World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

Germany: Democratic rights under attack following arrest of alleged bombers

ஜேர்மனி : குண்டுவீசுபவர்கள் எனக் கருதப்படுவோர் கைது செய்யப்பட்டபின் ஜனநாயக உரிமைகள் தாக்குதலுக்கு உட்படுத்தப்படுகின்றது

By Ludwig Niethammer and Peter Schwarz
28 August 2006

Back to screen version

ஜூலை மாத இறுதியில் இரு லெபனிய இளைஞர்களால் பிராந்திய இரயில்களில் குண்டுகளை வைத்திருக்கக் கூடும் என்று அதிகாரிகள் கருதிய பின்னர் ஜேர்மன் அரசாங்கத்திற்கு கூடுதலான போலீஸ் அதிகாரங்கள் கொடுக்கப்படுவதற்கான பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளது. அடிப்படை ஜனநாயக உரிமைகளை கடுமையாக கட்டுப்படுத்தும் பாதுகாப்பு நடவடிக்கைகள் இப்பொழுது விரைவான வகையில் சட்டமியற்றுவதற்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் (CDU) உறுப்பினரும், உள்துறை மந்திரியும், அதிகாரமிக்க அரசாங்கத்திற்காக வாதிடுபவருமான வொல்ப்காங் ஷொய்பிள (Wolfgang Schäuble) "அசாதாரண முறையில் கடுமையான", மற்றும் "அண்மித்துள்ள'' பயங்கரவாத அச்சுறுத்தல் ஆகியவற்றைப்பற்றி பேசுகையிலேயே, பரந்த அளவில் "பயங்கரவாத-எதிர்ப்பு தகவல்" சேகரிக்கப்பட வேண்டும் என்றும், பொது இடங்களில் வீடியோ கண்காணிப்பு அதிகரிக்கப்பட வேண்டும் என்றும் இணையதளங்களின் மீதான கண்காணிப்பு விரிவாக்கப்பட வேண்டும் என்றும் கோரியுள்ளார்.

ஜனநாயக உரிமைகளை நாமே உவந்துத் துறக்க வேண்டும் என்பதற்கான தத்துவார்த்த காரணங்களை தாராளவாத வாதாந்திர ஏடான Die Zeit இல் கட்டுரையாளர் ரோபர் லைற் கொடுத்துள்ளார். "சில உரிமைகளின் இழப்பில்தான் கூடுதலான பாதுகாப்பு எனப்படும் எளிய பூஜ்ய எண்ணிக்கை விளையாட்டு இப்பொழுது சுதந்திரத்திற்கான அடிப்படை நிலைமைக்கு குறைந்த பாதுகாப்பு என்பது இன்றியமையாதது என்ற கருத்திற்கு வழிவிட்டுள்ளது..." என எழுதியுள்ளார்.

டோர்ட்முண்ட் மற்றும் கோப்லேன்சிற்கு சென்ற இரு பிராந்திய இரயில்களில் ஜூலை 31 அன்று கண்டுபிடிக்கப்பட்ட இரண்டு பெட்டிகளில் இருந்த குண்டுகள் ஒரு தீவிர அச்சுறுத்தலை பிரதிபலித்தன என்பது உண்மைதான். வல்லுனர்களின் கருத்தின்படி சில தொழில்நுட்ப தவறுகளை அனுபவமற்ற குண்டு தயாரிப்பாளர்கள் செய்திருந்தனர் என்பது வெளிப்படையாதலால், குண்டுகள் வெடிக்கவில்லை.

ஒரு புரோபேன் வாயு நிறைந்த புட்டி, பெட்ரோல் திரவம் நிறைந்த சில புட்டிகள், வெடிக்கவைக்கும் கருவி மற்றும் மின்கலங்கள் ஆகியவற்றை கொண்டு மிக எளிய முறையில் தயாரிக்கப்பட்ட தன்மையில் குண்டுகள் இருந்தபோதிலும், விரைந்து கொண்டிருக்கும் இரயிலில் வெடிப்பு ஏற்பட்டிருந்தால் பலர் உயிரிழந்திருக்கக் கூடும். மாட்ரிட் மற்றும் லண்டனில் முன்னர் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்புக்களுக்கு ஒப்பாக ஜேர்மனியில் ஒரு தாக்குதல் நடத்துவதற்கு முதன் முதலாக ஏற்பட்ட நிகழ்வு இதுவாகும்.

ஆயினும்கூட, அரசியல் நடைமுறை மற்றும் செய்தி ஊடகத்தால் ஊக்குவிக்கப்படும் பீதி, பெரும் அச்சம் ஆகியவற்றால், எவரும் தங்களுடைய விமர்சிக்கும் தன்மைகளை இழந்து விட அனுமதித்துவிடக் கூடாது. ஒரு போலீஸ் அரசாங்கம் நிறுவப்பட்டுவிட்டால் மட்டும், பயங்கரவாத தாக்குதல்களை தடுத்துவிட முடியாது. மாறாக அத்திசையில் நடவடிக்கைகள் ஏற்படுத்துவது பயங்கரவாதம், வன்முறை ஆகியவை வளர்வதற்கான சூழ்நிலையைத்தான் தோற்றுவிக்கும்.

இத்தகைய தாக்குதல்களை தடுப்பதற்கு அவற்றின் சமூக, அரசியல் காரணங்களை ஆராய்வது முக்கியமாகும். ஈராக் மற்றும் லெபனானில் நடக்கும் போர்களுக்கும் இத்தகைய தாக்குதல்களுக்கும் தொடர்பு இல்லை, மாறாக இவை "மேற்கின் மதிப்பீடுகள்" பால் மதரீதியாக கொண்டுள்ள வெறுப்பில் இருந்து எழுகின்றன என்று ஜனாதிபதி ஜோர்ஜ் டபுள்யூ புஷ்ஷும், பிரதம மந்திரி டோனி பிளேயரும் கூறுவதை ஜேர்மனிய அரசியல்வாதிகளால் திரும்பக் கூறப்படுவதால் அதிக நம்பகத்தன்மை பெற்றுவிடாது.

எந்த "மேற்கின் மதிப்பீடுகள்" இங்கு குறிப்பிடப்படுகின்றன? உலக வர்த்தக மையத்தின் மீது செப்டம்பர் 11 தாக்குதலைவிட அதிகமாக ஒவ்வொரு மாதமும் உயிர்களை குடித்துள்ள, இதுவரை 100,000 உயிர்களை இழக்கச் செய்த, போலியாக நியாயப்படுத்தப்பட்ட, சட்ட விரோதமான ஈராக்கிற்கு எதிரான போர் பற்றியா? அல்லது இந்தத் தொடர் இஸ்ரேலிய விமானப்படையினாரால் லெபனான் மிருகத்தனமாக தாக்கப்பட்டு 1,200 குடிமக்களைக் கொன்று, நாட்டின் உள்கட்டமானத்தின் பெரும்பகுதிகளை அழித்து, கிராமங்கள் தரைமட்டமாகக்கப்பட்டதை குறிக்கிறதா?

ஈராக்கிற்கு எதிரான போர் பற்றி ஜேர்மனியில் மக்களுடைய பெருஞ்சீற்றம் வெளிவந்திருந்தது. ஆனால் லெபனான் தகர்ப்பு, செய்தி ஊடகம், அரசியல் நடைமுறை மற்றும் அரசியல் கட்சிகளின் ஆதரவிற்குட்பட்டுள்ளது அல்லது மிகக் குறைவாகப் பேசப்பட்டுவருகிறது. தொழிற்சங்கங்களோ இடது கட்சியோ லெபனானில் போருக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொள்ளவில்லை. பெய்ரூட்டில் முதல் குண்டுகள் விழுந்தபோது, கிறிஸ்தவ ஜனநாயக யூனியனை சேர்ந்த சான்ஸ்பர் அங்கேலா மேர்க்கல் ஜனாதிபதி புஷ்ஷுடன் விருந்துகளில் கலந்து கொண்டிருந்தார்; இருவருமே உடனடியாக இஸ்ரேலுடனான தங்கள் ஒற்றுமையை அறிவித்தனர்.

இந்தச் சூழ்நிலையில், மத்திய கிழக்கில் ஏகாதிபத்திய குற்றங்கள் பற்றி சீற்றமும் வெறுப்புணர்வும், நிரபராதியாக பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு எதிராக பிற்போக்கான செயல்கள் மேற்கொள்ளப்படுவதில் ஏதேனும் வியப்பு இருக்க முடியுமா?

லெபனான் போருக்குக்கான பிரதிபலிப்பு

இரயில்மீது குண்டுவீச்சுக்கள் நடத்த முற்பட்டது, குண்டுத்தயாரிப்பாளர்கள் எனக் கூறப்படுவோர் பற்றி இதுகாறும் தெரிந்துள்ள தகவல்களை கருத்திற்கொண்டால், இத்தாக்குதல் அனுபவமுள்ள பயங்கரவாத அமைப்பின் நீண்ட காலத்திட்டத்தின் விளைவு எனத் தோன்றவில்லை; மாறாக லெபனான் போர் மீதான தன்னியல்பான எழுச்சியுடன் பிரதிபலிப்பது போல் தோன்றுகிறது.

பயங்கரவாதிகள் "செயற்பாடுகள் பொருந்தா நிலையில் உள்ள", ''முற்றும் வழமைக்குமாறான'' வகையில் குண்டுகள் வடிவமைக்கப்பட்டன என்று வல்லுனர்கள் கூறுவது இந்த முடிவைத்தான் சுட்டிக்காட்டுகிறது. Essen Institute for Terrorism Research and Security Policy என்ற அமைப்பில் உள்ள Kai Hirschmann உடைய கருத்தின்படி குண்டுவீச்சிற்கான முயற்சிகள் தேர்ச்சியற்றவர்களுடைய செயலாகத்தான் இருக்க முடியும். பெட்டிகள் மறைக்கப்படவில்லை, பயன்படுத்தப்பட்ட வெடிமருந்துகள் நேர்த்தியான தன்மையை கொண்டிருக்கவில்லை. Hirschmann உடைய கருத்தின்படி பாரிய அழிப்பு என்பதை விட ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என்பதாகத்தான் திட்டத்தின் நோக்கம் இருந்திருக்க வேண்டும் என்பதற்கான குறிப்புக்கள் உள்ளன.

கீல் நகரத்தில் வார இறுதியில் கைது செய்யப்பட்ட 21வயதான யூசுப் முகம்மது எல்-ஹஜ்டிப் ஜேர்மனியில் இரண்டு ஆண்டுகளாக வசித்துவருகிறார்; ஒரு தொழில்நுட்பக் கல்லூரியல் படிப்பதற்கான தயாரிப்பு வகுப்புகளில் படித்து வருபவர். லெபனிய இரகசிய உளவுத்துறையின் கருத்தின்படி, அவருடைய குடும்பம் சலாபிய குழுவான (Salafist group) Hisb ut-Tahrir என்னும் அமைப்புடன் தொடர்பு கொண்டுள்ளது; அவ்வமைப்பு உலகம் முழுவதும் மீண்டும் இஸ்லாமிய காலிபாத் ஆட்சியை நிறுவ வேண்டும் என்ற அழைப்பைக் கொடுத்துள்ளது; ஆனால் இதுகாறும் பயங்கரவாத செயல்கள் புரிவதற்காக யூசுப் ஜேர்மனிக்கு வந்தார் எனக் கூறுவதற்கு எந்தவிதக் குறிப்புக்களும் இல்லை.

மாறாக சமீபத்தில் மகம்மது நபிகளுக்கு எதிரான கேலிச்சித்திரங்கள் பற்றிய பூசல் மதவாத முஸ்லீம்களை தீவிரமயப்படுத்தியுள்ளது போல் தோன்றுகிறது. டென்மார்க் வலதுசாரி செய்தித்தாளான ஜைலண்ஸ் போஸ்ட் கடந்த ஆண்டு வேண்டுமென்றே அரசியல் தூண்டுதலை கொடுத்து முஸ்லீம்களை சீற்றத்திற்கும் அவமதிப்பிற்கும் உட்படுத்தவேண்டும் என்ற இலக்கை கொண்டிருந்தது. இதையொட்டி இச்செய்திதாளுக்கு எதிராக உலகம் முழுவதும் எதிர்ப்பலை எழுந்தது.

யூசுப்பின் வகுப்பில் கேலிச்சித்திர பூசல்கள் பற்றி விவாதம் நடந்தபோது, பொதுவாக அமைதியாக இருக்கும் இந்த மாணவர் பெரும் பரபரப்பைக் காட்டினார் என்று Die Zeit ல் உள்ள தகவல் ஒன்று கூறுகிறது. "ஒரு தீவிரவாதத்தன்மையையும் ஆக்கிரோஷத்தையும் அவர் கொண்டிருந்தார்" என்று சக பள்ளி மாணவர் கூறியதாக செய்தித்தாள் மேற்கோளிட்டுள்ளது. பெப்ருவரி 10ம் தேதி NDR தொலைக்காட்சி கீலில் கேலிச்சித்திரங்களுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் முன்னணியில் இருந்ததைப் படம் எடுத்துள்ளது.

இதைத் தொடர்ந்து லெபனான் போர் தொடங்கியது; யூசுப்பிற்கு இது நேரடி தாக்கங்களை கொடுத்தது. இஸ்ரேலியக் குண்டு ஒன்றினால் இவருடைய சகோதரர்களில் ஒருவர் கொல்லப்பட்டார்.

19வயதான ஜிகட் ஹமத் என்ற குண்டுவீசிவர்கள் இரண்டாமவர் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளவர் பற்றி அதிகம் தெரியவில்லை. கோலோன் நகரில் இரண்டு ஆண்டுகள் ஒரு மாணவராக இவர் வசித்து வந்தார். கடந்த புதனன்று தன்னுடைய நிரபராதத் தன்மையை அறிவித்துக் கொண்டு தானே இவர் லெபனிய போலீசாரிடம் சரணடைந்தார்.

DNA சோதனைகள் மூலம் இரு இளைஞர்களுக்கும் குண்டுகளுக்கும் தொடர்பு இருப்பதற்கான சான்றுகள் இருப்பதாக ஜேர்மனியப் போலீஸ் கூறியுள்ளது. குண்டுகளில் பயன்படுத்தப்பட்ட எரிவாயு புட்டிகள் வாங்கியதற்கான பற்றுச்சீட்டுகள் ஜிகாட் ஹமத்தின் கோலான் வீட்டில் கண்டுபிடித்ததாக போலீஸ் கூறுகிறது. பிந்தைய கூற்று உண்மையென்றால், நீண்டகால அனுபவம் உடைய பயங்கரவாதிகள் என்பதற்கு மாறாக குற்றம் செய்தவர்கள் அனுபவமற்ற சதித்திட்டம் தீட்டியவர்கள் என்பதுதான் தெரியவருகிறது.

தலைமை கூட்டரசு அரசாங்க வக்கீல் இருவர்மீதும் கொலைக் குற்றம் சாட்டியிருப்பது மட்டுமில்லாமல், ஒரு பயங்கரவாத அமைப்பில் உறுப்பினர்கள் என்றும் குற்றம் சாட்டியுள்ளார். கூட்டாட்சி குற்றவியில் விசாரணை அலுவலகம் இன்னும் உடந்தையாக இருந்தவர்களைத் தேடி வருகிறது; வெள்ளியன்று இரு கூடுதலான கைதுகள் செய்யப்பட்டன. ஆனால் இதுகாறும் சந்தேகத்திற்கு உரியவர்கள் ஒரு பயங்கரவாத அமைப்பின் உறுப்பினர்கள் எனக் கூறுவதற்கான சான்றுகள் ஏதும் அளிக்கப்படவில்லை.

ஜேர்மனிய பாதுகாப்புக் கொள்கையில் தொடர்பு உடைய சில அரசியல் வாதிகள் குண்டுவீச்சு முயற்சிகள் மற்றும் லெபனான் போருக்கும் இடையே உள்ள தொடர்பை ஒப்புக் கொள்ளுகின்றனர். Die Zeit க்குப் பேட்டி கொடுத்த உள்துறை மந்திரி ஷொய்பிள கூறியதாவது, "தொடக்கத்திலேயே நாங்கள் லெபனான் போர் நீடித்தால் எங்களை தாக்கும் ஆபத்து அதிகமாகப் போகும் என்று சுட்டிக்காட்டியிருக்கிறோம்."

ஷொய்பிள பேரழிவு கொடுத்த போர் பற்றிய புகைப்படங்கள் எத்தகைய விளைவை கொடுத்திருக்கும் என்பது பற்றி தான் முற்றிலும் உணர்ந்துள்ளதாக கூறினார். ஐரோப்பிர்கள், அமெரிக்கர்கள் போல் இன்றி அரேபிய மக்கள் இப்புகைப்படங்களை தணிக்கைக்கு உட்படுத்தப்படாத வகையில் பார்த்துள்ளனர்.

"அல் ஜசீரா போன்ற செல்வாக்கு பெற்றுள்ள துணைக்கோள் தொலைக்காட்சி நிறுவனம் பற்றி நான் தீர்ப்பு கூற விரும்பவில்லை. ஆனால் அவர்கள் இடைவிடாமல் ஒளிபரப்பும் படங்கள் சகிப்புத்தன்மை, சமாதானம் ஆகியவற்றிற்கு ஊக்கம் தருவதாக இல்லை எனக் கூறலாம்." என்று அவர் கூறினார். ஆனால் படங்களை ஒளிபரப்பியதற்கான பொறுப்பு அல்ஜீசீராவிடம் உள்ளது என்பதற்கு பதிலாக இக்கஷ்டங்கள் வர காரணமாக இருந்த இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவிடம்தான் உள்ளது.

சமூக ஜனநாயக கட்சி (SPD) உறுப்பினரும் பேர்லின் நகரச் சட்ட மன்றத்தின் செனட்டருமான எர்ஹர்ட் கோர்டிங், Berliner Zeitung நாளேட்டிற்கு கொடுத்த பேட்டியில் ஜேர்மனியின் பயங்கரவாத ஆபத்து, மத்திய கிழக்கிற்கு ஜேர்மன் படையினர் அனுப்பப்பட்டு உள்ளூர் மக்கள் அதற்கு எதிரான வகையில் நடந்து கொண்டால் பெருகக்கூடும் என்று கூறியுள்ளார்.

ஆனால் ஷொய்பிளவோ அல்லது கோர்ட்டிங்கோ ஜேர்மனிய வெளியறவுக் கொள்கையில் தலைகீழ் திருப்பம் ஏற்பட்டுள்ளது பற்றி ஏதும் பேசவில்லை; இந்த மாற்றம் கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் மற்றும் சமூக ஜனநாயக கட்சி கூட்டணி அதிகாரத்தை ஏற்றுக்கொண்டதில் இருந்து அமெரிக்கா சார்பானதாக மாறியதை தொடர்ந்து நிகழ்ந்துள்ளது. இருவருமே ஜேர்மன் படையினர் லெபனானுக்கு அனுப்பப்பட வேண்டும் என்பதற்கு ஆதரவு கொடுத்துள்ளனர்; மத்திய கிழக்கில் இராணுத் தலையீடு வேண்டும் என்கின்றனர்; இதை ஒட்டி கூடுதலான பயங்கரவாதத் தாக்குதல்களும், உள்நாட்டில் எதிர்ப்புக்களும் பெருகக் கூடும்.

இந்தப் பின்னணியில்தான் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு கூடுதலான அதிகாரங்கள் வழங்குவது, இப்பொழுது பெரும் ஆர்வத்துடன் முன்வைக்கப்பட்டுள்ள கருத்து, பரிசீலிக்கப்பட வேண்டும். இத்தகைய நடவடிக்கைகள் பொதுமக்களை பயங்கரவாத தாக்குதல்களிடம் இருந்து பாதுகாப்பதற்கு அதிகம் பயன்படாது; அரசியலில் எதிர்ப்புக் காட்டுபவரைகளை ஒடுக்கவும், அச்சுறுத்தவும்தான் பயன்படும்.

"பயங்கரவாத எதிர்ப்புத் தவகல்கள்" திரட்டுதல்

"பாதுகாப்பு எச்சரிக்கை நடவடிக்கைகள்" என்று அழைக்கப்படுவதின் மையத்தானத்தில் "பயங்கரவாத எதிர்ப்புத் தகவல்கள்" என அழைக்கப்படும் தகவல் திரட்டுதல் அமைந்துள்ளது. நீண்டகாலமாகவே இது பற்றிய விவாதம் உள்ளது. ஆனால் பல காரணங்களை ஒட்டி இது அறிமுகப்படுத்தப்படுவது தோல்வியில் முடிவடைந்துள்ளது. உள்துறை மந்திரியான ஷொய்பிள அந்நடவடிக்கைகள் உலக கால்பந்துக் கோப்பையின் போது, இந்த ஆண்டு ஜூலை மாதமே அறிமுகப்படுத்த முயன்றார். இப்பொழுது புதிய வாய்ப்பைப் பயன்படுத்தித் தேவையான சட்டம் இயற்றப்பட்டு, விரைவில் அதைச் செயல்படுத்தவும் விரும்புகிறார்.

"பயங்கரவாத எதிர்ப்பு தகவல்கள்" என்ற பரந்த தன்மையுடைய தொகுப்பு ஒரு அர்த்தமற்ற, நிதானம் தவறிய முறையில் கண்காணிப்பை அரசாங்கம் நடத்துவதற்கான மடையைத் திறந்து விடுகிறது. அரசியலமைப்பையும் போலீசையும், உளவுத் துறையையும் பிரித்துவைப்பதை இது அகற்றி, கிட்டத்தட்ட முழுமையாக ஒவ்வொரு தனிமனிதரையும் கண்காணிக்கவும், அனைவரையும் சந்தேகத்திற்குரியவர் என்று ஒருதலைப்பட்சமாக முத்திரையிடவும் உதவும்; அவர்களால் இதை எதிர்க்க முடியாத நிலைக்குத் தள்ளவும் உதவும். கண்காணிப்பு, சந்தேகப்படல் ஆகியவற்றிற்கு ஒரு இணைப்புத் தளம் கொடுத்து, அதில் ஒருவர் விழுந்தால் தப்ப முடியாத நிலையை ஏற்படுத்தும்.

சேகரிக்கப்பட்ட தகவல்கள் உளவுத்துறை, போலீசார் திரட்டிய தகவல்கள், கூட்டாட்சி குற்றவியல் விசாரணை அலுவலகம் கொடுக்கும் தகவல்கள், மாநில குற்றவியல் போலீஸ் அமைப்புக்கள், இராணுவ உளவுத்துறை மற்றும் கூட்டாட்சி தகவல் துறை மற்றும் சுங்க அலுவலகம் கொடுக்கும் தகவல்கள் ஆகியவற்றை இணைத்து நிற்கும் இந்தக் கோப்புக்கள் தயாராக எந்நேரத்திலும் பாதுகாப்பு அதிகாரிகள் பார்வையிடும் வகையில் இருக்கும்; அவற்றில் அமைப்புக்கள், பயங்கரவாதம் எவ்வடிவில் இருந்தாலும் அது பற்றிய சந்தேகத்திற்கு உரியவர்கள் பற்றிய தகவல்களும் இருக்கும்.

இத்தகவல் வங்கிகளில் விலாசங்கள், தொலைபேசி சான்றுகள், பார்வையிடப்பட்ட வலைத் தள பக்கங்கள், தனிப்பட்ட வங்கிக் கணக்கு விவரங்கள் ஆகியவை இருக்கும். மொபைல் தொலைபேசித் தகவல்களும் சேகரித்து வைக்கப்படும்; ஏனெனில் ஒரு தனி நபரின் நடவடிக்கைகள் பற்றி மீண்டும் கண்டறிவதற்கு இது பயன்படும். மேலும் இக்கோப்புக்கள் சந்தேகத்திற்கு உரியவர்கள் எங்கு சந்திக்கக் கூடும், பயணிக்கக் கூடும் போன்ற தகவல்களையும் கொண்டிருக்கும். உடற்கூறுபாடு பற்றிய தகவல்கள், அதாவது, பச்சை குத்தல்கள், தழும்புகள், குறிப்பிட்ட பிராந்திய மொழி வழக்குப் பயன்பாடு ஆகியவையும் குறித்து வைக்கப்படும்.

வலைக்குள் அகப்படக்கூடியவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட வரம்பிற்கு அப்பாற்பட்டுள்ளது. சட்ட முன் வரைவின்படி, புதிய சட்டத்தின்படி "சட்ட விரோத சக்தியை சர்வதேச அரசியல், சமய நலன்களுக்கு பயன்படுத்துவோர் அல்லது அத்தகைய நலன்களுக்கு ஆதரவு கொடுப்பவர் அல்லது அத்தகைய சக்திக்கு ஒப்புதல் கொடுப்பவர்கள் அல்லது செய்பவர்கள் அல்லது தங்களுடைய நடவடிக்கைகள் மூலம் வேண்டுமென்றே வெளிப்படுத்துபவர்கள்" ஆகியோர்மீது பயன்படுத்தப்படும்.

இத்தகைய வரையறையின்படி, ஈராக்கியப் போருக்கு துணை நிற்பவர்களும் தகவல் சான்றுகளில் சேர்க்கப்பட வேண்டும்; ஏனெனில் ஈராக்கின்மீதான போர் என்பது "சர்வதேச அரசியல் அல்லது மத நலன்களுக்காக சட்ட விரோதமான சக்தியை பயன்படுத்திய போர் வழிமுறையாகும்" என்பதை மறுப்பதற்கில்லை எனக்குறிப்பிடப்படுகின்றது. ஆனால் சட்டத்தின் நோக்கம் இதுவல்ல. ஆனால் இந்த உதாரணம் எப்படி சட்டவகைச் சொற்கள் விருப்பப்படி பயன்படுத்தப்படலாம் என்றும், அரசாங்கம் தனக்கு பிடிக்காததை பற்றி எப்படி எடுத்துக் கொள்ளலாம் என்பதையும் காட்டுகிறது.

இப்பரந்த வரையறை கூடக் குறுகியது என்று கொள்ளப்பட்டால், "தொடர்பு நபர்கள்" (contact persons) என அழைக்கப்படுபவர்களும் கண்காணிப்பில் வைக்கப்பட்டு அவர்களை பற்றிய விவரங்கள் பதிவு செய்யப்படலாம். இவ்விதத்தில் "பயங்கரவாத-எதிர்ப்புத் தகவல்கள்" சேகரிப்பில் கிட்டத்தட்ட அனைவருமே சேர்க்கப்பட்டு விடலாம்.

முன்னாள் கூட்டரசு அரசியலமைப்பு நீதிமன்றத்தின் தலைவர் ஜுட்டா லிம்பாக், Süddeutsche Zeitung பத்திரிகையிடம் தெரிவித்துள்ள கருத்தின்படி, "ஒரு பயங்கரவாதி எனச் சந்தேகிக்கப்படும் மாணவர் இருக்கும் விடுதிக்கு அருகில் இருப்பவர்களும் இத்தகைய நபரை விடுதி தொலைபேசியைப் பயன்படுத்த அனுமதித்திவர்களும் கூட எதிர்பாராமல் பயங்கரவாத-எதிர்ப்புத் தகவல் பட்டியிலில் இடம் பெற்றுவிடக்கூடும்."

இத்தகைய பயங்கரவாத எதிர்ப்புத் தகவல் தொகுப்பு சர்வதேச அளவில் விரிவாக்கம் செய்யப்படும் என்றால், அதுதான் விழைவு, உளவுத்துறையின் சந்தேகப் பார்வையில் விழுபவர்கள் குவான்டநாமோ பே போன்ற முகாமில் நாட்களை கழிக்க நேரிடும். முன்னாள் கிழக்கு ஜேர்மனியின் பாதுகாப்பு போலீஸ் பிரிவான ஸ்டாசி (Stasi) கூட இதை ஒப்பிடும்பொது அனுபவமற்றவர்கள் என்று கூறத் தோன்றும்.

உள்துறை மந்திரி ஷொய்பிள பயங்ரவாத-எதிர்ப்புத் தகவல் சேகரிப்பு இந்த இரு பிராந்திய இரயில்கள் மீதான தாக்குதல் முயற்சிகளை தடுத்திருக்க முடியுமா என்பது ஐயப்பாடுதான் என்பதை ஒப்புக் கொண்டுள்ளார். ஆனால், விரும்பத்தகாத எதிர்ப்பு போக்குகளை கண்காணித்து, ஒடுக்குவதற்கு தலைசிறந்த கருவியை அதிகாரிகளுக்கு வழங்கியுள்ளது.

எல்லாவற்றிற்கும் மேலாக இடதுசாரி, சோசலிச அமைப்புக்கள் அரசாங்க கண்காணிப்பு, ஒடுக்குமுறை இவற்றிற்கு உட்படுத்தப்படலாம். "பலாத்காரத்தை பயன்படுத்துவது" என்பதை விளங்கிக்கொள்வது என்பது ஒப்புமைத்தன்மையும், வளைந்து கொடுக்கும் தன்மையும் கொண்டது ஆகும். ஒரு பெரிய அளவிலான தொழில்துறை வேலைநிறுத்தம் இத்தகைய வரையறைக்குள் உட்படுத்தப்படலாம் அல்லது ஜேர்மனி ஒரு போரில் கலந்து கொள்ளுவதற்கு எதிரான பரந்த மக்கள் இயக்கமும் இதன்கீழ் உட்படுத்தப்படலாம்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved