World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : மத்திய கிழக்கு

Israeli cluster bombs blanket Lebanese towns

இஸ்ரேலிய தொகுப்புக் குண்டுகள் லெபனிய நகரங்களை திக்குமுக்காடச் செய்கின்றன

By Rick Kelly
1 September 2006

Back to screen version

லெபனானில் 34 நாள் போரின்போது வீசப்பட்ட, வெடிக்காத இஸ்ரேலிய தொகுப்புக் குண்டு வெடிமருந்துகள் பின்னர் ஆகஸ்ட் 14ம் தேதி போர்நிறுத்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்த பின்னர் குறைந்தது 13 குடிமக்களை கொன்று 50 பேருக்கு மேல் காயங்களையும் ஏற்படுத்தியுள்ளன. நாடெங்கிலும் 100,000க்கும் மேற்பட்ட வெடிக்காத தொகுப்புக் குண்டுகள் குவிந்துள்ளன; இதையொட்டி ஏராளமான மக்கள் தங்களுடைய வீடுகளுக்கு திரும்ப முடியாமல் உள்ளது. நகர்ப்புற, மற்றும் குடியிருப்புப் பகுதிகள் மீது இஸ்ரேலுடைய குண்டுவீச்சுத் தாக்குதல் லெபனிய மக்களை அச்சுறுத்துவதற்கும், புலம் பெயர்ந்தவர்கள் மீண்டும் தங்களுடைய வீடுகளுக்கு திரும்புவதை தடுக்கவும் பிரதம மந்திரி எகுட் ஓல்மெர்ட்டின் அரசாங்கம் வேண்டுமென்றே மேற்கொண்ட தந்திரோபாயமாகும்.

ஐ.நா.வின் நெருக்கடி நிவாரண ஒருங்கிணைப்பாளரான Jan Egeland புதனன்று 359 தனித்தனி தொகுப்புக் குண்டுகள் வீசப்பட்ட இடங்கள், 90 சதவிகிதத்திற்கும் மேலான பாதிக்கப்பட்ட இடங்களில் கண்ணி வெடி அகற்றும் குழுக்களால் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல் அளித்துள்ளார். வெடிக்காத வெடிமருந்துகள் நகரங்கள், கிராமங்கள், பண்ணை நிலங்கள் என்று அனைத்து இடங்களிலும் குறிப்பாக தெற்கு லெபனானில் நிறைந்துள்ளன." குழந்தைகள், மகளிர், சாதாரண மக்கள், கடைக்காரர்கள், விவசாயிகள் என்று அனைவரும் நடக்கும் இடங்களில் 100,000 வெடிக்காத குண்டுகள் உள்ளன என்பது பெரும் சீற்றம் தரக்கூடிய செயலாகும். ஒவ்வொரு நாளும் மக்கள் கொல்லபப்டுகிறார்கள், காயமுறுகிறார்கள் என்று கேள்விப்படுகிறேன்; இல்லாவிடில் ஒன்றுவிட்டு ஒரு நாள் இவ்வாறு நிகழ்கிறது... தொகுப்புக் குண்டுகள் ஏராளமான வீடுகள், நிறைய பண்ணை நிலங்கள், வணிக நிலையங்கள், வளாகங்கள் என்று நிறையப் பகுதிகளை பாதித்துள்ளன; இன்னும் பல பல மாதங்களும், ஏன் ஆண்டுகளும் கூட, இவை நம் கூட இருக்கும்."

வெடிக்காத தொகுப்புச் சிறுகுண்டுகள் போரின் கடைசி மூன்று நாட்களில் போடப்பட்டன என்று லெபனானில் உள்ள ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். "ஒரு தீர்மானம் இயற்றப்பட்டு போர் நிறுத்தம் ஏற்பட உள்ளது என்பது தெரிந்த நிலையில் இத்தொகுப்புத் தாக்குதல்களில் 90 சதவிகிதம் நடைபெற்றுள்ளது என்பதுதான் முற்றிலும் அதிர்ச்சியைத் தருவதும், அறநெறிபிறழ்ந்ததாகவும் உள்ளது" என்று எகிலாந்த் அறிவித்தார்.

தொகுப்புக் குண்டுத்தாக்குதல் போடப்பட்ட நேரம் லெபனானில் இஸ்ரேல் தாக்குதலின் குற்றத்தன்மையை அடிக்கோடிட்டுக் காட்டுவதோடு, நிறைய மக்கள் இருக்கும் பகுதிகளில் தொகுப்புக் குண்டுகளை போடவில்லை என்று கூறிய ஓல்மெர்ட் அரசாங்கத்தின் பொய்களையும் அம்பலப்படுத்தியுள்ளது.

புஷ் நிர்வாகத்தின் ஒத்துழைப்புடன் ஜூலை 13ம் தேதி ஹெஸ்பொல்லாவை அழித்து, அந்நாட்டை அமெரிக்க-இஸ்ரேலிய அரசாங்கங்களின் வாடிக்கை நாடாக மாற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் லெபனான் மீது ஓல்மெர்ட் அரசாங்கம் படையெடுத்தது. போர் நடந்த தன்மையில் அமெரிக்காவும், இஸ்ரேலும் தங்கள் இலக்குகளை அடையமுடியாது என்று தெளிவாயிற்று; அதையொட்டி ஒரு பெரும் அரசியல், இராணுவப் பின்னடைவு அவர்களின் முன் தோன்றியது.

போர் நிறுத்தத்திற்காக, ஆகஸ்ட் 11 அன்று ஐ.நா.வாக்கு அளிக்கப்படுவதற்கு சில மணி நேரங்கள் முன்புகூட, லெபனிய எல்லைக்குள் இஸ்ரேல் ஆயிரக்கணக்கான துருப்புக்களை அனுப்பிவைத்து, தொடர்ச்சியான பீரங்கி மற்றும் ஏவுகணைத் தாக்குதலை, போர்நிறுத்தம் தொடங்குவதற்கு முன் தன்னுடைய நிலைப்பாட்டை முன்னேற்றுவித்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக ஒரு திகைப்பான முயற்சியில் ஈடுபட்டது. இறுதி மூன்று நாட்கள் தாக்குதல் நடத்துவது தெற்கு லெபனானாவது பெரும் மக்கட் தொகை அழிந்து விட்ட "இடைப் பகுதியாக", இஸ்ரேலிய சக்திகளால் ரோந்திற்குட்பட்டு இருக்கும் வகையில் அமைக்கப்பட்டு விடலாம் என்று ஓல்மெர்ட் அரசாங்கம் கருதியது.

ஐ.நா.வின் மதிப்பீட்டின்படி 250,000 லெபனிய மக்கள் தங்களுடைய இல்லங்களுக்கு திரும்ப முடியாமல் உள்ளனர்; இதற்குக் காரணம் அவை அழிக்கப்பட்டுவிட்டன அல்லது வெடிக்காத வெடிபொருட்களின் ஆபத்து அங்கு உள்ளன. பெய்ரூட்டில் மட்டும் 35,000 மக்கள் வீடிழந்து நிற்கின்றனர் என மதிப்பிடப்பட்டுள்ளது. மற்ற நகர மையங்களிலும், அண்டை சிரியப் பகுதியிலும் பல்லாயிரக்கணக்கான அகதிகள் உள்ளனர். லெபனிய மக்கள் தாங்கள் நிரந்தர அகதிகளாக, பாலஸ்தீனியர்கள் போல் இஸ்ரேல் ஆக்கிரமிப்பினால் நாடிழந்தவர்களாக போய்விடக்கூடாது என்று கொண்டிருந்த உறுதிப்பாட்டினால்தான் அகதிகள் எண்ணிக்கை இன்னும் கூடுதலாக இல்லை.

தெற்கு லெபனானை வசிக்க முடியாமல் செய்துவிடுவதற்கு அனைத்து முயற்சிகளையும் இஸ்ரேல் கடைப்பிடித்துள்ளது. "இந்த குண்டுத் தொகுப்பு மாசு, நான் பார்த்ததிலேயே மோசமான தொகுப்பு ஆகும்" என்று மனித உரிமைகள் கண்காணிப்புக்குழுவின் மார்க் கார்லாஸ்கோ, கிறிஸ்டியன் சயன்ஸ் மானிட்டரிடம் கூறியுள்ளார். "வெடிப்பொருட்களை அகற்றுபவர்கள் இதைக் கவனிக்க முடியாமல் போனால் மிகப் பெரிய எதிர்கால மனிதகுல நெருக்கடியின் விளிம்பில் நாம் இருக்கிறோம்." இவர் முன்பு பென்டகனில் மூத்த ஆய்வாளராக வேலை பார்ந்துவந்ததுடன், 2003 படையெடுப்பின்போது ஈராக்கிய இலக்குகள் எவை தாக்கப்பட வேண்டும் எனப் பரிந்துரை செய்வதற்கும் பொறுப்பு ஏற்றிருந்தார். ஈராக்கில் அமெரிக்கா தொகுப்புக் குண்டுத்தாக்குதலை நடத்தியதை, லெபனானுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, அது "சிறுவர் விளையாட்டிற்கு" ஒப்பானது என்றும் அவர் கூறினார்.

தெற்கு லெபனியக் கிராமமான யோமோரில் இருக்கும் நிலை பற்றி ஒரு ராய்ட்டர்ஸ் தகவல் விவரித்துள்ளதாவது: "ஆகஸ்ட் 14ம் தேதி போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு மறுநாள் கண்ணிவெடி ஆலோசனைக் குழுவின் பிரிவு இவ்விடத்திற்குச்சென்றபோது அவ்வுறுப்பினர்கள் கிராமத்தின் ஒருபுறத்தில் இருந்து மறுபுறம் வரை நிலம் முழுவதும் சிறு குண்டுகள் இருப்பதைக் கண்டனர். அனைத்து வீடுகளுடைய கூரைப் பகுதிகளிலும், அனைத்து தோட்டங்களும், சாலைகள், சிறுவழிகள் அனைத்திலும் இச்சிறு குண்டுகள் காணப்பட்டன. சில வீடுகளுக்கு உள்ளே இருந்தன; பீரங்கி, விமானக் குண்டுத் தாக்குதலின் போது இவை ஜன்னல் வழியே அல்லது கூரையில் துளை போட்டு வீடுகளுக்குள் வந்திருக்க வேண்டும். போர்நிறுத்தம் ஏற்பட்டவுடனேயே பலர் வீடுகளுக்குத் திரும்பினர்; ஆனால் உடனேயே தங்கள் வீடுகள் தரைமட்டமாகி இடிபாடுகளாகி, குண்டுகளாலும் சூழப்பட்டுள்ளன என்பதை அறிந்தவுடன் அவற்றை விட்டு அகன்றுவிட்டனர்."

இறப்பு, காயங்களுக்கு உட்பட்டவர்களில் குழந்தைகளும் உள்ளனர். வெடிக்காத தொகுப்பு வெடிபொருட்களில் பெரும்பாலானவை உருண்டையாகவும், ஒரு டென்னிஸ் பந்தின் அளவிலும் இருந்தன. வினோதமாக இதைக் கண்ணுற்ற குழந்தைகள் உதைத்தும், அவற்றைப் பொறுக்கி எடுத்த அளவில் கடுமையான காயங்களை அடைந்ததுடன், உடலின் உறுப்புக்கள் சிலவற்றையும் இழந்தனர்.

ஆகஸ்ட் 26ம் தேதி வாஷிங்டன் போஸ்ட் ஒரு நிகழ்வைப் பற்றிய விவரத்தைக் கொடுத்தது. போர் நிறுத்ததை தொடர்ந்து ஹசன் டெகின் என்ற சிறுவன் தன்னுடைய குடும்பத்துடன் லெபனிய பேரூரான ஐடா அல்ஷாபிற்கு திரும்பி விட்டான். ஆகஸட் 17ம் தேதி அவனும் அவனுடைய ஒன்று விட்ட சகோதரர்களும் தங்கள் நகரத்தில் எஞ்சியவற்றை பார்வையிட்டனர். "எந்த வீடுகள் அழிக்கப்பட்டு விட்டன என்பதை நாங்கள் பார்க்க விரும்பினோம். அண்டைப் பகுதிகள் முழுவதுமே அழிந்திருந்தன." ஒரு சகோதரன் பந்து என்று அவன் நினைத்ததை எடுத்து மேலே வீசி எறிந்தான்; சிறு குண்டு மேலிருந்து விழும்போது வெடித்துச் சிதறி ஹசனின் குடல்கள் வெளியே வந்துவிட்டன. "நான் பெரும் ஓலமிட்டேன். குண்டு என்னை மூன்று மீட்டர்கள் தூரத்திற்கு தூக்கியெறிந்தது. என்னுடைய கால்கள், உடைகளை அனைத்தும் இரத்தத்தில் தோய்ந்திருந்தன." என்று அவன் போஸ்ட்டிடம் கூறினான்.

மனித உரிமைகள் அமைப்புக்களும் சட்ட வல்லுனர்களும் இஸ்ரேலை சர்வதேச சட்டத்தை பெரிதும் மீறியதற்காக கண்டித்துள்ளனர். தொகுப்பு வெடிபொருட்கள் வசிப்பிடங்களில் பயன்படுத்தப்பட்டால், இயல்பாகவே சிவிலிய சாதாரண மக்கள் என்ற இலக்குகளை குடியிருப்பு பகுதிகளை பிரித்து உணர முடியாதவை ஆகும்." என்று இங்கிலாந்தை தளமாக கொண்ட Public Interest Lawyers என்னும் மனித உரிமைகள் அமைப்பு கார்டியன் பத்திரிகைக்கு எழுதிய கடிதம் ஒன்றில் விளக்கியுள்ளது. "சர்வதேச மனிதாபிமானச் சட்டம் சிவிலிய, சாதாரண இலக்குகளிடையே வேறுபாடு காணமுடியாத தன்மையுடைய இத்தகைய ஆயுதங்கள் முறையை முற்றிலும் தடுத்துள்ளது... இஸ்ரேலிய படைகள் தொகுப்பு குண்டுகளை வசிக்கும் பகுதிகளில் பயன்படுத்தினர் என்றால் அவர்கள் போர்க்குற்றங்களை செய்தவர்கள் ஆவர்; எவ்வாறு பாக்தாத்திலும் பாஸ்ராவிலும் இத்தகைய தொகுப்புக் குண்டுக்கள் பயன்படுத்தப்பட்டனவோ, அப்படித்தான் இதுவும்."

கடந்த வாரம் அமெரிக்க வெளியுறவுத் துறையானது, இஸ்ரேல் அமெரிக்கா அளித்த தொகுப்புக் குண்டுகளை குடியிருப்பு பகுதிகளில் வீசி வெளிப்படையான இராணுவ இலக்குகளில் மட்டுமே பயன்படுத்தப்படும் என்பதை மீறியதா என்பதை அது விசாரித்து வருவதாக அறிவித்தது. 1982ம் ஆண்டு ஆறு ஆண்டு காலத்திற்கு இஸ்ரேலுக்கு இத்தகைய தொகுப்பு குண்டுகள் விற்பனையை நிறுத்தி வைத்தது; இதற்கு காரணம் சியோனிச நாடு லெபனான் மீது படையெடுத்தது ஒரு பாராளுமன்ற விசாரணையை தூண்டி விட்டிருந்தது.

வெளியுறவுத் துறையின் ஆய்வு என்பது சர்வதேச சீற்றத்திற்கு ஏதோ குரல் கொடுப்பது என்பதற்குத்தான் ஒப்பாகும். மத்திய கிழக்கில் அமெரிக்காவின் ஆதிக்கத்தை விரிவாக்குவதற்கும், சிரியா, ஈரான் மீது இன்னும் கூடுதலான அழுத்தத்தை கொண்டுவரவேண்டும் என்பதற்காகவும் புஷ் நிர்வாகம் இஸ்ரேலின் படையெடுப்பில் நேரடியாக ஒத்துழைத்துள்ளது. ஒரு "புதிய மத்திய கிழக்கு" எழுச்சி பெறும் என்று வெளியுறவுத் துறை செயலர் கொண்டலீசா ரைஸ் கூறியதற்கு ஏற்ப, வாஷிங்டன் இஸ்ரேலை அதன் அழிப்பு, நாசகர வேலையை பெருக்குமாறு ஊக்குவித்ததுடன், பல வாரங்களாக உடனடி போர்நிறுத்த கோரிக்கைகளையும் தடுத்து வைத்தது. ஓல்மெர்ட் அரசாங்கம் மற்றும் இஸ்ரேலிய பாதுகாப்பு படைகளின் ஆணையக பிரிவைப் போலவே புஷ் நிர்வாகத்தின் முக்கிய அதிகாரிகளும் லெபனானில் நிகழ்த்திய செயல்களுக்காக போர்க்குற்ற நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved