World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : விஞ்ஞானமும் தொழில்நுட்பமும்

ழிமீணீஸீபீமீக்ஷீtலீணீறீs ணீஸீபீ னீஷீபீமீக்ஷீஸீ லீuனீணீஸீsணீ ளீமீஹ் tஷீ uஸீபீமீக்ஷீstணீஸீபீவீஸீரீ லீuனீணீஸீ மீஸ்ஷீறீutவீஷீஸீ

ஆதிகால மனிதர்களும், நவீனகால மனிதர்களும் மனித இனத்தின் பரிணாம புரிதலுக்கான ஒரு திறவுகோல்

By William Moore
3 October 2008

Back to screen version

ஆதிகால மனிதர்களும், நவீன மனிதர்களுக்கும் இடையிலான உறவு குறித்து சமீபத்தில் இரண்டு ஆய்வு அறிக்கைகள் வெளியிடப்பட்டன. மிக நீண்ட காலத்திற்கு முன்பிருந்தே இந்த இரண்டு மனித மூதாதையர்களும் ஒருபொதுவான மரபு உயிரணு வகையில் இருந்து பிரிந்துள்ளதாக கூறப்படுவதற்கு இந்த அறிக்கைகள் மேலும் வலு சேர்க்கின்றன. மேலும், மனிதயின பரிணாமம் பல்வேறு கிளைகளாகவும், பல முடிவில்லா வழிகளிலும் உருவானது என பண்புருவாக்கப்பட்ட கண்ணோட்டத்தை இந்த முடிவுகள் ஆதரிக்கின்றன. இது உண்மையானால், பின்னர் குறைந்தபட்சம் 5 மில்லியன் ஆண்டுகளில் வெவ்வேறு காலங்களிலும், வெவ்வேறு இடங்களிலும் உயிர் வாழ்ந்த அல்லது உடன் வாழ்ந்த பல மனிதயின தோற்றங்களில் ஹோமோ சேப்பியன்கள் (Homo Sapiens) எனப்படும் நவீனகால மனிதர்கள் தான் இறுதியாக பிழைத்திருக்கும் ஓர் உயிரினமாகிறது. உண்மையில், தற்போதைய சூழலில் ஒரேயொரு மனித உயிரினம் தான் உயிர் வாழ்கிறது. அது ஒரு விதியாக (Rule) அல்லாமல் விதிவிலக்காக இருக்கலாம்.

விஞ்ஞானங்களுக்கான தேசிய ஆணைய (வீவர், ரோஸ்மென் மற்றும் ஸ்ட்ரிங்கர் ஆகியோரால் 2008) செயல்திட்டத்தில் விளக்கப்பட்ட இந்த அறிக்கைகளில் முதலாவதானது, ஆதிகால மனிதர்களிடமும், நவீனகால மனிதர்களிடமிருந்தும் எடுக்கப்பட்ட 37 மண்டை ஓடு அளவீடுகளில் கண்டறியப்பட்ட வேறுபாடுகளை அடைய எவ்வளவு காலம் மரபணு மாற்றத்திற்கு (அதாவது, மரபணுவில் ஏற்படும் ஒழுங்கற்ற மாற்றங்கள்) தேவைப்படும் என்பதை கணிக்க ஓர் ஆய்வு தேவை என்பதை குறிப்பிடுகிறது. இந்த முதலாவது அறிக்கையின் முடிவுகள், வெறும் 500,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்த ஆதிகால மனிதர்களுக்கும், நவீனகால மனிதர்களின் மூதாதையர்களுக்கும் இடையிலான இடைவெளியைக் குறித்து காட்டுகின்றன. அண்ணளவாக 400,000 ஆண்டுகளுக்கு முந்தைய புதைபடிமான (Fossils) தடயங்களில் தான் முதன்மையாக ஆதிகால மனிதர்கள் காணப்படுகிறார்கள். ஆதிகால மனிதர்களுக்கும் மற்றும் நவீனகால மனிதர்களை வார்த்தெடுத்த மரபினர்களுக்கும் மற்றும் பிற மனித உயிரினங்களுக்கும், தற்போது இல்லாமல் அழிந்து போன மரபினங்களுக்கும் ஒரு பொதுவான மூதாதையர்கள் இருக்கலாம் என்று சுமார் 500,000த்திற்கும் மேலான ஆண்டுகளுக்கு முன்னரே அழிந்து போன ஹோமோ ஹெய்டில்பேர்ஜென்ஸிஸ் (Homo heidelbergensis) எனப்படும் மனித இனங்களில் இருந்து எடுக்கப்பட்ட புதைபடிமானங்கள் எடுத்துரைக்கின்றன. உண்மையில் 500,000க்கும் மேலான ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு மரபணு உடைவு (அதாவது ஒரு புதிய உயிரினம் தோன்றும் நிகழ்வு) இருந்திருந்தால், நவீன மனித மரபணு தொகுப்பிற்கு ஆதிகால மனிதர்களால் எந்த பங்களிப்பும் செய்திருக்க சாத்தியமில்லை.

இரண்டாவது அறிக்கையானது, குரோசியாவின் (Croatia) குகையில் கண்டெடுக்கப்பட்ட சுமார் 38,000 ஆண்டுகளுக்கு முந்தைய ஆதிகால மனிதனின் கால் எலும்பில் மேற்கொள்ளப்பட்ட மைட்டோகான்ரியல் மரபணு (Mitochondrial DNA) ஆய்வின் முடிவுகளை விளக்குகிறது. (இதன் ஒரு பகுதி ஆகஸ்டு 8, 2008ல் வெளியான The Guardian இதழில் உள்ளது). மைட்டோகான்ரியல் மரபணு (mtDNA) என்பது கலங்களில் இருக்கும் 'சக்தி உற்பத்தி நிலையங்களான' மைட்டோகான்ரியாவில் மட்டுமே காணப்படும். ஒரு பாதி ஓர் தாயிடமும், மற்றொரு பாதி தந்தையிடமிருந்தும் எடுக்கப்படும் நியூக்ளியர்DNA போலில்லாமல், மைட்டோகான்ரியல் மரபணு தாய்மார்களிடம் இருந்து மட்டுமே அவர்களின் வழிதோன்றலுக்கு கொண்டு செல்லப்படுகிறது. ஆதிகால மனிதர்களின் mtDNA, நவீனகால மனிதர்களின் mtDNAவில் இருந்து தெளிவாக மாறுபட்டிருப்பதை ஜேர்மனியின் லைப்சிக் நகரிலுள்ள மக்ஸ்-பிளங்க் மனிதயின பரிணாம ஆய்வு பயிலகத்தில் நடத்தப்பட்ட ஆய்வு குறிப்பிட்டு காட்டுகிறது. இந்த ஆய்வின் அடிப்படையில், ஆதிகால மனிதர்களுக்கும், இறுதியில் நவீனகால மனிதர்களை படைத்தளித்த மரபினர்களுக்கும் இடையிலான இடைவெளி அண்ணளவாக 660,000 ஆண்டுகளில் ஏற்பட்டிருக்கலாம். இந்த 660,000 ஆண்டுகள் என்பது மேற்குறிப்பிட்ட வீவர், ரோஸ்மென் மற்றும் ஸ்ட்ரிங்கர் ஆய்வில் கணிக்கப்பட்ட காலத்திற்கு மிக அண்மையில் தான் அமைகிறது. காலப்போக்கில் ஆதிகால மனிதர்களின் mtDNAவில் சில மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதாக அந்த ஆராய்ச்சி குறிப்பிடுவதால், இது அந்த உயிரினங்கள் மிக குறுகிய காலங்கள் மட்டுமே உயிர் வாழ்ந்திருக்கலாம் என்ற கருத்திற்கு இட்டு செல்கிறது. ஆதிகால மனிதர்களின் நியூக்ளியர் DNA பற்றிய முழு ஆய்வும் இந்த ஆண்டின் இறுதியில் முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எவ்வாறிருப்பினும், இந்த அறிக்கைகளும் மற்றும் பிற சமீபத்திய ஆய்வு அறிக்கைகளும் நவீனகால மனிதர்கள் மற்றும் ஆதிகால மனிதர்கள் இடையிலான உறவுகள் மீதான எதிர்விவாதங்களுக்கு மேலும் பல புதிய தகவல்களை சேர்த்துள்ளன. கிடைத்திருக்கும் புதைபடிமான தடயங்களின் அடிப்படையில், ஆதிகால மனிதர்கள் மனிதர்களின் தோற்றத்தை கொண்டிருந்தார்கள்; இவர்கள் அண்ணளவாக 400,000 ஆண்டுகள் முன்பிலிருந்து, சுமார் 38,000 ஆண்டுகள் முன்னர் வரை ஐரோப்பா மற்றும் மேற்கத்திய ஆசியாவின் பெரும்பகுதிகளில் வாழ்ந்திருந்தனர். பிரமாண்ட எலும்பு வடிவம் மற்றும் பெரிய நெற்றி முகடுகளுடன், தாடை இல்லாமல் (அதாவது, தாடை உள்வாங்கி இருக்கும்) இருந்த குறிப்பிடத்தக்க பல்வேறு உடல் தோற்றக்கூறுகள் தான், இன்று வழக்கத்தில் இல்லாத இந்த 'குகை மனிதர்கள்' பற்றிய பிரபல கருத்துருக்கள். தொடக்கத்தில் ஆதிகால மனிதர்களின் புதைபடிமானங்கள் 1856ல் ஜேர்மனியிலுள்ள நியாந்தர் பள்ளத்தாக்கில் (Neander Valley) கண்டுப்பிடிக்கப்பட்டன. அவை, வேறு வகைப்பட்ட மனிதர்களும் பூமியில் ஒருபோது வாழ்ந்திருந்தார்கள் என்பதற்கான முதல் நேரடி ஆதாரமாக எடுத்துக் கொள்ளப்பட்டன. இவ்வாறு, மனிதர்கள் அவர்களின் முந்தைய தோற்றங்களிலிருந்து உருவாகி இருக்கிறார்கள் என்ற புதிய மற்றும் விவாதத்திற்குரிய பல சிந்தனைகள் பின்னர் ஏற்பட அது உதவியது.

மற்றொருபுறம், சுமார் 100,000த்திற்கும் 200,000த்திற்கும் இடைப்பட்ட காலத்திற்கு முன்னர் முதன்முதலில் ஆப்ரிக்காவில் நவீனகால மனிதர்கள் தோன்றியதாக புதைபடிமான தடயங்கள் தெரிவிக்கின்றன. பின்னர் அவர்கள் தொடர்ந்து விரைவாக, நிலப்பரப்பில், அதாவது கிழக்கு மற்றும் மேற்கத்திய நிலப்பகுதிகளில், அவர்களுக்கு முந்தைய மனித உருவங்களை விட மிக தொலைவிற்கு அவர்கள் பரவினார்கள். நவீனகால மனிதர்களுடன் தொடர்புடைய மனிதயின ஆய்வு, முந்தைய அனைத்து மனித உயிரினங்களை விட மிகவும் வளமான ஒரு கலாச்சாரத்தை வெளிப்படுத்தி காட்டுகிறது. அதில் நுட்பமான தொழில்நுட்பங்கள் மட்டுமின்றி, தனிநபர் அலங்கார பொருட்கள் (அதாவது, நகைகள்) மற்றும் கலை பாவனை (சான்றாக, பனிகால ஐரோப்பாவிற்கு பிந்தைய குகை ஓவியங்கள்) போன்ற கலை உணர்வுகளையும் கொண்டுள்ளது. தெளிவாக, நவீனகால மனிதர்களின் தோற்றம் மனிதயின பரிணாமத்தில் ஓர் உண்மையான அளவுரீதியான பாய்ச்சலை எடுத்துக்காட்டுகிறது.

ஆதிமனிதர்களின் புதைபடிமானங்கள் கண்டுபிடிக்கப்பட்ட முதல் ஒன்றரை நூற்றாண்டுகளுக்கு பின்னர், ஆதிகால மனிதர்களும், நவீனகால மனிதர்களும் உண்மையில் எவ்வாறு வேறுபட்டுள்ளார்கள் என்பது குறித்த விஞ்ஞான கருத்துக்களும், பிற பிரபல கருத்துக்களும் தொடர்ந்து மாறுபட்டு வந்தன. மூட்டுவீக்கம் காரணமாக எலும்புகளில் அசாதாரண தன்மைகளை கொண்ட வயதான ஆணின் முழுமையான எலும்புகூட்டைச் சார்ந்து கூறப்பட்ட கருத்துகள் என்பதால் ஆதிகால மனிதர்கள் பற்றிய சில முந்தைய வர்ணனைகள் மிகவும் மாறுபட்டிருந்தன. பெருமளவிலான மாதிரிகளின் அடிப்படையில் பின்னர் மாற்றி அமைக்கப்பட்ட ஆதிகால மனிதர்களின் உருவ தோற்றம் நவீனகால மனிதர்களுடன் இருந்த ஓரளவு வேறுபாட்டை குறைத்தது. தற்போதும் உயிருடன் இன்றைய நகர தெருக்களில் நடந்து செல்லும் ஆதிகால மனிதர்கள் (பொருத்தமான உடைகள் அணிந்து, அலங்காரம் செய்து கொண்ட ஆதிகால மனிதர்கள்) யாராலும் கவனிக்கப்படாமல் இருப்பதாக சில ஆய்வாளர்கள் தெரிவித்தார்கள். இந்த சிந்தனை அமெரிக்காவின் சமீபத்திய வாகனத்துறை காப்பீட்டு தொடர்பான விளம்பரங்கள் ஒன்றிலும் பிரதிபலித்திருந்தது.

பேலியோன்தாலஜியின் (ஆதிகால மனிதர்கள் பற்றிய புதைபடிமானங்களை ஆராயும் துறை) ஒரு பகுதியாகவும், மனிதயின பரிணாம வளர்ச்சி பற்றிய ஆய்விலும் குறிப்பாக, புதைபடிமான எலும்பு மற்றும் தொல்பொருள் போன்ற பிற ஆதார தரவுகளின் பாரம்பரிய ஆராய்ச்சிகளுக்கும் கூடுதலாக, எந்த அளவிற்கு புதைபடிமான மரபணு பற்றிய ஆய்வு முக்கியத்துவம் பெற்றிருக்கிறது என்பதையே கடந்த தசாப்தங்களில் வெளியான ஆய்வு முடிவுகள் காட்டுகின்றன.

விஞ்ஞான ஆய்வுகளின் உண்மையான அபிவிருத்திகளையும், பல்வேறு வகையான தரவுகளின் கருத்துகளுக்கு இடையிலுள்ள முரண்பாடுகள் மீதான ஒரு செயல்முறையையும் மற்றும் தர்க்கரீதியாக நோக்கங்கள் மாறுபடுவதையும் வெளிச்சமிட்டு காட்ட இந்த புதிய தரவுகளின் அபிவிருத்தி உதவுகிறது. இந்த முரண்பாட்டின் காரணமாக, ஒரு காலத்தில் வலுவாக பொருள்படுத்தப்பட்டதாக தோன்றிய தகவல்கள், முன்னர் இருந்த தரவுகளையும், கைவசம் இருக்கும் புதிய தரவுகளையும் மிக துல்லியமாக ஒருங்கிணைக்கும் தெளிவான புதிய ஒன்றால் தூக்கி எறியப்படுகின்றன. இந்த சச்சரவான செயல்முறை, அடிக்கடி பரந்த சமூகத்தில் உள்ள அரசியல் மற்றும் சமூக போக்குகளின் 'வெளித்தாக்கத்தையும்' பிரதிபலிக்கிறது.

புதிய ஆராய்ச்சி கண்டுபிடிப்புகளின் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ள வேண்டுமானால், மனிதயின பரிணாமத்தையும், குறிப்பாக ஆதிகால மனிதர்களைப் பற்றிய சில அடிப்படை ஆய்வுகளையும் மீள்பார்வையிட வேண்டியது அவசியமாகும்.

பல்வேறு கருத்துகளின் முடிவுகளை குறிக்கும் விதமாக, ஆதிகால மனிதர்கள் குறித்த இரண்டு முக்கிய கண்ணோட்டங்கள் வரையறுக்கலாம். ஒன்று, உயிரினங்களின் அளவில் நவீனகால மனிதர்களை முற்றாக பிரித்து (வேறுபடுத்தி) பார்ப்பது. மற்றொன்று, நவீனகால மனிதர்களுடனான வேறுபாடுகள் நவீனகால மனிதர்களின் வேறுபட்ட மக்களிடையே இன்று காணப்படும் பல்வேறு வேறுபாடுகள் தான் என கருதப்படுதல். இதே போன்ற முடிவுக்கு வருபவர்கள் கருதுவது என்னவெனில், ஐரோப்பாவில் வாழ்ந்த பண்டைய ஆதிகால மனிதர்களிடமிருந்து குறிப்பாக ஐரோப்பியர்கள் சில மரபணு பாரம்பரியத்தைப் பெற்றிருக்கின்றனர் என்பதாகும். தகவல்களின் மறுபக்க கருத்துப்படி, ஆதிகால மனிதர்களும், நவீனகால மனிதர்களின் மூதாதையர்களும் நீண்ட காலத்திற்கு முன்னரே (அதாவது, 400,000த்திற்கு மேலான ஆண்டுகளுக்கு முன்னர்) கூடி இருந்ததாகவும், அவர்களுக்கு இடையிலான மரபுவழி வேறுபாடுகள் மாதிரிகளின் அளவில் வேறுபட்டிருந்ததாகவும் குறிப்பிடுகிறது. வேறு வார்த்தைகளில் குறிப்பிடுவதானால், இரு குழுக்களும் மரபுவழியில் முற்றிலும் தனிமைப்படுத்தப்பட்டதாகவும், அவை தங்களுக்குள் கலப்பின சேர்க்கையிலும் ஈடுபட்டிருக்க முடியாது என்பதேயாகும். ஆதிகால மனிதர்கள் ஒருவேளை ஒரேயின ஆதிகால மனிதர்களாக, அதாவது ஓரின மரபணு மட்டுமே கொண்ட ஓர் உயிரினமாக (ஆணாகவோ அல்லது மனிதர்களாகவோ) இருந்திருக்கலாம்; ஆனால் ஹோமோசேப்பியன்களிTM (நவீன மனிதர்களில்) இருந்து வேறுபட்டோ அல்லது நவீன மனித ஆதிவாசிகளாகவோ (ஹோமோசேப்பியன்களுக்கு இணையான தகுதிகளைக் கொண்ட உபஉயிரினங்களாகவோ) இருந்திருக்கலாம் என்ற கருத்துகளின்படி, இந்த வேறுபாடானது படிமுறையியலின் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளது. உபஉயிரினம் என்பது நவீன மனிதயினத்தை குறிக்கிறது.

வெவ்வேறு உயிரினங்களுக்கு இடையே மரபணு பரிமாற்றம் ஏற்பட முடியுமா என்பதில் தான் உயிரினங்கள் அளவிலான பிளவுகள் அமைந்துள்ளது. ஆதிகால மனிதர்களுக்கும், நவீனகால மனிதயினத்திற்கும் இடையே கலப்பின சேர்க்கை இருந்ததா, இல்லையா என்ற கேள்வியை வரலாற்றின் முக்கிய கலாச்சாரங்களில், சான்றாக, Clan of the cave Bear மற்றும் Quest for fire போன்ற திரைப்படங்களில் தொடப்பட்டுள்ளன. அண்ணளவாக 400,000த்திற்கு முந்தைய ஆண்டுகளின் தொடக்கத்தில், நவீனகால மனிதயினம் முதன்முதலாக ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கில் தோன்றியதாகவும், வெளிப்படையாக ஆதிகால மனிதர்களுடன் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இணைந்து வாழ்ந்ததாகவும், பின்னர் இவை புதைபடிமான தடயங்களில் மறைந்துவிட்டன என்பது போன்று கடைசி உறைபனி காலத்தின் (Ice Age or Pleistocene) இறுதி பகுதிக்குரிய காலத்தை இந்த திரைப்படங்கள் எடுத்துக்காட்டின.

இந்த இரண்டு மக்களுக்குமிடையே ஏதேனும் தொடர்புகள் இருந்திருந்தால், இயல்பாக என்ன மாதிரியானதாக இருந்திருக்கும்? நவீனகால மனிதர்கள் தங்களின் பண்டைய உறவினர்களான ஆதிகால மனிதர்களுடன் புத்திசாலித்தனமாக போட்டியிட்டு, உணவுக்காகவும், பிற தேவைகளுக்காகவும் அல்லது ஒருவேளை வன்முறையால் அவர்களை பூண்டோடு இல்லாதொழித்தனவா? அல்லது முந்தையவர்களின் மரபணு பின்னர் வந்தவர்களால் பெருமளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட முறையில் நவீனகால மனிதர்களும் ஆதிகால மனிதர்களும் கலப்பு சேர்க்கையில் ஈடுபட்டனரா? இரண்டாவதாக கூறப்படும் கருத்து உண்மையானால், ஆதிகால மனிதர்கள் நடப்பிலிருந்து மறைந்துவிடவில்லை என்றாகிறது. அவர்கள் புதைபடிமான தடயங்களிலிருந்து மட்டுமே மறைந்திருக்கிறார்கள் என்றும், ஏனெனில் அவர்களின் வழிதோன்றல்கள் நவீனகால மனிதர்களிடம் இருந்து வேறுபடுத்த முடியாத அளவிற்கு பெருமளவில் அவர்களுள் கலந்துள்ளனர் என்றும் தோன்றுகிறது.

அடிப்படையில் வன்முறை தான் மனித இயற்கை என்பதன் அறிகுறியாக முதல் கருத்தை (அதாவது, ஆதிகால மனிதர்கள் இல்லாதொழிக்கப்பட்டனர் என்ற கருத்து) திரித்து கூறும் முயற்சிகளும் நடைமுறையில் உள்ளன. இதன் மறுபக்கம், அமைதிக்கான மனிதயின மனப்போக்கு (அதாவது, யுத்தம் இல்லாமல் அன்பை உருவாக்கும் மனப்போக்கு) இருப்பதற்கான ஒரு 'நம்பிக்கையான' அறிகுறியைக் குறிக்கும் வகையில், இரண்டு குழுக்களின் மரபணு ஒன்று கலந்திருப்பதாக பார்க்கப்படுகிறது. உண்மை மேலும் குழப்பமாக இருக்கலாம் என்று தோன்றுகிறது. மேலும் இந்த முடிச்சு அவிழ்க்கப்படும் போது, ஒட்டுமொத்தமாக மனிதயின பரிணாமத்தை புரிந்து கொள்வதற்கான உயர்ந்த படிப்பினை கிடைக்கும். கடந்த தசாப்தத்தின் தோற்ற பதிவேடு ஆராய்ச்சி மற்றும் மரபணு ஆராய்ச்சி இரண்டும் இந்த கேள்விக்கான பதிலை அளிக்கும் பல தகவல்களை அளித்துள்ளன.

கடந்த அரை நூற்றாண்டில், கிழக்கு ஆரிக்காவில் பண்டைய உடல்கூறு (Australopithecine hominid) புதைபடிமானங்கள் கிட்டத்தட்ட கண்டுப்பிடிக்கப்பட்டதிலிருந்து, பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் மனிதயினத்தின் முன்னோர் வாழ்ந்தனர் என்பதை உறுதிப்படுத்துகிறது. மனிதயின பரிணாமம் குறித்து பொதுவாக இரண்டு வித கண்ணோட்டங்கள் நிலவுகின்றன. ஒன்று, Unilineal (யூனிலீனியவாதம் -ஒரேயொரு பெற்றோர் வழியில் வந்த உயிரினங்கள்); மற்றொன்று, Multilineal (மல்டிலீனியவாதம்- அதாவது பல பெற்றோர் வழியில் வந்த மரபு) அல்லது கிளை வழி கண்ணோட்டம் என்பது. ஹோமினிட் (Hominid) என்ற வார்த்தை நவீனகால மனிதர்களைக் குறிக்கிறது. மேலும் அவர்களின் மூதாதையர்கள் மற்றும் அவர்களின் உடனொத்த கிளை மரபு உறவினர்களிடையே நடந்த இனக்கலப்பு ஹோமினிட்களிடையே பிரிவை ஏற்படுத்தியது. இறுதியாக, அதன் வழிதோன்றல்களான சிம்பன்சிகளை (Chimpanzee) உருவாக்கியது. இது சுமார் 6.5 மில்லியன் மற்றும் 10 மில்லியன் ஆண்டுகளில் நடந்திருக்கலாம். மனிதர்களின் மற்றும் சிம்பன்சியின் DNA சுமார் 96 சதவீதம் ஒத்திருக்கின்றன. பிற வாலில்லா குரங்குகளை விட இந்த இரண்டு குழுக்களுக்கு இடையே நெருங்கிய பரிணாம உறவுகள் இருப்பதை தான் இது குறிப்பிட்டு காட்டுகிறது.

1960களில் மற்றும் 1970களில் மிகவும் பரவலாக இருந்த தனித்த உயிரினங்களின் தற்காலிக கோட்பாடு என அறியப்படும் யூனிலீனியவாதம், மனித நடவடிக்கைகளான (குறிப்பாக, இவை பின்வருமாறு பண்புப்படுத்தப்பட்டன): i பொருட்களை எடுத்து செல்லவும், நிலையாக கருவிகளை உருவாக்கவும், பயன்படுத்தவும் ஏற்ற வகையில் கைகளை சுதந்திரமாக இயக்க உதவும் நிமிர்ந்த நடை. ii) தொடர்ந்து வளர்ந்து வரும் சிக்கலான சமூக அமைப்புகள் மற்றும் iii) அனைத்தையும் புரிந்துகொள்ளும் சிந்தனை திறன் ஆகியவை பிற அனைத்து விலங்குகளை விட்டு மிகவும் வேறுபட்டிருந்தது; மேலும், இந்த யூனிலீசவாதம் உயிரின பரிணாமத்தின் பொதுவான தோற்றங்கள் கணிசமாக மாற்றப்பட்டிருந்தன என்பதை உண்மையென ஏற்றுக் கொண்டது. இந்த கண்ணோட்டத்தில், பிற விலங்குகளைப் போல் அவற்றின் பரிணாம மாறுதல்களால் அல்லாமல் கலாச்சாரத்தால் (அறிந்துகொள்ளும் தன்மையால்) ஹோமினிட்கள் (Hominids) ஆரம்பம் முதலாகவே நிறைய தெரிந்து கொண்டார்கள். இதனால் புவியியல்ரீதியாக பரவலாக உயிரின கூட்டம் தொடர்ந்து நகர்ந்த போது, மனிதயினமும் பல்வேறு சூழ்நிலைகளில் பரவலாக விரிந்து சென்றது. இதன் மூலம் முழு உயிரினங்களையும் உள்ளடக்கி கிட்டத்தட்ட நிலையான மரபணு பரிமாற்றம் இருந்து வந்தது.

யூனிலிசவாதத்தின் கண்ணோட்டத்தில், ஹோமினிட்கள் மத்தியில் இருக்கும் தொடர்ச்சியான மரபணு ஒற்றுமை குறிப்பது என்னவென்றால், தனிமைப்படுத்தப்பட்ட மக்கள் கூட்டத்தின் வழிதோன்றல்கள் மனிதயின மூதாதையர் மத்தியில் ஏற்படவில்லை என்பதாகும். ஆனால், உயிரியியல் பரிணாமத்தின் முதன்மை செயல்பாட்டின்படி, மரபணு வேறுபாடுகள் காரணமாக அப்போதிருந்த உயிரினங்களிலிருந்து புதிய உயிரினங்கள் பிரிந்து வந்தன என்று குறிக்கப்படுகிறது. புவியியல்ரீதியாக தூரத்திலிருந்த மனிதர்களுக்கு இடையே மரபணு வேறுபாடு ஏற்பட்டிருக்கலாம். கலாச்சாரரீதியான பரப்பப்பட்ட இணைந்துபோவதை அல்லது கலாச்சாரரீதியான இடம்பெயர்வை மற்றும் தொடர்ச்சியான மரபணு பரிமாற்றத்தையோ எதிர்த்த சக்திகளால் அது ஒருபோதும் இனப்பெருக்க தொடர்பின்மையை ஏற்படுத்தும் புள்ளியை சென்றடையவில்லை.

இனப்பெருக்க தொடர்பின்மை என்பது இனப்பெருக்கத்தின் மூலம் வழிதோன்றல்களை உருவாக்க வெவ்வேறு உயிரினங்கள் தங்களுக்குள் உயிர்கலப்பில் ஈடுபடும் போது அவற்றிற்கிடையில் இருக்கும் பொருத்தமின்மையைக் குறிக்கும். சான்றாக, குதிரைகளும், கழுதைகளும் உயிர்கலப்பில் ஈடுபட்டு கலப்பினங்களை உருவாக்க முடியும். ஆனால் அவ்வாறு உருவானவை, தங்களுக்குள் கலப்பின விலங்குகளை உருவாக்க முடியாது. ஆகவே, குதிரைகள் மற்றும் கழுதைகளுக்கு இடையே மரபணு பரிமாற்றம் கிடையாது. அவை வெவ்வேறானவையே, ஆனால் ஒன்றுக்கொன்று நெருக்கமான தொடர்புடைய உயிரினங்கள். இவ்விரு உயிரினங்களின் உறுப்பினர்கள் தங்களுக்குள் உயிர்கலப்பில் ஈடுபட்டு உயிர் வாழ்வனவற்றை உருவாக்க முடியும். ஆனால் இவற்றிலிருந்து உருவான உயிர்கள் மலடாக இருக்குமேயானால், அவற்றின் வழித்தோன்றல்களின் மரபணு அமைப்பு பெருமளவில் ஒரேமாதிரியாக தான் இருக்கும்; அவை வெவ்வேறு உயிரின பிரிவுகளாக கடந்த காலத்தின் சமீபத்தில் தான் ஏற்பட்டிருக்க முடியும்.

யூனிலிசவாத பொருள்விளக்கத்தின்படி, ஹோமினிட்கள் உயிர்வாழ்ந்த முழு புவியியல் பகுதிகளிலும், மனித மரபுகளில் ஏற்பட்ட உயிரியியல் மாற்றங்கள் படிப்படியாகவும், முறையாகவும் ஏற்பட்டது. ஏதோவொரு மூலைகளில் பரவலாக பரவியிருந்த ஒரேயொரு உயிரினத்தில் ஏற்பட்ட அனுகூலமான மரபணு மாற்றங்கள், அதனோடொத்த உயிரினங்களுக்கு இடையே ஏற்பட்ட உயிர்சேர்க்கைகளாலும் மற்றும்/அல்லது இடப்பெயர்வினால் அவ்விடத்தில் இருந்த உயிரினங்களுடன் ஏற்பட்ட கலப்பின சேர்க்கையாலும், மீதமிருந்த பகுதிகளிலும் பரவியது. பல மில்லியன் ஆண்டுகளில் ஹோமினிட்களின் உடல் தோற்ற அமைப்பு மாறியிருந்த போதினும், இந்த மாற்றம் படிப்படியாகவும், முன்னேற்றம் பெற்ற வகையிலும் இருப்பதாக பொருள்படுத்தப்படுகிறது. அண்ணளவாக, சமகாலத்தின் ஹோமினிட் உடற்சுவட்டு ஆதாரங்களில் எலும்புக்கூடு தோற்றத்தில் காணப்பட்ட வேறுபாடுகள், மல்டிலீனிசவாதத்தால், வெவ்வேறு ஹோமினிட் உயிரினங்கள் உயிர் வாழ்ந்ததற்கான ஆதாரமாக பொருள்படுத்துகிறது. இதுவே யூனிலிசவாதத்தில், பாலியல் வேறுபாட்டுவாதம் (dimorphism-அதாவது ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இடையிலான உடலளவு போன்ற உடல்தோற்ற வேறுபாடுகள்) மற்றும்/அல்லது பாரியளவிலான மரபணு வேறுபாட்டைக் கொண்ட மக்களின் விளைவாக குறிக்கப்படுகிறது.

எதிர்மறை சிந்தனையின் பள்ளியான மல்டிலீனிசம் அல்லது கிளை சார்பு கண்ணோட்டமானது, உண்மையில் பிற விலங்குகளில் இருந்து மனிதர்களின் ஏற்புத்திறன் மாறுபட்டு இருந்தாலும் கூட, ஹோமினிட் உயிரியியல் பரிணாமத்தின் மீது அதன் செல்வாக்கு யூனிலிசவாதிகளால் வரையறுத்து காட்டப்படுவது போன்று, குறைந்தபட்சம் நவீனகால மனிதர்கள் உருவானது வரையிலாவது அத்தனை உயர்ந்ததன்று. ஹோமினிட்களின் வாழ்க்கை பெருமளவில் வளர்ச்சி அடையும் வரையிலும் அவர்களின் மக்கள்தொகை மிக குறைவாகவே இருந்தது; மக்கள்தொகையின் அடர்த்தியும் குறைவாக இருந்தது. மேலும் தொழில்நுட்ப ஏற்புத்திறனும் குறிப்பிடும் அளவிற்கு சாதாரணமாகவும், நீண்ட காலம் மாற்றம் இல்லாமலும் தான் இருந்தன என்று மல்டிலீனிசவாதிகள் வாதிடுகிறார்கள். எனவே, மரபணு பரிமாற்றம் பொதுவாக எல்லைக்குட்பட்டு முக்கியமாக, ஹோமினிட்கள் வசித்திருந்த தொலைதூர பிரதேசங்களில் (அதாவது, ஆப்ரிக்கா மற்றும் யூரேஷியாவின் பல பகுதிகளில்) இருந்தது. இது வெகுதொலைவு மக்களுக்கு இடையே துல்லியமாக மரபணு தொடர்பின்மையை உருவாக்கியது. மேலும் ஹோமினிட்கள் ஒரு பிரத்யேக நடைமுறை பண்பாட்டை கொண்டிருந்த போதிலும், இயற்கையால் அளிக்கப்பட்ட சில குறிப்பிட்ட அழுத்தங்களுக்கு எதிராக கணிசமான இடைநிலையை உருவாக்க முடியவில்லை. அதற்கு மாறாக, ஹோமினிட்கள் தொடர்ச்சியான வழிதோன்றல்களுக்கு உள்ளானார்கள் என்றும், குறிப்பிட்ட தட்பவெப்ப சூழலுக்கும் மற்றும்/அல்லது உயிர்வாழ்வதற்கான நிலைகளுக்கும் ஏற்ப பல்வேறு உயிரினங்கள் உருவாயின என்றும் மல்டிலீனியவாதிகள் வாதிடுகின்றனர். சில விடயங்களில், சில மில்லியன் ஆண்டுகளில் வெவ்வேறு ஹோமினிட் உயிரினங்கள் புவியியல்ரீதியாக ஒரேயிடத்தில் வந்திருப்பதையும் மற்றும் காலவகையில் நெருங்கி உடன் வாழ்ந்திருப்பதையும் காணமுடிகிறது. (அதாவது, கிழக்கு மற்றும் தெற்கு ஆப்ரிக்காவின் உடல்வலிமை மிக்க மற்றும் வலிவற்ற ஆதிவாசிகள்)

மல்டிலீனிசவாதத்தில் கூறப்படும் மனிதயின பரிணாமம், நவீன பரிணாம கோட்பாட்டுடன் மிகவும் நெருக்கமாக உள்ளது. சான்றாக, சமநிலை வலியுறுத்திய Gould and Eldridge இன் கோட்பாடு. இதில் கூறப்படுவதென்னவென்றால், ஒரு தொடர்பற்ற உயிரின சட்டம், குறிப்பிட்ட பிரத்யேக அழுத்தத்திற்கும் மற்றும்/அல்லது மாறுபட்ட மரபணு மாற்றத்திற்கும் உட்படும் போது முதன்மை உயிரின உறுப்பினர்களிடம் இருந்து மரபணுரீதியாக போதியளவில் வேறுபடும். அவ்வாறில்லாத வரை ஒரு குறிப்பிட்ட உயிரினங்கள் மாற்றத்திற்குட்படாமல் தான் இருக்கும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், வழித்தோன்றல்கள் ஏற்படுகின்றன என்பதேயாகும். தர்க்கவாத வகையில், ஒரு தனிமைப்படுத்தப்பட்ட உயிரின கூட்டத்தின் மட்டுப்படுத்தப்பட்ட மரபணு தொகுப்புக்களும் மற்றும் ஒரேமாதிரியான சுற்றுசூழலால் உருவாக்கப்பட்ட இயற்கை தேர்வின் அழுத்தத்தாலும் மரபணு மாற்றத்தால் இதற்கு எதிர்மாறாக ஒரு குறிப்பிட்ட புள்ளியை எட்டுகிறது. அங்கு புதிய உயிரினங்களின் தோற்றம் அல்லது அந்த உயிரின கூட்டத்தின் அழிவு உருவாகிறது.

ஒட்டுமொத்தமாக பார்ப்போமேயானால், பல தசாப்தங்களாக நடந்து வரும் எண்ணிலடங்கா ஆராய்ச்சிகள், ஆதிகால மனிதர்களுக்கும், நவீனகால மனிதர்களும் ஒரே உயிரினத்தின் உறுப்பினர்களா அல்லது வெவ்வேறு உயிரினங்களின் உறுப்பினர்களா என்ற கேள்விக்கு பதிலளிக்க முயன்றிருக்கின்றன. எவ்வாறிருப்பினும், இந்த கேள்விக்கான பதில், மனிதயின பரிணாமம் பற்றிய யூனிலினிசம் அல்லது மல்டிலினிச கண்ணோட்டத்தைச் சார்ந்து தான் அமையும். எனவே இது மனிதயினம் எதிலிருந்து தோன்றியது என்பதை நாம் அறிந்து கொள்வதற்கு மிகவும் முக்கியமாக உள்ளது. எவ்வாறிருப்பினும், இந்த புதிய ஆராய்ச்சி முடிவுகளுக்கு இடையில், தற்போதிருக்கும் தகவல் தரவுகள் இந்த முரண்பாடுகளுக்கு இன்னும் தெளிவான தீர்வு அளிப்பதாக இல்லை.

ஆதிகால மனிதர்கள்/நவீனகால மனிதர்களின் உறவுகள் தொடர்பான கேள்விகள் சார்ந்த ஆதாரங்கள் பல வகைகளின் கீழ் வருகின்றன. இவை ஒவ்வொன்றும் உண்மையின் ஒரு பகுதியை மட்டுமோ அல்லது ஒருதலைபட்சமான கண்ணோட்டத்தையோ தான் வெளிப்படுத்துகின்றன. இருந்தும், இவ்வகைகளில் குறிப்பிடத்தக்க இரண்டு வகைகள் உயிரியலில் உள்ளன. ஒன்று படிமான ஆதாரங்கள், மற்றொன்று சமீபத்திய DNA பகுப்பாய்வு. இதையடுத்து மூன்றாவது முக்கிய ஆதார தரவு மனிதவியல் ஆய்வியல். அதாவது இது, இரண்டு மக்கள் கூட்டங்களாலும் விட்டு செல்லப்பட்ட உற்பத்திசகய்யப்பட்ட அல்லது புத்துருக்கொடுக்கப்பட்ட பொருட்களும், பிற பொருளாயத தடயங்களும் சார்ந்த ஆய்வாகும். சமீபத்திய அறிக்கைகளின் தோற்றவாயாக (Origin) உயிரியியல் தரவுகள் இருப்பதால், நான் இந்த கட்டுரையில் அவற்றை சார்ந்து கவனம் செலுத்தவிருக்கிறேன்.

முன்பே குறிப்பிட்டது போல, ஒவ்வொரு ஆதார தரவும் அதற்குரிய சொந்த வரையறைகளையும், ஒருதலைபட்சமாக சார்ந்திருக்கும் தன்மையையும் கொண்டுள்ளன. "புதைபடிமானங்களை மீண்டும் உருவாக்க முடியாது" என்பது தொல்பொருளியியலின் உண்மை. உயிர்வாழும் உயிரினங்களின் பரிணாம உறவுகளைப் புரிந்து கொள்வதற்கான ஒரு முக்கிய கண்டுபிடிப்பு என்னவென்றால் மரபணு தனிமைப்படுத்தல் (genetc Isolation) என்பதாகும். இரண்டு உயிரின கூட்டங்களின் உறுப்பினர்கள் தங்களுக்குள் வெற்றிகரமாக உயிர்கலப்பில் ஈடுபட்டு, அவற்றின் இனப்பெருக்கம் செய்யக்கூடிய வழித்தோன்றல்களை உருவாக்க முடியுமா என்றால், இதற்கான பதில், தற்போது உயிர்வாழும் விலங்குகளின் அடிப்படையில், வெளிப்படையாக நேரடியாக உள்ளது. முன்னர் அளிக்கப்பட்ட சான்றில், குதிரைகளும், கழுதைகளும் உயிர்கலப்பு செய்து கலப்பின உயிர்களை உருவாக்க முடியும். ஆனால் இந்த கலப்பின உயிர்கள் இனப்பெருக்கம் செய்ய முடியாது. கலப்பினங்களின் கூட்டம் சுயமாக தொடர்ந்து நிலைத்திருக்க முடியாது. காலப்போக்கில், குதிரைகளுக்கும், கழுதைகளுக்கும் இடையே இயற்கையாகவே மரபணு பரிமாற்றம் இல்லாமல் போவதால், அவை வெவ்வேறானவையாக ஆகிவிடுகின்றன. மற்றொரு புறம், வீட்டு நாய்கள், கொயோட்கள் (Coyote - ஒருவகை ஓநாய்), ஓநாய்கள் அவற்றுக்குள் உயிர்கலப்பில் ஈடுபட்டு தொடர்ந்து கலப்பின கூட்டத்தை உருவாக்க முடியும் என்பதாய் தோன்றுகிறது. இது உண்மையானால், உடல் தோற்றம் மற்றும் நடவடிக்கைகளில் குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் இருந்தாலும் கூட, இந்த உயிரினங்கள் அனைத்தும் ஒரே உயிரினத்தின் பகுதியாக உள்ளன; ஆனால் வெவ்வேறு உயிரினங்களாக குறிக்கப்படுகின்றன.

துரதிஷ்டவசமாக விஞ்ஞானத்திற்காக, உயிர் வாழும் எந்த ஆதிகால மனிதயினமும் கிடைக்கவில்லை. குறைந்தபட்சம் அதுபோன்ற எதுவும் உலகில் கண்டுபிடிக்கப்படவும் கூட இல்லை. உயிர் வாழும் மனிதயினம் அல்லது பல நூறாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய புதைபடிமானங்கள் எடுத்துக்காட்டும் நவீனகால மனிதர்களிடமிருந்து வேறுபட்ட புதைப்படிமான எலும்புகளின் மாறுபட்ட உடற்கூறு தன்மைகளைக் கொண்டு முதன்முதலில் ஆதிகால மனிதயினம் கண்டறியப்பட்டது. புதைபடிமான உயிரினங்கள் ஒரே உயிரினங்களைச் சேர்ந்தனவா அல்லது வெவ்வேறு உயிரினங்களைச் சேர்ந்தனவா என்பதை தீர்மானிக்க, தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கிடைத்திருக்கும் புதைபடிமானங்களில் மிக கவனமாக ஆய்வுகளை மேற்கொள்கிறார்கள். பின்னர், மரபணு தொடர்பின்மையைக் குறிப்பிட போதிய வேறுபாடுகள் இருக்கின்றனவா என்பதை கணிக்க, உடல்தோற்றங்களிலும், குறிப்பிட்ட நடவடிக்கைகளிலும் உள்ள வேறுபாடுகளின் அளவுகளை ஒப்பிடுகிறார்கள். இந்த விளக்கங்கள் யாவும் தற்போது உயிர் வாழும் உயிரினங்களுக்கு இடையில் அறியப்பட்ட வேறுபாட்டு அளவுகளுடன் ஒப்புமையால் கூறப்பட்டவையாகும். வெவ்வேறு குறிப்பிட்ட உயிர்வகைகளைத் துல்லியமாக ஆய்வு செய்தாலும் கூட, மிகவும் நெருக்கமாக தொடர்புடைய உயிரினங்களை ஆய்வு செய்யும் போது, அவற்றை வேறுபடுத்தி பார்ப்பது மிகவும் கடினமாக உள்ளது.

பொதுவாக ஆதிகால மனிதர்களின் எலும்புகள் நவீனகால மனிதர்களின் எலும்புகளை விட மிகவும் பெரியதாகும். ஆதிகால மனிதர்கள் அவர்களின் கண் இமைகளின் மேல் முகடுகளையும் (இமை முகடுகள்), பொதுவாக நவீனகால மனிதர்களிடம் காணப்படாத மண்டை ஓட்டு வளைவுகளையும் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அவர்களுக்கு நவீனகால மனிதர்களை விட தட்டையான, பரந்த மூக்குகள் இருந்தன. அவர்கள் சுருங்கிய தாடைகளைக் கொண்டிருந்தார்கள். அவர்களின் மூளை நவீனகால மனிதர்களை விட அளவில் பெரியதாக இருந்தது. (குறிப்பு: இவ்வாறு இருப்பதால் அவர்கள் மிகவும் புத்திசாலிகளாக இருந்திருக்க வேண்டும் என்று அர்த்தமல்ல. அதாவது மூளையின் அளவிற்கும், புத்திசாலித்தனத்திற்கும் நேரடியாக எந்த தொடர்பும் கிடையாது.) ஆதிகால மனிதர்களும், நவீனகால மனிதர்களும் மாறுபட்ட சூழலில் வாழக்கூடிய வழித்தோன்றல்களை உருவாக்கியிருக்க முடியாது எனும் வகையில், மேற்கூறிய ஒன்றோ அல்லது பல வேறுபாடுகளோ மரபணு வேறுபாடுகளைக் குறிக்கின்றனவா?

மேலும் நிச்சயமற்றதன்மையை கூட்டும் வகையில், ஆதிகால மனிதர்களின் புதைபடிமானங்களிலும் நிறைய மாற்றங்கள் உள்ளன. மேற்குறிப்பிட்ட ஆதிகால மனிதர்களின் பண்புருக்கள், பண்டைய ஆதிவாசிகள் (Classic Neanderthals) என்று அழைக்கப்பட்ட, ஐரோப்பாவில் இருந்த உயிரினங்களிலும் வலுவாக காணப்படுகின்றன. இந்த பண்புகள் முற்போக்கான ஆதிவாசிகள் (Progressive Neanderthals) என்று அறியப்பட்ட, மத்தியகிழக்கில் இருந்த ஆதிகால மனிதர்களிடம் குறைவாக இருந்ததாக குறிப்பிடப்படுகிறது. இது பண்டைய ஆதிவாசிகளை விட முற்போக்கு ஆதிவாசிகள் நவீனகால மனிதர்களிடம் இருந்து மிக குறைவாக வேறுபட்டு இருந்தார்கள் என்பதை குறிக்கிறதா? அப்படியானால், முற்போக்கான ஆதிவாசி மனிதர்கள் மூலமாக, பண்டைய ஆதிவாசிகளுக்கும் நவீனகால மனிதர்களுக்கும் இடையே மரபணு பரிமாற்றம் இருந்திருக்குமா?

ஆதிகால மனிதர்களின் பிரமாண்ட தோற்றமும், தட்டை மூக்கு போன்ற பிற உடல் அமைப்பும், குறிப்பாக பண்டைய ஆதிவாசிகளுடன் ஒத்திருந்த இந்த பண்புகள், ஐரோப்பாவின் பனிகாலத்தில் ஏற்பட்ட கடுமையான சீதோஷ்ண நிலைமை மாற்றங்களால் மாற்றம் அடைந்திருக்கலாம் என்று பொருள்படுத்தப்படுகிறது. நவீனகால மனிதர்களுடன் ஒப்பிடும் போது, பின்தங்கி இருந்த ஆதிகால மனிதர்களின் தொழில்நுட்பமும், அவர்களின் பிரமாண்ட உருவ தோற்றமும், குறிப்பாக பெருமளவில் பாலூட்டிகளை மட்டும், துரத்தி சென்றும், ஈட்டி பயன்படுத்தியும் மற்றும் இரையுடன் கைகளால் சண்டையிட்டும் வேட்டையாடும் முறைகளைக் குறிப்பதாக உள்ளது என்று சிலரால் கருதப்படுகிறது. ஐரோப்பாவில் இருந்த போது ஆதிகால மனிதர்களும், நவீன மனிதர்களும் ஒரே வகையான விலங்குகளின் இரையையே உண்டு வந்தார்கள் என்று வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் டோனால்டு கிரேசன் மற்றும் போர்டியக்ஸ் பல்கலைக்கழகத்தின் பிரேன்கோஸ் டெல்பெக் ஆகியோரின் ஆராய்ச்சி (Knight, September 2003, NewScientist.com) குறிப்பிடுகிறது. எவ்வாறிருப்பினும், அவர்களின் வேட்டையாடும் முறைகள் சமமளவில் ஆக்கப்பூர்வமாக இருந்தன என்பதை நிரூபிக்க மேலும் பல ஆய்வுகள் தேவைப்படுகின்றன.

எவ்வாறிருப்பினும், குளிர்ந்த சீதோஷ்ண நிலையைத் தாங்கும் ஆதிகால மனிதர்களின் தன்மை சற்றே மிகை மதிப்பீடு செய்யப்பட்டதாக இருக்கலாம். ஆதிகால மனிதர்களும், ஆரிங்னேசியன்கள் (Aurignacians) என்று தொல்பொருள் ஆய்வாளர்களால் அறியப்படும் ஐரோப்பாவின் முந்தைய நவீனமனிதயின மக்களும் அதிகரித்த குளிர்ச்சியாலும், அதற்கு முந்தைய குளிர் சீதோஷ்ண நிலையாலும் தெற்கு நோக்கி தள்ளப்பட்டார்கள் என்று கடந்த பனிக்காலத்திலும் (குளிர் காலத்திற்கும் சாதாரண சீதோஷண நிலைமைக்கும் பல ஏற்ற இறக்கங்கள் இருந்தன) இருந்த, கடுமையான பனிக்காலத்திலும் தட்பவெப்ப நிலை மற்றும் சுற்றுச்சூழல் மாற்றங்களை ஒப்பிட்டு செய்யப்பட்ட ஆராய்ச்சி (van Andel, January 2002, Quaternary Research and Olszewski 2006 PaleoAnthropology) குறிப்பிடுகிறது. இந்த சீதோஷ்ண நிலைமைகளின் கடுமையான அழுத்தத்தின் கீழ், பெரும்பாலான இரைக்குரிய உயிரினங்கள் வடக்கு ஐரோப்பாவிலிருந்து இடம் பெயர்ந்தன. ஆரிங்னேசியன்கள் (Aurignacian) மற்றும் ஆதிகால மனிதர்களின் பொருளாதாரங்களும், தொழில்நுட்பங்களும் பெருமளவில் பாலூட்டிகளை வேட்டையாடுவதை மையமாக கொண்டிருந்ததால், கிடைத்த உணவு பரிவர்த்தனையில் ஏற்பட்ட மாற்றம் இவ்விரு குழுக்களின் வாழ்வாதாரத்தையும் பாதித்திருக்கலாம். எவ்வாறிருப்பினும், இந்த விளக்கத்தின்படி, ஆதிகால மனிதர்களை விட கலாச்சாரரீதியாக ஏற்றுக் கொள்வதற்கு தேவையான திறமை நவீனகால மனிதர்களிடம் மிகவும் இலகுவாக இருந்தது. இதனால் நவீனகால மனிதர்களால் உயிர்வாழ முடிந்தது. ஆதிகால மனிதர்களால் நிலைத்திருக்க முடியவில்லை.

மாறும் சீதோஷ்ண நிலைமைகளுக்கு நவீனகால மனிதர்கள் மாற்றியமைத்துக்கொள்ளும் தன்மையானது, ஆரிங்னேசியன்களில் இருந்து கரேவிட்டயன் (Gravettian) கலாச்சார வடிவத்திற்கு மாறியதை மனிதவர்க்க ஆய்வியல் வெளிப்படையாக பிரதிபலிக்கிறது. ஈட்டி எறிதல், வலை வீசுதல், பல்வேறு உணவு வகைகளின் கண்டுபிடிப்பு, மேலும் தைத்த ஆடைகள், நெய்த துணிவகைகள் ஆகியவற்றை கிரேவிட்டேயன் தொழில்நுட்பம் உட்கொண்டிருந்ததாக பண்புருவாக்கப்பட்டது. நவீனகால மனிதர்களுடன் ஒப்பிடும் போது, ஆதிகால மனிதர்கள் மிகவும் குறைந்த தொழில்நுட்பங்களையே கொண்டிருந்ததாக மனித இன ஆய்விற்கு கிடைத்திருக்கும் தடயங்கள் குறிப்பிடுகின்றன.

ஒட்டுமொத்தமாக, ஆதிகால மனிதர்கள் மற்றும் நவீனகால மனிதர்களிடையே உடல் தோற்றம் மற்றும் கலாச்சாரம் இரண்டுமே குறிப்பிடத்தக்க வேறுபாடுகளுடன் இருந்ததைக் காண முடிகிறது. உண்மையென கொள்ளத்தக்க அளவில், இயற்கை தேவைகளால் உந்தப்பட்டு பல்வேறு பரிணாம மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. எவ்வாறிருப்பினும், பல்வேறு சீதோஷ்ண நிலைகளில் வாழும் மக்களிடேயே குறிப்பிடத்தக்க உடல்தோற்ற வேறுபாடுகள் உள்ளன. சான்றாக, வெப்ப ஏற்பு மற்றும் இழப்பு கட்டுப்பாட்டின் தேவையானது, ஆப்ரிக்காவிலுள்ள சூடான மற்றும் வறண்ட பகுதிகளில் வாழும் ஒல்லியான, உயர்ந்த மக்களை விட ஆர்டிக் பிரதேசங்களில் வாழும் மக்களுக்கு குட்டையான, குண்டு உடல் தோற்றத்தை உருவாக்கி உள்ளது. இது நிலப்பரப்பு மற்றும் அளவு விகிதத்தை மாற்றுவதன் மூலம் வெப்பயியக்க சமத்தன்மை கொண்டு வரப்பட்டிருப்பதை தெளிவாக பிரதிபலிக்கிறது. இருந்த போதினும், உயிர் வாழும் அனைத்து மனிதர்களும் ஒரே உயிரினங்களின் உறுப்பினர்களே; மேலும் அவை ஒன்றோடொன்று உயிர்கலப்பு செய்யலாம் என்பதுடன் மாறுபட்ட சூழ்நிலைகளில் வாழும் வழிதோன்றல்களையும் அவற்றால் உருவாக்க முடியும். ஆதிகால மனிதர்களுடன் ஒப்பிடும் போது நவீனகால மனிதர்களுக்கு குறைந்த வலிமையுடைய உடல் தோற்றமே உள்ளது என்பதானது நவீனகால மனிதர்கள் முதலில் ஆப்பிரிக்காவில் தோன்றினார்கள் மற்றும் உயிரினங்கள் அளவில் ஒரு தொடர்பின்மையை அத்தியாவசியமாக எடுத்துக்காட்டும் வேறுபாடுகள் இல்லாமல் பின்னர் மிதமான தட்பவெப்ப நிலைக்கு ஏற்ற உடல் தோற்றத்தை பெற்றார்கள் என்பதையே எடுத்துக்காட்டுகிறது. உண்மையில் உணவுக்கான மற்றும் பிற அபிவிருத்திக்கான அழுத்தங்கள் (அதாவது, பற்களின் வளர்ச்சி போன்றவை) நவீன எஸ்கிமோக்களில் காணப்படுவது போன்று ஆதிகால மனிதர்களிடம் பெரியளவில் காணவில்லை என்று சில ஆய்வுகள் (Guatelli-Steinberg, August 2003, Journal of Human Evolution) குறிப்பிடுகின்றன.

ஆதிகால மனிதர்களின் பற்கள் பற்றிய மற்றொரு ஆய்வானது, அவர்கள் நவீனகால மனிதர்களை விட விரைவாக முதிர்ச்சியடைந்தார்கள் என்றும், அதாவது 15 வயதிற்குள் முழு முதிர்ச்சிபருவத்தை அடைந்தார்கள் என்றும் தீர்மானிக்கிறது. ஆதிகால மனிதர்கள் நவீனகால மனிதர்களை விட உயர்ந்த இறப்பு விகிதத்துடனும், குறைந்த வாழ்நாட்களுடனும் உடலளவில் மிகுந்த அழுத்தமான வாழ்க்கை வாழ்ந்தார்கள் என்றால், விரைவிலேயே ஏற்பட்ட முதிர்ச்சியானது, விரைவான பாலியியல் முதிர்ச்சிநிலை மற்றும் விரைவான இனவிருத்தியை அளித்திருக்க வேண்டும். (ஆதாரம்: Ramirez Rozzi, April 2004, Nature). ஆதிகால மனிதர்களுக்கும், நவீனகால மனிதர்களுக்கும் இடையே இருந்த முதிர்ச்சி விகித வேறுபாடுகள் கலப்பின மரபுகளின் அபிவிருத்திக்கு சாத்தியமற்ற விளைவை ஏற்படுத்தி இருக்கும். இது இரு குழுக்களுக்கும் இடையில் இனவிருத்தியைக் கட்டுப்படுத்தி இருக்கும் அல்லது தடுத்தும் கூட இருக்கலாம்.

பின்னர், புதைபடிமான தடயங்களின் சமீபத்திய ஆய்வுகளின் கூட்டு தகவல், ஆதிகால மனிதர்களைப் பற்றிய பல புதிய தகவல்களை ஒப்பு கொண்டுள்ளன. எவ்வாறிருப்பினும், இந்த தகவல் முரண்பாடான விளக்கங்களைத் தான் கொண்டு வருவதாக தோன்றுகிறது. இது, இதுவரை, ஒரேமாதிரியான விளக்க கட்டமைப்புக்குள் கொண்டு வரப்படவில்லை. மிக நெருக்கமான தொடர்புடைய இந்த குழுக்கள் ஒரே உயிரினத்தைச் சார்ந்தனவா அல்லது வேறுபட்ட உயிரினங்களைச் சார்ந்தனவா என்பது குறித்து ஒரு தெளிவான தீர்மானத்தை அடைய புதைபடிமான அமைப்பியல் ஆய்வுகள் மட்டும் போதியதாக இல்லாமல் இருக்கலாம்.

பொதுவாக இந்த பிரச்சனை குறித்தும் மற்றும் குறிப்பாக ஆதிகால மனிதர்கள்/நவீனகால மனிதர்களிடையேயான உறவு குறித்தும் கடந்த தசாப்தங்களில் அல்லது அதற்கு முந்தைய தசாப்தங்களில் ஒரு புதிய ஆதார தரவு உருவாக்கப்பட்டது. வாழும் உயிர்வகைகளின் மரபணுக்களை ஒப்பிடவும், பரிணாம உறவுகளின் மாதிரிகளை உருவாக்குவதற்காக அவற்றிற்கிடையிலான ஒற்றுமையின் அளவை தீர்மானிக்கவும் பல தசாப்தங்களாக DNA பகுப்பாய்வு பயிற்சி செய்யப்பட்டது. எவ்வாறிருப்பினும், மிக சமீபத்தில் தான், புதைபடிமானங்களில் இருந்து DNA பிரித்தெடுக்கும் நுட்பங்கள் கண்டறியப்பட்டன. DNA கெட்டிப்படும் என்பதால், சாத்தியமான சூழ்நிலைகளில் அது புதைபடிமானங்களில் உயிர்த்திருக்க முடியும். ஜூராசிக் பார்க்கில் காட்டப்படுவது போன்று, குறைந்தபட்சம் இதுவரையிலும் நம்மால் அழிந்து போன விலங்குகளை பிரதியாக்கம் (clone) செய்ய முடியவில்லை என்ற போதினும், போதியளவு DNA மீட்டெடுக்கப்பட்டால், நீண்ட காலத்திற்கு முன்பே இறந்து போன உயிர்வகைகளின் மரபணுக்களை ஆய்வு செய்ய முடியும். இறுதி விளைவாக, வாழும் மக்களிடையே செய்யப்படுவது போன்று, அதே முறையில் அழிந்து போன மக்களிடையேயும் மரபணு ஒப்பீடுகளைச் செய்ய குறைந்தபட்சம் இது சாத்தியக்கூறை ஏற்படுத்தியுள்ளது.

புதைபடிமான DNA பயன்படுத்திய மரபணு பகுப்பாய்வின் சமீபத்திய முடிவுகளின் முக்கியத்துவத்தை தீர்மானிக்க, இந்த ஆதார தரவுகளிலுள்ள சில குறைபாடுகளைக் கவனிக்க வேண்டியதாய் உள்ளது. முதலாவதாக, உயிர்வகைகளின் மரபணு குறியீட்டை DNA கொண்டிருந்தாலும் கூட, பெரும்பாலான மரபணு குறியீடுகளின் செயல்பாடுகளை விஞ்ஞான ஆராய்ச்சி புரிந்து கொள்ள முடியாமல் உள்ளது. எனவே, குறியீடுகளின் தொடர்ச்சிக்கு இடையிலான பெரும்பகுதிகளை மட்டுமே ஒப்பீடு செய்ய முடியும். ஒரு வாழும் உயிர்வகையின் குறியீட்டை இத்துடன் ஒப்பிட முடியாது. எனவே புதைபடிமான எலும்புக்குள் உள்ள புதைபடிமான DNA , குறைந்தபட்சம் தற்போது ஒற்றுமை மற்றும் வேற்றுமைகள் தொடர்பான தகவல்களை அளிக்கிறது. இதனை கொண்டு வெவ்வேறு DNA மாதிரிகள் குறிப்பிடும் உயிர்வகைகள் தங்களுக்குள் உயிர்கலப்பில் ஈடுபட்டு மாறுபட்ட சூழலில் வாழக்கூடிய மரபினங்களை இனவிருத்தி செய்ய முடியுமா என்பதை உறுதியாக வரையறுப்பது சாத்தியமில்லை.

புதைபடிமான DNA ஆய்வில் சில நடைமுறை சிக்கல்களும் உள்ளன. குறிப்பாக, குறிப்பிட்ட முடிவுகளின் நம்பகத்தன்மை மீது மனிதர்கள் கேள்வி எழுப்புவார்கள். இந்த சர்ச்சையில் கலப்பட பிரச்சனை தான் முக்கியமாக முன்நிற்கும். (ஆதாரம்: Caramelli et al, 16 July 2008, PLoS ONE). புதைபடிமான DNA வின் ஆதாரமாக விளங்கும் உயிரினங்களின் புதைபடிமான எலும்புகளை தோண்டி எடுப்பதற்கும், செறிவூட்டுவதற்கும் மனிதயினம் பொறுப்பாகிறது என்றாலும், மனிதர்கள் தொடர்ந்து அவர்களின் உடலிலிருந்து DNA அடங்கியுள்ள பொருட்களை வெளியேற்றுவதாலும் (சான்றாக, தோல், முடி, உமிழ்நீர் ஆகியவை), DNA எடுப்பு மற்றும் பகுப்பாய்வு செயல்முறை முழுவதும் மிக கடுமையான செயல்முறைகளை நடைமுறைப்படுத்தினால் ஒழிய, ஆய்வு செய்யப்பட வேண்டிய மாதிரிகளில் மனித DNA கலந்து விடுவதற்கான நிறைய சாத்தியக்கூறுகள் உள்ளன. அவ்வாறு கலந்து விட்டால், எந்த பகுப்பாய்வின் முடிவும் சந்தேகத்திற்கு இடமாகிவிடும்.

இந்த குறைபாடுகள் இருந்த போதினும், புதைபடிமான எலும்பு ஆய்வியலில், புதைபடிமான DNA ஆய்வானது முற்றிலுமான ஆதார தகவல்களையும் அளிக்கிறது. இதனால் பல்வேறு வகையான ஆய்வுகளில் போன்று, ஒரு குறிப்பிட்ட பிரச்சனைக்கு பல வேறுபட்ட வழிகளிலான ஆதாரங்களை கருத்திற்கொள்ள முடியும். இதனூடாக மிகவும் நம்பகமான, இறுதி விளக்கத்தை பெறுவது சாத்தியமானதாகும்.

புதைபடிமான எலும்பு ஆய்வியல் மற்றும் புதைபடிமான DNA ஆகிய இரண்டு ஆய்வுகளிலும் உள்ள ஓர் இறுதி பிரச்சனை கட்டாயம் குறிப்பிட்டாக வேண்டும். அதாவது மாதிரியின் அளவு மற்றும் பிரதிநிதித்தவத்தன்மையின் பிரச்சனைகள். பத்து அல்லது நூறாயிரக்கணக்கான அல்லது மில்லியன்கணக்கான ஆண்டுகளின் காலஅளவை உட்கொண்டிருக்கும் உயிரின பரிணாமத்தை ஆராயும் போது, வாழ்ந்து இறந்த உயிர்வகைவம்சங்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கும். இதற்கும் மேலாக, குறிப்பிட்ட காலத்தில் ஒரு குறிப்பிட்ட உயிரினங்களின் வாழும் உறுப்பினர்களின் எண்ணிக்கை பத்தாயிரம் அல்லது அதற்கு மேலாக கூட இருக்கலாம். அந்த காலத்தில் வாழ்ந்த உயிரினங்களில் எந்தவொரு தனிப்பட்ட உயிரினமும் எண்ணிலடங்கா மரபணு மற்றும் அமைப்பியலில் ஒரு சிறு பகுதியேயாகும். ஆகவே, ஒரு குறிப்பிட்ட காலத்தில், ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேற்பட்ட காலத்தில் மட்டும் உயிர் வாழ்ந்தவைகளில் எந்தவொரு குறிப்பிட்ட இயல்பிலும் (சான்றாக மண்டை ஓடு, எலும்புகளின் தடிமன் போன்றவை) ஏற்பட்ட பல்வேறு மாற்றங்கள் குறித்து போதியளவு நம்பிக்கையைப் பெற வேண்டுமானால், அந்த உயிரின கூட்டத்திடமிருந்து பெருமளவிலும், புள்ளிவிபரங்களிலும் வேறுபட்ட மாதிரிகளைப் பெற வேண்டும்.

துரதிஷ்டவசமாக, ஒரு குறிப்பிட்ட உயிரினங்களின் காலகட்டத்தில் உயிர் வாழ்ந்திருக்க கூடிய அவற்றின் எண்ணிக்கையோடு ஒப்பிடுகையில், ஆதிகால மனிதயினங்களின் புதைபடிமானங்களின் எண்ணிக்கையும் மற்றும் தற்போது இருக்கும் நவீனகால மனிதர்களுக்கு முந்தையவர்களின் எண்ணிக்கையும் மிக சிறிய விகிதத்திலேயே உள்ளன. இதற்கும் மேலாக, கண்டெடுக்கப்பட்ட மாதிரிகள் புள்ளியியலுக்கு உட்பட்ட மாதிரியாக இல்லாமல் ஒழுங்கற்ற வகையில் உள்ளன. ஆகவே, கிடைத்திருக்கும் புதைபடிமான மாதிரி நாம் ஆராய விரும்பும் கடந்தகால உயிரின கூட்டங்களுக்கு சொந்தமானவையே என்று உறுதியாக தீர்மானிப்பது கடினமாக உள்ளது. இதன் இறுதி வரிகள் என்னவென்றால், நிறைய மாதிரிவகைகள் கண்டறியப்பட்டு, ஆய்வு செய்யப்படும் போது, முழு விளக்கங்களுக்காக தற்போதைய விளக்கங்கள் மாற்றியமைக்கப்பட வேண்டியதாய் இருக்கலாம்.

தற்போதுள்ள முன்னெச்சரிக்கைகளை கருத்திற்கொண்டு, புதைபடிமானங்கள் மற்றும்/அல்லது DNA தரவுகளைப் பயன்படுத்தி ஆதிகால மனிதர்களுக்கும், நவீனகால மனிதர்களுக்கும் இடையிலான முரண்பாடுகளை அளிக்கும் சமீபத்திய ஆராய்ச்சிகளின் சில சான்றுகளை மீள்பார்வை செய்யப்படலாம்.

ஒரே உயிரினங்களுக்கான புனைவுகோளின் முன்னணி ஆதரவாளரான மிசெளரியின் புனித லூயிஸில் உள்ள வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் எரிக் டிரின்காஸ், சில ஆண்டுகளுக்கு முன்னர், ஆதிகால மனிதர்கள் மற்றும் நவீனகால மனிதர்களுக்கு இடையே கலப்பின சேர்க்கை இருந்ததை பல புதைபடிமான மாதிரிகள் எடுத்துக்காட்டுவதாக குறிப்பிட்டார்.

சுமார் 24,500 ஆண்டுகளுக்கு முற்பட்ட, போர்ச்சுகல்லில் கண்டறியப்பட்ட ஒரு சிறுவனின் புதைபடிமான எலும்புக்கூடு இதற்கு ஒரு சான்றாகும். (ஆதாரம்: Duarte et al. 1999, Proceedings of the National Academy of Sciences). ஆதிகால மனிதர்கள் பிறவற்றுடன் வெளிப்படையாக காணாமல் போன ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு பின்னர் உறுதியாக நவீன பண்புகளுடன் சார்ந்த பல ஆதிகால மனிதர்களின் பண்புகளை இந்த மாதிரி புதைபடிமானங்கள் கொண்டுள்ளன. இந்த சந்தேகத்திற்குரிய ஆதிகால மனிதர்களின் பண்புகள் நவீன மூளையுடன் ஒப்பிடும் போது பருத்த உடல் மற்றும் குட்டையான கால்கள் கொண்ட மூளை வளர்ச்சி பெற்ற எலும்பு கூட்டில் உள்ளன.

அந்த சிறுவன் கடல் சிப்பிகளால் கட்டப்பட்ட மாலையுடன் சிவப்பு ஆரஞ்சு நிறத்தில் வண்ணமிட்டு புதைக்கப்பட்டிருந்தான். இந்த புதைக்கும் பழக்கம் நவீனகால மனிதர்களிடம் இருந்து முற்றிலும் மாறுபட்டது. டிரின்காசின் விளக்கம் சரியென்றால், இந்த சிறுவன் ஆதிகால மனிதர்களுடன் மற்றும் நவீனகால மனிதகுழு கலந்த வம்சாவளியில் வந்த ஒரு கலப்பின கூட்டத்தின் உறுப்பினராவான். சிறுவனின் சந்தேகத்திற்கிடமான ஆதிகால மனிதபண்புகள் அந்த காலகட்டத்தில் நவீன மனிதர்களின் பல மாற்றங்களுக்குள் இருந்திருக்கலாம். மேலும் அது கலப்பின சேர்க்கையைத் தான் கட்டாயம் குறிக்கிறது என்றாகாது என்று விமர்சனங்கள் வாதிடுகின்றன. (ஆதாரம்: Tattersall and Schwartz 1999, Proceedings of the National Academy of Sciences).

மிக சமீபத்தில், உருமானியாவிலுள்ள ஒரு குகையில் கிடைத்த 30,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட நவீனகால மனிதயின எலும்புகளை டிரின்காஸ் மற்றும் கூட்டாளிகள் ஆராய்ந்தனர். (ஆதாரம்: August 2007, Current Anthropology). நவீனகால மனிதர்கள் மற்றும் ஆதிகால மனிதர்களின் பண்புகளின் கலவையை மூளை வெளிப்படுத்துவதால், உருமானிய புதைபடிமானங்கள் குறிப்பிடத்தக்க கலப்பின பெருக்கத்தை எடுத்துக்காட்டுகின்றன என்பது இந்த ஆய்வாளர்களின் கருத்து. தலையின் பின்புற கொண்டை (மூளையின் பின்னால் இருக்கும் வீக்கம்), மூளையின் பின்னால் இணைந்திருக்கும் ஒரு தசை மற்றும் தாடையின் பின்னால் இணைந்திருக்கும் சில தசைகள் ஆகியவற்றை ஆதிகால மனிதர்களின் தன்மைகள் உட்கொண்டிருக்கின்றன. இந்த தன்மைகள் நவீனகால மனிதர்களிடம் காணப்படுவதில்லை அல்லது எப்போதாவது மட்டும் காணப்படுகிறது.

நவீனகால மனிதர்கள் மற்றும் ஆதிகால மனிதர்களின் பொதுவான மூதாதையராக கருதப்படும் ஐந்து ஹோமோ ஹெடெல்பெர்ஜென்சிஸின் (Homo heidelbergensis) மூளைகளின் பகுதியைப் பயன்படுத்திய ஸ்பானிய ஆராய்ச்சியாளர்களின் மற்றொரு புலனாய்வு (Martinez et al., 22 June 2004, Proceedings of the National Academy of Sciences) மூளையின் கணனி கதிராய்வு(Computertomographie-CT) வடிவத்தை உருவாக்கியது. இந்த மறுவமைப்பு, நவீனகால மனிதர்களைப் போன்றே அண்ணளவாக செவிகளைப் பெற்றிருப்பதையும், ஆனால் தெளிவாக சிம்பன்ஜிகளிடமிருந்து வேறுபட்டு இருப்பதையும் குறிக்கும் உடற்கூறு அமைப்பியல் பண்புகளை எடுத்துக்காட்டுகிறது. அதவாது, ஹோமோ ஹெடெல்பெர்ஜென்சிஸ் உயிரினங்களின் உறுப்பினர்கள் நவீனகால மனிதர்களின் பேசும் ஒலியின் அளவையே பெற்றிருந்ததாக தெரிகிறது என்பதே இதன் பொருள்விளக்கமாக உள்ளது. ஆகவே, ஆதிகால மனிதர்கள் உட்பட அவர்ளின் வம்சாவளியினருக்கும் அந்த திறன் இருந்திருக்கலாம்.

மனிதயின பரிணாம ஆய்வியலுக்கான Max Planck பயிலகத்தின் பிரத்யேக ஆய்வு, நவீனகால மனிதர்களிடம் காணப்படும் மொழி மற்றும் பேச்சுத்திறனோடு தொடர்புடைய FOXP2 எனும் மரபணு போன்ற வடிவத்திலான மரபணு ஆதிகால மனிதர்களிடமும் காணப்படுவதாக கண்டறிந்துள்ளது.

Boca Raton நகரில் உள்ள புளோரிடா அட்லாண்டிக் பல்கலைக்கழக மனித வர்க்க ஆய்வாளர் Robert Mccarthy ஆதிகால மனிதர்களின் குரல் ஒலிகளை வடிவமைத்துள்ளார். அவர்கள் ஒலிப்பு நவீனகால மனிதர்களிடம் இருந்து சிறிது வேறுபட்டிருக்கலாம், ஆனால் இருந்தபோதினும் பேச்சு திறனுக்கு பொருத்தமானதே ஆகும். (ஆதாரம்: Callaway, 15 April 2008, NewScientist.com).

முன்நிற்கும் ஆதாரங்கள் ஆதிகால மனிதர்களுக்கும், நவீனகால மனிதர்களுக்கும் இடையிலான ஒற்றுமையைக் குறித்த போதினும், உயிரினங்கள் அளவிலான தொடர்பின்மை இரண்டிற்கும் இடையில் இருந்திருக்குமோ என்பதன் மீது ஹோமோ ஹெடெல்பெர்ஜென்சிஸ் வெளிச்சமிட்டு காட்டவில்லை.

முன்னர் விளக்கப்பட்ட Weaver, Roseman, Stringer போன்ற சில தோற்ற அமைப்பியல் ஆய்வுகளுடன், மரபணு ஆய்வுகளும், நவீனகால மனிதர்கள் மற்றும் ஆதிகால மனிதர்களுக்கு இடையிலான உறுதியான தொடர்பின்மை கண்ணோட்டத்திற்கு ஆதரவாக சார்ந்துள்ளது. பாரிய விரிவான புலனாய்வுகளுடன், இரண்டு குழுக்கள், ஒன்று லாரன்ஸ் பெர்க்லே தேசிய ஆய்வகம் மற்றும் அடுத்தது ஜேர்மனியிலுள்ள மனிதவர்க்க பரிணாம ஆய்வியலுக்கான Max Planck பயிலகம், இரண்டும் வெவ்வேறு நுட்பங்களைப் பயன்படுத்தி குரோசியா நாட்டின் குகையில் கண்டெடுக்கப்பட்ட 38,000 ஆண்டுகளுக்கு முந்தைய ஆதிகால மனிதர்களின் நியூக்ளியர் DNAவை குறித்து ஆய்வு செய்தன. இந்த ஆய்வு, முன்னர் விளக்கிய Max Planck பயிலகத்தின் mtDNA ஆய்விலிருந்து முற்றிலும் மாறுபட்டது. இதன் முடிவுகளில், ஆதிகால மனிதர்களுக்கும், நவீனகால மனிதர்களுக்கும் இடையே 99.5 சதவீதத்திற்கும் மேலாக மரபணு ஒற்றுமை இருப்பதாகவும், எனவே இவற்றிற்கிடேயே நெருங்கிய தொடர்புகள் இருப்பதாகவும் உறுதிப்படுத்தியது. ஏதேனும் வகையில் ஒற்றுமைகள் இருந்த போதினும், நவீனகால மனிதர்களுக்கும் மற்றும் ஆதிகால மனிதர்களுக்கும் இடையே கலப்பின சேர்க்கை இருந்ததாக கூறும் யோசனைக்கு ஆதரவாக ஆராய்ச்சியாளர்கள் எந்த ஆதாரத்தையும் பெறவில்லை. இருப்பினும், இந்த தரவுகளைக் கொண்டு அக்கருத்தை முற்றிலுமாக விட்டுவிடவும் முடியாது. அதிகளவில் மரபணு இருப்பதாவது தொடர்ச்சியான அல்லது புதுப்பிக்கப்பட்ட மரபணு பரிமாற்றம் என்று பொருள்படுத்தப்படுவதை விட, முன்னர் குறிப்பிட்ட குதிரைகள் மற்றும் கழுதைகள் சான்றை போல ஒரு பொதுவான மூதாதையரால் ஏற்பட்டது என்று விளங்கப்படுத்தப்படுகிறது.

மரபணு ஆய்வு முடிவுகளை மதிப்பிடுகையில், உயிரினங்களுக்கு இடையிலான வேறுபாடுகளை துல்லியமாக DNA தொடர்ச்சிகளுக்கு இடையிலான ஒற்றுமையின் ஒப்பீட்டு எண்ணிக்கையால் தீர்மானிக்க முடியாது என்பதை முக்கியமாக புரிந்து கொள்ள முடியாது. எளிய வார்த்தைகளில் கூறுவதானால், அதில் 'வடிவக்கூறு மரபணுவும்' (architecture genes) உள்ளன; 'கட்டுப்பாட்டு மரபணுவும்'(control genes) உள்ளன. வடிவக்கூறு மரபணுக்கள் எவ்வாறு வெளிப்படுகின்றன என்பதை கட்டுப்பாட்டு மரபணுக்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன. கட்டுப்பாட்டு மரபணுவின் ஒரு சிறிய மாற்றம், ஒன்று அல்லது பல வடிவக்கூறு மரபணுக்களின் வெளிப்பாடுகளை கணிசமாக பாதிக்கலாம். எனவே மரபணு தொடர்ச்சியில் மாற்றம் ஏற்படுகிறது என்ற உண்மை இருந்த போதினும், குறிப்பிட்டளவில் வேறுபட்ட உயிர்வகைகளுக்கு வழிவகுக்கும் என்பது மிக சிறியளவேயாகும். ஆகவே, நவீனகால மனிதர்கள் ஆதிகால மனிதர்களிடம் ஒருசில தொடர்புகளில் மட்டும் மாறுபடலாம்; மிக முக்கியமாக கட்டுப்பாட்டு மரபணுக்களில் மாறுபடலாம்.

ஐரோப்பாவில் தோராயமாக ஆதிகால மனிதர்களுடன் நவீனகால மனிதர்கள் கலந்த காலத்திய புதைபடிமானங்களில் இருந்து நவீனகால மனிதர்களின் மைட்டோகான்ரியல் DNAவை ஆராயும் மற்றொரு ஆராய்ச்சி, இன்றும் ஐரோப்பாவில் அதேபோன்ற mtDNA இருப்பதாக கண்டறிந்துள்ளது. எவ்வாறிருப்பினும், இந்த mtDNA ஆதிகால மனிதர்களின் mtDNA இல் இருந்து கணிசமாக வேறுபட்டுள்ளது. (ஆதாரம்: Caramelli et al., 16 July 2008, PLoS ONE). இது ஆதிகால மனிதர்களுக்கும், நவீனகால மனிதர்களுக்கும் இடையே மரபணு தொடர்பின்மை இருப்பதை தான் மீண்டும் குறிக்கிறது.

இறுதியாக, ரேடியோகார்பனின் காலஅளவு ஒப்பீடுகளில் திருத்தங்களின் சமீபத்திய மாற்றங்கள், ஐரோப்பாவில் ஆதிகால மனிதர்களுக்கும், நவீனகால மனிதர்களுக்கும் இடையில் ஏற்பட்ட கலப்பு காலத்தை ஆயிரம் ஆண்டுகள் என்ற அளவில் சுருக்கி உள்ளது. (ஆதாரம்: Mellars, 23 February 2006, Nature). இது ஒரு நீண்ட கால கூட்டு இருப்பினதும் மற்றும், சிலவேளை ஒன்றின் மீதான ஒன்றின் தாக்கத்திற்கு பதிலாக, கலாச்சாரீதியாகவும், மரபணுரீதியாகவும் ஆதிகால மனிதர்கள் நவீனகால மனிதர்களுடன் வளத்திற்காக போராடும் திறன்யின்மையாலும் மற்றும்/அல்லது பிந்தையதால் முந்தையது இல்லாதழிக்கப்பட்டிருக்கலாம் என்பதாலும் ஆதிகால மனிதர்களின் விரைவான அழிவுக்கு இட்டு சென்றிருக்கலாம் என்ற முடிவிற்கு இட்டுச்செல்கின்றது.

ஒட்டுமொத்தமாக, ஆதிகால மனிதர்களும், நவீனகால மனிதர்களும் உயிரின அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளன என்ற விளக்கத்தையே மரபணு ஆய்வுகள் சார்ந்துள்ளன. இது புதைபடிமான எலும்பு ஆய்வுகளில் இருந்து வரும் முடிவுகளுக்கு முற்றிலும் முரணாக நிற்கிறது. இருந்தபோதினும், மொத்தத்தில், உயிரின தொடர்பின்மை குறித்த வாதத்தின் பக்கத்தை சார்ந்தே ஆய்வுகளின் போக்கு இருப்பதாக தெரிகிறது.

மரபணு ஆராய்ச்சி இதுவரை ஆதிகால மனிதர்களின் DNAவின் ஒரு பகுதியை மட்டுமே ஆய்வு செய்துள்ளது என்பதும் கவனிக்கத்தக்கதாகும். ஆதிகால மனிதர்களின் முழு DNA தொடர்ச்சிகளும் இந்த ஆண்டு முடிவில் ஆராய்ச்சி செய்யப்படும் போது, மேலும் தெளிவான கண்ணோட்டம் கிடைக்கலாம். பின்னர் இது மனிதயின மரபணு திட்டத்தால் (Human Genome Project) வரையறுக்கப்பட்ட நவீனமனித DNA தொடர்ச்சியுடன் ஒப்பிடப்படும்.

முன்னர் குறிப்பட்டது போல, ஆதிகால மனிதர்களுக்கும், நவீனகால மனிதர்களுக்கும் இடையிலான இயற்கையான தொடர்புகள் மீதான ஆராய்ச்சி பெரும்பாலும் பொதுவாக மனிதயின பரிணாம போக்கை புரிந்து கொள்ள பயன்படுகிறது. ஒருவேளை சிறப்பு ஆராய்ச்சிகளால் மனித பண்புகளில் ஒரேயொரு சிகரமான புத்திஜீவித்தனமான சிந்தனை திறனின் அபிவிருத்தியையும் மூலத்தையும் அறிய இவை உதவுமா? இந்த திறன் முழுமையாக மொத்தத்தில் ஒரேதடவையில் உருவாகி விட்டதா? அல்லது படிப்படியாக பல மில்லியன் ஆண்டுகளாக பல உயிரினங்களைக் கடந்து உருவானதா? அதாவது ஒருவேளை கடந்த காலத்தில் இதன் பழைய வளர்ச்சி பெறாத நிலைகள் இருந்தனவா? அவ்வாறு இருந்தால் இந்த பரிணாம செய்முறை தொடர்ச்சியில் சமீபத்திய வரவாக நமது இன்றைய மனதின் திறன்கள் அமைகின்றன. அதேபோன்று, நமது நிலை தான் இதுவரை எட்டப்படாத மிகவும் நூதனமான ஒன்றாகவும் அமைகிறது, ஆனால் இதுவே இறுதியானதாக இருக்க வேண்டும் என்பது அவசியமல்ல.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved