World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு

Reports reveal devastation wreaked by Israeli military in Gaza

காசாவில் இஸ்ரேல் இராணுவத்தால் ஏற்பட்ட பேரிழப்புகளை செய்திகள் வெளிபடுத்திக் காட்டுகின்றன

By Patrick O'Connor
20 January 2009

Back to screen version

கடந்த மாதம் தொடங்கப்பட்ட இஸ்ரேல் இராணுவத்தின் ஒடுக்குமுறைக்கு பின்னர், காசாவில் தற்போது நிலவி வரும் போர்நிறுத்தத்தால் (குறைந்தபட்சம் தற்காலிகமாகவாவது) பல சர்வதேச பத்திரிகையாளர்கள் முதன்முறையாக பாலஸ்தீனிய மாகாணங்களுக்குள் தற்போது நுழைய முடிகிறது. ஆரம்பத்தில் கிடைத்த தகவல்கள், இஸ்ரேலின் ஆயுதந்தாங்கிய துருப்புகளால் பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட மோசமான சீரழிவுகளை எடுத்துக்காட்டின. குறைந்தபட்சம் 5,000 வீடுகள் அழிக்கப்பட்டுள்ளன; 20,000த்திற்கு மேலான வீடுகள் நாசமாக்கப்பட்டுள்ளன. நகர்புறத்தின் பல மையங்கள் வெறும் இடுபாடுகளாக மாறிவிட்டன. பல்வேறு ஆலைகள் மற்றும் விவசாய மையங்களைக் கொண்டிருந்த காசாவின் குறைந்தளவிலான சமூக கட்டமைப்பும் பெருமளவில் அழிக்கப்பட்டிருக்கின்றன.

இஸ்ரேலின் இராணுவ தாக்குதலானது ஹமாஸின் ஏவுகணைகளுக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பு பதிலடி தான் என்றும், அவற்றான தாக்குதலிலும் பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருக்க மிகுந்த சிரத்தை எடுத்துக் கொள்ளப்பட்டதாகவும் கூறும் இஸ்ரேல் அரசாங்கத்தின் பொய்களை காசாவில் இருந்து கிடைக்கும் தகவல்கள் வெளிச்சமிட்டு காட்டுகின்றன. அந்த தாக்குதல் உண்மையில் ஒரு யுத்த குற்றமாகும். இது பாலஸ்தீனிய மக்களை அதைரியப்படுத்தவும், மிரட்டவும், அதன் மூலம் நடத்தப்பட்டு வரும் இஸ்ரேலின் ஆக்கிரமிப்புக்கான அனைத்து எதிர்ப்புகளையும் ஒடுக்கவும் நோக்கம் கொண்ட ஒட்டுமொத்த தண்டனைக்கான ஒரு நடவடிக்கையாகும். இந்த சியோனிச நாடு சந்தேகத்திற்கு இடமின்றி ஈரான், சிரியா, லெபனான் மற்றும் அதன் விரிவாக்கும் மூலோபாயத்திற்கு எதிராக உள்ள பிற முக்கிய எதிர்ப்பாளர்களுக்கும் ஓர் எச்சரிக்கை விடுக்க விரும்பியது.

காசாவிலுள்ள பத்திரிகையாளர்கள், பேரழிவை தெளிவாக விளக்க போதிய ஆதாரங்களையும், வரலாற்று மாதிரிகளையும் கண்டறிய போராடினார்கள். காசா நகரிலிருந்து, Reuter இன் டக்ளஸ் ஹாமில்டன் எழுதியதாவது: "ஒரு கடுமையான பூகம்பம் தாக்கியது போன்று, இழப்புகள் ஒட்டுமொத்தமாக இருந்தது. ஆனால் இதுவொரு இயற்கை பேரழிவு இல்லை... ஒருசமயம் பெருமையுடன் சிறப்பாக இருந்த நகர்புறங்களில் பயணம் செய்து பார்க்கும்போது, ஏதோ இரண்டாம் உலக யுத்த பேரழிவின் ஓர் இருண்ட காட்சி போல் யுத்தகளத்தின் ஒரு முனையாக அது மாற்றப்பட்டிருக்கிறது."

அசோசியேடெட் பிரஸ் குறிப்பிட்தாவது: "இந்த பேரழிவில் சில பகுதிகளின் தெருக்கள் சந்திரனின் நிலப்பகுதி போன்று மாற்றப்பட்டு விட்டது."

மனித உரிமைகளுக்கான பாலஸ்தீனிய மையத்தின் இணை இயக்குனர் ஜபீர் விஷாஹூடன் பைனான்சியல் டைம்ஸ் பேசியது. அணுசக்தி அழிவு குறித்த ஒரு திரைப்படத்தை குறிப்பிட்டு, "இது The Day After என்ற திரைப்படத்தை எங்களுக்கு நினைவுபடுத்துகிறது" என்று தெரிவித்த அவர், "மக்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளார்கள்." என்றார்.

குறிவைத்து தாக்கப்பட்டவைகளில் பாலஸ்தீனிய சுயாட்சியின் எந்த வடிவத்துடனும் தொடர்புடைய கட்டிடங்களும், இடங்களும் தாக்கப்பட்டிருந்தன. நகரத்தின் போலீஸ் தலைமையகங்கள், பாலஸ்தீனிய வங்கி கட்டிடம், முக்கிய பல்கலைக்கழகம் மற்றும் பல மசூதிகள் போன்றே காசா நகரத்தில் இருந்த பாராளுமன்றமும், கேபினட் கட்டிடங்களும் அழிக்கப்பட்டிருந்தன. இஸ்ரேலிய பீரங்கிகளும், குண்டுவீச்சு வாகனங்களும் பல ஏக்கர் ஒலிவ் மற்றும் பழத்தோட்டங்களையும் நாசமாக்கிவிட்டன. முக்கிய விற்பனை மையங்கள் மற்றும் சந்தைகளும் தாக்கப்பட்டன. காசாவில் முன்பு இயங்கி வந்த பல சிறிய தொழிற்சாலைகளும் குறி வைக்கப்பட்டன. "காசாவின் சிமெண்ட் அடைக்கும் ஆலையும் கூட தற்போது மிக மோசமாக சேதமடைந்துள்ளது. அதன் கோபுரம் நிலையில்லாமல் சாய்ந்துவிட்டிருக்கிறது." என்று அறிவித்த அசோசியேடெட் பிரஸ், "இஸ்ரேலிய பீரங்கிகளால் தாக்கப்பட்ட Owner's villa, ஸ்வீடனின் வெண்ணெய் போல காட்சி அளிக்கிறது." என்று குறிப்பிட்டது.

நிறைய எண்ணிக்கையிலான அடுக்குமாடி கட்டிடங்கள் உட்பட, குடியிருப்போர் பகுதிகளும் மிக மோசமாக நாசமாக்கப்பட்டன என்பதுடன் பல இடங்களில் சிறுபீரங்கிகளாலும், குண்டுகளாலும் முற்றிலுமாக அழிக்கப்பட்டன. சுமார் 50,000த்திற்கும் மேலான பாலஸ்தீனியர்கள் வீடு இழந்து இருப்பதாகவும், 50 அவசரகால முகாம்களில் அவர்கள் கூட்டம் கூடுவதாகவும் ஐக்கிய நாடுகள் சபை குறிப்பிட்டது. இஸ்ரேல் தாக்குதலால் வீடு இழந்த மக்களின் துல்லியமான எண்ணிக்கை, பாதிப்பின் முழு அளவும் தெரியவரும்போது மேலும் அதிகரிக்க கூடும். பாலஸ்தீனிய மத்திய புள்ளிவிபர அமைப்பால் வெளியிடப்பட்ட ஒரு தொடக்க கணிப்பின்படி, குறைந்தபட்சம் 1.9 பில்லியன் டாலர் மதிப்பிலான கட்டமைப்புகள் பாதிக்கப்பட்டிருக்கலாம்.

Reuters குறிப்பிட்டதாவது: "நகரசபை இயந்திரங்கள், நசுங்கிய கார்களையும், உடைந்து விழுந்திருந்த கட்டிட இடிபாடுகளையும் தெருக்களில் இருந்து வெளியேற்றின, ஆனால் இஸ்ரேல் இராணுவ இயந்திரத்தால் ஏற்படுத்தப்பட்ட பேரழிவின் அளவை எதுவும் மூடி மறைக்க முடியாது. 'சில மக்கள் தாங்கள் எங்கு வாழ்ந்தோம் என்று தங்களின் இடங்களை கூட கண்டறிய முடியவில்லை,' என வடக்கு நகரமான பெயிட் லஹியாவில் இருந்து ஒரு போலீஸ்காரர் தமது கமாண்டருக்கு ரேடியோவில் தகவல் அளித்து கொண்டிருந்தார்."

இஸ்ரேலிய துருப்புகளின் இனவாத தாக்குதலால் குண்டுவீசி தாக்கப்பட்ட அடுக்குமாடி கட்டிடங்கள் மற்றும் மசூதிகள் குறித்து பல பத்திரிகையாளர்கள் குறிப்பிட்டார்கள். காசா நகரத்தின் Zeitoun மையப்பகுதியில் இருக்கும் ஒரு மசூதியில் "ஹமாஸ் கீழானவர்கள்" என்று ஹீப்ரூவிலும், "ஹமாஸ் இறந்துவிட்டார்கள்" என்று ஆங்கிலத்திலும் எழுதப்பட்டிருந்தது. "அரேபியர்கள் சாகடிக்கப்பட வேண்டும்", "அரேபியர்களின் காலம்: 1948 முதல் 2009" என்பது உட்பட அண்மையில் இருந்த வீட்டில் வாக்கியங்கள் எழுதப்பட்டிருந்ததாக The Guardian குறிப்பிட்டிருந்தது. இதுபோன்ற வசைச்சொற்கள், இஸ்ரேல் பாதுகாப்பு படைகளுக்குள் விதைக்கப்பட்டிருக்கும் பாசிச உணர்வுகளுக்கான சான்றாக உள்ளன.

தற்போது பாலஸ்தீன மக்கள் எதிர்கொண்டு வரும் இந்த மனிதாபிமான நெருக்கடியானது, காசாவின் தண்ணீர் மற்றும் மின்சார வினியோக அமைப்பை குறிவைத்த இஸ்ரேலின் தாக்குதலினால் மேலும் மோசமாக்கப்பட்டுள்ளது. காசா நகர மக்கள் தொடர்ந்து தீபங்களை பயன்படுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளர் என்பதுடன் கரடுமுரடான சாலைகளின் ஓரங்களில் பானைகள் வைத்து சமைக்க வேண்டிய நிலைக்கு ஆளாகி உள்ளனர்.

யுத்தத்திற்கு முன்னர் கூட, இஸ்ரேலின் முற்றுகையால் தண்ணீர் மற்றும் மின்சக்தி கட்டமைப்பு ஏற்கனவே பாதிக்கப்பட்டிருந்தது. அங்கிருந்த முக்கிய மின்உற்பத்தி நிலையம் சில நேரங்களில் மட்டுமே செயல்பட்டு வந்தது போன்றே எண்ணெய் பற்றாக்குறையால் தண்ணீர் பம்புகளும் பாதிக்கப்பட்டிருந்தன. இந்த இராணுவ தாக்குதல் ஆறு முக்கிய தண்ணீர் கிணறுகளை நாசமாக்கி உள்ளது அல்லது அழித்துவிட்டது. இது காசாவின் 1.4 மில்லியன் மக்களில் மேலும் 200,000 மக்களுக்கு தண்ணீர் வினியோகத்தை தடுத்துவிட்டதாக குடிநீர் வினியோக ஆணையத்தின் மூத்த அதிகாரி ஒருவர் குறிப்பிட்டதை வாஷிங்டன் போஸ்ட் மேற்கோள் காட்டி இருந்தது. 400,000 காசா மக்கள் ஓடும் நீரை பெற முடியாமல் இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை குறிப்பிட்டது. காசா நகரில், உயர்அழுத்த மின்சார கம்பிகள் உட்பட, 80 சதவீத மின்சார கம்பிகள் நாசமாக்கப்பட்டு விட்டன. நீர் மற்றும் மின்சார சேவைகளை சரி செய்வதற்கு பல வாரங்கள் ஆகும், அதுவும் தேவையான பாகங்கள் மற்றும் சாதனங்களை உள்ளே கொண்டு வர இஸ்ரேல் அனுமதித்தால் மட்டுமே நடக்கும் என்று பாலஸ்தீனிய தொழில்நுட்ப வல்லுனர்கள் தெரிவித்தனர்.

பாலஸ்தீன மக்கள் மீது நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதல்கள், இஸ்ரேலிய இராணுவ தாக்குதலின் காட்டுமிராண்டித்தனத்தைத் தான் அடிக்கோடிட்டு காட்டுகிறது. நூற்றுக்கணக்கான குழந்தைகள் உட்பட, குறைந்தபட்சம் 1,300 மக்கள் கொல்லப்பட்டனர். பல குடும்பங்கள் தங்களின் வீடுகளாகவும், தொழிலிடங்களாகவும் இருந்த இடிபாடுகளுக்கு இடையில் உடல்களை வெளியில் எடுத்து வருவதால், இந்த எண்ணிக்கை மேலும் உயரக் கூடும்.

5,300 மக்கள் காயமடைந்துள்ளதாகவும், அதில் பலர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் கணக்கிடப்பட்டுள்ளது. உடல் உறுப்பு இழந்தவர்களின் எண்ணிக்கை உயர் விகிதத்தில் அசாதாரணமாக இருப்பதாக காசாவிலுள்ள மருத்துவர்கள் தெரிவித்தனர். தெற்கு காசாவின் கான் யூனீஸ் நகரில் Medecins du Monde அமைப்பைச் சேர்ந்த ஒரு ஜேர்மன் மருத்துவர் Dr. Jan Brommundt அல் ஜஜீராவிடம் கூறுகையில், தாம் பார்த்த காயங்கள் "மிகவும் கோரமாக" இருந்ததாக தெரிவித்தார். பாதிக்கப்பட்டவர்களில் பலர், அவர்களின் இரண்டு கால்களையும் இழந்திருந்திருந்ததாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்ததாக அவர் குறிப்பிட்டார். இது, இஸ்ரேலிய இராணுவம் Dense Inert Metal Explosives (Dime) வெடிகுண்டுகளை பயன்படுத்தி இருக்குமோ என்ற சந்தேகத்தை அதிகரிக்கிறது. ஒரு பரிசோதனைக்குரிய வெடிகுண்டு சாதனமான இந்த Dime வெடிகுண்டு, நுண்மையாக வெடித்து தெறிக்க கூடிய வகையில் செயல்படும் மின்னூட்டம் பெற்ற டங்க்ஸ்டன் துகள்களை வெளியேற்ற கூடியது. இது நான்கு மீட்டர் சுற்றுவட்டத்தில் உள்ள அனைத்தையும் எரித்து அழித்துவிடக்கூடியதாகும்.

குடல்வால் நோய் போல் காணப்படும் கூரிய அடிவயிற்றுடன் பாதிக்கப்பட்டவர்களை ஒரு மணி நேரத்திலிருந்து ஐந்து மணி நேரத்திற்குள் கொண்டு வர வேண்டும். ஆனால் அவர்களுக்கு அறுவை சிகிச்சை தேவைப்படும். அதில் அவர்களின் அனைத்து சுரப்பிகளிலும் பல நுண்ணிய துகள்களைக் காண முடியும்." என்று Dr. Brommundt விளக்கினார். "அனைத்து சுரப்பிகளிலும் ஊடுருவும் சுமார் 1x1 அல்லது 2x1 மில்லிமீட்டர்களை சுற்றி சிறிய துகள்களை பரப்பும் ஒரு வகையான வெடிகுண்டு அல்லது பீரங்கிகுண்டாக அது தோன்றுகிறது. இந்த நுண்ணிய காயங்களை அறுவை சிகிச்சைகளால் கூட உங்களால் சரி செய்ய முடியாது." என்று அவர் தெரிவித்தார்.

மற்றொரு மருத்துவரும் இந்த தகவல்களை உறுதிப்படுத்தினார். இஸ்ரேலிய தாக்குதலின் போது வடக்கு காசாவிலுள்ள அல்-ஷிஃபா மருத்துவமனையில் பணியாற்றி வந்த ஒரு நார்வே மருத்துவர் Dr. Erik Fosse அல் ஜசீராவிடம் கூறுகையில், இரட்டை உறுப்பு ஊனங்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்களவில் அதிகமாக இருந்தன என்று தெரிவித்தார். "பெருமளவிலான உறுப்பு இழப்புகளையும், உடலின் கீழ்பாகங்கள் கிழிந்திருப்பதையும் எங்களால் பார்க்க முடிந்ததால், அவர்கள் Dime ஆயுதத்தைப் பயன்படுத்தி இருப்பார்களோ என்று சந்தேகிக்கிறோம்." என்றார். "ஒரு Dime சாதனத்திலிருந்து எழும் அழுத்த அலை தரைமட்டத்தில் இருந்து மேலே எழுகிறது. அதனால் தான் பெருமளவிலான நோயாளிகள் உடலின் கீழ் பாகங்களிலும், அடிவயிற்றிலும் காயப்பட்டிருக்கிறார்கள்... பிரச்சனை என்னவென்றால், நான் பார்த்ததில் பெரும்பான்மை நோயாளிகள் குழந்தைகள் தான். அவர்கள் (இஸ்ரேலியர்கள்) துல்லியமாக செயல்பட முயற்சித்திருந்தார்கள் என்றால், இந்த ஆயுதங்கள் குழந்தைகளை தான் குறி வைத்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது." என்றார்.

இஸ்ரேல், அதன் தாக்குதலின் போது யுத்த குற்றங்களில் ஈடுபட்டதற்கான தகவல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. காசாவின் மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதிகளில் வெள்ளை பாஸ்பரஸ் வெடிமருந்து கலவைகளை பயன்படுத்தியதென்பது, மூடத்தனமானதும் சட்டத்திற்கு புறம்பானதாகும் என்று Amnesty International நேற்று தெரிவித்தது. பொருட்களை ஒளிர செய்வதற்காக மட்டுமே பாஸ்பரஸ் பயன்படுத்தப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்திருந்தது, ஆனால் எரியூட்டும் மற்றும் அரிக்கும் பொருட்களும் இரசாயன ஆயுதமாக பயன்படுத்தப்பட்டிருந்ததற்கான ஆதாரங்களை Amnesty கண்டறிந்தது.

முனைகளில் யூரேனியம் கொண்ட பீரங்கிகளும், குண்டுகளையும் இஸ்ரேலிய இராணுவம் பயன்படுத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. "காசா பகுதியில் இஸ்ரேலினால் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களில் யுரேனியம் இருந்ததா என்பதை கண்டறிய, ஒரு கதிரியக்க மற்றும் நேரடி கள மதிப்பீடு செய்ய வேண்டும்" என்ற வலியுறுத்தலுடன் சர்வதேச அணுசக்தி அமைப்பின் இயக்குனர் ஜெனரல் மொஹமது அல்பராடிக்கு அரேபிய தூதர்கள் நேற்று ஒரு கடிதம் அனுப்பினார்கள்.

இஸ்ரேலிய அதிகாரிகளின் கருத்துப்படி, அமெரிக்க ஜனாதிபதியாக பராக் ஒபாமா பதவி ஏற்கும் போது, காசாவிலிருந்து தரைப்படைகள் விலக்கி கொள்ளப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நம்பிக்கையற்ற அரசியல் கணக்குகள், போர்நிறுத்தம் வலிமையற்று இருப்பதைத் தான் குறிக்கின்றன. புதிய இராணுவ நடவடிக்கை சில காலங்களுக்கு மட்டும் தான் இருக்கும் என்ற அச்சுறுத்தல் ஏற்கனவே இஸ்ரேலிய அரசியல் மற்றும் இராணுவ அமைப்புகளுக்குள் இருந்து வருகிறது. ஞாயிறன்று எதிரணியான Likud தலைவர் Binyamin Netanyahu, "இராணுவம் ஹமாஸிற்கு பலத்த அடியைக் கொடுத்துள்ளது. ஆனால் துரதிஷ்டவசமாக இன்னும் வேலை முழுவதும் முடிந்துவிடவில்லை" என்று தெரிவித்தார்.

காசா மீதான ராக்கெட் தாக்குதலானது, அப்பிராந்தியத்தில் இஸ்ரேலின் எல்லை தாண்டிய தாக்குதலுக்கு, முக்கியமாக ஈரான் மீதான ஒரு தாக்குதலுக்காக அதற்கு போலிக்காரணத்தை அளிக்க கூடிய அபாயம் அங்கு நிலவுகிறது. பாலஸ்தீனிய மாகாணங்களுக்குள் நீண்ட தூர ஏவுகணைகளை கடத்தி செல்ல தெஹ்ரான் திட்டமிடுவதாக Jerusalem Post மற்றும் Haaretz இரண்டும் இன்று செய்திகள் வெளியிட்டன. ஆனால் இந்த தகவலுக்கான எந்த ஆதாரத்தையும் இரண்டு பத்திரிகைகளுமே அளிக்கவில்லை. ஆனால் அதற்கு மாறாக, இந்த கதைகள் இஸ்ரேலிய புலனாய்வு-இராணுவ ஆலைகளுடையது என்பதை குறிப்பிட்டு "புலனாய்வு தகவல்கள்" என்று மேற்கோள் காட்டியிருந்தன.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved