World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Retiring military chief declares: American people can't vote to end Iraq war

ஓய்வு பெற்ற இராணுவத் தலைவர் அறிவிக்கிறார்: ஈராக் போருக்கு முடிவு கட்ட அமெரிக்க மக்கள் வாக்களிக்க முடியாது

By Patrick Martin
4 October 2007

Back to screen version

ஜனநாயகத்தை அப்பட்டமாக நிராகரிப்பதில் குறிப்பிடத்தக்கதான அறிக்கை ஒன்றில், பதவி விலகும் கூட்டுப் படைகளின் தலைவரான தளபதி பீட்டர் பேஸ் திங்களன்று ஈராக் போரை எதிர்ப்பவர்கள் அதற்கு எதிராக வாக்களிப்பதின் மூலம் அதை ஒரு முடிவுக்குக் கொண்டுவர முடியாது என்று கூறினார்.

ஜனாதிபதி ஜோர்ஜ் டபுள்யூ புஷ், பாதுகாப்பு அமைச்சர் ரொபேர்ட் கேட்ஸ் மற்றும் நூற்றுக்கணக்கான பென்டகன் படைத்துறை அல்லாத மற்றும் இராணுவ அதிகாரிகள் அடங்கிய பார்வையாளர்கள் கூட்டத்தில் பேஸ் தன்னுடைய கருத்துக்களை வெளியிட்டார்; தனக்குப் பின் பதவியில் அட்மிரல் மைக்கேல் முல்லன் பொறுப்பு ஏற்க இருக்கும் நிகழ்ச்சியில் அவர் இவ்வாறு கூறினார். கூட்டத்தில் இருந்த எவரும் பேசின் அறிக்கைக்கு எதிர்ப்பு ஏதும் தெரிவிக்கவில்லை.

நிகழ்ச்சி நடந்த இடமான Ft.Myre க்கு வெளியே, போர் எதிர்ப்பாளர்கள் சிலர் தங்கள் எதிர்ப்பை தெரிவிப்பதற்கு ஒரு ஒலிபெருக்கிக் குழாயை பயன்படுத்தினர். "ஜோர்ஜ், கொலையை நிறுத்து!", "போர்க் குற்றங்களுக்காக பொய்கூறியவரை கைது செய்!", இவற்றுடன் நிர்வாகம், பென்டகன் பற்றிய மற்ற கண்டனங்களும் இருந்தன.

ஆர்ப்பாட்டக்காரர்கள் இருந்ததை அறிந்த வகையில், பேஸ் போருக்கு எதிரான எதிர்ப்பு என்பது தடையற்ற பேச்சுரிமையை பயன்படுத்துதல் என்றாலும் சில வரம்புகள் உள்ளன என்றார்:

"இந்த உரையாடல் 'போரில் இருந்து வெளியேறுவது நாம் வாக்களிப்பதின்மூலம் முடியுமா' என்பது பற்றி அல்ல என்பதை ஒவ்வொருவரும் புரிந்துகொள்ள வேண்டும் என நான் விரும்புகிறேன். நம் மீது போர் தொடுத்துள்ள ஒரு விரோதியை கொண்டிருக்கிறோம். நாம் போரில் இருக்கிறோம். நாம் நமது வாழ்க்கையை வாழ விரும்பும் வழியிலிருந்து அதைத் தடுத்து நிறுத்த அவர்கள் முயலுகின்றனர். எனவே உரையாடல் 'நாம் போரில் உள்ளோமா' என்பதல்ல, எங்கு, எப்படி, எவ்வாறு சிறந்த விதத்தில் அப்போரை நடத்துவது என்பதுதான்."

வழக்கமாக கூறப்படும் புஷ் நிர்வாகத்தின் "பெரும் பொய்" உத்தியைத்தான் பேஸ் கையாண்டு, ஈராக் போரை செப்டம்பர் 11, 2001 ல் உலக வர்த்தக மையம் மற்றும் பென்டகன்மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல்களுக்கு விடையிறுப்பு என்று கூறுகிறார்.

அமெரிக்காவின்மீது ஈராக்கிய மக்கள் "போர் அறிவிப்பு" ஒன்றும் கொடுக்கவில்லை; மாறாக அமெரிக்க ஏகாதிபத்தியம் ஒரு தூண்டுதலற்ற, சட்டவிரோத படையெடுப்பு மற்றும் ஆக்கிரமிப்பை அந்நாட்டின் எண்ணெய் வளங்களை பெறுவதற்கும் மத்திய கிழக்கில் அமெரிக்க மேலாதிக்கப் பாத்திரத்தை நிலைநிறுத்துவதற்கும்தான் நடத்தியது.

ஆனால் பேசின் கருத்துக்கள் 9/11 மற்றும் ஈராக்கை வேண்டுமேன்றே இணைத்துப் பெரிதாக்கும் முயற்சிகளுக்கும் அப்பால் சென்றது. அமெரிக்க இராணுவத்தின் மிக உயர்ந்த அதிகாரி ஒரு அமெரிக்க வெற்றி என்ற அடிப்படையை தவிர வேறு எந்த விதத்திலும் ஈராக் போருக்கு முடிவு என்பதை பற்றிய பொது விவாதம் கூடாது என்று அறிவிக்கிறார். "எங்கு, எப்படி, எவ்வாறு சிறந்த விதத்தில் அப்போரை நடத்துவது என்பதுதான்."

போருக்கு எதிர்ப்பாளர்களின் மீதான தன்னுடைய தாக்குதலுக்கு முன்னுரையாக பேஸ் சுதந்திரம் மற்றும் ஜனநாயகம், மாறுபட்ட கருத்துக்களை கூறும் உரிமை இவற்றிற்கான ஆதரவை வெளியிட்ட வகையில் தெரிவித்தார். ஆனால் அவருடைய அறிவிப்பின் உட்குறிப்புக்கள் ஆழ்ந்த முறையில் ஜனநாயக-எதிர்ப்பைத்தான் கொண்டிருந்தன.

அமெரிக்க மக்களின் கருத்து மிகப் பெரிய முறையில் ஈராக்கில் நடக்கும் போருக்கு எதிர்ப்பைக் காட்டியுள்ளது. பேஸின் கருத்துக்கள் வெளிவந்த மறுநாள் வாஷிங்டன் போஸ்ட் நடத்திய கருத்துக் கணிப்பின்படி மக்களின் தெளிவான பெரும்பான்மை போரை நிராகரித்து அதற்கான நிதியங்கள் தீவிரமாகக் குறைக்கப்பட வேண்டும் அல்லது முற்றிலும் அகற்றப்படவேண்டும் என்று விரும்பியுள்ளது. புஷ் போரைத் தொடர்வதற்கும், விரிவாக்குவதற்கும் இசைவு எண்ணிக்கை மிகக் குறைவாக இருக்கிறது; அதைத் தடுத்து நிறுத்த ஏதும் செய்யாமல் இருக்கும் ஜனநாயகக் கட்சிக் கட்டுப்பாட்டிலுள்ள காங்கிரசுக்கும் ஒப்புதல் குறைவாகத்தான் உள்ளது.

இந்த போர் எதிர்ப்பு பெரும்பான்மை வாக்குப் பெட்டியை பயன்படுத்தி கொள்கையில் மாற்றத்தை ஏற்படுத்த நிர்பந்திப்பதற்கு அனுமதிக்கப்படக்கூடாது என்று பேஸ் கூறுகிறார். அதாவது மக்கள் விரும்புவது எப்படி இருந்தாலும், போர் காலவரையின்றி நடத்தப்படவேண்டும் என்கிறார். போரை நிறுத்துவதற்கு ஒரு தேசிய அளவிலான வாக்கெடுப்பு இருந்தால், பேஸ் ஒருவேளை அரசாங்கம் அதை கருத்திற்கொள்ளாமல் இராணுவக் குருதி கொட்டுதலை தொடரவேண்டும் என்று கோருவார் போலும். அவர் உரையை முடிக்கையில் கூறியுள்ள கருத்தின்படி, "நாம் வெற்றிபெறுவோம். அதில் சந்தேகம் ஒன்றும் இல்லை."

இந்த வாதத்தின் இத்தகைய தர்க்க பூர்வ முடிவுரை ஈராக்கில் நடக்கும் போருக்கு மக்கள் எதிர்ப்பை சட்டவிரோதமாக்குதல் மற்றும் வலுக்கட்டாயமாக நசுக்குதல், தேர்தல்களை நிறுத்திவைத்தல் மற்றும் அமெரிக்காவில் ஒரு இராணுவ சர்வாதிகார ஆட்சியை நிறுவுதல் என்பது ஆகும்.

திங்களன்று வெளிவந்துள்ளது, தன்னுடைய பதவியின் கடைசி மாதத்தில் தளபதி பேஸ் வெளியிட்ட தொடர்ச்சியான கருத்துக்களில் சமீபத்தியதும் மிகப் பிற்போக்குத்தனம் நிறைந்ததுமானதும் ஆகும். இராணுவம் அதன் கீழ்மட்ட அணிகளில் பல முறையும் ஓரினச் சேர்க்கையாளர்களை தடைசெய்ததற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்; கொலின் பவல் போல் "பிரிவின் ஒருமித்த உணர்வு" இராணுவ ஒழுக்கம் போன்றவற்றைக் கூறி இரட்டைப் பேச்சாக அவர்கள் இராணுவத்தில் சேக்கப்படக்கூடாது என்று பேசாது, வெளிப்படையாக கிறிஸ்துவ அடிப்படைவாதத்தை ஏற்ற வகையில் பேசியுள்ளார். ஓரினச் சேர்க்கை அறநெறி பிறழ்ந்தது என்று கடந்த மாதம் ஒரு செனட் குழுக்கூட்டத்தில் அவர் கூறினார், அது "இறைவனின் கட்டளையை" மீறுவதால் இராணுவத்தில் அனுமதிக்கப்படக்கூடாது என்றார்.

பேஸ் வெளிப்படுத்தியுள்ள கசப்பான கடுமைத் தன்மை, தனிப்பட்ட முறையிலும், நிறுவன அமைப்பிலும் வேர்களை கொண்டுள்ளது. இரண்டாம் உலகப் போருக்கு பின்னர், கூட்டுப்படைகளின் தலைவர் என்ற இப்பதவியில் மிகக் குறுகிய காலத்தில் இரண்டே ஆண்டுகளில் அவர் விலகுகிறார்.

பாதுகாப்பு மந்திரி கேட்ஸ் கோடையில் பேசை இரண்டாம் பதவிக்காலத்திற்கு நியமிக்கக்கூடாது என்று முடிவெடுத்தார் --நடைமுறையாகியிருந்த அப்படிப்பட்ட பதவிக்கால விரிவாக்கம், ஜனநாயகக்கட்சி கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் செனட்டில் விவாதத்திற்குரிய பிரச்சினையாக இவருடைய நியமனம் ஆகிவிடக்கூடும் என்ற காரணத்தை கூறினார்.

நவம்பர் 2006 தேர்தல்களில் வெற்றிபெற்ற பின்னர், ஜனநாயகக் கட்சியினர் ஈராக் போருக்கு நிதியத்தை குறைக்க மறுத்து விட்டனர்; மே மாதம் மட்டும் $100 பில்லியன் நிதிக்கு அனுமதி அளித்தனர். ஈராக்கில் கொள்கை மாறுதல்கள் பற்றி செனட்டில் எந்த நடவடிக்கையையும் எடுப்பதில் அவர்கள் தோல்வியுற்றுள்ளனர்; மந்திரி கேட்ஸ், ஈராக்கில் உள்ள அமெரிக்கப் படைத்தலைவர் தளபதி ஜெனரல் பெட்ரீயஸ் மற்றும் நாட்டின் தரைப்படைத் தலைவர் தளபதி ஜோர்ஜ் பேசி இன்னும் பிற பென்டகன் உயர்மட்ட அதிகாரிகள் நியமனத்திற்கு ரப்பர்-ஸ்டாம்ப் போலத்தான் செயல்பட்டு வருகிறது.

இப்படி பேஸ் வெளியே அனுப்பப்பட்டுள்ளது ஒன்றுதான் ஜனநாயகக் கட்சியின் இராணுவக் கொள்கை பிரிவில் ஸ்தூலமான "சாதனை" ஆகும்; புஷ் மற்றும் கேட்ஸ் இவருடைய இராணுவப் பொறுப்பை முடிக்க முடிவெடுத்தனர், இரண்டாம் பதவிக்காலத்திற்கு முயலவில்லை என்பது ஐயத்திற்கு இடமில்லாமல் தளபதிக்கு உளைச்சலை கொடுத்துள்ளது.

போருக்கு எதிரான பெயரிடப்படாத எதிர்ப்பாளர்கள்மீது அவர் தாக்குதலை இயக்கினாலும், இந்த உணர்விற்குத்தான் தன்னுடைய கருத்து வெளிப்பாடுகளில் பேஸ் முக்கியத்துவம் கொடுத்தார். அவர்கள் "தங்கள் சொந்த வெறுப்புணர்வை வெளிப்படுத்துவதில் ஆர்வத்தை காட்டுகிறார்களே அன்றி, எங்கிருந்து நாம் எங்கு செல்ல வேண்டிய தேவை உள்ளதோ அங்கு செல்வதற்கு சிறந்த வழி என்பதைப் பற்றி பேசுவதில்லை" என்றார்.

பேஸின் கருத்துக்களுடைய சாராம்சம் முக்கியமானது என்பதைப் போலவே வாஷிங்டனின் அரசியல், செய்தி ஊடக வட்டங்கள் அதை எதிர்கொண்டவிதமும் முக்கியமானதாகும்; அவை இவருடைய போர் பற்றிய ஜனநாயக முறை முடிவெடுத்தலை நிராகரித்தது பற்றிக் கூறியதை வெறும் கொட்டாவி விட்டுக் கேட்டன. அவருடைய கருத்துக்களை எந்த ஜனநாயகக் கட்சி உறுப்பினரும் கண்டிக்கவில்லை; போரை நிறுத்த மக்கள் வாக்களிக்கும் உரிமை பெற்றிருக்கின்றனர் என்று காக்கவும் இல்லை. புஷ் நிர்வாகத்தின் அதிகாரி எவரும் எந்த எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை. செய்தி ஊடகங்களில் நிகழ்வு பற்றிய தகவல்களும் மேம்போக்கானதாகத்தான் இருந்தன.

ஓரிடத்தில் மட்டும் பேசின் அறிக்கை உயர்ந்த பாராட்டைப் பெற்றது. National Review Online ஒரு தலையங்கத்தை "தளபதி பேசை வேலையில் இருத்துக" என்று கூறி, வேர்ஜீனிய குடியரசுக் கட்சியினரை ஓய்வு பெறும் செனட்டர் ஜோன் வார்னருக்குப் பதிலாக தங்கள் வேட்பாளராக ஆதரிக்குமாறு வலியுறுத்தியது; இந்த உணர்வு மற்றொரு வலதுசாரி வெளியீடான Human Events னாலும் எதிரொலிக்கப்பட்டது. National Review Online தலையங்கம் பெரும் இசைவுடன் கூறியது: "மற்ற மூத்த இராணுவத் தலைவர்கள் போல் இல்லாமல் கத்தோலிக்க தளபதி பேஸ் சமூகப் பிரச்சினைகளில் தன்னுடைய பழமைவாத கருத்துக்களை வெளிப்படையாகப் பேசியுள்ளார்."

ஒருவிதத்தில் தளபதி பேசின் கருத்துக்கள் முற்றிலும் உண்மையாகும். இப்பொழுதுள்ள அரசியல் முறையில், ஒரு பெருநிறுவன, நிதியத் தன்னலக் குழு இரு அரசியல் கட்சிகள் மற்றும் பொதுக் கொள்கைக் கருவிகள் அனைத்தையும் கட்டுபாட்டிற்குள் கொண்டுள்ள நிலையில், "போரை நிறுத்த வாக்களித்தல்" என்று கூறுவது முடியாததுதான்.

2006ம் ஆண்டு மில்லியன் கணக்கான மக்கள் வாக்களிக்க சென்று இப்பொழுது பயனற்றது என்று போய்விட்ட முயற்சியான போரை நிறுத்தக் கட்டாயப்படுத்துவது என்பதை மேற்கொண்டனர். இப்பொழுது பெருநிறுவனக் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் செய்தி ஊடகம், தொழிற்சங்க அதிகாரத்துவம் மற்றும் தாராண்மை வெளியீடுகளான Nation போன்றவை அமெரிக்க மக்களை ஒரு ஜனநாயகக் கட்சி ஜனாதிபதியையும் காங்கிரசையும் 2008ல் தேர்ந்தெடுப்பது போரை முடிவிற்குக் கொண்டுவரும் என்று நம்பவைக்க ஒவ்வொரு முயற்சியும் செய்யப்படுகின்றன.

ஆனால் கடந்த வாரம்தான், ஜனநாயகக் கட்சியின் மூன்று முக்கியமான ஜனாதிபதி வேட்பாளர்களும் ஈராக்கில் இருந்து அமெரிக்கத் துருப்புக்களை வெளியேற்றுவது பற்றி கருத்துக்கள் கூற மறுத்துவிட்டனர்; அந்நாட்டின்மீது புஷ் படையெடுத்து 10 ஆண்டுகளுக்கு பின்னர் ஜனவரி 20, 2013ல் அவர்களுடைய இரண்டாம் பதவியேற்பு நடக்கக்கூடும்: அப்பொழுதும் இப்படித்தான் என்றுவிட்டனர். ஜனநாயகக் கட்சியின் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் காங்கிரஸ் எப்படித் தோல்வியடைந்துள்ளது என்பதைத்தான் இது உறுதிபடக் காட்டுகிறது: அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் ஒரு கட்சியாக ஜனநாயகக் கட்சி உள்ளது, ஏகாதிபத்திய நலன்களைப் பாதுகாப்பதற்கு மிக உறுதியுடன் நிற்கிறது என்பதே அது.

மிக அடிப்படை ஜனநாயக கோட்பாடுகள் தொடர்பாக பேசின் வெளிப்படையான மறுப்பு மற்றும் படைத்துறை அல்லாததின் மீதான கட்டுப்பாட்டில் இராணுவ மேலாதிக்கத்தை வலியுறுத்தல் உயர் பதவியிலுள்ள இராணுவ அதிகாரிகள் மற்றும் புஷ் நிர்வாகத்தில் உள்ள அவர்களின் கூட்டாளிகளால் மக்களின் போர் எதிர்ப்பை மிரட்டி அடக்குவதை நோக்கமாய் கொண்ட வரிசைக்கிரமமான அரசியல் குறுக்கீடுகளில் சமீபத்தியதாகும். கடந்த மாதம்தான் ஜனாதிபதி புஷ், துணை ஜனாதிபதி செனி மற்றும் முக்கிய குடியரசுக் கட்சியினர், ஜனநாயகக் கட்சியின் அழுத்தம் கொடுக்கும் குழுவான MoveOn.Org மீது தளபதி பெட்ரீயசை குறைகூறி நியூ யோர்க் டைம்சில் அது வெளியிட்ட விளம்பரம் ஒன்றிற்றாக ஒரு அரசியல் சூனிய வேட்டையை நடத்தினர்.

நியூ யோர்க் டைம்ஸ் கருத்தை நிராகரித்ததை தொடர்ந்து, செனட்டிலும் மக்கள் மன்றத்திலும் பல கணிசமான ஜனநாயகக் கட்சி ஆதரவுடன் MoveOn.org ஐக் கண்டித்து மெக்கார்த்திய முறைத் தாக்குதல் பத்தியில் வெளிவருவதற்கு காரணமாயிற்று.

இந்த நிகழ்வுகள் அமெரிக்க சமூகத்தில் இராணுவத்தின் மகத்தான, பெருகிய அரசியல் செல்வாக்கை குறிப்பவை ஆகும்.

உலக சோசலிச வலைத் தளம் எழுதியதுபோல் (See "New York Times public editor repudiates MoveOn.org ad on General Petraeus"):

"இதன் பிறகு என்ன? இராணுவத்தை விமர்சிப்பது தேசத் துரோகம், தேசியப் பாதுகாப்பிற்கு தீங்கு என்று சட்ட விரோதமாக்கப்படுமா? சோசலிசத் தலைவர்கள் ரோசா லுக்சம்பர்க் மற்றும் கார்ல் லீப்னெக்ட் இருவரும் ஆழமான கருத்துக்களுக்கும் ஜேர்மனிய இராணுவவாதத்திற்கும் எதிரான அச்சமற்ற போராட்டத்திற்காகவும் 20ம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் கெய்சரின் ஜேர்மனியில் அத்தகைய நிலைக்குத்தான் உட்பட்டு சிறையில் தள்ளப்பட்டனர்.

"இறுதியில், இந்த நிகழ்வு அமெரிக்காவில் ஒரு இராணுவமுறையிலான ஆட்சி கவிழ்ப்பு சதி என்ற உண்மையான ஆபத்தைத்தான் வெளிப்படுத்தியுள்ளது; அது இராணுவத்தினால் நடத்தப்பட்டாலும், இராணுவத்தைப் பயன்படுத்தி படைத்துறை அல்லாத தலைவர்கள் நடத்தினாலும் சரி -- இரண்டுமே நடைமுறையிலும் சிந்தனை அளவிலும் அதை நியாயப்படுத்துபவை; மேலும் அமெரிக்க தொழிலாள வர்க்கத்தினுள் இருக்கும் அரசியல் மற்றும் சமூக அதிருப்தியை நசுக்கும் நோக்கம் கொண்டவை."

ஜனநாயக உரிமைகள் மீது இத்தகைய முன்னோடியில்லாத தாக்குதல் மற்றும் இராணுவ சர்வாதிகாரத்தின் வளர்ந்து வரும் ஆபத்து இவ்விரண்டும், ஜனநாயகக் கட்சியுடன் முற்றிலும் உடைத்துக் கொள்ளுதல் மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்து ஒரு சோசலிச வேலைத்திட்டத்திற்கு அர்ப்பணித்துக்கொண்ட, உழைக்கும் மக்களின் புதிய வெகுஜன அரசியல் கட்சி ஒன்றை கட்டியமைத்தல் மூலம் மட்டுமே தோற்கடிக்கப்படமுடியும்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved