World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Resolution adopted by the ISSE/SEP Emergency Conference Against War

End the occupation of Iraq! No to war against Iran! For an international socialist movement against war!

ISSE/SEP போருக்கு எதிரான அவசரக் கூட்டத்தில் ஏற்கப்பட்ட தீர்மானம்

ஈராக் ஆக்கிரமிப்பை நிறுத்துக! ஈரானுக்கு எதிரான போர் வேண்டாம்! போருக்கு எதிராக ஒரு சர்வதேச சோசலிச இயக்கத்திற்காக!

4 April 2007

Back to screen version

சமூக சமத்துவத்திற்கான சர்வதேச மாணவர்கள்/சோசலிச சமத்துவ கட்சியின் போருக்கு எதிரான அவசரக் கூட்டம் மார்ச் 31-ஏப்ரல் 1ம் தேதி மிச்சிகன் அன் ஆர்பரில் நிகழ்ந்தபோது கீழ்க்கண்ட தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. போருக்கு எதிராக புதுப்பிக்கப்பட்ட போராட்டத்திற்கு தேவையான அரசியல் அஸ்திவாரத்தின் மீதான இம்மாநாட்டில் எடுக்கப்பட்ட நிலைப்பாட்டை இது பிரதிநிதித்துவம் செய்கிறது.

1. ISSE/SEP ஆகியவற்றின் போருக்கு எதிரான அவசர மாநாடு, ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் நடக்கும் போர்களுக்கும் ஈரானுக்கு எதிரான இராணுவத் தாக்குதல்கள் அச்சுறுத்தல்களுக்கும் எதிரான போராட்டத்தை தீவிரப்படுத்துமாறு உலகெங்கிலும் இருக்கும் மாணவர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு அழைப்பு விடுகிறது.

2. மார்ச் 20, 2000ல் ஈராக்கின் மீதான சட்டவிரோத படையெடுப்பு ஆரம்பிக்கப்பட்ட நான்கு ஆண்டுகளுக்கு பின்னர் இம்மாநாடு நடைபெறுகிறது. ஈராக்கிய மக்களை பொறுத்தவரையில், இந்த நான்கு ஆண்டுகளும் இடையறா இறப்பு மற்றும் அழிவு என்னும் நீண்ட தீயகனாவாக இருந்து வருகின்றன. Johns Hopkins University நடத்தி பிரிட்டிஷ் மருத்துவ இதழான Lancelet வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கையின்படி, ஜூன் 2006ல் இருந்து கிட்டத்தட்ட 655,000 ஈராக்கியர்கள் படையெடுப்பு, ஆக்கிரமிப்பு ஆகியவற்றின் விளைவாக கொல்லப்பட்டுள்ளனர். இதையும்விட பலர் காயமுற்றுள்ளனர்; ஒரு முழு சமுதாயமே பேரழிவிற்கு உட்படுத்தப்பட்டுள்ளது. 3,400 அமெரிக்கர்களுக்கும் மேலானவர்கள் மடிந்துள்ளனர்; கிட்டத்தட்ட 25,000 துருப்புகள் காயமுற்றுள்ளனர்.

3. ஈராக்கிற்கு எதிரான போர் ஓர் ஏகாதிபத்தியப் போர் ஆகும். அமெரிக்காவில் உள்ள பெரு வணிக, பெருநிதிக் குழுக்களின் நலன்களுக்காகவும் பிரிட்டன் மற்றும் பிற நாடுகளில் உள்ள அவற்றின் அவற்றின் நட்பு நிறுவனங்களுக்காகவும் ஆரம்பிக்கப்பட்ட ஆக்கிரமிப்பு செயலாகும். இருபதாம் நூற்றாண்டின் உலகப் போர்கள் போலவே, இப்பொழுது நடைபெறுவதும் உலகின் ஆதாரங்கள் மறு பங்கீடு செய்து கொள்ளுவதுதான் நடக்கிறது; இதற்காக அமெரிக்க ஆளும் வர்க்கம் முக்கிய மூலோபாய பகுதிகளில் இராணுவ கட்டுப்பாட்டை உறுதிப்படுத்த முற்பட்டுள்ளது. அதிகரித்த அளவில் உற்பத்தியின் பூகோள ஒருங்கிணைவானது முதலாளித்துவ அமைப்பு வரலாற்று ரீதியாக வேரூன்றி உள்ள காலாவதியாகிவிட்ட தேசிய அரசின் வடிவமைப்பின் மட்டுப்பாடுகளை உடைக்கிறது; இந்த முரண்பாடு ஒரு மிகச்சிறிய ஆளும் வர்க்கம் பெருகிய முறையில் உற்பத்திச்சாதனங்களை தனியார் உடமையாகக் கொண்டிருப்பதற்கும் நூற்றுக்கணக்கான மில்லியன் தொழிலாளர்கள் சம்பந்தம் கொண்டுள்ள உற்பத்தி நிகழ்ச்சிப்போக்கின் சமூக தன்மைக்கும் இடையே உள்ள அடிப்படை மோதலை உக்கிரப்படுத்தியுள்ளது.

4. முதலாளித்துவ அமைப்பு தூக்கி எறியப்படாவிட்டால், ஏகாதிபத்திய போரின் முதலாவது இலக்காகவோ, கடைசி இலக்காகவோ ஈராக் இருக்காது. 21ம் நூற்றாண்டு இன்னும் ஒரு தசாப்தத்தை கூட கடக்கவில்லை; ஆனால் ஏற்கனவே தொழிலாள வர்க்கத்தின் தலையீடு இல்லாவிட்டால் கடந்த நூற்றாண்டின் குருதி தோய்ந்த துன்பங்கள் மீண்டும் ஏற்படும் என்பதோடு, அவை மிகப் பெரிதாகவும் இருக்கும் என்பதுதான் மிகத் தெளிவாகியுள்ளது. கடந்த இரு தசாப்தங்களில், முதல் ஈராக் படையெடுப்பில் இருந்து, சோமாலியா, சேர்பியாவிற்கு எதிரான போர்கள் மற்றும் ஆப்கானிஸ்தானிலும் ஈராக்கிலும் காலனித்துவ வகையிலான படையெடுப்புக்கள் மற்றும் ஆக்கிரமிப்புக்கள் வரையிலான அமெரிக்க இராணுவவாதத்தின் தொடர்ந்த விரிவாக்கத்திற்கு உட்பட்டு வருகிறது.

5. 2003 பெப்ருவரி மாதம் உலகெங்கிலும் மில்லியன் கணக்கான மக்கள் அமெரிக்காவின் போர் திட்டங்களுக்கு எதிராக தெருக்களுக்கு வந்து ஆர்ப்பரித்தனர். நான்கு ஆண்டுகள் கடந்த பின்னரும் கூட, மக்களுடைய எதிர்ப்பு தீவிரமாகியும்கூட போர் நீடிக்கிறது. ஒரு சோசலிச வேலை திட்டத்தின் அடிப்படையில் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஒன்றுபட்ட அரசியல் இயக்கத்தினூடாகத்தான் போர் முடிவுக்கு கொண்டுவரப்பட முடியும். உலகின் உற்பத்தி ஆதார வளங்கள் உலக மக்களுடைய ஜனநாயக கட்டுப்பாட்டின்கீழ் கட்டாயம் வைக்கப்பட வேண்டும்; அப்பொழுதுதான் இந்த ஆதார வளங்கள் தனியார் சொத்துக் குவிப்புக்கள் பெருநிறுவன இலாபம் என்பதை காட்டிலும் அழுத்தும் சமூகத் தேவைகளை பூர்த்தி செய்ய பயன்படுத்த முடியும்.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பூகோள மூலோபாயமும் ஈராக்கும்

6. ஈராக் அல் கொய்தாவுடன் கொண்டிருந்ததாக கூறப்பட்ட தொடர்புகள், அதனிடம் இருந்ததாக கூறப்பட்ட பேரழிவு ஆயுதங்கள் என்று போரை நியாயப்படுத்த கூறப்பட்ட காரணங்கள் பொய்கள் என்று ஏற்கனவே அம்பலப்படுத்தப்பட்டு விட்டன. இப்பொய்களை முன்வைத்த புஷ் நிர்வாகத்தில் உள்ளவர்கள், மற்ற அரசாங்கங்களில் இவர்களுக்கு உடந்தையாக இருந்தவர்கள், செய்தி ஊடகத்திலும், ஜனநாயகக் கட்சியிலும் உடந்தையாக இருந்தவர்கள், போர்க் குற்றங்கள் புரிந்தவர்கள் ஆவர். தங்கள் கரங்களை கறையாக்கிக் கொண்டிருக்கும் இரத்தத்தையும் அவர்கள் ஒருபோதும் கழுவிவிட முடியாது.

7. அமெரிக்க அரசியல் நடைமுறைக்குள் ஒருமித்த கோரிக்கையாக வந்துள்ள ஈராக்கிய அரசாங்கம் தன்னுடைய எண்ணெய் வளத்தை சர்வதேச நிறுவனங்களிடம் ஒப்படைக்க வேண்டும் எனப்படுவது போரின் கொள்ளை தன்மையை மிகத் தெளிவாக அம்பலப்படுத்தியுள்ளது. ஆனால் இப்போரை தொடக்கியதில், அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் நோக்கம் ஈராக்கிய எண்ணெய் வயல்களை கைப்பற்றி இராணுவ வலிமையூடாக மத்திய கிழக்கில் தன்னுடைய ஆதிக்கத்தை நிலைநாட்டுவது மட்டும் இல்லாமல் பெருகிய முறையில் தன்னுடைய செல்வாக்கை மற்ற பெரிய ஏகாதிபத்திய போட்டியாளர்களைவிட அதிகரிக்க வேண்டும், தன்னுடைய சரிந்து கொண்டிருக்கும் பொருளாதார சக்திக்கு ஈடு செய்ய வேண்டும் என்பது ஆகும்.

8. 2003 ஈராக்கிய படையெடுப்பு ஈராக்கிலும் மத்திய கிழக்கு முழுவதும் அமெரிக்காவின் நீடித்த சூழ்ச்சிகளில் ஒரு புதிய கட்டத்தை பிரதிநிதித்துவம் செய்தது. இக்கொள்கை பெருகிய முறையில் நேரடி இராணுவத் தலையீடு மற்றும் புதிய காலனித்துவமுறை என்ற வடிவமைப்பை கொண்டு 1991 வளைகுடாப் போர், ஐ.நா. மற்றும் கிளின்டன் நிர்வாகத்தின் மேற்பார்வையில் நடைபெற்ற 12 ஆண்டு கால கொடூர பொருளாதார தடைகள், இறுதியாக 2003 ஈராக் போர் என்று உச்சக் கட்டத்தை அடைந்தது;

9. இப்பகுதிகளில் நேரடி அமெரிக்க இராணுவ ஆதிக்கத்தை செலுத்தும் நடவடிக்கை அமெரிக்க பொருளாதார மேலாதிக்கத்தின் அரிப்பில் வேர்களை கொண்டுள்ளது. அமெரிக்க முதலாளித்துவ அமைப்பு ஒரு நலிவுற்ற, உறுதியற்ற மகத்தான மூலதன வரவின் அடிப்படைகளை நம்பியுள்ளது; மேலும் முன்னோடியில்லாத மட்டங்களில் கடன்கள் மற்றும் பலவகையான நிதிய ஊகங்கள், மற்றும் சூழ்ச்சி கையாளல்கள் ஆகியவற்றில் தங்கியுள்ளது. அமெரிக்காவில் உள்ள ஊழல் நிறைந்த ஆளும் உயரடுக்கு பெருகிய முறையில் தன்னுடைய முக்கிய சொத்தை --உலகத்தில் மற்ற நாடுகள் அனைத்தும் இராணுவ செலவிற்கு ஒதுக்கி வைக்கும் தொகையைவிட அதிகமான இராணுவ செலவீனத்தினால் நிலைநிறுத்தப்பட்டுள்ள படைகளை-- தன்னுடைய சரிந்து கொண்டிருக்கும் பொருளாதார சக்தியை தடுத்து நிறுத்தப் பயன்படுத்த விரும்புகிறது.

10. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நலன்கள் மத்திய கிழக்கு, மத்திய ஆசியாவுடன் நின்றுவிடவில்லை; தெற்கு மற்றும் மத்திய அமெரிக்கா, ஆபிரிக்கா, ஆசியா, ஐரோப்பா உள்ளடங்கலாக உலகில் ஒவ்வொரு மூலைமுடுக்கிலும் படர்ந்துள்ளது.

11.முதல், இரண்டாம் உலகப் போர்களின் இரத்தம் தோய்ந்த நாட்களுக்கு பின்னர் கண்டிராத மிகப் பெரிய அளவிலான வன்முறை வெடிப்பின் அச்சுறுத்தலை மனிதகுலம் எதிர் கொண்டுள்ளது. அமெரிக்காவின் பூகோளந்தழுவிய விழைவுகள் இருபதாம் நூற்றாண்டின் முதல் பகுதியில் ஏகாதிபத்திய ஜேர்மனி சமாதானத்திற்கு தோற்றுவித்த ஆபத்தைவிட குறைவானவை அல்ல. போரின் அடிப்படை காரணம் அமெரிக்க ஆளும் வர்க்கத்திடம் மட்டும் காண்பதற்கில்லை; பிற்போக்குத்தனமான முதலாளித்துவ தேசிய-அரசு முறையில் இருந்து தவிர்க்க முடியாமல் வெளிப்படும் புவி-அரசியல் மற்றும் பொருளாதார அழுத்தங்களிலும் உள்ளது. தன்னுடைய புவி-அரசியல் நலன்கள் விரிவாக்க தன்மையில் அமெரிக்கா மட்டும் தனித்திருக்கவில்லை. அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா, ரஷ்யா மற்ற ஐரோப்பிய சக்திகள் உட்பட பல முதலாளித்துவ சக்திகளுக்கு இடையே ஆதார வளங்களுக்கான போட்டி ஏகாதிபத்தியங்களுக்கு இடையேயான விரோதங்களையும் உயர்த்தியுள்ளது. வரலாற்றளவில் ஒடுக்கப்பட்ட நாடுகளின் ஆளும் வர்க்கங்கள், சீனா, இந்திய உட்பட, இன்னும் கூடுதலான உலக ஆதிக்க நிலைக்கு முயல்கின்றன; இன்னும் சில சிறு சக்திகள்கூட தங்கள் பிராந்திய நலன்கள், விழைவுகள் ஆகியவற்வறை மேம்படுத்த விரும்புகின்றன. இவை அனைத்தும் ஒன்று சேர்ந்து ஒரு பூகோள எரியூட்டும் தன்மை என்ற ஆபத்தை தீவிரப்படுத்தியுள்ளன. ஒரு புதிய உலகப் போர் என்ற அச்சத்திற்கு சர்வதேச தொழிலாள வர்க்கம் உலகந்தழுவிய முறையில் ஒன்றுபட்டுத்தான் விடையை காணமுடியும்; அத்தகைய ஒற்றுமைக்கு ஒரு ஜனநாயக முறையிலான, சமத்துவ உலக சோசலிச சமுதாயம் நிறுவப்படும் திசையில் அது இயக்கப்பட வேண்டும்.

போரும் சமூக சமத்துவமின்மையும்

13. கடந்த மூன்று தசாப்தங்களாக சர்வதேச சமூக உறவுகளில் மேலாதிக்க போக்கு சமூக சமத்துவமின்மை பெருக்கமும், மக்கட்தொகையில் ஒரு மிகச் சிறிய தட்டின் கையில் செல்வக்குவிப்பு ஏற்பட்டுள்ளதும் ஆகும். அமெரிக்காவில் இருப்பது போல் வேறு எங்கு இந்நிலை அதிக அளவிற்கு இல்லை.

14. இராணுவவாதம் தவிர்க்க முடியாமல் இரு விதங்களில் சமுக சமத்துவமின்மையுடன் பிணைந்துள்ளது: 1) தொழிலாளர்களின் முதுகுகளில் சுமைகளை ஏற்றி தன்னை செல்வக் கொழிப்பு உடையதாக செய்து கொண்ட அதே ஆளும் வர்க்கத்தின் சமூக நலன்களின் வெளிப்பாடுதான் போர் ஆகும்; மற்றும், 2) சமூக அழுத்தங்கள் அதிகரிக்கையில், ஆளும் வர்க்கம் உட்பூசல்களை அடக்கவும் அவற்றை வெளியே திசைதிருப்பும் முயற்சியிலும் போரை பயன்படுத்துகிறது.

14. வருமான வரித்துறை தகவல்களின்படி, 1928 பெரு மந்த நிலைக்கு பின்னர் மிக அதிக அளவில், சமூக சமத்துவமின்மை அமெரிக்காவில் நிலவுகிறது. அமெரிக்க மக்கள் தொகையின் உயர்மட்ட 1 சதவிகிதத்தில் பத்தில் ஒரு பகுதியினர் (300,000 தனிநபர்கள்) மிக வறிய 150 மில்லியன் அமெரிக்கர்களின் மொத்த வருமானத்தைவிட கூடுதலான வருமானத்தை கொண்டுள்ளனர். 1970 களில் இருந்து பெரும்பாலான மக்களுடைய வருமானம் தேக்கம் அடைந்துள்ளது அல்லது சரிந்துள்ளது; அதே நேரத்தில் உயர்மட்ட 1 சதவிகிதத்தின் வருமானம் தீவிரமாகப் பெருகியுள்ளது. வருமான வளர்ச்சியின் மிகப் பெரிய அளவுகள் மக்கட்தொகையில் ஒரு சதவிகிதத்தில் நூற்றில் ஒரு பங்கிடத்தில் குவிந்துள்ளது.

15. சர்வதேச அளவில், உலகின் மக்கட்தொகையில் செல்வம் கொழித்த 1 சதவிகித்தினர் அடிமட்ட 10 சதவிகிதத்தினரின் வருமானத்திற்கு சமமான வருமானத்தை கொண்டுள்ளனர். தனிப்பட்ட மிகச் செல்வம் உடைய மூவர் மிக வறிய 600 மில்லியன் மக்களைவிடக் கூடுதலான சொத்துக்களை கொண்டுள்ளனர். உலகில் உள்ள 946 பில்லியனர்களின் மொத்த சொத்துக்கள் 2006ல் 35 சதவிகிதம் அதிகம் அடைந்தன--அதாவது ஆப்பிரிக்க கண்டம் முழுவதின் மொத்த உள்நாட்டு உற்பத்தியைவிட $1 டிரில்லியன் அதிகமாக இது உள்ளது.

16. சமத்துவமற்ற தன்மையின் வளர்ச்சி முந்தைய தசாப்தங்களில் தொழிலாளர்கள் பெற்றிருந்த ஆதாயங்கள் முறையாக தாக்கப்பட்டுள்ளதுடன் தொடர்பு கொண்டதாகும். அமெரிக்கா, கனடா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா மற்றும் பிற முதலாளித்துவ சக்திகளின் சமூகநலத் திட்டங்கள் அகற்றப்பட்டு வருகின்றன. குறைந்த வளர்ச்சியுடைய பகுதிகளில் தேசிய சீர்திருத்தங்கள், சுரண்டலுக்கு எதிரான பாதுகாப்புக்கள் ஆகியவை சர்வதேச மூலதனத்திற்கு எதிராக இருந்தவை, அகற்றப்பட்டு வருகின்றன.

17. ஏகாதிபத்திய போர்களை வெளியே தொடுக்கையில், அமெரிக்க ஆளும் உயரடுக்கு பீரங்கிற்கு இரையாக்கும் தொழிலாளர்களையும் இளைஞர்களையும் முழு இழிவுணர்வுடன் நடத்துகிறது. "எமது படைகளுக்கு ஆதரவு" என்று கூறப்படும் மந்திரத்தில் இருக்கும் முழுப் பாசாங்குத்தனம் காயமுற்ற அமெரிக்க துருப்புக்கள், முன்னாள் துருப்புகளுக்கு போதுமான அளவு மருத்து வசதி, ஆதரவு ஆகியவை இல்லாமல் இருப்பதில் இருந்தே நன்கு வெளியாகியுள்ளது. ஈராக்கில் இராணுவ ஆக்கிரமிப்பை ஒட்டி அதற்கு ஏற்பட்டுள்ள சோர்வும் வலுவின்மையும் ஆளும் வர்க்க நடைமுறையின் சில பிரிவுகளை அமெரிக்கப் போர் இயந்திரத்திற்கு புதிய துருப்புக்கள் தேவைக்காக கட்டாய இராணுவ சேவை அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்று கூற வைத்துள்ளது. ஏகாதிபத்தியத்தின் போர் சுரம் பெருகிய முறையில் அனைத்து ஏகாதிபத்திய நாடுகள் அனைத்திலும் மிகப் பெரிய அளவில் தொழிலாளர்கள், இளைஞர்கள் ஆகியோரை பேரழிவுதரும் இறப்பு எண்ணிக்கைக்கு உட்படுத்தும்.

18. தொழில்நுட்பத்தில் உலகம் அசாதாரண வளர்ச்சியை கண்டுள்ளது; ஆனால் அதே நேரத்தில் பில்லியன் கணக்கான மக்கள் வறுமையிலும், நோய்களிலும் வாடுகின்றனர். உலகின் மக்கட்தொகை சுற்றுச் சூழல் பிரச்சினைகள், பூகோளந்தழுவிய வெப்பமுறல் போன்றவற்றால் அச்சுறுத்தப்படுகிறது. இப்பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு ஆதாரங்கள் இருந்தாலும், அவை அனைத்துல் இலாபத்தை தொடருவதற்காக மற்றும் ஒரு சிறு ஊழல் குழு தனிச் சொத்தை குவிப்பதற்காக கொண்டுள்ள பைத்தியக்காரத்தனமான உந்துதல் இவற்றிற்கு கீழ்ப்படுத்தப்பட்டுள்ள சமூக முறையின் வடிவமைப்புக்கள் பொறிக்குள் அடங்கியது போல் அடங்கியுள்ளன.

19. போருக்கு எதிரான போராட்டம் அதன் அடித்தளத்தில் இருக்கும் அரசியல், சமூக நலன்களுக்கு எதிர்ப்பு என்பதில் இருந்து பிரிக்க முடியாதது ஆகும். போருக்கு எதிரான போராட்டத்தின் மையத்தில் சமூக சமத்துவம் மற்றும் வேலைகள், கெளரவமான ஊதியங்கள், தரமான வீடுகள், சுகாதார பாதுகாப்பு, அனைவருக்கும் கல்வி ஆகியவற்றை உறுதியளிக்கும் ஒரு சமூகத்தை நிறுவதல் ஆகியவற்றிற்காக போராடுதல் வேண்டும்.

போரும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதலும்

20. சமூக சமத்துவமின்மையும் இராணுவவாதமும் இறுதியில் ஜனநாயக ஆட்சி வடிவமைப்புக்களுடன் பொருந்தாதவை ஆகும். மிக அடிப்படையான ஜனநாயக உரிமைகள் மீதான மொத்த தாக்குதல், அமெரிக்க ஆளும் வர்க்கத்தால் நடத்தப்படுவது, அதன் இராணுவவாத கொள்கைகளுக்கு தவிர்க்க முடியாமல் ஏற்படும் எதிர்ப்பு, சமூகம் எதிர்கொள்ளும் வகை இவற்றில் விளைந்ததாகும்.

21. "பயங்கரவாதத்தின் மீதான போர்" என்று அழைக்கப்படுவது அமெரிக்க ஆளும் உயரடுக்கால் அனைத்தையும் பற்றுவதற்கு போலிக் காரணமாக உள்ளது; இது ஒரு மாபெரும் மோசடி ஆகும். செப்டம்பர் 11 தாக்குதல்கள் நடந்து ஐந்தரை ஆண்டுகளுக்கு பின்னர், அந்நிகழ்வுகள் பற்றி நம்பகத்தன்மையான விசாரணை மற்றும் அமெரிக்க அரசாங்கத்தின் குறிப்பிடத்தக்க வகையிலான உடந்தைக்கான சாட்சியம் பற்றிய விசாரணை ஏதும் இல்லை.

22. "பயங்கரவாதத்தின் மீதான போரின்" விளைவுகளில் முதலாவதாக இருந்தது அடிப்படை ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல் ஆகும்; அமெரிக்க தேசபக்த சட்டம் இயற்றியதில் இருந்து உள்நாட்டு ஒற்றுவேலையில் மிகப் பெரிய விரிவாக்கம், மற்றும் உள்நாட்டு பாதுகாப்புத்துறை நிறுவப்படுதல், இரகசிய CIA காவல் நிலையங்கள் அமைக்கப்பட்டது, குவாண்டனாமோ குடாவில் இழிவுடைய சிறை நிறுவப்பட்டது ஆகியவை இதில் அடங்கும். அமெரிக்க அரசாங்கம் அமெரிக்க குடிமக்கள் உட்பட எவரையும் கைது செய்யும் தன் உரிமையை அறிவித்துள்ளது; ஜோஸ் பாடில்லா கைது விவகாரத்தில் இது தெரியவரும்; மேலும் எவ்வித குற்றச் சாட்டுக்கள் இல்லாமல், அவர்களை சித்திரவதை செய்யும் உரிமையை கொண்டுள்ளதாகவும் அறிவித்துள்ளது; இவை அனைத்தும் "பயங்கரவாதத்தின் மீதான போர்" என்ற பெயரில் நடத்தப்படுகின்றன. 2006 கடைசியில் சட்டமன்றம் இரு கட்சிகளுடைய ஆதரவுடனும் இராணுவ நீதிமன்றக் குழுக்களை நியமித்து அவற்றிற்கு சித்திரவதை மூலம் பெறப்பட்ட சான்றுகள் அளிக்கப்டாலம் என்று கூறிய சட்டத்தை நிறைவேற்றியது; மேலும் குவாண்டனாமோ குடாவில் இருக்கும் கைதிகளுக்கு ஆட்கொணர்வுச் சட்டம் மறுக்கப்பட்டது.

23. இத்தகைய சர்வாதிகார ஆட்சிவகையிலான நடவடிக்கைகள் அமெரிக்காவில் நடப்பது, உலகெங்கிலும் இருக்கும் மக்களுக்கும் பெரிய அச்சுறுத்தலை கொடுத்துள்ளது. அமெரிக்க ஆளும் உயரடுக்கின் நலன்களுக்கு சவால் விடுபவர்கள், எதிர்ப்பவர்கள் எவருக்கு எதிராகவும் இவை பயன்படுத்தப்படலாம்.

24. ஈராக் போரே அமெரிக்க ஜனநாயகத்தின் தோல்வி என்பதின் பேரழிவு வெளிப்பாடு ஆகும். அமெரிக்காவிலும், உலகம் முழுவதும் இருக்கும் மக்களுடைய எதிர்ப்பிற்கு இடையே பொய்களின் அடிப்படையில் இது தொடக்கப்பட்டது. நவம்பர் 2006 இடைத் தேர்தல்களில், அமெரிக்க மக்கள் போரை நிறுத்துவதற்கு வாக்களித்தனர்; மாறாக இன்னும் கூடுதலான இராணுவச் செயற்பாடுதான் கொடுக்கப்பட்டுள்ளது.

25. ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல் என்பது ஒரு சர்வதேச நிகழ்வாகிவிட்டது. ஆஸ்திரேலியாவில் "பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம்", ஜேர்மனியில் "வான்வழி பாதுகாப்பு சட்டம்", பிரிட்டனில் "பயங்கரவாத சட்டம்", இலங்கையில் "பயங்கரவாதத் தடுப்புச் சட்டம்" இவை அனைத்தும், இன்னும் உலகின் பல நாடுகளிலும் வந்துள்ள சட்டங்கள் மக்களுடைய ஜனநாயக உரிமைகளை தாக்குவதற்காக இயற்றப்பட்டவை ஆகும்.

26. மக்களுடைய அடிப்படை உரிமைகள் இந்த வெவ்வேறு நாடுகளிலும் ஆளும் உயரடுக்கினரால் தங்களுடைய செல்வாக்கற்ற கொள்கைகளை தொடர்வதை தடுக்கும் தடைகளாக கருதப்படுகின்றன. ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதலுக்கு எதிர்ப்பு, முதலாளித்துவ அமைப்புக்கு எதிர்ப்பு என்ற அடிப்படையில் வெளிவரவேண்டும். இந்த உரிமைகளின் பாதுகாப்பு சமூக, பொருளாதார வாழ்வையும் அணைத்து நிற்கும் ஜனநாயகக் கட்டுப்பாடு உடைய ஜனநாயகத்தின் விரிவாக்கமாக இருக்க வேண்டும் --அதாவது, சர்வதேச சோசலிசம் நிறுவப்படுதல் என்ற விதத்தில் இருக்க வேண்டும்.

சர்வதேசியம்

27. இக்கொள்கைகளை எதிர்த்து போருக்கு முடிவுகட்டக் கூடிய சக்தி ஒன்று உள்ளது - அதுதான் சர்வதேச தொழிலாள வர்க்கம், உலகின் மக்கட்தொகுப்பின் பெரும்பான்மையினராகும். ஏகாதிபத்தியத்தின் அடித்தளத்தில் இருக்கும் சமூக நலன்களுடன் தவிர்க்க முடியாத வகையில் சமரசத்திற்கு இடமில்லாத வகையில் எதிர்க்கும் ஒரே தொகுப்பாக இருப்பது மக்கட்தொகையின் முக்கிய பிரிவாகிய தொழிலாள வர்க்கம் ஒன்றுதான். அது ஒன்றுதான் உண்மையான சர்வதேச வர்க்கம்; அதன் சமூக நலன்கள் போட்டியிடும் தேசிய அரசுகளின் முதலாளித்துவ அமைப்பின் வரம்புகளுக்கு அப்பால் உள்ளன.

28. இராணுவவாத வளர்ச்சியில் குற்றம் உடையது அமெரிக்க ஏகாதிபத்தியம் மட்டும் அல்ல. பல நாடுகளில் இருக்கும் ஆளும் உயரடுக்கினர் இராணுவ வலிமை மூலம் தங்களுடைய நலன்களை தொடர முற்பட்டுள்ளனர். அனைத்து முக்கிய முதலாளித்துவ நாடுகளும் ஈராக் படையெடுப்பிற்கு ஆதரவு கொடுத்துள்ளன அல்லது உதவியுள்ளன. இவற்றில் இருந்து அமெரிக்க கொள்கைக்கு எதிர்ப்பு ஏற்பட்டது என்றால், மத்திய கிழக்கு உட்பட தங்களுடைய நலன்களும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதுதான் காரணம் ஆகும்.

29. பொருளாதாரத்தில் அதிக வளர்ச்சி இல்லாத ஈரான், சீனா, இந்தியா போன்ற நாடுகளில் ஆளும் உயரடுக்கினர் தங்கள் சொந்த நலன்கள், விழைவுகளை, தொழிலாள வர்க்கத்தின் நலன்களுக்கு முற்றிலும் விரோதமான வகையில் கொண்டுள்ளனர்; ஏகாதிபத்தியத்திற்கு எதிராக அவை கொள்கையளவில் எதிர்ப்பு ஏதும் கொண்டிருக்கவில்லை. போருக்கு எதிர்ப்புக்கள் என்பது இந்நாடுகளில் அரசாங்கத்திற்கு அல்லது அரசாங்கங்கள் பிரதிநிதித்துவம் செய்யும் முதலாளித்துவ நலன்களுக்கு எதிர்ப்பு என்பதை உட்குறிப்பாக கூட கொண்டிருக்கவில்லை. ஏகாதிபத்தியத்தின் தோல்வி என்பது அணுவாயுதங்கள் அல்லது பிற ஆயுதங்களை இந்த அரசுகள் பெறுவதால் ஏற்பட்டுவிடாது; சர்வதேச தொழிலாளர்களை ஒரு சோசலிச வேலைத் திட்டத்தின் அடிப்படையில் அணிதிரட்டுவதின் மூலம்தான் முடியும்.

31. சர்வதேச அளவில் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளின் வேராக பொருளாதார பூகோளமயமாக்கல் மற்றும் முதலாளித்துவ தேசிய-அரசு அமைப்புக்கு இடையிலான அதிகரித்துவரும் மோதல் ஆகும். முதலாளித்துவ அரசுகள் மற்றும் தன்னலக் குழுக்களுக்கு இடையே நடக்கும் போட்டி இன்னும் கூடுதலான வகையில் தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கை தரத்தின் மீது கூடுதலான தாக்குதலுக்கு எரியூட்டும்; மற்றும் உலகின் இயற்கை ஆதாரவளங்களை கட்டுப்படுத்துவதற்கு போட்டியை அதிகரிக்கும். தொழிலாள வர்க்கத்தால் இவை நிறுத்தப்படவில்லை என்றால், இந்த விரோத போக்குகள் இறுதியில் பேரழிவுகரமான விளைவுகளை தரக்கூடிய உலகெங்கும் படரும் மோதல்களுக்கு வழிவகுக்கும்.

31. பூகோளந்தழுவிய உற்பத்தி சக்திகளை, காலம் கடந்துவிட்ட தேசிய-அரசு முறையின் வரம்பிற்குள் நிலைநிறுத்த முற்படுவது பிற்போக்குதனமானது, மற்றும் கற்பனாவாதமானது ஆகும். ஏகாதிபத்தியத்தின் பூகோளந்தழுவிய மூலோபாயம் தொழிலாள வர்க்கத்தின் பூகோளந்தழுவிய மூலோபாயத்தால், தேசியவாதத்தின் அனைத்து வடிவங்களுக்கும் எதிராக எதிர்கொள்ளப்பட வேண்டும்.

தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனமும் சோசலிசத்திற்கான போராட்டமும்

32. இவ் வேலைத்திட்டத்திற்காக போராடுகையில், மக்களுடைய எதிர்ப்பை ஏதேனும் ஒருவிதத்தில் அரசியல் நடைமுறை என்ற பாதுகாப்பான வழிவகைகளில் திருப்புவதற்கு முயலும் கட்சிகள் மற்றும் போக்குகள் ஆகியவற்றுடனான மோதலில் தொழிலாளர்களும் இளைஞர்களும் சர்வதேச அளவில் தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்திற்கான போராட்டத்தை தளமாக கட்டாயம் கொள்ள வேண்டும்.

33. இதன் அர்த்தம் ஜனநாயகக் கட்சியுடன் முற்றிலும் முறித்துக் கொள்ள வேண்டும், ஜனநாயகக் கட்சி மீது அழுத்தம் கொடுக்கலாம் என்று கருதுபவர்களோடும் முறித்துக் கொள்ள வேண்டும். படையெடுப்பிற்கு தயாரிப்பில் இருந்து, அண்மையில் போர் விரிவாக்கம் வரை, அமெரிக்காவில் ஜனநாயகக் கட்சி புஷ் நிர்வாகத்திற்கு உடந்தை என்ற பங்கைத்தான் கொண்டுள்ளது. ஜனநாயக கட்சி ஒரு ஏகாதிபத்திய முதலாளித்துவ கட்சியாகும்; அமெரிக்காவை போருக்கு இட்டுச் சென்ற நீண்டகால வரலாறு அதற்கு உண்டு -- அதில் முதல் உலகப் போர், இரண்டாம் உலகப்போர், கொரிய போர், வியட்நாம் போர் ஆகியவை அடங்கும். இன்று கட்சியின் தலைமையின் அனைத்து பிரிவுகளும், வெளிப்படையான பிற்போக்கு வாதிகளில் இருந்து தவறாக கூறப்படும் "ஈராக்கில் இருந்து வெளியேறு எனக் கூறும் குழு" வரை, போர் நீடித்திருப்பதற்கு பொறுப்பு கொண்டுள்ளனர். ஜனநாயகக் கட்சியின் முக்கிய அக்கறை தன்னுடைய பொது நிலைப்பாட்டை தக்க விதத்தில் இருத்தி இரு கட்சி முறையில் இருந்து விடுவித்துக் கொள்ள வேண்டும் எனக் கூறும் எந்த இயக்கத்தின் வளர்ச்சியையும், சமூக எதிர்ப்பையும் அகற்ற வேண்டும், தகர்க்க வேண்டும் என்பதேயாகும்.

34. ஜனநாயகக் கட்சியினர் சட்ட மன்றத்தில் கேலித்தனமாகவும் பாசாங்குதனமாகவும் காட்டிக் கொள்ளும் விதத்தை தொழிலாளர்கள் நிராகரிக்க வேண்டும்; கட்டுப்படுத்தாத தீர்மானங்களை இயற்றுதல், தொலைத் தேதியில் ஒரு கெடு நிர்ணயித்தல், "போர் எதிர்ப்பு" எனக் கூறப்படும் தீர்மானங்களை இயற்றுதல், உண்மையில் போர் பெருக்கத்திற்கு பில்லியன் கணக்கான டாலர்களை அளித்தல், கட்சித் தலைமையே போருக்கு அனுப்பிய பின், அது அமெரிக்க துருப்புக்கள் நிலை பற்றி முதலைக் கண்ணீர் வடித்தல், ஆகியவையும் தொழிலாளர்களால் நிராகரிக்கப்பட வேண்டும். ஆக்கிரமிப்பு தொடர்வதை அனுமதிக்கும் "போர் எதிர்ப்பு" கொள்கையை ஜனநாயகக் கட்சியினர் விரும்புகின்றனர்; அதே நேரத்தில் வருங்கால போர்கள், தலையீடுகள் ஆகியவற்றிற்காக படை வலிமையை பெருக்கவும் விரும்புகின்றனர். ஜனநாயக் கட்சியினர் மற்றும் குடியரசுக் கட்சியினர் ஆகியோருக்கு இடையே வேறுபாடுகள், இரு கட்சிகளுக்கும் இடையே என்று இருக்குமானால், அவை -- அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நலன்களை எத்தகைய சிறந்த விதத்தில் தொடரலாம்? என்ற தந்திரோபாயங்கள் பற்றியதுதான்.

35. இதேபோன்ற அரசியல் பிரசினைகள்தான் ஒவ்வொரு நாட்டிலும் இருக்கும் தொழிலாளர்களை எதிர்கொண்டுள்ளன. கனடாவில் இருக்கும் லிபரல் கட்சி, புதிய ஜனநாயகக் கட்சி, பிரிட்டனில் உள்ள தொழிற் கட்சி, ஆஸ்திரேலியாவின் தொழிற் கட்சி, பிரான்சிலும் ஸ்பெயினிலும் இருக்கும் சோசலிஸ்ட் கட்சிகள், ஜேர்மனியில் இருக்கும் சமூக ஜனநாயகக் கட்சி அனைத்துமே "இடது" அமைப்புக்கள் என்றாலும் அவை வலதுசாரி, இராணுவக் கொள்கைகளுக்கு ஊக்கம் அளித்துள்ளன அல்லது நேரடியாக செயல்படுத்தியுள்ளன. பெரும்பாலான மக்களுடைய நலன்களுக்கு உகந்த அரசியல் கருத்துக்களுக்கு அவை வெளிப்பாடு கொடுப்பதே இல்லை.

36. போருக்கு எதிரான இயக்கம் என்பது உலகம் முழுவதும் வெவ்வேறு நாடுகளில் இருக்கும் அத்தகைய போக்குகளுக்கு எதிர்ப்பு என்ற அடிப்படையில் இருக்க வேண்டும் -- பசுமைக் கட்சி முதல் போர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடத்திய அமைப்புக்கள் வரை, பெயரளவிற்கு சோசலிஸ்ட் அல்லது கம்யூனிஸ்ட் போக்குகள் உடையவை எனக் கூறிக் கொள்ளும் பிரான்சின் Ligue Communiste Revolutionarie இல் இருந்து இத்தாலியில் உள்ள Communist Refoundation வரை; இவை அனைத்தும் அரசியல் நடைமுறைக்கு முண்டு கொடுக்கும் தூண்களாகத்தான் உள்ளன. இப்போக்குகள் தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான அரசியல் அணிதிரளலை தடுக்கின்றன; முதலாளித்துவ அரசாங்கங்களுக்கு எதிரான எதிர்ப்பை திசை திருப்புகின்றன அல்லது வெனிசூூலாவின் ஹ்யூகோ சாவேஸ் போன்ற முதலாளித்துவ தேசியவாதிகளின் புரட்சிகர நற்சான்று என்று கூறப்படுபவைகளை வரவேற்கின்றன. ஆளும் வர்க்கத்திற்கும் அதன் பிரதிநிதிகளுக்கும் அழுத்தம் கொடுக்கும் முயற்சிகளை அடிப்படையாக கொண்ட போலி "ஒற்றுமை" க்கு வாதிடுபவர்கள் அனைவரையும் எதிர்ப்பதற்கு அது அவசியமானது.

37. சர்வதேச அளவில் வளாகங்களிலும் பள்ளிகளிலும், சோசலிசத்திற்கான போராட்டம் வளாகங்களில் ஆதிக்கம் செலுத்தும் பின்நவீனத்துவம் மற்றும் அடையாள அரசியல் இவற்றின் திவாலான முன்னோக்குகள் உள்ளடங்கலான கருத்தியற்போக்கு, அரசியல் போக்குகளுக்கு எதிரான எதிர்ப்பை கட்டாயம் அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும். மாணவர்கள் அரசியல் நடைமுறைக்கு அழுத்தம் கொடுப்பதை நோக்கமாகக் கொண்டிருக்கும் எதிர்ப்பு அரசியலின் பயனற்ற தன்மையை விளக்கிக் காட்டுகின்றன. மாணவ இளைஞர்கள் மத்தியில் ஒரு சோசலிச இயக்கத்திற்கான போராட்டமானது, போர் ஆபத்து, இராணுக் கட்டாய சேவை, கல்விக் கட்டண உயர்வு, மாணவர்கள் கடன்களின் வெடிப்பு, தரமான வேலைகள் இன்மை ஆகியவை உள்ளடங்கலாக மாணவர்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள், பூகோள முதலாளித்துவத்தின் நெருக்கடியில் இருந்து பிரிக்கப்பட முடியாது என்பதை உணர்வதுடன் கட்டாயம் ஆரம்பிக்கப்பட வேண்டும். இன்று பெருகிய தொழிலாளர் விகிதத்தினர் பள்ளிகள், கல்லூரிகளில் பயில்கின்றனர், பெருகிய மாணவர் விகிதம் வேலைக்கும் செல்கிறது. மாணவர்களின் இயக்கம் தொழிலாளர் வர்க்கம் ஒட்டு மொத்தத்தின் ஒரு சோசலிச அரசியல் இயக்கத்திற்காக கட்டாயம் போராட வேண்டும்.

38. தொழிலாள வர்க்கத்திற்கான அரசியல் சுயாதீனத்திற்கான போராட்டத்திற்கு புரட்சிகர சர்வதேச சோசலிசத்தின் வரலாற்றை - மார்க்ஸ், எங்கெல்சில் இருந்து ரஷ்ய புரட்சி, ஸ்ராலினிசத்திற்கும் திருத்தல்வாதத்திற்கும் எதிராக இன்று நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவினால் பிரதிநிதித்துவம் செய்யப்படும் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் போராட்டம்வரை - நனவாக உள்வாங்குவது தேவைப்படுகிறது.

39. போர் மற்றும் முதலாளித்துவ அமைப்புக்கு எதிரான போராட்டத்தை தலைமை தாங்கி நடத்த சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்லகக் குழுவை கட்டியமைக்க வேண்டும், அத்துடன் அதன் மாணவர் பிரிவான சமூக சமத்துவத்திற்கான சர்வதேச மாணவர்கள் அமைப்பையும் கட்டியமைக்க வேண்டும் என்று உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு இம்மாநாடு அழைப்பு விடுக்கிறது.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved