World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியா

India: Stalinist CPM's triennial meeting to reiterate support for Congress Party-led government

இந்தியா: ஸ்ராலினிச சிபிஐ(எம்) கட்சியின் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் 19 வது மாநாடு காங்கிரஸ் கட்சி தலைமையிலான அரசாங்கத்திற்கான ஆதரவை மீண்டும் வலியுறுத்துகிறது

By Nanda Wickremasinghe and K. Ratnayake
29 March 2008

Back to screen version

இந்தியாவின் மிக முக்கியமான ஸ்ராலினிச கட்சியும் இடது முன்னணியின் மேலாதிக்க பங்காளியுமான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்டுக்கள்), தனது 19வது மாநாட்டை தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டில் உள்ள கோயம்புத்தூரில் மார்ச் 29 முதல் ஏப்ரல் 3 வரை கூட்டியுள்ளது.

மே 2004ல் இருந்து இடது முன்னணி ஒரு காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசாங்கத்திற்கு "வெளியில் இருந்து" ஆதரவு கொடுத்துவருகிறது; அந்த அரசாங்கம் சமூகத்திற்கு தீமை விளைவிக்கக்கூடிய புதிய தாராள சீர்திருத்தங்களை தொடர்கிறது; அவை கிராமப்புற இந்தியாவில் தீவிர இடர்பாடுகளை ஏற்படுத்தியுள்ளதுடன் பெருகிய வறுமை மற்றும் பொருளாதாரப் பாதுகாப்பின்மையை இந்தியாவின் நகர்ப்புற மையங்களிலும் ஏற்படுத்தியுள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்டுக்கள்) CPM அல்லது அதன் இடது முன்னணி கூட்டாளிக் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களுடைய வாக்குகள் ஆதரவு இல்லாவிடின், காங்கிரஸ் கட்சித் தலைமையில் இருக்கும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கம் (UPA) வீழ்ந்துவிடும்.

இடது முன்னணி அரசாங்கம் அமைத்திருக்கும் மூன்று மாநிலங்களில் -- மேற்கு வங்கம், கேரளா, திரிபுரா ஆகியவற்றில்-- அது பொருளாதார வளர்ச்சி, தொழில்மயமாக்குதல் என்ற பெயரில் UPA இன் முதலீட்டாளர் சார்புக் கொள்கைககளுடன் ஒத்தவற்றை செயல்படுத்தி வருகிறது.

CPM இன் மூன்றாண்டுக்கு ஒருமுறை நடக்கும் இம்மாநாட்டிற்கு முன்னதாக, கட்சித் தலைமை தனக்கும் UPA அரசாங்கத்திற்கும் இடையே வார்த்தை ஜாலங்கள் மூலம் தூரம் இருப்பதாக காட்டிக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. CPM இன் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரட் இனி அவருடைய கட்சி இந்திய முதலாளித்துவத்தின் மரபார்ந்த அரசாங்க கட்சியான காங்கிரஸ், இந்தியாவின் மற்றொரு பெரும் கட்சியான இந்து மேலாதிக்க பாரதிய ஜனதா கட்சி (BJP) இவற்றிற்கு மாற்றாக ஒரு "மூன்றாம் மாற்றீட்டை" வளர்க்க விரும்புவதாக கூறியுள்ளது. UPA அரசாங்கம் ஜூன் 2005ல் கையெழுத்திட்ட இந்திய-அமெரிக்க பாதுகாப்பு கட்டமைப்பு உடன்பாட்டை அகற்ற வேண்டும் என்று கோரப்போவதாகவும் காரட் அறிவித்துள்ளார்.

ஆனால் CPM தலைமையானது, பகிரங்க அறிக்கைகள் மற்றும் 19வது மாநாட்டில் ஏற்க இருக்கும் அரசியல் தீர்மானம் இவ்விரண்டின் மூலமும் சான்றளித்தவாறு, UPA அரசாங்கத்திற்கும், மூன்று இடது முன்னணி மாநில அரசாங்கங்களால் பின்பற்றப்பட்டுக் கொண்டிருக்கும் "வணிக ரீதியிலான நட்பு" கொள்கைகளுக்கும் தொடர்ச்சியான அதன் ஆதரவை வலியுறுத்திக் கூறியுள்ளது.

UPA அரசாங்கம் "உறுதியாக இருப்பதற்கு காரணம் நாங்கள் அதை ஆதரித்துள்ளதுதான். அது முழு பதவிக்காலமும் பதவியில் இருக்கும். அது வீழ்ச்சி அடைந்தால், எங்கள் மூலமாக இருக்காது" என்று மார்ச் 14 பதிப்பில் Outlook ஏட்டிடம் காரட் கூறினார்.

ஆயினும்கூட CPM தலைமை தன்னுடைய மாநாட்டுத் தீர்மானத்தில், "UPA அரசாங்கத்தின் மொத்த இயக்கம் அதன் கொள்கைகள் மூலம் பெரு வணிகம், வெளிநாட்டு மூலதனம் ஆகியவற்றின் நலன்களை பெருக்கும் வகையில் உள்ளது" என்று ஒப்புக் கொண்டுள்ளது.

CPM உம் நந்திகிராமில் விவசாயிகள் படுகொலைகளும்

CPM தலைமை புது டெல்லி அதிகாரப் பகுதிகளில் தன்னுடைய செல்வாக்கையும் கேரளா, மேற்கு வங்கம் ஆகியவற்றில் மே 2006ல் நடைபெற்ற தேர்தல்களில் இடதின் வெற்றி மற்றும் பெப்ருவரியில் சிறு திரிபுரா வெற்றியையும் காட்டி, கட்சி வலிமையை பெருக்கிக் கொண்டுவருவதாக சுட்டிக் காட்டியுள்ளது.

உண்மையில், ஸ்ராலினிஸ்ட்டுக்கள் தங்கள் மாநாட்டை பெருகிவரும் நெருக்கடியின்கீழ்தான் நடத்துகின்றனர். இந்த நெருக்கடி இந்தியாவின் உழைக்கும் மக்களுக்கு குரல் கொடுப்பதாகக் கூறும் CPM நிலைப்பாட்டுக்கும், புதிய தாராள செயற்பட்டியலை செயல்படுத்துவதில் அது முதலாளித்துவத்திற்கு உதவும் முக்கிய பங்கு மற்றும் இந்தியாவை உலக முதலாளித்துவ முறைக்கு குறைவூதிய தொழிலாளர் கிடைக்கும் உற்ற இடமாகச் செய்வதில் தொடரும் கொள்கைகள் ஆகியவற்றிற்கு இடையே வெட்ட வெளிச்சமாக தெரியும் வேறுபாட்டில் நன்கு ஆழ்ந்துள்ளது.

கடந்த ஆண்டு மேற்கு வங்கத்தில் நந்திகிராமில் நடந்த நிகழ்வுகள் -- சிறப்புப் பொருளாதார பகுதியை ஒரு இந்தோனேசிய தளத்தை கொண்ட சர்வதேச நிறுவனமான சலீம் குரூப் நடத்துவதற்காக அரசாங்கம் நிலங்களை பறிமுதல் செய்ததற்கு எதிராக நடந்த விவசாயிகள் எழுச்சியை குருதி கொட்டி CPM அடக்கியதை கண்டது-- இகழ்வு, சீற்றம், மனக்கசப்பு ஆகியவற்றை தொழிலாளர்கள், விவசாயிகள், அறிவாளிகள் என்று இந்தியா முழுவதிலும் இருக்கும் மக்களிடையே ஏற்படுத்தியது. முக்கியமான இடதுசாரி எழுத்தாளர்கள், மற்றும் கல்வியாளர்கள், நீண்ட காலமாக பலரும் CPM உடன் தொடர்பு கொண்டிருந்தவர்களும், இக்கொடுமையை கண்டித்தனர்.

வாதத்திற்குரிய வகையில் இருந்தாலும் தற்கால இந்தியாவின் தலையான வரலாற்றளர் எனப்படும் சுமித் சர்க்கார், புதின எழுத்தாளர் அருந்ததி ரோய், இன்னும் பல முக்கிய இடதுசாரி அறிவுஜீவிகள் ஒரு பகிரங்க கடிதத்தை CPM ஐ கண்டித்து வெளியிட்டனர்; அதன் ஒரு பகுதியில் கூறப்பட்டிருப்பது: "CPM உடன் ஒத்த மதிப்பீடுகளை பங்கு கொள்வது என்பது கட்டுப்பாடற்ற முதலாளித்துவ வளர்ச்சி, சூற்றுச் சூழல் மற்றும் மக்களை இடம் பெயர்தல் ஆகியவற்றை ஏற்படுத்தும் அணுசக்தி விசை வளர்ச்சி பரவல் ஆகியவற்றிற்கு உறுதுணையாக இருத்தல் என்ற பொருள் ஆகும்...

"கடந்த தசாப்தத்தில், மேற்கு வங்கத்தில் இருக்கும் இடது முன்னணி அரசாங்கம் புதிய தாராளக் கொள்கைக்கு உறுதி காட்டும் மற்ற கட்சிகளில் இருந்து சிறிதும் வேறுபாடு அற்றது என்ற நிலைக்கு மாறியவிட்டது. உண்மையில், "மாநிலத்தில் செய்யப்பட்ட முக்கியமான பரிசோதனைகளான நிலச் சீர்திருத்தங்கள் [இடது முன்னணி அரசாங்கம் 1970 களின் கடைசி, 1980 களின் தொடக்க ஆண்டுகளில் இயற்றியவை] சடுதியில் மாற்றப்பட்டு வருகின்றன. மேற்கு வங்க நிலச் சீர்திருத்த துறை மாநிலச் செயலாளர் கொடுத்துள்ள புள்ளி விவரங்களின்படி, கடந்த ஐந்து ஆண்டுகளில் மாநிலத்தில் நிலமற்ற விவசாயிகளின் எண்ணிக்கை மகத்தான முறையில் அதிகரித்துள்ளது; இந்த நிலமைக்கான காரணம் அரசாங்கம் குறைந்த விலையில் நிலத்தை வாங்கி பெருநிறுவனங்களிடமும் அருகில் இருக்கும் ஆடம்பரப் பகுதிகளின் வளர்ச்சிக்காகவும் ஒப்படைப்பதாலாகும்."

மேற்கு வங்கத்தின் இடது முன்னணி அரசாங்கத்தில் CPM இன் பங்காளிகான பார்வேர்ட் பிளாக், புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி (RSP), CPM இன் ஸ்ராலினிச தோழமைக் கட்சி CPI ஆகியவை நந்திகிராமில் CPM உடைய நடவடிக்கைகளில் இருந்து தங்களை ஒதுக்கி வைத்துக் கொள்ளுதல் நலம் என்று கருதின.

CPM இன் மாநாட்டுத் தீர்மானம் நந்திகிராம் நிகழ்வுகளை இறுதியில் ஒரு சில வரிகளுடன் உதறிவிடுகிறது; அவைகள் CPM எதிர்ப்பு ஆத்திரமூட்டலினால் ஏற்பட்டவை என்று கூறிவிடுகிறது. தீர்மானத்தின்படி, வலதுசாரி மற்றும் தீவிர இடது (நக்சலைட்) சக்திகள் நந்திகிராம் விவசாயிகளை "CPM க்கு எதிரான பிரச்சாரத்தில்" ஈடுபடுத்தினர், இதற்கு காரணம் கட்சி "தேசிய அரசியலில் அமெரிக்க ஏகாதிபத்தியத்துடனான மூலோபாய உடன்பாட்டை எதிர்க்கிறது, UPA அரசாங்கத்தின் புதிய தாராள கொள்கை போக்குகளுக்குத் தடையாக இருக்கிறது என்பதனால்...." என்று உள்ளது.

மிக அதிகமான ஸ்ராலினிச பொய்களும் நந்திகிராமில் இரு விவசாயிகள் படுகொலைகளுக்கு CPM காரணமாக இருந்தது என்பதை மறைக்க முடியாது; அதவும் இந்திய மற்றும் வெளிநாட்டு மூலதனங்களின் நலன்களுக்காக நேரடியாக செய்தது; அவை மேற்கு வங்க இடது முன்னணி அரசாங்கத்தை சிறப்புப் பொருளாதார பகுதிகள் ஏற்படுத்த வற்புறுத்தின; அப்பகுதிகள் சாதாரண வரிகள், தொழிலாளர் தரங்கள் ஏற்கப்படுவதில்லை. மேற்கு வங்க CPM தலைமையிலான இடது முன்னணி அரசாங்கத்தின் உத்தரவின்படி 4,000க்கும் மேற்பட்ட நிறைய ஆயுதமேந்திய அரசாங்க பாதுகாப்பு பிரிவினர் மார்ச் 14 அன்று நந்திகிராமிற்குள் நுழைந்து, வழியை மறைக்க முயன்ற விவசாயிகள்மீது துப்பாக்கிச் சூட்டை நடத்தினர்; இதில் 14 பேர் மாண்டு போயினர். அதன்பின் நவம்பர் 2007ல் தன்னுடைய குண்டர்களையே CPM கட்டவிழ்த்துவிட்டு நடத்திய செயல்பாட்டை அடுத்து அரசாங்க அதிகாரம் அங்கு மீட்கப்பட்டது; மற்றொரு 8 நந்திகிராம் விவசாயிகள் பலியாயினர்; வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன; 18,000க்கும் மேற்பட்ட நந்திகிராம் வாசிகள் அப்பகுதியில் இருந்து வெளியேற நேர்ந்தது.

வலதுசாரி திருணமூல் காங்கிரஸ் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் பிற விரோதிகள் நந்திகிராம் நிகழ்வுகளை சுரண்ட முற்பட்டு இந்திய அரசியலை வலதிற்கு நகர்த்த முற்பட்டனர்; ஆனால் ஸ்ராலினிசவாதிகள்தான் பெருமுதலாளிகளுக்காக குருதி தோய்ந்த வகையில் ஒடுக்குமுறையாளர்களாக செயற்பட்டதன் மூலம் இதனை சாத்தியமாக்கினர்.

மேலும் ஸ்ராலினிசவாதிகளே இழிந்த முறையில் வலதுசாரி பிரச்சாரத்திற்கு நிபந்தனையற்ற சரண் அடைந்தனர். CPM நந்திக்கிராம் பற்றியதில் தொழிலாளர்கள், சோசலிச நனவு உடைய அறிவுஜீவிகள் ஆகியோருடைய எதிர்ப்புக்களை உதறித்தள்ளினாலும், அரசியல் வகையில் கடந்த நவம்பர் மாதம் குண்டர்களை வைத்து தாக்கியதற்குப் பின்னர் அரசியல் ரீதியாக பாதிப்பிற்கு ஆளாகக் கூடிய நிலையில் இருந்ததாக உணர்ந்தது; எனவே அது இடது முன்னணியை UPA அரசாங்கத்தின் கோரிக்கையான IAEA உடன் பேச்சு வார்த்தைகளை தொடக்கும் முயற்சிகள் வேண்டும் என்பதை அனுமதிக்க தயாராக இருந்தது. IAEA பேச்சுவார்த்தைகள் இந்திய அமெரிக்க சிவிலிய அணுசக்தி ஒப்பந்த உடன்படிக்கையை செயல்படுத்துவதில் முக்கியமான கட்டம் ஆகும்.

இன்னும் இரு கருத்துக்களும் கூறப்பட வேண்டும். மே 2006ல் இடது முன்னணி மேற்கு வங்கத்தில் பெருவணிகத்தின் வெளிப்படையான ஆதரவுடன் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டது; அது, ஸ்ராலினிஸ்ட்டுக்கள் மாநிலத்தில் புதிய தாராள சீர்திருத்தத்தை செயல்படுத்த சிறந்த கருவி என்ற நம்பிக்கைக்கு வந்தது. இந்திய, வெளிநாட்டு முதலாளித்துவம் CPM இரக்கமற்ற முறையில் நந்திகிராமில் தொழில்மயமாக்குதலுக்கு எதிர்ப்பை அடக்கியதை வரவேற்றுள்ளன; அதற்கு முன்பு சிங்கூரிலும் டாட்டாவின் கார் ஆலைக்கான எதிர்ப்பும் இப்படி அடக்கப்பட்டது வரவேற்கப்பட்டது. கடந்த ஏப்ரல் மாதம், நந்திகிராமில் போலீஸ் புயலெனத் தாக்குமாறு உத்தரவிட்ட சில வாரங்களுக்கு பின்னர் மேற்கு வங்க முதல் மந்திரியும் CPM இன் பொலிட்பீரோ உறுப்பினருமான புத்ததேப் பட்டச்சார்ஜி அமெரிக்காவிற்கு அழைப்பு வரவேண்டும், அரசாங்க அதிகாரிகள் மற்றும் முதலீட்டுத் திறன் உடையவர்களை சந்திக்க வேண்டும் என்று நீண்ட நாளாக இருந்த அவர் கோரிக்கைக்கான அனுமதியை வாஷிங்டனிடம் இருந்து பெற்றது.

இரண்டாவது, இன்னும் முக்கியமானது, காங்கிரஸ் மற்றும் இந்திய முதலாளித்துவத்தின் புதிய தாராள செயற்பட்டியலுக்கு எதிரான போராட்டத்திற்கு தலைமை என்பதற்குப் பதிலாக அதனை செயற்படுத்துவதில் CPM மற்றும் இடது முன்னணி தவிர்க்க முடியாத பங்கை கொண்டுள்ளன. முதலாளித்துவ மறுகட்டமைப்பு முறையை CPM தலைமையில் இருக்கும் இடது முன்னணி அரசாங்கம் அமைந்துள்ள மாநிலங்களில் செயல்படுத்தியது மட்டும் இல்லாமல், ஸ்ராலினிஸ்ட்டுக்கள் வலதுசாரி மத்திய அரசாங்கம் அதிகாரத்தில் தொடர்ந்து இருப்பதற்கு உதவியிருப்பதுடன், புதிய தாராள சீர்திருத்தத்தின் வேகத்தைக் குறைக்க முதலாளித்துவத்திற்கு அழுத்தம் கொடுப்பதை நோக்கமாகக் கொண்ட இயலாத்தன்மை கொண்ட எதிர்ப்புக்களுக்கு உழைப்பாளர்களின் திரண்டு வரும் எதிர்ப்பை முழுவலிமையோடு கட்டுப்படுத்துவதற்கும் வேலை செய்தனர்.

CPM தலைமையிலான இடது முன்னணி சிறுபான்மை காங்கிரஸ் கட்சி அரசாங்கம் 1991ல் பதவியில் நீடிப்பதற்கு இந்திய முதலாளித்துவ வர்க்க மூலோபாயத்தில் பெரும் மாற்றத்தை தொடக்கும் வகையில் தேசிய பொருளாதாரக் கட்டுப்பாடு, அரசாங்கத் தலமையிலான வளர்ச்சி ஆகியவற்றைக் கைவிட்டு உலக முதலாளித்துவ பொருளாதாரத்துடன் இணைந்து கொள்ள உதவியது. ஸ்ராலினிஸ்ட்டுக்கள் பின்னர் வந்த "ஐக்கிய முன்னணி" 1996-98ல் நேரடியாக முறையாக பங்கு பெறவில்லை என்றாலும் --அது புதிய தாராள சீர்திருத்தத்தை செயல்படுத்த பாடுபட்டது-- கட்சியினர் அரசாங்கக் கொள்கை இயற்றல், சிதைந்த நிலையில் இருந்த வட்டார, சாதித் தளம் உடைய முதலாளித்துவக் கட்சிகளை ஒன்றாக வைத்திருப்பதிலும் முக்கிய பணியை செய்திருந்தது.

தற்போதைய காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கம் ஸ்ராலினிஸ்ட்டுகளைத்தான் முற்றிலும் நம்பியுள்ளது; இது பாராளுமன்றத்தில் பெரும்பான்மை கொடுப்பதுடன் சமூகச் சீற்றத்தை தளர்த்துவதிலும் முக்கிய பங்கைக் கொண்டுள்ளது.

ஸ்ராலினிஸ்டுக்களும் தொழிற்சங்கங்களும் பெருகிய முறையில் தொடர்ந்து ஒருநாள் வேலைநிறுத்தங்களுக்கு ஏற்பாடு செய்தன; இவை தொழிலாள வர்க்கத்தை தன்னுடைய திட்டத்தை முன்னேற்றுவிக்கவும் சமூக நெருக்கடியை சந்திக்கவும் ஒரு சுயாதீன அரசியல் சக்தியாக மாற்ற அணிதிரட்டப்படவில்லை. கட்சியின் நோக்கம் காங்கிரஸ் தலைமையிலான UPA அரசாங்கத்திற்கு தொழிலாள வர்க்கம் அரசியலில் தொடர்ந்து கீழ்ப்படிந்து நிற்பதை உறுதிப்படுத்துவதாக இருந்தது.

ஸ்ராலினிஸ்ட்டுக்கள் இந்த எதிர்ப்புக்கள், மூலதனத்தை ஈர்க்கும் தங்களின் சொந்த முயற்சிகளில் தலையீடாதவாறும் பார்த்துக் கொண்டனர். மேற்கு வங்கத்தில் ஒருநாள் வேலை நிறுத்தத்திற்கு பின்னர் மாநிலத்தின் தகவல் தொடர்பு பிரிவு இடையூறுக்கு ஆளானபின், தகவல் தொடர்பு நிறுவனங்களில் வேலைநிறுத்தம் கூடாது என இடது முன்னணி அரசாங்கம் சட்டம் இயற்றியும்கூட, ஒரு நாள் வேலைநிறுத்தம் தகவல் தொடர்புப் பிரிவில் பணியை தடைசெய்தபோது, இடது முன்னணி முதல் மந்திரி பட்டாச்சார்ஜி அறிவித்தார்: "இந்தத் தீமை (வேலைநிறுத்தங்கள்) பற்றி எனக்குத் தெரியும். வருங்காலத்தில் இதைச் செய்பவர்கள்மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுப்பேன் என்று உத்தரவாதம் கூறுகிறேன்" என்றார்.

CPM இன் போராட்டங்களில் இருக்கும் பிரதான செய்தியானது, தொழிலாள வர்க்கம் UPA அரசாங்கத்தை குறைந்தபட்ச பொதுத் வேலைத்திட்டத்தை செயல்படுத்துமாறு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பதுதான்; இது பெயரளவிற்கு அரசாங்கத்தின் செயற்பட்டியலாகவும் அரசாங்கத்திற்கு இடது முன்னணி ஆதரவு கொடுப்பதின் அடிப்படையாகவும் உள்ளது.

குறைந்தபட்ச பொதுவேலைத் திட்டம் என்பது ஸ்ராலினிஸ்ட்டுக்களால் அதிகமாக எழுதப்பட்டது; இது ஒரு அரசியல் மோசடியாகும். இது பெருகிய முறையில் சமுகச் செலவினங்களுக்கு உறுதி கொடுக்கிறது; அதில் பல கருத்துக்களும் குழப்பமானவை; இது பொருளாதார மறுகட்டமைப்பு முன்னேற்றுவிக்கப்படும் என்ற உறுதிமொழிகளை கொண்டுள்ளது. அது பொருளாதார மறுகட்டமைத்தலை முன்னெடுத்துச் செல்வதற்கான உறுதிமொழிகளுடன், அதிகரித்த சமூக செலவினங்கள் பற்றிய வாக்குறுதிகளையும் சேர்த்தளிக்கிறது, அவற்றுள் பல தெளிவற்றதாக உள்ளன. இந்தியாவின் மலிவான பரந்த வளங்களை பயன்படுத்தி அதனை மக்களின் தேவைகளுடன், உலக முதலாளித்துவ சந்தைக்கான உற்பத்தி மையமாகவும் ஆக்கும் முதலாளித்துவ வர்க்கத்தின் வேலைத்திட்டத்துடன் சமரச இணக்கம் கொள்வது சாத்தியம் என்ற பொய்யை அடிப்படையாக கொண்டது.

"சோசலிசம் ஒரு நீண்டதூரம் செல்லவேண்டிய விஷயம்"

CPM மாநாட்டு தீர்மானம் நிறைய அரைகுறை உண்மைகளையும் நேரடிப் பொய்களையும் கொண்டுள்ளது; இதில் ஸ்ராலினிஸ்ட்டுக்கள் தங்கள் UPA அரசாங்கத்திற்கான ஆதரவை நியாயப்படுத்த முயல்கின்றனர்; மேலும் இடது முன்னணி அரசாங்கங்களின் முதலீட்டாளர் சார்பு கொள்கைகளையும் நியாயப்படுத்த முற்பட்டுள்ளனர்; அதே நேரத்தில் தங்கள் கட்சி ஒரு தொழிலாள வர்க்க, உழைப்பாளர்கள் கட்சி மற்றும் சோசலிசத்திற்கான சக்தி என்ற பாசாங்குத்தனத்தையும் தக்க வைக்கப் பார்க்கின்றனர்.

இவ்விதத்தில் தீர்மானம் UPA அரசாங்கத்தை "சிறப்புப் பொருளாதாரப் பகுதிகள் தடையற்ற முறையில் வளர்வதற்கு பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்ளுவதாக" குறைகூறியுள்ளது; அதே நேரத்தில் அரசாங்கத்தின் SEZ தீர்மானம் மே 2005ல் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் இயற்றப்பட CPM வாக்களித்தது பற்றி ஏதும் குறிப்பிடவில்லை.

கடந்த ஜனவரி 4ம் தேதி CPM இன் மூத்த தலைவரும், மேற்கு வங்கத்தின் முன்னாள் முதல் மந்திரியுமான ஜோதி பாசு சிறிதும் வெட்கம் இல்லாத நிலையில் கட்சி முதலாளித்துவத்திற்கு அடிபணிந்து நின்று ஆதரவு கொடுப்பது பற்றி தெளிவு படுத்தினார். பாசு கூறியது: "சோசலிசம் என்பது இந்த காலக்கட்டத்தில் அடையக்கூடியது அல்ல. முதலாளித்துவ அமைப்பிற்குள்ளே நாம் வேலைசெய்து கொண்டிருக்கிறோம், அந்த வகையில் தனியார் மூலதனம் பயன்படுத்தப்பட வேண்டும்; அதேவேளை மாநில அரசாங்கத்தால் நடத்தப்படும் சமூக நலத்திட்டங்கள் தொடரும்." இதன் பின் அவர் மேலும் கூறினார், "சோசலிசம் என்பது நீண்டதூரம் போக வேண்டிய ஒன்றாகும். எமது அரசியல் செயற்பட்டியல் சோசலிசம்தான், எமது கட்சி ஆவணத்திலும் அது குறிக்கப்பட்டுள்ளது, ஆனால் முதலாளித்துவம் என்பது இனிமேல் ஒரு கட்டாயமானதாக தொடர்ந்து இருக்கும்."

இதேபோன்று அப்பட்மான முறையில்தான் பாசுக்குப் பின் பதவிக்கு வந்துள்ள பட்டாச்சார்ஜியும் மேற்கு வங்க அரசாங்கம் முதலீட்டை ஊடாடும் அரசாங்க முயற்சியை, மற்ற பிராந்திய முதலாளித்துவ குழுக்களின் அரசியல் பிரதிநிதிகளுக்கு போட்டியாக அழைக்கும் முயற்சியை நியாயப்படுத்திக் கூறினார்: "எமது நிலைப்பாடு தெளிவு ஆகும். மாநிலத்தின் வளர்ச்சிக்கு நமக்கு மூலதனம் தேவைப்படுகிறது...என்னைப் பொறுத்தவரையில் மூலதனத்திற்கு நிறம் கிடையாது. அத்தகைய திட்டத்தை வேண்டாம் எனக் கூறமாட்டோம்; சொல்லியிருந்தால் அது உத்தராகண்ட் மாநிலத்திற்கு போயிருந்திருக்கும்" என்றார்.

காங்கிரஸ் கட்சியும் அதன் முதலாளித்துவ தொலைநோக்குடைய பிரிவுகளும் CPM மற்றும் இடது முன்னணி மக்கள் அதிருப்தியை அடக்குவதில் கொண்டிருக்கும் முக்கிய பங்கை நன்கு அறிந்துள்ளன. பலமுறையும் கடினமாக பிரச்சினைகளை தீர்க்க, இடதின் ஆதரவு தேவை, என்று பிரதம மந்திரி மன்மோகன் சிங் விளக்கியுள்ளார். இருந்தபோதிலும்கூட, அரசாங்கம் இடது முன்னணி ஆதரவிற்காக கொடுக்கும் சலுகைகளை பற்றி முதலாளித்துவத்தின் முக்கிய பிரிவுகள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளன. குறிப்பாக அவை அரசாங்கம் வேலைகள் ஒப்பந்த முறைக்கு கொடுக்கப்படுவதில் இருக்கும் தடைகள் அகற்றப்படக்கூடாது என்றும், பணிநீக்கங்கள், ஆலை மூடல்கள் இவற்றிற்கு தடுப்புக்கள் கூடாது என்றும் CPM இடது முன்னணியை மீறி இந்திய அமெரிக்க உடன்பாட்டை செயல்படுத்த வேண்டும் என்றும் விரும்புகின்றன.

பிரதம மந்திரி மன்மோகன் சிங் அணுசக்தி ஒப்பந்தத்தை ஒட்டி தன்னுடைய அரசாங்கத்தை வீழ்த்துமாறு இடது முன்னணிக்கு பகிரங்கமாக சவால் விட்டு எட்டு மாதங்களுக்கு பின்னரும், CPM தலைவர்கள் பல முறையும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கம் விரைவில் மடிவதற்குத் தாங்கள் தயாராக இல்லை என்றும் 2009 வரை அதன் பதவிக்காலம் முடியும் வரை அதற்கு ஆதரவு இருக்கும் என்றும் கூறியுள்ளனர். அதே நேரத்தில் அவர்கள் ஒப்பந்தம் செயல்படுத்தக் கூடாது என்றும் அது அமெரிக்காவின் கொள்ளை முறை வெளியுறவுக் கொள்கைக்கு இந்தியாவை பிணைத்து விடும் என்றும் கூறுகின்றனர்.

வேறுவிதமாக கூறினால், ஸ்ராலினிஸ்ட்டுக்கள் காங்கிரஸ் மற்றும் முதலாளித்துவத்திடம் முயற்சியை விட்டுவிடுவதாகவும் அவர்கள்தான் இடதுடனான தற்போதைய உடன்பாட்டை எப்பொழுது முறித்துக் கொள்ளலாம் என்பதைத் தீர்மானிக்க வேண்டும் என்றும் கூறிவிட்டனர்.

அதே நேரத்தில், பெருகிய முறையில் அரசாங்கம் பற்றி மக்கள் அதிருப்தி வளரும் நிலையில், தேர்தல்களில் தங்கள் நிலைப்பாட்டை கொள்ளுவதற்காக --CPM இன் தேர்தல் தளம் BJP க்கு செல்வாக்கு இல்லாத மாநிலங்களில், காங்கிரஸ் ஒரு முக்கிய போட்டிக் கட்சி என்ற இடங்களில் -- CPM ஒரு மூன்றாம் மாற்றீடு பற்றிய விவாதத்தை புதுப்பித்துள்ளது. இதன் பொருள் தேர்தல் முகாம் ஒன்ற பல வட்டார மற்றும் சாதிய அடிப்படையில் இருக்கும் முதலாளித்துவ கட்சிகளுடன் ஏற்படுத்தப்பட வேண்டும், அக்கட்சிகள் முதலாளித்துவத்தின் புதிய தாராளக் கொள்கையை பதவியில் இருக்கும்போது செயல்படுத்தியிருந்தாலும், பல ஆந்திரப் பிரதேசத்தை தளமாக உடையவை தெலுகு தேசம் போன்றவை முன்பு BJP உடன் நட்பாக இருந்தவை என்றாலும், இந்த நிலைதான்.

தங்கள் காங்கிரஸ் தலைமையிலான UPA அரசாங்கத்திற்கு தூணாக இருப்பதை நியாயப்படுத்தும் வகையில், ஸ்ராலினிஸ்டுகள் அது அழுத்தத்திற்கு இணங்கக் கூடியதாக இருக்கிறது என்றும் இதன் மூலம்தான் இந்து மேலாதிக்க BJP பதவிக்கு வரமுடியாது என்றும் கூறுகிறது. இது மரபார்ந்த வகையில் ஸ்ராலினிச வாத உத்தியாகும்; பிற்போக்கை எதிர்கொள்வதற்கு ஒரே வழி முதலாளித்துவத்தின் சற்று முற்போக்குப் பிரிவுடன் சேருதல் என்ற வகையிலாகும்.

தீவிர வலதுசாரித்தனத்தின் வளர்ந்துவரும் சக்திதாமே முதலாளித்துவ ஆட்சியின் நெருக்கடியின் மற்றும் முதலாளித்துவத்தின் கடுமையான நோயின் ஒரு அறிகுறி ஆகும்.

உண்மையில், இந்திய முதலாளித்துவத்திற்கு பல தசாப்தங்கள் தொழிலாள வர்க்கத்தை தாழ்த்தி வைத்ததின்மூலம், ஒரு ஒதுங்கிய சக்தியாக இருந்த இந்து வலதை நாட்டின் இரண்டாம் பெரிய கட்சியாக மாற்ற வழிவகுத்தது ஸ்ராலினிஸ்டுகள்தான். 1970 களின் தொடக்கம் மற்றும் நடுப் பகுதிகளில், உலகின் மற்ற பகுதிகளை போல் இந்தியாவும் பொருளாதார நெருக்கடி மற்றும் சமூகப் போராட்டங்களால் அதிர்ந்தபோது, CPM இன் தோழமைக் கட்சியான CPI காங்கிரஸ் உடன் ஒரு கூட்டணியில் நுழைந்து, இந்திரா காந்தியின் நெருக்கடிநிலையை ஆதரிக்கும் அளவிற்கு சென்றிருந்தது. இதற்கிடையில் CPM தொழிலாள வர்க்கத்தை இந்திரா காந்திக்கான முதலாளித்துவ எதிர்ப்பிற்கு தாழ்த்தியது, 1977ல் தேர்தலை சந்திக்க இடைக்காலத்தின் அமைக்கப்பட்ட மற்றும் அதன் முக்கிய கூறுபாடுகளில் BJP யின் முன்னோடியாக இருந்த ஜன சங்கம் பிரதான கூறுபாடாக அமைந்திருந்த ஜனதா கட்சிக்கு ஆதரவு கொடுத்தது.

தொழிலாள வர்க்கத்தை ஸ்ராலினிஸ்ட்டுக்கள் காட்டிக் கொடுத்ததும், 1960 களின் கடைசி, 1970 களில் விவசாயிகளின் எழுச்சியை காட்டிக் கொடுத்தது ஆகியவைதான் பின்னர் இந்து வலது மற்றும் பல வட்டார, சாதிய கட்சிகள் இருபதாம் நூற்றாண்டின் கடைசி இரு தசாப்தங்களில் காங்கிரசுடனான அதிருப்தி மூலம் இலாபம் அடைந்தவை ஆகும்; முதலில் இது மக்களுடைய அடிப்படைத் தேவைகள் எதையும் பூர்த்தி செய்யாத சுதந்திரத்திற்கு பின் வந்த தேசிய செயற்திட்டத்தின் தோல்வியின் விளைவாக இருந்தது; பின்னர் 1991ல் காங்கிரசால் முன்முயற்சிக்கப்பட்ட, அதிகரித்த வறுமைக்கும் பொருளாதாரப் பாதுகாப்பின்மைக்கும் இட்டுச்சென்ற புதிய தாராள சீர்திருத்தங்களால் விளைந்தது.

UPA அரசாங்கத்திற்கு ஆதரவை நியாப்படுத்தும் வகையில் CPM மாநாட்டு தீர்மானம், "அவர்களுடைய [இந்து மேலாதிக்கத்தினரின்] உள்வலிமையை குறைமதிப்பீடு செய்தல் பெரும் தவறாகிவிடும்" என்று கூறுகிறது. பின், "இருக்கும் அதிருப்தி, மக்களுடைய பொருளாதார இடர்பாடுகள் ஆகியவற்றை கருத்திற் கொள்ளுகையில், அதிருப்தி பிளவு தரக்கூடிய வகுப்புவாத அரசியலில் பாய்ந்துவிடும் திறனைக் கொண்டுள்ளது என்பது அறியப்பட வேண்டும்." என்றும் கூறுகிறது.

இது உண்மை என்பதற்கு காரணம், CPM மற்றும் இடது முன்னணியினர், மரபார்ந்த வகையில் அரசாங்கக் கட்சியாக இருந்து கட்டுப்பாடுகளை தளர்த்துதல், தனியார் மயமாக்குதல், சந்தை முறை கொண்டுவந்தல் என்பவற்றை செய்துள்ள காங்கிரஸுடன் தொழிலாள வர்க்கத்தை பிணைத்து நிற்பதுதான். காங்கிரஸ் கட்சி மத சார்பற்ற தன்மைக்கு உறுதி கொண்டிருந்தாலும், அக்கட்சி பல முறையும் இந்து வலதிற்கு துணை நின்று வகுப்புவாதத்திற்கு உதவியுள்ளது; குறைந்தது 1947 வகுப்புவாத பிரிவினையில் துணைக்கண்டம் துண்டாடப்பட்ட நேரத்தில் இருந்தேனும் ஆகும். கடந்த டிசம்பர் மாதம் குஜராத் தேர்தல்களின்போது காங்கிரஸ் BJP அதிருப்தியாளர்களுடன் ஒரு தேர்தல் கூட்டை வைத்துக் கொண்டது, அத்தலைவர்களோ 2002 ம் ஆண்டு குஜராத்தில் முஸ்லிம் எதிர்ப்பு படுகொலைகளில் நேரடியாகத் தொடர்பு கொண்டிருந்தவர்கள் ஆவர்.

CPM -ன் போலி ஏகாதிபத்திய எதிர்ப்பு

இந்திய அமெரிக்க அணுசக்தி உடன்படிக்கையை CPM எதிர்க்கிறது; இது இந்தியாவை வாஷிங்டனின் இராணுவ, புவிசார் அரசியல் சுற்றுப்பாதையில் சேர்க்கும் என்று சரியான முறையில் எச்சரிக்கிறது; மாநாட்டு தீர்மானம் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் குற்றங்களை பற்றி நிறையக் கண்டிக்கிறது; இதில் ஈராக்கின்மீது அமெரிக்கா நடத்திய படையெடுப்பு, ஆக்கிரமிப்பு மற்றும் பாலஸ்தீனிய மக்களை அகற்றியதற்கு வாஷிங்டனின் உறுதியான ஆதரவு ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளன.

ஸ்ராலினிஸ்ட்டுக்களின் அமெரிக்க எதிர்ப்பு அலங்காரச் சொற்கள், சர்வதேச தொழிலாளர் வர்க்கம் அனைத்து போட்டி முதலாளித்துவக் குழுக்கள் மற்றும் தேசிய அரசுகள் இவற்றிற்கு எதிராக அரசியல் ரீதியில் சுயாதீனமாக அணிதிரட்டப்பட வேண்டும் என்ற அடிப்படையில், உண்மையான ஏகாதிபத்திய எதிர்ப்புக் கொள்கையுடன் எந்த தொடர்பையும் கொண்டிருக்கவில்லை.

இந்திய முதலாளித்துவத்தின் மரபார்ந்த வகையில் "அணி சேராக் கொள்கை" என்று இருந்ததை CPM பாராட்டுகிறது; அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்து பல முனைகள் (Multi-polar) இருக்கும் உலகம் வேண்டும் என்றும் இந்தியா, ரஷ்யா, சீனா ஆகியவற்றிற்கு இடையே உடன்பாடு வேண்டும் என்றும் கூறுகிறது. பெய்ஜிங் ஆட்சி இரக்கமற்ற முறையில் சீனத் தொழிலாள வர்க்கம் அமெரிக்க, ஐரோப்பிய, ஜப்பானிய சர்வதேச நிறுவனங்களால் சுரண்டப்படுவதற்கு இணங்கி நிற்கிறது என்றாலும் சீனாவை சோசலிச நாடு என்று அது பாராட்டுகிறது. "முக்கிய போக்குகள் உள்ளன; அவை பன்முனைப் போக்குகளை ஆதரித்து அமெரிக்காவின் ஒருதலைப்பட்ச நடவடிக்கைகளை எதிர்க்கின்றன; ரஷ்யா அதன் சுயாதீனப் பங்கையும் இறைமை உரிமைகளையும் உறுதிப்படுத்தி வருகிறது" என்று CPM தீர்மானம் உற்சாகம் கொள்கிறது.

UPA அரசாங்கத்தின் இராணுவக் கட்டமைப்பு பற்றி CPM குறைகூறினாலும், அது இந்திய முதலாளித்துவத்தின் இலக்கான ஐ.நா.பாதுகாப்பு குழுவில் நிரந்தர இடம் பெறுவதற்கு முழு ஆதரவை கொடுக்கிறது; இந்தியா உலக அரங்கில் ஒரு முற்போக்கு பங்கைக் கொள்ளலாம் என்று கூறுகிறது; நேபாளத்தில் இந்திய அரசாங்கத்தின் தரகராக நின்று மாவோவாத எழுச்சியை அங்கு முடித்து மீண்டும் முதலாளித்துவ ஆட்சியை நிறுவுவதிலும் பங்கைக் கொண்டது.

பல தசாப்தங்களாக CPM மற்றும் 1964ல் அதில் இருந்து பிரிந்த CPI யும் காங்கிரஸ் அல்லது மற்ற முதலாளித்துவ அரசியல் அமைப்பிற்கு தொழிலாள வர்க்கத்தை தாங்கள் தாழ்த்தி வைத்ததை நியாயப்படுத்தும் வகையில் ஸ்ராலினிச-மென்ஷிவிக் இரு கட்ட புரட்சி தத்துவத்தின் அடிப்படையில் கூறுகின்றன. அது ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பதற்கு பொது மதிப்பீட்டின் அடிப்படையிலான தேசிய முதலாளித்துவ பிரிவின் முற்போக்கு பகுதியின் ஆதரவு தேவை என்றும், அது முதலில் பிரிட்டனிடம் இருந்து சுதந்திரத்தை பெறுவதற்காவும் பின்னர் தேசிய பொருளாதாரம் வளர, நிலப்பிரபுத்துவ முறை அகற்றப்பட, சாதிய அடக்கு முறை அகற்றப்பட, பிற காலனித்துவ மரபுவழி விட்டுச்சென்றவைகள், நிலப்பிரிபுத்துவ பிற்போக்குத்தனம் அகற்றப்பட உதவும் என்றும் கூறப்பட்டது. முதலாளித்துவ வர்க்கத்துடன் கூட்டை கொண்டு ஜனநாயகப் புரட்சி முடிக்கப்பட்டபின்தான் சோசலிசத்திற்கான போராட்டம் வரும் என்று ஸ்ராலினிஸ்ட்டுக்கள் கூறுகின்றனர்.

இன்று இந்திய முதலாளித்துவ வர்க்கம் ஏகாதிபத்திய எதிர்ப்பு தொடர்பான எவ்விதப் போலித்தனத்தையும் கைவிட்ட அளவில், உலக முதலாளித்துவ பொருளாதாரத்துடன் இந்தியா முழுமையாக இணைய வேண்டும் என்பதற்கு ஆதரவு கொடுக்கையில், அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் ஒரு மூலோபாய பங்காளித்தனத்திற்கு முயல்கையில், ஸ்ராலினிஸ்ட்டுக்கள் இன்னும் வலுவான முறையில் தொழிலாள வர்க்கம் முதலாளித்துவத்தின் அரசியல் மேலாதிக்கத்திற்கு சவால் விடக்கூடாது என்று கூறுகின்றனர். BJP க்கு எதிராக காங்கிரசுக்கு ஆதரவு கொடுக்கப்பட வேண்டும் என்றும், தொழிலாள வர்க்கமும், விவசாயிகளும் முதலாளித்துவத்தின் இலாப நோக்கு உந்துதல்களை ஏற்க வேண்டும் என்றும் தங்கள் நிலங்களை வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு பரிசாக கொடுக்க வேண்டும் என்றும் அப்பொழுதுதான், முதலாளித்துவ தொழில்மயம் "சோசலிசத்திற்கு தேவையான சட ரீதியான அடிப்படையை" வழங்கும் என்றும் கூறுகின்றனர்.

இந்திய துணைக் கண்டத்தின் அரசியல் நடைமுறையில் CPM ஒரு ஒருங்கிணைந்த கூறுபாடு ஆகும்; நாட்டின் மூன்றாம் பெரிய மாநிலத்தை கடந்த 30 ஆண்டுகளாக அது ஆண்டு வருகிறது. இந்திய முதலாளித்துவ வர்க்கத்திற்கு முக்கிய தூணாக இருந்து வந்துள்ளது. இந்திய தொழிலாள வர்க்கத்திற்கான ஒரு புதிய புரட்சிகரக் கட்சி ட்ரொட்ஸ்கிச வேலைத்திட்டமான நிரந்தரப் புரட்சி அடிப்படையில் கட்டியமைக்கப்பட வேண்டும். முதலாளித்துவ வர்க்கத்திற்கும் அதன் அனைத்துக் கட்சிகளுக்குமான எதிர்ப்பில், இந்திய தொழிலாள வர்க்கமானது, தொழிலாளர் விவசாயிகள் அரசாங்கத்திற்கான போராட்டத்தில் இந்திய உழைக்கும் மக்களை அணிதிரட்டும் மற்றும் ஏகாதிபத்தியற்கும் பூகோள மூலதனத்திற்கும் எதிராக மற்றும் சோசலிசத்திற்கான போராட்டத்தில் சர்வதேச தொழிலாள வர்க்கத்துடன் இந்திய உழைப்பாளர்களை ஒன்றிணைக்கும் இலக்கை கொண்ட, ஜனநாயக மற்றும் சோசலிச கோரிக்கைகளை கொண்ட ஒரு வேலைத்திட்டத்தை இந்திய தொழிலாள வர்க்கமானது கட்டாயம் முன்னெடுக்க வேண்டும்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved