World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள்

The Pope and Islam

Ratzinger's Crusade

போப்பும் இஸ்லாமும்

ராட்சிங்கரின் மதப்போர்

By Justus Leicht
22 September 2006

Back to screen version

ஜோசப் ராட்சிங்கர் என்னும் போப் பதினாறாம் பெனடிக்ட் றேகன்பேர்க் பல்கலைக்கழகத்தில் ஆற்றிய உரையை தொடர்ந்து எழுந்த பூசலின் விளைவுகளை குறைக்கும் வகையில் வத்திக்கான் அதிக செயற்பாடுகளை மேற்கொண்டுள்ளது. ராட்சிங்கரின் கருத்துக்கள் உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்களின் சீற்றம்கொண்ட எதிர்ப்புக்களை தூண்டிவிட்டிருந்தது.

"என்னுடைய உரையில் சில பகுதிகளுக்குச் சில நாடுகளில் ஏற்பட்ட விளைவுகளைக் குறித்து" என தன்னுடைய வருத்தத்தை போப் வெளியிட்டார்; ஆனால் அப்பந்திகளை பற்றி அதிகம் அவர் கூறவில்லை. மாறாக, முஸ்லிம் நாடுகளில் இருக்கும் தன்னுடைய தூதர்களுக்கு உரையின் பொருளை நன்கு "விளக்குமாறு" வத்திக்கான் உத்திரவிட்டுள்ளது.

செய்தி ஊடகங்கள், குறிப்பாக ஜேர்மனியில் போப்பின் உரைக்கு எதிராக வந்த விடையிறுப்புக்களை தவறாகப் புரிந்து கொண்டதின் விளைவு என்ற விளக்க முயன்றுள்ளன.

அது ஒன்றும் அப்படிப்பட்டது அல்ல. செப்டம்பர் 11 தாக்குதலின் ஐந்தாவது நிறைவு நாளுக்கு ஒரு நாள் பின்னர் தான் கொடுத்த உரையின் விளைவுகள் எப்படி இருக்கும் என்று போப்பிற்கு தெரிந்திராது எனக் கூறப்படுவது முற்றிலும் சிறுபிள்ளைத்தனமாகும். ஜேர்மனிய மாநிலமான பவேரியாவிற்கு அவர் அண்மையில் சென்றிருந்தபோது எதுவுமே தற்செயல் விளைவிற்கு விட்டுவிடப்படவில்லை. ஒவ்வொரு அசைவும் நன்கு தயாரிக்கப்பட்டிருந்தது; அவர் கூறிய ஒவ்வொரு சொல்லும் கவனத்துடன் ஒத்திகை பார்க்கப்பட்டிருந்தது. சொல்லப்போனால் மற்ற மதங்களுடன் நடந்து கொள்ளுவது பற்றி வத்திக்கானுக்கு கிட்டத்தட்ட 2,000 ஆண்டுகள் அனுபவம் உண்டு.

பெருகிய முறையில் மத்திய கிழக்கை காலனித்துவ முறையில் ஒடுக்குவதை நியாயப்படுத்துவதற்கு கருத்தியல் ரீதியாக உந்தப்பட்ட வாதங்கள் இருந்த நேரத்தில்தான் ராட்சிங்கரின் உரை வெளியாயிற்று. "பயங்கரவாதத்தின் மீதான போர்" என தொடங்கியது "இஸ்லாமிய வன்முறை" அல்லது "இஸ்லாமிய பாசிசம்" என்பதற்கு எதிரான போராட்டம் என விரிவாக்கப்பட்டு, "கிறிஸ்துவ மேலை நாகரிகத்தை" காப்பதை இலக்காகக் கொண்டுவிட்டது.

இந்த உரை ராட்சிங்கரின் முந்தைய கருத்துக்களுடன் கட்டாயம் தொடர்புபடுத்தி பார்க்கப்பட வேண்டும். அதாவது, ஐரோப்பிய ஒன்றியத்தில் துருக்கிக்கு இடம் கொடுப்பது பற்றி அவர் காட்டிய எதிர்ப்பு மற்றும் ஐரோப்பிய அரசியலமைப்பில் கடவுள் இருப்பது ஒப்புக்கொள்ளப்பட வேண்டும் என்று அவர் வாதிட்டது, அதையொட்டி ஐரோப்பா ஒரு கிறிஸ்தவ அமைப்பு என வரையறுக்கப்படல் ஆகியவை கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.

ஒரு ஜோர்ஜ் டபுள்யூ புஷ் போலவோ, பவேரிய பிரதம மந்திரியின் சமீபத்திய கருத்துக்களை போலவோ நயமற்ற முறையில் இஸ்லாமிற்கு எதிரான தாக்குதலை போப் கையாளமுடியாது என்பது இயல்பேயாகும். ஒருவிதத்தில், உலகின் ஒரு பில்லியன் கத்தோலிக்கர்களில் பலரும் முஸ்லிம் நாடுகளில் வாழ்கின்றனர்.

எனவே தன்னுடைய பொருளுரையை நம்பிக்கை, பகுத்தறிவு பற்றிய உரையில் பதிநான்கு, பதினைந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த பைசன்டைன் பேரரசரின் சொற்களில் அவர் மறைத்து வைத்தார். ஆயினும் கூட பொருளுரையின் தன்மை மறைக்கப்பட முடியாததுதாகும்: "கிறிஸ்துவ சமயம் சமாதானமானது, பகுத்தறிவார்ந்தது; இஸ்லாம் வன்முறையும், பகுத்தறிவிற்கு ஒவ்வாதது." தான் வருத்தம் தெரிவித்தாலும் தன்னுடைய கருத்து தொடர்ந்து இருக்கும் என்பதை போப் நன்கு அறிந்தவர் ஆவார்.

பல சீற்றமடைந்த முஸ்லிம்களோடு கூடவே, ஜனாதிபதி புஷ்ஷும் ராட்சிங்கரின் செய்தி பற்றி நல்ல தெளிவை கொண்டிருந்தார். போப்பிற்கு உடனடியாக ஆதரவு கொடுத்து ராட்சிங்கரின் கருத்துக்களை தன்னுடைய "பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்துடன்" இணைத்தார்.

CNN க்குக் கொடுத்த பேட்டி ஒன்றில், புஷ் கூறினார்: "இது ஒன்றும் மதங்கள் பற்றிய பூசல் இல்லை. இது மதங்களை பயன்படுத்தி கொல்லுபவர்களுக்கும் நம்மிடையே சமாதானத்திற்காக போரிடுபவர்களுக்கும் இடையேயான போராட்டம்". இது ஒன்றும் பண்பாடுகளுக்கு இடையேயான போராட்டம் இல்லை, "பண்பாடு பற்றிய போராட்டம்" என்றும் சேர்த்துக் கொண்டார்.

புஷ்ஷின் வகையிலான மேலை நாகரிகத்தின் வடிவமைப்பை அமெரிக்க குண்டுகள் மற்றும் அமெரிக்க ஆக்கிரமிப்பு பயங்கரம் ஆகியவற்றின் மூலம் அனுபவித்து வரும் ஈராக்கிய மக்கள் இத்தகைய "பண்பாடு பற்றிய போராட்டத்திற்கு" கொடூரமான தங்கள் சொந்த விலையை கொடுத்துள்ளார்கள்.

வரலாறு பெரும் சிதைவிற்கு உட்படுத்தப்படல்

றேகன்பேர்க்கில் ராட்சிங்கர் ஆற்றிய உரை மிகப்பரந்த அளவில் ஜேர்மனிய செய்தி ஊடகத்தால் ஒரு முக்கிய அறிவாளியின் சிறந்த சாதனை என்று புகழப்பட்டது. உண்மையில் அது ஒரு நயமற்ற, நேர்மையற்ற, வரலாற்றளவில் தீமை மிகுந்த சிதைவைக் கொண்ட உரையாகும்.

அவரும் அவருடைய கார்டினல் ஸ்டேட் செக்ரடரியும் பின்னர் கூறியது போல், போப் பைசன்டைன் பேரரசர் இரண்டாம் மானுவல் பாலியோலோகோசை மேற்கோளிட்டது, அதாவது "வன்முறைக்கு மத உந்ததுல் எப்புறத்தில் வந்தாலும்" என்பது வரலாற்றை பொய்மைப்படுத்திக் கூறியதற்கு அவமானகரமான உதாரணம் ஆகும்.

இரண்டாம் மானுவல் எவ்விதத்திலும் "புனிதப் போரை" நிராகரிக்கவில்லை. பதினான்காம் நூற்றாண்டில் அவருடைய பைசன்டைன் பேரரசின் சரிவு மிக மோசமாக இருந்த நிலையில் அவர் ஓட்டோமன் பேரரசின் உதவியாளராகத்தான் போர்களில் பங்கு பெற்றிருந்தார்; இறுதியில் பிந்தையவருடன் தொடர்புகளை துண்டித்துக் கொண்டு ஐரோப்பாவில் தன்னுடைய முன்னாள் நட்பு நாடுகளுக்கு எதிராக புனிதப் போர்கள் நடத்தப்பட வேண்டும் என்று விழைந்தார் ---அதில் அதிக வெற்றியும் பெறவில்லை. அவருடைய நிலைப்பாடு இறுதியில் முஸ்லிம் டாமர்லேனுடைய மங்கோலிய அலைகளின் படையெடுப்பினால் காப்பாற்றப்பட்டது; அவர் முதல் ஓட்டோமன் பேரரசை மாபெரும் மிருகத்தன்மையினால் தாக்கி அழித்துவிட்டார். இரண்டாம் மானுவல் அங்காராவில் ஓட்டோமன்களுக்கு எதிராக வெற்றி பெற்ற பின்னர் டாமர்லேன் டாமர்லேனுக்கு பெரும் பரிசுகளை அனுப்பிவைத்தார்.

இந்த மனிதரைத்தான் இப்பொழுது கிறிஸ்துவத்தின் அமைதியான, அறிவார்ந்த தன்மைக்கு முன்மாதிரி என்று ராட்சிங்கர் அறிவிக்கிறார். "ஒரு படித்த பேர்சியருடன்" இரண்டாம் மானுவல் நடத்திய விவாதத்தில் இருந்து அவர் மேற்கோளிடுகிறார்; மானுவல் கூறுவதாவது: "மகம்மது எதைப் புதிதாக கொண்டு வந்தார் எனக் காட்டு; அதில் நீங்கள், தான் உபதேசிக்கும் கருத்துக்களை கத்திமுனையில் பரப்புதல் போன்றவற்றை தீமை மற்றும் மனிதத்தன்மை அற்றதைத்தான் காண்பீர்கள்."

தான் ஒரு இடைக்கால உரையில் இருந்துதான் மேற்கோளிட்டதாக இப்பொழுது போப் கூறினாலும், தனக்கும் அப்பொருளுரைக்கும் தொடர்பு இல்லை எனக் கூறினாலும், இவருடைய முழு உரையிலும் இவர் இந்த மேற்கோளின் பொருளுரையில் இருந்து தன்னை அகற்றிக் கொள்ளவே இல்லை என்பதுதான் உண்மை. மாறாக, வன்முறையை நெறிப்படுத்துவதாகவும் மற்ற சமயங்கள்மீது ஆற்றலை பயன்படுத்துவதை நெறிப்படுத்துவதாகவும் பலமுறை அவர் இஸ்லாம் மீது குற்றம் சாட்டியுள்ளார்.

உண்மையில் மதத்தினால் உந்துதல் பெறப்பட்டுள்ள வன்முறையின் அனைத்து வடிவமைப்புக்களையும் கண்டிக்க ராட்சிங்கர் முற்பட்டிருப்பாரேயாகில், இவர் ஒன்றும் இஸ்லாமிய நம்பிக்கையை பற்றிக் குறிப்பிட்டிருக்க வேண்டிய தேவையில்லை. இவருடைய திருச்சபையிலேயே கத்தி முனையில் மதத்தை பரப்பியதற்கு ஏராளமான உதாரணங்கள் உள்ளன.

மகம்மது பிறப்பதற்கு கிட்டத்தட்ட முன்னூறு ஆண்டுகளுக்கு முன்பே வணக்கத்திற்குரிய ஹிப்போவின் புனித ஓகஸ்டைன் நேர்மையான போர் --"bellum justum"-- என்ற கருத்தை வளர்த்திருந்தார். அந்நேரத்தில் கிறிஸ்தவம் ரோமானிய பேரரசால் அரசாங்க மதமாக அறிவிக்கப்பட்டிருந்தது; கிறிஸ்தவர்கள் மட்டுமே ரோமானிய இராணுவத்தில் பணி ஆற்ற முடியும் என்று இருந்தது.

பதினாறாம் பெனிடிக்ட்டின் முன்னோர்கள் இஸ்லாமின் பிந்தைய விரிவாக்கத்தை எதிர்கொள்ளும் போது மத விவாதங்களில் இருந்து ஒதுங்கி நின்றனர். 1095ல் போப் இரண்டாம் அர்பன் முதல் சிலுவைப் போரை அறிவித்தார்; அதற்குப் பிந்தைய ஆண்டுகளில் கிறிஸ்துவ குதிரை வீரர்ககளின் படைகள் மத்திய கிழக்கு பகுதிகளை சூறையாடித் தகர்த்தன

ஸ்பெயினின் மூர் பகுதியில் கிறிஸ்துவ ஆட்சியை நிறுவிய Reconquista வின் மிருகத்தனம் கணக்கிலடங்கா நூல்களில் ஆவணச் சான்றாக உள்ளது. கிறிஸ்துவ வெற்றியாளர்களின் சீற்றத் தகர்ப்பில் இருந்து தப்பிய சிறிதளவு கட்டிடங்கள் இன்றும் கூட அக்காலத்தில் இருந்த இஸ்லாமிய பண்பாட்டின் உயர்ந்த நிலைக்குக் கட்டியம் கூறுகின்றன. ரிகான்க்விஸ்டாவின் புரவலரான மூர்களை அழித்த புனித ஜேம்ஸ், ஸ்பெயின் நாட்டில் இன்னும் கத்தோலிக்க திருச்பையில் வணக்கத்திற்கு உரியவராக உள்ளார் என்பதை கூறத்தேவையில்லை.

கத்தோலிக்க திருச்சபையும் அறிவார்ந்த காரணமும்

ராட்சிங்கரின் உரையின் எஞ்சிய பகுதிகளும் மிக அப்பட்டமான, தீமை மலிந்த வரலாற்றுத் திரிபுகளைத்தான் பிரதிபலிக்கின்றன.

கிறிஸ்துவ நம்பிக்கை தொடக்கத்தில் இருந்தே கிரேக்கத் தத்துவத்துடன் "பிணைந்திருந்தது", எனவே அடிப்படையில் அறிவார்ந்தது என்ற கூற்றுக்கும் இது பொருந்தும். போப்பின் கருத்தின்படி இஸ்லாமில் கூறப்படும் இறைவனின் விருப்பம் "என்பது நம்முடைய வழிவகைகள் எதனுடனும், பகுத்தறிவார்ந்த முறையில் பிணைந்து இருக்கவில்லை."

ராட்சிங்கர் தொடர்கிறார்: "இந்தப் பிணைப்பு இருக்கும் நிலையில், அதன் தோற்றங்கள் மற்றும் சில குறிப்பிடத்தக்க வளர்ச்சிகள் கிழக்கில் இருந்தாலும்கூட, கிறிஸ்தவம் ஐரோப்பாவின் உறுதியான வரலாற்றுத் தன்மை என்ற வடிவத்தை பெற்றது. இதை வேறுவிதமாகவும் கூறலாம்: இந்தப் பிணைப்பு, பின்னர் ரோமானிய மரபு நெறிகளையும் இணைத்த தன்மை ஐரோப்பாவை தோற்றுவித்தது, சரியான முறையில் ஐரோப்பா என அழைக்கப்படுவதற்கு அடித்தளத்தை நிறுவியது."

இது வெளிப்படையான அபத்தமாகும். ஐரோப்பாவிற்கு கிரேக்க தத்துவத்தை கொண்டுவந்ததற்கு கூடுதலான பொறுப்பே இஸ்லாம்தான். இஸ்லாமிய மத வரலாற்றை பற்றிய நூல் கிரேக்க தத்துவம், அறிவியல் பற்றிய கண்டுபிடிப்புக்கள் "இஸ்லாமை மாற்றிய அளவு எத்தன்மையில் இருந்தது என்றால் அதன் ஆன்மீக உலகில் புதுத்தத்துவம் ஏதும் இல்லை என மறுக்கக் கூடிய அளவிற்கு ஆகும்." இஸ்லாத்தினால்தான் "ஐரோப்பா தன்னுடைய பழமையின் தொன்மையையும் மரபுகளையும் மீண்டும் கண்டிபிடித்து புத்துயிர் கொடுக்க முடிந்தது; அதுவரை அவற்றுடன் அது விரோதம்தான் கொண்டிருந்தது."

ராட்சிங்கருடைய முன்னாய்வுகளை எதிர்க்கும் வகையில் அந்நூல் கூறுவதாவது: "பொதுவாக கிறிஸ்துவத்திற்கு புறத்தே இக்கருத்து இருந்தாலும், நம்பிக்கையும் பகுத்தறிவும் முஸ்லிம்களை பொறுத்தளவில் எந்த அடிப்படை எதிப்புக்களையும் பிரதிபலித்ததில்லை." (Fischer World History [German]: Islam, from its origins to the beginnings of the Ottoman Empire, p. 127, 128).

தற்கால ஐரோப்பா, மற்ற நம்பிக்கைகளை தீ, கத்தி ஆகியவற்றுடன் மோதிக் கொண்டிருந்த கத்தோலிக்க திருச்சபையுடன் நேரடியான போராட்டத்திற்கு பின்னர் வெளிவந்துள்ளது என்பதுதான் உண்மை; அறிவொளி, மானுடம் மற்ற புகழ்வாய்ந்த சமுதாய இயக்கங்கள் அனைத்தும் அதன் பின்னர்தான் வந்தன.

இடைக்கால பிற்போக்குத்தனத்தில் இறுதி வடிவாக தப்பியிருப்பவர் போப்தான். வத்திக்கான் நாட்டின் அடிப்படை சட்டத்தின் முதல் பிரிவு கூறுகிறது: "வத்திக்கான் நாட்டின் தலைவர் என்ற முறையில், போப் அனைத்து சட்டமியற்றும், செயல்படுத்தும், நீதித்துறை அதிகாரங்களையும் கொண்டிருக்கிறார்." மத சட்டத் தொகுப்பு போப்தான் "கிறிஸ்துவின் போதகராக, புவியில் உள்ள பொதுத் திருச்சபையின் மேய்ப்பராக உள்ளார். அவருடைய பதவியின் காரணமாக அவரிடம் தலையாய, முழுமையான, உடனடியான, அனைத்துக்கும் பொருந்தும் திருச்சபையின் அதிகாரம் பொதிந்துள்ளது; இதை அவர் தடையின்றி எப்பொழுதும் பயன்படுத்தலாம்."

புரொடஸ்டான்ட் மத சீர்திருத்தம், அறிவொளி, தாராளவாத கத்தோலிக்க சமய வழிவகை மற்றும் விஞ்ஞானத்தையும் நம்பிக்கையையும் பிரிக்கும் "தற்கால பகுத்தறிவு" அனைத்தையும் குற்றம் சாட்டுகிறார்; ஆனால் இஸ்லாம் பகுத்தறிவிற்கு ஒவ்வாது என்று கூறும் வகையில், கான்ட்டிற்கு பின்னால் என்றில்லாமல், லூதருக்கும் பின்னால் என்ற நிலைப்பாட்டிற்கு சென்றுள்ளார். "பக்குவமற்ற தன்மை, நம்பியிருக்க வேண்டிய தன்மை உடைய நிலையை விட்டு நீங்குகிறேன்" (கான்ட்), என்பதை மட்டும் இல்லாமல் "கிறஸ்துவரின் சுதந்திரம்" (லூதர்) கருத்துக்களையும் நிராகரிக்கும் உண்மையை வெளிப்படையாக்குவதோடு, தானே சிந்தித்து முடிவு எடுப்பதாகவும் கூறுகிறார்.

மதசார் துன்புறுத்தல் தொடரப்படுதல்

பதினாறாம் பெனடிக்ட் என்னும் பெயரில் போப் பதவியை எடுத்துக் கொள்ளுவதற்கு முன்பு ஜோசப் ராட்சிங்கர் நம்பிக்கைக் கோட்பாட்டின் தொகுப்பு என்னும் அமைப்பிற்கு (Congregation for the Doctrine of the Faith) தலைவராக இருந்தார்; இது புனித விசாரணையின் நேரடி வாரிசு ஆகும். நடைமுறையில் இந்த அமைப்பு "கிரேக்கத் தத்துவமும் கிறிஸ்துவ நம்பிக்கையும் பிணைந்துள்ளது" என்றால் கத்தோலிக்க திருச்சபை என்ன புரிந்துகொள்கிறது என்பதைக் காட்டுகிறது. வாழ்க்கையின் ஒவ்வொரு பிரிவிலும் எது சரியானது, தவறானது என்பதை திருச்சபைதான் நிர்ணயிக்கும்.

திருச்சபை நாத்திகர்கள், "மத எதிர்ப்பு எழுச்சியாளர்கள்" மற்றும் "சூனியக்காரர்களுடன்" "சாக்ரடிசின் வகையில் கொள்ளும் வினா-விடை உரையாடல்களை" அடுத்து, மாறுபட்ட கருத்து உடையவர்கள், சித்திரவதை அறைகளில் தள்ளப்பட்டு இறுதியில் தூக்குமேடை அல்லது கொடுஞ்சிறையில் மடிவர். சில மதிப்பீடுகளின்படி இச்சித்திரவதை காலத்தில் மில்லியன்கணக்கான மக்கள் உயிரிழந்தனர்; கணக்கிலடங்காதவர்கள் சித்திரவதை, துன்புறுத்தப்படுதலுக்கு உட்பட்டனர்.

இதில் இருந்து ஆவியை வெளியேற்றும் பழக்கம் புழக்கத்தில் இருப்பதை சேர்த்துக் கொள்ளவில்லை என்றால், இன்று கத்தோலிக்கத் திருச்சபை நம்பிக்கை இல்லாதவர்களுக்கு எதிராக சித்திரவதைப் பழக்கத்தை நடத்துவதில்லை. ஆனால் கத்தோலிக்க திருச்சபைக்கு இணங்கி நடப்பதாகக் கூறும் சர்வாதிகாரிகள் சித்திரவதை செய்வதற்கு தன்னுடைய ஆதரவை இன்னும் அது கொடுக்கத் தயாராக இருக்கிறது. இது குறிப்பாக இலத்தீன் அமெரிக்காவிற்கு பொருந்தும். விடுதலை இறையியல் எனும் தம் சொந்த வகையில் நின்று வறியவர்கள், ஒடுக்கப்பட்டவர்கள் சார்பில் தலையீடு செய்த பின்னர் 1992ம் ஆண்டு நன்கு அறியப்பட்டிருந்த பாதிரியாரான லியோனார்டோ பாப்பை பதவியில் இருந்து அகற்றுவதற்கு ராட்சிங்கர் சொந்த முறையில் உதவினார்.

இருபதாம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் இருந்த பாசிச ஆட்சிகளும் கத்தோலிக்க திருச்சபையுடன் நெருக்கமான தொடர்புகளை கொண்டிருந்தன; உதாரணம்; ஸ்பெயின், இத்தாலி, போலந்து, குரோஷியா, ஸ்லோவாக்கியா. ஜேர்மனியின் ஹிட்லர் பதவிக்கு வந்த ஆறு மாத காலத்தில் வத்திக்கான் Reichskonkordat என்ற உடன்படிக்கையில் கையெழுத்திட்டது; இன்றளவும் அது நடைமுறையில் உள்ளது.

ராட்சிங்கருடைய உரையில், தான் ஒரு பேராசிரியராக இன்னும் இல்லை என்பதை மறந்துவிட்ட நபருக்கும் உலகப்பற்று அற்ற மதவாதியின் அறிவார்ந்த ஊகங்கள் என்பதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இது வேண்டுமேன்றே தூண்டிவிடுவதற்கு தயாரிக்கப்பட்ட உரையாகும்.

தனித்துக் காணக்கூடிய, சிந்தித்துக் கூறப்பட்டுள்ள அரசியல் முன்னோக்கு ஒன்றை இது இழைத்துக் கொண்டுள்ளது; திருச்சபையை "மேலை கிறிஸ்துவ நாகரிகத்தின்" உள் அணியின் மீதான சிந்தனைக் கோட்டையாக நிறுவுதலை நோக்கமாக கொண்டுள்ளது. அனைத்து தாராளவாத, முன்னேற்ற சக்திகளுக்கு எதிராக இயங்க வேண்டும், தாதுப் பொருட்கள் கொழிக்கும் இஸ்லாமிய நாடுகளின் வளங்கள் அபகரிக்க வேண்டும், கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரவேண்டும் என்பதில் ஆர்வம் காட்டும் ஒரு ஏகாதிபத்திய சிலுவைப்போருக்கு கருத்தியல் முனையாக இருக்க வேண்டும் என்ற கருத்தை உடையது.

இஸ்லாம் பற்றிய அணுகுமுறையை பொறுத்த வரையில், இவருக்கு முன்பு இருந்த இரண்டாம் ஜோன் போல் கையாண்டிருந்த வழிவகையில் இருந்து போப் பெனிடிக்ட் மாறுபட்டுள்ளார்; அவரும் கடின பிற்போக்காளர்தான்; ஆனால் பல மதங்களுக்கும் இடையே உரையாடலை ஊக்குவித்தார்.

பதவிக்கு வந்து சிறிது காலத்திலேயே, ராட்சிங்கர் ஆர்ச்பிஷப் மைக்கேல் பிட்ஸ்கெரால்டை பதவியில் இருந்து அகற்றினார்; அவர்தான் ஏளைய மதங்களுடன் உறவுகளை வளர்க்க பொறுப்புக் கொண்டு இருந்ததோடு வத்திக்கானில் இஸ்லாம் பற்றிய வல்லுனராகவும் ஒப்புக் கொள்ளப்பட்டு இருந்தார். இதன் பின்னர் ரட்சிங்கர் பல வர்ணனைகள், கருத்துக்களை வெளியிட்டு, அவற்றில் இஸ்லாமைத் தாக்கியிருந்தார். கடந்த ஆண்டு இப்பொழுது மடிந்து விட்ட இத்தாலிய செய்தியாளர் ஓரியானா பலாக்கிக்கு ஒரு பேட்டி கொடுத்தார்; அவ்வம்மையார் இஸ்லாமிய நம்பிக்கை, சமூகத்திற்கு எதிரான தன்னுடைய வெறித்தனமான கருத்துக்களால் பெயர் பெற்றிருந்தவர் ஆவார்.

ராட்சிங்கரின் தூண்டுதல் ஐரோப்பிய சக்திகள் மத்திய கிழக்கில் தங்களுடைய தொடர்பை அதிகமாக்கிக் கொண்டிருக்கும் நேரத்தில் வந்துள்ளது; அவருடைய உரைக்கு ஐரோப்பிய செய்தி ஊடகம் மற்றும் முக்கிய அரசியல் வாதிகளின் பரந்த ஆதரவு கிடைத்துள்ளது.

இத்தாலியின் முன்னாள் பிரதம மந்திரி சில்வியோ பெர்லுஸ்கோனி இந்த உரையை "ஒரு சரியான தூண்டுதல்" என்று குறிப்பிட்டுள்ளார். ஜேர்மனியின் அதிபரான அங்கேலா மேர்க்கல் ஐரோப்பிய அரசியலமைப்பில் கடவுளுக்கு தக்க ஒப்புதல் இருப்பதற்கான பிரச்சாரத்தைத் தான் மேற்கொள்ள இருப்பதாக போப்பிடம் கூறியுள்ளார்.

போப்பின் உரை பற்றி முக்கிய துருக்கிய அரசியல் வாதிகள் குறைகூறியதை அடுத்து, பவேரிய கிறிஸ்துவ சமூக ஒன்றியம் ஐரோப்பிய ஒன்றியம் துருக்கியுடன் உறுப்புநாட்டு அந்தஸ்து பற்றிய பேச்சுவார்த்தைகளை முறித்துக் கொள்ள வேண்டும் என்று கோரியுள்ளது.

இறுதியாக, ஜேர்மனியின் உள்துறை மந்திரி வொல்ப்காங் ஷெளப்லே போப்பின் முன்னுதாரணத்தை பின்பற்றி தன்னுடைய சொந்த தூண்டுதலை துவங்கியுள்ளார்; ஜேர்மனிய மொழிதான் மசூதிகளில் பிரத்தியேகமாக பயன்படுத்த வேண்டும் என்று அழைப்பு விடுத்து, கத்தோலிக்க திருச்சபை கூட தன்னுடைய பிரார்த்தனைகளை இலத்தினில் நடத்துவதில்லை என்றும் வாதிட்டுள்ளார்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved