World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :ஆசியா : பாகிஸ்தான்

Pakistan: Musharraf regime reiterates martial law threat

US-sponsored deal with Bhutto begins to unravel

பாகிஸ்தான்: முஷாரஃப் ஆட்சி இராணுவ ஆட்சி அச்சுறுத்தலை மீண்டும் வலியுறுத்தல்

பூட்டோவுடனான அமெரிக்க ஆதரவு பேரம் வெளியாகத் தொடங்குகிறது

By Vilani Peiris and Keith Jones
25 October 2007

Back to screen version

நாட்டின் தலைமை நீதிமன்றம் 2012 வரை தளபதி பர்வேஸ் முஷாரஃப் பதவியில் இருப்பதற்கு அதன் ஆசியை தராவிட்டால் இராணுவ ஆட்சியைத் திணிப்பதற்கான அதன் அச்சுறுத்தலை பாகிஸ்தானின் அமெரிக்க ஆதரவு இராணுவ ஆட்சி மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

முஷாரஃப் ஜனாதிபதியாக "மறு தேர்வு செய்யப்பட்டதின்" அரசியல் முறைமைத் தன்மை மீது உச்ச நீதிமன்றம் தீர்ப்புக்கூறும்வரை, அதிகாரத்தை பகிர்ந்து கொள்ளுதல் மற்றும் அடுத்த ஜனவரி மாதம் சட்டமன்ற தேர்தல்கள் நடக்க இருக்கும் வரை பதவியில் இருக்கும் இடைக்கால அரசாங்கம் ஒன்றை அமைப்பது பற்றி பெனாசீர் பூட்டோ மற்றும் அவருடைய பாக்கிஸ்தான் மக்கள் கட்சியுடன் பேச்சு வார்த்தைகளை இரத்துசெய்துள்ளதாகவும் கூட கூறப்படுகிறது.

பாகிஸ்தானில் அதிக அளவு விற்பனையாகும் ஆங்கில நாளிதழான Dawn கொடுத்த தகவல்படி, "உள்ளிருப்பவர்களின் படி ...தளபதி முஷாரஃப்பிற்கு எதிராக ஒரு தீர்ப்பு வந்தால் நாட்டின் முழு அரசியல் காட்சியும் மாறக்கூடும், குறிப்பாக PPP உடனான புரிதல்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

புஷ் நிர்வாகம் முக்கியமான அமெரிக்க நண்பர் என்று தொடர்ந்து பாராட்டும் முஷாரஃப், அக்டோபர் 6ம் தேதி ஜனாதிபதி தேர்தல் மோசடியை சட்டரீதியாக ஏற்காவிட்டால் பாக்கிஸ்தான் ஆயுதப் படைகளின் தலைவர் என்பதிலிருந்து பதவி இறங்க மறுப்பதுடன் இராணுவ ஆட்சியை திணிக்கப்போவதாகக் கூறுவதன் மூலம் நீதிமன்றத்தையும் பாக்கிஸ்தான் மக்களையும் அச்சுறுத்தி தன்விருப்பப்படி அதனை ஏற்க வைக்க திரும்பத்திரும்ப முயற்சி செய்து வருகிறார். ஆகஸ்ட் மாத நடுப்பகுதியில் அமெரிக்க வெளியுறவு அமைச்சரான கொண்டலீசா ரைஸ் தேசிய நெருக்கடி நிலையை அறிவிப்பதிலிந்து தளபதியை தடுப்பதற்காக அதிகாலை 2 மணி உள்ளடங்கலாக ஒரே நாளில் இருமுறை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாகக் கூறப்படுகிறது.

முஷராஃப்பிற்கு எதிரான தீர்ப்பு, இராணுவ ஆட்சியை ஏற்படுத்தக்கூடும் என்ற முந்தைய அரசாங்க அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் வகையில், அக்டோபர் 18 அன்று அறிவிக்கப்பட்ட முஷாரஃப் தேர்விற்கு எதிர்ப்புக்களை விசாரித்துக் கொண்டிருக்கும் உச்சநீதிமன்றக் குழுவின் தலைவர் நீதிபதி ஜவேட் இக்பால், "எங்களைப் பொறுத்தவரையில் இத்தகைய அச்சுறுத்தல்களுக்கு மதிப்பு கிடையாது. சட்டம், வழக்கின் தகுதி இவற்றின் அடிப்படையில் தீர்ப்பு காணப்பட வேண்டிய பிரச்சினை இது" என்றார்.

முஷாரஃப் தேர்தலின் அரசியலமைப்புக்குட்பட்டதன்மை பற்றிய வாதங்கள் கேட்பு விசாரணை அடுத்த வார இறுதிக்குள் நீதிமன்றத்தில் முடிந்துவிடும் என்று இக்பால் கூறினார்.

முஷாரஃப் பெரும் ஏமாற்றம் அடையும் வகையில், தலைமை நீதிமன்றம் சில முக்கியமான தீர்ப்புக்களை அரசாங்கத்தின் செயற்பட்டியலுக்கு எதிராக கொடுத்துள்ளது; அவர் நீதிமன்றத்தை தன்னுடைய மறு தேர்தலுக்கு ஆராயாது முத்திரையிடும் வகையில் அழுத்தம் கொடுப்பதற்கு தலைமை நீதிபதியை பணிநீக்கம் செய்தது அவருக்குத்தான் தோல்வியைக் கொடுத்தது; ஏனெனில் அதையொட்டி பெரும் வெகுஜன எதிர்ப்புக்கள் அலையென எழுந்தன. இராணுவ ஆட்சி நெருங்கிய முதலாளித்துவத்தை நடைமுறைப்படுத்தியுள்ள, அரசாங்கம் புரந்து ஆதரித்தல் மற்றும் முதலாளித்துவ வளர்ச்சியின் நலன்கள் இரண்டிலும் ஏகபோகம் செய்துகொண்டுள்ள மட்டத்தில், ஆழ்ந்த சமூக சமத்துவமின்மைக்கு தலைமை வகித்துவரும் மற்றும் ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் அமெரிக்க ஆக்கிரமிப்பு யுத்தங்களை மைய அச்சாகக் கொண்டு சுழலும் எதேச்சாதிகார அரசாங்கத்திற்கு எதிரான பரந்த மக்களின் கோபத்தின் மீதாக பாகிஸ்தானின் உயரடுக்கு கொண்டுள்ள பரந்த அச்சத்தின் விளைவைத்தான் காட்டுகிறது.

ஆயினும்கூட, பாகிஸ்தானின் மிக உயர்ந்த நீதிமன்றம் முஷாரஃப்பின் சமீபத்திய ஆட்சிக் கவிழ்ப்பு மாற்றத்திற்கு அதன் ஒப்புதலை கொடுக்கக்கூடும். நீதிமன்றம் சர்வாதிகாரத்திற்கு உடன்பாடு கொண்டுள்ளது பற்றி நீண்ட, உவப்பற்ற வரலாறுதான் உள்ளது; இராணுவ ஆட்சி பற்றி உயரடுக்கிற்குள் அதிகமான, பரந்த முறையில் அதிருப்தி இருந்தபோதிலும், இராணுவத்திற்கும் மக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டால் அது முதலாளித்துவ ஆட்சியை பெரிதும் கீழறுத்துவிடும் என்ற கண்டுணர்தலும் உள்ளது.

பாக்கிஸ்தானின் தலைமை நீதிமன்றம் முஷாரஃப் இராணுவ ஆட்சி மாற்றத்தை கொண்டுவந்தது, பின்னர் அரசியலமைப்பில் மாற்றங்களை கொண்டுவந்து ஜனாதிபதியின் அதிகாரங்கள் மற்றும் இராணுவம் அரசாங்க கொள்கையில் கொண்டிருந்த பங்கு இவற்றை பெரிதும் அதிகரித்து, அதே நேரத்தில் நாட்டில் நன்கு அறியப்பட்டிருந்த அரசியல்வாதிகளான பூட்டோ, பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-காய்தே ஆஜாமின் (PML-Q) தலைவர் நவாஸ் ஷெரிப் ஆகியோரை மூன்றாம் முறை பிரதம மந்திரி பதவிக்கு போட்டியிடக்கூடாது என்று தடுத்ததற்கும் தன்னுடைய ஆசியை கொடுத்திருந்தது.

நிறைய தேர்தல் பிரச்சினைகளின் அரசியலமைப்புத் தன்மை பற்றிய அதன் தீர்ப்பு வரும் வரை அக்டோபர் 6ம் தேதி ஜனாதிபதித் தேர்தலை தாமதப்படுத்தப்படுத்துமாறு கேட்ட மனுக்களையும்கூட நீதிமன்றம் நிராகரித்தது. இராணுவத்தால் ஒப்புக்காக நடத்தப்பட்ட தேர்தல்களில் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தேர்ந்தெடுக்கப்பட்ட சட்ட மன்றங்கள் கொண்டிருக்கும் ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கும் வாக்காளர் தொகுதியின் செல்தகைமை பற்றியும் பாகிஸ்தானின் தலைமை இராணுவத் தளபதியாக இருக்கையிலேயே ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடும் முஷாரஃப்பின் அரசியலமைப்புக்குட்பட்ட தன்மை பற்றி நீதிமன்றம் தீர்ப்பு அளித்தாகவேண்டும்.

தன்னுடைய பங்கிற்கு, புஷ் நிர்வாகம் முஷாரஃப்பின் மோசடித்தேர்தலின் சட்டரீதியானதன்மையை தான் ஏற்பதாக தெளிவாக்கி விட்டது.

தலைமை நீதிமன்றம் முஷாரஃப்பிற்கு ஆதரவாகத் தீர்ப்பு அளித்தாலும், பரந்த மக்களின் எதிர்ப்ப்பின் வெடிப்பைத் தாக்கும் அல்லது தவிர்க்கும் மற்றும் தவிர்க்கவும் மற்றும் பூட்டோவும் அவருடைய PPP உடனுமான அமெரிக்க ஆதரவைக் கொண்ட அதிகாரப் பகிர்வு பேரத்தை தகர்க்கவும் அரசாங்கம் விரைவில் இராணுவ சட்டத்தைக் கொண்டுவருதல் மிகவும் சாத்தியமாகும். தற்பொழுது தேசிய மற்றும் பஞ்சாப் அரசாங்கங்களில் மேலாதிக்கம் செய்யும் இராணுவ ஆதரவு PML-Q தலைமை மற்றும் இராணுவத்தின் சில பகுதிகளுக்குள்ளும் பூட்டோவுடனான பேரத்தை எதிர்க்கின்றனர் ஏனெனில் அது இவர்களுடைய அதிகாரம், செல்வம் ஆகியவற்றை அச்சுறுத்துகின்றது.

அரசாங்கம் அக்டோபர் 18 அன்று பெனாசீர் புட்டோ மற்றும் அவரை வரவேற்ற ஊர்வலத்தின் மீது நடந்த, 135 பேருக்கும் மேலானவர்கள் கொல்லப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களை, நீண்ட காலமாக உறுதிமொழி அளிக்கப்பட்டுள்ள சட்ட மன்றத் தேர்தல்களுக்கான பிரச்சாரங்களை மட்டுப்படுத்துவதற்கும் ஒரு போலிக்காரணமாகப் பற்றிக்கொள்ளும்.

ஞாயிறன்று அரசாங்கம் பாதுகாப்பின் பெயரால் தான் அனைத்து பிரச்சார ஊர்வலங்கள்மீதும் முழு தடையை விதிப்பதாகவும் அரசாங்கம் குறிப்பிட்டுள்ள இடங்களில்தான் பொதுக் கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும் என்றும் அறிவித்தது. "அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரச்சாரங்களை முழுமையாக நாங்கள் தடை செய்ய முடியாது. எனவே மாநில அரசாங்கங்கள் குறிப்பிடும் இடங்களில் கட்சிகள் பொதுக் கூட்டங்கள் நடத்த அனுமதிக்கப்படும்" என்று உள்துறை மந்திரி Aftab Ahad Khan Sherpao குறிப்பிட்டார்.

ஆனால் பூட்டோ மற்றும் பிற எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் அரசாங்கம் தடைசெய்தல் என்பதைச் செயல்படுத்தினால் தாங்கள் அதற்குக் கட்டுப்பட மாட்டோம் என்று பொதுக் கூச்சல் எழுப்பிய அளவில், அரசாங்கம் முற்றிலும் மாறுபட்ட வகையில் பொது ஊர்வலங்களை தடை செய்யும் நோக்கம் இல்லை என்று கூறிவிட்டது.

Muttahida Kajlis-e-Amal என்னும் இஸ்லாமிய அடிப்படைவாதக் கட்சிகளின் கூட்டணியின் செயலதிபரான மெளலானா பசுல் ரெஹ்மான், முஷாரஃப் ஆட்சியின் மற்ற எதிர்ப்பாளர்களால் அரசாங்கத்திற்கு உடந்தையாக இருக்கிறார் என்று அடிக்கடி விமர்சிக்கப்பட்டுள்ளார். ஆனால், அவரும் கூட புதனன்று அரசாங்கம் வேண்டுமேன்றே "எதிர்க்கட்சியினரை குலைக்கும் வகையில் பல உத்திகளைக் கையாள்வதன் மூலம் நாட்டில் நெருக்கடி மற்றும் இராணுவ ஆட்சியை திணிக்கும்" வகையிலான நிலைமையைத் தோற்றுவிக்கும் என்ற எச்சரிக்கையை வெளியிட்டார்.

இதற்கிடையில், அமெரிக்கா சமரசம் செய்து கொண்டுவந்துள்ள பூட்டோவிற்கும் முஷாரஃப்பிற்கும் இடையேயான அதிகாரப் பகிர்வு பேரமானது அந்தரத்தில் நூலிழையில் ஊசலாடுகிறது.

முஷாரஃப் ஆட்சியின் பெருகிய முறையில் தனிமைப்படுத்தப்பட்ட தன்மையை நன்கு உணர்ந்த புஷ் நிர்வாகம், பிரிட்டனின் பிரெளன் அரசாங்கத்தின் உதவியுடன், முஷாரஃப், இராணுவப் பிரிவு மற்றும் பூட்டோவிற்கு இடையே ஒரு பேரத்தை வடிவமைப்பதன் மூலம் பாகிஸ்தானின் இராணுவ ஆதிக்கத்திற்கு உட்பட்ட அரசாங்கத்தை மறுஉருக்கொடுக்க முயற்சித்துள்ளது. அவற்றின் நோக்கம் கடந்த காலத்தில் ஒரு முன்னேற்றமான, ஏன் ஒரு சோசலிசக் கட்சி என்று கூடக்காட்டிக் கொண்ட PPP ஐ பயன்படுத்தி முஷாரஃப் ஆட்சிக்கு கூடுதலான சட்டரீதியானதன்மையை அளிப்பதாகும்; இதையொட்டி அந்த அரசாங்கம் இன்னும் கூடுதலான வகையில் பாக்கிஸ்தானின் வரலாற்றளவில் பிற்போக்கான பகுதிகளில் இருக்கும் ஆயுதமேந்திய இஸ்லாமியக் குழுக்கள் மற்றும் தாலிபனுக்கு ஆதரவு கொடுக்கும் அமைப்புக்களை வேரோடகற்ற இரத்தம் தோய்ந்த இராணுவத் தாக்குதலில் இறங்க முடியும்.

தொடர்ந்த ஊழல் குற்றங்களில் இருந்து பூட்டோ மன்னிப்புப் பெற்ற விதத்தில் அதன் மூலம் PPP அக்டோபர் 6ம் தேதி போலித் தேர்தலுக்கு ஆதரவு கொடுக்கும் வழிவகை கிடைத்ததில் அமெரிக்காவின் உதவி இருந்தாலும் முஷாரஃப்-பூட்டோ பங்காளித்தனத்தை இணைக்க முயலும் அதன் முயற்சி இரு முகாம்களுக்குள்ளும் அப்பேரத்திற்குக் காட்டப்படும் வலுவான எதிர்ப்பினால் கீழறுக்கப்பட்டுள்ளது; மேலும் தன்னுடைய ஜனாதிபதி அதிகாரங்கள் குறைக்கப்படக்கூடாது என்று முஷாரஃப் வலியுறுத்தியிருப்பது, கடைசியாய் குறிப்பிடினும் முக்கியத்துவம் குறையாத,, அரசாங்கத்திற்கு எதிரான மக்களுடைய எதிர்ப்பு பெருகியுள்ளதில் ஒரு முக்கிய காரணமாகவும் உள்ளது.

அக்டோபர் 18 அன்று பூட்டோவின் கராச்சி ஊர்வலத்தின்மீது நடந்த தாக்குதல், எட்டு ஆண்டுகள் வெளிநாட்டில் இருந்து அவர் திரும்பிய ஒரு சில மணி நேரங்களுக்குள் நடந்தது, அதிகாரப் பகிர்வு பேரத்தை சரியச்செய்யும் வழிவகைகளின் அரசியல் இயக்கு ஆற்றலை முடுக்கி விட்டிருக்கலாம்.

அரசாங்கத்திற்குள் இருக்கும் கூறுபாடுகள் ஒரு தாலிபான் அல்லது அல் கொய்தா முயற்சியான தன்னைக் கொலை செய்தலுக்கு வசதி செய்தல் அல்லது முடுக்கிவிடுதல் என்பவற்றை செய்வதாக பூட்டோ பலமுறையும் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார். குறிப்பாக கராச்சி முக்கிய சாலையில், அவருடைய ஊர்வலம் கடந்துவந்த போது, தெரு விளக்குகள் அணைக்கப்பட்டுவிட்டன, இது தற்கொலைத் தாக்குதலை பெரிதும் எளிதாக்கியது என்று அவர் சுட்டிக்காட்டினார்.

பாக்கிஸ்தானின் இராணுவம் மற்றும் அரசாங்கம் நீண்டகாலமாக ஆயுதமேந்தும் இஸ்லாமியக் குழுக்களுக்கு ஆதரவு கொடுத்துள்ள வரலாற்றுச் சான்றில், பூட்டோவின் கூற்றுக்கள் நடக்கக்கூடியவைதான், விசாரிக்கப்படுவதற்கு தகைமை உள்ளவைதான்.

ஆனால் அரசாங்கத்தின் ஆதரவாளர்கள், குறிப்பாக PML-Q, செளத்ரி ஷுஜட் ஹுசைன் ஆகியோர் பூட்டோவின் குற்றச்சாட்டுக்களுக்கு கண்டனம் கூறி, மக்கள் பரிவுணர்வைப் பகிரங்கமாக பெறும் வகையில் PPP படுகொலை முயற்சியை நாடகமாடியது என்று குற்றம் சாட்டியுள்ளனர்.

பூட்டோவுடன் எவ்வித உடன்பாடும் கூடாது என்று கடுமையாக எதிர்த்தவர் என்று அறியப்பட்டுள்ள ஹுசைன் திங்களன்று ஒரு தொலைக்காட்சி வலைப்பின்னலிடம் கூறினார்: "இது ஒரு சதித்திட்டம் என்று நாங்களும் கூறுவோம்."; இச் சதித்திட்டம் பூட்டோவின் கணவர் ஆசிப் அலி ஜர்தாரியினால் "திட்டமிடப்பட்டு", "செயல்படுத்தப்பட்டது" என்று ஹுசைன் கூறினார். இதற்கு "நிரூணபணமாக" தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்ட ஒரு சில நிமிஷங்களுக்கு முன்பு கவச வாகனத்தின் கூரைப்பகுதியில் இருந்து பூட்டோ கீழே இறங்கினார் என்ற உண்மையை ஹுசைன் சுட்டிக் காட்டினார்.

பாக்கிஸ்தானிய அரசாங்கம் குண்டுவீச்சு விசாரணையில் வெளிநாட்டு பாதுகாப்புப் பிரிவுகளையும் தொடர்புபடுத்த வேண்டும் என்று பூட்டோ கூறியுள்ளார்; ஆனால் இது அரசாங்கத்தினால் திட்டவட்டமாக நிராகரிக்கப்பட்டது. "பாக்கிஸ்தான் ஒரு இறைமை பெற்ற நாடு" என்று பிரதம மந்திரியும் சிட்டிபாங்க்கின் முன்னாள் துணைத் தலைவருமான ஷெளகத் அஜிஸ் அறிவித்தார். "என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்பது எங்களுக்குத் தெரியும். எங்களுக்கு உதவி தேவையில்லை."

பூட்டோவின் விருப்பத்திற்கு இணங்க, கராச்சி பயங்கரவாதத் தாக்குதலை விசாரித்த மூத்த துப்பறியும் நிபுணர் பதவியில் இருந்து விலகிவிட்டார். விசாரணையை அவர் முன்னின்று நடத்துவது பற்றி பூட்டோ எதிர்ப்புத் தெரிவித்திருந்தார்; ஏனெனில் 1999ல் பெனாசீரின் கணவர் ஊழல் குற்றங்களை ஒட்டி காவலில் இருந்தபோது, சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்படுவதில், அந்த அதிகாரியும் உடன் இருந்தார் என்று அவர் கூறினார்.

அரசாங்கத்திற்கும் பூட்டோவிற்கும் இடையே சீரான உறவுகள் இல்லை என்பதற்கான கூடுதலான குறிப்பைக் காட்டும் வகையில், அரசாங்கம் அவரை Exit Control List (ECL) என்ற பட்டியலில் வைத்துள்ளது; இதன்படி நாட்டை விட்டு வெளியே செல்லும் உரிமை அவருக்கு மறுக்கப்பட்டுள்ளது. பூட்டோவின் செய்தித்தொடர்பாளர் Fauhatullah Babar, பூட்டோவிற்கு பொது மன்னிப்பு கொடுத்துள்ள National Reconciliation Ordinance ஐ ஒட்டி வெளியேறல் பற்றிய உத்தரவு அகற்றப்பட்டிருக்க வேண்டும் என்றும் பாக்கிஸ்தானுக்கு பூட்டோ வந்தவுடன் மீண்டும் சுமத்தப்பட்டுள்ளது என்று BBC யிடம் தெரிவித்தார்.

இவ்விதத்தில் பாக்கிஸ்தானுக்கு வலுவான அமெரிக்க ஆதரவுடன் முஷாரஃப்புடன் பங்காளித்துவத்தை அடைவதற்காக பூட்டோ திரும்பிய ஒருவாரத்திற்குள் அவரும் இராணுவம் வழி நடத்தும் அரசாங்கத்தின் பெரும்பகுதியும், குறைந்த பட்சம் பகிரங்கமாக முஷாரஃப்பிற்கு எதிராக இல்லை என்றாலும், ஒன்றுக் கொன்று எதிரிடையான வகையில் கத்தியை உறையில் இருந்து உருவி விட்டுள்ளன.

ஆனால், பாக்கிஸ்தான் மக்களின் மிக அடிப்படையான ஜனநாயக உரிமைகள் முற்றிலும் ஒதுக்கப்படக்கூடியவை என்று இரு திறத்தாரும் உடன்பட்டுள்ளனர். PPP ஐப் பொறுத்தவரையில்--கட்சியின் நிறுவனர் ஜுல்பிகார் அலி பூட்டோ தளபதி ஜியாவுல் ஹக்கின் உத்தரவுகளின்படி தூக்கிலிடப்பட்டார் என்ற உண்மையில்தான் மக்கள் ஆதரவு பெருமளவு இதற்கு உள்ளது; அவருடைய மகளான பெனாசீர், பாக்கிஸ்தானிய இராணுவ சர்வாதிகாரங்கள் தொடர்ந்து பதவியில் இருப்பதற்கு பெரும் ஆதரவைக் கொடுக்கும் வாஷிங்டனின் உத்தரவின்பேரில் இராணுவத்துடன் தன்னை இணைத்துக் கொள்ள தயாராக இருப்பதின் மூலம் இது விளக்கப்படுகிறது.

புஷ் நிர்வாகத்தின் தயவைப் பெறுவதற்காக, பூட்டோ பலமுறையும் மத்திய ஆசியா, மத்திய கிழக்கில் அதன் கொள்ளை இலக்குகளை தொடருவதற்கு வாஷிங்டனுக்கும் போதுமானதை செய்யாததற்காக முஷாரஃப் ஆட்சியைத் தாக்கி பேசியுள்ளார். தற்போதைய பாக்கிஸ்தானிய அரசாங்கம் ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவினால் இருத்தப்பட்டுள்ள அரசாங்கத்திற்கு போதுமான இராணுவ உதவியை கொடுக்கவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளதோடு, ஈரானுக்கு எதிரான அமெரிக்கப் பிரச்சாரத்திற்கு உதவும் வகையில் பாக்கிஸ்தானின் அணுசக்தித்திட்டத்தின் முன்னாள் தலைவரை IAEA இடம் ஒப்படைக்கத் தயார் என்றும், சில சூழ்நிலையில் அமெரிக்க இராணுவம் பாக்கிஸ்தானுக்குள் நடவடிக்கைகளை எடுக்க அனுமதிக்கத் தயார் என்றும் உறுதி மொழி கொடுத்துள்ளார்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved