World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

German state elections reveal pronounced shift to the left by electorate

ஜேர்மனிய மாநிலத் தேர்தல்கள் வாக்காளர்கள் திட்டவட்டமாக இடது நோக்கி நகர்ந்திருப்பதை எடுத்துக்காட்டுகின்றது

By Ulrich Rippert
30 January 2008

Back to screen version

இரண்டு ஜேர்மனிய மாநிலங்களான ஹெஸ்ஸ, லோவர் சாக்சனியில் கடந்த ஞாயிறன்று நடந்த தேர்தல்கள் வாக்காளர்கள் இடது நோக்கி நகர்கிறார்கள் என்பதை மிகத் தெளிவாக எடுத்துக்காட்டியுள்ளன.

இரு மாநிலங்களிலும் புதிதாக அமைக்கப்பட்டுள்ள இடது கட்சி ஒரு மாநில பாராளுமன்றத் தேர்தல்களில் பங்கு பெறுவதற்குத் தேவையான 5 சதவிகித வாக்குகள் என்ற தடையை கடக்க முடிந்தது. ஹெஸ்ஸவில், கடந்த தேர்தலோடு ஒப்பிடும்போது சமூக ஜனநாயகக் கட்சி (SPD) தன்னுடைய வாக்குத் தளத்தை அதிகரிக்க முடிந்ததுள்ள நிலையில் இடது கட்சி 5 சதவிகிதத்திற்குச் சற்றே மேலான வாக்குகளைப் பெற முடிந்தது. சமூக ஜனநாயகக் கட்சி, கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் (CDU) இரண்டும் வாக்குகளை இழந்துள்ள லோவர் சாக்சனியில் வாக்காளர்களுக்கு கட்சி வேட்பாளார்கள், நிர்வாகிகள் அதிக அறிமுகம் இல்லாத நிலையிலும் இடது கட்சி 7.1 சதவிகிதத்தை பெற முடிந்தது.

முன்னாள் கிழக்கு ஜேர்மனியின் ஸ்ராலினிச ஆளும் கட்சியான ஜனநாயக சோசலிச கட்சி (SED) மற்றும் மேற்கு ஜேர்மனிய WASG இரண்டும் ஒன்றாக இணைந்ததை அடுத்து இடது கட்சி வெளிப்பட்டுள்ளது; அவற்றில் முக்கியமாக நீண்டகால தொழிற்சங்க அதிகாரத்துவத்தினரும் அதிருப்தியடைந்த முன்னாள் சமூக ஜனநாயக கட்சி உறுப்பினர்களின் நிறைந்திருந்தனர். ஹெஸ்ஸ மற்றும் லோவர் சாக்சனியின் தேர்தல் முடிவுகள், ஏற்கனவே கிழக்கு ஜேர்மனிய மாநிலங்களில் இக்கட்சி பல அரசாங்கங்களில் இடம் பெற்றிருந்தது என்றாலும் மேற்கு ஜேர்மனிய மாநிலங்களில் இந்த அமைப்பு பெற்றுள்ள குறிப்பிடத்தக்க வெற்றிகளை பிரதிபலிக்கிறது. 1970களின் இறுதியில் பசுமைக் கட்சி தோன்றியததற்கு பின் முதல் தடவையாக இத்தகைய ஒரு புதிய அமைப்பு தேசிய ரீதியான முக்கியத்துவத்தை அடைந்துள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இந்த வளர்ச்சி தொடர்ந்தால், இப்பொழுதுள்ள நான்கு என்பதற்கு பதிலாக வருங்காலத்தில் ஐந்து கட்சிகள் வரை பாராளுமன்ற இடங்களுக்கு போட்டியிட முடியும் என்ற பொருள் ஆகும். சில வர்ணனையாளர்கள் சுட்டிக் காட்டியுள்ளபடி, இது முழு அரசியல் முறையையும் பெருகிய முறையில் உறுதியற்றதாக ஆக்கக் கூடும்.

ஹெஸ்ஸவில் வலதுசாரி பிரதம மந்திரி ரோலாண்ட் கொக் (CDU) தலைமையிலான ஒன்பது ஆண்டு கால அரசாங்கம் ஒரு பெரும் சங்கடத்தை எதிர் கொண்டது. 1999ல் கொக் இரட்டை பிரஜா உரிமை திட்டங்களுக்குக் கடுமையான விரோதப் போக்கைக் கொண்டிருந்த தீய இனவெறிப் பிரச்சினையை முன்வைத்து அதிகாரத்திற்கு வந்திருந்தார். மீண்டும் அவர் இந்த ஆண்டும் கருத்துக் கணிப்புக்களில் அவருக்கு ஏற்பட்டிருந்த சரிவை ஈடுகட்டுவதற்கு இனவெறிப் பிரச்சாரத்தில் ஈடுபட முற்பட்டார். இப்பொழுதுள்ள மக்கள் உளப்பாங்கின்படி அவருடைய பிரச்சாரம் அவருக்கு எதிராக பாய்ந்ததுடன் அவர் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு பெருகிய எதிர்ப்பில்தான் முடிந்தது.

பரந்த மக்கள், குறிப்பாக பல்கலைக்கழகங்கள், தொழில்நுட்பப் பள்ளிகள், பயிற்சி மையங்களில் உள்ள இளைஞர்கள் கொக்கின் இனவெறிக்கு எதிராக சீற்றமான விடையிறுப்பு கொடுத்தனர். 2003 தேர்தல்களில் மிக அதிகமான முறையில் 48.8 சதவிகித வாக்குகளைப் பெற்றிருந்த கிறிஸ்தவ ஜனநாயக யூனியன், 12 சதவிகிதத்தை இழந்தது; சமூக ஜனநாயகக் கட்சி 7.6 சதவிகிதம் அதிகம் பெற்றது. லோவர் சாக்சோனியில் வாக்காளர்கள் பங்கு பெற்றது 10 சதவிகிதம் குறைந்து 57 என்று இருந்தது; ஆனால் ஒப்புமையில் அதிகமாக ஹெஸ்ஸவில் 64 சதவிகிதமாக இது இருந்தது.

ஹெஸ்ஸவில் கூடுதலான முறையில் சமூக ஜனநாயக கட்சிக்கான வாக்குகளை வேட்பாளர் Andre Ypsilanti, கட்சியில் "இடது" என்று கருதப்படுபவர் பெற்றது குறிப்பிடத்தக்கது ஆகும். கட்சித் தலைமை இந்த அம்மையார் வாக்குகளை அதிகம் பெறுவதற்கான வாய்ப்புக்கள் இல்லை என்று முன்கூட்டியே கருதிவிட்டனர்; சமூக ஜனநாயகக் கட்சியின் நிர்வாகக் குழுவின் முக்கிய உறுப்பினரும் முன்னாள் பொருளாதார மந்திரியுமான வொல்ப்காங் கிளமென்ட் இவருக்கு எதிராக வாக்களிக்குமாறு வாக்காளர்களை கேட்டுக் கொள்ளவும் செய்தார்.

இறுதி முடிவு அறியப்பட்டபின், கிறிஸ்தவ ஜனநாயக யூனியன், சமூக ஜனநாய கட்சியை விட மிகமிகக் குறைவான 0.1 சதவிகிதம் அல்லது 3,995 வாக்குகள் வித்தியாசத்தில்தான் அதிக வாக்குகளை பெற்றது என்பது தெரியவந்துள்ளது. ஆனால் இந்த முடிவு கொக் தன்னுடைய அரசியல் பங்காளியான, தடையற்ற சந்தை ஆதரவு உடைய தாராளவாத ஜனநாயக கட்சியுடன் (FDP) ஒரு கூட்டை வைத்துக்கொள்ள முடியவில்லை என்பதும் தெளிவாயிற்று. தாராளவாத ஜனநாயகக் கட்சி தன் வாக்குப் பங்கை சிறிதளவு 9.4 என உயர்த்திக் கொள்ள முடிந்தாலும், தாராளவாத ஜனநாயக கட்சியும் கிறிஸ்தவ ஜனநாயக யூனியனும் சேர்ந்து 46 சதவிகித வாக்குகளான, கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தனியே நின்று பெற்றதைத்தான் பெறமுடிந்தது.

தாங்கள் ஒரு அரசியல் சக்தியாக முதலில் வெளிப்பட்ட மாநிலத்தில், பசுமைகட்சியினர் நான்காம் இடத்தில் 7.5 சதவிகித வாக்கை (2.6 சதவிகிதம் குறைவாக) பெற்றனர்; இதன் பொருள் சமூக ஜனநாயகக் கட்சி பசுமைக் கட்சி கூட்டணியும் ஹெஸ்ஸவில் பாராளுமன்றம் அமைக்கத் தேவையான எண்ணிக்கையில் இடங்களை கைப்பற்றத் தவறிவிட்டனர் என்பதாகும். இடது கட்சிதான் பல வகைகளில் அதிகார சமநிலையைக் கொண்டிருக்கிறது.

அனைத்து அரசியல் கட்சிளினதும் முக்கிய பிரிவினர் திங்கள் காலை கூடின; அப்பொழுதில் இருந்து ஹெஸ்ஸவில் புதிய மாநில அரசாங்கம் அமைப்பது பற்றி மிகப் பெரிய ஊகங்கள் எழுந்துள்ளன. ஜேர்மனிய அதிபரும் கிறிஸ்தவ ஜனநாயக யூனியனின் தலைவருமான அங்கேலா மேர்க்கெல் தேர்தலில் கொக்கின் கட்சி மிகப் பெரிய இழப்புக்களை கொண்டுள்ள போதிலும் அவருக்கு ஆதரவைக் கொடுத்துள்ளார். "கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் மிக வலிமையான கட்சியாக வெளிப்பட்டுள்ளது" என்று பேர்லினில் மேர்க்கெல் கூறி, புதிய அரசாங்கம் அமைப்பது ரோலண்ட் கொக்கின் வேலை என்பது தெளிவு என்றும் அறிவித்தார்.

ஆனால், கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் மற்றும் தாராளவாத ஜனநாயகக் கட்சி இரண்டும் அரசாங்கத்தை அமைக்கப் போதுமான பெரும்பான்மை இல்லாமல் உள்ளன; இதுவரை மத்திய ஆட்சி அமைக்கத் தளமாக இருந்த சமூக ஜனநாய கட்சியுடனான "பெரும் கூட்டணி" என்பதை சமூக ஜனநாயகவாதிகளும் நிராகரித்துள்ளது. தாராளவாத ஜனநாயக கட்சி தலைமையும் சமூக ஜனநாயகக் கட்சி-பசுமைக் கட்சி கூட்டணியுடன் எவ்வித ஒத்துழைப்பும் இல்லை என்று நிராகரித்துள்ளது; ஆனால் "ஜமேய்க்கா கூட்டணி" என்று அழைக்கப்படும் கிறிஸ்தவ ஜனநாயக யூனியன், தாராளவாத ஜனநாயக கட்சி, பசுமைக் கட்சிகளுடனான ஒரு கூட்டணிக்கு ஒருவேளை ஆதரவு கொடுக்கப்படலாம் என்று குறிப்பைத் தெரிவித்துள்ளது.

தங்கள் பங்கிற்கு பசுமைக் கட்சியினர் பிந்தைய மாற்றை பற்றி நேரடியாக கருத்துத் தெரிவிக்கவில்லை; சமூக ஜனநாயகக் கட்சி உடன் உடன்பாட்டிற்கு ஆதரவு உண்டு என்பதை தெளிவுபடுத்தியுள்ளனர். தாராளவாத ஜனநாயக கட்சி தொடர்ந்து சமூக ஜனநாயகக் கட்சி, பசுமைக் கட்சிகளுடன் கூட்டு இல்லை என நிராகரித்தால், ஒரே வழி சமூக ஜனநாயகக் கட்சி- பசுமைக் கட்சி கூட்டணி, இடது கட்சியின் ஆதரவு என்ற அடிப்படையில்தான் முடியும்; இதுவும் தற்பொழுது உறுதியாக சமூக ஜனநாயகக் கட்சியினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

ஹெஸ்ஸவில் தன்னுடைய பதவியை கொக் இராஜிநாமா செய்துவிட்டு பேர்லினில் ஒரு மந்திரியாகக் கூடும் என்ற ஊகமும் கணிசமாக உள்ளது. இது ஹெஸ்ஸவில் மற்றொரு பெரும் கூட்டணிக்கு, கிறிஸ்தவ ஜனநாயக யூனியனின் முக்கிய உறுப்பினர் வேறு ஒருவர் பிரதம மந்திரி என்ற வகையில் ஏற்பட வழிவகுக்கலாம். அத்தகைய மாற்றத்தில் வரவிருக்கும் வாய்ப்பு பெற்றுள்ள வேட்பாளர் பிரான்ஸ் யோசப் யுங் ஆவார். அத்தகைய நடவடிக்கை சமூக ஜனநாயகக் கட்சி அல்லது பசுமைவாதிகளுக்கு கூட்டணியில் கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் உடன் சேர்ந்து கொள்ளுவதை நியாயப்படுத்த எளிதாகும்.

முரண்பாடானவகையில் கொக் மற்றும் கிறிஸ்தவ ஜனநாயக யூனியனிற்கு எதிராக ஹெஸ்ஸவில் போடப்பட்ட வாக்கு ஒரு பெரும் கூட்டணி அமைப்பதில் முடியக்கூடும்.

பசுமைக் கட்சியினர் கொக் இராஜிநாமா செய்தால் கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் உடன் இணைந்து பணியாற்ற முடியும் என்பதையும் குறிப்பிட்டுள்ளனர். தேர்தல் பிரச்சாரத்தின்போது, பசுமைக் கட்சியினர் தங்கள் முக்கிய நோக்கம் கொக்கை அகற்றுவது என்பதை வலியுறுத்தினர். அதே நேரத்தில் முக்கிய பசுமைக் கட்சியினர் கிறிஸ்தவ ஜனநாயக யூனியனின் உள்ள மற்ற அடுக்குகளுடன் ஒத்துழைப்பு என்பது "பிரயோசனமான விதத்தில்தான் உள்ளது" என்று கூறியுள்ளனர்.

பசுமைக் கட்சியின் தலைவர் ஜொஸ்கா பிஷ்ஷர் கடந்த வாரம் ஹெஸ்ஸவில் ஒரு தேர்தல் கூட்டத்தில் இக்கருத்தை வெளியிட்டார். ரோலண்ட் கொக்கும் கிறிஸ்தவ ஜனநாயக யூனியனில் இருக்கும் மற்றவர்களுக்கும் இடையே பிஷ்ஷர் வேண்டுமென்றே ஒரு வேறுபாட்டை காட்டினார். ரோலண்ட் கொக் பெரியதடி எடுக்க முடிவெடுக்கும் வரையில்தான் கிறிஸ்தவ ஜனநாயக யூனியனுடன் குடியேற்ற பிரச்சினையில் ஒரு உடன்பாட்டைக் காண்பதில் தான் "நம்பிக்கையாக இருந்ததாகவும்" குறிப்பிட்டார். "தற்கால கிறிஸ்தவ ஜனநாயக யூனியனிற்கு கொக் உரிய பணியாற்றவில்லை" என்றும் அவர் கூறினார்.

பசுமைக் கட்சியினர் ஏற்கனவே கிறிஸ்தவ ஜனநாயக யூனியன், தாராளவாத ஜனநாயக கட்சி உடன் ஹெஸ்ஸவில் தலைநகரான வீஸ்பாடனில் நெருக்கமாக ஒத்துழைத்துக் கொண்டிருக்கின்றனர்; பசுமைக் கட்சி "யதார்த்தநிலை அடிப்படையில்" கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் உடன் பிராங்பேர்ட் வங்கி மையப் பகுதியில் கூட்டணி கொண்டுள்ளனர். நான்கு வாரங்களில் ஹாம்பேர்க்கில் தேர்தல்கள் வரவிருக்கின்றன; இங்கும்கூட பசுமைவாதிகள் கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் உடன் இணைந்து செயல்படுவது பற்றிய தங்கள் உறவுகளை இரகசியமாக ஒன்றும் வைத்து இருக்கவில்லை.

லோவர் சாக்சோனி

லோவர் சாக்சனியில் கிறிஸ்தவ ஜனநாயக யூனியன், சமூக ஜனநாயகக் கட்சி இரண்டும் அதிக வாக்குகளை இழந்தன; இந்த முடிவு பேர்லினில் உள்ள பெரும் கூட்டணி நிராகரிக்கப்படுவதைத் தெளிவாகக் காட்டுகிறது. தாராளவாத ஜனநாயக கட்சி மற்றும் பசுமை வாதிகள் தங்கள் வாக்குகளை சிறிது அதிகரித்துக்கொள்ள முடிந்தபோது, இடது கட்சி மிகப் பெரிய வெற்றியை பெற்றது.

தன்னுடைய ஆதரவில் 5.8 ஐ இழந்த போதிலும்கூட, கிறிஸ்தவ ஜனநாயக யூனியனின் பிரதம மந்திரியான கிறிஸ்டியான வுல்வ் போதுமான வாக்குகளை (42.5 சதவிகிதம்) பெற்று மாநிலத்தில் தாராளவாத ஜனநாயகக் கட்சியுடனான (8.2 சதவிகிதம்) கூட்டணியை தொடர்வதற்கு முடிந்தது. முன்னாள் சமூக ஜனநாயகக் கட்சி அதிபர் ஹெகார்ட் ஷ்ரோடர் அதிகாரத்தில் இருந்த இம்மாநிலத்தில் சமூக ஜனநாய கட்சி வரலாற்றில் மிக மோசமான குறைந்த 30.3 சதவிகிதத்தைத்தான் பெற்றது.

தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்தில் வுல்ப், கட்சி உடன் உறுப்பினர் கொக்கின் இனவெறிக் கருத்துக்களில் இருந்து தன்னை ஒதுக்கி வைத்துக் கொண்டார். மாறாக தான் உறுதிப்பாட்டை விரும்பும் வேட்பாளர் என்று காட்டிக் கொள்ளும் வகையில் தேர்தல் பிரச்சாரத்தை துருவப்படுத்த விரும்பவில்லை என்றும் கூறினார்.

சமூக, அரசியல் தீவிரமயப்படுத்தல் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம்

ஹெஸ்ஸ மற்றும் லோவர் சாக்சோனி தேர்தல் முடிவுகள் நீண்டகாலமாக இடம்பெறும் ஒரு நிகழ்போக்காக மக்கள் இடது பக்கம் நோக்கி நகருவதை எடுத்துகாட்டுகின்றன.

கிறிஸ்துமஸிற்கு முன்பு ஜேர்மனிய செய்தி ஊடகத்தில் ஜேர்மனியில் சமூக சமத்துவமின்மை விரைவில் பெருகியதைப் பற்றிய தகவல்கள் மிக அதிகமாக வந்தன. டிசம்பரில் Der Spigel இதழ் சமூகத்தில் மிக வறிய அடுக்குகளின் வருமானங்கள் 1992ல் இருந்து மிக அதிகமாக 13.2 சதவிகிதம் குறைந்துவிட்டது என்று கூறியது; ஆனால் உயரடுக்கினரின் வருமானம் இதே காலத்தில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு அதிகரித்துள்ளதாகவும் கூறியது. "இது ஒரு அச்சம் தரும் வளர்ச்சியாகும்" என்று சஞ்சிகை கூறியுள்ளது.

ஜேர்மனிய ஆளும் உயரடுக்கின் சில பிரிவுகள் பெருகிய பொருளாதார, சமூக நெருக்கடி, சமூக முரண்பாடுகளை தீவிரப்படுத்தக்கூடும் என்று அஞ்சுகின்றன. அவர்களுடைய கவலைகள் பங்கு விலைகளில் சரிவு, சர்வதேச நிதிய நெருக்கடி என்ற கடந்த சில வார நிகழ்வுகளினால் வலுவாகியுள்ளன.

இந்தப் பின்னணியில் ரோலண்ட் கொக்கினால் நடத்தப்பட்ட துருவப்படுத்தப்பட்ட தீவிர தேர்தல் பிரச்சாரம் ஜேர்மனிய செய்தி ஊடகத்தின் கணிசமான எதிர்ப்பையே கண்டது. முக்கிய ஏடுகளான Frankfurter Rundschau, Suddeutsche Zeitung, Die Zeit போன்றவன்றின் தலையங்கக் குழுக்கள் தங்கள் எச்சரிக்கையை நன்கு புலப்படுத்தின. கொக்கின் ஆக்கிரோஷமான பிரச்சாரம் கட்டுப்படுத்தமுடியாத சமூகப் பூசல்களுக்கு ஊக்கம் கொடுக்கும் என்று அவை அஞ்சின.

வாக்கெடுப்பிற்கு மூன்று நான்கள் முன்னதாக Die Zeit எழுதியது: "கொக் ஒரு திறமையான பிரதம மந்திரி. ஆனால் அவர் இந்தத் தேர்தலில் வெற்றி பெறக் கூடாது." இவர் தேர்தலில் வெற்றிபெற்றால் அது ஜேர்மனிக்கு ஒரு "பேரழிவு" ஆகும்; ஏனெனில் இவர் தேவையில்லாமல் நிலைமையைத் தீவிரப்படுத்தி நாட்டின் "அரசியல் பண்பாட்டை" நச்சுப்படுத்தியுள்ளார்.

ஹெஸ்ஸவில் சமூக ஜனநாயகக் கட்சிக்கு கிடைத்த அதிகரித்த வாக்குகள் கடந்த சில ஆண்டுகளாக சமூகநலச் செலவினக் குறைப்புக்களால் கடுமையான பாதிப்பிற்கு உட்பட்ட தொழிலாள வர்க்கத்தின் அடுக்குகளில் இருந்து வரவில்லை. வாக்களார்கள் மாற்றத்தின் ஆய்வு ஒன்றின்படி, சமூக ஜனநாயகக் கட்சி தொழிலாளர் பிரிவு, வேலையற்றோர், ஓய்வுதியம் பெறுவோர் ஆகிய பிரிவில் இருந்து குறிப்பிட்ட சதவிகிதத்தைத்தான் பெற்றது எனத் தெரிகிறது. அரச ஊழியர்கள், சுய தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் பிரிவில் இருந்து இது கிட்டத்தட்ட 13, 12 என முறையே ஆதரவைப் பெருக்கிக் கொண்டுள்ளது. இந்த அடுக்குகள் சமூக ஜனநாயகக் கட்சி சீர்திருத்த வகையிலான கொள்கைகளுக்கு திரும்பி, பெரிய அளவு வர்க்கப் போராட்டங்களை தடுக்கும் என்ற நம்பிக்கையில் வாக்களித்துள்ளன.

இத்தகைய நம்பிக்கைகள் மிகத் தெளிவாக செய்தியாளர் Heribert Prantl ஆல் Suddenutsche Zeitung பத்திரிகையில் எழுதப்பட்டுள்ளது. சமூக ஜனநாயகக் கட்சி மீண்டும் தலையெடுத்துள்ளது பற்றி அவர் பாராட்டி விவிலியத்தில் (பைபிளில்) லாசாரஸ் மீண்டும் உயிர்பெற்று எழுந்ததுடன் இதை ஒப்பிட்டுள்ளார்.

ஹெஸ்ஸவில் இருக்கும் வாக்காளர்கள் தங்கள் கட்சியை மீண்டும் கண்டுபிடித்துள்ளனர்; "ஏற்கனவே அவர்கள் இது இறந்துவிட்டது என்று நினைத்திருந்தனர்" என்று பிரான்டில் எழுதினார். விவிலிய நபர் போல் சமூக ஜனநாயகம் "இப்பொழுது சிவப்பாக இல்லை, மாறாக மங்கிய வண்ணத்தில் உள்ளது. அது தனது மரபு, உறுப்பினர்கள் பற்றிய அச்சத்தைக் கொண்டுள்ளது; ஆனால் ''பெருமைமிகுந்த சமூக ஜனநாயகக் கட்சி'' மீண்டும், ஒரு பகுதியிலேனும் வெளிப்பட்டுள்ளது. லோவர் சாக்சனியில் கட்சி "இன்னும் இறந்த நிலையில்தான் உள்ளது (ஏனெனில் அங்கு அரசியல் துருவப்படுத்தல் அதனை எழுச்சியடைய செய்யவில்லை.) ஹெஸ்ஸவில் அது குதித்து மீண்டுள்ளது."

பிரான்டெலின் லாசாரஸ் கோட்பாடு சமூக ஜனநாயகக் கட்சியை பொறுத்தவரையில், பல ஆண்டுகள் சமூக ஜனநாயகக் கட்சி-பசுமைக் கட்சியின் உறுதியான ஆதரவாளராக இருந்த ஒருவர் கொண்டுள்ள சுய ஏமாற்றுத்தனத்தின் கோரமான உதாரணம்தான். சமூக ஜனநாய கட்சி தலைமை தொழிலாள வர்க்கத்தின் மீது மீண்டும் ஓரளவு கட்டுப்பாட்டை பெற முயற்சிப்பதற்கு ஆதரவு கொடுக்கும் முயற்சிதான் இது.

சமூக ஜனநாயகக் கட்சி உலகந்தழுவிய முறை மற்றும் சர்வதேச நிதிய நெருக்கடிக்கு சமூக ஐக்கிய உணர்வை தளமாக கொண்டுள்ள கொள்கை மூலம் எதிர்கொள்ளும் என்ற கருத்தாய்வு முற்றிலும் அபத்தமானது ஆகும். அத்தகைய போலித் தோற்றங்களை தக்க வைத்துக் கொள்ள விரும்புபவர்கள் பெரும் அதிர்ச்சியைத்தான் சந்திக்க நேரிடும். சமீபத்திய ஆண்டுகளின் அனுபவங்கள் அனைத்தும் இதற்கு முற்றிலும் எதிரான நிலையைத்தான் கொடுத்துள்ளன. ஜேர்மனி, இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி என்று எந்த நாடானாலும் சமூக ஜனநாயகம் அதன் குறைந்துவரும் செல்வாக்கை முதலாளித்துவ ஒழுங்கை உறுதிப்படுத்தி, மக்களுடைய எதிர்ப்பை அடக்குவதற்கு தன்னுடைய பெருவணிக கொள்கைகளை முற்றிலும் சுமத்துவதைத்தான் பலமுறையும் கையாண்டுள்ளது.

இதே அளவுகோல்கள்தான் இடது கட்சிக்கும் பொருந்தும். இக்கட்சி தன்னுடைய முக்கிய பணி சமூக ஜனநாய கட்சிக்கு ஆதரவைக் கொடுப்பது என்று கருதுகிறது. தேர்தல் நடந்து மறுநாளே, இடது கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் ஹெஸ்ஸவில் சமூக ஜனநாயகக் கட்சி மீண்டும் பதவிக்கு வருவதற்கு உதவத் தயாராக இருப்பதை குறித்தனர். இடது கட்சி அரசாங்கத்தின் பொறுப்பை பகிர்ந்து கொள்ளும் இடங்களில் எல்லாம் --கிழக்கு ஜேர்மனிய மாநிலமான மெக்லென்பர்க்-மேற்கு பொமரேனியா, மற்றும் பேர்லின் உதாரணங்களாகும்-- அது தன்னுடைய இடதுசாரி வனப்புரைச் சொற்களை விரைவில் கைவிட்டு தொழிலாளர் மக்கள் மீது தாக்குதல்கள் நடத்துவதில் முன்வரிசையில் இருக்கும்.

சோசலிச சமத்துவக் கட்சிக்கு 1,034 வாக்குகள்

இங்குதான் சோசலிச சமத்துவக் கட்சி (PSG) ஹெஸ்ஸ தேர்தலில் பங்கு பெற்றதின் முக்கியத்துவம் உள்ளது.

சோசலிச சமத்துவக் கட்சி, "கொக் அகற்றப்பட வேண்டும்" என்ற அடிப்படையில் சமூக ஜனநாயகக் கட்சி மற்றும் இடது கட்சிக்கு தாழ்ந்து நிற்கும் முயற்சிகள் எதையும் எதிர்த்தது. இடது கட்சியின் ஆதரவுடன் சமூக ஜனநாயகக் கட்சி மற்றும் பசுமைக் கட்சிகள் கூட்டான "இடது அரசாங்கம்" எனப்படுவதின் பங்கு பற்றி சோசலிச சமத்துவக் கட்சி எச்சரிக்கை கொடுத்தது. பிரான்சில் லியோனல் ஜோஸ்பன் (சோசலிஸ்ட் கட்சி) அரசாங்கம் அல்லது இத்தாலியில் ரோமனோ பிரோடியின் கூட்டணி போல் இத்தகைய ஒரு "இடது அரசாங்கம்" ஹெஸ்ஸவில் வலதுசாரிக் கட்சிகள் அதிகாரத்தை எடுத்துக் கொள்ளுவதற்கு ஊக்கம் தரும் வகையில்தான் செயல்படும்.

தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்தை சோசலிச சமத்துவக் கட்சி உடனடி பிரச்சினைகளுடன் மட்டுப்படுத்திக்கொள்ளவில்லை --அது வருங்காலம் பற்றி சிந்தித்து சமூக எதிர்முனையினால் தவிர்க்க முடியாமல் வெளிப்படக்கூடிய சமூகப் போராட்டங்கள் பற்றியும் கண்ணுற்றது. ஒரு சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்தை முன்வைத்த ஒரே கட்சி இதுதான்; மேலும் தொழிலாள வர்க்கத்தை ஒரு சுயாதீன சமூக சக்தியாக அமைக்கும் இலக்கையும் கொண்டுள்ள ஒரே அமைப்பு இதுதான்.

சோசலிச சமத்துவக் கட்சியின் மாநிலப் பட்டியல் ஹெஸ்ஸவில் 1,000 வாக்குகளுக்கும் மேலாகப் பெற்றது. இது மிககுறைவான எண்ணிக்கை; ஆனால் முக்கியமான எண்ணிக்கை ஆகும். தேர்தலில் முக்கியமாக இருக்கும் பாரிய துருவப்படுத்தல் செயற்பாடுகள் பல வாக்காளர்களையும் கொக்கை பதவியில் இருந்து அகற்றும் சிறந்த வழியைக் காண ஈடுபடுத்தியது; அச்சூழலில் சோசலிச சமத்துவக் கட்சிக்கான வாக்குகள் ஒரு முக்கியமான சாதனையை குறிக்கின்றன. சமூக ஜனநாயகக் கட்சி மற்றும் இடது கட்சியை முழு உணர்வுடன் எதிர்க்கும் ஒரு முடிவை அது பிரதிபலிக்கிறது; இரு கட்சிகளும் மிகப் பரந்த மற்றும் செலவுகள் நிறைந்த பிரச்சாரத்தை செய்தி ஊடகத்திடம் வரம்பின்றி இருக்கும் தங்கள் செல்வாக்குடன் நிகழ்த்தியிருந்தன.

ஒரு சோசலிச வேலைத்திட்டத்திற்கான விருப்பத்தை சோசலிச சமத்துவக் கட்சி வாக்காளர்கள் வெளிப்படுத்தினர்; இது முதலாளித்துவ முறையின் தர்க்கத்தை எதிர்த்து, பெருவணிகம், வங்கிகள் ஆகியவற்றில் இலாப நலன்களுக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் நலன்களை முன்வைக்கிறது.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved