World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :ஆசியா : பாகிஸ்தான்

US envoy lauds Pakistani dictator's "democratic vision"

பாக்கிஸ்தானிய சர்வாதிகாரியின் "ஜனநாயகப் பார்வையை" அமெரிக்க தூதர் பாராட்டுகிறார்

By Keith Jones
19 November 2007

Back to screen version

அமெரிக்க வெளியுறவு துணை அமைச்சரான ஜோன் நெக்ரோபான்ட், கடந்த இரு வாரங்களாக மெய்நடப்பில் இராணுவச் சட்டத்தின்கீழ் உள்ள பாக்கிஸ்தானில், ஞாயிறன்று செய்தியாளர் கூட்டத்துடன் மூன்று நாள் விஜயத்தைமுடித்துக் கொண்டார். அதில் தளபதி பர்வேஸ் முஷாரஃப் மற்றும் அவருடைய இராணுவ ஆட்சிக்கு புஷ் நிர்வாகத்தின் வலுவான ஆதரவை அவர் வலியுறுத்திக் கூறினார்.

"ஜனாதிபதி முஷாரஃப்பின் தலைமையின் கீழ் இருக்கும் பாக்கிஸ்தான் அரசாங்கத்துடன் நாங்கள் கொண்டுள்ள பங்காளித்தனத்தை பெரிதும் மதிக்கிறோம்" என்று அமெரிக்க வெளியுறவுத்துறையில் இரண்டாம் உயரிடத்தில் இருக்கும் நெக்ரோபான்ட் அறிவித்தார்.

பாக்கிஸ்தானிய மக்களின் மிக அடிப்படையான ஜனநாயக உரிமைகளுக்கு விரோதப் போக்கையும், இகழ்வையும் படுமோசமாகக் காட்டும் வகையில், சர்வாதிகாரியின் "நிதானமான, வளம் தரும், ஜனநாயகப் பாக்கிஸ்தான் பற்றிய பார்வைக்கு" ஒப்புதலை தன்னுடைய முகவுரையாக பெரிதும் புகழ்ந்து கொடுத்தார்.

"அந்தப் பார்வையை நோக்கி முன்னேறும் வகையில் முஷாரஃப்பின் தலைமையில் பாக்கிஸ்தான் பெரும் முன்னேற்றத்தை அடைந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளில் பாக்கிஸ்தானிய மக்கள் விரிவாக்கப்பட்ட, சுதந்திரமான செய்தி ஊடகத்தையும், முன்னென்றுமிருந்திராத வகையில் பொருளாதார வளர்ச்சியையும் கொண்டுள்ளனர்; மேலும் பால் அடிப்படையிலான சட்டங்களும் கல்வித்திட்டங்களும் நிதானப்படுத்தப்பட்டுள்ளன. தீவிரவாதத்திற்கு எதிராக உரத்த குரலை ஜனாதிபதி முஷாரஃப் கொடுத்துள்ளார், தொடர்ந்து கொடுத்தும் வருகிறார்."

கடந்த வாரம் அமெரிக்க மற்றும் மேலைச் செய்தி ஊடகங்கள் அனைத்தும் இஸ்லாமாபாத்திற்கு நெக்ரோபான்ட் வரவிருப்பது பற்றிப் பெரிதும் பேசின; நவம்பர் 3ல் அவசரகால நிலையை அறிவித்ததில் இருந்து முஷாரஃப் ஆயிரக்கணக்கானவர்களை சிறையில் அடைத்துள்ளார், நீதித்துறையில் வேண்டாதவர்களை அகற்றியுள்ளார், தடையற்ற பேச்சுரிமை, கூடும் உரிமை, செல்லும் உரிமை ஆகியவற்றை நிறுத்திவைத்துள்ளார், மற்றும் இராணுவ நீதிமன்றங்கள் அரசாங்கத்தை எதிர்ப்பவர்களை விசாரிக்கலாம் என்று செயல்படுத்தியுள்ளார். இவருக்கு நெக்ரோபான்ட் கலவர தடுப்புச் சட்டத்தை வாசித்துக் காட்டப்போவதாக மேலை ஊடகங்கள் கூறின.

உண்மையில் நெக்ரோபான்ட்டின் செய்தி மாநாட்டில் காட்டப்பட்டபடி, அவருடைய வருகை முஷாரஃப் ஆட்சியைக் காப்பாற்றும் நோக்கத்தைக் கொண்டிருந்தது; எல்லாவற்றிற்கும் மேலாக அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கும் பாக்கிஸ்தானிய இராணுவத்திற்குமிடையே பல தசாப்தங்களாக நீடித்துள்ள பங்காளித்தனத்தை காப்பாற்றுவதையும் கருத்தில் கொண்டிருந்தது.

இஸ்லாமாபாத்திற்கு அமெரிக்க அரசாங்கத்தின் அந்தரங்கத் தூதுவராக நெக்ரோபான்ட்டை நியமித்ததின் முக்கியத்துவம் முஷாரஃப் மற்றும் பாக்கிஸ்தானிய இராணுவத்திற்கு புலனாகாமல் போகவில்லை. புஷ் நிர்வாகக் காலத்திலேயே இவர் இரு கொள்ளைமுறைப் போர்களை நடத்தியுள்ளார்; அமெரிக்க மக்களின் ஜனநாயக உரிமைகள்மீது கடுமையான தாக்குதல்களை நடத்தியுள்ளார்; பகிரங்கமாக சித்தரவதைக்கு ஆதரவையும் கொடுத்துள்ளார் (வேறு பெயரை அவர் அதற்குக் கொடுத்திருந்தாலும்.) நெக்ரோபான்ட் குறிப்பிடத்தக்க வகையில் குருதிதோய்ந்த, விரும்பத்தகாத அரசியல் வரலாற்றைத்தான் கொண்டுள்ளார். 1980களில் ஹோன்டுராசிற்கு அமெரிக்க தூதர் என்ற முறையில், நெக்ரோபான்ட் இடது சாரிகளுக்கு எதிராக அந்நாட்டு அரசாங்கம் நடத்திய மிருகத்தனமான அடக்குமுறைக்குப் போலி நியாயங்களைக் கற்பித்தார்; மேலும் நிகரகுவாவின் சாண்டிநிஸ்டா அரசாங்கத்திற்கு எதிராக கான்ட்ரா போரையும் ஒழுங்கமைக்கவும் உதவினார். ஈராக் போருக்கு முன்பு ஐ.நா.வில் அமெரிக்க தூதராக செயல்பட்டார்; பின்னர் ஜூன் 2004ல் இருந்து ஏப்ரல் 2005 வரை ஈராக்கில் அமெரிக்கத் தூதராகவும் பதவியில் இருந்தார்.

ஞாயிறன்று தன்னுடைய செய்தியாளருக்கு கொடுத்த அறிக்கையில், நெக்ரோபான்ட் முஷாரஃப்பை குறைகூறல் என்ற வகையில் இரு பந்திகள் மட்டுமே கூறியுள்ளார்; அதிலும் சமீபத்தில் திணிக்கப்பட்டுள்ள இராணுவ சட்டத்திற்கும் முஷாரஃப்பின் எஞ்சிய கால ஆட்சிக்கும் இடையில் முற்றிலும் போலித்தனமான வேறுபாடுகளைத்தான் கூறியுள்ளார். 1999ல் ஆட்சிக்கவிழ்ப்பில் பிறந்த முஷாரஃப்பின் ஆட்சி கடந்த எட்டு ஆண்டுகளாக எதிர்ப்பை மிருகத்தனமாக ஒடுக்கிவருவதுடன், போலித்தனமாக பல தேர்தல்களையும் நடத்தியுள்ளது; அதே நேரத்தில் பொருளாதாரப் பாதுகாப்பின்மையையும், சமூக சமத்துவமின்மையையும் பெரிதாய் அதிகரித்துள்ள புதிய தாராளப் பொருளாதார கொள்கைகளையும் பின்பற்றிவருகின்றது.

வெளிவிவகாரத்துறை அதிகாரிகள், முஷாரஃப், நாட்டு நெருக்கடியை ஜனவரி முற்பகுதியில் நடக்கவிருக்கும் தேசிய மற்றும் மாநில சட்டமன்றத் தேர்தல்களுக்கு முன்னதாக அகற்றிவிட வேண்டும் என்று நெக்ரோபான்ட் கோருவார் என்று தெரிவித்திருந்தனர். ஆனால் நெருக்கடியை பற்றி எந்த காலவரம்பை நிர்ணயிக்கவும் ஒரு சமீபத்திய செய்தியாளர் பேட்டியில் தளபதி மறுத்துள்ளார்; அத்துடன், அவருடைய உதவியாளர்கள் கூற்றின்படி நெக்ரோபான்டுடன் நடத்தப்பட்ட இரண்டு மணி நேர உரையாடலிலும் அதனை மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. மாறாக பயங்கரவாத அச்சுறுத்துல் உள்ளது என்ற போர்வையில் "தடையற்ற தேர்தல்களை" நடத்துவதற்கு ஓரே வழி அரசியலமைப்பிற்கு முரணான ஆட்சியைத் தொடர்தல் என்றும் அரசியல் கூட்டங்கள், அணிகள் ஆகியவற்றின்மீது தடை இருக்கும் என்றும் அரசாங்கத்தைக் குறைகூறினால் மக்கள் சிறையிலடைக்கப்படலாம், தேசத் துரோகக் குற்றத்திற்குக் கூட உட்படுத்தப்படலாம் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

ஞாயிறன்று செய்தி ஊடகத்தில் தன்னுடைய தொடக்க உரையில் நெக்ரோபான்ட் "ஒரு சுதந்திரமான, தடையற்ற, நம்பகத்தன்மை உடைய தேர்தலுக்கு அவசரகால ஆட்சி இயைந்துபோக முடியாது" என்பதை ஒப்புக் கொண்டார். ஆனால் பின்னர் அந்த அறிக்கையை கூட மாற்றும் வகையில் ஒரு செய்தியாளரின் கேள்விக்கு விடையிறுக்க்கும் வகையில், அரசாங்கம் அவசரகால சட்டத்தை நீக்கி எதிர்க்கட்சித் தலைவர்களை விடுவிக்காவிட்டால் "அது அரசாங்கத்தின் திருப்திகரமான தேர்தல்களை நடத்தும் திறனைக் குறைமதிப்பிற்கு உட்படுத்திவிடும்" என்று ஒப்புக் கொண்டார்.

பூட்டோவை நெக்ரோபான்ட் எள்ளி நகையாடுகிறார்

நெக்ரோபான்ட் இன் வருகைக்கு சற்று முன்னதாக, பாக்கிஸ்தானின் இராணுவ ஆட்சி பாக்கிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவரும், முன்னாள் பாக்கிஸ்தான் பிரதம மந்திரியுமான பெனாசீர் பூட்டோவையும் முன்னாள் ஐ.நா. அதிகாரியும் நாட்டின் தன்னாட்சி பெற்றுள்ள மனித உரிமைகள் குழுவின் தலைவருமான அஸ்மா ஜஹாங்கீரையும் வீட்டுக் காவலில் இருந்து விடுவித்தது. பல தனியார் தொலைக்காட்சிகள் தங்கள் ஒளிபரப்பை தொடர அனுமதித்தது; ஆனால் அவை மிகக் கடுமையான சட்டத்திற்கு உட்படுவதாக ஒப்புக் கொண்ட பின்னரே இது கொடுக்கப்பட்டது; மேலும் வெளிப்படையாக அரசாங்கத்தை குறைகூறும் அமைப்புக்கள் இராணுவ அபராதங்கள், சிறைத் தண்டனைக்கு தயாராக இருக்க வேண்டும் என்றும் அச்சுறுத்தியுள்ளது.

மற்றவிதத்தில், அடக்குமுறை வார இறுதி முழுவதும் குறையாமல் தொடர்ந்தது; போலீசார் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை தடியடிப் பிரயோகம், ஏராளமானவர்களை கைது செய்தல் என்ற விதத்தில் எதிர்கொண்டனர். அதைத்தான் முஷாரஃப் உறுதியாக செயல்படுத்த இருப்பதாகக் கூறியிருந்தார். "நாட்டுச் சட்டத்தை மீறும் எவரும் சிறையில் அடைக்கப்படுவர், தடைக்கு உட்படுத்தப்படுவர்" என்று வெள்ளியன்று அவர் அறிவித்தார். "ஆர்ப்பாட்ட உணர்வில் எவரும் இருக்க நாங்கள் விரும்பவில்லை; நெக்ரோபான்டிடம் அதை நான் தெரிவிப்பேன்..."

இஸ்லாமாபாத்தின் அழுத்தத்தில் செயல்பட்ட துபாய் அரசாங்கம் GEO TV, ARY தொலைக்காட்சிகளை ஒளிபரப்பக் கூடாது என்று கட்டாயப்படுத்தியது; இந்த இரு தொலைக்காட்சி அமைப்புக்களும்தான் நெருக்கடிக்கு முன்பு வளைகுடா நாடுகளில் இருக்கும் பாக்கிஸ்தானில் இருந்து புலம்பெயர்ந்திருக்கும் ஏராளமான பார்வையாளர்களுக்கு கேபிள் தொலைக்காட்சி மூலம் நெருக்கடிக்கு முன்னரான நிகழ்வுகளை ஒளிபரப்பியிருந்தன.

வெள்ளியன்று நெக்ரோபான்ட், பூட்டோவிடம் தொலைபேசி மூலம் பேசினார்; ஆனால் முஷாரஃப்புடன் சேருமாறு இவர் விடுத்த முறையீட்டை அவ்வம்மையார் நிராகரித்த அளவில் அவரைப் பார்க்கவும் மறுத்துவிட்டார். வேறு எந்த எதிர்க்கட்சித் தலைவர்களையும் நெக்ரோபான்ட் சந்திக்கவில்லை; இதுவும் அந்நாட்டு அரசாங்கத்திற்கு வாஷிங்டனின் ஆதரவை நிரூபிக்கும் வகையில் இருந்தது.

கடந்த ஆறு மாதங்களில் புஷ் நிர்வாகம் பூட்டோவிற்கும் முஷாரஃப்பிற்கும் இடேயே நல்லுறவைக் கொண்டுவருவதற்கு நிறைய நேரம், சக்தி ஆகியவற்றைச் செலவிட்டுள்ளது. அரசியல் அதிகாரத்தில் குறிப்பிடத்தக்க பங்கு, அரசாங்கப் புரவலர் தன்மை இணையத்தில் ஒரு கட்டுப்பாட்டு இவற்றிற்கு ஈடாக PPP பெருகிய முறையில் தனிமைப்படுத்தப்பட்ட, இகழ்வுற்ற இராணுவ ஆட்சிக்கு ஒரு ஜனநாயக மூடிமறைப்பைக் கொடுக்கும் என்பது அதன் நம்பிக்கையாகும்.

தன்னுடைய பங்கிற்கு பூட்டோ பகிரங்கமாக இப்பங்கைச் செய்தார்; பல முறையும் தான் அரசாங்கத்தில் இருந்தால் இன்னும் கூடுதலான வகையில் அமெரிக்க விருப்பங்களுக்கு தற்போதைய அரசாங்கத்தைவிட ஒத்துழைப்பதாகவும் கூறினார். உதாரணமாக அமெரிக்கப் படைகள் வெளிப்படையாக பாக்கிஸ்தானின் ஆப்கானிய எல்லைப் பகுதிகளில் இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள தான் அனுமதிக்கத் தயார் என்று கூறினார்.

முஷாரஃப் இராணுவச் சட்டத்தை சுமத்திய பின்னர் பூட்டோ புஷ் நிர்வாகத்தின் கொள்கை அறிக்கைகளுக்கு ஒத்து ஊதியதுடன், அரசாங்கத்துடன் திரைக்குப் பின்னர் ஒப்பந்தங்களையும் செய்துகொண்டார். ஆனால் கடந்த வாரம், இரு முறை வீட்டுக்காவலில் அவர் வைக்கப்பட்டபின்னர், அரசாங்கம் ஆயிரக்கணக்கான PPP உறுப்பினர்களைக் கைது செய்தபின்னர், பூட்டோ தான் முஷாரஃப் ஜனாதிபதியாக இருக்கும் அரசாங்கத்தில் பணியாற்றத் தயாராக இல்லை என்ற அறிவிப்பை வெளியிடுமாறு கட்டாயத்திற்கு ஆளானார்; அமெரிக்க அரசாங்கம் தளபதி "வெளியேற்றப்படுவதற்கு" உதவ வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

முஷாரஃப் மற்றும் இராணுவத்துடன் பூட்டோ பேச்சு வார்த்தைகளை மறுபடியும் புதுப்பிக்குமாறு வற்புறுத்தும் முயற்சியில், வியாழனன்று லாகூரில் இருக்கும் அமெரிக்க தூதரக ஜெனரல் Bryan Hunt அப்பொழுது வீட்டுக் காவலில் இருந்த பூட்டோவை சந்தித்தார். Associated Press உடைய கருத்தின்படி, அவ்வம்மையார் "அது மிகக் கடினமாக செயல்" என்று தெரிவித்து விட்டார். முஷாரஃப்புடனும், தொடர்ச்சியாக பாக்கிஸ்தானில் இராணுவ சர்வாதிகாரங்களுக்கு ஆதரவைக் கொடுக்கும், மற்றும் ஆப்கானிஸ்தான், ஈராக் ஆகியவற்றை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் அமெரிக்காவுடனும் அவர் பேரம் பேசத் தயாராக இருப்பதன் காரணமாக, உள்ளவாறே, பூட்டோ தன்னுடைய செல்வாக்கு மற்றும் ஆதரவில் பெரும் சரிவைச் சந்தித்துள்ளார்.

தன்னுடைய பங்கிற்கு முஷாரஃப், பூட்டோ பற்றி பெருகிய முறையில் இகழ்ந்து பேசி வருகிறார். வெள்ளியன்று வாஷிங்டன் போஸ்ட்டுக்கு கொடுத்த பேட்டி ஒன்றில் அவர் அவ்வம்மையார் பெரிதும் "மோதல் தன்மையை" மேற்கொண்டுவிட்டதால் அவருடன் பேச்சுக்கு இடமில்லை என்றும், தன்னுடைய ஆட்சிக்கு அவ்வம்மையார் விடுக்கும் சவாலை அடக்கிவிடப்போவதாகவும் உறுதி கூறினார். Dawn உடைய கருத்தின்படி, இதே தகவலைத்தான் அவர் நெக்ரோபான்டை சந்தித்த போதும் தெரிவித்தார்.

ஞாயிறன்று கூறிய கருத்துக்களில் நெக்ரோபான்ட் தான் "அரசியலில் நிதானப் போக்கு உடையவர்கள் சமரசம் காண்பதற்கு ஊக்கம் கொடுத்ததாகத்" தெரிவித்தார்--அதாவது வாஷிங்டன் வழிவகையில் "முஷாரஃப்பும் பூட்டோவும் "மிக ஆக்கபூர்வமான முன்னேற்றப்பாதையை கடைப்பிடிக்க வேண்டும்." ஆனால் PPP தலைவரை இவர் பார்க்கத் தோல்வி அடைந்துள்ள நிலையிலும், முஷாரஃப்பிற்கு கொடுத்துள்ள உயர் பாராட்டையும் கருதும்போது, "அனைத்துத் தரப்பினரும் பேச்சு வார்த்தைகளை மேற்கொள்ள வேணடும், விளிம்பில் நிற்றல், மோதல் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும்" என்று கூறுவது முக்கியமாக பூட்டோவிற்கு கூறப்படுவதே அன்றி இராணுவச் சட்டத்தை சுமத்தி அதையொட்டி எழுந்துள்ள அடக்கு முறைக்குத் தலைமை தாங்கும் தளபதிக்கு அல்ல.

முஷாரஃப் இராணுவச் சட்டத்தை சுமத்தியதில் இருந்து, புஷ் நிர்வாக அதிகாரிகள் இஸ்லாமாபாத்தில் அவர்களுடைய செல்வாக்கிற்கு தீவிர வரம்புகள் இருப்பதாகவும் அவர்கள் செய்யக் கூடியது பாக்கிஸ்தான் இராணுவம் ஜனநாயகத்தை நோக்கித் திரும்ப வேண்டும் என வாதிடுவதுதான் என்று கூறிவருகின்றனர். இத்தகைய கூற்றுக்கள் நகைப்பிற்கு இடமானவை. இஸ்லாமாபாத்தின்மீது அமெரிக்கா அழுத்தம் கொடுக்க விரும்பினால், அதுவும் மற்ற மேலை சக்திகளும் பாக்கிஸ்தான் அரசாங்கத்தின்மீது செலுத்தக்கூடிய பரந்த பொருளாதார, அரசியல் அழுத்தங்களை கொண்ட கருவிகள் ஏராளமாக உள்ளன. பல தசாப்தங்கள் மிக நெருக்கமான பங்காளித்தனத்தை பென்டகனுடன் கொண்ட வரலாற்றை பாக்கிஸ்தான் இராணுவம் கொண்டுள்ளது. மேலும் கடந்த ஆறு ஆண்டுகளில் பாக்கிஸ்தானுக்கு அளிக்கப்பட்டதாக வாஷிங்டன் ஒப்புக் கொண்டுள்ள !0 பில்லியன் டாலர்கள் உதவித் தொகையில் பெரும்பகுதியை இதுதான் விழுங்கியது.

அமெரிக்காவின் மிக முக்கியான மூலோபாய நலன்கள் ஆபத்திற்கு உட்பட்டு இருக்கையில், புஷ் நிர்வாகம் முஷாரஃப் மற்றும் பாக்கிஸ்தானிய இராணுவத்தை அச்றுறுத்துவது பற்றி மன உளைச்சலை கொண்டிருக்கவில்லை. தன்னுடைய சுயசரிதையில் முஷாரஃப், நெக்ரோபான்ட்டுக்கு முன்பு துணை வெளிவிவகார அமைச்சராக இருந்த ரிச்சார்ட் ஆர்மிடேஜ் செப்டம்பர் 2001ல் தாலிபான் ஆட்சியுடன் பாக்கிஸ்தான் உறவை முறித்துக் கொள்ளாவிட்டால், மற்றும் ஆப்கானிஸ்தானத்தின் மீதான அமெரிக்க படையெடுப்பிற்கு முறையான வசதிகள் அனைத்தையும் தராவிட்டால், அமெரிக்கா குண்டுவீச்சுக்கள் நடத்தி அந்நாட்டை கடந்தகாலத்திற்கு தள்ளிவிடும் என்று கூறியதாக எழுதியுள்ளார்.

உண்மை என்னவென்றால், புஷ் நிர்வாகமும் அமெரிக்க நடைமுறை முழுவதும், முஷாரஃப்பின் ஆட்சிக்கு எதிரான மக்கள் போராட்டம் ஒரு சமூக எழுச்சியை ஏற்படுத்திவிடக் கூடும் என்ற நிலை பற்றி பீதி அடைந்துள்ளன; அது இராணுவத்திலும் பிளவுகளை ஏற்படுத்தக்கூடும்; அதையொட்டி இயக்கம் PPP மற்றும் பிற மரபார்ந்த முதலாளித்துவக் கட்சிகளின் அரசியல் கட்டுப்பாட்டையும் மீறிவிடக்கூடும் என்ற பீதியும் உள்ளது.

மிகக் குறைந்தபட்சமாக அத்தகைய வளர்ச்சி ஆப்கானிஸ்தானில் அமெரிக்க போரைத் தீவிரமாக தடைக்கு உட்படுத்தும்; ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகள் பயன்படுத்தும் எண்ணெய், பிற பொருட்களின் அளிப்புக்களில் கிட்டத்தட்ட பாதிக்கு மேல் பாக்கிஸ்தான் மூலம்தான் பெறப்படுகின்றன; அதேபோல்தான் ஈரானுக்கு எதிரான அமெரிக்கத் திட்டங்களிலும் பாக்கிஸ்தானின் பங்கு உள்ளது.

எனவேதான், புஷ் நிர்வாகத்தின் அமெரிக்க விவகாரங்கள் குளறுபடி பற்றிச் சில முணுமுணுப்புக்கள் இருந்த போதிலும் ஜனநாயகக் கட்சியினரும் முஷாரஃப் மற்றும் பாக்கிஸ்தானிய இராணுவத்திற்கு பின்னே உள்ளனர்.

ஆயினும், புஷ் நிர்வாகம் ஒருவேளை முஷாரஃப்பிற்கு எதிரான மக்கள் எதிர்ப்பு அதிகமாகும் பட்சத்தில், மற்ற விருப்பங்களையும் பரிசீலித்து வருகிறது; அதாவது அவருக்குப் பதிலாக அரசியலில் மிகவும் மனதிற்குகந்த தளபதியை பதவியில் இருந்துவது என்பதாகும். செய்தி ஊடகங்களின் கருத்தின்படி நெக்ரோபான்ட் தளபதி Ashfaq Kiyani ஐ மூன்று நாட்களில் மூன்று முறை சந்தித்தார்; இவரை முஷாரஃப் தனக்குப் பிறகு வரக்கூடிய தலைமைத் தளபதி என்று பெயர்குறித்துள்ளார். இதைப் பற்றி எழுதுகையில், வாஷிங்டன் போஸ்ட், "நெக்ரோபான்ட் கியானியைச் சந்தித்தது அமெரிக்க நாட்டின் உறுதியைக் காக்கக்கூடிய மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான அதன் போராட்டத்தில் பங்காளியாக இருக்கும் திறன் உடைய சாத்தியமுடைய மற்ற தலைவர்களுடனும் ஊடாடுவதின் அடையாளம் ஆகும் என்று பகுப்பாய்வாளர்கள் கூறியுள்ளனர்" என்று தெரிவித்துள்ளது.

எதுவந்தாலும், வாஷிங்டன் பாக்கிஸ்தானிய மக்களின் ஜனநாயக மற்றும் சமூக அபிலாஷைகளை தகர்ப்பது என்ற உறுதிப்பாட்டைக் கொண்டுள்ளது.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved