World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

Germany: Release of ex-Red Army Faction terrorists sparks hysterical debate

ஜேர்மனி: முன்னாள் செம்படை பிரிவின் பயங்கரவாதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளது பரபரப்பான விவாதத்தை தூண்டுகிறது

By Justus Leicht and Wolfgang Weber
8 March 2007

Back to screen version

முன்னாள் செம்படை பிரிவின் (RAF) பயங்கரவாதி Brigitte Mohnhaupt 24 ஆண்டுகள் காவலில் இருந்ததற்கு பின் நன்னடத்தையில் விடுவிக்கப்பட வேண்டும் என்று ஸ்ருட்கார்டின் மாநில நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. கூட்டாட்சி ஜனாதிபதியான Horst Kohler அவருடைய முடிவை மற்றொரு முன்னாள் RAF பயங்கரவாத Christian Klar மன்னிப்பு பெறுவாரா என விரைவில் முடிவெடுக்கப்படவுள்ளார். RAF உறுப்பினர்களில் சிறையில் எஞ்சியுள்ள நபர்கள் Eva Haule, மற்றும் Birgit Hogefeld இருவரும்தான். இதில் Haule ஆகஸ்ட் மாதம் நன்னடத்தையில் வெளிவர உள்ளார்.

முன்னாள் பயங்கரவாதிகள் வெளியே வரக்கூடிய நிலைமை ஜேர்மனிய அரசியல் அமைப்பு மற்றும் செய்தி ஊடகத்தில் கடுமையான பிரதிபலிப்பை சந்தித்துள்ளது. பிரச்சினையில் முக்கியமாக இருப்பது அவர்கள் வெளிவருவது தாங்கள் செய்த குற்றங்களுக்கு அவர்கள் வருத்தம் தெரிவிக்க வேண்டுமா என்பதாகும். பழைமைவாத அரசியல்வாதிகள், பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பாதுகாப்புத் துறையின் பிரதிநிதிகள் அத்தகைய அறிக்கை வெளியே அனுப்பப்படுவதற்கு முன்பு வரவேண்டும் என்று கோரும்போது, ஒரு சில பசுமை மற்றும் சமூக ஜனநாயகக் கட்சி (SPD) அரசியல்வாதிகள், அரசாங்கம் தன்னுடைய வலிமையை கருணை மூலம் காட்ட வேண்டும் என்று கூறியுள்ளனர்.

கிறிஸ்துவ ஜனநாயக ஒன்றியத்தின் பாராளுமன்ற பிரிவின் தலைவரான Voker Kauder செய்தியாளரிடம் "மனைவிகளுடைய கணவர்களையும், குழந்தைகளின் தகப்பனார்களையும் நம்முடைய ஜனநாயகத்தை அழிக்க வேண்டும் என்பதற்காக இரக்கமின்றிக் கொன்றவர்களுக்கு எவ்வித கருணையும் கூடாது." கூட்டாட்சி குற்றவியல் போலீஸ் அலுவலகத்தின் (BKA) முன்னாள் தலைவரான Horst Herold உம் Mohnhaupt விடுவிப்பதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மற்றொரு BKA முன்னாள் தலைவரான Hans Ludwig Zachert, மன்னிப்பை எதிர்ப்பதுடன் Klar "பலகொலை செய்தவர்", "பனிப்பாறை" போன்றவர் என்று கண்டித்தார். முன்னாள் ஸ்ருட்கார்ட்டின் அரசாங்க தலைமை வக்கீலான Klaus Pflieger, Klarருக்கும் Mohnhaupt இற்கும் எதிராக குற்றச்சாட்டுக்களை கொண்டுவந்தவர்களில் ஒருவர், அவருக்கு ஆதரவு கொடுத்துளார்'' என கூறினார்.

பவேரியாவின் பிரதம மந்திரியும் கிறிஸ்துவ சமூக ஒன்றியத்தின் (CSU) வின் தலைவருமான Edmund Stoiber கைதிகள் வெளிப்படையாக வன்முறையை துறக்க வேண்டும் என்றும் அரசாங்கத்திற்கு நேரிய ஆதரவை கொடுக்க வேண்டும் என்றும் கோரினார். அவர்களை விடுதலை செய்வதற்கு ஒரு முன்னிபந்தனை "உண்மையான வருத்தத்தை" அவர்கள் "வெளிப்படையாக" தெரிவிக்க வேண்டும் என்று அவர் கூறினார். "RAF பயங்கரவாதிகளுக்கு அரசாங்கம் ஒன்றும் சமரசத்திற்காக அடையாளம் காட்ட வேண்டிய தேவை இல்லை; பயங்கரவாதிகள்தாம் தங்கள் குற்றங்களுக்கு வருத்தத்தை நேர்மையாக தெரிவித்து அரசியலமைப்பு ரீதியான நாட்டிற்கு தங்கள் விசுவாசத்தையும் தெரிவிக்க வேண்டும்" என்றார்.

இத்தகைய "ஒப்புதல் வாக்குமூலங்கள்" சட்டத்தின் ஆட்சியை அடிப்படையாக கொண்ட ஜனநாயகத்தில் ஒரு முன்மாதிரி அல்ல; அவை சர்வாதிகார ஆட்சிகளில்தான் கொடுக்கப்படும்.

ஜேர்மனிய சட்டத்தின்படி, காவலில் எஞ்சியுள்ள ஆண்டுகாலங்களை குறைக்குமாறு கைதியினரின் கோரிக்கைக்கு (ஒரு குறைந்தகால தண்டனைக்கு பின்னர்) நீதிமன்றத்தின் ஒப்புதலை பெற வேண்டும். எவ்வித குற்றங்களையும் இனி கைதி செய்யமாட்டார் என் நேரிய முடிவுதான் இதற்கு நிபந்தனை ஆகும். கைதி முதலில் வருத்தம் தெரிவிக்க வேண்டும் அல்லது அரசாங்கத்தை ஆதரித்து அரசியல் அறிக்கை அளிக்க வேண்டும் என்று சட்டம் கூறவில்லை.

தற்பொழுது ஆயுள்தண்டனை அளிக்கப்பட்டுள்வர்கள் குறைந்தது 15 ஆண்டுகள் சிறையில் இருக்க வேண்டும். சராசரியாக அவர்கள் 17 - 19 ஆண்டுகளுக்கு பின்னர் வெளியே அனுப்பப்படுகின்றனர். "குறிப்பிடத்தக்க வகையில் தீவிரக்குற்றங்கள்" என்று இருந்தால் (RAF பயங்கரவாதிகளுக்கு அப்படித்தான் இருந்தது) குறைந்தபட்ச தண்டனைக்காலம் அதிகமாக்கப்படும். இவ்வழக்குகளில் சராசரி சிறைக்காலம் 23 முதல் 25 ஆண்டுகள் ஆகும்.

Mohnhaupt, Haule ஐப் பொறுத்தவரையில், இது ஒன்றும் "கருணை" அல்லது "சமரசத்தின் அடையாளம்" அல்ல; சட்டப்படி கொடுக்கப்பட்டுள்ள உரிமைகளை அளிப்பதுதான்; இது 1977 கூட்டரசு அரசியல் அமைப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பு ஒன்றின் மூலம் உறுதிபடுத்தப்பட்டுள்ளது; தவிர சட்டத்தின் ஆட்சி கோட்பாடுகள் மற்றும் மனித கெளரவக் கோட்பாடுகளின் அடிப்படையிலும் உள்ளது; இவற்றின்படி தக்க சிறைத்தண்டனையை ஒரு குற்றவாளி அனுபவித்துவிட்டால் மிகத் தீவிர குற்றங்களில் கூட கைதிக்கு உரிய சலுகைகள் உண்டு.

அரசியல்வாதிகள் மற்றும் செய்தி ஊடகம் வெறித்தனமாக, இழிவான முன்னுதாரணம் காட்டும் வகையில் RAF பயங்கரவாதிகளின் விடுதலையை எதிர்கொள்ளுவது, ஞாயிறன்று தொலைக்காட்சி ஒன்றில் Sabine Christiansen இனால் நடத்தப்பட்ட உரையாடல் நிகழ்ச்சி மூலம் வெளிப்பட்டது. Christiansen "பயங்கரவாதிகளால் பாதிக்கப்பட்டவர்கள்" மூன்று பேரை தன்னுடைய நிகழ்ச்சிக்கு அழைத்திருந்தார். 1977ல் RAF னால் கொல்லப்பட்ட ஜேர்மனிய தலைமை அரசாங்க வக்கீலின் மகன் Michael Buback; துனிசியாவில் இருக்கும் Djerba தேவாலயம் ஒன்றில் அல் கோய்தா குண்டுவீச்சினால் பாதிக்கப்பட்டிருந்த Michael Esper; RAF ஐ தோற்றுவித்த Ulrike Meihof உடைய மகளான Bettina Röhl ஆகியோர்தான் அம்மூவர். இந்த நபர்களுடைய பெரும் உணர்ச்சிகர கருத்துக்கள் Brandenburg மாநில உள்துறை மந்திரியும் ஓய்வு பெற்ற லெப்படினன்ட் ஜெனரலுமான Jörg Schönbohm (CDU) இனால் ஆதரிக்கப்பட்டு, விரிவாக்கப்பட்டது.

இந்த சூடான சூழ்நிலையில், Christiansen ஒரு பார்வையாளர்கள் கருத்துக் கணிப்பை நடத்தி நிகழ்ச்சியின் முடிவில் வினா கேட்கப்பட்டவர்களில் 91 சதவிகிதத்தினர் Mohnhaupt, Klar இவர்கள் முன்கூட்டியே விடுதலை செய்யப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர் என்று கூறினார். Suddeutsche Zeitung நாளேடு இந்நிகழ்ச்சியை "செய்தி ஊடகத்தின் திவால்தன்மையை பிரகடனப்படுத்துகிறது" என்று கூறி, மேலும் எழுதியது: "பயங்கரவாதிகள் மரணதண்டனையை எதிர்கொள்ள வேண்டுமா என்று Christiansen கேட்டிருந்தால், 91 சதவிகிதத்தினர் அதற்கு ஆதரவைத்தான் தெரிவித்திருப்பர்."

மனிதத்தன்மை நிறைந்த சமூகம் என்பதில் நம்பிக்கை உடையவர்கள் எவரும் RAF கைதிகளில் கடைசியாக இருப்பவர்கள் விடுவிக்கப்பட எடுக்கும் முயற்சியை வரவேற்பார்கள். 1992ம் ஆண்டு, ஒன்றரை தசாப்தத்திற்கு முன்பு, RAF அதன் ஆயுதமேந்திய போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டதாக அறிவித்தது. 1998ல், பத்து ஆண்டுகளுக்கு முன்பு, அந்த அமைப்பு தன்னையே கலைத்துக் கொண்டுவிட்டது; அதன் உறுப்பினர்கள் பெரும்பாலனவர்கள் விடுதலை செய்யப்பட்டு விட்டனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் தண்டனைக்காலம் முழுவதையும் அனுபவித்துவிட்டனர்; மற்றவர்கள் ஜேர்மனிய ஜனாதிபதியால் மன்னிப்பு பெற்று விரைவில் வெளிவர இருக்கின்றனர். தற்பொழுதய கூட்டாட்சி ஜனாதிபதி Horst Kohler க்கு முன்பு இருந்த நான்கு ஜனாதிபதிகளும் RAF உறுப்பினர்களுக்கு மன்னிப்பு கொடுத்துள்ளனர்; அவர்களில் ஒருவர் கூட ஆயுதமேந்திய போராட்டப் பாதைக்குச் செல்லவில்லை.

இந்த ஆண்டு மார்ச் மாதம் Brigitte Mohnhaupt அவருடைய குற்றங்களுக்காக குறைந்தபட்ச தண்டனையை அனுபவித்திருப்பார். கூட்டாட்சி வக்கீல் அலுவலகம் எஞ்சியிருக்கும் அவருடைய தண்டனை நிறுத்திவைக்கப்பட வேண்டும் என்ற அவருடைய கோரிக்கைக்கு ஆதரவு கொடுத்துள்ளது; ஸ்ருட்கார்ட்டில் உள்ள அரசாங்க நீதிமன்றம் இக்கருத்திற்கு இணங்கியுள்ளது. அரசியல்வாதிகளும் செய்தி ஊடகமும், சில மற்றவற்றை காட்டிலும் கூடுதலான தயக்கத்துடன், சட்டத்தின் எழுத்துப்படி அனைத்தும் பின்பற்றப்படுகிறது என்பதை ஏற்றுள்ளனர்.

Mohnhaupt ஐப் போலன்றி, Christian Klar 26 ஆண்டுகள் குறைந்தபட்ச தண்டனை என்று பெற்றார்; இது இன்னும் 2 ஆண்டுகளில் முடிவடைகிறது. 2003ம் ஆண்டு மன்னிப்பிற்கான விண்ணப்பத்தில் அவர் தன்னுடைய செயல்களின் விளைவுகள் பற்றி வருத்தம் தெரிவித்திருந்தார். "இயல்பாகவே என்னுடைய குற்றத்தை உணர்கிறேன். பாதிப்பாளர்களுடைய உணர்வுகளை புரிந்து கொள்ளுகிறேன்; அவர்களுடைய கஷ்டங்களை கண்டு வருந்துகிறேன்." என கூறியிருந்தார்.

2001TM Klar தொலைக்காட்சியில் இப்பொழுது மறைந்துவிட்ட செய்தியாளர் Günter Gaus ஆல் பேட்டி காணப்பட்டார்; அவர் Klarருக்கு மன்னிப்பு விண்ணப்பம் பற்றி ஆலோசனை கொடுத்திருந்தார். Gaus உடைய மகளான Bettina உடைய கருத்தின்படி, பல தசாப்தங்கள் சிறையில் இருந்ததால் உடலயல்ரீதியாகவும், உளவியல்ரீதியாகவும் தாக்கத்திற்கு உள்ளாகி Klar கொண்டிருந்த உணர்வு Gaus ஐ "ஆழ்ந்து உலுக்கிவிட்டன". இந்த மதிப்பீடு இக்கட்டுரையை எழுதியவராலும் பகிர்ந்து கொள்ளப்படுகிறது; அவர் அப்பேட்டியை நேரில் கண்டிருந்தார். 54 வயதான Klar, தத்துவமும், வரலாறும் படித்தவர், மருத்துவ வகையில் சுகாதாரத்துடன் இருக்கிறார் எனத் தோன்றினாலும், மறதியுடனும், தன்னைப்பற்றி தெளிவில்லாத நிலையிலும் இருந்து, செய்தியாளருடைய வினாக்களை புரிந்து கொள்ளுவதிலும் தன்னுடைய எண்ணங்களை வெளியிடுவதிலும் தெளிவற்று இருந்தார்.

பல RAF கைதிகள் தங்கள் காவலில் பல ஆண்டுகள் முற்றிலும் ஒதுக்கி வைக்கப்பட்ட நிலையில் கழித்துள்ளனர்; அவர்களுடைய சிறை சூழல் அவர்களுடைய ஆளுமையை அழிக்க வேண்டும் என்ற முழு உணர்வுடன் வடிவமைக்கப்பட்டிருந்தது.

தனிநபர் பயங்கரவாதத்தின் அரசியல் முட்டுச்சந்தி

மார்க்சிஸ்ட்டுக்கள் எப்பொழுதுமே தனிநபர் பயங்கரவாதத்தின் அரசியல் மற்றும் வழிவகைகளையும் மற்றும் RAF ஐ நிராகரித்துள்ளனர். புரட்சிகர அரசியல் தொழிலாளர்களின் பரந்த அடுக்குகள் விடுதலை அடைவதை நோக்கமாகக் கொண்டு, அவர்களுடைய அரசியல் உணர்மை மற்றும் கலாச்சாரத்தரத்தை உயர்த்துவதை நோக்கமாக கொண்டது. அப்பொழுதுதான் அவர்கள் முதலாளித்துவ முறையை அகற்றி, ஒரு மனிதத்தன்மை வாய்ந்த வகையில், உண்மையான ஜனநாயக அடிப்படையில் சமூகத்தை அமைக்க முடியும். சோசலிசக் கொள்கைகள் எனவே எப்பொழுதும் ஜனநாயகம் மனிதத்தன்மை ஆகியவற்றிற்கான போராட்டத்துடன் பிணைந்திருக்கும்.

இதற்கு மாறாக, பயங்கரவாதம் பொதுமக்களுக்கு வெறுப்புணர்வை ஊட்டி, அதிலிருந்து சுயாதீனமாக செயற்பட்டு, நீண்ட காலத்தில் ஆட்சி வர்க்கத்தின் ஏதேனும் ஒரு பகுதியை வன்முறைத் தாக்குதல்கள் சந்தர்ப்பவாத தந்திரங்கள் ஆகியவற்றின்மூலம் செல்வாக்கிற்கு உட்படுத்த விரும்புகிறது. அதே நேரத்தில் இது அரசாங்கத்தின் பிரதிநிதிகளுக்கு அடிப்படை ஜனநாயக உரிமையை பலவீனமாக்க போலிக்காரணத்தை கொடுக்கிறது; சோசலிச அரசியலுக்கான போராட்டத்தை கடினமாகவும் ஆக்குகிறது. RAF ன் வரலாறு இதை இன்னும் தெளிவாகக் காட்டுகிறது.

RAF ன் "இரண்டாம் தலைமுறையின்" முக்கியத் தலைவர்களாக Mohnhaupt மற்றும் Klar கருதப்படுகின்றனர். சிகப்பு இராணுவப் பிரிவு "முதல் தலைமுறையின்" ஆரம்ப வெளிப்பாடு Ulrike Meinhof, Andreas Baader, Gudrun Ensslin ஆகியோர் மூலம் 1970ல் நடைபெற்றது. இதன் உறுப்பினர்கள் மாணவர் எதிர்ப்பு இயக்கத்தில் இருந்து வந்தனர்; அவை அமெரிக்கா வியட்நாமில் நடத்திய காலனித்துவ போருக்கு எதிராகவும் மற்றும் மேற்கு ஜேர்மனியின் போருக்கு பிந்தைய முன்னாள் நாஜிக்களின் மேலாதிக்கம் இருந்தமைக்கு எதிராகவும் இயக்கப்பட்டவை.

இத்தலைமுறையை உருவாக்கி அவர்களை எழுச்சிக்கு உந்தி தள்ளிய காலகட்டத்தில் நாஜி வக்கீல் Hans Gobke அதிபர் Konrad Adenauer க்கு தலைமை அலுவலராக இருந்தார்; படையை விட்டு நீங்கியதற்காக மார்ச் 1945ல் ஒரு கடற்படைவீரரை மரணதண்டனைக்கு உட்படுத்திய Hans Fibinger என்னும் ஒரு நாஜி கடற்படை நீதிபதி பாடன் வூர்ட்டெம்பேர்க்கின் பிரதம மந்திரியாக இருந்தார்; இவர்களைத் தவிர பல நாஜி பேராசிரியர்கள் இன்னமும் தங்கள் உரைகளை பல்கலைக்கழகத்தில் ஏதும் நடக்காதது போல் ஆற்றிக் கொண்டிருந்தனர். நாஜிக்களின் "மக்கள் நீதிமன்றங்களில்" பணியாற்றிய சில நீதிபதிகள் --இவை பல ஆயிரக்கணக்கான மரண தண்டனைகளை விதித்திருந்தன -- போருக்குப் பின் விசாரணையை எதிர்கொண்டனர்; அவர்களும் விடுவிக்கப்பட்டனர்.

சோசலிச முன்னோக்கை நெடுநாட்களுக்கு முன்னரை கைவிட்டிருந்த சமூக ஜனநாயகக் கட்சி, இன்னும் குறிப்பிடத்தக்க வகையில் ஆலைகளிலும் தொழிற்சங்கங்களிலும் ஆதரவை கொண்டிருந்தது. கிழக்கு ஜேர்மனியில் ஸ்ராலினிச அதிகாரத்துவம், அதன் மேலைநாட்டு கூட்டாளர்களுடன் கூடி தொழிலாள வர்க்கத்தின் எத்தகைய புரட்சி இயக்கத்திற்கும் விரோதம் காட்டியது. அதே நேரத்தில் மாணவர் இயக்கம் பிராங்க்பேர்ட் பள்ளியின் (Frankfurt School) மார்க்சிச விரோத கொள்கையினால் பெரிதும் செல்வாக்கிற்கு உட்பட்டிருந்தது; இது தொழிலாள வர்க்கம் ஒரு புரட்சி காரணியாக இருக்க முடியாது எனக் கூறிவிட்டது; அவர்கள் பூர்ஷ்வாமயப்படுத்தப்பட்டு "நுகர்வு போதையினால்" ஊக்கம் அடைந்துள்ள கூட்டம் என்றும் கூறியதுடன்; மேலும் மூன்றாம் உலகத்தில் இருந்த கெரில்லா இயக்கங்கள் மற்றும் குட்டிமுதலாளித்துவ சக்திகளை பெருமைப்படுத்தியது.

RAF தொடக்கத்தில் இருந்தே தொழிலாள வர்க்கம் மற்றும் மக்களுடைய பரந்த பிரிவுகள்பால் வெறுப்புணர்வைத்தான் கொண்டிருந்தது. ஏப்ரல் 1968ல் Baader, Ensslin மற்றும் பலரும் இரண்டு பிராங்பேர்ட் பல்பொருள் அங்காடிகளுக்கு தீ வைத்தனர். அதே ஆண்டு அக்டோபர் மாதம், தீ வைத்தவர்கள் மீதான விசாரணை முடிவுற்று அவர்களுக்கு மூன்றாண்டு தண்டனை வழங்கப்பட்டது. Ensslin தீவைப்பிற்கு முழுப் பொறுப்பையும் ஏற்றார்; "வியட்நாமில் மக்கள் கொலைசெய்யப்படுவதை மக்கள் சிறிதும் அக்கறை இல்லாமல் பார்த்துக் கொண்டிருந்ததற்கு இது எதிர்ப்பு" என்பதால் தான் அவ்வாறு செய்ததாக இவ்வம்மையார் கூறினார்.

1972ம் ஆண்டு மூனிச்சில் ஒலிம்பிக் விளையாட்டில் பங்கு பெற்ற 11 இஸ்ரேலிய விளையாட்டுவீரர்கள் கடத்திச் செல்லப்பட்டு பின்னர் பாலஸ்தீனிய பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டனர். RAF இதை "ஏகாதிபத்திய எதிர்ப்பு, சர்வதேசத்தன்மை உடையது, பாசிச-எதிர்ப்புச் செயல்" என்று புகழ்ந்தது. அமெரிக்க தொழிலாள வர்க்கத்தின் மிகவும் ஒடுக்கப்பட்ட பிரிவுகளில் இருந்து அதிகளவில் வந்திருந்த இளம் படையினர்களுடைய உயிர்களை பொருட்படுத்தாது ஜேர்மனியில் இருந்த இராணுவத் தளங்களை RAF தாக்கியது.

தன்னுடைய பங்கிற்கு, ஜேர்மனிய அரசாங்கம் கடுமையான ஆக்கிரோசத்துடன் RAF க்கு எதிராக மட்டும் இல்லாமல் இடதுசாரிகள், சோசலிஸ்ட்டுக்கள் மீது நடந்து கொண்டது. செய்தி ஊடகமும் அரசியல்வாதிகளும் முதலாளித்துவத்தை குறைகூறுபவர்கள் அனைவரையும் பயங்கரவாதிகள் என்று அவதூறு தாக்குதல்களை நடத்தின.

1972ம் ஆண்டு "மே தாக்குதல்" என அழைக்கப்பட்ட நிகழ்வு தொடங்கியவுடன், RAF இன் "முதல் தலைமுறையினர்" அனைவருமே கைது செய்யப்பட்டனர். அதே ஆண்டு "தீவிரவாத-எதிர்ப்பு சட்டங்கள்" என்று அழைக்கப்பட்டவை அறிமுகப்படுத்தப்பட்டன; இவை இடதுசாரி அமைப்பு உறுப்பினர் எவரும் பொதுப்பணியில் வேலைசெய்வதை தடுக்கும் அச்சுறுத்தலை கொண்டிருந்தன.

RAFன் "இரண்டாம் தலைமுறை"யின் அரசியல், RAF கைதிகளை அரசாங்கம் விடுதலை செய்வதற்காக படுகொலைகள் முயற்சிகள் மற்றும் ஆட்கடத்தல்களில் ஈடுபடும் முயற்சிகளை அடிப்படையா கொண்டிருந்தது. வன்முறை, சந்தர்ப்பவாதம் இவற்றின் கலவையை கொண்டிருந்த கூறுபாடாக இது இருந்தது.

1970 களின் நடுப்பகுதியில் இருந்து அரசாங்கம், சமூக ஜனநாயகவாதி Helmut Schmidt ன் கீழ், வேலைநிறுத்த அலை, மாணவர் தீவிரமயமாக்கப்படுதல் இவற்றிற்கு எதிராக பதில் தாக்குதலை தொடங்கியது; இவை 1968ல் இருந்து தொடர்ந்து பெருகியிருந்தன. அரசாங்கம் இரக்கமற்ற முறையில் ஆட்கடத்தல் முறை மூலம் RAF கைதிகளை விடுவிக்கும் முயற்சிகளை நசுக்கியது. மிக அதிக பாதுகாப்பு உடைய சிறைகளில் வைக்கப்பட்டிருந்த கைதிகளின் உரிமைகள் இன்னும் குறைவாக்கப்பட்டன; இந்த சித்திரவதையில் ஒரு வகையான தனிமை சிறைவாசமும் அடங்கியிருந்தது.

RAF தலைமை இத்தகைய கடுமையான விடையிறுப்பையும் மற்றும் அரசாங்கம் சமரசத்திற்கு தயாராக இல்லாததையும் கண்டு வியந்தது. உதாரணமாக ஏப்ரல் 1975ல் ஸ்டாக்ஹோமில் இருந்து ஜேர்மனிய தூதரகம் RAF ஆல் ஆக்கிரமிக்கப்பட்டபோது அரசாங்கம், இரண்டு தூதரகப் பணியாளர்கள் கொலைசெய்யப்பட்ட பின்னரும் விட்டுக்கொடுக்கத் தயாராக இல்லை; மாறாக தூதரகத்தை தாக்கிப் பிடிக்குமாறு அரசாங்கம் உத்தரவிட்டது.

இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் RAF கைதிகள் சிறையில் நிலைமைகளை மேம்படுத்தகோரி உண்ணாவிரத போராட்டம் நடத்திக் கொண்டிருக்கையில், ஜேர்மனிய தலைமை அரசாங்க வக்கீலும் அவருடைய இரு சக ஊழியர்களும் படுகொலை செய்யப்பட்டனர். பின்பு கூட்டாட்சி அரசாங்க வக்கீல் அலுவலகத்தின்மீது நடத்தப்பட்ட ராக்கெட் தாக்குதல் ஒன்று தோல்வியுற்றது. வங்கியாளர் Jurgen Ponto ஒரு தோல்வியடைந்த கடத்தல் முயற்சியில் கொலைசெய்யப்பட்டார். ஜேர்மனிய பொதுவிமானம் ஒன்றை பாலஸ்தீனிய கமாண்டோ குழு ஒன்று கடத்தியதில் RAF தொடர்பு கொண்டிருந்தது, விமானி கொலை செய்யப்பட்டதில் முடிவுற்றது. கோரப்பட்டபடி RAF கைதிகளை விடுதலை செய்வதற்கு பதிலாக ஜேர்மனிய அரசாங்கம் பணயகக்கைதிகளை பிடித்தல் நெருக்கடியை பலாத்காரம் மூலம் சமாளிக்க உத்தரவிட்டது.

RAFல் "1977 தாக்குதல்" மிகவும் முக்கியமான காலகட்டமாகும்; இதில் முதலாளிகள் கூட்டமைப்பின் தலைவரான Hanns-Martin Schleyer கடத்தப்பட்டார். அவருடன் இருந்த மூன்று நண்பர்களும் அவருடைய காரோட்டியும் கடத்தலின்போது கொல்லப்பட்டனர். பின்னர் RAF ஒப்புக் கொண்டபடி, அதன் நோக்கம் "அவருடைய தொடர்புகள், செல்வாக்கை" பயன்படுத்தி கைதிகளை விடுவித்தால் என்பதாகும். ஆனால் சமூக ஜனநாயக கட்சி தலைமையிலான அரசாங்கம் சமரசத்திற்கு தயாரில்லை என்று உறுதியாக இருந்து Schleyer இறந்தாலும் அதையும் ஏற்கத் தயாராக இருந்தது. கோரப்பட்ட பிணைப் பணத்தை தயார் செய்திருந்த Schleyer குடும்பத்தின் விருப்பங்களுக்கு எதிராக அரசாங்கத்தின் இக்கருத்துதான் மேலோங்கி நின்றது.

இரக்கமற்ற தன்மை மற்றும் மிருகத்தனமான தன்மை ஆகியவற்றில் RAF ஈடுபட்டிருந்தமை ஆளும் உயரடுக்கிற்கும் செய்தி ஊடகத்திற்கும் அதற்கு எதிராக வெறியைத் தூண்டிவிட்டு ஜனநாயக உரிமைகளை மிதிக்கும் சூழ்நிலையை உருவாக்க உதவியது. உளரீதியாகவும், உடலளவிலும், அறநெறித்தன்மையிலும், அரசியல் விரோதிகள் மட்டும் அழிக்கப்படவில்லை; இல்லங்கள் சோதனைகள், போக்குவரத்து கட்டுப்பாடுகள் "தற்காப்பிற்கு", "தவறுதலாக" என்ற முறையில் நிகழ்ந்த பல சம்பவங்களால் முற்றிலும் நிரபராதியான மக்களும் கொல்லப்பட்டனர்.

அதே நேரத்தில், பயங்கரவாத தாக்குதல்கள் ஆளும் வர்க்கத்திற்கு புதிய, கூடுதலான ஜனநாயக உரிமைகள் மீது கடுமையான தாக்குதல் நடத்துவதற்கு போலிக் காரணங்களாக உதவின.

தீவிரவாத-எதிர்ப்பு சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்ட இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர், 1974ம் ஆண்டு குற்ற விசாரணையின்போது வக்கீல்கள் ஒதுக்கப்படுவதை ஏற்கும் வகையில் ஒரு சட்டம் இயற்றப்பட்டது; இதையொட்டி பல குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஒரே ஒரு வழக்கறிஞர் மூலம்தான் வாதிடுவது நடைமுறையாயிற்று. சிறைக் கைதிகளுக்கு இடையே வக்கீல் மூலம் தகவல் பறிமாறிக்கொள்ள உதவுவது இதன்மூலம் தவிர்க்கப்பட்டது. குற்றவாளிகளுக்காக நியமிக்கப்பட்ட வக்கீல்கள் எண்ணிக்கை மூன்றாக குறைக்கப்பட்டது.

குற்றம்சாட்டப்பட்டவர் சிறையில் நல்ல நிலைமை வேண்டும் என்பதற்காக எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டால் அவர் இல்லமலேயே குற்ற விசாரணை நடத்தப்படுவதற்கும் சட்டம் அனுமதித்தது.

வழக்கறிஞர்களுக்கும் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கும் இடையே நடக்கும் பேச்சுக்களை கண்காணித்தல் என்பது சட்டபூர்வமாக்கப்பட்டது. 1976ம் ஆண்டு அரசியல் கருத்துக்களை பரந்தளவிலான வெளிப்படுத்துதல் குற்றம்சார்ந்தவை என அறிவிக்கப்பட்டன; இதில் "அரசியலமைப்பிற்கு விரோதமான வன்முறைக்கு ஆதரவளித்தல்", "பயங்கரவாத அமைப்புக்களுக்கு ஆதரவு கொடுத்தல்" என்பவை சேர்க்கப்பட்டன. வழக்கை தொடரும் அதிகாரிகள் நாட்டின் பாதுகாப்பு தொடர்புடையவர்களை கைதுசெய்ய உத்திரவிடும் உரிமை வழங்கப்பட்டது; மற்றவர்களோடு குற்றம்சாட்டப்பட்டவர் ஒத்துழைக்கலாம் அல்லது விசாரணையின்போது தப்பியோட முற்படலாம் என்ற சந்தேகத்திற்கு இடம் இல்லையென்றாலும் இந்த அதிகாரம் வழங்கப்பட்டது.

1977ம் ஆண்டு "தொடர்பைத் துண்டிக்கும் சட்டம்" என்று அழைக்கப்பட் சட்டம் வந்தது; இதை ஒட்டி RAF கைதிகள் முழுமையாக தனிமையாக்கப்பட்டனர்; இதுவோ முன்னரே எவ்வித சட்ட அடிப்படையிலும் இல்லாமல் நடைமுறையில் இருந்து வந்தது. ஓராண்டிற்கு பின்னர், வக்கீல்கள் கூடாது என்பதும், போலீஸ் சோதனைகள் நடத்தும் அதிகாரத்தை விரிவுபடுத்தும் வாய்ப்புக்களும் பெருகின.

1980களின் இறுதியிலும் 1990களின் தொடக்கத்திலும், எந்த நடவடிக்கைகள் RAF னால் செய்ப்பட்டவை, எவை அரசாங்கத்தால் நேரடியாக செய்யப்பட்டவை என்று நிர்ணயிப்பது கடினமாயிற்று. RAF பல இறுதி நடவடிக்கைகளை செய்யவில்லை என்ற சந்தேகங்கள் எழுந்தன; RAF பல செயல்களுக்கு பொறுப்பு கூறியதாக வந்த கடிதங்கள் உண்மையான குற்றவாளிகளிடம் இருந்து கவனத்தை திசைதிருப்பத்தான் பயன்பட்டன.

உதராணமாக, Deutsche Bank உடைய செய்தித் தொடர்பாளரான Alfred Herrhausen 1989 இல் கொலைசெய்யப்பட்டிருந்தபோது, வங்கியில் இருந்த மற்ற உறுப்பினர்களுடன் கடுமையான பிரச்சனைக்குட்பட்டிருந்தார்; அவர் இறந்த அன்று அவர் வேறு இடத்திற்கு இடம்மாற்றப்படவிருந்தார். முக்கியமாக பல அமெரிக்க வங்கிகளிடம் இருந்து பெரும் கடனை வாங்கியிருந்த பல மூன்றாம் நாடுகளின் கடன்கள் இரத்து செய்வதற்கு ஆதரவாக Herrhausen பேசியபின்னர், அவர் பல மரண அச்சுறத்தல்களை எதிர்கொண்டிருந்தார். இவற்றை அவர் தீவிரமாக எடுத்துக் கொண்டு சர்வதேச நிதியக் கூட்டங்களுக்கு செல்கையில் துப்பாக்கித் தோட்டாக்கள் நுழையாத கவசங்களை அணிந்து செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார். இவருடைய மரணத்திற்கு RAF தான் பொறுப்பா என்பது என்றுவரை தீர்மானிக்க முடியாத விஷயமாகும்.

முன்னாள் RAF உறுப்பினர்களை வெளியே விடுவது பற்றிய தற்பொழுதைய பிரச்சாரம் மீண்டும் ஜனநாயக உரிமைகள் கடுமையாக தாக்குதலுக்கு உட்பட்டுள்ள நேரத்தில் வந்துள்ளன. "பயங்கரவாதத்திற்கு எதிரான போர்" என்ற பெயரில் அரசாங்கம் ஜேர்மனிக்குள்ளேயே இராணுவத்தை பயன்படுத்துவதை சட்ட நெறியாக்க முயன்று கொண்டிருக்கிறது; அத்துடன் சித்திரைவதை மூலம் பெறப்படும் ஒப்புதல் வாக்குமூலங்கள் மற்றும் சந்தேகத்தின்பேரில் தடுப்புக் காவலில் வைப்பது ஆகியவற்றையும் சட்டபூர்வமாக்க முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

Mohnhaupt, Klar இருவரும் கால் நூற்றாண்டு சிறைவாசத்திற்கு பின்னர் விடுவிக்கப்பட வேண்டுமா கூடாதா என்ற பிரச்சினையை சுற்றியிருக்கும் வெறித்தனம், உண்மையில் அரசாங்க கருவிகளின் அதிகாரத்தை பாரியளவில் பெருக்கும் சூழ்நிலைக்கு ஆதரவான பிரச்சாரத்தின் ஒரு பகுதியாகும்; இத்தகைய நிலைப்பாடு பெருகிய மக்கள் எதிர்ப்பிற்கு எதிராக இயக்கப்பட்டு தீவிரமாக ஜனநாயக உரிமைகளையே அச்சுறுத்துகிறது.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved