூடுதலாக பணியாற்றும் மணித்தியாலத்தை கணக்கிட்டு இந்த வெட்டுக்கள் கொண்டுவரப்படும்.

"ஹம்பேர்க் சமரசத்திற்கு" Verdi உறுப்பினர்களில் 42% பேர் மட்டுமே சம்மதித்துள்ளனர். அப்படியிருந்தும், Verdi தலைமை இந்த பேரத்தை ஏற்றுக்கொள்வதை தடுக்கவில்லை மற்றும் அதை இதர மாநிலங்களுக்கும் உடன்படிக்கைக்கான அடிப்படையாக பரிந்துரைப்பதை அது தடுக்கவில்லை.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved