World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு : ஈராக்

US military deaths in Iraq reach 4,000

Eight US soldiers and dozens of Iraqis killed in weekend violence

ஈராக்கில் அமெரிக்க இராணுவ உயிரிழப்புகள் 4,000 இனை எட்டுகிறது

வார இறுதி வன்முறையில் எட்டு அமெரிக்க படையினரும் பல ஈராக்கியர்களும் உயிரிழந்தனர்

By Joe Kay
24 March 2008

Back to screen version

அமெரிக்க தலைமையிலான இராணுவ ஆக்கிரமிப்பின் ஸ்திரமின்மையை எடுத்துக்காட்டும் வகையில் மீண்டும் எழுந்துள்ள ஒரு வன்முறைக்கிடையில், வாரயிறுதியில் குறைந்தபட்சம் எட்டு அமெரிக்க படையினர் ஈராக்கில் கொல்லப்பட்டனர். ஈராக்கில் உயிரிழந்த அமெரிக்க படையினர்களின் எண்ணிக்கை தற்போது 4,000 என்னும் அளவை எட்டியிருக்கிறது.

சனியன்றும் மற்றும் மற்றொன்று ஞாயிறன்றும் பாக்தாத்தில் நடந்த இரண்டு வெவ்வேறு சாலையோர வெடிகுண்டு வெடிப்புகளில் ஏழு படையினர் கொல்லப்பட்டனர். அமெரிக்க இராணுவ தகவல்களின்படி, எட்டாவது நபர் வெள்ளியன்று பாக்தாத்தின் தெற்கில் - சிறுபீரங்கி அல்லது ராக்கெட்டால் - மறைமுகமான தாக்குதலில் கொல்லப்பட்டார். இதுவரை, மார்ச் மாதத்தில் மட்டும் 27 அமெரிக்க படையினர் கொல்லப்பட்டுள்ளனர்.

தற்கொலைப் படையின் குண்டுவெடிப்பிலும் மற்றும் அமெரிக்காவின் திடீர் தேடுதல்களிலும் டசின் கணக்கான ஈராக்கியர்கள் கொல்லப்பட்டனர்.

பாக்தாத்தின் வடகிழக்கில் சுமார் 30 மைல் தூரத்திலுள்ள பகூபாவை மையப்படுத்தி நடத்தப்பட்ட நடவடிக்கையில் 17 நபர்கள் கொல்லப்பட்டதாகவும், 30 நபர்கள் கைதுசெய்யப்பட்டதாகவும் அமெரிக்க இராணுவம் குறிப்பிட்டது. அசோசேடேட் பிரஸ் தகவல்படி, பகூபாவில் நடந்த "ஒரு விமானத் தாக்குதலில் பல உள்ளூர்வாசிகள் கொல்லப்பட்டதாக ஈராக்கிய போலீஸ் அறிவித்தது", ஆனால் கொல்லப்பட்ட அனைவரும் "கிளர்ச்சியாளர்கள்" என இராணுவம் தெரிவித்தது.

மீண்டும் இராணுவ தகவல்களின்படி, ஈரான் எல்லையருகில் அல்கொய்தாவுடன் தொடர்புடைய என கூறப்படும் ஐந்து ஈராக்கியர்கள் கொல்லப்பட்டனர். எவ்வாறிருப்பினும், அவர்களுடனான தொடர்பு குறித்து யாரும் பொறுப்பேற்கவில்லை. ஈரான் மற்றும் அல்கொய்தாவுக்கு இடையே தொடர்புகள் இருப்பதாக கட்டுக்கதைகளை உருவாக்க சமீபத்திய வாரங்களில் அமெரிக்க அரசாங்கம் அதன் முயற்சிகளை புதுப்பித்திருந்தது, இது எந்த வகையிலாவது ஈரான் மீது இராணுவ நடவடிக்கை எடுப்பதற்கான ஒரு போலிகாரணமாக பயன்படுத்தப்படலாம்.

சனியன்று சமாராவிற்கு அருகில் நடந்த மற்றொரு நிகழ்வில், வெளிப்படையாகவே விழிப்புணர்வு குழுக்கள் என்றும் அறியப்படும் "ஈராக்கின் மகன்கள்" (Sons of Iraq) இனை சேர்ந்த உறுப்பினர்களான ஆறு ஈராக்கியர்களை அமெரிக்கா கொன்றது. இவை அமெரிக்க ஆக்கிரமிப்புடன் கூட்டணி அமைத்துக் கொண்டிருக்கும் சுன்னி குழுக்கள் ஆகும். "உள்ளூர் வெடிக்கும் சாதனங்களை பதுக்கி வைக்குமிடம் என வரலாற்று ரீதியாக அறியப்படும் ஒரு பகுதியில் சந்தேகத்திற்கிடமான பயங்கரவாத நடவடிக்கைகள் நடத்தப்படுவதை" கண்டறிந்ததால் தாங்கள் அந்த ஈராக்கியர்களின் மீது துப்பாக்கிசூடு நடத்தியதாக அமெரிக்க இராணுவ துருப்புகள் தெரிவித்தன.

சமாராவிலுள்ள விழிப்புணர்வு குழுவின் தலைவர் அபு பரூக் கூறியதாக நியூயோர்க் டைம்ஸ் குறிப்பிட்டதாவது, "துப்பாக்கி வைத்திருந்தவர்கள் மட்டுமே தங்களால் கொல்லப்பட்டதாக அமெரிக்க துருப்புகள் தெரிவித்தன, ஆனால் அவர்கள் சாதாரண மனிதர்கள் தான் என்பதுடன் அவர்கள் விழிப்புணர்வு கழகத்தின் உடைகளைக் கூட அணிந்திருக்கவில்லை." என்று தெரிவித்தார்.

இந்த நிகழ்வு பற்றிய விபரங்கள் இன்னும் தெளிவாக இல்லை, ஆனால் அமெரிக்க துருப்புகள், ஈராக்கியர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி பாகுபாடில்லாமல் அவர்களை கொன்று குவிப்பர் என்பதுடன் சுன்னி குழுக்களுடன் கொண்டுள்ள மென்மையான உறவையும் இந்த துப்பாக்கிசூடு அடிக்கோடிட்டு காட்டுகிறது. இக்கழகத்தில் இருந்தவர்களில் பெரும்பாலானவர்கள் சமீப காலம் வரை அமெரிக்க ஆக்கிரமிப்புக்கு எதிராக போராடினார்கள். தற்போது இந்த அமைப்புகளின் உறுப்பினர்களுக்கு அமெரிக்காவால் மாதமொன்றுக்கு 300 டாலர்கள் வழங்கப்பட்டு வருகிறது.

மற்றொரு நிகழ்வில், பாக்தாத்திலுள்ள அரசின் பச்சை மண்டல வளாகத்தில் நடந்த ராக்கெட் தாக்குதல்களில், ஏவுகணைகள் அருகில் வந்திறங்கியபோது 10 ஈராக்கியர்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல்கள் அமெரிக்க செயல்பாட்டின் முக்கிய மையத்தில் நடத்தப்பட்டிருக்கும் மிக உறுதியான தாக்குதல் என அசோசேடேட் பிரஸ் குறிப்பிட்டிருந்தது.

மோசூலில் தற்கொலைப்படை வண்டியின் வெடிகுண்டு தாக்குதலானது 13 ஈராக்கிய படையினரை கொன்றதுடன், 42 பேர்களை காயப்படுத்தியது. பாக்தாத்தின் ஜஃபாரினியா மாவட்டத்தில் நடத்தப்பட்ட ஒரு வேறொரு துப்பாக்கி தாக்குதல் 7 பேரை கொன்றது மற்றும் 16 பேர் அதில் காயமடைந்தனர். பாக்தாத்தின் வடமேற்கு பகுதியில் நடந்த மற்றொரு தற்கொலைப் படை தாக்குதலில் 7 பேர் கொல்லப்பட்டனர்.

ஆக்கிரமிப்பு அமெரிக்க துருப்புகளுக்கும் மற்றும் மொக்டதா அல் சதரின் ஷியைட் குழுவான மெஹ்தி இராணுவ போராளிகளுக்கும் இடையே நடந்த போர்நிறுத்த பேச்சுவார்த்தையின் ஒரு பகுதியாக, சமீபத்திய மாதங்களில் பசுமை மண்டலங்களின் மீதான தாக்குதல் அடிக்கடி நிகழவில்லை. கடந்த மாதம் சதர் மீண்டும் போர்நிறுத்தத்தை தொடர்ந்திருந்தார், ஆனால் அவரின் தளங்களை உருவாக்கி வரும் பெருமளவிலான வறிய ஷியைட் மக்களிடையே பாரிய பிளவுகள் ஏற்பட்டுள்ளதுடன், அவர்கள் ஆக்கிரமிப்புக்கு தீவிரமாக எதிர்ப்பை காட்டுகின்றனர்.

"மெஹ்தி இராணுவ போராளிகள் ஈராக்கிய மற்றும் அமெரிக்க துருப்புகளுடன் தெற்கு நகரமான குட் மற்றும் தெற்கு பாக்தாத்தில் கடந்த வாரம் சண்டையிட்டதை தொடர்ந்து போர்நிறுத்தம் முடிவுக்கு வரலாம்." என ராய்டர் தெரிவித்தது.

பாஸ்ரா நகரம் உட்பட ஷியைட் மக்கள் அதிகளவிலுள்ள தெற்கில் பெரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள அமெரிக்க மற்றும் நேச நாட்டு துருப்புகள் திட்டமிட்டு வருகின்றன. பாஸ்ரா மீது "திடீர்தாக்குதலுக்கு" தயாராகும்படி பிரிட்டிஷ் துருப்புகளை அமெரிக்கா கேட்டுக் கொண்டதாக பிரிட்டிஷ் சன்டே மிர்ரர் பத்திரிகை குறிப்பிட்டது. "கூட்டணியின் கவனத்தை பாஸ்ராவின் மீது திருப்புவதே திட்டமாகும், மேலும் அந்நகரத்தின் மீது மோதலை தொடங்க நாங்கள் பிரிட்டிஷை வலியுறுத்தி வருகிறோம். அவர்களிடம் போதியளவு துருப்புகள் இல்லையென்றால், அவர்களின் உதவிக்கு அமெரிக்க படையும் வழங்கப்படும்." என மோசூலின் அமெரிக்க நடவடிக்கைகளுக்கு பின்னர், பெயர் வெளியிட விரும்பாத மூத்த இராணுவ வட்டாரம் கூறியதாக அப்பத்திரிகை செய்தி வெளியிட்டது.

அமெரிக்க தாக்குதலின் ஐந்தாம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ. புஷ் ஆற்றிய ஒரு உரையை தொடர்ந்து, சில நாட்களுக்கு பின்னர் மீண்டும் வன்முறைகள் தொடங்கின. ஓரளவிற்கும் முக்கியத்துவமில்லாத யுத்தத்தை ஆதரித்து புஷ் மற்றும் துணை ஜனாதிபதி டிக் சென்னி தொடர்ந்து அறிக்கைகள் வெளியிட்டிருக்கிறார்கள் என்பதுடன், காலவரையற்று அமெரிக்க படையினரை தொடர்ந்து ஈராக்கில் நிறுத்தி வைக்கவும் அவர்கள் உறுதியளித்திருக்கின்றனர்.

குறைந்தபட்சம் கோடைகாலம் முழுவதும் மற்றும் அதற்கப்பாலும் ஈராக்கில் 140,000 படையினரை நிறுத்தி வைக்கும் ஒரு திட்டத்தை மூத்த இராணுவ தளபதிகள் புஷ்ஷிடம் சமர்பிக்கவுள்ளார்கள். கடந்த ஆண்டு மோதலை தொடக்குவதற்கு முன்னால் இருந்ததை விட இந்த எண்ணிக்கை சற்றே அதிகமாகும். இந்த பரிந்துரைகள் உத்தியோகபூர்வமாக இந்த வாரம் அளிக்கப்படவுள்ளன.

சுமார் 170,000 முக்கிய படைகளில் இருந்து சில படைப்பிரிவுகள் திரும்பி அழைத்துக் கொள்ளப்பட திட்டமிடப்பட்டுள்ளது. "போரிடும் 15 படை பிரிவுகளை மட்டும் தக்க வைத்துவிட்டு, மீதி படைகள் திரும்ப பெற்றுக் கொள்ளபட்ட பின்னர் என்ன நடக்கும் என்பதை மதிப்பிட தங்களுக்கு நிறைய கால அவகாசம் தேவை" என ஈராக்கிலுள்ள அமெரிக்க படையில் தலைவர் ஜெனரல் டேவிட் பெட்ரீயஸ் மற்றும் பிற அதிகாரிகள் தெளிவுபடுத்தி இருப்பதாக இராணுவம் மற்றும் அரசாங்க அதிகாரிகளை மேற்கோள் காட்டி சனியன்று நியூயோர்க் டைம்ஸ் குறிப்பிட்டது.

அமெரிக்க இராணுவ சக்தியின் ஒரு பகுதியை திரும்ப பெறுவதும் கூட ஆக்கிரமிப்புக்கு எதிரான எதிர்ப்பை இனக்குழுவாத குழப்பங்களுடன் இணைந்து மீண்டும் எழுச்சி பெற செய்யும் என புஷ் நிர்வாகத்திலுள்ள பெட்ரீயஸ் மற்றும் பல நபர்கள் கருதுகிறார்கள்.

எவ்வாறிருப்பினும், இராணுவம் மற்றும் அரசியல் அமைப்புகளில் ஆழமான முரண்பாடுகள் உருவாகி வருகின்றன. குறிப்பாக, ஈராக்கிய யுத்தத்தின் நெருக்கடியால் இராணுவ ஒருங்கிணைப்பு மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதில் இராணுவ இணை தலைவர்கள் உட்பட இராணுவ உயர்மட்டத்தில் குறிப்பிடத்தக்க அளவில் பிரச்சனைகள் நிலவுகின்றன. இத்தகைய கருத்துக்களை சிறிது சமாளிக்கும் வகையில், தற்போது 15 மாதங்களாக இருக்கும் படைகளின் சுழற்சி முறையை 12 மாதங்களாக பெண்டகன் குறைத்து அறிவிக்கும் என கருதப்படுகிறது.

கடந்த மாதம், மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசிய பகுதிகளின் வெளிநாட்டு இராணுவ நடவடிக்கைகளுக்கான அமெரிக்க மத்திய கட்டளைத்தலைவர் அட்மிரல் வில்லியம் ஜெ. பால்கன் இராஜினாமா செய்தார். ஈராக்கிலிருந்து கூடுதலான துருப்புகள் திரும்ப பெறப்பட வேண்டும் என பால்கன் விரும்பினார் என்பதுடன் அவர் வெளிப்படையாகவே ஈரானுக்கு எதிரான அமெரிக்க நடவடிக்கைகளை எதிர்த்தார்.

அடுத்த மாதம் செனட் இராணுவ சேவைகள் குழுவின் முன்னால் பால்கன் சாட்சியம் கூறுவதை இராணுவம் அனுமதிக்காது என ஒரு பெண்டகன் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார். இந்த குழுவிலுள்ள ஜனாநாயக கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன் சாட்சியத்தை கோரியுள்ளார்.

இராணுவ துருப்புகளுக்கான இணை தலைவர்களின் அமைப்பின் சேர்மேன் அட்மிரல் மெக்கேல் முல்லன் உட்பட, பல உறுப்பினர்களும் பால்கன் வெளிப்படையாக கூறியதைப் போன்ற அதே கருத்தைக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த முரண்பாடுகள் குறித்து லொஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் மார்ச் 20ல் குறிப்பிட்டதாவது, "குறுகிய காலத்தில், புஷ் நிர்வாகத்தின் இறுதி நாட்கள் வரை 15 யுத்த படைகள் உட்பட சுமார் 140,000 துருப்புகள் ஈராக்கில் இருக்க வேண்டும் என பெட்ரீயஸின் ஆதரவாளர்கள் விரும்புகிறார்கள். இராணுவ இணை தலைவர்கள் அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் ஆலோசகர்கள் விரைவில் திரும்பப் பெறப்படுவதை விரும்புகிறார்கள். சிலர் ஜனவரி 2009க்குள், துருப்புகளின் அமைப்பு அடிப்படையில் 12 படைப்பிரிவுகள் அல்லது அதற்கு கீழாக எண்ணிக்கையைக் குறைக்க, (அதாவது அண்ணளவாக 120,000 துருப்புக்கள்) அழுத்தம் அளித்து வருகிறார்கள்."

"பகுதியாக, பெட்ரீயஸ் மற்றும் இணை தலைவர்கள் அமைப்புக்கு இடையிலான முரண்பாடுகள், குறிப்பாக அதன் தலைவர் கடற்படை அட்மிரல் மெக்கேல் ஜி. முல்லனுக்கும் இடையிலான முரண்பாடுகளானது அவர்களின் வெவ்வேறு பொறுப்புகளை செயல்படுத்துவதில் அமைந்திருக்கிறது. பெட்ரீயஸின் முக்கிய பணி ஈராக் யுத்தத்தில் வெற்றி பெறுவதாகும். நீண்டகால அடிப்படையில் இராணுவத்தை வலிமைப்படுத்துவதை மற்றும் பெரியளவிற்கு அதை தயார்படுத்துவதை (அதாவது எதிர்கால யுத்தத்திற்கு) உறுதி செய்வதே முல்லன் மற்றும் இணை தலைவர்களின் முதன்மை பொறுப்பாகவுள்ளது.

இவை ஈராக்கின் கொள்கைகள் மீதான அரசியல் அமைப்பிற்குள் நிலவும் கருத்து முரண்பாடுகளின் அளவாகும். ஈராக்கிய யுத்தம் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு ஒரு பேரழிவாக இருப்பதுடன் ஆளும் மேற்தட்டுகளுக்குள் அது ஆழ்ந்த குழப்பங்களையும் உருவாக்குகிறது. முன்னனி ஜனநாயக வேட்பாளர்கள் மட்டுப்படுத்தப்பட்டளவில் அமெரிக்க படைகளை திரும்ப பெற அழைப்பு விடுத்திருப்பதன் மூலம் யுத்தத்திற்கு எதிராக இருக்க விரும்புவது போல தங்களை காட்டிக்கொள்ள விரும்புகின்றனர்.

எவ்வாறிருப்பினும், மத்திய கிழக்கிலும் மற்றும் சர்வதேச அளவிலும் அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் நலன்களை பாதுகாப்பதற்கான தேவையை மட்டும் அனைத்து பிரிவுகளும் தங்களின் ஆரம்பபுள்ளியாக எடுத்துக் கொள்கின்றன.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved