World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரித்தானியா

Britain: Blair advises policy shift in Middle East

பிரிட்டன்: மத்தியகிழக்கில் கொள்கை மாற்றத்திற்கு பிளேயர் ஆலோசனை தருகிறார்

By Chris Marsden and Julie Hyland
16 November 2006

Back to screen version

நவம்பர் 13 அன்று லண்டன் மேயர் வழங்கிய விருந்தில் பிரிட்டனின் பிரதமர் டோனி பிளேயர் ஆற்றிய உரை, ஈராக் போரை பொதுமக்கள் வெறுத்து ஒதுக்கியதையும் அமெரிக்க தேர்தல்களில் புஷ் நிர்வாகம் சந்தித்த தோல்வியையும் தொடர்ந்து பிரிட்டனின் வெளியுறவுக் கொள்கையை சீரமைக்கின்ற ஒரு முயற்சியாக அமைந்தது.

ஏற்கெனவே அவதூறுக்கு ஆளாகி பொதுமக்களது ஆதரவை இழந்து விட்ட பிளேயரின் அரசியல் செல்வாக்கும் அதிகாரமும் மேலும் சீர்குலைக்கப்பட்டு இருக்கிறது. ஈராக் போருக்கு அவரது ஆதரவும் புஷ் நிர்வாகத்துடன் கண்மூடித்தனமாக கூட்டணி சேர்ந்திருப்பதும் ஒட்டுமொத்த மத்திய கிழக்கையும் பேரழிவுகரமான பின்விளைவுகள் ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகள் கொண்ட ஸ்திரமற்றநிலையை ஏற்படுத்திய ஒரு படுதோல்வியில் பிரிட்டனை தள்ளிவிட்டது.

மூத்த ஜோர்ஜ் புஷ் தலைமையில் பணியாற்றி வந்த முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஜேம்ஸ் பேக்கர் தலைமையில் செயல்பட்டு வரும் ஈராக் ஆய்வுக்குழு, உள்ளரங்கு தொலைக்காட்சி வழியாக அவரை பேட்டி காண்பதற்கு ஒரு நாளைக்கு முன்னராக அவர் உரையாற்றினார். அமெரிக்காவில் திறந்துவிடப்பட்ட வெளியுறவுக்கொள்கை விவாதத்தில் செல்வாக்கை செலுத்த ஆகவே பிரிட்டிஷ் அக்கறைகளையும் கணக்கில் எடுத்துகொள்ள இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்வார் என்று அவரது விமர்சகர்களுக்கு மீள உத்திரவாதம் செய்வதை அது நோக்கமாக கொண்டிருந்தது.

ஈராக் ஆய்வுக்குழுவில் முன்னணி குடியரசுக் கட்சிக்காரர்களும், ஜனநாயகக் கட்சிக்காரர்களும் இடம்பெற்றிருக்கின்றனர் - அவர்களில் பலர்1980-களின் கடைசியிலும் 1990-களின் தொடக்கத்திலும் தோல்வியில் முடிந்த இஸ்ரேல் --பாலஸ்தீன "சமாதான நடைமுறைகளில்" சம்மந்தப்பட்டிருந்தவர்கள்-- அவர்கள் நவீன பழைமைவாதிகளை கண்டிப்பவர்கள் மற்றும் அவர்களது கொள்கை மத்தியகிழக்கு முழுவதிலும், அமெரிக்காவின் நலன்களுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்திவிட்டது என்று நம்புகின்றனர்.

ஈராக் படையெடுப்பை நியாயப்படுத்தி அமெரிக்காவிற்கு தனது ஆதரவை வலியுறுத்திய மற்றும் இப்போது வாஷிங்டனுடன் தனது உறவை முறித்துக்கொள்வது "பைத்தியக்காரத்தனம்" என்று வலியுறுத்திய பிளேயர், இந்தப் போக்கில் ஒரு மாற்றம் அவசியம் என்பதற்கு சமிக்கை காட்டினார். "தற்போது நிலவரம் மாறிக்கொண்டு வருவதற்கு ஏற்ப நமது மூலோபாயமும் அதை சந்திக்கும் வகையில் உருவாக்கப்படவேண்டும்" என்று பிளேயர் சொன்னார்.

பிரிட்டன் அல்லது அமெரிக்கத் துருப்புக்கள் விலக்கிக்கொள்ளப்படும் என்று எந்த வகையிலும் குறிப்பிடாமல், "பயங்கரவாதத்திற்கு எதிரான போரில்" வெற்றி பெறவும், அந்தப் போரை தலைமை ஏற்கவும் பொறுப்பான ஈராக் தலைமைக்கு அதிகாரம் அளிப்பதுதான் இப்போதுள்ள பணியாகும் என்று பிளேயர் வலியுறுத்திக் கூறினார். இறுதியாக பார்த்தால் எந்த தீர்வாக இருந்தாலும், அது "ஈராக்கிற்கு உள்ளே வன்முறையை உருவாக்க முயற்சிக்கும் சக்திகளை" நோக்கிய ஒரு மூலோபாயத்தை சார்ந்தேயிருக்கும். பிளேயரின் "ஒட்டுமொத்த மத்திய கிழக்கிற்கான மூலோபாயம்" சிரியாவையும், ஈரானையும் இணைத்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபடச் செய்யும் முயற்சியில் தொடங்குவதாக அமைந்திருந்தது.

வெள்ளை மாளிகையின் திட்டவட்டமாக அறிவிக்கப்பட்ட நிலைபாட்டை நேரடியாக மறுக்கின்ற வகையில் இல்லாவிட்டாலும், பிளேயர் புஷ் நிர்வாகத்தின் கொள்கையை கண்டிப்பவர்களை சமாதானப்படுத்தும் வகையில் சில அறிக்கைகளை வெளியிட்டார். எடுத்துக்காட்டாக ஈரான் விவகாரத்தில் ஒரு இராணுவ தீர்வுகாண அமெரிக்கா மேற்கொண்டுள்ள முயற்சி குறித்து நிலவுகின்ற அச்சங்கள் "முற்றிலும் தவறாக வைக்கப்படிருந்தாலும், நியாயமானவை" என்று வர்ணித்தார். தெஹ்ரான் தனது அணுச்செறிவூட்ட திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்து, மத்திய கிழக்கில் சமாதான நடைமுறைகளுக்கு உதவுமானால், "லெபனானில் அல்லது ஈராக்கில் பயங்கரவாத ஆதரவை நிறுத்திக்கொள்ளுமானால்" "புதிய பங்களிப்புக்கு" வாய்ப்பு உண்டு என்று டோனி பிளேயர் சொன்னார்.

அமெரிக்காவும் பிரிட்டனும் ஈரான் தொடர்பாக வெளியிட்டுள்ள பிரகடனங்களில் காணப்படுகின்ற இறுதி எச்சரிக்கை தொனியை அப்படியே பின்பற்றி, தான் விதித்துள்ள நிபந்தனைகளுக்கு உடன்பட தவறுமானால் அந்த நாடு "தனிமைப்படுத்தப்பட்டுவிடும்" என்று அவர் அச்சுறுத்தினார்.

பிரிட்டன் இந்த வகையில் தீவிரமாக பணியாற்றி வருகிறது. ஈரானும் சிரியாவும் "ஒரே வகையான நலன்களை கொண்டவையாக இல்லை" என்பதை பிளேர் வலியுறுத்திக் கூறினார். இந்த மாத தொடக்கத்தில் அவரது வெளிவிவகார தனி ஆலோசகர் சேர். நிகல் ஸ்டீன் வால்டு சிரியாவில் இருந்தார். அப்போது சிரியா அதிபர் பசார் அல் அஸாத்திடம் அவர் ஒன்று ஈரானுடன் உறவுகளை முறித்துக்கொண்டு மேற்கு நாடுகளுடன் மாமூல் உறவுகளை நிலைநாட்ட வேண்டும் அல்லது தொடர்ந்து ஈரானுடன் நட்புறவு காட்ட வேண்டும் என்று கூறியதாக செய்தி அறிவிக்கப்பட்டது.

அது எப்படியிருந்தாலும், மத்திய கிழக்கில் எந்த தீர்வு உருவாகுவதாக இருந்தாலும் அது இந்த நாடுகளில் அல்லது லெபனானில் இல்லை, ஆனால் "இஸ்ரேல் / பாலஸ்தீனத்தில்தான்" அந்த தீர்வு உள்ளது.. "அதுதான் உயிர்நாடியான பிரச்சினை" என்று பிளேயர் குறிப்பிட்டார்.

வாஷிங்டன் இஸ்ரேல் மீது தனக்குள்ள செல்வாக்கை பயன்படுத்தி, நிர்பந்தங்கள் கொடுத்து மேற்குக்கரை மற்றும் காசா பகுதிகளில் ஒரு பாலஸ்தீன அரசை உருவாக்க வேண்டும் என்று பிளேயர் நீண்டகாலமாக வலியுறுத்தி வருகிறார். என்றாலும் இந்த முறை மிக கவனமாக அவர் கூறிய வார்த்தைகள் புஷ் நிர்வாகத்திற்கு மட்டுமல்ல, புஷ் நிர்வாகத்தை கண்டிப்பவர்களுக்காகவும்தான் தற்போதுள்ள புஷ்சின் பலவீனமான நிலையில் பாதுகாப்புத்துறை அமைச்சர் டொனால்ட் ரம்ஸ்பீல்டை பதவியிலிருந்து நீக்கிவிட்ட நிலையில் தமது ஆலோசனை இந்த முறை ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையில் பிளேயர் கூறியுள்ளார்.

ஆனால், பிளேயர் எந்த ஐரோப்பிய ஒன்றிய தலைவரையும்விட, புஷ் நிர்வாகத்தை பகைத்துக் கொள்வதில் மிகுந்த நெருக்கடிக்கு உள்ளாகியிருப்பவர், அவர் தற்காலிகமாக கூறிய கருத்துகளைக்கூட அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சர் கொண்டலிசா ரைஸ் மறுத்திருக்கிறார். ஜேர்மனியில் கருத்துத்தெரிவித்த அவர் இஸ்ரேல்-பாலஸ்தீன மோதலுக்கும், ஈராக்கிற்கும் இடையில் எந்தவித தொடர்பும் இல்லையென்று வெளிப்படையாக அறிவித்தார் மற்றும் சிரியா - ஈரானுடன் பேச்சுவார்த்தைகள் நடத்துவதற்கு வழியில்லை என்று அறிவித்தார்.

பிரிட்டனின் ஆளும் செல்வந்தத்தட்டிற்குள் நிலவும் ஆழமான அதிருப்திக்கு செயல்வடிவம் கொடுக்க இயலாத நிலையில் இந்த கருத்துக்கள் அமைந்துவிட்டன. நவம்பர் 14-ல் அவர் ஈராக் ஆய்வுக்குழுவிற்கு பேட்டி தருவதற்கு முன்னர் Financial Times வெளியிட்டிருக்கும் தலையங்கத்தோடு அவரது உரையை ஒப்பிட்டுப்பார்ப்பது பயனுள்ளதாகும்.

அமெரிக்கா இஸ்ரேலுடன் கொண்டிருக்கும் உறவுகளில் குவிமைய்ப்படுத்தி, வாஷிங்டனிலுள்ள நவீன பழைமைவாதிகளின் கொள்கையை வேரோடும் வேரடி மண்ணோடும் கண்டிக்கின்ற வகையில் "ஒட்டுமொத்தமாக மத்திய கிழக்கு முழுவதற்குமான கொள்கையை மறு ஆய்வு செய்ய்யுமாறு" கோரியது.

மத்திய கிழக்கு முழுவதிலும் நடைபெறுகின்ற விவகாரங்களை மிகவும் எச்சரிக்கின்ற வகையில் அந்த தலையங்கம் அமைந்திருக்கிறது. ஈராக் படுதோல்வி அந்த நாட்டை "இனத்துடைத்தழிப்பு மற்றும் குடிப்படைகள் ஆட்சி என்ற சூழலுக்குள்" தள்ளிவிட்டது என்று அந்த பத்திரிகை அறிவித்திருக்கிறது. அமெரிக்க ஆதரவோடு இஸ்ரேல் கடந்த கோடைகாலத்தில் லெபனான் மீது மேற்கொண்ட போர் ஹெஸ்பொல்லாவை வலுப்படுத்தியுள்ளது. இதன் விளைவாக "மேற்கு நாடுகளின் ஆதரவு அரசாங்கம் அடிப்படையில் ஆட்டம் கண்டு சிதைந்து கொண்டிருக்கிறது". மேற்குக்கரையிலும் காசா பகுதியிலும் இஸ்ரேல் நடத்தி வருகின்ற தாக்குதல் பாலஸ்தீன எல்லைகளில் ஒரு "சமுதாய சிதைவு" நிலையை உருவாக்கியுள்ளது.

அந்த தலையங்கம் இஸ்ரேல் மேற்குக்கரையில் நிறுவியுள்ள "சட்டவிரோத" குடியிருப்புக்களை கண்டித்திருக்கிறது. பாலஸ்தீன எல்லைகளை சுற்றி தடுப்புச்சுவர் எழுப்பப்பட்டிருப்பதையும் "500 இஸ்ரேலிய சோதனை சாவடிகள்" நிறுவப்பட்டிருப்பதையும் கண்டித்துள்ளது மற்றும் அமெரிக்கர்களுக்கும் இஸ்ரேலியர்களுக்கும், டோனி பிளேர் "ஒத்தூதிக்" கொண்டிருப்பதாகவும் கண்டித்திருக்கிறது.

அது, அமெரிக்கா-பிரிட்டன்-இஸ்ரேல் கொள்கையை அப்பட்டமாகவும், தீவிரமாகவும் கண்டித்துள்ளது. "பயனற்ற ராஜீயமுறை மற்றும் பலாத்காரத்தை பயன்படுத்துவதில் நம்பிக்கை ஆகியவற்றின் சேர்க்கை மரணாபத்தாக இருந்து வருகின்றன. ஹமாஸ் மற்றும் ஹெஸ்பொல்லா போன்ற அமைப்புக்களுக்கு அவர்களது இயல்பான ஆற்றலுக்கு அப்பால் வலிமையையும் செல்வாக்கையும் அது தந்துள்ளது. இந்த படுகொலைக்கு நடுநாயகமாக அமைந்திருப்பது அமைதிக்கான நிலம் என்ற அடிப்படையில் ஒரு விரிவான உடன்படிக்கையை ஏற்படுத்த தவறியதுதான்.

"கடந்த 5 ஆண்டுகளாக மேற்குக்கரையிலும் மற்றும் அரபு கிழக்கு ஜெரூசலத்திலும், மேற்கு நாடுகளின் வாய்வீச்சிற்கு அப்பாலும் இஸ்ரேல் தனது ஆதிக்கத்தை விரிவுபடுத்தி உறுதிப்படுத்தி உள்ளது. ஈராக் மீது ஆத்திரமூட்டல் எதுவுமின்றி படையெடுப்பு நடத்தப்பட்ட ஒவ்வொரு அம்சமும் சேர்ந்து கொண்டு இந்த பிராந்தியம் பற்றி எரிவற்கு நிரந்தரமாக அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது."
புதிய மத்திய கிழக்கு மூலோபாயத்தின் நடுநாயகமாக இஸ்ரேலுக்கும் பாலஸ்தீன மக்களுக்கும் இடையில் அமைதிக்கு நிலம் என்ற அடிப்படையில் ஒரு "விரிவான உடன்படிக்கை" உருவாக்கப்பட வேண்டும். அதற்கு ஈரானுக்கும் சிரியாவிற்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் நடப்பது" தேவைப்படும் என்று Financial Times வற்புறுத்துகிறது.

வெள்ளை மாளிகையிடம் இத்தகைய தீவிரமான கோரிக்கை விடுக்கும் வல்லமை உள்ளவர்களாக பிளேயர் அல்லது எந்த பிரிட்டனின் அரசியல்வாதியும் இல்லை. Financial Times கட்டுரையாளர் Philips Stephens ஒரு தனிக்கட்டுரையில், வாஷிங்டன், அதன் மத்தியகிழக்கு மூலோபாயத்தை சீரமைப்பதற்கு முயன்று வருவதை ஒப்புக்கொண்டிருக்கிறார். அது "மூலோபாய கண்ணோட்டங்களைவிட அல்லது அமெரிக்காவின் மிக நெருக்கமான நட்பு நாட்டிற்கு செய்ய வேண்டிய கடமை உணர்வைவிட அமெரிக்காவின் உள்நாட்டு அரசியலுக்கு அதிக முக்கியத்துவம் தருவதாக அமைந்திருக்கும்". அதில் மிச்சமிருப்பது என்னவென்றால் "சிலநேரம் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு உண்மைகளை பேசியாக வேண்டும்" என்ற அடிப்படையில் பிளேயர் தெரிவித்துள்ள கருத்துத்தான்.

Financial Times-ம் பிரிட்டனின் வெளியுறவு கொள்கை நிர்வாகத்தில் இடம்பெற்றுள்ள பலரும் ஈராக் ஆய்வுக்குழு பயன்களை பெற்றுத்தருகின்ற வல்லமை படைத்தது என்ற பெரும் நம்பிக்கை வைத்திருக்கின்றனர். ஆனால் குடியரசுக் கட்சியை சேர்ந்த நியூயோர்க் டைம்ஸ் கட்டுரையாளர் டேவிட் புரூக்ஸ் குறிப்பிட்டதாவது: "நாம் இதுவரை கேட்டிராத ஏதோ ஒரு மந்திரத்திட்டத்தை ISG தரப்போகிறது என்ற கருத்து உண்மையல்ல இந்த திட்டங்கள் அங்கே உள்ளன மற்றும் அவற்றில் எதுவும் குறிப்பாக மகிழ்ச்சி தருவதாக இல்லை."

மிக அடிப்படையாக பார்க்கும்போது ஈராக் போருக்கு பிளேயர் அளித்துவரும் ஆதரவை ஏறத்தாழ பிரிட்டனின் ஆளும் செல்வந்தத்தட்டினர் ஒட்டுமொத்தமாக ஆதரித்து வருகின்றனர். பிரிட்டன் வீழ்ச்சியடைந்து கொண்டு வருகின்ற ஏகாதிபத்திய வல்லரசு, அது தன்னைவிட அதிக வலிமையுள்ள போட்டி நாடுகளை சமாளிக்க, அதன் நலன்களை வலியுறுத்தி முன்னெடுத்துச் செல்ல, அமெரிக்காவுடன் கூட்டுசேர்ந்தால்தான் முடியும் என்ற உணர்வை இது பிரதிபலிக்கிறது. இந்த நிலவரம் மாறிவிடவில்லை.

இந்த பூகோள அரசியல் உண்மைகளை கண்டிப்பவர்களுக்கு நினைவுபடுத்தும் வகையில் இந்த கூட்டணியை நிலைநாட்ட வேண்டியதன் அடிப்படை முக்கியத்துவத்தை வலியுறுத்தி தமது மேன்ஷன் ஹவுஸ் உரையின் பெரும்பகுதியை பயன்படுத்தினார். பிரிட்டனின் உயிர்நாடியான கவலைகள் எதையும் சமாளிப்பது ஒருபுறமிருந்தாலும், அவற்றை கவனிப்பதற்கு, அமெரிக்கா இல்லாமல் இயலாது என்று வலியுறுத்திக் கூறினார். ரஷ்யா தனது வலிமையை நிலைநாட்டுவது அதிகரித்து வருகிறது மற்றும் சீனாவும் இந்தியாவும் பொருளாதார வலிமையில் உயர்ந்து வருகின்றன. புதிய வல்லரசுகள் உருவாகி வருகின்றன. இந்த வல்லரசுகளை சமாளிப்பதற்கு "நமது நெறிமுறைகளை பகிர்ந்துகொள்ளும் நாடுகளோடு கூட்டணி வைத்து கொள்வது" அவசியமாகும்.

அமெரிக்கா மீது நம்பியிருப்பது, பிளேயர் அரசாங்கத்திற்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த பிரிட்டனின் முதலாளித்துவ வர்க்கத்திற்கே ஆழமான ஸ்த்திரமின்மையின் வளமாகும். அதன் அதிருஷ்டமானது வேறு எதையும்விட வாஷிங்டனில் வெடித்துச் சிதறியுள்ள கோஷ்டி போராட்டங்களின் விளைவுடனும், அது தூண்டிவிட்டுள்ள மத்திய கிழக்கின் மோசமான நிலவரத்தடனும் பிணைந்துள்ளது.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved