World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :ஆசியா : பாகிஸ்தான்

Two US missile strikes in Pakistan in three days kill more than 60

பாகிஸ்தானில் மூன்று நாட்களுக்குள் நடத்தப்பட்ட இரு அமெரிக்க ஏவுகணைத் தாக்குதல்களில் அறுபதுக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர்
By Barry Grey
17 February 2009

Back to screen version

அமெரிக்கா மூன்று நாட்களுக்குள் பாகிஸ்தானில் இரண்டாவது ஏவுகணைத் தாக்குதலை திங்கட் கிழமை நடத்தியது. பாகிஸ்தானினின் வடமேற்கு பழங்குடிகள் பிரதேசமான குர்ரம்மில் தலிபான்களின் பயிற்சி முகாம் போல் தோன்றியதன் மீது சீ.ஐ.ஏ. யின் நான்கு ஆளில்லா விமானங்கள் குறைந்தபட்சம் நான்கு ஹெல்ஃபயர் ஏவுகணைகளை வீசியதையடுத்து 30க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஆப்கானிஸ்தான் எல்லையில் பாகிஸ்தானின் அரை-சுயாட்சி கொண்ட ஏழு பழங்குடிகள் பிரதேசத்தில் ஒன்றான குர்ரம் மீது நடத்தப்பட்ட முதலாவது அமெரிக்கத் தாக்குதல் இதுவாகும். தெற்கு வஸிரிஸ்தான் பழங்குடி மாவட்டத்தில் கட்டிடமொன்றின் மீது சனிக்கிழமை நடாத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலை தொடர்ந்தே திங்கட் கிழமை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சனிக்கிழமை தாக்குதலிலும் குறைந்தபட்சம் 30 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் இந்தியாவுக்குமான ஜனாதிபதி பரக் ஒபாமாவின் விசேட தூதரான ரிச்சர்ட் ஹோல்புருக் பாகிஸ்தானுக்கு விஜயம் செய்து சிலநாட்களுக்குள்ளேயே அடுத்தடுத்து இந்த இரு தாக்குதல்களும் நடத்தப்பட்டுள்ளன. மூன்று நாடுகளுக்குமான விஜயத்தின் ஒரு பாகமாக, பாகிஸ்தான் அரசாங்கத்தின் மற்றும் இராணுவத்தின் உயர்மட்ட அதிகாரிகளை லாஹுரில் புதன் கிழமை ஹோல்புருக் சந்தித்தார். அவரின் பிரதான குறிக்கோள், ஆப்கானிஸ்தானிலும் பாகிஸ்தானிலும் அமெரிக்க இராணுவ வன்முறையை உக்கிரமாக்குவதற்கான வழியை தயார் செய்வதேயாகும்.

பாகிஸ்தான் ஜனாதிபதி அசிஃப் அலி சர்தாரி, வெளியுறவு அமைச்சர் ஷா மஹ்மூட் கியுரேஷி, இராணுவத் தளபதி ஜெனரல் அஷ்ஃபக் கயானி மற்றும் ஏனைய அலுவலர்களையும் ஹோல்புருக் சந்தித்த பின்னர், "பழங்குடிகளின் பிரதேசங்கள் அல் கைதா மற்றும் தலிபான்களின் பாதுகாப்பு அரணாக இல்லாமல் அவை துப்பரவாக இருப்பதை காண அமெரிக்கா விரும்புகிறது" என வலியுறுத்திய ஹோல்புருக், "ஊடுருவல் தடுப்பு நடவடிக்கைகளுக்காக நாட்டுக்கு தேவையான இராணுவத் தளபாடங்களை வழங்க" தயாரானதாக பாகிஸ்தானின் நாளிதழான டோவன் செய்தி வெளியிட்டிருந்தது.

ஆப்கானிஸ்தானின் எல்லைப் பிராந்தியத்தில் தலிபான் மற்றும் அல் கைடா "பாதுகாப்பு அரன்களை" துடைத்துக் கட்டும் இலக்கில் பாகிஸ்தானில் நடத்தப்பட்ட அமெரிக்க ஏவுகணைத் தாக்குதல்கள் தொடர்பாக பாகிஸ்தான் அதிகாரிகள் மீண்டும் மீண்டும் தமது கவலையை வலியுறுத்தியதாக தெரிகிறது. கடந்த ஆகஸ்ட்டில் இருந்து, அரைகுறை மதிப்பீடுகளின் படி, குறைந்தபட்சம் இத்தகைய 38 தாக்குதல்களில் 130 பாகிஸ்தான் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இது அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான் அரசாங்கத்தின் மீதும் வெகுஜன எதிர்ப்பை கிளறிவிட்டுள்ளது. பாகிஸ்தான் அரசாங்கம் இந்தத் தாக்குதல்களை பாகிஸ்தானின் இறைமையை மீறும் செயல் என வெளியில் எதிர்ப்பு காட்டினாலும், அதன் இராணுவமும் புலனாய்வுத் துறையும் சீ.ஐ.ஏ. வுக்கு புலனாய்வு தகவல்களையும் தாக்குதல்களுக்கு வசதியான இலக்குவைக்கும் தகவல்களையும் வழங்கியுள்ளன.

இந்த இரு மிகப் புதிய தாக்குதல்களுடன் சேர்த்து ஒபாமா ஆட்சிக்கு வந்த பின்னர் நான்கு தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இது இஸ்லாமாபாத்தில் உள்ள அரசாங்கத்தை ஆட்டங்காணச் செய்யுமளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை அலட்சியம் செய்து, பாகிஸ்தானில் அமெரிக்க இராணுவத் தலையீட்டை உக்கிரமாக்கும் புதிய நிர்வாகத்தின் எண்ணத்தை தெளிவாக வெளிக்காட்டும் அறிகுறியாகும். இது அடுத்த 18 மாதங்களுக்குள், ஆப்கானிஸ்தானில் அமெரிக்கத் துருப்புக்களின் இருப்பை 60,000 வரை கிட்டத்தட்ட இரட்டிப்பாக்குவதோடு ஒரே இராணுவ மேடையின் பாகமாக ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானையும் நடத்தும் பரந்த திட்டத்தின் பகுதியேயாகும்.

புலனாய்வுதுறைக்கு பொறுப்பான செனட் குழுவின் ஜனநாயக் கட்சி தலைவி செனட்டர் டையன் ஃபெய்ன்ஸ்டீன் கடந்த வாரம் குறிப்பிட்ட விடயம், பாகிஸ்தானுக்குள் யுத்தத்தை விரிவுபடுத்துவதற்கான திட்டங்கள் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளதற்கான ஒரு அறிகுறியாகும். தான் அறிந்த வகையில் அமெரிக்க ஆளில்லா விமானங்கள் "பாகிஸ்தானின் விமானத் தளத்தில் இருந்தே சென்றுள்ளன," என அவர் தெரிவித்திருந்தார். ஒபாமாவின் தேசிய புலனாய்வுத் துறை பணிப்பாளரான ஓய்வுபெற்ற அட்மிரால் டென்னில் சி. பிளேயருடனான விசாரணையின் போதே ஃபெய்ன்ஸ்டீன் இந்த விடயத்தை தெரிவித்தார்.

அப்போது பிளேயர் கருத்துத் தெரிவிக்க மறுத்துவிட்டார். "பாகிஸ்தானில் வெளிநாட்டு தளங்கள் இல்லை" என தெரிவித்த வாஷிங்டனில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தின் பேச்சாளர் ஒருவர் அத்தகைய தளங்கள் இருப்பதை மறுத்தார். எவ்வாறெனினும், ஃபெய்ன்ஸ்டீனின் கருத்து குறித்து செய்தியாளர் மாநாட்டொன்றில் கேட்ட போது, பென்டகன் பேச்சாளரான ஜியொஃப் மொரெல், அத்தகைய தளங்கள் இருப்பதை மறுக்கவில்லை. தன்னால் கருத்து கூற முடியாது என்றும் அத்தகைய தளங்கள் பற்றி தனக்கு தெரியாது என்றும் மட்டுமே அவர் தெரிவித்தார்.

பாகிஸ்தானின் பழங்குடிகள் பிரதேசத்தை இலக்குவைத்த அமெரிக்க ஆளில்லா விமானங்கள் ஆப்கானிஸ்தானுக்குள் இருந்தும், "பாகிஸ்தானில் இஸ்லாமாபாத் மற்றும் ஜகோபாபாத்துக்கும் அருகில் உள்ள தளங்களில் இருந்துமே" ஏவப்பட்டன என வாஷிங்டன் போஸ்ட்டில் 2007 மார்ச் 27 வந்த செய்தியை பற்றியே அவர் குறிப்பிட்டார் என ஃபெய்ன்ஸ்டீனின் அலுவலகம் தெரிவித்தது.

முன்னைய அமெரிக்க ஏவுகணைத் தாக்குதல்கள், வடக்கு மற்றும் தெற்கு வஸிரிஸ்தான் அதே போல் பஜுவார் பழங்குடி பிரதேசங்களில் உள்ள அல் கைடா மற்றும் தலிபான் கட்டிடங்கள் என சொல்லப்படுவதன் மீதே இலக்குவைக்கப்பட்டது. பழங்குடி பிரதேசங்களுக்கு வெளியில் உள்ள பிராந்தியமான பன்னுவிலும் ஒரு தாக்குதல் நடந்தது.

பாகிஸ்தானுக்குள் அமெரிக்க ஏவுகணைத் தாக்குதல்களின் எண்ணிக்கை அதிகரிப்பதானது, அமெரிக்கத் தலைமையிலான ஆப்கானிஸ்தான் ஆக்கிரமிப்பின் இராணுவ பாதுகாப்பு நிலைமை மோசமடைந்து வருவது தொடர்பான, அதேபோல், பாகிஸ்தானுக்குள் அமெரிக்க விரோத மற்றும் அரசாங்க விரோத இஸ்லாமிய கிளர்ச்சியாளர்களின் பலம் அதிகரிப்பது தொடர்பான ஒரு அளவீடாகும்.

லோங் வோர் ஜேர்னல் என்ற இணையத்தின்படி, 2008ல் பாகிஸ்தானில் எல்லையை ஊடுருவி நடத்திய 36 தாக்குதல்கள் பதிவாகியுள்ளன. இவற்றில், 29 தாக்குதல்கள் ஆகஸ்ட்டின் பின்னர் இடம்பெற்றுள்ளன. 2006, 2007 ஆகிய இரண்டு ஆண்டுகளிலும் பத்து தாக்குதல்கள் மட்டுமே பதிவாகியுள்ளன.

திங்களன்று தாக்குதலுக்குள்ளான முகாம், ஆப்கானிஸ்தானின் கோஸ்ட் மாகாணத்தில் இருந்து 15 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. இந்த முகாம், ஆப்கானிஸ்தான் மீதான சோவியத் ஆக்கிரமிப்புக்கு எதிராக, 1980களில் எல்லையின் இரு புறத்திலும் சீ.ஐ.ஏ. நிதி வழங்கி இயக்கி வந்த முஜஹிதீன் கொரில்லா யுத்த காலத்தில் இருந்தே இருந்து வந்தது.

இந்த அமெரிக்கத் தாக்குதல், பாகிஸ்தானின் கராச்சி துறைமுகத்தில் இருந்து நாட்டின் வடமேற்கில் உள்ள கைபர் மலைப்பகுதியூடாக ஆப்கானிஸ்தானுக்குள் செல்லும், பிரதான அமெரிக்க மற்றும் நேட்டோ தரைமார்க்க விநியோகப் பாதை மீது மேலும் மேலும் முனைப்புடன் விளைபயனுள்ள வகையில் தாக்குதல் நடத்திவரும், குர்ரம்மில் உள்ள தலிபான் படைகளை பலவீனமாக்குவதை இலக்காக் கொண்டதாகும்.

இலக்குவைக்கப்பட்ட பக்கன் கிராமத்தில் வசிப்பவரான ரெஹ்மன் உள்ளாஹ், தாக்குதலுக்கு முன்னர் ஆளில்லா விமானங்களை ஆகாயத்தில் கண்டதாகவும் பின்னர் இடிபாடுகளுக்குள் இருந்து 30 சடலங்கள் தோண்டியெடுக்கப்பட்டதை கண்டதாகவும் தெரிவித்தார்.

உலகின் விலையுயர்ந்த எண்ணெய் மற்றும் இயற்கை வாயு வளங்களின் இருப்பிடமான மத்திய ஆசியா மீதான அமெரிக்காவின் ஆதிக்கத்தை தக்கவைத்துக் கொள்வதன் பேரில் முன்னெடுக்கப்படும் ஆப்கானிஸ்தான் மீதான அமெரிக்க படையெடுப்பும் ஆக்கிரமிப்பும், பிராந்தியத்தை பரந்தளவில் ஸ்திரமற்றதாக்கியுள்ளதோடு அமெரிக்காவுக்கும் அதன் போட்டி சக்திகளுக்கும் -குறிப்பாக சீனா மற்றும் ரஷ்யா- இடையில் பதட்ட நிறைமைகளையும் அதிகரிக்கச் செய்துள்ளது. ஏழு ஆண்டுகளுக்கும் மேலான இராணுவ வன்முறை மற்றும் அடக்குமுறையின் பின்னர், அமெரிக்க ஆக்கிரமிப்புக்கும் காபுலில் உள்ள வாஷிங்டனின் பொம்மை அரசாங்கத்திற்கும் எதிரான கிளர்ச்சியின் பலமானது, 2001 அக்டோபரில் அமெரிக்க படையெடுப்பின் மூலம் அதிகாரத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட தலிபான், ஆப்கானிஸ்தானின் பெரும் பகுதிகளை கட்டுப்படுத்துமளவுக்கு வளர்ச்சி கண்டுள்ளது.

ஜனாதிபதி ஹமிட் கர்ஸாயுடன் பேச்சுவார்த்தை நடத்த ஹோபுருக் காபுலுக்கு வருவதற்கு ஒரு சில நாட்களுக்கு முன்னர்தான், தலிபான்களால் நடத்தப்பட்ட ஒரேமாதிரியான தாக்குதல்களில் காபூலின் மையப் பகுதியில் குறைந்தபட்சம் 26 பேர் கொல்லப்பட்டதோடு 57 பேர் காயமடைந்தனர். கர்ஸாய் அரசாங்கமோ அல்லது அதை ஆட்சியில் வைத்திருக்கும் 70,000 அமெரிக்க மற்றும் நேட்டோ படைகளோ, தலைநகரம் உட்பட ஏறத்தாழ நாட்டின் எந்தவொரு பகுதியிலும் பாதுகாப்பை பேண இலாயக்கற்றுள்ளது என்ற உண்மையை இந்தத் தாக்குதல்கள் வெளிப்படுத்தியுள்ளன.

நூற்றுக்கணக்கான ஆப்கான் பொதுமக்களை கொன்ற அமெரிக்க விமானத் தாக்குதல்கள் பற்றி அடிக்கடி வெளிப்படையாக விமர்சனங்களை வெளியிட்ட கர்ஸாய் தொடர்பாக தனது வளர்ச்சி கண்டுவரும் அதிருப்தியை ஒபாமா நிர்வாகம் சமிக்ஞை செய்துள்ளது. வாஷங்டன் தனது பொம்மை ஆட்சியாளரை மாற்றி புதிதாக யாரையாவது நியமிக்கலாம் என்ற ஊகம் அதிகரித்து வருகின்றது.

பாகிஸ்தானிலும் பாதுகாப்பு நிலைமை சீரழிந்துவருவதாகத் தெரிகிறது. வடமேற்கு பழங்குடிகள் மாவட்டங்களின் பெரும் பகுதிகளை இஸ்லாமியக் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் கொண்டிருப்பதோடு, போராளிகளை ஒழித்துக்கட்ட பாகிஸ்தான் இராணுவம் தவறியுள்ளது தொடர்பாக அமெரிக்காவுக்கும் இஸ்லாமாபாத்துக்கும் இடையில் பதட்டங்கள் அதிகரித்துள்ளன. பாகிஸ்தான் ஜனாதிபதி சர்தாரி, சீ.பி.எஸ். தொலைக்காட்சியின் "60 நிமிடங்கள்" என்ற நிகழ்ச்சியில் ஞாயிற்றுக் கிழமை ஒளிபரப்பான ஒரு ஆசாதாரணமான பேட்டியில், தலிபான்கள் தம்முடைய இருப்பை பாகிஸ்தானில் "பிரமாண்டமான அளவு" விரிவுபடுத்தியுள்ளதோடு அரசைக் கைப்பற்றுவதிலும் கண்வைத்துள்ளனர், எனத் தெரிவித்தார். "நாங்கள் பாகிஸ்தானை காப்பாற்ற போராடிக்கொண்டிருக்கின்றோம்," என அவர் கூறினார்.

தலிபான்களின் கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ள ஒரு பிரதேசம் ஸ்வாட் பள்ளத்தாக்காகும். இது ஒரு காலத்தில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் மையமாக இருந்தது. வடமேற்கு எல்லை மாகாணத்தில் உள்ள மல்கான்டின் ஒரு பகுதியாக உள்ள இந்த பிராந்தியத்தின் மீது 2007ல் தலிபான்கள் தாக்குதல் நடத்தி, அதிலிருந்து கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றனர்.

கடந்த கோடையில் இருந்து, 12,000 பாகிஸ்தான் அரசாங்க துருப்புக்கள் சுமார் 3,000 போராளிகள் கொண்ட தலிபான் படைகளுக்கு எதிராக ஸ்வாட் பிரதேசத்தில் கடுமையான இராணுவ நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றன. ஆனால் அரசாங்கத்தின் தாக்குதல்கள் சேற்றில் சிக்கியதோடு தலிபான்களை விரட்டத் தவறியது.

பிராந்திய அரசாங்கம், இராணுவ நடவடிக்கைகளை தற்காலிகமாக தள்ளிவைப்பதோடு மல்காண்ட் பிராந்தியம் இஸ்லாமிய அல்லது ஷர்யா சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்ற ஸ்வாட்டில் உள்ள தலிபான்களின் பிரதான கோரிக்கைக்கு இணங்குவதாக திங்களன்று ஜனாதிபதி சர்தாரியின் ஆதரவுடன் அறிவித்தது. இந்த நகர்வு, மத்திய அரசாங்கத்தின் தோல்வியாகவும் பலவீனத்தின் அறிகுறியாகவும் பரந்தளவில் கருதப்பட்டது.

அமெரிக்கா, இஸ்லாமிய கிளர்ச்சிக்காரர்களுடன் யுத்தநிறுத்தம் செய்ய இஸ்லாமாபாத் முன்னர் எடுத்த முயற்சிகளை எதிர்த்ததோடு, எல்லைப் பிராந்தியங்களில் இஸ்லாமிய படைகளுக்கு எதிரான பாகிஸ்தானின் இராணுவ நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட வேண்டும் என்ற ஹோல்புருக்கின் கோரிக்கைக்கு முரணாக, திங்கட் கிழமை அறிவிக்கப்பட்ட உடன்பாடு தொடர்பாகவும் அதிருப்தியை சமிக்ஞை செய்துள்ளது.

"எதிர்மறையான அபிவிருத்தி என்பதற்கு மாறாக இதை வேறு வகையில் நோக்குவது கடினம்" என திங்கட் கிழமை பாதுகாப்பு திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்தார். ஹோல்புருக் இந்தியாவில் பேசும் போது, யுத்த நிறுத்தம் பற்றிய விடயத்தை அணுகாவிட்டாலும், வாஷிங்டனின் எதிர்ப்பை சுட்டிக்காட்டினார். ஸ்வான் பிரதேசத்தில் தலிபான்களின் எழுச்சி, "எமது தலைமைத்துவம், எங்களது தலைநகரங்கள் மற்றும் எமது மக்களுக்கு நேரடியாக அச்சுறுத்தல் விடுக்கும் ஒரு எதிரியை" அமெரிக்கா, பாகிஸ்தான் மற்றும் இந்தியாவும் எதிர்கொள்கின்றது என்பதை நினைவூட்டுவதாகும் என அவர் தெரிவித்தார்.

இது இரத்தக் களரி மோதலொன்றுக்குள் முழு மத்திய ஆசியாவையும் மூழ்கடிக்க அச்சுறுத்தும் அமெரிக்க இராணுவ விரிவாக்கத்தின் சங்கேத மொழியாகும்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved