World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Bush authorises covert CIA operations to destabilise Iran

ஈரானை சீர்குலைக்கும் இரகசிய CIA நடவடிகைகளுக்கு புஷ் ஒப்புதல் கொடுக்கிறார்

By Peter Symonds
25 May 2007

Back to screen version

ஈரானில் "ஆட்சி மாற்றத்தை" இலக்காகக் கொண்டு அங்கு உறுதியை குலைக்கும் வகையில் இரகசிய நடவடிக்கையில் புஷ் நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டிருப்பதற்கான மேலதிக சான்றை செவ்வாயன்று ஒரு ABC News தகவல் அளித்துள்ளது.

அமெரிக்க தொலைக்காட்சி வலைப்பின்னலின்படி, "ஈரானின் நாணயம் மற்றும் சர்வதேச நிதிச் செயற்பாடுகளை பற்றி ஒருங்கிணைந்த பிரச்சாரம், தவறான செய்திகள், திரித்தல் ஆகியவற்றை உள்ளடக்கியதாக கூறப்படும் ஒரு சிஐஏ திட்டத்தை" அங்கீகரிக்கும் ஒரு மேலோட்டமான "மரண ஆபத்தில்லாத ஜனாதிபதி ஆய்வறிக்கையில்" இந்த ஆண்டு தொடக்கத்தில் புஷ் கையெழுத்திட்டார்.

ஒரு பெயரிடப்படாத முன்னாள் மற்றும் தற்போதைய CIA அதிகாரிகள் கொடுத்த தகவல்களின்படி, ABC News, "பென்டகனின் மத்திய கட்டுப்பாட்டுத் தலைமையை அட்மிரல் வில்லியம் பாலோன் எடுத்துக் கொண்ட நேரத்தில், அதாவது மார்ச் மாத நடுப்பகுதியில்", புஷ் இத்திட்டத்திற்கு ஒப்புதல் கொடுத்தார் என்று தகவல் கொடுத்துள்ளது. மேலும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் Steve Hadley மற்றும் தேசிய துணைப் பாதுகாப்பு ஆலோசகர் Elliot Abrams இருவரும் இந் நடைமுறைக்கு பச்சை விளக்கு காட்டிவிட்டதாகவும் தகவல் கொடுத்துள்ளது.

தெஹ்ரானின் மகளிர் ஆடைகள் பற்றிய எதிர்ப்பு, எதிர்ப்பாளர்களை கைது செய்தமை, அதனிடம் அணுவாயுதத் திட்டங்கள் இருப்பதாகக் கூறப்படுவது, நாட்டிற்கு வெளியே அண்மையில் உள்ள ஈராக்கினுள் ஆக்கிரமிப்பு எதிர்ப்பு போராளிகளுக்கு ஆதரவு தருவதாக கூறுப்படுவது என்பவற்றை செய்தித்துறையினர் கூடுதலாக எடுத்துக்காட்டும் தொடர்ச்சியான கட்டுரைகள் வெளியிடப்பட்ட நேரத்தில் இத்திட்டம் வெளிவிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கைகளில் எவ்வளவு CIA நேரடியாக "புகுத்தியது" என்பதை கூறுவது கடினம் என்றாலும், ஒருங்கிணைக்கப்பட்ட பிரச்சாரம், தவறான தகவல் அளிப்பது ஆகியவற்றை இது சுட்டிக் காட்டுகிறது. ஈரானுக்குள் எத்தகைய பாதிப்பு இருந்தாலும், இத்தகைய கதைகள் ஒருவேளை இராணுவத் தாக்குதலுக்கான தயாரிப்பு மேற்கொள்ளப்பட்டால் அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் இருக்கும் மக்கள் கருத்திற்கு நச்சூட்ட உதவும் என்பதில் சந்தேகம் இல்லை.

"இரகசிய நடவடிக்கைக்கு புஷ் நிர்வாகம் ஒப்புதல் என்பதன் பொருள் தற்போதைக்கு நிர்வாகம் ஈரானுக்கு எதிரான ஒரு இராணுவ தேர்வை தொடராது என்பதாகும்" என்று சுட்டிக் காட்டுவதற்கு ABC News கடினமாக முயன்றுள்ளது. ஓய்வு பெற்ற CIA அதிகாரி Bruce Riedel ஒரு வெள்ளை மாளிகை உள்விவாதம் ஒன்றில், "துணை ஜனாதிபதி டிக் ஷென்னி ஒரு இராணுவத் தாக்குதலை ஆதரிக்கும் பிரிவிற்கு உதவினார்; ஆனால் அவர்கள் ஒரு இராணுவ நடவடிக்கை கூடுதலான தோல்விகளைத்தான் சந்திக்குமே அன்றி வெற்றிகளை காணாது என்ற முடிவிற்கு வந்துள்ளனர் என்று நான் நினைக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

இந்த உத்தரவாதங்களால் எந்தப் பயனும் இல்லை. அமெரிக்க கடற்படை இரண்டு விமானத் தளங்கள் கொண்ட போர்க்கப்பல்களை பாரசீக வளைகுடாவில் தொடர்ந்து நிறுத்திவைத்துள்ளது; இவை ஈரான் மீது தொடர்ச்சியான தாக்கும் திறனைக் கொண்டவை ஆகும். இம்மாத தொடக்கத்தில் மத்திய கிழக்கிற்கு பயணித்திருந்தபோது, ஷென்னி ஈரானிய கடற்கரைக்கு 150 கிலோமீட்டர் தூரத்தில் நிறுத்தப்பட்டுள்ளதில் இருந்த USS John C. Stennis கப்பல் தளத்தில், "மற்றவர்களோடு சேர்ந்து நாம் ஈரான் அணுவாயுதங்கள் பெற்று, இப்பகுதியில் ஆதிக்கம் செலுத்தக் கூடும் என்பதை நிறுத்துவோம்" என்று அறிவித்தார்.

அமெரிக்க கடற்படை மிகப் பரந்த அளவில் புதனன்று பாரசீக வளைகுடாவில் பயிற்சிகளை தொடங்கியது; இந்த நடவடிக்கை ஐக்கிய நாடுகள் சபை தெஹ்ரானுக்கு அதன் யுரேனிய செறிவுத் திட்டத்தை மூடும்படி விதித்துள்ள காலகெடு முடிவடையும் தறுவாயில் ஈரான்மீது அழுத்தத்தை அதிகரிக்க வேண்டும் என்ற திட்டத்தை கொண்டுள்ளது. வேறுவிதமாக கூறினால், இராஜதந்திர மிரட்டலும், இரகசிய நடவடிக்கைகளும் தோல்வியுற்றால், இராணுவ நடவடிக்கை தேர்வாக அமையும்.

இரகசிய நடவடிக்கைகள் CIA மட்டும்தான் நடத்துகிறது என்ற முடிவிற்கு வந்தால் அது தவறாகிவிடும். பல செய்தி ஊடக தகவல்களின்படி (ஆய்வுக் கட்டுரைகள் எழுதும் மூத்த செய்தியாளர் Seymour Hersh உட்பட) பென்டகன் மற்றும் பிற அமெரிக்க நிறுவனங்களும் குறைந்தது 2004ல் இருந்தே ஈரானை தீவிரமாக குறிவைத்து வந்துள்ளன. CIA போல் அன்றி -- இது "இருண்ட நடவடிக்கைகள்" எடுப்பதற்கு முறையான ஜனாதிபதி உத்தரவு தேவை-- புஷ்ஷின் கீழ் அமெரிக்க இராணுவம் அதிகரித்தளவில் அதன் சொந்த இரகசிய நடவடிக்கைகளை பெருக்கியுள்ளது; இதில் எவ்வித தேசிய சட்டமன்ற கண்காணிப்பும் இன்றி ஈரானுக்குள் அதன் சிறப்பு பிரிவுகள் செயல்பட அனுப்பப்பட்டுள்ளன.

புஷ் நிர்வாகத்தின் "ஆட்சி மாற்றம்" பற்றிய பிரச்சாரத்தில் குறிப்பான இரகசியம் ஏதும் இல்லை. கடந்த ஆண்டு, வெளிவிவகார அமைச்சர் கொண்டலீசா ரைஸ் ஈரானிய-எதிர்ப்பு பிரச்சார வானொலி உரைகளுக்காகவும், ஈரானுக்கு உள்ளே மற்றும் வெளியே இருக்கும் எதிர்ப்பு குழுக்களுக்கு நிதி கொடுப்பதற்காகவும் $75 மில்லியன் கேட்டுப் பெற்றுக் கொண்டார். 2005ல் இத்தொகைய $10 மில்லியனாகத்தான் இருந்தது. கட்த ஆண்டு ஆரம்பத்தில் துணை ஜனாதிபதியின் மகள் எலிசபெத் ஷென்னியின் தலைமையில் ஈரானிய விவகாரங்களுக்காக ஒரு அலுவலகத்தையும் நிறுவினார்; அது ஆட்சி எதிர்ப்பாளர்களுடைய கொள்கைகள் ஒருங்கிணைப்பு மற்றும் "ஜனநாயாக சார்பு" நிதியம் அளிப்பது என்ற பணிகளை கொண்டிருந்தது. பென்டகன், வெளிவிவகார அமைச்சு, CIA, கருவூலம் மற்றும் தேசிய பாதுகாப்புக் குழுவின் உயர்மட்ட அதிகாரிகள் அடங்கிய குழு, ஈரான் சிரிய கொள்கை மற்றும் நடவடிக்கைகள் குழு (ISOG) சில காலமாகவே ஈரானுக்கு எதிரான இராணுவ நட்புகளை வலிமைப்படுத்தவும், ஈரானின் எதிர்ப்பாளர்களுக்கு நிதிகொடுக்கவும் நாட்டின் பொருளாதாரத்தை அழிக்கவும் செயல்பட்டு வருவதாக ஜனவரி மாதம் Boston Globe பத்திரிகை கூறியுள்ளது.

ஈரானிய-எதிர்ப்பு போராளிகளுக்கு அமெரிக்க ஆதரவு

ஒப்புதல் கொடுக்கப்பட்டுள்ள CIA நடவடிக்கைகள் தற்பொழுது "கொலைகள் அற்றதாக" இருந்தாலும், ஈரானுக்குள் நடக்கும் அமெரிக்க நடவடிக்கைகள் அனைத்தும் அப்படித்தான் என்று கூறமுடியாது. "அடுத்த செயல்: சேதத்திற்குட்பட்ட நிர்வாகம் ஈரானை தாக்குவதற்கான வாய்ப்பு குறைவா, கூடுதலா?" என்ற தலைப்பில் நவம்பர் மாதம் Hersh எழுதிய கட்டுரை ஒன்றில், குர்திஸ், அஷேரி, பலுச்சி பழங்குடி குழுக்களை வடக்கு, தென்கிழக்கு ஈரானில் தெஹ்ரானின் அதிகாரத்தை குறைக்கும் வகையில் இரகசிய ஆதரவை பென்டகன் கொடுப்பதற்கு சான்றுகளை அளித்துள்ளார். குறிப்பாக அமெரிக்க இராணுவம் இஸ்ரேலுடன் ஒத்துழைத்து குர்திஸ் ஆயுதக்குழு ஒன்றுக்கு ஆதரவு கொடுத்துள்ளது --அதற்கு Party for Free Life என்று பெயர்; இது வடக்கு ஈராக்கை தளமாக கொண்டு ஈரானில் இருக்கும் குர்திஸ் பகுதிகளில் எதிர்ப்பை பெருக்குவதற்கும் "அமெரிக்காவிற்கு உதவக்கூடிய ஈரானுக்குள் இருக்கும் இலக்குகளை பற்றி உளவு அறிவதற்கும்" பயன்படுத்தப்படுகிறது.

ABC News இன் தொடர்ச்சியான தகவல்கள் கடந்த மாதம் அமெரிக்கா தீவிரமாக பாகிஸ்தானை தளமாக கொண்டுள்ள ஆயுதமேந்திய பலுச்சி குழுவான Jundullah விற்கு ஈரானுக்குள் எல்லை தாண்டிய தாக்குதல்களை நடத்த ஆதரவு கொடுத்துள்ளதாக தெரிவிக்கின்றன. ஏப்ரல் 3ம் தேதி போராளிகள், "இரகசியமாக ஊக்குவிக்கப்பட்டு, 2005ல் இருந்தே அமெரிக்க அதிகாரிககளின் ஆலோசனையையும் பெற்று வருகின்றனர்" என்ற தகவல் வந்தது. இக்குழுதான் பெப்ருவரி மாதம் ஈரானிய புரட்சிப் பாதுகாப்பு படையை சேர்ந்த 11 பேரை தென் கிழக்கு நகரமான Zahedran இல் குண்டுத் தாக்குதல்களில் கொன்றதற்கு பொறுப்பு ஆகும்.

ABC News இற்கு நிக்சன் நிலையத்தின் பயங்கரவாத எதிர்ப்பின் முக்கிய நபரான Alexis Debat தகவல் தெரிவிக்கையில், Jundullah தலைவரான அப்துல் மாலிக் ரெகி ''ஒரு போதைப்பொருள் கடத்தல்காரராகவும், தலிபானின் நபராகவும், சுன்னி பிரிவினரின் ஆதரவாளராகவும் உள்ளார்'' என கூறினார். இவ்வார அறிக்கையின் படி, Jundullah விற்கு ''நேரடி நிதியுதவி'' எதுவும் வழங்கவில்லை என அமெரிக்க அதிகாரிகள் மறுத்துள்ளனர். ஆனால் Jundullah தலைவர் அமெரிக்க அதிகாரிகளுடன் வழமையாக தொடர்புகளை வைத்துள்ளார் எனவும் கூறியுள்ளனர். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அண்மை நாடான ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவின் ''பயங்கரவாத எதிர்ப்பு யுத்தத்தின்'' முக்கிய இலக்கான தலிபானுடன் தொடர்புகளை வைத்துள்ள சுன்னி தீவிரவாதிகளுடன் இணைந்து ஈரானில் ''ஆட்சி மாற்றத்தை'' கொண்டுவருவதற்காக புஷ் நிர்வாகம் செயற்படுகின்றது.

பெப்ருவரி மாதத்தில் "The Redirection" என்ற தலைப்பில் அவருடைய மிகச் சமீபத்திய கட்டுரையில், புஷ் நிர்வாகம் சவுதி முடியாட்சி மற்றும் ஜோர்டான் போன்ற சுன்னி நாடுகளின் ஆதரவை மத்திய கிழக்கில் ஷியைட் ஈரானின் செல்வாக்கு பரவாமல் தடுப்பதற்கு நாடியிருப்பதாக Hersh குறிப்பிட்டுள்ளார். Jundullah இன்னும் பல சுன்னித் தீவிரவாதிகளுக்கு அமெரிக்கா "நேரடியாக நிதி கொடுக்காமலும் இருக்கலாம்" என்று சுட்டிக் காட்டும் கட்டுரையில் 1980களில் சோவியத் ஆதரவு பெற்றிருந்த ஆப்கானிஸ்தானிற்கு எதிராக CIA இன் யுத்தத்தில் அல் கொய்தாவிற்கு கொடுத்தது போல் சர்வாதிகார சவுதி அரேபியா இரகசியமாக ஏராள நிதியை அளித்திருக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.

1980 களில் ஈரானுக்கு இரகசிய முறையில் ஆயுதங்களை வலதுசாரி நிகரகுவா கொண்டுராக்களுக்கு சட்டவிரோதமாக ஆயுதங்கள் கொடுத்த வகையில் ரேகன் நிர்வாகம் தீவிரப் பங்கு கொண்டிருந்ததை போல், அப்பொழுது அதில் முக்கியமாக இருந்த, தற்போதைய புதிய கன்சர்வேடிவ் முக்கியஸ்தரும் துணை தேசியப் பாதுகாப்பு ஆலோசகருமான எலியன் அப்ராம்சின் பங்கையும் Hersh எடுத்துக்காட்டியுள்ளார். இதன்பின் இறுதியாக, ஈரான்-கொண்ட்ரா ஊழலில், சத்தியப் பிரமாணத்தின்கீழ் சாட்சியம் கூறுகையில் பொய்கூறியதாக அப்ராம்ஸ் ஒப்புக் கொண்டார். ஆனால் "பூகோளந்தழுவிய ஜனநாயக மூலோபாயம்" என்ற பெயரில் நிர்வாகத்தினால் இலக்கு கொள்ளப்படும் ஆட்சிகளை அழிப்பதற்கு புஷ் அவரை துணைத் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நியமிப்பதற்கு அவருடைய கடந்த காலக் குற்றங்கள் தடையாக இல்லை.

Hersh இன் சான்றுகளின்படி, ஈரானுக்குள் நடத்தும் தொடர்ந்த திருட்டுத்தனமான நடவடிக்கைகள் காங்கிரசின் கண்காணிப்பில் இருந்து ஒதுங்கிய வகையில் செய்வதற்கு அப்ராம்ஸ் தன்னுடைய அனுபவத்தைப் பயன்படுத்திக் கொண்டதோடு, ஈரானுக்கு ஆதரவாக இருக்கும் லெபனானில் ஹெஸ்போல்லா போன்ற இயக்கங்களுக்கு எதிராகவும் செயல்படுகிறார். நிதி திரட்டுதல் அவருக்குப் பிரச்சினையாகவே இருந்ததில்லை போலும் என்று ஒரு பென்டகன் வல்லுனர் விளக்கிக் கூறுகிறார்: "ஏராளமான கறுப்புப் பண நடமாட்டம் பல இடங்களிலும் பரந்து நின்று உலகம் முழுவதும் பல பணிகளுக்காக பயன்படுத்தப்படுகிறது." மற்ற அமெரிக்க அதிகாரிகள் ஈராக் ஆக்கிரமிப்பின் போது முதல் மாதங்களில் கணக்கில் வராத பில்லியன் கணக்கான டாலர்கள் இப்பொழுது "இத்தகைய நடவடிக்கைகளுக்கு கருவியாக உள்ளன." என்று சுட்டிக் காட்டுகின்றனர்.

ஈரான் எதிர்கொள்ளுகிறது

ABC News புஷ்ஷின் இரகசிய ஜனாதிபதி நிதி அளித்துள்ளதை பற்றிக் கூறுகையில் வெளிநாட்டு உறவுகளுக்கான குழுவில் உள்ள மூத்த ஆராய்ச்சியாளரான Vali Nasr எச்சரிக்கை கொடுக்கிறார்: "ஈரானிய எதிர்ப்பு பிரிவுகளுக்கு அமெரிக்கா ஆதரவு அளித்துவருகிறது, ஈரானுக்குள் எதிர்ப்பு குழுக்களுக்கும் ஆதரவு கொடுக்கிறது இந்த மறைமுகப் போரில் என்று அப்பகுதியில் உள்ள அனைவரும் அறிவர். இந்த இரகசிய நடவடிக்கை இப்பொழுது புதிய அமெரிக்க உந்துதலால் பெருகியுள்ளது; இது விரைவில் ஈரான் பதிலடி கொடுப்பது, மோதல்கள் அதிகரித்தல் என்று முடியக்கூடும்."

வாஷிங்டன் போஸ்ட் இடம், எதிர்ப்பாளர்களுக்கு அமெரிக்கா மறைமுகமாக நிதி அளித்துவருகிறது என்பதை அமெரிக்க வெளிவிவகார அமைச்சின் மூத்த அதிகாரி ஒப்புக்கொண்டார். "நேரடியாக அவர்களுக்கு ஆதரவு கொடுத்தால் எப்படிப்பட்ட பிரச்சினை வரும் என்பதை முன்னரே அறிந்திருந்தோம். எனவே கொதி தண்ணீரில் அவர்களை உடனே தள்ள விரும்பவில்லை. எனவேதான் மூன்றாம் நாடுகள் மூலம் இவ்வாறு செய்கிறோம்." என்று அவர் கூறினார்.

அமெரிக்க பிரச்சார முயற்சிகளை காட்டி, அரசியல் எதிர்ப்பாளர்களை "ஒற்றர்கள்", "அமெரிக்க முகவர்கள்" என்று சூனிய அரசியல் வேட்டையாடுவதை நியாயப்படுத்துவதை ஏற்கனவே ஈரானிய அரசாங்கம் செய்துள்ளது. அமெரிக்காவை தளமாக கொண்டுள்ள Human Rights Watch பகுப்பாய்வாளர் Hadi Ghaemi, வாஷிங்டன் போஸ்ட் இடம் கடந்த மாதம் கூறியதாவது: "டஜன் கணக்கான ஈரானிய மனித உரிமை ஆர்வலர்கள் $75 மில்லியன் அறிவிப்பை கேட்டதில் இருந்து அதற்கான விலையை கொடுக்கின்றனர்; கடந்த ஆண்டு காவலில் வைக்கப்பட்ட அனைவருமே இப்பணம் வாங்கியது பற்றிய விசாரணைக்கு உட்பட்டுள்ளனர். ஈரானிய அதிகாரிகள் அமெரிக்காவில் இப்பணத்தின் மூலம் மென்மையான புரட்சியை எரியூட்டுகின்றனர் என்ற கருத்தில் உள்ளனர்."

பரந்த அளவிலான ஆர்வலர்கள் காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்படுகின்றனர்; இவர்களுள் ஆசிரியர்கள், மகளிர் உரிமைப் பிரச்சாரகர்கள், தொழிலாளர் அமைப்பினர், மாணவர்கள், செய்தியாளர்கள், அறிவுஜீவிகள் ஆகியோர் அடங்கியுள்ளனர்; "பொது சமூக இயக்கங்களுக்கு ஆதரவு என்று அமெரிக்கா அறிவித்தால் அது உடனே ஈரானிய அரசாங்கத்திற்கு சுயாதீனமான ஆர்வலர்களுக்கு எதிராக பயன்படுத்தும் கருவியாக மாறுகிறது. உண்மையில் இது எதிர்மறையான செயல்பாடுதான்." என்று ஒரு மகளிர் உரிமை செயலரான Fariba Davoodi Mohajer செய்தித்தாளிடம் கூறினார்.

அங்கு பயணிக்கும் பல வெளிநாட்டு கல்வியாளர்கள், செய்தியாளர்கள் ஆகியோரும் இந்த பாதுகாப்பு வலையில் பிடிபடுகின்றனர்; இதில் Radio Farda உடைய நிருபர் Parnaz Azima, வாஷிங்டன் உட்ரோ வில்சன் மையத்தில் Haleh Esfandiari ஆகியோரும் அடங்குவர் இவர்கள் இருவரும் இரட்டை அமெரிக்க-ஈரானிய குடியுரிமை பெற்றவர்கள்; ஈரானில் இருக்கும் குடும்ப உறுப்பினர்களை பார்க்க வந்தவர்கள். அமெரிக்க ஆளும் வட்டங்களில் சற்றே புகழ்பெற்ற Esfandiari மே 8 அன்று முறையாக காவலில் வைக்கப்பட்டார்; நாட்டில் இருந்து வெளியேறுவதற்கு தடைக்குள்ளானார்; அமெரிக்கா, இஸ்ரேல் ஆகியற்றிற்காக ஒற்று வேலை செய்வதாகவும் "நயமான புரட்சியை" தூண்டிவிட முயற்சிப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

ஈரானிய ஆட்சி தன்னுடைய அடக்குமுறை நடவடிக்கைகளை நியாயப்படுத்த எந்த ஆதாரங்களையும் கொடுக்கவில்லை என்றாலும், புஷ் நிர்வாகம் மற்றும் சட்ட மன்ற ஜனாயகக்கட்சி வாதிகள் வெளிக்காட்டும் சீற்றம் முற்றிலும் பாசாங்குத்தனமானவை ஆகும். வெளிவிவகார அமைச்சர் ரைஸ் கடந்த வாரம் Esfardiari உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என்று கூறினார்; ஈரானிய ஆட்சி "தன்னுடைய மக்களை நன்கு நடத்துவதில்லை என்பதை" இது காட்டுகிறது என்றும் அவர் கூறினார். வெளிவிவகார அமைச்சின் செய்தித்தொடர்பாளர் Sean McCormack ஈரானிய அரசாங்கத்தை அகற்ற கல்விமான்கள் முயற்சிக்கிறார் என்ற குற்றச்சாட்டுக்களை "மதிகெட்ட பேச்சு", "முற்றிலும் அபத்தமானது" என்று உதறித்தள்ளினார்.

Esfandiari க்குத் தொடர்பு இருந்தாலும், இல்லாவிட்டாலும், ரைசின் முன்னோக்கு தெஹ்ரானில் "ஆட்சி மாற்றம்" என்பதாகத்தான் உறுதியாக உள்ளது. மேலும் ஜனநாயகக் கட்சியினரின் இணைந்த சதியுடன் புஷ் நிர்வாகம் ஒருதலைப்பட்சமாக எவ்வித விசாரணையும் இன்றி, பல்லாயிரக்கணக்கானவர்களை ஈராக், ஆப்கானிஸ்தான் மற்றும் அமெரிக்காவிலேயே காவலில் வைத்துள்ளதுடன் சித்திரவதைக்கும் பலரையும் உட்படுத்தியுள்ளது; இதில் ஜனவரி மாதம் வடக்கு ஈரானில் ஈரானிய தொடர்பு அலுவலகம் ஒன்றில் இருந்து கைப்பற்றப்பட்ட ஐந்து ஈரானிய அதிகாரிகளும் அடங்குவர்.

ஈரானில் "ஆட்சி மாற்றம்" என்ற பிரச்சாரம் ஈரானிய மக்களுடைய அரசியல் உரிமைகள் அல்லது "ஜனநாயகத்தை காப்பது" என்பவற்றுடன் எந்தத் தொடர்பையும் கொண்டிருக்கவில்லை. இதன் ஒரே நோக்கம் அமெரிக்காவின் மூலோபாயம் மற்றும் பொருளாதார நலன்களை முன்னேற்றுவிப்பதுதான். ஈரானிடம் மாபெரும் எண்ணெய், எரிவாயு இருப்புக்கள் உள்ளன என்பது மட்டும் இல்லாமல், இயற்கை மூலவளம் அதிகமுள்ள மத்திய ஆசியா, மத்திய கிழக்குப் பகுதிகளில் மூலோபாய சந்திகளில் அது உள்ளது.

அமெரிக்க, ஈரானிய அதிகாரிகள் அடுத்த வாரம் பாக்தாத்தில் சீர்குலைந்து கொண்டிருக்கும் பாதுகாப்பு நிலைமை மற்றும் ஈராக்கில் அமெரிக்க ஆக்கிரமிப்புப் படைகளை எதிர்கொண்டுள்ள நிலைமை பற்றிப் பேச உள்ளனர். இக்கூட்டம் இரு நாடுகளுக்கும் இடையே இருக்கும், பெருகி வரும் அழுத்தங்களை தளர்த்துவது மிகவும் கடினம்தான்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved