World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு : ஈராக்

Saddam Hussein's death sentence: a travesty of justice

சதாம் ஹுசைனுக்கு மரண தண்டனை: நீதியின் கேலிக்கூத்து

By James Cogan
6 November 2006

Back to screen version

நேற்று சதாம் ஹுசைனுக்கும் அவருடைய ஆட்சியில் முக்கியமாக இருந்த மூவருக்கும் கொடுக்கப்பட்ட மரண தண்டனைகள் அரசியல் நோக்கங்களுக்காக நடத்தப்பட்ட போலி விசாரணையின் விளைவுகள் ஆகும். அமெரிக்க ஆக்கிரமிப்பு படைகளால் அன்றாடம் ஈராக்கிய மக்களுக்கு எதிராக நடத்தப்படும் சொல்லொணா கொடூரங்களுக்கு இடையே, ஒரு பொறுக்கி எடுக்கப்பட்ட நீதிமன்றம் முன்னாள் ஈராக்கிய சர்வாதிகாரிக்கு மரண தண்டனை கொடுத்துள்ளது. செவ்வாய்க்கிழமை அன்று நடக்க உள்ள தேர்தல்களில் குடியரசுக் கட்சிக்கு சாதகமான தன்மைகளை அதிகரிக்கும் வகையில்தான் இந்த தீர்ப்பின் நேரம் அமைந்துள்ளது; இதையொட்டி ஒரு உயர்மட்ட சட்டவழி நசுக்குதலை சாதித்தாக தனது வலதுசாரி தளத்திற்கு ஒரு சக்தி கொடுக்கப்படுகிறது.

சதாம் ஹுசைனும் ஈராக்கிய பாத்திஸ்ட் கட்சியின் முக்கிய தலைவர்களும் ஈராக்கிய மக்களுக்கு எதிராக இழைத்த ஏராளமான குற்றங்களுக்கு விசாரணைக்கு உட்படத்த வேண்டும் என்பதில் ஐயமில்லை. ஆனால் புஷ் நிர்வாகமோ அல்லது அமெரிக்க ஆளும் வர்க்கம் ஒட்டுமொத்தமாகவோ ஈராக்கில் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களை மேற்கொண்ட எவர் மீதான விசாரணையையும் மேற்பார்வை செய்ய எந்த உரிமையையும் பெற்றிருக்கவில்லை. 2003ம் ஆண்டு போர் ஒரு போர்க்குற்றம் ஆகும்; இது ஒரு தூண்டுதலுமில்லாமல் நிகழ்த்தப்பட்ட ஆக்கிரமிப்புச் செயல் ஆகும்; இதை நியாயப்படுத்த சர்வதேச சட்டங்களை மீறும் வகையில் பொய்கள் உரைக்கப்பட்டன.

இதை தொடர்ந்த மூன்றரை ஆண்டுகளில், அமெரிக்க ஆக்கிரமிப்பு ஈராக்கிய மக்களை ஏராளமான படுகொலைகள், சித்திரவதை மற்றும் முழு நகரங்களை தகர்த்தல் ஆகிய முறைகளின் மூலம் அடிமைப்படுத்த முற்பட்டுள்ளது. போர், ஆக்கிரமிப்பு ஆகியவற்றால் இறந்திருந்த மக்களின் எண்ணிக்கை பற்றி நம்பகத்தன்மை படைத்த ஒரே முயற்சியான ஜோன் ஹோப்கின்ஸ் பல்கலைக்கழக ஆய்வு, 655,000 ஈராக்கியர்களின் இறப்புக்கு அமெரிக்க அரசாங்கம் பொறுப்பு என்று கண்டுபிடித்துள்ளது. போருக்கு முன்னரே ஐக்கிய நாடுகள் சபை 1991இல் இருந்து 2003 வரை கடைப்பிடித்த பொருளாதாரத் தடைகளின் விளைவுகளினால் ஒரு மில்லியன் ஈராக்கிய உயிர்கள் போதுமான ஊட்டமின்மையினாலும், நோயினாலும் மடிந்து போயினர்.

போருக்கு ஆதரவு கொடுத்த செய்தி ஊடகம் ஹுசைனுக்கு எதிராக கொடுக்கப்பட்டுள்ள மரணதண்டனைக்கு ஷியைட் மற்றும் குர்திஷ் ஈராக்கியர்கள் களிப்புக் காட்டியதை உயர்த்திய வகையில், எதிர்பார்த்தபடியே, தகவல்களை கொடுத்துள்ளன. வாஷிங்டன், லண்டன் மற்றும் பிற இடங்களில் 15 ஆண்டு காலமாக ஈராக்கில் இறப்பு, கஷ்டங்கள் ஆகியவற்றிற்கு காரணமாக இருந்த நபர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, சட்டவிரோதமான வகையில் பல்லாயிரக்கணக்கான அமெரிக்க மற்றும் நட்பு நாடுகளின் துருப்புக்கள் நாட்டில் ஆக்கிரமிப்பு செய்துள்ளதை அகற்றும் வரை ஈராக்கில் நீதி என்ற கருத்தாய்வுக்கு இடமில்லை.

மேலும் 1960களில் இருந்து அமெரிக்க அரசாங்கங்கள் ஹுசைனுக்கும் பாத்திஸ்ட்டுகளுக்கும் அவர்கள் நிகழ்த்திய சில மிகக் கொடூரமான அட்டூழியங்களுக்கு -- 1963ல் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள், சோசலிச எண்ணங்கொண்ட தொழிலாளர்கள் மீண்டும் 1979லும் படுகொலை செய்யப்பட்டதில் இருந்து, 1980களில் ஆட்சிக்கு எதிராக இருந்த ஷியைட் அடிப்படைவாதிகள் மற்றும் குர்திய தேசியவாதிகள் படுகொலை செய்யப்பட்டது வரை -- அரசியல் மற்றும் நிதிய ஆதரவை கொடுத்திருந்தன.

1982ல் துஜெய்ல் கிராமத்தில் 148 ஷியைட் ஆடவர்கள் மற்றும் சிறுவர்களை படுகொலை செய்த காரணத்திற்காக ஹுசைனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது; ஈரானுக்கு எதிராக அமெரிக்க ஆதரவுடன் ஈராக்கிய இராணுவம் நிகழ்த்திய போரில் பின்னடைவுகள் ஏற்பட்ட பின்னணியில்தான் நடைபெற்றன. 1980ல் ஈரான்மீது படையெடுக்குமாறு அமெரிக்கா நேரடியாக ஹுசைனுக்கு ஆதரவு கொடுத்ததுடன், ஈராக்கிற்கு அரசியல், நிதிய, இராணுவ ஆதரவையும் எட்டு ஆண்டுகள் நடந்த போரில் கொடுத்தது; இதற்குக் காரணம் அமெரிக்காவின் கருத்தில் 1979ல் மத வழியிலான வகையில் ஷியைட் ஆட்சிக்கு வந்தமை மத்திய கிழக்கில் அதன் நலன்களுக்கு அச்சுறுத்தல் என்பதனாலாகும்.

இப்போர் இறுதியில் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட ஈராக்கியர்கள், ஈரானியர்களின் உயிரை குடித்தது. அத்தகைய கொடூரத்திற்கு இடையே அமெரிக்கா "அன்பல்" என்று அழைக்கப்பட்ட பிரச்சாரத்திற்கும் ஆதரவு கொடுத்தது; அப்பிரச்சாரம் ஈரானிய ஆதரவு பெற்றிருந்த வடக்கில் நிகழ்ந்த குர்திஷ் எழுச்சியை அழிப்பதற்கு ஹுசைனால் உத்திரவிடப்பட்டிருந்தது. வளைகுடா போரைத் தொடர்ந்து, 1991ல் முதல் புஷ்ஷின் நிர்வாகம், ஹுசைனின் படைகள், ஷியைட் மற்றும் குர்திஷ் எழுச்சிகளை நசுக்குவதை தடுப்பதற்கு அமெரிக்க இராணுவம் எதையும் செய்யக் கூடாது என்று உத்திரவிட்டது.

ஹுசைன் பற்றிய எவ்வித சட்டபூர்வ விசாரணையும் அமெரிக்க மற்றும் பிற முக்கிய சக்திகள் ஈராக்கில் பாத்திஸ்ட்டுகள் ஆட்சியின் போது நடத்தப்பெற்ற குற்றங்களில் உடந்தையாக இருந்ததை அம்பலப்படுத்தும். இப்பொழுது நடந்துள்ள கேலிக்கூத்து முற்றிலும் மாறான கருத்தை முன்வைக்கிறது. ஒரு சர்வாதிகாரத்திற்கும் பெரும் வல்லரசு நலன்களுக்கும் இடையே இருந்த உறவு பற்றிய ஆவணங்கள் அளிக்கப்படக் கூடாது என்ற தடை விதிக்கப்பட்டது. கடந்த காலம் அல்லது நீதி பற்றி கொலையுண்டவர்களுக்காக கணக்குக் கூறல் கூடாது. மிகத்தெரிந்தெடுக்கப்பட்ட ஆவணங்கள், டுஜைலின் நிகழ்வுகள் பற்றி நேரடியான சான்றுகளை கொண்டவை மட்டுமே அளிக்கப்பட்டது. இன்னும் கூடுதலான வகையில் எச்சரிக்கை காட்டும் வகையில் நீதிமன்றத்தின் நிகழ்வுகள் பற்றிய ஒளிபரப்பு 20 நிமிடங்கள் தாமதிக்கப்பட்டது; இதற்குக் காரணம் அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கு எதிரான கருத்துக்கள் சாட்சியங்களாக வந்தால் அவை நீக்கப்பட்டுவிடலாம் என்பதுதான்.

இந்த செயல்முறை முழுவதும் ஒரு வெட்கங்கெட்ட, போலி விசாரணையாகும். 2003ம் ஆண்டு அமெரிக்க ஆளுனராக இருந்த போல் பிரெம்மரினால் ஈராக்கிய சிறப்பு நீதிமன்றம் ஓர் ஆணைமூலம் நிறுவப்பட்டது. இதன் நீதிபதிகளும் வழக்கறிஞர்களும், அமெரிக்க ஆலோசகர்கள் உத்தரவின்பேரில், அமெரிக்க அதிகாரிகளால் தேர்ந்தெடுக்கப்பட்டனர். நீதிமன்றத்தின் நம்பகத்தன்மை மற்றும் நடுநிலைமை இல்லாத நிலை Human Rights Wastch, Amnesty International மற்றும் பல சர்வதேச அவதானிகளால் தீவிரமான விமர்சனத்திற்கு உள்ளாகியது. பல நேரங்களிலும், நீதிமன்ற நடவடிக்கைகள் குற்றம் சாட்டப்பட்டவர்கள் இல்லாத நிலையில் அல்லது அவர்களுடைய வழக்கறிஞர்கள் இல்லாத நிலையில் நடைபெற்றன.

ஜனவரி மாதம் தலைமை நீதிபதி, அமெரிக்க செய்தி ஊடகம் மற்றும் ஈராக்கிய அரசாங்கம் ஹுசைன் சாட்சிக் கூண்டை பயன்படுத்தி நீதிமன்றத்தின் நெறியை தாக்குவதை நிறுத்துவதற்கு போதுமானதை செய்யவில்லை என்று அழுத்தம் கொடுத்ததை அடுத்து, பதவியில் இருந்து இறக்கப்பட்டார். குற்றம்சாட்டப்பட்டவர்களுக்காக ஆஜராகி இருந்த மூன்று வழக்கறிஞர்கள் கொலை செய்யப்பட்டனர்; இன்னும் சிலர் பாக்தாத்தில் அமெரிக்க ஆதரவு உடைய, ஷியைட் அடிப்படைவாதிகளின் ஆதிக்கத்தின் கீழ் இயங்கிய அரசாங்கத்தால் நிறுவப்பட்ட கொலைக்குழுக்களின் அழுத்தத்தை ஒட்டி நாட்டை விட்டே ஓடிவிட்டனர்.

ஈராக்கில் இருந்த அமெரிக்க தூதரான Zalmay Khalilzad இந்த ஹுசைனுக்கு எதிராக நேற்று கொடுக்கப்பட்ட மரணதண்டனையை, "சட்டத்தின் ஆட்சியில் கீழ் ஒரு சுதந்திர சமூகத்தை கட்டமைப்பதில் ஒரு முக்கியமான மைல்கல்", என்று பாராட்டியுள்ளார். ஜனாதிபதி புஷ் இத்தீர்ப்பு "ஒரு கொடுங்கோலனின் ஆட்சிக்குப் பதிலாக சட்டத்தின் ஆட்சியை நிறுவ முற்படும் ஈராக்கிய மக்களின் முயற்சிகளில் ஒரு மைல்கல்" என்று அறிவித்தார்.

இந்த அறிக்கைகளில் உள்ள அவநம்பிக்கைத்தன்மை பெரும் திகைப்பை ஏற்படுத்துகிறது. அமெரிக்க செய்தி ஊடகத்தில் வெளிவந்த பல கசிவுகள் கலில்ஜட் போன்ற அதிகாரிகள் கடந்த சில மாதங்களாக ஷியைட் ஆதிக்கத்திற்கு உட்பட்டுள்ள பிரதம மந்திரி நெளரி அல்-மாலிக்கியின் அரசாங்கத்திற்கு எதிராக ஆட்சி மாற்றத்திற்கு சதித்திட்டம் போட்டுக் கொண்டிருப்பதையும், ஒருவித இராணுவக் குழுவின் ஆட்சி வருவதற்கு பாடுபடுவதையும் காட்டுகின்றன. ஈராக்கில் அமெரிக்க நலன்களுக்கு ஹுசைன் ஆட்சியை ஒத்திருக்கும் ஒரு ஆட்சியினால்தான் சிறந்த முறையில் உதவப் பெறும் என்ற பெருகிய ஒருமித்த கருத்து குடியரசு மற்றும் ஜனநாயக கட்சிகளிடையே வந்துள்ளது.

ஹுசைன் தூக்கிலடப்பட வேண்டும் என்ற தீர்ப்பு வந்துள்ள நிலையில், அமெரிக்க அரசியல் அமைப்புமுறை அவருடைய ஆட்சியில் இருந்த பல பாத்திச கொலைகாரர்களையும் குண்டர்களையும், அமெரிக்க படைகளுக்கு எதிராக நடக்கும் கொரில்லாப் போரை முறியடிப்பதற்கு பதிலுபகாரமாக, பதவியில் இருந்த விவாதித்துள்ளது; அதேபோல் அவர்கள் அமெரிக்க பெருநிறுவனங்கள் ஈராக்கின் எண்ணெய் வளங்களை கொள்ளையடிப்பதற்கும் அனுமதிக்க வேண்டும் என்று கோரப்படுகிறது. பாத்திஸ்ட் உயரடுக்கை மீண்டும் அதிகாரத்தில் இருத்துவதற்கான எத்தகைய முன்னோடி நடவடிக்கையும், நேற்று ஹுசைன் விசாரணையின் விளைவை தெருக்களில் களித்து மகிழ்ந்து கொண்டாடிய பாக்தாத்தில் உள்ள சதர் நகரம் போன்ற பகுதிகளில் உள்ள ஷியைட் குடிப்படைகளுக்கு எதிராக மீண்டும் அமெரிக்க இராணுவம் இரத்தக்களரியை ஏற்படுத்துவதாகவே இருக்கும்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved