World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Negotiations continue over long-term US presence in Iraq

ஈராக்கில் நீண்டகாலத்திற்கு அமெரிக்கா இருப்பது தொடர்பான பேச்சுவார்த்தைகள் தொடர்கின்றன

By James Cogan
14 July 2008

Back to screen version

ஈராக்கில் அமெரிக்க துருப்புகள் தற்போது இருப்பது தொடர்பாக தீர்மானிக்கும் துருப்புகள் உடன்படிக்கை நிலைப்பாட்டின் (SOFA) அடிப்படையில் புஷ் நிர்வாகத்திற்கும் மற்றும் பிரதம மந்திரி நெளரி அல்-மலிக்கியின் ஈராக்கிய அரசாங்கத்திற்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் தொடர்கின்றன. ஈராக்கிற்கு எவ்வகையிலேனும் அமெரிக்கா பாதுகாப்பு உத்தரவாதத்தை வழங்குவதும் அதற்கு பிரதியுபகாரமாக இராணுவ தளங்கள் மற்றும் பிற வசதிகளை அணுவதற்கான நீண்ட கால இராணுவ உறவை விவரிக்கும் "மூலோபாய கட்டமைப்பு" உடன்படிக்கை என்று கூறப்படுவதை இரு அரசாங்கங்களும் உருவாக்கி வருகின்றன.

கால வரையறை எதுவும் இல்லாமல், ஈராக் அமெரிக்காவின் கைப்பொம்மை நாடாக செயல்படுவதற்கு இந்த உடன்படிக்கைகள் முக்கியமானதாகின்றன. 2003 தாக்குதலின் நோக்கம் அந்நாட்டின் எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்களை அமெரிக்காவின் ஆக்கிரமிப்பில் கொண்டு வருவது மட்டுமின்றி, மத்திய கிழக்கின் மையத்தில் ஒரு பாரிய இராணுவ அடித்தளத்தையும் உருவாக்குவதாகும். கடந்த ஐந்து ஆண்டுகளில், ஈராக்கில் மாபெரும் தளங்களின் கட்டுமானத்திற்கு பில்லியன் கணக்கான டாலர்களை அமெரிக்க இராணுவம் செலவிட்டுள்ளது. அதில் பூகோள-அரசியல் ரீதியாக அதிமுக்கியத்துவம் பெறுவது பாக்தாத்தில் இருந்து 70 கிலோமீட்டர் வடக்கில் அமைந்துள்ள பலாட் விமானத்தளமாகும். அது சுமார் 25,000 இராணுவ மற்றும் சாதாரண உத்தியோகத்தர்களின் தளமாக விளங்கக் கூடியதும் மற்றும் நூற்றுக்கணக்கான விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களின் தளமாகவும், மேலும் பெரிய B-2 தாக்குதல் விமானங்கள் தரையிறங்க வசதியாக மேம்படுத்தப்பட்ட இரண்டு ஓடுதளங்களையும் அது கொண்டிருக்கிறது.

ஜூலை 31 இற்குள்ளாக துருப்புகள் உடன்படிக்கை நிலைப்பாட்டின் ஒரு தீர்மானத்திற்கு வருவதாக இந்த ஆண்டு தொடக்கத்தில் புஷ் மற்றும் மலிக்கி ஒப்பு கொண்டிருந்தார்கள். டிசம்பர் 31 இல் ஐக்கிய நாடுகள் அங்கீகாரம் முடிவு பெற்ற பின்னர், அங்கு அமெரிக்க இராணுவத்தின் பங்களிப்பு மற்றும் உரிமைகள் போன்ற பிரச்சனைகள் இந்த உடன்படிக்கையில் குறிப்பிடப்படுகிறது. ஈராக்கிய நிலங்கள், விமான எல்லைகள் மற்றும் கடல் எல்லைகளை அமெரிக்க துருப்புகள் வரையறை இல்லாமல் அணுகுவதற்கும் மற்றும் ஈராக்கிய குடிமக்களை கைது செய்யும் உரிமையையும், அத்துடன் ஈராக்கிய சட்டத்தின் கீழ் குற்றம்சாட்டப்படுவதிலிருந்து விலக்குரிமையும் அளித்து, அமெரிக்க ஆக்கிரமிப்புக்கு சட்டபூர்வ மேல்பூச்சை ஐக்கிய நாடுகள் தீர்மானம் அளித்திருந்தது.

இறுதிக்கெடு நெருங்கியபோதிலும், அமெரிக்காவிற்கு அதே போன்ற பாரிய அதிகாரங்களை அளிக்கும் இந்த உடன்படிக்கையில் கையொப்பமிட மலிக்கியின் அரசாங்கத்தில் பெரும்பான்மை பெற்றுள்ள ஷியைட் கட்சிகளினதும் மற்றும் மலிக்கியின் எதிர்ப்பால் இருதரப்பும் ஓர் உடன்பாட்டிற்கு வர தடையாக உள்ளது.

அமெரிக்க ஆக்கிரமிப்பு முடிவுக்கு வர வேண்டும் என விரும்பும் பெரும்பான்மை ஈராக்கிய மக்களால் ஆக்கிரமிப்பு வெறுக்கப்படுகிறது. ஒரு மில்லியனுக்கும் மேலான ஈராக்கியர்கள் ஆக்கிரமிப்பு படைகளின் கைகளாலோ அல்லது அமெரிக்க கொள்கைகளால் தூண்டிவிடப்பட்ட குழுவாத பதட்டங்களின் விளைவாகவோ கொல்லப்பட்டுள்ளார்கள். பல மில்லியன் கணக்கானவர்கள் அங்கவீனர்களாக்கப்பட்டார்கள் அல்லது அகதிகளாக ஆக்கப்பட்டார்கள். நாட்டின் உள்கட்டமைப்பு சீரழிக்கப்பட்டுள்ளது, பல ஆயிரக்கணக்கான வீடுகளும் மற்றும் வியாபாரங்களும் அழிக்கப்பட்டன, மேலும் அதன் பல்வேறு பாரம்பரிய கலாச்சாரங்கள் நாசமாயின அல்லது இழக்கப்பட்டன.

ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக, ஈராக்கியர்கள் மறைமுக கைதிகளாக வாழ்ந்துள்ளார்கள், சுவர்களுக்கு பின்னால் தடுத்துவைக்கப்பட்டு, பல சோதனைச்சாவடிகளில் பலமான ஆயுதந்தாங்கிய படையினரையும் அவர்களின் மொழி பேச தெரியாத ஒப்பந்தகாரர்களையும் எதிர்கொண்டதுடன், மேலும் சிறு முரண்பாடுகளுக்காகவும் சுட்டு கொல்லப்பட்டார்கள். பல ஆயிரக்கணக்கான மக்கள் மனிதாபிமானமற்ற சோதனைகள், தேடல்கள் மற்றும் கைது நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டனர்.

ஆளும் ஷியைட் கட்சிகளான ஈராக்கின் இஸ்லாமிய உயர் கழகம் (Islamic Supreme Council in Iraq-ISCI) மற்றும் மலிக்கியின் தாவா கட்சி ஆகியவை குர்திஷ் தேசியவாத கட்சிகளுடன் இணைந்து அமெரிக்க தாக்குதலின் விளைவாக அதிகாரத்தைக் கைப்பற்றின என்பதால் ஈராக்கில் அமெரிக்க இராணுவ நீடிப்பை அவை ஆதரிக்கின்றன. எவ்வாறிருப்பினும், மக்களின் உணர்வுகளை அவர்கள் உதாசீனப்படுத்தி விட முடியாது என்பதுடன் புஷ் நிர்வாகம் வலியுறுத்தும் எதிலும் அவர்களால் கைசாத்திட்டு விட முடியாது. ஈராக்கின் 58 தளங்கள் மற்றும் அதன் விமான தளங்கள் மீது அமெரிக்க சட்ட அதிகாரங்களை அளிப்பதும், ஈராக்கியர்களை கைது செய்வதற்கான உரிமை மற்றும் அமெரிக்க படையினர் மற்றும் ஒப்பந்ததாரர்களுக்கு சட்டப்பூர்வ விதிவிலக்குரிமை ஆகியவற்றை கொண்டிருந்த துருப்புகள் உடன்படிக்கை நிலைபாடு மீதான அமெரிக்காவின் ஆரம்ப வரைவுகள் நிராகரிக்கப்பட்டன.

எவ்வித வெளிப்படையான நவ-காலனிவாத உடன்படிக்கைக்கும் தாங்களே பொறுப்பேற்க வேண்டி இருக்கும் என்பதை ஈராக்கிய அரசாங்கம் மிக துல்லியமாக உணர்ந்துள்ளது. மிக விரைவில், அக்டோபரில் மாகாண தேர்தல்கள் வரவிருக்கின்றன என்பதால் ஈராக்கின் இஸ்லாமிய உயர் கழகம் மற்றும் தாவா கட்சிகள் தெற்கிலுள்ள 9 முக்கிய ஷியைட் மாகாணங்களில் தங்கள் கட்டுப்பாட்டை நிலைநிறுத்த விரும்புகின்றன. ஈராக், அமெரிக்க காலனியின் கீழ் வருவதை அவர்கள் ஏற்று கொண்டார்கள் என்ற குற்றச்சாட்டுக்களால் அவர்களின் பிரச்சாரம் குழப்பப்படுவதை அவர்கள் விரும்பவில்லை. ஈராக்கின் முன்னணிக் குழுவும், ஈராக்கின் இஸ்லாமிய உயர் கழகத்தின் ஆதரவாளருமான அயோதொல்லாஹ் அலி அல்-சிஸ்தானி, இதுபோன்ற வழியில் வர்ணிக்கப்பட வாய்ப்புள்ள இந்த உடன்படிக்கையை ஏற்றுக் கொள்ள வேண்டாம் என வலியுறுத்தியதாக நம்பப்படுகிறது.

கடந்த மாதத்தில், வாஷிங்டனிடமிருந்து ஈராக்கிய அரசாங்கத்திற்கு சில வகையிலான இறையாண்மை மற்றும் சுதந்திரம் அளிப்பதை ஒழுங்குப்படுத்தும் பேச்சுவார்த்தைகள் முன்நின்றன. அந்நாட்டில் போர் மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை நிறுத்த, அமெரிக்க துருப்புகளுக்கான காலக்கெடுவை ஏற்றுக்கொள்வதை நிராகரிக்கும் புஷ் நிர்வாகத்தின் மறுப்பு அதில் ஒரு முக்கிய புள்ளியாக காணப்படுகிறது. "நிலைமை அனுமதிக்கும் போது" எனும் வகையிலான ஒரு வரையறுக்கப்படமுடியாத ஒழுங்குமுறைப்பாட்டை வாஷிங்டன் வலியுறுத்தி உள்ளது.

கடந்த திங்களன்று, உத்தியோகபூர்வ SOFA உடன்படிக்கைக்கு பதிலாக, சட்டத்திற்கு கட்டுப்படாத ''புரிந்துணர்வு ஒப்பந்தத்தை'' அமெரிக்கா மற்றும் ஈராக் வெளியிடும் என மலிக்கி குறிப்பாக குறிப்பிட்டார். ஐக்கிய அரபு எமிரேட்ஸ் விஜயத்தின் போது, அவர் அறிவித்ததாவது: "தற்போதைய போக்கு என்னவென்றால், அமெரிக்க துருப்புகளின் வெளியேற்றத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் அல்லது அவர்கள் வெளியேறுவதற்கான கால அட்டவணை அமைக்கும் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கான உடன்படிக்கையை எட்டுவதாகும். அனைத்து வழிகளிலும், எவ்வித உடன்பாட்டின் அடித்தளமும் ஈராக்கிய இறையாண்மைக்கு மதிப்பளிப்பதாகதான் இருக்கும்." என்றார்.

அடுத்த நாள், அவரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் முவாஃப் அல்-ருபய் நஜாஃபில் நடந்த ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறும்போது: "ஈராக்கில் இருந்து அன்னிய துருப்புகள் வெளியேறுவதற்கான, வெளிப்படையான மற்றும் குறிப்பிட்ட தேதி இல்லாத எந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தையும் நாங்கள் ஏற்கமாட்டோம்." என்று தெரிவித்தார்.

மலிக்கி மற்றும் அல் ருபயின் ''வெளியேறவேண்டும்'' என்ற குறிப்புகளை சர்வதேச ஊடகங்களின் சில பிரிவுகளால் ஈராக்கில் இருந்து அமெரிக்கர்கள் முற்றாக வெளியேறுவது என அர்த்தப்படுத்தியுள்ளன. எவ்வாறிருப்பினும், மலிக்கியின் நெருங்கிய ஆலோசகரான அலி அல்-அதீப், உண்மையில் என்ன கூறப்பட்டது என்பதை அசோசேடெட் பிரஸிற்கு விளக்கினார். அனைத்து 18 ஈராக்கிய மாகாணங்களின் பாதுகாப்பு பொறுப்பை ஈராக்கிய இராணுவம் மற்றும் போலீஸ் எடுத்துக் கொண்ட பின்னர், அதாவது பொதுவாக 2009 இன் மத்தியில், அமெரிக்க துருப்புகள் நாட்டின் மக்கள்தொகை மிகுந்த பகுதிகளில் இருந்து திரும்பப் பெற்று கொள்ளப்படும் என மலிக்கி அறிவித்ததாக தெரிவித்தார். ஆனால் பாதுகாப்பு சூழலுக்கு அமெரிக்காவின் உதவி தேவையில்லை என்று ஈராக்கிய அரசாங்கம் முடிவெடுக்கும் காலம் வரை (வேறு வார்த்தைகளில் கூறுவதானால், காலவரையறையின்றி) குறைந்த எண்ணிக்கையிலான அமெரிக்க துருப்புகள் வலிமையான காவலரண்களான பலாட் போன்ற கூட்டு அமெரிக்க-ஈராக் தளங்களில் தொடர்ந்து நீடிக்கும்.

அமெரிக்க துருப்புகள் பிற நாடுகளில் தங்களை மறைமுகமாக நிலைப்படுத்தி உள்ளதை போன்றே, நீடித்த சட்டபூர்வ விலக்குரிமையுடன் அமெரிக்க துருப்புகளை ஈராக் அனுமதிக்கும் என்பதையே முன்வைக்கப்பட்ட உடன்படிக்கைகள் மீதான கசிவுகள் குறிப்பிடுகின்றன. உண்மையில் இல்லாத ஈராக்கிய விமானப்படை, அதன் ஆகாய எல்லைகளை பாதுகாக்கும் நிலையை அடையும் வரை, ஈராக்கிய ஆகாய எல்லைகளை பயன்படுத்தும் உரிமை அமெரிக்கா கொண்டிருக்கும். ஈராக்கிய அரசாங்கம் மற்றும் ஆயுதமேந்திய துருப்புகளின் "ஆலோசனையுடன்" நாட்டுக்குள் அமெரிக்க இராணுவம் நடவடிக்கைகள் மேற்கொள்ளும். எவ்வாறிருப்பினும், உள்நாட்டு ஒப்பந்ததாரர்கள் அவர்களின் விலக்குரிமையில் இருந்து நீக்கப்படுவார்கள். இது ஈராக்கில் செயல்படும் பெருமளவில்-வெறுக்கப்படும் கூலிப்படைகள் பெரும்பாலும் வெளியேற்றப்படலாம்.

மாகாண தேர்தல்கள் நெருங்கி வரும் வேளையில், அமெரிக்க துருப்புகளை திரும்ப பெறுவதற்கான ஒரு "காலவரையறையை" நிர்ணயித்து விட்டதாக பிரச்சாரம் செய்யலாம் என தாவா மற்றும் ஈராக்கின் இஸ்லாமிய உயர் கழகம் நம்புகின்றன. உத்தியோகபூர்வ உடன்படிக்கைக்கு பதிலாக ''புரிந்துணர்வு'' குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதன் மூலம், ஆவணங்களை ஈராக்கிய பாராளுமன்றத்தில் தாக்கல் செய்வதை தவிர்க்க மலிக்கி முயற்சிக்கலாம். ஈராக்கிய அரசியல் அமைப்பின்படி, எவ்வித சர்வதேச உடன்படிக்கையும் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை பெற வேண்டும். பாராளுமன்றத்தின் மூன்றாவது பிரிவினர், அன்னிய துருப்புகளுக்கான விலக்குரிமையைக் கொண்ட எவ்வித உடன்பாட்டையும் தாங்கள் நிராகரிப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.

புஷ் நிர்வாகத்தின் பிரதிநிதிகள் மலிக்கியின் திட்டத்துடன் இணைந்து போக அவர்கள் தயாராக இருப்பதற்கான அறிகுறிகளை காட்டியுள்ளனர். ஆனால் ஈராக்கில் அமெரிக்க கட்டியுள்ள முக்கிய தளங்களை நிரந்தரமாக பயன்படுத்தும் அமெரிக்காவின் முக்கிய நோக்கத்தை அது எந்த வழியிலும் அச்சுறுத்துவதாக இல்லை.

அரசாங்க செய்திதொடர்பாளர் கொன்ஜாலோ கலீகோஸ் பத்திரிகையாளர் மாநாட்டில் தெரிவித்ததாவது: "அமெரிக்க அரசாங்கம் திரும்ப பெற்று கொள்ளப்பட வேண்டும் என அமெரிக்க அரசாங்கமும், ஈராக்கிய அரசாங்கமும் ஓர் உடன்பாட்டில் உள்ளன. நாங்கள் திரும்பி விடுவோம். எவ்வாறிருப்பினும், அந்த முடிவு நிபந்தனையின் அடிப்படையில் இருக்கும்." என்றார். வெள்ளை மாளிகை செய்திதொடர்பாளர் டோனி பிரேட்டோ குறிப்பிட்டதாவது: "ஈராக்கிய துருப்புகள் சுயமாக தங்களில் தங்கியிருக்கும் படைகளாகும் போது, அமெரிக்க படைகள் குறைத்துக் கொள்ளப்படும் எனும் நாங்கள் கொண்டிருக்கும் அதே இலக்கை பிரதம மந்திரியும் பிரதிபலிக்கிறார்." என்று தெரிவித்தார்.

கடந்த வாரம் அமெரிக்க ஜெனரல் ஜேம்ஸ் டுபிக் இராணுவ சேவைகள் குழுவிடம், அந்நாட்டில் உள்ள பெரும்பாலான இராணுவ தளபதிகள் இந்த ஆண்டின் மத்தியில் தேவைப்பட மாட்டார்கள், ஈராக்கில் உள்ள துருப்புகளின் எண்ணிக்கையை அமெரிக்கா கணிசமாக குறைக்கலாம். அது முக்கிய விமானப்படையையும் மற்றும் தரைப்படையையும் தக்க வைத்திருக்கும் என்பதை உறுதிப்படுத்தினார்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved