World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

இலங்கை: இனவாத யுத்தத்திற்கு 25 வருடங்கள்

பகுதி: 5

1983 கறுப்பு ஜூலை

விஜே டயஸ்

Back to screen version

வடக்கு கிழக்கு தமிழ் மக்களை இராணுவத் துப்பாக்கி முனையில் பயமுறுத்தி பணியவைக்க முடியாது போனதால் கதிகலங்கிப் போன யூ.என்.பி. தலைவர்கள், தென்மாகாணங்களில் வாழ்ந்து வந்த தமிழ் மக்களிடம் பழிவாங்கும் காட்டுமிராண்டி தயாரிப்புக்களில் இறங்கினர். ஜாதிக சேவக சங்கத்தில் சேர்ந்து கொண்டிருந்த காடையர்கள் உட்பட்ட குண்டர் கும்பல்கள், சிறில் மத்யூவின் தலைமையில் இனவாதத் தூபம் போட்டுக்கொண்டு தென்மாகாணங்களில் தமிழ் மக்களுக்குச் சொந்தமான கடைகள் வீடுகளின் முகவரிகளை திரட்டிக்கொண்டு படு பயங்கரமான படுகொலைகளுக்கும் வன்முறைகளுக்கும் ஆயத்தமாகி வந்தார்கள்.

மனித இரத்தத்தை உறிஞ்சிக் குடிக்கப் பழக்கப்பட்ட இந்த இராட்சதப் படையணிகளுக்கு சட்ட ரீதியான முகமூடியையும் இராணுவ-பொலிஸ் ஒத்துழைப்பையும் வழங்கும் பொருட்டு அவசரகாலச் சட்டம் பயன்படுத்தப்பட்டது. அது மட்டுமன்றி கொலை செய்யப்பட்டவர்களை மரண விசாரணையோ அல்லது நீதி விசாரணையோ இல்லாமல் சுட்டெரிக்கப் பொலிசாருக்கும் இராணுவத்தினருக்கும் அதிகாரத்தை வழங்கும் சட்டங்கள் அமுல் செய்யப்பட்டன.

இந்த இரத்தவெறி இனவாத தயாரிப்புகளுக்காக வீதியில் இறங்குவதற்கான உடனடி தருணத்தை, இராணுவப் படை அணிகளுக்கு எதிராக யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் விடுதலைப் புலிகள் தொடுத்த தாக்குதல் வழங்கியது. இதில் 13 படையினரும் ஒரு இரானுவ அதிகாரியும் ஜூலை 23ம் திகதி கொல்லப்பட்டனர்.

தமிழ் மக்களுக்கு எதிரான படுகொலை இரத்தக் களரி இயக்கம் தலைநகரில் ஆரம்பிப்பதற்கென முன்கூட்டியே தயார்செய்யப்பட்டது. இதற்கான குண்டர், ஆயுதந் தாங்கிய இராணுவ இயக்கத்துக்கு அங்கிகாரம் பெறும் பொருட்டு இறந்த இராணுவப் படையாட்களின் சகல சடலங்களும் கொழும்பு கனத்தையில் இடம்பெறும் தகனக் கிரியைகளுக்கு கொணரப்படுவதாக அரசாங்கம் அறிவித்தது. அது இனவாதப் படுகொலையாளர்கள் அணிதிரள விடுக்கப்பட்ட ஒரு உத்தியோகபூர்வ அழைப்பாக விளங்கியது.

1970-77 கூட்டரசாங்க காலத்தில் சட்ட ரீதியானதாக்கப்பட்ட சிங்கள இனவாதத்தின் கையாட்களான சமசமாஜ-ஸ்டாலினிச கட்சிகளும், இக்கட்சிகளின் எடுபிடிகளான நவ சமசமாஜக் கட்சியினரும் யூ.என்.பி.யின் ''சட்டத்தையும் ஒழுங்கையும்'' பேணும் இயக்கத்துக்கு தோள் கொடுத்த ஜே.வி.பி,யும் இனவாதத்தை வெளிவெளியாக அரவணைத்துக் கொண்டனர். பொதுமக்களை குழப்பியடிக்கவும் இனவாத யூ.என்.பி. குண்டர் இயக்கத்தின் செல்வாக்குக்கு அதன் ஒரு பகுதியை பலியிட்டும் நடாத்திய அரசியல் இயக்கத்தில் சிங்கள இனவாத குண்டர்களும் இருந்தனர்.

இந்த இனவாத பேரழிவு அரசியல் விதிமுறையை தோற்கடித்து சிங்கள - தமிழ் தொழிலாளர், ஒடுக்கப்படும் மக்களை முதலாளித்துவ ஆட்சிக்கு எதிராக அனைத்துலகவாத அடிப்படையில் ஐக்கியப்படுத்தி வழிநாடாத்த அன்று போராடியது புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் மட்டுமே ஆகும். அதனால் அதன் அச்சகம், அலுவலகத்தின் முகவரிகளும் அவ்வாறே அதன் முன்னணி அங்கத்தவர்களின் முகவரிகளும் இரத்தக்களரிக்காரர்களின் தாக்குதல்களுக்கு உள்ளாக இருந்த தனியார் இடங்களின் பட்டியலில் அடங்கி இருந்தது. இது பின்னர் வெளியான சாட்சியங்களின் மூலம் அம்பலமாகியது.

ஜூலை 24ம் திகதி கொழும்பு கனத்தையில் கூடிய இரத்த வெறிக்குண்டர்களை நன்கு தூண்டி விடும் விதத்தில் யூ.என்.பி. அரசாங்கம் ஆத்திரமூட்டல்களில் இறங்கியது. இறுதிக்கட்டத்தில் இறந்த இராணுவப் படைகளின் சடலங்கள் கனத்தையில் தகனம் செய்யப்படாமல் அவரவர்களின் ஊர்களில் தகனம் செய்யப்படும் என ஒலிபெருக்கியில் அறிவிக்கப்பட்டது. கூடியிருந்த குண்டர்கள், கும்பல் கும்பலாக பிரிந்து இராணுவ பொலிஸ் பாதுகாப்பின் கீழ் பொரளை முச்சந்தியில் அன்று மாலை இரத்தக் களரிகளிலும் காட்டுமிராண்டி படுகொலைகளிலும் ஈடுபட்டனர். தமிழர் எதிர்ப்பு இனவாத யுத்தத்தின் திருப்பு முனையாக 1983 ஜூலை முதலாளித்துவ அரச ஆதரவுடன் அந்த விதத்தில் ஆரம்பமாகியது.

1983 ஜூலை 23ம் திகதி ஆரம்பமான தமிழர் படுகொலை இரத்தக்களரி இயக்கம் பல நாட்கள் தொடர்ந்து பரந்து வந்தது. தனது சொந்த அனுபவங்களின் படி, இந்த காட்டுமிராண்டி இயக்கத்தின் பல கோணங்கள், அரசாங்க முன்னணிப் பத்திரிகை நிறுவனமான லேக்ஹவுசின் முன்னணிப் பத்திரிகையாளரும் தெகிவளை வாசியுமான ரீ. சபாரத்தினம் ஆங்கிலத்தில் எழுதிய ஒரு மிதவாதியின் படுகொலை (The Murder of a moderate) என்ற நூலில் பின்வருமாறு விபரிக்கப்பட்டுள்ளன.

"ஜூலை 24 விடியற்காலை 5 மணிக்கு எனக்கு நாராஹேன்பிட்டியில் இருந்து வந்த தொலைபேசி அழைப்பு, காடையர்கள் அந்தப் பிரதேசத்தில் நடமாடுவதாகவும் வீதிகளில் கொள்ளையடித்துக் கொண்டு திரிவதாகவும் தெரிவித்தது. நான் எனது சிறுவயது ஆண் பிள்ளைகள் இருவருடனும் பம்பலப்பிட்டி காசல் ஒழுங்கையில் உள்ள எனது உறவினரின் வீட்டுக்கு விரைந்தேன். அந்த வீடு இத்தகைய சந்தர்ப்பங்களில் அகதிகள் முகமாக மாற்றப்படும் இந்துக் கோவிலுக்கு அருகில் அமைந்திருந்தது. இரண்டு மணித்தியாலங்களின் பின்னர் ஒரு அணிதிரண்ட கும்பல் இரும்புக் கம்பிகளுடனும் ஆயுதங்களுடனும் ஆயுதபாணிகளாகி தமிழ்க் கடைகளையும் வீடுகளையும் உடைத்துத் தள்ளி, நகரை வலம் வந்தது. இவர்களின் பின்னால் பெற்றோல் டின்களையும் தாங்கிய கும்பல்கள் கடைகளையும் வீடுகளையும் தீமூட்டி வந்தனர்.

"அன்று காலை முழுவதும் கலகக்காரர்கள் பஸ்கள், லொறிகள், புகையிரதங்கள் மற்றும் அரசாங்க வாகனங்களில் கொழும்புக்கு பெருக்கெடுத்து வந்தனர். அவர்கள் தமிழர்களின் வீடுகளைக் கண்டு பிடிப்பதற்காக தேர்தல் இடாப்புகளை எடுத்து வந்திருந்தனர். அத்தகைய ஒரு குழு தெகிவளைக்கு சென்றது. அவர்கள் அயலவர்களை எனது வீட்டைக் காட்டும்படி கேட்டனர். அந்தப் பகுதியில் தமிழ் வீடுகள் கிடையாது என அவர்கள் கூறியதும் அவர்கள் தமிழரைக் பாதுகாக்க முயற்சிப்பதாக குற்றம்சாட்டி இடாப்பைக் காட்டினர். எனது பெயரின் கீழ் சிவப்பினால் கோடிடப்பட்டு இருந்தது. கலகக்காரர்கள் எனது வீட்டுக்கு சென்றனர். முன் கதவை உடைத்து திறந்தனர். எனது அலுவலக அறையில் இருந்த புத்தகங்களை வெளியில் இழுத்துப் போட்டு அவற்றுக்கு தீ மூட்டினர். அந்த அறையில் இலங்கை இந்திய வரலாறு பற்றிய அருமையான நூல்கள் இருந்தன. அந்த புத்தக அடுக்குகள் மூன்று நாட்கள் தொடர்ந்து எரிந்ததாக எனக்குத் தெரிய வந்தது.

"மதியநேரம் நான் காசல் ஒழுங்கையில் இருந்து எனது அயலவர்களுடன் தொலைபேசியில் பேசினேன். வீடு தீப்பற்றி எரிவதாக அவர்கள் கூறினர்கள். அதே நேரத்தில் ஆர். சிவகுருநாதன், பீ. பாலசிங்கம், கே. நடராசா, கே. சிவப்பிரகாசம், திருமதி. பொன்மணி குலசிங்கத்தினதும் மற்றும் பத்திரிகைத் துறையில் செல்வாக்கான பதவிகளை வகித்த இன்னும் பலரது வீடுகளுக்கும் தீ முட்டப்பட்டன. அந்த நேரத்தில் ஆளும் யூ.என்.பி. யின் தொழிற்சங்க கன்னையான சிறில் மத்தியூ தலைமையிலான ஜாதிக சேவக சங்கமே இந்தக் கும்பல்களுக்குப் பெயர்களையும் விலாசங்களையும் வழங்கியதாகத் தமிழர்கள் நம்பினர்.

"அதே வேளையில் ஒரு காடையர் கும்பல் கடற்கரைப் பக்கமாக காசல் ஒழுங்கையினுள் நுழைந்து ஒழுங்கையின் கடைசி வீட்டைத் தாக்கியது. நான் நான்கு அமச்சர்களுக்கு தொலைபேசி அழைப்புக்கள் எடுத்தேன். ஆனால், அவர்கள் ஜனாதிபதியுடன் இருப்பதாக எனக்கு கூறப்பட்டது. உன்மையில் அவர்கள் அவரை நாட்டுக்கு உரை நிகழ்த்தும்படி நெருக்கி வந்தனர். தெளிவாகக் குழம்பிப் போயிருந்த அவர் ஆழ்ந்த யோசனையில் மூழ்கிப் போயிருந்தார். 'விடயம் கட்டுப்பாட்டைத் தாண்டிவிட்டது' என அவர் தனது அமைச்சர்களிடம் தெரிவித்தார். தொண்டமானும் மற்றும் தமிழ் பிரமுகர்களும் ஊரடங்கு சட்டத்தை பிறப்பிக்கும்படி அவரை நெருக்கினார்கள்."

இந்த விதத்தில் நாடகபாணியில் இங்கே விபரிக்கப்பட்டிருப்பது சிங்கள இனவாத குண்டர் கும்பல்களின் கடைகெட்ட தன்மையையாகும். எப்போதுமே பிற்போக்கிற்கு செவிமடுக்கும் வரலாறு கொண்ட தொண்டமான் உட்பட்ட பிற்போக்கு தமிழ் பிரமுகர்கள் எனப்படுவோரின் மலட்டுத் தன்மையும் இது எடுத்துக்காட்டுகின்றது. ஜனாதிபதி ஜயவர்த்தன ''தனது ஆட்சியில்'' செய்யப் போன நடவடிக்கையின் பரிமானம் எந்தளவானது என்பது மட்டுமே கூறப்படவில்லை.

1977 தேர்தலில் வென்றவுடன் பொலிசாரை மூன்று நாட்கள் லீவில் அனுப்பி தமது அரசியல் எதிரிகளுக்கு எதிராக ஜயவர்த்தனாவின் கீழ் யூ.என்.பி கட்டவிழ்த்து விட்ட பயங்கர இயக்கம் இதைக் காட்டிலும் பன்மடங்கு உக்கிரமாக்கப்பட்டு கொழும்பிலும் ஏனைய மாகாணங்களிலும் வசித்த தமிழ் மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டமை ஜனாதிபதி ஜயவர்தனவின் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட பயங்கரத்தின் அளவாகும் என்பதில் எதுவிதமான சந்தேகமும் கிடையாது. இது ஜூலை 23ம், 24ம் திகதிகளில் அவர் செயற்பட்ட விதத்திலும் அவ்வாறே அதன் பின்னர் அவரின் நடைமுறையின் மூலமூம் நன்கு நிரூபணமாகியது.

ஜூலை 23ம் திகதியில் இருந்து கொலைகார காடையர் கும்பல்களும் அவர்களுடன் இணைந்து இரத்தக் களரிகளில் ஈடுபட்ட பொலிசாரும் இராணுவமும் ஒன்றரை நாட்கள் சுதந்திரமாக வீதிகளில் உலாவ இடமளித்ததன் பின்னர் ஜுலை 25 மாலை 2 மணிக்கே ஜனாதிபதி ஜயவர்த்தன கொழும்பில் ஊரடங்குச் சட்டத்தை பிறப்பித்தார். ஏனைய மாவட்டங்களுக்கும் செல்லுபடியான விதத்தில் அன்று ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது மாலை 6 மணிக்கேயாகும்.

எவ்வாறெனினும் அவசரகாலச் சட்டமும் ஊரடங்குச் சட்டமும் பிற்போக்கு முதலாளித்து அரசின் ஒடுக்குமுறை ஆயுதங்களின் ஒரு அங்கமாகும். அவை மூலம் தொழிலாளர்-ஒடுக்கப்படும் மக்களுக்குக் கிட்டும் நிவாரணமோ அல்லது பாதுகாப்போ கிடையாது. முதலாளித்துவ ஒடுக்குமுறைப் பிடியை இறுக்கமாக்கி பொதுமக்களின் ஜனநாயக உரிமைகளை துடைத்துக் கட்ட தம்மை அர்ப்பணித்துக் கொண்டுள்ள, அவசரகால சட்ட ஆட்சிக்கு வாக்களித்துள்ள, சமசமாஜ, இ.தொ.கா, நவசமசமாஜ மற்றும் ஸ்டாலினிச கட்சிகள் போன்ற துரோக அமைப்புக்களால் மட்டுமே இத்தகையவை கிட்டுமென கூற முடியும். பொதுமக்கள் அந்தப் பொறியில் மாட்டிக் கொள்ளக் கூடாது. அதற்குப் பதிலாக பொதுமக்கள் தமது பாதுகாப்பை ஊர்ஜிதம் செய்துகொள்ள, முதலாளித்துவ அரசாங்கத்தில் இருந்தும் அரசில் இருந்தும் முதலாளித்துவ, முதலாளித்துவச் சார்பு கட்சிகளில் இருந்தும் முற்றிலும் சுயாதீனமான முறையில், தொழிலாளர் வர்க்கத் தலைமையின் கீழ் ஒடுக்கப்படும் மக்கட் குழுக்களை அணிதிரட்டிக் கொண்டு பாதுகாப்புக் கமிட்டிகளை நிறுவிக் கொள்ள வேண்டும்.

அன்று புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தினதும் இன்றைய சோசலிச சமத்துவக் கட்சியினதும் மேற்சொன்ன வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தொழிலாளர்-ஒடுக்கப்படும் மக்கள் இளைஞர்களை அணிதிரட்டும் அவசியம் 1983 கறுப்பு ஜூலையின் அனுபவத்தின் மூலம் மேலும் ருசுப்படுத்தப்படுகிறது.

முதலில் கொழும்பிலும் பின்னர் மேல் மாகாணத்தின் ஏனைய மாவட்டங்களிலும் விதிக்கப்பட்ட ஊரடங்குச் சட்டம், குண்டர்கள் ஏனைய மாகாணங்களுக்குள் ஊடுருவி தமது இரத்த களரியையும் படுகொலைகளையும் முன்னெடுக்க வழங்கப்பட்ட ஒரு அரச ஆணையாகியது. ஜூலை 26ம் திகதி இனவாதிகள் கண்டி, நுவரேலியா, திருகோணமலை, குருணாகலை, இரத்தினபுரி, பலாங்கொடை முதலான பிரதேசங்களில் தமிழ் மக்களுக்கு எதிராக தமது காடைத்தனங்களை நன்கு காட்சிப்படுத்தினர். திருகோணமலை சந்தை தரைமட்டமாக்கப்பட்டது. இந்த நடவடிக்கையில் கடற்படையினர் முன்நிலை வகித்திருந்தனர். இனவாத காடைத்தன குண்டர் இயக்கத்துக்கும் முதலாளித்துவ சட்டத்துக்கும் அரச படைகளுக்கும் இடையே நிலவிய பிரிக்கமுடியாத பிணைப்பை இது வெளிக்காட்டியது.

அரசின் தொடர்பு

ஜூலை 26ம் திகதி வெலிக்கடைச் சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவம் இனவாத குண்டர்களுக்கும் அரச நிறுவனத்துக்கும் இடையேயான உறவினை பலம்வாய்ந்த முறையில் அம்பலமாக்கியது. வெலிக்கடைச் சிறையில் சிறை வைக்கப்பட்டிருந்த சிங்கள சிறைக் கைதிகள் தூண்டிவிடப்பட்டனர். தமிழ் சிறைக் கைதிகள் தடுத்துவைக்கப்பட்டிருந்த சிறைக் கூடங்களுக்குள் நுழைந்த அவர்கள், அங்கு 35 தமிழ் அரசியல் கைதிகளை படுகொலை செய்தனர். தமிழர் விடுதலைக் கூட்டணியினால் முதலாளித்துவ பாராளுமன்ற ஜனநாயகத்தின் பேரால் எதிர்ப்புக் காட்டுவதாகக் கூறி பாராளுமன்ற உறுப்பினராகப் பேர் பிரேரிக்கப்பட்டு ஈடேறாது போன குட்டிமணியும் இதில் அடங்குவார். இது முதலாளித்துவ அரசின் ஒடுக்குமுறை அமைப்பான சிறைச்சலை அதிகாரிகளின் உடன்பாடும் பங்களிப்பும் இல்லாமல் இடம்பெறக்கூடிய ஒரு சுயமான நிகழ்வு அல்ல. இந்தச் சம்பவம் இடம்பெற்றதற்கு மறுநாள் ஜூலை 27ம் திகதியும் அதே விதத்தில் அதே இடத்தில் வைத்து மேலும் 17 தமிழ்க் கைதிகள் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்த விடயம் விவாதத்துக்கு இடமற்ற முறையில் நிரூபணமாகியது.

முதலாளித்துவ அமைப்பினால் எவ்வித எதிர்காலமும் அற்றமுறையில் அனாதைகள் ஆக்கப்பட்டு இம்சைக்குள் தள்ளப்பட்ட அநாகரீக சமூகத்தின் ஒரு பகுதியினர் முதலாளித்துவ வர்க்கத்தின் கடைகெட்ட தேவைகளின் பேரில் எவ்வளவு இலகுவான விதத்தில் தூண்டிவிடப்படுகின்றார்கள் என்பதனை கறுப்பு ஜூலையின் சகல சம்பவங்களும் பிரசித்தமாக்கின. விஞ்ஞானபூர்வமான சோசலிச இயக்கத்தின் ஸ்தாபக பத்திரமான கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் (1848) மார்க்சும் எங்கெல்சும் இந்த விடையத்தை புகழ் வாய்ந்த முறையில் தீர்க்கதரிசனமாக கண்டார்கள்.

அதில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது: ''பழைய சமுதாயத்தின் அடிமட்டத்து அடுக்குகளிலிருந்து எறியப்பட்டுச் செயலற்று அழுகிக் கொண்டிருக்கும் சமூகக் கசடாகிய ''அபாயகரமான வர்க்கம்'' பாட்டாளி வர்க்கப் புரட்சியால் எங்கேனும் ஒரு சில இடங்களில் இயக்கத்தினுள் இழுக்கப்படலாம், ஆனால் அதன் வாழ்க்கை நிலைமைகள் பிற்போக்குச் சதியின் கைக்கருவியாய் இலஞ்சம் பெற்று ஊழியம் புரியவே மிகப் பெரும் அளவுக்கு அதைத் தயார் செய்கின்றனர்.'' (கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை - பக்கம்-60)

பாசிஸ்ட்டுகளும் அவ்வாறே பாசிஸ்டுகளுக்கு கம்பளம் விரிக்கும் தீவிரவாத பைத்தியங்களும் எப்போதும் வக்காலத்து வாங்குவது இந்த லும்பன் சமூகத் தட்டினை (தெருவில் உழைப்பவர்கள்) அணிதிரட்டிக் கொள்வதற்கேயாகும். அது அவர்களின் தொழிலாளர் விரோத நிலைப்பாட்டின் காரணமாகத் தவிர்க்கமுடியாத விதத்தில் தலைநீட்டும் பிற்போக்கு அவசியமாகும். ஜே.வி.பி. யினதும் ஜனதா மித்திரோ அமைப்பினதும் நவசமசமாஜ கட்சியினதும் இன்னும் பல தீவிரவாத கும்பல்களதும் வாய்வீச்சுக்களினுள்ளும் திட்டங்களினுள்ளும் இந்த லும்பன் குழு சார்ந்த அவசியங்களை நன்கு கண்டு கொள்ள முடியும். இனவாதம் சாதிவாதம் வகுப்புவாதம் உட்பட மக்கள் நலவாதத்தின் பக்கமும் இந்தப் பிற்போக்கு அமைப்புக்கள் ஈர்க்கப்படுவது, லும்பன் சமூகத் தட்டு சம்பந்தமான அவர்களின் மோப்பம் பிடித்தலின் திட்டவட்டமான ஒரு வெளிப்பாடாகும்.

கடந்த காலத்தில் இருந்து நாகரீகத்தின் பயனத்தில் சமூக முன்னேற்றமானது, இன்றைய சமூக முறையினுள் இருந்துவரும் உற்பத்திச் சக்திகளை அழித்தொழிப்பதாக அல்லாது மிகவும் உயர்ந்த நிலைக்கு அபிவிருத்தி செய்யும் வல்லமை கொண்ட வர்க்க சக்தியை அரசியல் அரங்குக்கு கொண்டுவர போராடுவதன் மூலமே இடம்பெற்றுள்ளது. நிலமானித்துவ முறைக்கு எதிராக அந்தப் பணியை இட்டுநிரப்பக் கூடியதாக விளங்கிய சமூக சக்தி முதலாளித்துவ வர்க்கமேயானால் முதலாளித்துவ அமைப்பின் கீழ் நாகரீகத்தின் பேரழிவைத் தவிர்க்கும் சமூக முன்னேற்றத்தின் முக்கிய பிரதிநிதி தொழிலாளர் வர்க்கமேயாகும். மார்க்சும் எங்கெல்ஸ்சும் தீர்க்கதரிசனமாகக் கண்ட விஞ்ஞான சமூக உண்மை இருபதாம் நூற்றாண்டின் முழு அனுபவங்களின் மூலமும் ருசுப்படுத்தப்பட்டுள்ளது.

சமசமாஜ, ஸ்டாலினிச, நவசமசமாஜ, இ.தொ.கா. மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவங்களின் தேசியவாத முதலாளித்துவச் சார்பு அரசியல் வேலைத்திட்டத்தின் மூலம் தொழிலாளர் வர்க்கம் துயரத்தில் தள்ளப்பட்டுள்ளது. இதனால் ஒரு புறத்தில் தமிழ் தேசியவாத குட்டி முதலாளித்துவ குழுக்கள் தலைதூக்கின. மறுபுறத்தில் இனவாத ஜே.வி.பி. போன்ற அமைப்புக்கள் தெற்கில் வளர்ச்சி கண்டன. இது ஆளும் வர்க்கத்துக்கு அவசியமாக இருந்த இனவாத யுத்தத் தீப்பிளம்புக்கு எண்ணெய் வார்ப்பதாக விளங்கியது.

கறுப்பு ஜூலையில் கொலைகளுக்கும் இரத்தக் களரிக்கும் இலக்கானவர்களின் எண்ணிக்கை பற்றிய உத்தியோகபூர்வ விபரங்கள் 350 தமிழர்கள் கொல்லப்பட்டதாகவும் 18,000 தமிழர்களின் வீடுகளும் கடைகளும் கொள்ளையிட்டுத் தீவைக்கப்பட்டதாகவும் கூறுகின்றன. முதலாளித்துவ அரசு வெளியிட்டுள்ள இந்த உத்தியோகபூர்வமான அறிக்கைகள் சரியானவை அல்ல என்பதை எப்போதும் போல் இங்கும் குறிப்பிட்டாக வேண்டும்.

சிங்கள வெகுஜனங்களின் இயக்கம் அல்ல

ஆனால், அந்த உத்தியோகபூர்வமான புள்ளிவிபரங்கள், சிங்கள மக்கள் பெரும்பான்மையினராக வாழும் பகுதிகளில் இருந்து அகதிகளாக வந்த தமிழ் மக்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்துக்கும் அதிகமானது எனக் குறிப்பிடுகின்றன. அதில் இருந்து ஒரு முடிவுக்கு வருவது அவசியம். கறுப்பு ஜூலை சிங்கள பொரும்பான்மையினரின் ஆதரவைப் பெற்ற ஒரு தமிழர் எதிர்ப்பு இனவாத இயக்கமாக இருந்திருக்குமானால், ஒரு லட்சம் தமிழ் மக்கள் அகதிகளாவதற்கு மாறாக கொலைசெய்யப்பட்டிருப்பார்கள். இல்லை. அது பொரும்பான்மை சிங்கள மக்களின் ஆதரவுடன் தொடுக்கப்பட்ட படுகொலை, இரத்தக்களரி இயக்கமாக விளங்கவில்லை. அதற்குப் பதிலாக அது யூ.என்.பி. அரசாங்கம் முன்கூட்டியே அணிதிரட்டிக் கொண்ட லும்பன் உலகின் கொலையாளிகளை இனவாதத்தினால் தூண்டிவிட்டு, இராணுவ-பொலிஸ், சிறைச்சாலை உட்பட அரச ஒடுக்குமுறை நிறுவனங்களின் ஆதரவுடன் தொடுக்கப்பட்ட காட்டுமிராண்டி இயக்கமாகவே விளங்கியது.

இடம்பெயர்ந்து அகதிகள் முகாம்களுக்கு பாதுகாப்புக்காக வந்த தமிழ் மக்களிடமிருந்து பலருக்கு தமது அயல் சிங்கள நண்பர்கள் உயிர்தப்ப உதவிய விதம் பற்றிக் கூறவேண்டி இருந்த உண்மைக் கதைகள் பல. என்றும் துயருறும் அந்த பொதுமக்கள் என்ன மொழி பேசினாலும் எந்த மதத்தையும் கலாச்சாரத்தையும் கடைப்பிடித்தாலும் துயரத்தின் போதும் சங்கடத்தின் போதும் பொதுவில் நடந்து கொள்ளும் விதிமுறை அதுதான். இனவாத, இனக்குழுவாத மோதுதல்கள் ஆளும் வர்க்கத்தின் அவசியங்களுக்கு இணங்க, அவர்களின் நலன்களுக்கு அவர்களால் வழி நடாத்தப்படும் காடையர்கள், அரச இயந்திரத்தைக் கொண்டு கட்டவிழ்த்து விடும் காட்டுமிராண்டித்தனத்தின் வெளிப்பாடாகும். பொதுமக்கள் தமது வாழ்க்கைப் பழக்க வழக்கங்களின்படி பொதுவில் ஈடுபடுவது காட்டுமிராண்டித்தனத்துக்கு எதிரான கட்டுப்பாடான சமுக வாழ்க்கைக்கான மனித முயற்சிகளில் ஆகும்.

இந்த மனிதத் தன்மை வாய்ந்த முயற்சிகளுக்கு வர்க்க சமுதாயம் என்றும் எதிரிடையாக இருந்து வந்துள்ளது. முதலாளித்துவ அமைப்பின் கீழ் வர்க்க துருவப்படுத்தலுக்கு உள்ளான வர்க்க சமுதாயம், முதலாளித்துவ அமைப்பின் வீழ்ச்சி நிலமையின் கீழ் அதன் நச்சுத்தனமான இலட்சனமான ஏகாதிபத்திய உலக யுத்தத்தையும் நாட்டுக்கு நாடு காலனித்துவத்தை இலக்காகக்கொண்ட இனவாத இனக்குழுவாத மோதல்களையும் நனவான முறையில் சிருஷ்டிக்கின்றது. இலங்கையினுள் இனவாத யுத்தமாக இந்த ஏகாதிபத்திய அவசியத்தின் பெரிதும் நச்சுத்தனமான தன்மையே வெளிப்பட்டுள்ளது.

யூ.என்.பி. அரசாங்கம் விதித்த அவசரகாலச் சட்டமும் ஊரடங்குச் சட்டமும் இனவாத குண்டர்களையும் ஆயுதப்படைகளின் கொலையாளிகளையும் இரத்தக்களரிக் காரர்களையும் பாதிக்கவில்லை. அதற்குப் பதிலாக அது அவர்களின் குண்டர் நடவடிக்கைகளுக்குப் புதிய உத்வேகத்தை வழங்கியது.

அத்தகைய ஒரு பக்கபலம் இல்லாமல் இந்தக் காடையர் இயக்கம் இயங்கி இருக்குமானால் அதனது நிலையான கோழைத்தனம் அம்பலப்படுவது தவிர்க்க முடியாததாக இருந்திருக்கும். இது ஹிட்லரின் இயக்கம் தொடக்கம் ஜே.வி.பி. யின் பாசிச இயக்கம் வரையிலான வகையறாக்களைச் சேர்ந்த இத்தகைய இயக்கங்களால் பல தடவை சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. அவற்றின் கொலைகார நிழல் எங்கும் இறுக்கப்பட்டு அவற்றின் கால்கள் கட்டிப்போடப்பட்டது அரச இயந்திரத்தின் பொலிஸ்-இராணுவம் உட்பட முதலாளித்துவ அமைப்புக்களின் மூலமே. முதலாளித்துவ அரசைத் தூக்கிவீசும் மூலோபாயம் இல்லாமல் முதலாளித்துவ ஜனநாயகத்தை சுமந்து பாசிச எதிர்ப்பு மற்றும் இனவாத எதிர்ப்பு இயக்கம் எனக்கூறிக் கொள்ளும் இயக்கங்கள் எங்கும் தமது வங்குரோத்தினையும் மலட்டுத்தனத்தினையும் வெளிக்காட்டிக் கொண்டுள்ளன. மார்க்சிஸ்டுகள் இனவாதக் குண்டர்களுக்கும் பாசிஸ்டுக்களுக்கும் எதிரான போராட்டத்தை முதலாளித்துவ அரசுக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் அரசை ஸ்தாபிக்கும் முலோபாயத்துடன் இணைத்துக் கொள்ளப் போராடுகிறார்கள்.

ஜூலை 29ம் திகதி இடம்பெற்ற சம்பவங்களின் மூலம் குண்டர்களின் மேற்சொன்ன தன்மை சுட்டிக் காட்டப்பட்டது. அது ''புலிகள் கொழும்புக்கு வந்து விட்டனர்,'' என்றக் கூச்சலுடன் இடம்பெற்றது.

பிரச்சாரத்தின் தொடக்கமாக புறக்கோட்டை சம்பவம் விளங்கியது. அதை ஆரம்பித்தவர்கள் பொலிஸ்காரர்களாக இருந்தனர். தமது உயிரைக் காப்பாற்றிக்கொள்வதற்காக ஒரு அறைக்குள் சுருண்டு கதவை மூடிக்கொண்டிருந்த தமிழ் மக்கள் குழுவொன்றை வெளியில் கொண்டுவந்து கொலைகாரர்களின் கைகளில் ஒப்படைப்பதற்காக பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர். வெடிச் சத்தம் கேட்ட உடனேயே அந்தப் பகுதியில் சுற்றித்திரிந்த குண்டர்கள் தமது மனதில் பொங்கிக்கொண்டிருந்த பீதிக்கு பதிலளிக்கும் பொறுப்பை தமது கால்களிடம் ஒப்படைத்தனர். தலை திரும்பிய பக்கம் எல்லாம் ஓடிய அவர்கள், ஓடிக்கொண்டிருக்கும் போதே "கொழும்புக்கு புலி வந்துவிட்டது, உயிரைக் காப்பாற்றிக்கொள்ளுங்கள்" எனக் கூச்சலிட்டனர். ஒரு சில கணங்களில் இந்தக்கதை கொழும்பு முழுவதிலும் அயல் பகுதிகளிலும் காட்டுத் தீ போல் பரவியது. குண்டர்களின் பீதி குண்டர்களுக்கு ஊடாகவே வாய்க்கு வாய் பரவியது. சகல சந்திகளிலும் உற்சாகவேடம் பூண்டு உலாவி வந்த இனவாதிகள் அகப்பட்ட இடங்களில் ஒழித்துக் கொண்டனர். இராணுவ-பொலிஸ் காவல் நிலையங்கள் வெறிச்சோடிய சம்பவமும் அத்துடன் இடம்பெற்றதாக பல இடங்களில் அறியக் கிடைத்தன.

பு.க.க.வின் அஞ்சாத தலையீடு

சமூகத்தின் தெருக்கும்பல் தட்டினில் இருந்து திரட்டி, அரச இயந்திரத்தின் சக்தியை ஊட்டி வீதியில் இறக்கப்படும் இந்தக் குண்டர் இயக்கத்துக்கு எதிராக, புரட்சிகர சமுக சக்தியான தொழிலாளர் ஒடுக்கப்படும் மக்களையும் இளைஞர்களையும் அணிதிரட்டுவதற்கான போராட்டத்தை இந்த இரத்தக்களரி தீவைப்புகளுக்கும் அரச அடக்குமுறைகளுக்கும் மத்தியிலும் கைவிடாதிருக்க சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோடியான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் பார்த்து கொண்டது.

சிங்கள இனவாதிகள் சிருஸ்டித்துள்ள பேரழிவுகளின் பரிணமத்தையிட்டு பொது மக்களை விழிப்படையச் செய்வதைக் கூட தவிர்க்கும் பொருட்டு அவசரகால சட்டத்தின் கீழ் விதிக்கப்பட்ட பத்திரிகைத் தணிக்கைகள் மூலம் கொலைகள், இரத்தக்களரிகள் பற்றிய செய்திகளை வெளியிடுவது அடியோடு தடைசெய்யப்பட்டு இருந்தது. தொழிலாளர் பாதை மற்றும் கம்கறு மாவத்த பத்திரிகைகளை வெளியிட பு.க.க. தணிக்கை அதிகாரியிடம் சமர்ப்பித்த கட்டுரைகள் தலைமுதல் அடிவரை வெட்டித் தள்ளப்பட்டன. இந்த நிலையில் புட்சிகர இயக்கத்தின் வாயைக் கட்டிப் போடுவதற்கு எதிரான ஆபத்துக்கிடையேயும் போராடுவது தவிர்க்க முடியாததாகியது. தணிக்கை அதிகாரிகளின் தணிக்கைக்கு சமர்ப்பிக்காமல் இரகசியமாக ஒரு பிரசுரத்தை அச்சிட்டு வெளியிட பு.க.க. முடிவு செய்தது.

அது கட்சியின் அச்சகத்தினது மட்டுமல்ல முழுக் கட்சிக் காரியாளர்களதும் பாதுகாப்பை பணயம் வைத்து எடுத்த அஞ்சாத தீர்மானமாகும். புரட்சிகர இயக்கம் ஆபத்தை சகிக்காது இருக்க முடியாது. புரட்சிக் கட்சி காரியாளர் பயிற்சி மையம் பிற்போக்கு பிரச்சாரங்களினால் வழிதடுமாறாததும் முதலாளித்துவ அரச ஒடுக்குமுறையின் எதிரில் கிடுநடுக்கம் பிடிக்காத தலைமையினால் தொழிலாளர் ஒடுக்கப்படும் மக்களுக்கு பங்களிப்பச் செய்வதே. அது புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தைத் தவிர்ந்த வேறு எந்த ஒரு அரசியல் அமைப்பும் அன்று செய்யாத ஒன்றாகும். அது ஏனைய சகல அரசியல் கட்சிகளும் முதலாளித்துவ அரசின் சட்டத்தை காக்கும் காரியத்தை அங்கீகரித்துக் கொண்டு இருந்ததோடு தொடர்ந்தும் இருந்து வருவதாலாகும்.

தொழிலாளர்-ஒடுக்கப்படும் மக்கள் அடிப்படையாகக் கொள்ள வேண்டிய வேலைத்திட்டத்தை விளக்கி 17 பக்கங்களுடன் வெளியான இந்தச் சிறிய நூல் ஜூலை 23ம் திகதியில் இருந்து ஆரம்பமான இனவாத இயக்கத்தின் தன்மையையும் அதன் அடிப்படைகளையும் பின்வருமாறு விளக்கியது.

''ஜூலை 23ம் தொடங்கிய இனவாத மக்கள் படுகொலை கலகத்தினால் ஆயிரத்துக்கும் அதிகமான தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர். கொழும்பு மாவட்டத்தில் மட்டும் ஒரு லட்சத்து நாற்பதினாயிரம் தமிழ் தேசிய இனத்தினர் அகதி முகாம்களில் தள்ளப்பட்டுள்ளனர். இத்த மாவட்டத்தில் ஒரு தமிழ் கடையோ வேலைத்தலமோ அல்லது வெற்றிலை சுருள் வண்டியோ மிஞ்சவில்லை. ஒரு சில இடங்களைத் தவிர தமிழ் தேசிய இனத்தினர் அவர்கள் வாழ்ந்த சகல இடங்களில் இருந்தும் துரத்தி அடிக்கப்பட்டு நூல் பந்து வரை கொள்ளையடிக்கப்பட்டு அவற்றுக்கு தீமூட்டப்பட்டுள்ளது.

"சாதாரண மனிதன் மட்டுமல்ல அரசாங்க உயர் அதிகாரிகளும் பொலிஸ் திணைக்களத்தினதும் இராணுவத்தினதும் அதிகாரிகளும் நீதிபதிகளும் -அவர்கள் தமிழராக இருந்ததால்- இந்தத் தலைவிதிக்கு முகம் கொடுத்தனர். அதாவது வடக்குக் கிழக்கு மாகாணங்கள் தவிர ஏனைய சகல மாகாணங்களிலும் சகல தமிழ் தேசிய இனத்தவர்களும் உக்கிரமான தாக்குதல்களினால் அவ்விடங்களில் இருந்து அடியோடு தூக்கி வீசப்பட்டனர்.

"கலகம் தேயிலை இறப்பர் தோட்டங்கள் வரை பரந்து சென்றது. தோட்டத்துறை அடியோடு தீமூட்டப்படாது போனதற்குக் காரணம், தொழிலாளர் வர்க்கத்தின் எதிர்ப்புக்களும் இந்திய மக்கள் இயக்கமும் உக்கிரம் கண்டதேயாகும். கலகக்காரர்கள் அரசாங்க அமைச்சரான தோட்டத் தொழிலாளர் தலைவர் தொண்டமானின் இ.தொ.கா. கொழும்புத் தலைமையகத்தைத் தாக்கி அதன் ஒரு பகுதிக்கும் தீ வைத்தனர்.

"இவை எல்லாவற்றிற்கும் மேலாக கலகக்காரர்கள் இந்தியர்களுக்கும் இலங்கை தமிழர்களுக்கும் சொந்தமான பெரிய, சிறிய கைத்தொழிற்சாலைகள் அனைத்தையும் அடியோடு தக்கியதோடு உற்பத்தி உபகரணங்களையும் சேதமாக்கி அவற்றுக்கு தீமூட்டி நாசமாக்கினர். இந்த தொழிற்சாலைகளில் வேலை செய்தவர்களில் நூற்றுக்கு 90 வீதமானோர் சிங்களம் பேசும் தொழிலாளர்களாவர். மஹாராஜா கைத்தொழிற்சாலைகள், சின்டெக்ஸ், சென்ட் அன்தனிஸ் ஹாட்வெயர்ஸ், ஹைட்ராமணி, கே. ஜீ. இன்டஸ்ட்ரீஸ், ஜெட்ரோ இன்டஸ்ரீஸ், டாட்டா காமன்ட்ஸ் போன்ற ஆயிரக் கணக்கான தொழிலாளர்கள் வேலைசெய்த பக்டரிகள் அடியோடு தவிடுபொடியாக்கப்பட்டன.

"இதைக்காட்டிலும் மிகவும் பயங்கரமான சம்பவம் வெலிக்கடை அரச சிறையில் இருந்த தமிழ் விடுதலைப் போராட்டத்தின் பல்வேறு அமைப்புக்களைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் 54 பேர் அரசாங்க இராணுவத்தின் தலையீட்டில் சிறைக்குள் படுகொலை செய்யப்பட்டதாகும்.

"தமிழ் தேசிய இனத்துக்கு எதிராக இடம்பெற்ற இந்தக் கடைகெட்ட அநியாயங்கள் 35 வருடங்கள் இடம்பெற்று வந்த தேசிய ஒடுக்குமுறையினதும் அடக்குமுறையினதும் உச்சக்கட்டமாகும். இவற்றை தற்செயலான சம்பவங்களாக வர்ணிக்க ஒரு துரோகியினால் மட்டுமே முடியும்.

"இந்த மக்கள் படுகொலை நடவடிக்கைகள் உலகப் பொருளாதார வீழ்ச்சியின் தாக்கத்துக்கு உள்ளான வங்குரோத்து தேசிய முதலாளித்துவ ஆட்சியாளர்கள் தமது மரணத்தை ஒத்திப்போடும் பொருட்டு மேற்கொண்ட கையாலாகாத்தனமான பிரயத்தனத்தில் இருந்து பெருக்கெடுக்கின்றது என மாக்ஸ்சிஸ்ட்டுக்கள் முன்கூட்டியே நிருபித்துக்காட்டியுள்ளனர்.

"இந்த அநியாய நடவடிக்கைகளிலும் மக்கள் படுகொலைகளிலும் முதலாளி வர்க்கத்தின் சகல பகுதியினரும், சகல கட்சிகளும் இராணுவமும் சிறைச்சாலை உட்பட முதலாளித்துவ அரசின் அனைத்து நிறுவனங்களும் புத்த கோவில்களும், கிறிஸ்தவ தேவாலயங்களும் முழு முதலாளித்துவ பத்திரிகை குழுக்களும், குட்டி முதலாளித்துவத்தின் தலை குழம்பிய உயர்தட்டினரும் அவரவர்களின் விதிமுறைகளுக்கு இணங்க தொடர்புபட்டுள்ளனர் என இந்தக் கலகத்தின் உள்ளடக்கத்தை கவனமாக ஆராயும்போது நிருபணமாகும்.

 

"இது தேசிய ஒடுக்குமுறை பற்றிய உலகலாவிய ஒரு தோற்றப்பாடேயன்றி ஸ்டாலினிஸ்டுகளும் திரிபுவாதிகளும் பூசிமெழுக முயற்சிக்கும் விதத்தில், பிற்போக்கு முதலாளித்துவ சமூதாயத்தினுள் அழிபாடுகளாக இருந்து கொண்டுள்ள, பின்தங்கிய சமூகத்தட்டினரிடமிருந்து காலத்துக்குக் காலம் வெடித்துக் கிளம்பும் இனவாதக் குமுறல் அல்ல. 1983 ஜூலை கலவரம், இறுதியாக முதலாளித்துவ ஜனநாயக புரட்சியின் பாத்திரங்கள் தீர்க்கப்படாத ஒரு நாட்டில், ஏகாதிபத்திய சார்பு முதலாளி வர்க்கம் உலக நெருக்கடியின் கொதிப்புக்குள் அகப்படுவதற்கும் தேசிய ஒடுக்குமுறைக்கும் இடையே இருந்து கொண்டுள்ள பிரிக்கமுடியாத உறவை நிருபித்துக் காட்டியுள்ளது. இதில் இருந்து தலைதப்ப எவராலும் முடியாது.''

1983 ஜூலை இறுதியில் தமிழர் எதிர்ப்பு இனவாத இரத்தக் களரியையும் படுகொலைகளையும் பிற்போக்காளர்கள் நாடு பூராவும் கட்டவிழ்த்து விட்டது ஏன்? இதை அன்றைய யூ.என்.பி. ஆட்சிக்கு எதிராக தொழிலாளர் வர்க்கத்தினால் தொடுக்கப்பட்ட சவாலை தெரிந்து கொள்ளாமல் புரிந்து கொள்ளமுடியாது. தமிழ் மக்கள் மீதான தாக்குதல் ''தன்னியல்பான'' தமிழர் எதிர்ப்பின் ஒரு வெளிப்பாடாகும் என்ற கூச்சலையும் அவ்வாறே அது ''சுயமான மக்கள் கலகங்களின் ஒரு வெளிப்பாடாகும்'' என்ற நவ சமசமாஜக் கட்சித் தலைவர்களின் தீவிரவாதக் கூப்பாடுகளையும் தவிடு பொடியாக்கிவிட்டது.

1983 கறுப்பு ஜூலை ஆரம்பமான ஜூலை 23ம் திகதிக்கு சரியாக ஆறு நாட்களுக்கு முன்னர் ஜூலை 17ம் திகதி கொழும்பு அரசாங்க லிகிதர் சேவை மண்டபத்தில் 28 தொழிற் சங்கங்களின் செயற்பாட்டாளர்களின் கூட்டம் நடைபெற்றது. இது 1980 ஜூலையில் நடந்த வேலை நிறுத்தப் போராட்டத்தின் எதிரில் சமசமாஜ கம்யூனிஸ்ட் தலைவர்களின் தட்டிக் கழிப்புக்களையும் ஜே.வி.பி. யின் கருங்காலித்தனங்களையும் பாவித்து தொழிலாளர் வர்க்கத்துக்கு எதிராக யூ.என்.பி. அரசாங்கம் தொடுத்த மிலேச்சத் தாக்குதலுக்குப் பின்னர் தொழிலாளர்கள் போராட்டத்துக்காக மீண்டும் அணிதிரண்டதை வெளிக்காட்டிக் கொண்டது.

தொழிலாளர் வர்க்கப் போராட்டங்களை 1980ஐக் காட்டிலும் இன்றைய தருணத்தில் சகிக்க முடியாது போனதற்கு காரணம் யூ.என்.பி. அரசாங்கத்தின் மீது சர்வதேச நாணய நிதியமும் உலக வங்கியும் திணித்த நெருக்குவாரம் உக்கிரம் கண்டுபோய் இருந்ததேயாகும். தொழிலாளர்களின் சம்பளத்தின் நிலையான பெறுமானத்தை வெட்டித் தள்ளும் பொருட்டும் ரூபாவை மதிப்பிறக்கம் செய்யும் படியும் கல்வி, சுகாதார மற்றும் நலன்புரி சேவைகளை வெட்டும்படியும் ஏகாதிபத்திய வங்கியாளர்கள் அரசாங்கத்தை நெருக்கி வந்தனர். ஜூலை மாதத் தொடக்கத்தில் இலங்கைக்கு வந்த போல் பப்பியர் தலைமையிலான பார்வையாளர் குழு, சர்வதேச நாணய நிதியத்தின் கட்டளைகள் எந்தளவுக்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன என்பதை ஆய்வு செய்து, நாட்டில் இருந்து வெளியேறியதுதான் தாமதம் உலக வங்கியின் பிரதிநிதிகள் இலங்கை வந்து சேர்ந்தனர். அவர்கள் வங்கியாளர்களுக்கு இருந்து கொண்டிருந்த அவசரத்தை காட்டிக் கொண்டனர். பொதுமக்களை கசக்கிப் பிழியும் வேலைத்திட்டத்தை விரைவில் நடைமுறைக்கிடாது போனால் அந்த ஆண்டு செப்டம்பரில் நடைபெறவிருந்த இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளின் கூட்டத்தில் தொடர்ந்தும் கடன் வழங்குவது இல்லை என்ற முடிவினை எடுக்க இருப்பதாக வங்கியாளர்கள் அச்சுறுத்தலாக எச்சரித்தனர். வங்கிகளின் பிரதிநிதிகள் இலங்கையில் இருந்து கொண்டிருக்கையிலேயே அரசாங்கம் ரூபாவை 5.5 வீதத்தினால் மதிப்பிறக்கம் செய்தது. இருந்தாலும் வங்கியாளர்கள் அதையிட்டு திருப்தியடையவில்லை.

இத்தகைய ஒரு நிலையிலேயே தொழிலாளர் வர்க்கத்தினுள் பதட்டம் வளர்ச்சி கண்டுவந்தது. தொழிற்சங்கங்கள் உட்பட தொழிலாளர் அமைப்புக்கள் ஏற்படுத்திய தாக்கங்கள் கொஞ்ச நஞ்சம் அல்ல. 11 கோரிக்கைகள் இயக்கம் என்ற பேரிலான அமைப்பைச் சூழ 28 தொழிற்சங்கங்கள் அணிதிரண்டது இதன்படியேயாகும்.

பாரம்பரியமான தொழிற்சங்க கோரிக்கைகள் என்ற முறையில் 1980 வேலை நிறுத்தக்காரர்களை மீண்டும் சேவையில் சேர்த்தல், தொழிலாளர் சம்பளத்தை ரூபா 500 ஆல் கூட்டுதல் போன்ற கோரிக்கைகளை முன்னணியில் கொண்டிருந்த போதிலும் 28 தொழிற்சங்கங்கள் நிறைவேற்றிக் கொண்ட கோரிக்கைகள் அரசியல் தன்மை கொண்டவையாக விளங்கின. இதற்கிடையே கூட்டுத்தாபனங்களை தனியார் துறையிடம் கையளிப்பதை நிறுத்துதல், இலவசக் கல்வி வெட்டை நிறுத்துதல், தோட்டத் தொழிலாளர்களின் குடியுரிமையை வழங்குதல், பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குதல், தமிழ்பேசும் மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்தல், விவசாய நிலங்களை ஏகாதிபத்திய வாதிகளிடம் ஒப்படைப்பதை நிறுத்துதல், அரசியல் கைதிகளை விடுதலை செய்தல் ஆகியனவும் இவற்றுள் அடங்கும்.

இவை தொழிற்சங்க போராட்ட எல்லைகளைத் தாண்டிச் செல்லும் அரசியல் போராட்டத்தை வேண்டிநிற்கும் கோரிக்கைகளாகும். தொழிற்சங்கத் தலைவர்கள் தொழிற்சங்கவாதத்தினுள் தொழிலாளர்களை கட்டிப்போட நடவடிக்கை எடுத்த போதிலும் யூ.என்.பி. அரசாங்கம் அதனால் திருப்திகண்டு நிலைமையை புறக்கணித்துவிட முடியாது போய் விட்டது.

பு.க.க.வுக்கு இருந்த ஆதரவு

இன்றைய சோசலிச சமத்துவ கட்சியின் முன்னோடியான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் முன்னோக்கும் வேலைத்திட்டமும் ஜூலை 17ம் திகதி நடந்த 28 தொழிற்சங்கங்களின் பேராளர் மகாநாட்டில் மட்டுமன்றி பரந்த தொழிலாளர் வர்க்கத்தினுள்ளும் ஆதரவைப் பெற்றுக்கொண்டிருந்ததே இதற்கான காரணமாகும்.

இந்தப் பேராளர் மகாநாட்டில் பேசிய புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் அங்கத்தவரான பரீடா இம்ரான் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் சார்பில் கரகோசத்தின் மத்தியில் பேசுகையில் ''சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தொழிலாளர் வர்க்கத்தை ஆட்சி அதிகாரத்தை நோக்கி இட்டுச் செல்வதை மேலும் காலம் கடத்த முடியாது'' எனக் குறிப்பிட்டார்.

''11 கோரிக்கைகளை வெற்றி கொள்வது யூ.என்.பி அரசாங்கத்தை தோற்கடிப்பதுடன் இணைந்து கொண்டுள்ளது'' எனக் கூறிய அவர் ''வடக்கு பிரதேச மக்களுக்கு எதிராக அரசாங்கம் இனவாத யுத்தத்தை தூண்டி விட்டிருப்பது தொழிலாளர் வர்க்கத்தைத் தடம்புரளச் செய்யவதற்கேயாகும்'' எனவும் குறிப்பிட்டார்.

"உற்பத்திச் சக்திகளையும் சேவைகளையும் ஒழித்துக்கட்ட ஏகாதிபத்திய வங்கியாளர்களின் சார்பில் அர்ப்பணித்துக்கொண்டுள்ள அரசாங்கம், இனவாதக் குழப்பங்களை சிருஷ்டிப்பது அந்த நடவடிக்கையை எடுக்கவேயாகும். தொழிலாளர் வர்க்கம் தொழில், சேவைகளை கட்டிக் காக்க வேண்டுமானால் இனவாத யுத்தத்திற்கு எதிராக கிளர்ந்து எழ வேண்டும். தமிழ் மக்களின் தேசியப் பிரச்சினையை தொழிலாளர் வர்க்கத்தினால் மட்டுமே தீர்த்து வைக்க முடியும் எனக்கூறிய அவர், யூ.என்.பி. அரசாங்கம் நடாத்தும் சேவை, தொழில் அழிப்புகளுக்கு எதிராக தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் இடதுசாரி கட்சிகளின் பிரதிநிதிகளை ஒன்றுதிரட்டி வெகுஜனக் குழுக்களை அமைக்க வேண்டும் எனவும், அரச குண்டர் பயங்கரவாதத்திற்கு எதிராக பாதுகாப்புக் கமிட்டிகளை அமைக்க வேண்டும் எனவும் கூறினார்.'' (கம்கறு மாவத்தை, தொழிலாளர் பாதை 1983ஜூலை 19)

இது அன்று புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் தொழிலாளர் வர்க்கத்தினுள் நடாத்திய சக்தி வாய்ந்த அரசியல் தலையீட்டுக்கான ஒரு உதாரணம் மட்டுமே. இதற்கு முரண்பட்ட முறையில், இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்டாலினிஸ்டுகளும் நவசமசமாஜக் கட்சியினதும் ஜே.வி.பி.யினதும் குட்டி முதலாளித்துவ தீவிரவாதிகளும் மற்றும் 28 தொழிற்சங்கங்களின் முன்னணியும் தொழிலாளர் வர்க்கத்தின் அரசியல் அபிவிருத்திக்கான பொதுப் போராட்டத்தில் இருந்து ஓட்டமெடுத்து, யூ.என்.பி. இனவாத ஒடுக்குமுறை ஆட்சிக்கு முண்டு கொடுத்தன. இந்த பக்கத் தூண்களோடு யூ.என்.பி. அரசாங்கம் முடிந்தவரை சகல இடங்களிலும் அவற்றை பயன்படுத்திக்கொண்டு அதன் மூலம் தொழிலாளர் வர்க்கத்தை குழப்பியடிக்கவும் பிளவுபடுத்தவும் மற்றும் தமிழர் எதிர்ப்பு இனவாத இரத்தக்களரியையும் படுகொலைகளையும் கட்டவிழ்த்துவிடவும் செயற்படவும் முடிவெடுத்ததானது, எதிர்காலத்தில் வர்க்கப் போராட்டம் முதலாளித்துவ ஆட்சியால் தாங்க முடியாத மட்டத்துக்கு வளர்ச்சிகாணும் என அது நனவாக கணித்துக் கொண்டிருந்ததாலேயே ஆகும்.

இனவாத ரீதியில் இரத்தத்தை உறிஞ்சிக் குடிப்பதற்கு முன்னதாக பல் துலக்கி வாய் கழுவும் விதத்தில் யூ.என்.பி. அரசாங்கம் பல தயாரிப்புக்களில் ஈடுபட்டது. தமிழ் மக்கள் பற்றிய செய்திகளை வெளியிட்டு வந்த சற்றடே ரிவீயூ சஞ்சிகையும் சுதந்திரன் பத்திரிகையும் தடை செய்யப்பட்டன. சுதந்திரன் பத்திரிகை ஆசிரியர் கோவை மகேசனும் வடக்கில் செயற்பட்ட காந்திய இயக்கத்தின் தலைவரும் கைது செய்யப்பட்டனர்.

ஜூலை 17ம் திகதி நடைபெற்ற தொழிலாளர் பேராளர் மகாநாட்டில் இந்த நடவடிக்கைகள் கண்டனம் செய்யப்பட்டன. அத்தோடு தடையை அகற்றும்படியும் கைதானவர்களை விடுதலை செய்யும்படியும் கோரும் அவசர பிரேரணைகள் மகாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.

இந்தக் கொடிய அடக்குமுறையின் உக்கிரமான தாக்குதல் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்துக்கு தொடுக்கப்பட்டது தற்செயலானது அல்ல. பு.க.க. பத்திரிகைகளான தொழிலாளர் பாதை மற்றும் கம்கறு மாவத்தை மீதும் அரசாங்கத்தின் விஷ நகக் கீறல்கள் விழுந்தன. தொழிலாளர் வர்க்கத்தினதும் அரசியல் ரீதியில் நனவான பகுதியினரிடையேயும் அது அந்தளவுக்கு கோபமூட்டியதன் காரணமாக, தொழிலாளர் பேராளர் மாகாநாட்டில் பேசிய இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவராக விளங்கிய எச்.என். பெர்னாந்து, அரசாங்கத்தின் அந்த வேட்டைகளுக்கு எதிராக குரல் கொடுக்கத் தள்ளப்பட்டார்.

அன்று கம்கறு மாவத்தை பத்திரிகை வெளியீட்டாளராகவும் அச்சகனாகவும் விளங்கிய ஆனந்த வக்கும்புர, வெள்ளவத்தைப் பொலிசாரால் கைது செய்யப்பட்டார். வவுனியாவில் இடம்பெற்று வந்த தமிழர் எதிர்ப்பு தகவல்களைத் திரட்ட வவுனியா சென்றதன் பேரில் அவர் கைது செய்யப்பட்டார். அச்சமயத்தில் பு.க.க. அச்சகமும் அலுவலகமும் வெள்ளவத்தையில் இயங்கி வந்தன. புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் முன்னெடுத்த அரசியல் பிரச்சாரம் காரணமாக வக்கும்புரவை பொலிசார் பிணையில் விடுதலை செய்த பின்னர் அவரை வவுனியா பொலிஸ் நிலைய அதிபரிடம் சரணடையுமாறு கட்டளை பிறப்பிக்கப்பட்டது. வளர்ச்சி கண்டுவந்த இனவாத வன்முறையின் பின்னணியின் கீழ், அந்தக் கட்டளையானது தமிழ் மக்களின் உரிமைகளை பாதுகாக்கும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த பு.க.க.வை இரத்தக் களரியில் நசுக்கித் தள்ள அரசாங்கம் தீர்மானம் செய்திருந்ததை எடுத்துக் காட்டியது. ஆதலால் வக்கும்புரவை சரணடையுமாறு வவுனியா பொலிஸ் நிலைய அதிபர் பிறப்பித்த கட்டளைகளை மீறுவதென பு.க.க. தீர்மானித்தது.

வர்க்கப் போராட்டத்தின் உக்கிரம்

இந்த சகல சம்பவங்களும் வர்க்கப் போராட்டத்தின் சூடுபிடித்திருந்ந விதத்தை எடுத்துக் காட்டின. பெரும்பான்மை தொழிலாளர் வர்க்கத்துக்கும் ஒடுக்கப்படும் மக்களுக்கும் இடையே புரட்சிகர முன்னோக்கும் தலைமையும் ஸ்தாபிதம் செய்யப்படாமல் இருந்தமை ஆளும் வர்க்கத்துக்கு இருந்த ஒரே வாய்ப்பாகும். கிளர்ந்து வரும் பொதுஜன கிளர்ச்சியை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முதலாளித்துவ அரசின் ஒடுக்குமுறை உபகரணங்களான பொலிஸ், இராணுவம், நீதிமன்றம் மற்றும் சிறைச்சாலைகளால் முடியாது போனதை அரசாங்கமும் ஆளும் வர்க்கமும் புரிந்து கொண்டன. எனவே தான் யூ.என்.பி. தொழிலாளர்-ஒடுக்கப்படும் மக்களிடையே சமசமாஜ, கம்யூனிஸ்ட், நவசமசமாஜ, ஜே.வி.பி., இ.தொ.கா. கட்சிகளும் மற்றும் தொழிற்சங்கங்களும் அவ்வாறே தமிழ் குட்டி முதலாளித்துவ குழுக்களும் திட்டமிட்டு உருவாக்கி இருந்த அரசியல் ஆயத்தமற்ற நிலைமையைப் பாவித்து இனவாத கலவரத்தினால் நாட்டில் தீச்சுவாலையை மூட்டத் தீர்மானித்தது.

கட்டவிழ்த்துவிட்ட தமிழர் எதிர்ப்பு கலவரத்தின் பின்னணியில் இருந்த குறிக்கோள், எழுச்சி கண்டுவரும் தொழிலாளர் வர்க்கப் போராட்ட அலையை தவிடுபொடியாக்குவதாக இருக்குமானால், இனவாத வேறுபாடுகள் இல்லாமல் தொழிலாளர் வர்க்கத்தை ஐக்கியப்படுத்தவும் அதைச் சூழ ஒடுக்கப்படும் மக்களை புரட்சிகரமான முறையில் அணிதிரட்டவும் போராடிய புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தை தடைசெய்வதுடன் நிற்காது அதை தவிடு பொடியாக்குவதும் அந்தப் பிற்போக்கு நிகழ்ச்சி நிரலில் ஒரு பாகமாகியது புதுமையானது அல்ல.

ஜூலை 24ம் திகதி வெள்ளவத்தை பகுதிக்கு தீவைத்தும் கொள்ளையிட்டும் தமிழ் உயிர்களை சுட்டுப்பொசுக்கியும் வந்த யூ.என்.பி. குண்டர்களில் ஒரு பகுதியினர் அப்பகுதியில் அமைந்திருந்த புரட்சிக் கம்யூனிஸ்ட் கழக அலுவலகத்தையும் அச்சகத்தையும் தேடி அலைந்தது தற்செயலானது அல்ல. ஆனால், கொழும்பு 6 கனல் ஒழுங்கை 21ம் இலக்கத்தில் இருந்த கட்சி அலுவலகத்தையும் அச்சகத்தையும் குண்டர்கள் அணுகுவது தவிர்க்கப்பட்டது அப்பிரதேச மக்களால் என்பது அப்படி ஒன்றும் தற்செயலானது அல்ல. அம்மக்கள் குண்டர்களை வேறு வழியில் திசை திருப்பி விட்டு நடக்கவிருந்த தாக்குதலைத் தவிர்த்தனர். அது உயர்ந்த ஒரு புரட்சிகர வீரத்தின் வெளிப்பாடாக இல்லாது போனாலும் புரட்சிகர இயக்கத்தை காக்க எடுத்த முயற்சியின் ஒரு வெளிப்பாடாகும். அத்தகைய ஒரு முயற்சி இல்லாது போயிருக்குமானால் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத் தலைமையின் கணிசமான பகுதியினரும் அதன் அச்சகமும் 1983 கறுப்பு ஜூலையின் இனவாத தீப்பிளம்பில் நிச்சயம் சாம்பலாகிப் போயிருக்கும். அப்படி நடந்திருக்குமானால், யூ.என்.பி. ஆட்சிக்கு இயைந்து போயிருந்த நவசமசமாஜ கட்சி போன்ற குட்டி முதலாளித்துவத்தின் உற்சாகமான பேச்சாளர்கள், "அத்தகைய நாசங்கள் தன்னியல்பான பொதுஜன கிளர்ச்சியின் பெறுபேறு" எனக்கூறிக் கொண்டு வக்காலத்து வாங்கியதும் அந்த விதத்திலேயே உண்மையானதாகி இருக்கும்.

இத்தருணத்தில் ட்ரொட்ஸ்கிச நிரந்தரப் புரட்சிக் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்ட நான்காம் அகிலத்தின் வேலைத்திட்டத்தை தேசிய முதலாளித்துவ ஆளும் வர்க்கங்களின் அவசியங்களுக்கு கீழ்ப்படுத்திக்கொண்டிருந்த பிரித்தானிய தொழிலாளர் புரட்சிக் கட்சியின் தலைமைத்துவத்தின் பிரதிபலிப்பை கவனத்தில் கொள்ளும்போது, மேற்சொன்ன முடிவு எதுவிதத்திலும் ஆச்சரியத்துக்கு உரியதொன்றல்ல. தொழிலாளர் புரட்சிக் கட்சி (தொ.பு.க) சார்பில் 1983 ஜூலை இனவாதக் கலகங்கள் பற்றி நியூஸ்லைன் பத்திரிகையில் கட்டுரை எழுதிய மைக் பண்டா, புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் தலைவர்கள் அச்சமயத்தில் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என எந்த விதமான ஒரு மனக்கிலேசமும் இல்லாமல் கூறியிருந்தார். அச்சமயத்தில் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தினால் பாதுகாக்கப்பட்ட சுயாதீன தொழிலாளர் வர்க்க அரசியல் விதிமுறையையிட்டு முதலாளித்துவ ஆளும் வர்க்கங்களின் பின்னால் வயிறளந்து கொண்டிருந்த தொ.பு.க. காட்டிய எதிர்ப்பின் படி பார்க்குமிடத்து, அது ஒரு எச்சரிக்கையைக் காட்டிலும் ஒரு பிரார்த்தனை வடிவத்தை எடுத்தது. ஆனால், அரச மற்றும் குண்டர் தாக்குதல்களில் இருந்து தமிழ்த் தோழர்கள் உட்பட்ட கட்சிக் காரியாளர்களையும் பாதுகாத்துக் கொண்டு, முதலாளித்துவ ஆட்சியை தூக்கி வீசும் பொருட்டு தாம் முன்னெடுத்த போராட்டத்தினைத் தொடரும் அளவுக்கு மனித சட வளங்களை அன்று புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் கொண்டிருந்தது.

ஆனால், தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளையும் உயிர்களையும் பாதுகாக்க புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் முன்வைத்த புரட்சிகர வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தொழிலாளர் வர்க்கத்தினதும் ஒடுக்கப்படும் மக்களினதும் பெரும்பான்மையினர் நின்றிராத ஒரு நிலையில், தெற்கிலும் மலையக மாகாணங்களிலும் தமிழ்பேசும் மக்கள் முகம் கொடுத்த அழிவு பிரமாண்டமானதாகியது. இது தமிழ் மக்களின் உரிமைகளையும் உயிர்களையும் பாதுகாக்க முதலாளித்துவ பாராளுமன்றப் பேச்சுக் கடைகளின் வாய்வீச்சு விவாதங்களில் நம்பிக்கை வைத்து செயற்பட்டவர்களதும் மறுபுறத்தில் வடக்கில் தனிமனித பயங்கரவாத தாக்குதல்களில் நம்பிக்கை வைத்து செயற்பட்டவர்களதும் மற்றும் தமிழ் முதலாளித்துவ, குட்டிமுதலாளித்துவ இயக்கங்களதும் அரசியல் வங்குரோத்தை அம்பலமாக்கியது. யூ.என்.பி.யின் இனவாத குண்டர் தாக்குதல்களின் எதிரில் ஒரு துளி எதிர்ப்புக் காட்டக்கூட இந்த எந்த அமைப்பினாலும் முடியாது போயிற்று.

முக்கிய நகரங்களில் மட்டும் இலட்சத்துக்கும் அதிகமான தமிழ் மக்கள் அகதிகளாகினர். தகவல் அமைச்சின் செயலாளர் டக்ளஸ் லியனகேயின் உத்தியோகபூர்வமான அறிக்கையின் படி 40,000 மக்கள் யாழ்ப்பாணம் சென்றனர். ஏனையோர் அகதிகள் முகாம்களில் உயிரைப் பிடித்துக் கொண்டு இருக்க நேரிட்டது. டசின் கணக்கான தமிழ் மக்கள் மிலேச்ச தாக்குதல்களுக்கும் டயர் சிதைகளுக்கும் பலியாகினர். நாடு பூராவும் டயர் சிதைகளை நிர்மாணித்த முதல் அரசாங்கம் இதுவாகும்.

ஆனால், அது வர்க்க வேறுபாடு இல்லாமல் சகல தமிழ் மக்களுக்குமெனச் சிருஷ்டிக்கப்பட்ட ஒரு தலைவிதி அல்ல. தமிழ் செல்வந்தர்களுக்கு சிங்கள ஆளும் வர்க்கத்துடனும் யூ.என்.பி. அரசாங்கத்துடனும் நிலவிய உறவுகள் அவர்களின் உயிர்களை பிடித்துக்கொள்ளச் செய்தது. எஸ்.ஜே.வி. செல்வநாயகத்தின் மகன் சந்திரகாசனை காப்பாற்றும் பொருட்டு யூ.என்.பி. அமைச்சர் காமினி திசாநாயக்க தனிப்பட்ட முறையில் அவரது இல்லத்துக்கு சென்று நடவடிக்கை எடுத்தது அதற்கு ஒரு உதாரணமாகும்.

தமிழர் விரோத மிலேச்ச பயங்கரவாத தாக்குதல்களின் முன்னணிப் பேர்வழியாக விளங்கிய சிறில் மத்தியூ கூட அந்த விதத்தில் தனிப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளை வழங்கிய தமிழ் முதலாளிகள் இருந்திருப்பின் அது அப்படி ஒன்றும் புதுமைக்கு உரியது அல்ல. அதற்குக் காரணம் சிங்கள, தமிழ் முதலாளிகள் ஒன்றிணைந்து, இந்த இரு தேசிய இனங்களையும் சேர்ந்த தொழிலாளர் ஒடுக்கப்படும் மக்களையும் முட்டிமோத வைத்து, தமது பிற்போக்கு ஆட்சியின் வீரத்தை கொலைகார நடவடிக்கைகள் மூலம் ஊர்ஜிதம் செய்ய செயற்பட்ட முதலாவது ஒரே சந்தர்ப்பம் இது அல்லாததேயாகும். தேசிய சுயநிர்ணய உரிமையின் பேரால் தமிழ் முதலாளித்துவ குட்டி அரசை நிர்மானிக்க பிரச்சாரம் செய்யும் சிங்கள குட்டி முதலாளித்துவ அமைப்புக்கள் தமது முதலாளித்துவ சார்பு தன்மை காரணமாக மறந்து போகும் விடயமும் அதுவாகும். ஆனால், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பகுதி என்ற முறையில் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் புறநிலை உலகின் யதார்த்தத்தை மிகவும் நெருக்கமாக அடையாளம் கண்டும் ஆய்வு செய்தும், தொழிலாளர் வர்க்க அனைத்துலகவாத வேலைத்திட்டத்தை இதற்கு ஏற்ப சமரசமற்ற புரட்சிகர உயிர்த்துடிப்பினால் உயிரூட்ட இடைவிடாது செயற்பட்டது. சோசலிச சமத்துவக் கட்சி முன்னெடுப்பதும் இந்தப் பாரம்பரியங்களையே ஆகும் .

தமிழ் முதலாளித்துவ மற்றும் குட்டி முதலாளித்துவ அமைப்புக்கள்

தமிழ் தொழிலாளர் ஒடுக்கப்படும் மக்களைச் சுரண்டும் பொருட்டு தமக்கென ஒரு குட்டி அரசினை நிறுவ செயற்பட்டு வந்த தமிழ் முதலாளித்துவ குட்டி முதலாளித்துவ பகுதியினர், கறுப்பு ஜூலையின் தமிழர் படுகொலைகளுக்கும் இரத்தக் களரிகளுக்கும் காட்டிய எதிர்ப்பு என்ன? தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஒரு தலைவரான நீலன் திருச்செல்வம் இந்திய ரூடே சஞ்சிகைக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது; "அது தமிழ் மக்கள் பகுதியினரின் பொருளாதார, புத்திஜீவி அடிப்படையை நாசமாக்க திட்டமிட்டு செய்யப்பட்ட ஒன்றாகும்... அது தமிழ் தொழில்சார் நிபுணர்களுக்கு தொடுத்த தாக்குதலாகும்." இந்தப் பேட்டி, கொலை செய்யப்பட்ட அகதிகளான தமிழ் தொழிலாளர்கள், ஏழைகளைப் பற்றி அக்கறை காட்டி வருத்தம் தன்னும் தெரிவிப்பதாக அமையவில்லை.

தமிழ் தொழிலாளர்-ஒடுக்கப்படும் மக்கள் உயிர்ப் பாதுகாப்புக்காக சுயாதீன நடிவடிக்கைகள் எடுக்கத் தள்ளப்படுவர் என அஞ்சிய தமிழர் விடுதலைக் கூட்டணி தலைவர் அ. அமிர்தலிங்கம் அதைப்பற்றிக் கூறியதாவது; ''தமிழர் மனதில் பாதுகாப்பின்மை பற்றிய எண்ணம் புகுந்து கொண்டுள்ளது'' என்றார். முதலாளித்துவ பாராளுமன்ற நடவடிக்கைகள் மூலம் பொது மக்களை வழிதடுமாறச் செய்யும் பாதை இதனால் அடைபட்டுப் போகலாம் என்பதையிட்டு அவருக்கு நிலவிய அச்சத்தை அது காட்டியது.

ஆயுதப் போராட்டத்தின் மூலம் தனிநாடு அமைக்கும் இலக்குடன் தொழிற்பட்ட தமிழ்க் குட்டி முதலாளித்துவ அமைப்புக்கள் அக்கறை காட்டியது நாடு பூராவும் பரந்து வாழ்ந்த தமிழ் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதைப் பற்றி அல்ல. மக்கள் படுகொலையின் பிரச்சார இலாபத்தை தட்டிக்கொள்வதன் மூலம் தத்தமது அமைப்புக்களின் நிதி மூட்டிகளை நிறைத்துக் கொள்வதிலேயே அக்கறை காட்டினர். தமது ஆளுமையின் கீழ் தனிநாடு அமைக்கப்படுமானால் தமிழ் தொழிலாளர்-ஒடுக்கப்படும் மக்கள் தொடர்பாகக் காட்டும் ''அக்கறை'' யின் கோலத்தை அதன் மூலம் வெளிக்காட்டிக்கொண்டனர்.

இதன் ஆதாயத்தை தட்டிக் கொள்ள தமிழர் எதிர்ப்பு இனவாதக் காட்டுமிராண்டி தனத்தை கட்டவிழ்த்துவிட்ட யூ.என்.பி.யும் ஜனாதிபதி ஜயவர்த்தனாவும் தாமதிக்கவில்லை.

ஜூலை மக்கள் படுகொலைகளின் நான்கு நாட்களுக்கு பின்னர் ஜனாதிபதி ஜயவர்தன நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தினார். இந்தப் பேச்சு முற்றிலும் சிங்கள இனவாதிகளிடம் மன்னிப்புக் கோருவதாக விளங்கியது. அது இரண்டு நாட்களுக்கு மேலாக அவர்களது காட்டுமிராண்டி நடவடிக்கைகளை மனம் போன போக்கில் தொடர்வதற்கு தம்மாலும் தமது அரசாங்கத்தாலும் இடமளிக்க முடியாது போனது சம்மந்தமானதாக விளங்கியது. ஜயவர்தன நாட்டு மக்களுக்கு உரைநிகழ்தியது எல்லே குணவங்ச (பிக்கு) என்ற பெயர்போன இனவாதியின் தூண்டுதலின் பேரிலாகும் என்பது பிரசித்திபெற்றது. ஆதலால் அந்த உரையை குணவங்சவே எழுதிக் கொடுத்திருக்கலாம் எனச் சந்தேகிக்கவும் காரணம் இல்லாமல் இல்லை.

ஐந்து நிமிடம் பத்து செக்கண்டுகளுக்கும் குறைவான காலத்துக்கு மட்டுபடுத்தப்பட்ட இந்த ஜனாதிபதியின் பேச்சில், தமிழ் தேசிய இனம் பற்றி எதுவுமே குறிப்பிடப்படவில்லை. அதன்படி அத்தகைய தேசிய ஜனநாயக உரிமைகளைக் காப்பதையிட்டு தமக்கு அணுவளவும் அக்கறை கிடையாது என்பதை அவர் ஊர்ஜிதம் செய்து கொண்டார்.

ஜனாதிபதி ஜயவர்த்தனாவின் பேச்சு இனவாத படுகொலைகளையும் இரத்தக்களரிகளையும் நியாயப்படுத்துவதை அடிநாதமாகக் கொண்டிருந்தது. அவர் கூறியதாவது: ''2000 ம் ஆண்டுகளாக வாழும் சிங்கள மக்கள் நாட்டை பிரிப்பதை எதிர்க்கிறார்கள். சிங்கள மக்களின் அபிப்பிராயத்துக்கு தலைவணங்கி ஆகஸ்ட் 4ம் திகதி நாட்டைப் பிரிக்கும் பேச்சுக்களை சட்டத்தின் மூலம் தடை செய்யும் மசோதாவை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து நிறைவேற்ற நாம் முடிவு செய்தோம்.''

தமிழர் எதிர்ப்பு கறுப்பு ஜூலை 'சிங்கள பொதுமக்களின் அபிப்பிராயத்தின் வெளிப்பாடு' என கூறுவதன் மூலம் மக்கள் படுகொலை அலுக்கோசுகளின் கொலைகளை மூடி மறைப்பதோடு சிங்களத் தொழிலாளர் ஒடுக்கப்படும் மக்களை அந்தக் காட்டுமிராண்டித்தனத்துடன் இனங்கானச் செய்வதாகும்.

இந்த அலுகோசுக் கீதத்துடன் பெரிதும் ஒத்தூத முன் வந்தார் நவசமசமாஜ கட்சித் தலைவர் விக்கிரமபாகு கருணரத்தின. அவர் இந்தக் கறுப்பு ஜூலையின் தமிழ் மக்கள் படுகொலைகள் யூ.என்.பி. அரசாங்கத்துக்கு எதிராக வளர்ச்சி கண்ட ''பொதுமக்கள் எதிர்ப்பின் வெளிப்பாடு'' எனக் கூறினார். யூ.என்.பி. அரசாங்கத்தின் எதிர்ப்பாளனாகக் காட்டிக்கொண்ட இந்த முதலாளித்துவ கையாள், யூ.என்.பி. யினால் நடத்தப்பட்ட இனவாதப் படுகொலைகளை பொதுஜன அபிப்பிராயத்தின் வெளிப்பாடு எனக் கூறிய கதைக்கு சாமரை வீசியது அத்த விதத்திலாகும். அது குட்டி முதலாளித்துவத் தீவிரவாதம் முதலாளித்துவத்துக்கு சேவை செய்யும் பாணிக்கு ஒரு நல்ல உதாரணமாகும்.

1983 ஜூலையில் வாயால் கூறிக் கொள்ளாத போதிலும், ஜே.வி.பி. தலைவர்கள் நீண்ட காலமாக கட்டவிழ்த்து வந்த இனவாத நஞ்சை உட்கொண்டவர்கள், கறுப்பு ஜூலையில் சிறில் மத்தியூவின் குண்டர்களுடனும் இராணுவத்தில் உள்ள குண்டர்களுடனும் சேர்ந்து தமிழ் மக்கள் படுகொலைகளில் நடைமுறையில் பங்கு கொண்டதன் மூலம் நடைமுறையில் காட்டிக்கொண்டதும் அந்த விடயத்தையேயாகும்.

யூ.என்.பி.யின் தமிழர் எதிர்ப்பு இனவாதத்துக்கு சாமரை வீசும் இந்த விதிமுறையே நவசமசமாஜக் கட்சியின் மீதும் ஜே.வி.பி.யின் மீதும் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் மீதும் கறுப்பு ஜூலையின் கறுப்பு கறையை பூசி விடுவதற்கு யூ.என்.பி. அரசாங்கத்துக்கு வழியமைத்துக் கொடுத்தது. ஜனாதிபதி ஜயவர்த்தன அவசரகாலச் சட்டத்தை பயன்படுத்தி இந்த மூன்று அரசியல் கட்சிகளையும் தடைசெய்யவும் அவற்றின் அச்சகங்களுக்கு சீல் வைக்கவும் கட்சிகளின் தலைவர்களை கைது செய்யவும் தொழிற்பட்டார்.

கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் கே.பி. சில்வா அக்கட்சியின் தொழிற்சங்கத் தலைவர் எல்.டபிள்யூ. பண்டித உட்பட கட்சி முக்கியஸ்தர்கள் கைது செய்யப்படுவதை தவிர்த்துக் கொண்டிருந்த நவசமசமாஜக் கட்சியின் வாசுதேவ நாணயக்கார, ஜே.வி.பீ.யின் றோஹண விஜேவீர போன்ற தலைவர்களை கைது செய்யத் தகவல் தருபவர்களுக்கு ரூபா 50,000 சன்மானம் வழங்குவதாக அரசாங்கம் வாக்குறுதி அளித்திருந்தது.

யூ.என்.பி. அரசாங்கமே முன்நின்று கட்டவிழ்த்துவிட்ட இனவாத இரத்தக்களரியை சாட்டாகக் கொண்டு இடம்பெற்ற இந்த ஜனநாயக எதிர்ப்பு ஒடுக்குமுறைக்கு எதிராக தொழிலாளர் வர்க்கத்தையும் ஒடுக்கப்படும் மக்களையும் அணிதிரட்ட கொள்கைப்பிடிப்பான முறையில் முன்னணியில் நின்றது சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோடியான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகமே.

கட்சித் தடைகள் நடைமுறைக்கு வந்ததும் உடனடியாக அறிக்கை வெளியிட்ட புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் அதனால் தோன்றியுள்ள ஆபத்தை விளக்கி தொழிலாளர் ஒடுக்கப்படும் மக்களுக்கு கூறியது இதுதான்: ''மூன்று இடதுசாரி கட்சிகள் மீது விதிக்கப்பட்டுள்ள தடையையும் கைதுகளையும் சாதாரண விடயமாகக் கொள்ள எந்த விதமான இடமும் தொழிலாளர் வர்க்கத்துக்கும் ஒடுக்கப்படும் மக்களுக்கும் கிடையாது. இது அடக்குமுறை இயந்திரத்துக்கு அனைத்தையும் நசுக்கித் தள்ளிக்கொண்டு உருண்டோட இடமளிப்பதாகும்.

''இடதுசாரிக் கட்சிகளின் தடை முதலாளித்துவ ஜனநாயகத்தின் மரணத்தைக் குறித்து நிற்கிறது. இன்றைய உலக ஏகாதிபத்திய நெருக்கடியின் மத்தியில் இப்போது அது முதலாளித்துவ நாடுகள் தோறும் நடைமுறைக்கிட தொடங்கப்பட்டுள்ள அனைத்துலகத் தோற்றப்பாடாகும்.

''அவசரகாலச் சட்டம் முடிவடையும் போது கட்சித் தடையும் பத்திரிகைத் தடையும் நீங்கும் எனவும் கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் எனவும் நம்பிக்கை வைப்பது ஆபத்தானதாகும். ஆட்சியாளர்கள் செயற்படுவது சிறையில் இருந்து ஆட்களை வெளியேற்ற அல்ல. அவற்றை மூச்சுவிட முடியாத விதத்தில் நிரப்பித் தள்ளுவதற்காகும்.

''இந்த நிலைமையில் சமசமாஜ தலைவர்கள் கட்சித் தடைகளையிட்டு ஊமைகளாக இருந்து வருவது பிற்போக்குக்கு உதவுவதும் அதற்கு ஏஜண்டுகளாக செயற்படுவதும் ஆகும் எனக் கூறுவது பிழையானதாகுமா?

''அவசரகால சட்டத்தை நீக்கவும் கட்சித் தடைகளை நீக்கி அரசியல் கைதிகளை விடுதலை செய்யவும் தொழிலாளர் வர்க்கமும் ஒடுக்கப்படும் மக்களும் தமக்குரிய ஜனநாயக உரிமைகளை பயன்படுத்தி இன்றே பிரச்சாரம் செய்ய வேண்டும்.'' (கம்கறு மாவத்தை 1983 செப்டம்பர் 09)

தொடரும்...


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved