World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

The Munich Security Conference: a transatlantic trial of strength

மூனிச் பாதுகாப்பு மாநாடு: அட்லான்டிக் இடையிலான பலப்பரீட்சை

By Ulrich Rippert
7 February 2009

Back to screen version

இவ்வார இறுதியில் நடைபெற உள்ள 45 வது மூனிச் பாதுகாப்பு மாநாட்டில் பல முக்கியமான அரசியல் தலைவர்கள் கலந்து கொள்ள இருக்கின்றனர். அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமா தன்னுடைய துணை ஜனாதிபதி ஜோசப் பிடெனை அனுப்புகிறார்; இதைத்தவிர தேசியப்பாதுகாப்பு ஆலோசகர் ஜேம்ஸ் ஜோன், அமெரிக்க மத்திய கட்டளை தலைவர் தளபதி டேவிட் பெட்ரீயஸ், ஆப்கானிஸ்தானிற்கும் பாக்கிஸ்தானத்திற்குமான அமெரிக்காவின் புதிய பிரதிநிதி ரிச்சர்ட் ஹோப்ரூக் உட்பட மற்றவர்களும் அமெரிக்கக் குழுவில் உள்ளனர்.

ஜேர்மனியும் அதன் முக்கிய அரசியல் பிரதிநிதிகளை அனுப்புகிறது; இதில் அதிபர் அங்கேலா மேர்க்கெல் (கிறிஸ்துவ ஜனநாயக யூனியன்- CDU), துணை அதிபர் பிராங்க் வால்டர் ஸ்ரைன்மையர் (சமூக ஜனநாயக கட்சி, SPD), உள்துறை மந்திரி வொல்ப்காங் ஷொயபிள (CDU), பாதுகாப்பு மந்திரி பிரான்ஸ் ஜோசப் யங் (CDU) ஆகியொரும் அடங்குவர். இதைத்தவிர பிரெஞ்சு ஜனாதிபதி நிக்கோலோ சார்க்கோசி, போலந்து பிரதம மந்திரி டொனால்ட் டஸ்க், உதவி ரஷ்ய பிரதம மந்திரி செர்கெஜ் இவாநோவ் மற்றும் ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி ஹமித் கர்சாய் ஆகியோரும் கலந்து கொள்கின்றனர். அரச, நாட்டுத் தலைவர்கள் என 13 பேரும், 50 மந்திரிகளும் உட்பட மொத்தம் 300 பேர் மாநாட்டில் பங்கு பெறுகின்றனர்.

ஐரோப்பிய அரங்கில் புதிய அமெரிக்க நிர்வாகம் முதல் தடவையாக மூனிச் மாநாட்டில் கலந்துகொள்கின்றது. சர்வதேச நிதிய மற்றும் பொருளாதார நெருக்கடியை தொடர்ந்த மாறுதல்கள், அமெரிக்க அரசாங்கம் ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானத்தில் எதிர்கொள்ளும் பெருகிய பிரச்சினைகள் ஆகியவற்றிற்கு பின்னர் சர்வதேச சக்திகளுக்கு இடையே நடக்கும் முதல் பலப்பரீட்சையும் ஆகும்.

ஓராண்டிற்கு முன் மூனிச்சில் நடைபெற்ற மாநாட்டில், அமெரிக்கப் பாதுகாப்பு மந்திரி ரொபேர்ட் கேட்ஸ் வாஷிங்டனின் நேட்டோ பங்காளிகளை கடுமையாகக் குறைகூறினார். ஆப்கானிஸ்தானை பொறுத்த வரையில், அட்லான்டிக்கிற்கு இடையிலான உறவில் "நியாயமான சுமை பிரித்தல்" வேண்டும் என்ற அழைப்பை கேட்ஸ் கொடுத்து ஐரோப்பிய சக்திகள் "போராடி, உயிர்நீத்தல்" என வரும்போது கூடுதலான தியாகத்திற்கு தயாராக இருக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். இல்லாவிடில் கூட்டுப் பாதுகாப்பு என்பது இயலாது என்றும் "உடன்பாடு இறுதியில் தகர்ந்துவிடும்" என்றும் அவர் கூறினார்.

அந்த நேரத்தில் ஐரோப்பிய சக்திகள் எதுவும் அமெரிக்காவின் ஆக்கிரோஷ போர்க் கொள்கையை எதிர்க்கும் திறனற்று இருந்தன. மாறாக பாரிசும் பேர்லினும் புஷ் சகாப்தத்திற்கு ஒரு விரைவான முடிவு வரும் என்றும் அமெரிக்க வெளியுறவுக் கொள்ளையில் ஒரு புதிய அத்தியாயம் வரும் என்றும் எதிர்பார்த்தன. அமெரிக்க செனட்டர் ஜோசப் லிபர்மான் ஐரோப்பியர்களை அவ்வாறான நம்பிக்கைகளை அதிகமாக வைக்கவேண்டாம் என்றும் கூறினார். ஆப்கானிஸ்தான் போரைப் பொறுத்தவரையில் கேட்ஸ் புஷ் நிர்வாகத்தை மட்டும் பிரதிபலிக்கவில்லை என்றும் "கட்சிசார்பற்ற அமெரிக்க நிலைப்பாட்டை" பிரதிபலிக்கிறார் என்றும் அவர் கூறியிருந்தார். மேலும் ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் நியமனத்திற்கு போட்டியிட்ட ஹில்லாரி கிளின்டன், பாரக் ஒபாமா இருவருமே ஆப்கானிஸ்தானை பொறுத்தவரையில் ஒரே நிலைப்பாட்டைத்தான் கொண்டுள்ளனர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இவ்விதத்தில் லிபர்மானின் கருத்து சரியானதே. ஜனாதிபதி ஒபாமாவும் அவருடைய வெளிவிவகார செயலாளரான ஹில்லாரி கிளின்டனும் ஆப்கானிஸ்தானில் போர் தொடரப்பட வேண்டும் என்று நினைப்பது மட்டும் இல்லாமல், அதைக் கணிசமாக தீவிரப்படுத்தியுள்ளனர். மாறுதல் வரும் என்று உத்தரவாதம் கொடுத்து பிரச்சாரத்தை நடத்திய ஜனாதிபதி ரோபர்ட் கேட்ஸை பாதுகாப்பு மந்திரியாக தக்க வைத்துக் கொண்டுள்ளது மட்டும் இல்லாமல், வெள்ளை மாளிகையில் நுழைந்தபின் அவருடைய முதல் நடவடிக்கைகளில் ஒன்று ஆப்கானிஸ்தானிற்கு கூடுதலாக 10,000 துருப்புக்களை அனுப்பி வைத்தது ஆகும். இன்னும் 20,000 துருப்புக்களை அனுப்ப வேண்டும் என்னும் இவருடைய திட்டம், அப்பகுதியில் அமெரிக்கப் படைகளை இருமடங்கு ஆக்குதல் என்று இருப்பதுடன், பாக்கிஸ்தானிலும் போரை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று உள்ளது.

இந்த ஆண்டு பாதுகாப்பு மாநாட்டில் அமெரிக்கக் குழுவின் அமைப்பு புதிய அமெரிக்க நிர்வாகத்திற்கு ஆப்கானிஸ்தான் போரின் முக்கிய தன்மையை வெளியாக்கும் வகையில் உள்ளது. ஒபாமாவின் புதிய பாதுகாப்பு ஆலோசகர் தளபதி ஜேம்ஸ் ஜோன்ஸ் அமெரிக்க ஐரோப்பிய கட்டுப்பாட்டின் தளபதியாக 2003ல் இருந்து இருந்தவர் (COMUSEUCOM). இவ்விதத்தில் அவர் ஆப்கானிஸ்தானில் நீடித்த சுதந்திரத்திற்கான நடவடிக்கையில் (Operation Enduring Freedom) தொடர்பு பெற்றிருந்த அமெரிக்கத் துருப்புக்கள் மீதும் கட்டுப்பாட்டைக் கொண்டிருந்தார். ஈராக் போரில் அமெரிக்கப் படைகளுக்கு தளபதி டேவிட் பெட்ரீயஸ் தலைமை தாங்கியிருந்தார்; பின்னர் அவர் அமெரிக்க மத்திய கட்டுப்பாட்டின் தலைவராக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நியமிக்கப்பட்டார். ஆப்கானிஸ்தான், பாக்கிஸ்தானிற்கு சிறப்பு ஆலோசகர் என்ற நியமனத்தை ரிச்சர்ட் ஹோல்ப்ரூக் பெறும் நேரத்தில் வெளிவிவகார அமைச்சரான கிளின்டன் உலகத் தலைமையை அளிக்கும் நிலைக்கு அமெரிக்கா மீண்டும் வந்துவிட்டது என்பதை "உரத்தும் தெளிவாகவும்" கூறும் தன்மையை இது பிரதிபலிக்கிறது என்று கூறினார்.

ஆனால் அத்தகைய நிலைமை மாறியுள்ளது. சர்வதேச நிதிய மற்றும் பொருளாதார நெருக்கடிகள், தொடர்ந்த இராணுவப் பின்னடைவுகள் ஆகியவற்றால் அமெரிக்க அரசாங்கம் தன் செல்வாக்கை இழந்துள்ளது. ஐரோப்பிய அரசாங்கங்கள் தங்கள் ஆதரவை கொடுக்க முன்வந்தாலும், தங்கள் ஏகாதிபத்திய நலன்களை முன்னேற்றுவிக்கும் அடிப்படையில்தான் அதைச் செய்யத் தயாராக உள்ளன. இந்த இலக்கிற்காக அவர்கள் சில நிபந்தனைகளைக் கோருகின்றன.

"ஐரோப்பியர்களாகிய நாம் ஒரே குரலில் பேசவேண்டும்" என்ற தலைப்பில் ஜேர்மனிய அதிபர் மற்றும் பிரெஞ்சு ஜனாதிபதி மூனிச் மாநாட்டிற்கு இரு தினங்கள் முன்பு Süddeutsche Zeitung பத்திரிகையில் ஒரு கூட்டறிக்கையை வெளியிட்டுள்ளனர். ஒரு நட்புரீதியான, இராஜதந்திர முறையில் அவர்கள் ஐரோப்பாவில் அமெரிக்க மேலாதிக்க சகாப்தம் இறுதியில் ஒரு முடிவிற்கு வந்துள்ளதாகக் கூறியுள்ளனர் "இன்று எந்த ஒரு நாடும் தனிப்பட்ட முறையில் உலகப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது." என்று தங்கள் அறிக்கையின் தொடக்கத்தில் வலியுறுத்துகின்றனர்; பின் சர்வதேச முறையில் ஏற்கப்பட்ட பாதுகாப்புக் கொள்கை வேண்டும் என்று கோரியுள்ளனர் -- அது "ஒரு பரந்த தன்மையைக் கொண்டிருக்க வேண்டும்" என. கூட்டுப் பகுப்பாய்வுகள், கூட்டு முடிவுகள், மற்றும் கூட்டான நடைமுறை தலையீடுகள் ஆகியவை தேவை என்றும் அவர்கள் கூறியுள்ளனர். "ஒருதலைப் பட்ச நடவடிக்கைகள் கூட்டு உத்வேகத்தை மீறியதாக இருக்கும்" என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

இக்கூட்டு அறிக்கையின் மத்திய முக்கியத்துவம், "ரஷ்யாவுடன் மீண்டும் கூட்டினை நிறுவுதல்" ஆகும். மேர்க்கெலும் சார்க்கோசியும் எழுதுவது: "கடந்த கோடைகாலத்தில் ஜோர்ஜியாவில் நடைபெற்ற போர் ஒரு திருப்பு முனை." அதில் அமெரிக்கா அல்ல ஐரோப்பிய ஒன்றியம்தான் "வன்முறை வெடிப்பை நிறுத்தி போரை நிறுத்தத் தேவையான வழிவகைச் சூழலைக் கொண்டுவர முடிந்தது."

அண்டை நாடு மற்றும் கூட்டாளி என்ற முறையில் ரஷ்யா "எப்பொழுதும் போல் பெரும் முக்கியத்துவத்தை கொண்டுள்ளது". நேட்டோ-ரஷ்ய குழு ஒத்துழைப்பு "ஒரு மத்திய பங்கை" கொண்டுள்ளது, இயன்றளவு தீவிரமாக்கப்பட வேண்டும். "கடந்த கோடை காலத்தில் ஜனாதிபதி மெட்வடேவ் ஐரோப்பிய பாதுகாப்பிற்கு மொத்த மாற்றத் திட்டங்களை கொடுத்தார். ஐரோப்பிய கூட்டாளிகளுள் நாம் இது பற்றி விவாதிக்கத் தயாராக இருக்கிறோம்; அதே நேரத்தில் இதில் தொடர்புடைய அனைத்து நாடுகளின் கருத்துக்களையும் கேட்டறிவோம்" என்று அறிக்கை தொடர்ந்திருந்தது.

நேட்டோ விரிவாக்கம் எதுவும் ரஷ்யாவின் நெருக்க ஒத்துழைப்பு உடன்பாட்டுடன்தான் முடியும். "அதே நேரத்தில் நேட்டோ அங்கத்துவம் என்பது சில அளவுகோல்களுடன் பிணைந்துள்ளது, கணிசமான பொறுப்பை எடுத்துக் கொள்ளும் இயல்பை உடையது." இக்கருத்தின்மூலம் ஜேர்மனிய, பிரெஞ்சு அரசாங்கத் தலைவர்கள் அண்மைக் காலத்தில் உக்ரைன் மற்றும் ஜோர்ஜியா நேட்டோவிற்குள் அனுமதி கொடுக்கப்போவதில்லை என்று விட்டனர்; இதுவரை இது அமெரிக்காவின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.

ஈரானை பொறுத்தவரையில், அறிக்கை கூறுவதாவது: "ஒரு இராஜதந்திர தீர்வு காண்பதில் நாங்கள் தீவிரமாக உள்ளோம்." இந்த சுருக்க அறிக்கையின் பின்னணியில் தெஹ்ரான் மீது இராணுவத் தாக்குதல் எதுவும் கூடாது என்ற நிராகரிப்பிற்கு மேலான கருத்து உள்ளடங்கியுள்ளது. கடந்த காலததில் ஜேர்மனியும் பிரான்ஸும் ஈரானின் இரு முக்கிய வணிகப் பங்காளிகள், இரு நாடுகளும் அமெரிக்கத் தலைமையிலான பொருளாதார தடைகள் ஈரான் மீது சுமத்தப்பட்டதில் பெரும் பாதிப்பிற்கு உட்பட்டவை. பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி இருண்டும் மூனிச்சில் அமெரிக்காவிற்கு இறுதி எச்சரிக்கையை அளிக்கக்கூடும் என்ற தெளிவான அடையாளங்கள் உள்ளன; அதாவது ஆப்கானிஸ்தானில் இவற்றின் படைகள் கூடுதலாக்கப்பட வேண்டும் என்றால் அவற்றிற்கு ஈரானுக்கு எதிரான தடைகள் தளர்த்தப்படல் என்பதின் மூலம் அதற்கு இழப்பீடு கொடுக்கப்பட வேண்டும் என்பதே அது.

ஜேர்மனிய அரசாங்கம் குறிப்பாக ஈரானுக்கு எதிரான தடைகள் கொள்கையில் தளர்த்துதல் வேண்டும் என்று சிறிதுகாலமாக வலியுறுத்தி வந்துள்ளது; உலகத்தில் இரண்டாம் மிகப் பெரிய எரிவாயு இருப்புக்களை ஈரான் கொண்டுள்ளது. சமீபத்தில்தான் ஜேர்மனியின் முன்னாள் அதிபர் ஹெகார்ட் ஷ்ரோடர் (SPD) தெஹ்ரானுக்கு சென்றிருந்தார். தனிப்பட்ட பயணம் என்று விவரிக்கப்பட்டிருந்தாலும், அவருடைய பயணம் ஜேர்மனிய வெளியுறவு அமைச்சரகத்தால் ஒருங்கிணைக்கப்பட்டிருந்தது என்று உறுதியாக்கப்பட்டது. ரஷ்ய எரிவாயு ஜேர்மனிக்கும் ஐரோப்பாவிற்கும் பால்டிக் கடல் வழியே செல்லும் குழாய்த்திட்டத்தை கட்டமைக்கும் நிறுவனம் ஒன்றில் ஷ்ரோடர் தலைவராக உள்ளார். அதே நேரத்தில் அவர் நெருக்கமான பிணைப்புக்களை ஈரானுடன் ஒத்துழைக்க வேண்டும் என்று கருதும் ஜேர்மனிய நிறுவனங்களுடன் கொண்டுள்ளார். ஜனவரிமாத இறுதியில் Financial Times Deutschland க்கு எழுதிய கட்டுரை ஒன்றில், RWE என்னும் ஜேர்மனிய எரிபொருள் பெறுநிறுவனத்தில் தலைமை வகிக்கும் அதிகாரி "ஒரு நீண்ட காலப்போக்கில் ஐரோப்பிய ஒன்றியம் ஈரானுடன் ஒத்துழைப்பு என்ற நிலையை ஒதுக்கி வைக்க இயலாது" என அறிவித்தார்.

இந்த முன்னுரிமைகளை ஒட்டி, மூனிச் பாதுகாப்பு மாநடாட்டின் தலைவரான வொல்ப்காங் இஷிங்கர் மாநாட்டு நடவடிக்கைகளில் முக்கிய ஈரானிய அரசியல்வாதிகள் பங்கு பெறுவதின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளார்; அதில் வெளியுறவு மந்திரி Manoucher Mottaki, பாராளுமன்ற தலைவர் Larijani ஆகியோரும் உள்ளனர். கடந்த 30 ஆண்டுகளாக வெளியுறவு பணியில் செயல்படும் இஷிங்கர் --திட்டம் இயற்றுதலில் தலைமை உட்பட-- அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவின் ஜேர்மனிய தூதராகவும் கடந்த 7 ஆண்டுகளாக இருந்துள்ளார். அனைத்து தரப்புடனும் நல்ல தொடர்பு உடையவர் என்று அவர் அனைராலும் கருதப்படுகிறார்.

இந்த ஆண்டு மூனிச் பாதுகாப்பு மாநாடு சர்வதேச உறவுகளில் ஒரு திருப்புமுனையை பிரதிபலிக்கிறது. அட்லான்டிக் கடந்த அச்சை பல தசாப்தங்களாக மேலாதிக்கம் செலுத்திய அமெரிக்கப் பங்கு இப்பொழுது பல ஐரோப்பிய நாடுகளால் சவாலுக்கு உட்படுகிறது. நீண்ட காலமாக இருந்துவரும் உறவுகள் மறைக்கப்படுகின்றன; புதிய உறவுகள் இன்னும் வளர்ச்சி அடையவில்லை. ஆனால் இராஜதந்திர முறைக்கு கீழே, அட்லான்டிக் இடையிலேயும் ஐரோப்பாவிற்குள்ளேயேயும் பெரிய சக்திகளுக்கு இடையேயும் அழுத்தங்கள் பெருகிய முறையில் வளர்ந்து வருகின்றன. பொருளாதார நெருக்கடி விரைவாகத் தீவிரமாகையில் ஒவ்வொரு நாடும் அதிகரித்தளவில் தமது சொந்த பொருளாதார, அரசியல், இராணுவ நலன்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் வகையில்தான் எதையும் எதிர்கொள்ளுகிறது.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved