World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு : ஈராக்

ஜிலீமீ ஹிஷி ஷ்ணீக்ஷீ ணீஸீபீ ஷீநீநீuஜீணீtவீஷீஸீ ஷீயீ மிக்ஷீணீஹீtலீமீ னீuக்ஷீபீமீக்ஷீ ஷீயீ ணீ sஷீநீவீமீtஹ்

ஈராக் மீதான அமெரிக்க போரும் ஆக்கிரமிப்பும்: ஒரு சமூகத்தின் படுகொலை

பகுதி 1

By Bill Van Auken
19 May 2007

Back to screen version

இது ஒரு மூன்று-பகுதிகள் உடைய தொடரின் முதல் பகுதியாகும்.

ஈராக்கில் அமெரிக்க ஆக்கிரமிப்பால் எதிர்கொண்டுள்ள தோல்வியை தடுப்பதற்கான வேறுபட்ட திட்டங்கள் பற்றி உத்தியோகபூர்வ அரசியலும் செய்தி ஊடகமும் அமெரிக்காவில் கூடுதலான கவனத்தை காட்டி வரும் நேரத்தில், ஈராக்கிய சமூகத்திற்கு இழைக்கப்பட்டுள்ள வரலாற்று ரீதியான பேரழிவு பற்றி தீவிர அக்கறை சிறிதுங்கூட காட்டப்படவில்லை.

படையெடுப்பின்போது கொல்லப்பட்டவர்கள், பின்னர் ஆயுதமேந்திய வன்முறையை ஒட்டி இறந்தவர்கள் மற்றும் நோய், பட்டினி ஆகியவற்றால் இறந்த, குறிப்பாக இளவயதினர், முதியவரும் உள்ளடங்கிய அமெரிக்கப் போர் மற்றும் ஆக்கிரமிப்பின் விளைவாக இறந்துவிட்ட ஈராக்கியர் எண்ணிக்கை பற்றி உறுதியான தகவல்கள் கொடுக்கப்பட முடியாது என்றாலும், அதிக கவனம் செலுத்தப்பட்ட மதிப்பீடு ஒவ்வொன்றும் இறப்பு எண்ணிக்கை பல நூறு ஆயிரங்களில் இருந்து ஒரு மில்லியன் மனித உயிர்கள் வரை என மதிப்பிட்டுள்ளது.

முன்பு இப்பிராந்தியத்தில் முன்னேற்றமடைந்துள்ள நாடுகளில் ஒன்றாக இருந்த ஈராக், இப்பொழுது அடிப்படை பொருளாதார, சமூகக் குறியீட்டில் ஆபிரிக்க துணை சஹாரப் பகுதியில் உள்ள மிக வறிய நாடுகளின் தரத்திற்கு குறைக்கப்பட்டு விட்டது.

இதில் உள்ளடங்கியிருப்பது என்னவெனில் வன்முறை மற்றும் குற்ற நடவடிக்கைகள் மூலம் முழு சமுதாயத்தையும் திட்டமிட்டு அழிப்பதுதான். இது ஐரோப்பாவில் ஹிட்லருடைய படைகள் இரண்டாம் உலகப்போரில் நடந்திய நாட்களில் இருந்து காணாத ஒன்றாகும்.

இப்போரின் கடுமையான விளைவுகளில் இருந்து அமெரிக்க சமுதாயமே துன்பப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஈராக்கில் கொல்லப்பட்ட அமெரிக்க படையினரின் எண்ணிக்கை 3,400 ஐயும் விட அதிகமாகியுள்ளது; பாக்தாத்தின் மிக அதிக மக்கள் வாழும் பகுதிகளிலும், பெரும்பாலும் விரோதப் போக்குடைய பகுதிகளிலும் புஷ் நிர்வாகத்தின் "மேலதிக" படைகள் அனுப்பப்பட்டுள்ள நிலையில் இந்த இறப்பு எண்ணிக்கை இன்னும் அதிகமாக உயரும் என்பதை ஒவ்வொரு குறிப்புகளும் காட்டுகின்றது.

மற்றும் ஒரு 30,000 அமெரிக்க இராணுவப் படையினர் காயமுற்றுள்ளனர், பலரும் மிக மோசமான முறையில் காயமுற்றுள்ளனர். ஐயத்திற்கு இடமின்றி, இன்னும் நூறாயிரக்கணக்கான படையினர் ஒரு கறைபடிந்த காலனித்துவ போரில் பங்கு பெற்றதின் உளரீதியான விளைவுகளால் பாதிக்கப்படுவர்.

அமெரிக்க பொருளாதாரத்தில் போரின் அன்றாட இழப்பு $300 மில்லியன் என்று மதிப்பிடப்பட்டுள்ளது; மொத்த செலவினங்கள் $2 டிரில்லியனையும் விட அதிகமாக போகக்கூடும் என்ற கணிப்புக்கள் உள்ளன.

இந்த குற்றம்மிக்க போரினால் அமெரிக்க சமூகத்திற்கு ஏற்பட்டுள்ள அரசியல், சமுதாய மற்றும் ஒழுக்கநெறித் தன்மை போன்றவற்றின் மீதான தாக்கத்தினால் விளைந்துள்ள பாரிய இழப்பு இன்னும் அதிகமாகும். "பயங்கரவாதத்தின் மீதான போர்", "ஜனநாயகத்திற்கான போராட்டம்", ஈராக்கிய மக்களின் "விடுதலை" என்று கூறப்படும் களைப்படைந்த பிரச்சாரங்கள் அனைத்தும் ஒருபுறம் இருக்க, ஈராக்கிய போர் என்பது ஈராக்கின் எண்ணெய் வளத்தை அப்பட்டமாக கொள்ளையடித்து அதன் மூலம் தன்னுடைய உலக மேலாதிக்கத்தைத் தொடர்ந்து இன்னும் செல்வக் கொழிப்பை காணவேண்டும் என்னும் அமெரிக்க நிதிய உயரடுக்கின் தோல்வியுற்ற முயற்சியாகும்.

அமெரிக்க அரசியல் மற்றும் பெருநிறுவன கட்டமைப்பின் ஒவ்வொரு பிரிவும், அரசாங்கத்தின் அனைத்து கிளைகள், மட்டங்களும், இரு முக்கிய அரசியல் கட்சிகள் மற்றும் வெகுஜன செய்தி ஊடகம் அனைத்தும் இந்த பாரிய போர்க்குற்றங்களில் தொடர்புடையவை ஆகும். இத்தகைய மிகப்பெருமளவில் நடத்தப்பட்ட குற்றம் தண்டனை பெறாமல் மற்றும் அமெரிக்க மக்களின் எதிர்காலத்தின் மீதும், உண்மையின் அனைத்து மனிதகுலத்திற்கும் தீவிர தாக்கங்களை கொடுக்காமலும் போகமுடியாது.

மொத்தத்தில் எடுத்துக் கொண்டால், ஈராக்கில் அமெரிக்கச் செயற்பாடுகள் ஒரு சமூகக் கொலை எனப்படலாம் -- ஒரு முழு சமூகத்தையும் வேண்டுமேன்றே, திட்டமிட்டு கொல்லுதல் எனலாம்.

சமீபத்தில் வெளிவந்த தொடர்ச்சியான அறிக்கைகள் இப்பொழுது ஐந்தாம் ஆண்டில் இருக்கும் அமெரிக்க ஆக்கிரமிப்பால் கொண்டுவரப்பட்ட இறப்பு, அழிப்பு, ஒடுக்குமுறை இவற்றின் அளவை சுட்டிக்காட்டுகின்றன.

ஒரு ஆக்கிரமிப்பு இராணுவம் படுகொலை மற்றும் சித்திரவதையில் ஈடுபட்டுள்ளது

முதலில், அமெரிக்க ஆக்கிரமிப்பு ஈராக்கிய மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்துள்ள வன்முறையின் குறியீட்டை எடுத்துக்காட்டும் வகையில் இம்மாத தொடக்கத்தில் பென்டகன் வெளியிட்ட அறிக்கை அமெரிக்க ஆக்கிரமிப்புப் படைகளின் உளப்பாங்கின் தன்மையைப் பற்றி குறிப்பிட்டுள்ளது. இந்த ஆவணம் பெருகிவரும் மனச் சிதைவு, உளரீதியான, உணர்வுரீதியான அழிவுற்றதன்மை ஆகியவற்றால் பீடிக்கப்பட்டுள்ள ஓர் இராணுவத்தின் உறையவைக்கும் சித்திரத்தை கொடுத்துள்ளது; இதையொட்டி ஈராக்கிய சாதாரண மக்கள் மீது மனிதாபிமானமற்ற பொருட்படுத்தாத்தன்மை, இன்னும் சொல்லப்போனால் வெளிப்படையான வெறுப்பு இப்படையினால் காட்டப்படுகிறது.

இந்த ஆய்வு, ஈராக்கிய குடிமக்கள் "கெளரவத்துடனும், மரியாதையுடனும்" நடத்தப்பட வேண்டிய உரிமையுடையவர்கள் அல்ல என பெரும்பாலான அமெரிக்க படைகள் நம்புவதாகக் காட்டுகிறது; கிட்டத்தட்ட 10 சதவிகிதத்தினர் ஈராக்கியர்கள் மீது தேவையற்ற வன்முறையை செலுத்தியதாக, அடித்தல், சொத்துக்களை அழித்தல் என்ற வகையில் செய்திருப்பதாக ஒப்புக் கொண்டனர்.

அமெரிக்க தரைப்படை மற்றும் கடற்படையினரில் 14 சதவிகிதத்தினர் அவர்கள் "ஒரு எதிரிப்போராளியின்" மரணத்திற்குத் தாங்கள்தான் நேரடிப் பொறுப்பு என்று கூறியுள்ளது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும். கிட்டத்தட்ட 170,000 அமெரிக்கத் துருப்புக்கள் தற்பொழுது ஈராக்கில் இருக்கும் நிலையில் (2003ல் இருந்து 650,000 க்கும் மேற்பட்டவர்கள் அங்கு ஏதோ ஒரு காலகட்டத்தில் இருந்தனர்) இது எந்தளவிலான பாரிய இறப்பு எண்ணிக்கையை அமெரிக்கப் படைகள் நேரடியாக ஏற்படுத்தியிருக்கும் என்பதைக் குறிக்கிறது.

இத்துருப்புக்களில் பெரும்பாலனவர்கள் ஈராக்கில் இரண்டாம் அல்லது மூன்றாம் முறையாக கடமையில் ஈடுபட்டுள்ளனர்; கிடைத்திருக்கும் தகவல் ஒரு நபருக்கு மேல் கொல்லப்பட்ட சம்பவல்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை; அதேபோல் வான் தாக்குதல்கள் அல்லது பீரங்கித் தாக்குதல்கள் (கூடுதலான இறப்பை ஏற்படுத்துபவை) கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. அதேபோல் பல ஆயிரக்கணக்கான ஆயுதமேந்திய ஒப்பந்தக்கார கூலிப்படைகளால் கொல்லப்பட்ட ஈராக்கியர்களும் இந்தக் கணக்கில் வரவில்லை; அவர்கள் ஈராக்கிய சட்டத்திற்கோ இராணுவ நீதிமன்றத்திற்கோ விடையிறுக்கத் தேவையில்லை.

அந்நாட்டின்மீது சுமத்தப்பட்ட பரந்த இறப்புத்தரும் வன்முறை பற்றிய கூடுதலான குறிப்பு இந்த ஆண்டு ABC News, USA Today, BBC, ARD ஜேர்மன் தொலக்காட்சி ஆகியவை நடத்திய கணக்கெடுப்பின் மூலம் தெரியவருகிறது; அவை 53 சதவிகித ஈராக்கியர்கள் ஒரு நெருங்கிய நண்பர் அல்லது நெருங்கிய உறவினர் கொல்லப்பட்டதாக அல்லது காயமுற்றதாக தகவல் கொடுத்துள்ளனர்.

உயரும் இறப்பு எண்ணிக்கையுடன் காணாமற் போனவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகியுள்ளது; ஆர்ஜன்டினா, சிலி போன்ற நாடுகளில் சர்வாதிகாரத்தின் மோசமான ஆண்டுகளில் இச்சொல்லினால் அடையாளம் காட்டப்பட்ட கொடூரத்தைவிட இது பன்மடங்கு அதிகமாகும். ஈராக்கிய மனித உரிமைகள் அமைப்புக்கள் 15,000 அல்லது அதற்கும் அதிகமான ஈராக்கியர்கள் காணாமற்போய்விட்டதாக கூறுகின்றன; ஒவ்வொரு நாளும் 40ல் இருந்து 60 பேர் வரை காணாமற் போனவர் பட்டியலில் கூடுகின்றனர்; வேறுவிதமாகக் கூறினால் ஆண்டு ஒன்றிற்கு 20,000 என்ற எண்ணிக்கை கிடைக்கிறது.

பலர் ஐயத்திற்கு இடமின்றி கொலைக் குழுக்களால் அழிக்கப்பட்டிருப்பர்; வேறு சிலர் நாட்டில் பெருகி வரும் காவலில் வைக்கப்பட்டுள்ளவர்களின் பட்டியலில் சேர்ந்திருப்பர். இவர்கள் குற்றச் சாட்டுக்கள் இல்லாமல், விசாரணைக்கு முன்னான கால வரையற்ற சிறைவாசம் மற்றும் சித்திரவதை ஆகியவற்றை எதிர்கொள்ளுவர்.

மார்ச் மாதம் ஈராக்கிய மனித உரிமைகள் அமைச்சரகம் கிட்டத்தட்ட 38,000 கைது செய்யப்பட்டவர்கள், சிறைக்கைதிகளை அரசு வைத்துள்ளதாக அறிவித்தது; அமெரிக்க இராணுவம் 19,000 காவல் கைதிகள் அதன் இரு முக்கிய காவல் முகாம்களான Camp Cropper, Camp Bucca ஆகியவற்றில் இருப்பதாகக் கூறியுள்ளது. இந்த மொத்த எண்ணிக்கை ஈராக்கிய மக்களை "விடுதலை செய்வதற்கு" அமெரிக்க படையெடுப்பை மேற்கொள்ளுமுன் சதாம் ஹுசைன் பிடித்து வைத்திருந்த கைதிகளின் எண்ணிக்கையை போல் ஆறு மடங்கு ஆகும். அமெரிக்க இராணுவத்தின் "மேலதிக" படை ஏராளமான ஈராக்கிய குடிமக்கள் மீது தாக்குதல் நடத்தும்போது இந்த எண்ணிக்கையும் கணிசமாக உயரும் என்பதில் சந்தேகம் இல்லை.

மில்லியன் கணக்கான ஈராக்கியர்கள் இடம் பெயர்தல், நாடுவிட்டு வெளியேறல்

ஆக்கிரமிப்பால் பல நூறாயிரக்கணக்கான இறப்புக்கள் ஈராக்கிய மக்கள்மீது சுமத்தப்பட்டதை தவிர, பாரியளவு மக்கட்தொகுப்பு அகதிகளாகவும் உள்நாட்டிலேயே இடம் பெயர்ந்தவர்களாகவும் மாறியிருப்பதும் ஆக்கிரமிப்பால் ஈராக் சமுதாயத்தின் மீதான அழிவுகரமான தாக்கத்திற்கான தெளிவான எடுத்துக்காட்டாகும்.

தங்களுடைய சொந்த நாட்டில் இருந்து 2 மில்லியன் ஈராக்கியர்கள் குடிபெயர்ந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது; இவர்களில் பெரும்பாலானவர்கள் சிரியா, ஜோர்டான் ஆகிய நாடுகளில் புகலிடம் நாடியுள்ளனர். மற்றும் ஒரு 1.9 மில்லியன் ஈராக்கியர்கள் தங்கள் நாட்டிலேயே இடம் பெயர்ந்த மக்கள் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

சுருங்கக் கூறின், நாட்டு ஜனத்தொகையில் 15 சதவிகிதத்தினர் முழுமையாக தங்கள் வீடுகளில் இருந்து விரட்டியடிக்கப்பட்டுள்ளனர். ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் ஆணையாளர் (UNHCR) குறைந்தது 40,000 முதல் 50,000 வரையிலான ஈராக்கியர்கள் ஒவ்வொரு வாரமும் இடம் பெயர்கின்றனர் என்றும் அவர்களில் பலரும் கூடாரங்களில் அல்லது பொதுவெளியில் எந்த ஆதாரமும் இன்றி உறங்கும் கட்டாயத்தில் உள்ளனர் என்றும் மதிப்பீடு செய்துள்ளது.

"நாங்கள் நிலைமை மோசமாகிவிட்டதால் பாக்தாத்தை விட்டு நீங்கினோம். கொல்லப்படுவோம் என்று அச்சுறுத்தப்பட்டோம், அவர்கள் எங்கள் வீடுகள், கடைகளை எடுத்துக் கொண்டுவிட்டார்கள். அங்கு என்ன நிலை உள்ளது என்பதைப் பாருங்கள் --அழிவும், இறப்பும்தான் உள்ளன" என்று சிரியாவிற்கு குடும்பத்துடன் வந்த ஒருவர் UNHCR இடம் தெரிவித்தார்.

இந்த அழிவையும் இறப்பையும் கட்டவிழ்த்துவிட்ட அமெரிக்கா 2003ல் இருந்து 701 ஈராக்கிய அகதிகள்தான் உள்ளனர் என்று கூறுகிறது. சிரியா மட்டுமே தற்பொழுது 1.2 மில்லியன் ஈராக்கியர்களை கொண்டுள்ளது. அதற்கான பொறுப்பை எடுத்துக் கொள்ளுவது ஒருபுறம் இருக்க இந்த பாரிய அகதிகள் நெருக்கடியை மூடிமறைப்பதற்கு வாஷிங்டன் முயல்கிறது. ஏனெனில் இது ஈராக்கில் ஏற்படுத்தியுள்ள சமூகப் பேரழிவு பற்றிய பெரும் குற்ற நடவடிக்கைக்கான ஆதாரமாகும்.

உள்நாட்டு அகதிகள் ஏராளமாக நகர்வது பெருகிய முறையில் நாட்டின் தெற்குப் பகுதிகளில் நம்பிக்கையற்ற, நெருக்கடியான நிலைமையை ஏற்படுத்தியுள்ளது. அங்கு 700,000 அகதிகள் வந்துவிட்டனர்; உள்ளூர்ப்பகுதியிலேயே 200,000 இடம் பெயர்ந்தவர்கள் நஜாப், கார்பலா மற்றும் பஸ்ரா மாநிலங்களில் இருந்து வந்துள்ளனர். உள்ளூர் அரசாங்கங்களும் உதவி அளிக்கும் நிறுவனங்களும் திணறுகின்றன; பெரும் மக்கட்தொகைக்கு வீடு, உணவு, மருத்துவப் பாதுகாப்பு ஆகியவற்றை கொடுக்க முடியவில்லை. பாக்தாத்தில் இருக்கும் மத்திய அரசாங்கம் அடிப்படை தேவையை கூடக் கொடுக்க இயலவில்லை; அல்லது கொடுக்க விரும்பவில்லை.

"ஒவ்வொரு நாளும் இடம் பெயர்ந்தவர்களுக்கான முகாம்களுக்கு டஜன் கணக்கில் குடும்பங்கள் வருகின்றன; இதையொட்டி உணவு, சுகாதாரப் பாதுகாப்பு போன்ற அடிப்படைத் தேவைகள் பற்றாக்குறையில் உள்ளன" என்று நஜாப் மாநிலக் குழுவின் பேச்சாளர் Ali Fakhouri, IRIN என்னும் ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான விடயங்களுக்கான ஒத்துழைப்பு அலுவலகத்திடம் மார்ச் மாதம் கூறினார். "இக்குடும்பங்களுக்கு கடந்த இரு மாதங்கள் மிக மோசமான காலம் ஆகும். பாதுகாப்புக் காரணங்களுக்காக உதவி வருவது கணிசமாகக் குறைந்துவிட்டது; இதையொட்டி இப்பகுதியில் உள்ள மருத்துவமனைகளில் மருத்துகள் பற்றாக் குறையில் உள்ளன; நோய்வாய்ப்படும் சிறுவர்கள் மருத்துவமனையில் இடமின்றி தவிக்கின்றனர். தெற்கில் இடம் பெயர்ந்த குழுக்களிடையே குழந்தைகளிடம் வயிற்றுப் போக்கு அதிகமாக உள்ளது."

குழந்தைகள் இறப்பு விகிதம் ஈராக்கில் மிகப் பெரிய அதிகரிப்பு

சமீபத்திய அறிக்கைகளில் மிக அதிர்ச்சியைத் தரக்கூடியது குழந்தைகள் பாதுகாப்பு குழுவான Save the Children கொடுத்துள்ள தகவல்கள் ஆகும்; உலகெங்கிலும் சிறுகுழந்தைகள் இறப்புவிகித போக்கு பற்றி இது ஆதார ஆவணத்தை தயாரிக்கிறது; அது உலகெங்கிலும் சமூக முன்னேற்றம் பற்றிய மிக அடிப்படை கூறியீடுகளில் ஒன்றாக இது ஏற்கப்படுகிறது.

இந்த அறிக்கையின்படி ஈராக் 1990ல் இருந்து 2005க்குள்ளாக குழந்தைகள் இறப்பில் மிக அதிகமான 150 சதவிகித அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. எண்ணிக்கையில் 122,000 ஈராக்கிய குழந்தைகள் 2005ல் இறந்துள்ளன; இவற்றுள் பாதி புதிதாகப் பிறந்த குழந்தைகள் ஆகும். ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளில், 1000 உயிருடன் பிறந்த குழந்தைகளில் 125 இறந்து விடுகின்றன. 1990ல் இது 50 ஆகத்தான் இருந்தது. ஈராக்கிய சுகாதார அமைச்சரகத்தின் கருத்தின்படி அப்பொழுதில் இருந்து நிலைமை மோசமாகிவிட்டது; 2006ல் 1000 பிறப்புக்களுக்கு 130 இறப்பு என்று விகிதத்தில் உயர்ந்துவிட்டது.

Save the Children தன்னுடைய சர்வதேச அளவையை நடத்த தேர்ந்தெடுக்கும் ஆண்டுகள் ஈராக்கை பொறுத்தவரையில் குறிப்பிட்ட முக்கியத்துவத்தை கொண்டுள்ளன. 1990ம் ஆண்டு அமெரிக்க ஆதரவுடன் பொருளாதாரத் தடைகள் என்ற முறையில் தண்டனை துவக்கம் ஏற்பட்டு இது 2005ல் படையெடுப்பிற்கு இரு ஆண்டுகள் பின்னர் முடிவடைகிறது. ஈராக்கிய சமூக பேரழிவின் அடிப்படை குறியீடுகள் பலவற்றை போலவே, குழந்தை இறப்பு எண்ணிக்கை நாட்டின் பொருளாதார வகையிலான நெருக்கடி, அவ்வப்பொழுது இராணுவத் தாக்குதல்களும் சேர்ந்து கொள்ளும், ஒரு தசாப்தத்திற்கு மேலாக நாட்டின் போக்கை பற்றி பிரதிபலிப்பவையாக இருப்பதுடன், அதைத் தொடர்ந்த படையெடுப்பு, ஆக்கிரமிப்பு பற்றியும் பிரதிபலிக்கிறது.

ஈராக்கில் மிகப் பெரிய அளவிற்கு குழந்தைகள் இறப்பு ஏற்பட்டுள்ளது முன்னோடியில்லா தன்மையை உடையது. AIDS பாதிப்பினால் மிகப் பெரிய அழிவுகளைக் கண்டுள்ள ஆபிரிக்க சகாராத் துணைப் பகுதிகள் கூட இத்தகைய கொடூர பின்னடைவை காணவில்லை.

அமெரிக்க இராணுவ நடவடிக்கையின் காரணமாக இந்த குழந்தைகள் இறப்புக்களும் கணிசமாக இருந்தன என்பதில் ஐயம் இல்லை. ஒவ்வொரு வான்தாக்குதலும் குண்டுவீச்சும் அதிக மக்கட்தொகை இருக்கும் இடத்தில் நடத்தப்படும்போது, பாதிக்கப்படுபவர்களில் குழந்தைகளும் உள்ளன.

இதையும்விட முக்கியமானது ஈராக்கின் நீர், மின்சாரம் மற்றும் கழிவுநீர் வசதிகள் மொத்தத்தில் சிதைந்து போய் இருப்பதுதான்: இதைத்தவிர அதன் சுகாதாரப் பாதுகாப்பு கட்டமைப்பும் பாதிக்கப்பட்டுள்ளது; ஒன்றாக இணைந்து இவை குழந்தைகளை முக்கியமாகக் கொல்லும், வயிற்றுப்போக்கு, உணவில் ஊட்டமின்மை, டைபாய்டு, மஞ்சட்காமாலை என தடுக்கக் கூடிய நோய்கள் மூலம் மாய்க்கின்றன; இவை பரிசோதிக்கப்பட முடியாததால், மருத்துவ உதவியும் கொடுக்கப்பட முடியவில்லை.

ஐக்கிய நாடுகள் சபை ஈராக்கிய குழந்தைகளிடையே ஜனவரி 2006ல் இருந்து 70 சதவிகிதம் வயிற்றுப்போக்கு நோய் அதிகமாகிவிட்டது என்ற அதிர்ச்சியான தகவலை கொடுத்துள்ளது. அமெரிக்க படைகளால் தொடர்ச்சியான முற்றுகைக்கு உட்பட்டுள்ள ஆக்கிரமிப்பிற்கு எதிர்ப்பு மையமாக இருக்கும் அன்பர் மாநிலத்தில் மிக அதிக விகிதம் உள்ளது. இம்மாநிலத்தில் 60 சதவிகித மக்களுக்கு மாசு படிந்த ஆற்றுநீர்தான் குடிநீராக உள்ளது.

நாடு முழுவதும் உள்ள மக்களில் மூன்றில் ஒரு பகுதிக்கும் குறைவானவர்களுக்குத்தான சுத்தமான குடிநீர் கிடைக்கிறது; 19 சதவிகிதத்தினருக்குத்தான் தொழிற்படும் கழிவுநீர்த்திட்டம் உள்ளது. குடிநீர் மற்றும் கழிவுநீர் செயற்பாடுகள் 1991 பாரசீக வளைகுடாப் போர் மற்றும் 2003 படையெடுப்பின்போது பெரும் சேதத்திற்கு உள்ளாயின. ஈராக்கிய அரசை கவிழ்த்த பின்னர் அமெரிக்க படைகள், கொள்ளை அடிப்பவர்கள் நீர் சுத்திகரிப்பு, நீரேற்று நிலையக் கருவிகள் ஆகியவற்றை சூறையாடுவதை தடுக்க ஏதும் செய்யவில்லை. மற்ற இடங்களைப் போலவே "மறு சீரமைப்பு" என்பது மிகவும் மோசமான அளவில் இருந்து பேரழிவை தோற்றுவித்துள்ளது.

சராசரியாக, ஈராக்கியர்கள் நாள் ஒன்றிற்கு 8 மணி நேரம்தான் மின்வசதி பெறுகின்றனர்; பாக்தாத்தில் நிலைமை இதையும் விட மோசம்; தலைநகரத்தின் 7 மில்லியன் மக்கள் 6 மணி அல்லது அதற்கும் குறைவாகத்தான் மின்வசதியை ஒவ்வொரு நாளும் பெறுகின்றனர்.

தொடரும்...


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved