World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

German Left Party leadership forces Hesse state candidate to resign

ஹெஸ்ஸ மானில வேட்பாளரை ஜேர்மன் இடதுகட்சி தலைமை இராஜிநாமா செய்ய கட்டாயப்படுத்துகிறது

By Ulrich Rippert
11 September 2007

Back to screen version

இரு வாரங்களுக்கு முன்பு பிராங்பேர்ட்-மைனில் நடைபெற்ற இடது கட்சி நிறுவன மாநாட்டில், கட்சித் தலைவர் ஒஸ்கார் லாபொன்டைன், உட்கட்சி ஜனநாயகத்தின் தகுதிகள் பற்றி புகழ்ந்து பேசினார். சமூக ஜனநாயக கட்சித் (SPD) தலைவர் வில்லி பிராண்டின் கோஷமான, "இன்னும் கூடுதலாக ஜனநாயக உரிமைகளை கேளுங்கள்!" என்பதை அவர் மேற்கோளிட்டு சமூகத்தின் ஜனநாயக மயமாக்கல் என்பது உள்கட்சி ஜனநாயகத்தின் வளர்ச்சியுடன் தொடங்குகிறது என்றும் அறிவித்தார்.

"எமது கட்சியில் கொள்கைகள் உறுப்பினர்களின் ஜனநாயக முடிவின்படி நிர்ணயிக்கப்படுகின்றன" என்று லாபொன்டைன் அறிவித்தார். "அரசியல் திசை பற்றிய அனைத்து முக்கிய பிரச்சினைகளிலும் நாம் உறுப்பினர்களிடையே ஒரு வாக்கெடுப்பு நடத்தி, கட்சி அடித்தளத்தில் இருக்கும் கருத்து கேட்கப்படுவது மட்டும் அல்லாமல் செயல்படுத்தவும்படுகிறது என்பதை உறுதி செய்வோம்" என்றார்.

பெரும்பாலும் வயது முதிர்ந்த தொழிற்சங்கங்கள் மற்றும் சமூக ஜனநாயகக் கட்சியில் இருந்து வந்தவர்கள், மற்றும் இரு தோழமை ஸ்ராலினிச அமைப்புக்களான ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சி (DKP) மற்றும் ஜேர்மன் சோசலிச ஐக்கிய கட்சி (SED) ஆகியவற்றில் இருந்தும் வந்த அதிகாரத்துவத்தினர் பெரும் உற்சாகத்துடனும் நீடித்த கரவொலியுடனும் இதை வரவேற்றனர்.

ஆனால் இடது கட்சி பகிரங்கமாக தன்னுடைய உள்கட்சி ஜனநாயகக் கருத்து நடைமுறையில் எப்படி இருக்கும் என்பதை நிரூபணம் செய்வதற்கு எட்டு நாட்களே பிடித்துள்ளன. கட்சியின் நிர்வாகக் குழு வரவிருக்கும் ஹெஸ்ஸ மானில தேர்தலில் முக்கிய வேட்பாளரை "அவராக உவந்து" இராஜிநாமா செய்யுமாறு கட்டாயப்படுத்தி உள்ளது; அவரோ கட்சி மாநாட்டில் மிகப் பெரிய பெரும்பான்மையுடன் நிர்வாகக்குழு முன்வைத்திருந்த வேட்பாளரை எதிர்த்து நின்று அதிக வாக்குகளை பெற்றிருந்தார்.

என்ன நடந்தது?

ஹெஸ்ஸ மாநாட்டிற்கு முன்பு, லாபொன்டைன் ஜனவரி மாத இறுதியில் நடைபெற உள்ள மாநிலத் தேர்தலில் ஏற்கனவே ஒருவரை முக்கிய வேட்பாளராக நிறுத்த இருந்தார். அவர் விரும்பிய வேட்பாளர் ஹெஸ்ஸ தொழிற்சங்கக் கூட்டமைப்பின் (DGB) முன்னாள் தலைவரான Dieter Hooge ஆவார்; இவர் 40 ஆண்டுகளுக்கும் மேலாக சமூக ஜனநாயக கட்சி உறுப்பினராக இருந்துள்ளதுடன், லாபொன்டைனுடனும் நீண்ட காலமாகத் தொடர்புகளை கொண்டவர் ஆவார். மூன்று ஆண்டுகளுக்கு முன்புதான் ஹூஜ் சமூக ஜனநாயகக் கட்சியில் இருந்து இராஜிநாமா செய்து, WASG எனப்படும் தேர்தலுக்கு மாற்றீடு குழுவை ஹெஸ்ஸவில் நிறுவ முற்பட்டார். சமீபத்தில் தேர்தலுக்கு மாற்றீடு, ஸ்ராலினிசக் கட்சியான ஜனநாயக சோசலிஸ்ட் கட்சியின் (PDS) வழித்தோன்றலுடன் இணைந்ததால் இடது கட்சி வெற்றிகரமாக வெளிப்பட்டுள்ளது.

லாபொன்டைன் ஒத்துழைப்புடன், ஹூஜ் பிராங்பேர்ட் மாநாட்டிற்கு முன்னதாக செய்தி ஊடகத்துடன் தொடர்பு கொண்டிருந்தார்; செய்தி ஊடகம் இவர் இடது கட்சியின் முக்கிய வேட்பாளர் என்பதை கிட்டத்தட்ட முடிந்துவிட்ட செயலாகத்தான் அறிவித்திருந்தது. மாநாட்டின்போது, அவர் செய்தி ஊடகத்தின் பல பிரிவுகளுக்கும் ஒன்றன் பின் ஒன்றாகப் பேட்டி கொடுத்தார்.

ஆனால் கட்சிப் பிரதிநிதிகள் லாபொன்டைன் விரும்பிய கருத்தை ஏற்க மறுத்தனர்; இரு முறை ஹூஜ் தன்னுடைய வேட்புமனுவுக்கு தேவையான பெரும்பான்மையை பெறுவதற்குத் தவறி விட்டார். மாறாக பிரதிநிதிகள் தெளிவான பெரும்பான்மையில் நீண்டகாலமாக ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினராக இருக்கும் Pit Metz ஐ மானிலத் தேர்தலில் முக்கிய வேட்பாளராக நிறுத்துவதற்கு வாக்களித்தனர்.

கட்சித் தலைமை திட்டமிட்டிருந்ததற்கு எதிரான முறையில் இந்த முடிவு வந்தது. ஹூஜை நியமித்தபோது, லாபொன்டைன் ஒரு பரந்த தன்மையுடைய அரசியல் திட்டங்களை மனத்தில் கொண்டிருந்தார்; அதை அவர் பகிரங்கமாக விவாதிக்க விரும்பவில்லை. பசுமைக் கட்சி ஆரம்பத்தில் இருந்ததை போலவே, லாபொன்டைன் ஹெஸ்ஸ தேர்தலை ஒரு தேசிய அரசாங்கத்தில் வருங்காலத்தில் பங்கு பெறுவது பற்றிய சோதனைக் களமாக நினைத்தார்.

22 ஆண்டுகளுக்கு முன்பு, ஹெஸ்ஸவில் பசுமைக் கட்சியின் முதல் பிரதிநிதியாக ஜோஷ்கா பிஷ்ஷர் விளங்கி, ஹோல்கர் போர்னர் தலைமையில் இருந்த சமூக ஜனநாயகக் கட்சியுடன் மாநில அரசாங்கத்தில் கூட்டணி அரசாங்த்தை அமைத்திருந்தார். அந்த நடவடிக்கை மகத்தான முக்கியத்துவத்தை கொண்டிருந்தது. பசுமைவாதிகள் அதை ஒரு இழிசெயலாகக் கருதவில்லை. பிராங்பேர்ட்டில் அவர்கள் தாங்கள் அரசாங்கத்தில் ஒரு பொறுப்பான பங்காளியாக பணியாற்ற முடியும் என்பதை நிரூபித்தனர். அங்கு பசுமைவாதிகள் ஒரு தேசிய அரசாங்கத்தில் பங்கு பெறுவதற்கு பாதை எளிதில் வகுக்கப்பட்டது.

ஜேர்மன் தொழிற்சங்க கூட்டமைப்பில் (DGB) ஊதியங்கள் இருந்த பல பதவிகளில் இருந்து முன்கூட்டியே ஓய்வு பெற்று வாழ்க்கையை அனுபவித்து வரும் 63 வயதான ஹூஜ், ஹெஸ்ஸவில் உள்ள தொழிற்சங்கங்கள் மற்றும் சமூக ஜனநாயக கட்சியுடன் முக்கியமான தொடர்புகளை கொண்டுளார். இந்தத் தொடர்புகளை தன்னுடைய கட்சி மாநிலப் பாராளுமன்றத்தில் நுழைவதற்கு உதவும் வகையில், சூழ்நிலை அனுமதித்தால், இடது கட்சியையும் சமூக ஜனநாயக கட்சிக்கு கூட்டணிப் பங்காளியாக முன்வைக்கவும் லாபொன்டைன் தீவிரமாக விரும்பினார்.

சமூக ஜனநாயகக் கட்சியுடன் ஒரு கூட்டணி அரசாங்கத்தில் பங்கு பெறுவது சற்றே முன்கூட்டி வந்துள்ளது என்ற பல பிரதிநிதிகள் உணர்கின்றார்கள் என்பதை அவர் அறிந்திருந்தாலும், ஹூஜ், தன்னுடைய வேட்பு ஏற்பு உரையில் அத்தகைய வகையில் பங்கு பெறுவதை, "சமூக ஜனநாயகக் கட்சி அரசியல் அளவில் சில பிரச்சினைகளை சந்திக்குமேயானால்" தான் வரவேற்பதாக கூறினார். தன்னுடைய பங்கிற்கு Pit Metz தன்னை பொறுத்தவரையில், வரிவிருக்கும் மாநிலத் தேர்தலில் இடது கட்சி "எதிர்க்கட்சி என்ற பங்கை தெளிவாக ஏற்கவேண்டும்" என்பதில் "முற்றிலும் தெளிவாக" இருக்க வேண்டும் என்று அறிவித்தார்.

தன்னுடைய நிலைப்பாட்டிற்கு Metz ஆதரவு பெறமுடிந்தது; ஆனால் கட்சியின் நிர்வாகக் குழு கட்சி மாநாட்டின் முடிவை ஏற்கும் சிந்தனைக்கே இடம் கொடுக்கவில்லை. பல நெம்புகோல்களையும் விரைவுபடுத்தி, அதிகாரத்துவ தந்திரங்களை பயன்படுத்தி Metz இன் இராஜிநாமாவை கட்டாயப்படுத்த முயன்றது. எட்டு நாட்களுக்கு பின்னர் மாநாட்டு பிரதிநிதிகளின் முடிவு திருத்தப்பட்டு விட்டது.

கட்சி நிர்வாகக் குழுவின் முதல் நடவடிக்கை ஒரு செய்தி ஊடகப் பிரச்சாரத்தை பயன்படுத்துவது ஆகும்; இந்த வழிவகைதான் பலமுறையும் இடதுசாரி வேட்பாளர்களை குறைவாகப் பேசுவதற்கு பலமுறையும் பயன்படுத்தப்படுவது ஆகும்.

ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒரு மூத்த உறுப்பினர் என்ற முறையில் Metz, உள்எல்லையில் "கண்டதும் சுடவும்" கொள்கையை முன்னாள் கிழக்கு ஜேர்மன் பொலிஸார் பயன்படுத்தியது பற்றி செய்தியாளர்களால் கேட்கப்பட்டதற்கு, Metz, பல நாடுகளும் தங்கள் எல்லைகளை இராணுவப் படைகள் மூலம் காக்கின்றன என்று கூறினார். அத்தகைய கொள்கை ஒன்றும் ஒரு அயல்நாட்டின்மீது படையெடுக்கும் ஒரு நாட்டின் கொள்கையில் இருந்து சற்றே மாறுபடுகின்றது என்றும், இப்பொழுது ஆப்கானிஸ்தானில் ஜேர்மனிய இராணுவம் அதைத்தான் செய்து கொண்டிருக்கிறது என்றும் கூறினார்.

உண்மையில் இதைபோன்ற கருத்துக்களைத்தான் சில வாரங்களுக்கு முன்பு லாபொன்டைனே ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியின்போது கூறியுள்ளார்; ஜேர்மனிய அரசாங்கம் கூறும் பயங்கவராதம் பற்றிய வரையறை ஆப்கானிஸ்தானத்தில் பணியாற்றும் ஜேர்மனிய இராணுவத்தினர்களுக்கும் பொருந்தும் என்று அவர் உறுதியாக கூறியிருந்தார். ஆனால் Metz இன் கருத்தை பொறுத்தவரையில், இடது கட்சியின் நிர்வாகக் குழு அவருடைய கருத்துக்கள் "முற்றிலும் பொருத்தமற்றவை" என்றும் அவரை தெளிவுபடுத்துமாறும் கோரியது. பல நிர்வாகக் குழு உறுப்பினர்கள் மெட்ஸிடம் இருந்து தங்களை ஒதுக்கி வைத்துக் கொண்டதுடன் அவருடைய அறிக்கைகள் "சங்கடம் தருவதாக உள்ளது" என்றும் "செய்தி ஊடகத்தை சமாளிப்பதில் அனுபவம் போதாதவர்" ஏற்படுத்தும் விளைவு என்றும் கூறினர்.

அதே நேரத்தில், ஹெஸ்ஸவில் இருக்கும் பிராந்திய அமைப்பில் உள்ள ஹூஜிற்கு வேண்டியவர்கள் தூண்டிவிடப்பட்டு, Metz ஒரு வேட்பாளராக இருந்தால் அவர்கள் தேர்தல் பிரச்சாரத்தை நடத்தத் தயாராக உள்ளனரா என்பதைத் தெளிவுபடுத்துமாறும் கோரப்பட்டனர்.

இதன் பின்னர் பேர்லினில் கட்சித் தலைமையுடன் விவாதிக்க Metz "அழைக்கப்பட்டார்"; பின்னர் தன்னுடைய நிலைப்பாட்டை Gregor Gysi, Lothar Bisky, தேசிய மேலாளர் Dietmar Bartsch மற்றும் ஒஸ்கார் லாபொன்டைன் ஆகியோருடைய அலுவலகங்களிலும் விளக்குவதற்கு அழைக்கப்பட்டார்.

பேர்லினில் இவ்வாறு முயன்று கொண்டிருக்கையில், செய்தி ஊடகத் தகவல்கள் ஹெஸ்ஸ பகுதியான Odenwald நகரில் ஒரு பகிரங்கக் கடிதத்தை வெளியிட்டு, Metz அவருடைய ''முன்னைய தோழமை பிதற்றலால்" இடது கட்சிக்கு மாநிலத் தேர்தலில் எந்த வாய்ப்பும் இல்லாமல் செய்துவிட்டதாக குற்றச்சாட்டை முன்வைத்தது. இத்தகைய விளைவுகள்தான் பிற உள்ளூர் கூட்டமைப்புக்களில் இருந்தும் வரக்கூடும் என்று பேர்லினில் Metz இற்கு கூறப்பட்டது. இந்தப் பின்னணியில்தான் மிகவும் கெளரவமாக Metz அவருடைய வேட்பாளர் நிலைப்பாட்டைத் தொடர்வது பொருத்தமாக இருக்குமா என வினவப்பட்டார்.

பேர்லினுக்குச் சென்று திரும்பிய ஒரு நாளைக்குப் பின்னர் Metz, ஹெஸ்ஸவில் முதன்மை வேட்பாளர் என்பதில் இருந்து தான் இராஜிநாமா செய்வதாக அறிவித்தார். அதே நாளில் இடது கட்சியின் தேசியத் தேர்தல் பிரச்சார மேலாளரான Bodo Ramelow மாநிலத்தின் நெருக்கடியில் இருந்து அதை மீட்க உதவும் வகையில் செய்தி ஊடகத்திடம் கட்சியின் நிர்வாகக் குழு Metz மேற்கொண்ட "தனிப்பட்ட முடிவை" மதிப்பதாக அறிவித்தார்.

"இந்த முடிவை நாங்கள் மதிக்கிறோம்" என்று லாபொன்டைன் Tagges spiegel இடம் கூறினார். இடது கட்சியின் தலைவரான Lothar Bisky கூறியதாவது: "என்னைப் பொறுத்தவரையில் அவரை எவரும் கட்டாயப்படுத்தவில்லை."

நியாயப்படி பார்த்தால் கட்சிப் பிரதிநிதிகள் எதைப் பெற வேண்டுமோ அதைத்தான் பெற்றனர். ஸ்ராலினிச மரபு, சமூக ஜனநாயக கட்சியின் மரபு மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவ மரபு இவற்றின் கலவையை கொண்ட ஒரு கட்சியில் இருந்து ஜனநாயகம் பூத்துக்கொழிக்கும் என ஒருவர் உண்மையில் எதிர்பார்க்க முடியுமா?

தன்னுடைய பங்கிற்கு Metz ஒரு அடிபட்ட நாயைப் போலத்தான் பிரதிபலிப்பை காட்டினார். ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்ராலினிசவாதி அடுத்த சில வாரங்களிலும் மாதங்களிலும் எந்தவித தவறுகளும் நேராத வகையில் நடந்து கொள்ளவும், "கட்சி மிகவும் உந்துதல் பெற்றுள்ளது, ஒற்றுமையாகச் செயல்படும்" என்பதை நிரூபிப்பதற்கும் பாடுபடப் போவதாக அறிவித்தார்.

ஹெஸ்ஸவில் நடந்த நிகழ்வு இடது கட்சி தேசிய அளவில் அரசாங்கத்தில் நுழைந்தால் பொதுமக்களை எப்படி நடத்தும் என்பதற்கு தனக்கே உரிய கூறுபாட்டை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. பேர்லினில் வாழும் மக்கள், கடந்த ஏழு ஆண்டுகளாக சமூக ஜனநாயக கட்சி, இடது கட்சிக் கூட்டணி அரசாங்கத்தால் ஆளப்படுபவர்கள், ஏற்கனவே இந்த அனுபவத்தை பார்த்துவிட்டனர். பேர்லினில் இடது கட்சியின் பிரதிநிதிகள் வாடிக்கையாக தாங்கள் தேர்தல் பிரச்சாரத்தில் பெரிதும் குறை கூறியிருந்த கருத்துக்களை செயல்படுத்தும் நடவடிக்கைகளுக்கு செனட்டில் ஆதரவுதான் கொடுக்கின்றனர்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved