World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Notes on the political and economic crisis of the world capitalist system

Perspective and tasks of the Socialist Equality Party in 2009

உலக முதலாளித்துவ முறையின் அரசியல், பொருளாதார நெருக்கடி பற்றிய குறிப்புக்கள்

2009ம் ஆண்டில் சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோக்கும் பணிகளும்

By David North and Joe Kishore
13 January 2009

Back to screen version

ஜனவரி 10ம் தேதி மிச்சிகனிலுள்ள அன் ஆர்பரில் நடைபெற்ற சோசலிச சமத்துவக் கட்சியின் மிட்வெஸ்ட் அங்கத்தவர் கூட்டத்தில் அளிக்கப்பட்ட அறிக்கையை கீழே காணலாம். டேவிட் நோர்த் சோசலிச சமத்துவக் கட்சியின் தேசிய தலைவர் ஆவார். ஜோசப் கிஷோர் சோசலிச சமத்துவக் கட்சியின் தேசிய செயலாளர் ஆவார்.

1. 2009ம் ஆண்டினுள் மனிதகுலம் அடியெடுத்து வைத்திருக்கும் சூழ்நிலைகளானது, ஒரு புதிய நூற்றாண்டின் ஆரம்பத்தில் இருந்த சமாதானம், செழிப்பு என்ற புதிய தசாப்தத்தின் போலித் தோற்றங்களை கடுமையாக நிராகரித்திருக்கின்றன. உலகம் முழுவதும் ஒரு பொருளாதார நெருக்கடியினால் சூழப்பட்டுள்ளது; இது விரைவாக ஒரு வரலாற்றுப் பேரழிவு பரிமாணங்களை எடுக்கிறது. பெருகிய முறையிலான பொருளாதாரச் சீரழிவிற்கு இடையில், ஏகாதிபத்திய சக்திகளின் செயல்பாடு ஒரு வெளிப்படையான குற்றம் சார்ந்த தன்மையை கொண்டிருக்கிறது. காசா பகுதியில் பாதுகாப்பற்ற மக்கள் மீது இஸ்ரேலிய குண்டுகளும், பீரங்கிகளும் அழிவைப் பொழிகின்றன. இது குவர்னிகா மற்றும் வார்சோ குடியிருப்புகளில் நடத்தப்பட்ட பாசிசக் கொடுமைகளைத்தான் நினைவிற்கு கொண்டு வருகிறது. கணக்கிலடங்கா ஈராக்கியர்கள் மற்றும் ஆப்கானிஸ்தானியர்களின் படுகொலைகளில் ஈடுபட்டுள்ள இதே அமெரிக்க ஏகாதிபத்தியம், இஸ்ரேலிய ஆட்சியின் குற்றங்களுக்கு முழுமனதுடன் ஒப்புதலை அளிக்கிறது. 1930களை, கவிஞர் ஆடென் "இழிவான, நேர்மையற்ற" தசாப்தம் என்று விவரித்துக் கூறியுள்ளது 21ம் நூற்றாண்டின் முதல் தசாப்தத்திற்கும் சிறிதும் குறையாமல் பொருந்தும். ஆயினும் கூட, அரசியல் போலித் தோற்றங்களை இழப்பது என்பது அறிவை அடைவதற்கு அடிப்படை முன் தேவையாகும். புதிய நூற்றாண்டின் ஆரம்ப ஆண்டுகளின் அனுபவம், வரலாறு (அதாவது, முதலாளித்துவம், ஏகாதிபத்தியம் ஆகியவற்றிற்கு எதிரான வர்க்கப் போராட்டம்) என்பது முடிந்துவிட்டது என்று கூறப்பட்ட வெற்றுக் கூற்றை நிராகரிக்கிறது. மாறாக, பெருகிய முறையில் தொழிலாள வர்க்கம் அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் ஒரு புதிய புரட்சிகர போராட்டங்களின் சகாப்தத்தினுள் நுழைகிறது என்பது தெளிவாகிறது.

2008ம் ஆண்டு உடைவு

2. சரியாக ஓராண்டிற்கு முன்பு 2008ம் ஆண்டு "உலக முதலாளித்துவ அமைப்பின் பொருளாதார, அரசியல் நெருக்கடி கணிசமாக தீவிரமடைவதை உலகம் காணும்" என்று சோசலிச சமத்துவக் கட்சி கூறியது. கடன் நெருக்கடி பெருகியதின் தாக்கங்களை பகுப்பாய்ந்த முறையில், சோசலிச சமத்துவக் கட்சி, "உலக நிதியச் சந்தைகளில் இருக்கும் கொந்தளிப்பானது, ஊகமுறையின் ஒரு தற்காலிக கீழ்நோக்கிய திருப்பத்தின் வெளிப்பாடு மட்டும் அல்ல, மாறாக ஏற்கனவே சர்வதேச அரசியலில் உறுதியைக் கலைத்துக் கொண்டிருக்கும் அமைப்பு முறையின் ஆழ்ந்த சீர்குலைவாகும்" என வலியுறுத்தியது. அந்த பகுப்பாய்வு முற்றிலும் சரியானதே என்று நிரூபணம் ஆகியுள்ளது. ஓராண்டிற்கும் மேலாக பெரும் பாதிப்பை ஏற்படுத்திய குறைந்த பிணையுள்ள அடைமான நெருக்கடி, ஒரு உலக நெருக்கடியாக உருவாகி முதலாளித்துவ அமைப்புமுறையின் இருப்பினையே கேள்விக்குரியதாக்கிவிட்டது.

3. கடந்த ஆண்டு பெரும்பகுதியில் அரசாங்க செய்தித் தொடர்பாளர்களும், பெரும்பாலான முதலாளித்துவமுறை பகுப்பாய்வாளர்களும் குறைந்த பிணையுள்ள அடைமான தொழில்துறையில் ஏற்பட்டுள்ள கடுமையான இழப்புக்களின் பாதிப்பு குறைக்கப்பட்டுவிடலாம் என்றும், அது பரந்த பொருளாதாரத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தாது என்றும் வலியுறுத்தினர். வீடுகள் குமிழி (Housing bubble) வெடித்த போதினும், உலகப் பொருளாதாரம் அடிப்படையில் ஸ்திரமாகவே இருந்தது என்றும் அவர்கள் கூறினர். இப்படி தன்னைத்தானே போலியாக ஏமாற்றிக் கொள்ளும் முயற்சி, செப்டம்பர் மாதம் தாக்கிய நிதிப் பேரழிவிற்கு இடையே சரிந்தது. பல வாரங்களுக்கு அமெரிக்க மற்றும் உலக நிதிய அமைப்பு முறைகள் முழுச் சரிவின் விளிம்பில் அதிர்ந்து நின்றன. அமெரிக்காவின் ஜனாதிபதி தேசிய தொலைக்காட்சியில் தோன்றி "அமெரிக்க நிதிய முறையின் முக்கிய பிரிவுகள் மூடப்படும் ஆபத்திற்கு உட்பட்டுள்ளன" என்று அறிவித்தார்; மேலும் அவசர நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்படாவிட்டால், "அமெரிக்கா ஒரு பெரும் நிதிய பீதியில் ஆழ்ந்துவிடக்கூடும்" என்றும் எச்சரித்தார். 1933 மார்ச் மாதம் பெருமந்த நிலையின் போது, அமெரிக்க வங்கி முறையை தற்காலிகமாக நிறுத்த உத்தரவிட்ட பிராங்க்ளின் ரூஸ்வெல்ட்டிற்கு பின்னர் எந்த அமெரிக்க ஜனாதிபதியும் இத்தகைய சொற்களை பேசியதில்லை.

4. கிட்டத்தட்ட ஒரே நாளில், அமெரிக்க முதலாளித்துவத்தின் அடையாளச் சின்னங்களான லெஹ்மன் பிரதர்ஸ், மெரில் லிஞ்ச் ஆகிய நிறுவனங்கள் அப்படியே கலைக்கப்பட்டன அல்லது பிற நிறுவனங்களுள் உள்ளிளுக்கப்பட்டன. உலக முதலாளித்துவ முறையின் திவால் தன்மை பற்றி பொதுவான உறுதியற்ற நிலை இருந்தமையால், கடன் கொடுக்கும் சந்தைகள் செயல்படாமல் நின்றன. அமெரிக்க வங்கி முறையில் நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர்கள் உட்செலுத்தப்பட்டதும், அதேபோல் ஐரோப்பாவிலும் அதேநேரத்தில் பாரியளவில் அரசாங்கங்கள் தலையிட்டமையும் உலக முதலாளித்துவ பொருளாதாரம் முழு முறிவடையாமல் இருக்க உதவின. இடைவிடாத அவசரகால நடவடிக்கைகள் மூன்று மாதம் நடத்தப்பட்ட பின்னர், நிதிய முறையை காப்பாற்ற டிரில்லியன் கணக்கான டாலர்கள் செலவழிக்கப்பட்ட பின்னரும் கூட, நிலைமை இன்னும் ஆபத்தான, உறுதியற்ற நிலையில்தான் உள்ளது. இந்த நெருக்கடி முற்றிலும் தீர்க்கப்பட்டுவிட்டது என்பதற்கு பதிலாக, அது அதன் முக்கிய நெருக்கடிக் கட்டத்தில்தான் இப்பொழுது நுழைந்துள்ளது என்பதை மிக கூர்மையான அறிவு படைத்த முதலாளித்துவ வர்க்கத்தின் செய்தித் தொடர்பாளர்களும், பகுப்பாய்வாளர்களும் உணர்ந்துள்ளனர். பைனான்சியல் டைம்ஸின் கட்டுரையாளர் மார்ட்டின் வொல்வ் புதிய ஆண்டை கீழ்க்கண்ட எச்சரிக்கையுடன் வரவேற்றார்: "2009ம் ஆண்டிற்கு நல்வரவு. உலகப் பொருளாதாரத்தின் பல தலைமுறைகளுடைய விதியை அநேகமாக உறுதி செய்யக்கூடிய ஆண்டாக இது இருக்கும். உலகளவில் சமசீரற்ற பொருளாதார வளர்ச்சியை இந்த தசாப்தத்தின் நடுப்பகுதி ஆண்டுகளில் மீட்கலாம் என்று சிலர் நம்பிக்கை கொண்டுள்ளனர். அவர்கள் நினைப்பது தவறு. அதற்குப் பதிலீடாக என்ன இருக்கலாம் என்பதைத்தான் நாம் தேர்ந்தெடுக்க முடியும். அது ஒரு சற்று சீரான உலகப் பொருளாதாரத்திற்கும், உடைவிற்கும் இடையிலேயே உள்ளது. அந்த தேர்வை தள்ளி போட முடியாது. அது இந்த ஆண்டு உறுதி செய்யப்படும்''.

5.தொடர்ச்சியாக கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள நெருக்கடியின் வரலாற்றுத் தன்மையை உணர்ந்திருப்பதில் வொல்வ் சரியான முறையில்தான் உள்ளார். ஆனால் மாற்றீடுகள் பற்றிய அவருடைய அறிவிப்புகள் தவறாகும். உடைவு என்பது நடக்கக்கூடியதே எனினும், "ஒரு சற்றே சிறந்த உலகப் பொருளாதாரம்" என்றது நடக்கக்கூடியது அல்ல. உண்மையில் உலகப் பொருளாதாரம் "மறு சமச்சீரடைதல்" என்பது (அதாவது முதலாளித்துவ அமைப்பு முறை அடிப்படையில் ஒரு புதிய உலகப் பொருளாதார சமநிலையை நிறுவதல் என்பது) இருக்கும் உற்பத்தி சக்திகளை பாரியளவில் அழிப்பதின் மூலமும், சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கைத் தரங்களை பேரழிவான கீழ்நிலைக்கு கொண்டுவருவதன் மூலமும்தான் முடியும்; இதை அடைவதற்கு உலகின் கணிசமான மக்கள் தொகையை அழித்தலும் அவசியமாகும். இவ்விதத்தில் முதலாளித்துவத்தின் உடைவிற்கான உண்மையான மாற்றீடு என்பது அறிவார்ந்த முறையில் உலகப் பொருளாதாரத்தை சோசலிச அடிப்படையில் மறு சீரமைப்பதே ஆகும். முதலாளித்துவத்தின் அராஜகத்தை, ஜனநாயக ரீதியான மற்றும் அறிவார்ந்த முறையில் திட்டமிடுதல் என்பதால் பிரதியீடு செய்யப்பட வேண்டும். உற்பத்தி சாதனங்கள் மீதான தனிச்சொத்துடமை என்பது அகற்றப்பட்டு சமூக சொத்துடமைக்கு வழிவிட வேண்டும்; அதில் மனித தேவைகள் பூர்த்தி செய்யப்படுதல், வறுமை, இடுக்கண்கள் களையப்படுதல், மனிதகுலத்தின் பண்பாடு உயர்த்தப்படுதல் ஆகியவை பொருளாதார வாழ்வின் நோக்கங்களாக இருக்க வேண்டும். உலகின் மக்களை அரசியல் ரீதியாகவும், முடிவில்லாத வன்முறை மற்றும் மக்கள் படுகொலைக்கு மூலகாரணமாக உள்ள தேசிய அரசு அமைப்பு முறையினுள் பகுத்தறிவற்ற முறையில் பிரித்தல் என்பது ஒரு உலக சோசலிச கூட்டமைப்பிற்கு வழிவிட வேண்டும். தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர போராட்டத்தின் மூலம் அடையப்படும் சர்வதேச சோசலிச வேலைத்திட்டம் ஒன்றுதான் உலக நெருக்கடிக்கு தாக்குப்பிடிக்கக் கூடிய ஒரே தீர்வு ஆகும்.

சோசலிப் புரட்சிக்கான புறநிலை முன்நிபந்தனைகள்

6. ஒரு புரட்சிகர நெருக்கடிக்கான புறநிலை முன்நிபந்தனைகள் விரைவாக முதிர்வடைந்து கொண்டிருக்கின்றன. 1931ம் ஆண்டு "புரட்சிகர நிலைமை என்றால் என்ன?" என்ற கட்டுரை ஒன்றில் லியோன் ட்ரொட்ஸ்கி விளக்கினார்:

பொதுவாகக் கூறுகையில், ஒரு நாட்டின் உற்பத்தி திறன் வீழ்ச்சியடையும்போது, உலகச் சந்தையில் ஒரு முதலாளித்துவ நாட்டின் குறிப்பிட்ட தாக்கம் தொடர்ச்சியாக குறைந்துவிடும்போது, வர்க்கங்களின் வருமானங்கள் அதேபோன்று தொடர்ச்சியாக குறையும்போது, வேலையின்மை என்பது ஒரு தற்காலிக ஏற்ற இறக்கத்தின் விளைவாக அல்லாது வேலையின்மை ஒரு நிரந்தர சமூகத் தீமையாக அதிகரிக்கக்கூடிய போக்கை கொண்டிருக்கையில், ஒரு புரட்சிகர நிலைமைக்கான பொருளாதார மற்றும் சமூக முன்நிபந்தனைகள் வடிவமெடுக்கின்றன எனலாம். (Writings of Leon Trotsky 1930-31 (New York: Pathfinder, 1973), p. 352).

7. இந்த நிபந்தனைகள் அனைத்துமே அமெரிக்காவை பொறுத்தே உள்ளன. அமெரிக்க முதலாளித்துவ முறையின் நீடித்த சரிவு, பல தசாப்தங்களாக தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கைத் தரங்களை கணிசமாக அரிக்கும் நிலைக்கு வழிவகுத்து அதன் பங்கை தேசிய வருமானத்தில் குறைக்கவும் செய்தது, இப்பொழுது இன்னும் அதிகமான நெருக்கடியை அளிக்கும் தன்மையில் உள்ளது. மிக சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, அமெரிக்க குடும்பங்களின் செல்வம் ஓராண்டிற்குள் கிட்டத்தட்ட கால் பகுதி குறைந்துவிட்டது தெரியவந்துள்ளது. 2008ம் ஆண்டு 2.6 மில்லியன் வேலைகளுக்கும் மேலாக குறைக்கப்பட்டுவிட்டன, இந்தப் பெரும் குறைப்பு தொடர்கிறது. தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கைத்தரங்களில் இந்த பொருளாதார அதிர்வுகள் 2009 முழுவதும் தொடர்ந்து இருக்கும்; இதையொட்டி மிக அதிகமான நீண்டகால விளைவுடைய அரசியல் தாக்கங்கள் இருக்கும். ட்ரொட்ஸ்கி எழுதியதுபோல்:

சமூகத்தின் பொருளாதார வளர்ச்சி என்பது நூற்றாண்டுகள், தசாப்தங்களால் அளவிடப்படும் ஒரு படிப்படியான நிகழ்வுப்போக்காகும். ஆனால் பொருளாதார நிலைமைகள் தீவிரமாக மாறும்போது, பின்தங்கியுள்ள மனோவியல்ரீதியாக பிரதிபலிப்புகள் திடீரென தோன்றும். விரைவானாலும், தாமதமானாலும், இத்தகைய மாற்றங்கள் தவிர்க்க முடியாமல் வர்க்கங்களின் மனோநிலமைகளை பாதிக்கும். அதன் பின்னர்தான் ஒரு புரட்சிகர நிலைமை இருக்கமுடியும் (Ibid, p. 353).

8. அமெரிக்காவில் (சர்வதேச அளவிலும்கூட) தொழிலாள வர்க்கத்தின் அரசியல் நனவு இன்னும் புரட்சிகரமானதாக இல்லை. சமூக நனவு சமூக இருப்பினைவிட பின்தங்கியதாகத்தான் இருக்கும். ஆனால் புறநிலைமையில் ஏற்படும் முன்னொருபோதுமில்லாததான மாற்றங்கள் நூற்றுக்கணக்கான, மில்லியன் எண்ணிக்கையில் உள்ள தொழிலாளர்களின் வாழ்க்கையை மாற்றுகிறது; இது சமூக வர்க்கங்களுக்கு இடையே இருக்கும் உறவுகளை பெரிதும் மாற்றுகிறது; அது மக்களின் நனவு தீவிரமடைதலுக்கு ஏற்ற சூழலை உருவாக்குகிறது.

9. இந்த நெருக்கடிக்கு ஒரு அமைதியான "சமூக நடுநிலைத்தன்மை" உடைய தீர்வு கிடையாது. பொருளாதார கொந்தளிப்பிற்கு, அமெரிக்க ஆளும் வர்க்கம் கொடுக்கும் தற்காலிக விடையிறுப்புக்கள் எதையும் தீர்த்து வைக்காது. ஏற்கனவே பல நூற்றுக்கணக்கான பில்லியன்கள் அவசர அவசரமாக தயாரிக்கப்பட்ட பிணை எடுப்புத் திட்டங்களில் அள்ளிவீசப்பட்டுள்ளன. ஜனாதிபதி ஒபாமாவை பொறுத்த வரையில் அவர் முடியாத ஒன்றை சாதிக்க முயல்கிறார்: முதலாளித்துவத்தின் அடித்தங்களையும் நிதிய உயரடுக்கின் நலன்களையும் பாதிக்காத, நெருக்கடிக்கான தீர்வு என்று எதுவும் கிடையாது.

10. ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய இரு நிகழ்போக்குகள் வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றன: முதலில், உலக முதலாளித்துவ முறையின் முரண்பாடுகள் தீவிரம் அடைகின்றன; இது சர்வதேச தொழிலாள வர்க்கத்தை வறுமையில் தள்ளுவதும், பாரிய ஒடுக்குமுறை, தொடர்ச்சியான இராணுவ மோதல்கள் என்ற நிலைக்கு அச்சுறுத்துகிறது. இரண்டாவதாக, இந்த நிலைமைகளுக்கு பதிலிறுப்பாக தொழிலாள வர்க்கத்தின் சமூக மற்றும் அரசியல் போர்க்குணமும், புரட்சிகர நனவின் புதிய வடிவமைப்புக்களும் அபிவிருத்தியடைகின்றன. இந்த நிகழ்வுபோக்குகளில் எது உயர் ஆதிக்கத்தை பெறும் என்பதுதான் வினாவாகும். 2009ம் ஆண்டின் போக்கில் சோசலிச சமத்துவக் கட்சியின் பணி இந்த உள்ளடக்கத்திற்குள்தான் வளர்ச்சியுறும்.

11. முதலாளித்துவ அமைப்புமுறை இந்த நெருக்கடியை எதிர்கொள்ள எடுக்கும் நடவடிக்கைகள், முதலாளித்துவத்தின் பொருளாதாரச் சிந்தனை என்று மட்டும் அல்லாமல் சிந்தனைப் போக்கின் திவால்தன்மையையும் நிரூபிக்கிறது. கிழக்கு ஐரோப்பாவில் ஸ்ராலினிச ஆட்சிகள் சரிந்து சரியாக 20 ஆண்டுகள் ஆகின்றன; அவற்றைத் தொடர்ந்து 1991ல் சோவியத் ஒன்றியமும் சிதைந்தது. இந்த நிகழ்வுகள் சர்வதேச ஆளும் வர்க்கம் மற்றும் அதன் செய்தி ஊடகத்தில் இருக்கும் பணியாட்களாலும் பல்கலைக்கழக வளாகங்களிலும் முதலாளித்துவ பொருளாதாரத்தின் இறுதி வெற்றி என்று பாராட்டப்பட்டன. இவர்கள் முதலாளித்துவ சந்தை முறைதான் பொருளாதார இருப்புக்களை பற்றிய இறுதியான, தவறுக்கு இடம் இல்லாத நிர்ணயிக்கும் முறை என்று அறிவித்தனர். பொருளாதார வாழ்வில் அரசாங்கத் தலையீடானது, நிதிய நிறுவனங்கள் மற்றும் உற்பத்தி சாதனங்களில் முதலாளித்துவம் கொண்டிருக்கும் தனிச்சிறப்புரிமைகள் மீது அழிவு தரும் திணிப்பு என்று கண்டிக்கப்பட்டது. தடையற்ற சந்தைகள் மற்றும் தொழில் வழங்குனர்களின் சுதந்திரம் பற்றிய மதம், அமெரிக்காவில் பிரச்சாரம் செய்யப்பட்டது போல் வேறு எங்கும் செய்யப்படவில்லை.

12. 2008ம் ஆண்டு சரிவானது சுதந்தர வர்த்தக கலாச்சாரத்தின் (Cult of Free Enterprise) உயர்ந்த போதகர்களுக்கு முகத்தில் நிறைய முட்டைகளை வீசி எறிந்தது. இதே அரசியல்வாதிகள், வணிகர்கள், சிறப்புப் பொருளாதார வல்லுனர்கள் மற்றும் செய்தி ஊடக வர்ணனையாளர்கள், பல முறையும் பொருளாதாரப் பிரச்சினைகள் சந்தைச் செயல்பாட்டிற்கு விடப்பட வேண்டும் என்று கூறியவர்கள், சமூக நலத்திட்டம் ஒவ்வொன்றும் தேசிய வரவுசெலவுத் திட்டத்தின் இழப்பு என்று கூறியவர்கள், வங்கிகள் தோல்விப் பின்னணியில் தங்கள் ஊழல் நலிந்த நெருக்கடிகள் நிறைந்த நிறுவனங்களை காப்பாற்றி முட்டுக் கொடுத்து நிறுத்த பாரிய அரசாங்கப் பிணை எடுப்பை நாடினர். தனியார் சொத்துரிமை மற்றும் பொருளாதாரத்தில் தனிநபர் உயர்ச்சி ஆகியவற்றிற்கு வாதிட்டவர்களுக்கு வங்கிகளின் மீட்பிற்காக அமெரிக்க மக்களுடைய கூட்டுச் சொத்துக்கள் அனைத்தும் அளிக்கப்பட வேண்டும் என்று கூறியபோது மனஉறுத்தல் எதையும் கொள்ளவில்லை. அமெரிக்க அரசாங்கம் செல்வந்தர்களுக்கு சோசலிசத்தை கொடுத்து அதே நேரத்தில் மற்றைய அனைவருக்கும் முதலாளித்துவத்தை வலியுறுத்துகின்றது என்பது பரந்த அளவில் கவனிக்கப்பட்டுள்ளது. ஆனால் அரசாங்கக் கொள்கை சோசலிசத்துடன் எவ்வித தொடர்புமற்றது. நிதிய உயரடுக்கின் மிக சக்தி வாய்ந்த பிரிவுகளின் நலன்களை காப்பதைத்தான் அனைத்து நடவடிக்கைகளும் நோக்கமாக கொண்டிருந்தன. ஆனால் பாரிய அரசாங்க தலையீடு பொருளாதாரத்தில் ஏற்பட்டது முதலாளித்துவ சிந்தனையின் நெறி மற்றும் கெளரவத்திற்கு அதிர்ச்சிதரக்கூடிய அடியைக் கொடுத்தது. இதற்கு மாறாக சோசலிசம் மற்றும் மார்க்சிசம் மீழுெச்சி பெறுவதற்கான பாதைக்கு வழிவகுத்துவிட்டது.

அமெரிக்க முதலாளித்துவத்தின் நீடித்த வீழ்ச்சி

13. நெருக்கடியின் வேர்கள் பல தசாப்தங்களுக்கு நீடித்து செல்கின்றது. நீடித்த அமெரிக்க முதலாளித்துவ வீழ்ச்சியை ஒட்டி ஏற்பட்ட 2008 நிகழ்வுகளை வரலாற்றாளர்கள் உறுதியாக குறைந்த பட்சம் டாலர்-தங்க மாற்றுவிகிதம் 1971ல் முடிவிற்கு கொண்டுவரப்பட்ட பிரெட்டன் வூட்ஸ் உடன்பாடு வரையிலேனும் தொடர்புபடுத்தி குறிப்பிடுவர். இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் வெளிப்பட்ட சர்வதேச ஒழுங்கு அமெரிக்க பொருளாதார, தொழில்துறை மேலாதிக்கத்தின் பெருநிலையை அடிப்படையாக கொண்டிருந்தது. 1945க்கு பின்னர் அமெரிக்க கொள்கையில் இன்றியமையாத இலக்காக இருந்த ஐரோப்பிய, ஜப்பானிய பொருளாதாரங்களின் மீட்சி, புதிரான வகையில் அமெரிக்க மேலாதிக்கத்தின் சரிவிற்கு கணிசமாக காரணமாகி, இறுதியில் பிரெட்டன் வூட்ஸ் முறையை நடத்த இயலாமற் செய்துவிட்டது. சமீபத்தில் தோழர் நிக் பீம்ஸ் குறிப்பிட்டுள்ளபடி:

"இறுதிப் பகுப்பாய்வில் பிரெட்டன் வூட்ஸ் தடுமாறியது; ஏனெனில் உலக வணிகம் மற்றும் உலக முதலீட்டின் பரந்த விரிவாக்கம், அதாவது மூலதனத்தின் உலகந்தழுவிய விரிவாக்கம் ஒரு தேசிய கட்டுப்பாட்டு முறையின்கீழ் கட்டுப்படுத்த முடியாமல் போயிற்று. உலகப் பொருளாதாரத்திற்கும் தேசிய அரசு அமைப்பு முறைக்கும் இடையேயான முரண்பாடு மீண்டும் தன்னை உறுதியாக்கிக் காண்பித்தது. ("The World Economic Crisis: A Marxist Analysis" ).

14. 1971ல் இருந்து தொடர்ந்து நிலவி வரும் போக்கு, அமெரிக்காவின் உலகப் பொருளாதார நிலைமை வீழ்ச்சியுற செய்ததாகத்தான் இருக்கின்றது. இது முதலாளித்துவத்தின் பொதுப் பொருளாதார ஸ்திரமற்றதன்மையை அடிக்கோடிட்டு காட்டுகின்றது. பூகோளமயமாக்கல் நிகழ்வுப்போக்கு ஆசியாவிற்கு மகத்தான முறையில் மூலதனம் செலுத்தப்படுவதுடனும் அந்தப் பரந்த கண்டத்தில் தொழிற்துறை வளர்ச்சி வியத்தகு முறையில் விரைவாக வளர்ந்ததுடன் பிணைந்த நிலையும், உலகப் பொருளாதார சமசீரற்ற தன்மையை தீவிரமடையச் செய்துவிட்டது. குறிப்பாக கடந்த தசாப்தம் தொடர்ச்சியான ஆழ்ந்த முரண்பாடுகளை கொண்டிருந்தது. அவையாவன: அமெரிக்காவின் பாரிய செலுத்துமதி நிலுவையும், வர்த்தக பற்றாக்குறைகளும், உலகின் கையிருப்பு நாணயம் என்ற முறையில் டாலரின் ஆபத்தான நிலை, அமெரிக்கப் பொருளாதாரத்தை நிதியமப்படுத்தியவிதமும்- அதாவது உண்மையான மதிப்பை உற்பத்தியிலிருந்து அதிகரித்த விதத்தில் அகற்றி வைத்ததும்- ஊகக் குமிழிகள் தொடர்ச்சியாக உருவாகியதுமாகும். வோல் ஸ்ட்ரீட்டின் பளபளப்பு கடந்த தசாப்தத்தில் அவ்வப்பொழுது வெடித்து எழுந்த பிரச்சினைகளான: 1997ம் ஆண்டின் கிழக்கு ஆசிய நிதிய நெருக்கடி, நீண்ட கால முதலீட்டு நிர்வாகத்தின் (Long Term Capital Management), 1998ல் ரஷ்ய ரூபிளின் வீழ்ச்சி, 2001ல் நசுங்கிப் போன dot.com குமிழி மற்றும் அதைத் தொடர்ந்த பல பெருநிறுவன பெரும் ஊழல்கள் அம்பலமானவை ஆகியவற்றை மறைத்தது.

15. இப்போக்குகளை ஒரு புள்ளிவிவரம் சுருக்கமாகக் கூறுகிறது. 1980ம் ஆண்டு அமெரிக்க இலாபங்களில் 6 சதவிகிதம் நிதியத்துறையினால் தோற்றுவிக்கப்பட்டிருந்தன; 2008ல் அந்த விகிதம் 40 என ஆயிற்று. உற்பத்தியை விட மிக அதிகமான முறையில் நுகர்வு இருக்கும் ஒரு சமூகத்தில், கடன் மற்றும் நிதியக் கொள்ளையை ஏமாற்றுதல் என்பது பொருளாதார வாழ்வின் அடித்தளமாயிற்று.

உடைவின் பாதிப்பு

16. இந்த முரண்பாடுகளை கணக்கில் எடுத்துக் கொண்டு தவிர்க்க வேண்டிய ஆளும் வர்க்கத்தின் திறனோ அதன் விளைவுகளை தீவிரமாக்கியதுடன், அவை இறுதியில் கடந்த ஒன்றரை ஆண்டில்தான் முழுமையாக வெளிப்பட்டன. 2007 கோடையில் தொடங்கிய கடன் நெருக்கடி அமெரிக்க நிதியமுறை முழுவதும் பரவியது; அதுவோ அடிப்படையில் பயனற்ற சொத்துக்களில் முதலீடு செய்யப்பட்டிருந்தது. ஒன்றன்பின் ஒன்றாக பெரும் நிதிய நிறுவனங்கள் சரிவுற்றன அல்லது அமெரிக்காவின் ஐந்தாம் மிகப் பெரிய முதலீட்டு வங்கியான பேர் ஸ்டேர்ன்ஸ், பானி மே, பிரெட்டி மாக் என்று அமெரிக்க புது அடைமானக் கடன்களில் 80 சதவிகிதத்திற்கு மேற்பட்ட நிறுவனங்கள், முதலீட்டு வங்கிகளான லெஹ்மன் பிரதர்ஸ் மற்றும் மெரில் லிஞ்ச், உலகின் மிகப் பெரிய காப்பீட்டு நிறுவனமான அமெரிக்கன் இன்டர்நேஷனல் குரூப், வாஷிங்டன் மியூச்சுவல் என மேலும் பல நிறுவனங்கள் 2008ல் பிணை எடுப்பிற்கு உட்பட்டன. அமெரிக்க நிதிய முறையின் முழுத் தோற்றமும் முற்றிலும் மாற்றப்பட்டுவிட்டது. வங்கி முறை ஒன்றுடன் ஒன்று இணைக்கப்படும் ஒரு முறைக்குள்ளானது; இந்த நிகழ்போக்கு தொடரும்; அத்துடன் சிறு வங்கிகள் சரிவுறும் அல்லது அரசாங்கத்துடன் நெருக்கமாக ஒத்துழைக்கும் பெரிய நிறுவனங்களால் வாங்கப்பட்டுவிடும். அதே நேரத்தில் அமெரிக்க உற்பத்தித் தொழிலின் பெருமிதச் சின்னங்களான ஜெனரல் மோட்டார்ஸ், போர்ட் போன்றவை மறைந்துவிடும் அபாயத்தின் விளிம்பில் நிற்கின்றன.

17. 2008 இறுதிக்குள் உலகச் சந்தைகளில் நடைபெற்ற அமளி கிட்டத்தட்ட $30 டிரில்லியன் பங்கு மதிப்பை அகற்றியது; இதில் ஒழுங்கு படுத்தப்படாத 700 டிரில்லியன் டாலர் நிதிய உடன்பாடுகளில் இருந்து வந்த பெறுமதிகள் அடங்காது. ஊகக் குமிழிகள் சரியத் தொடங்கின; கடன் மலைகளில் தங்கள் செயற்பாட்டுத் தளங்களை கொண்டிருந்த வங்கிகளும் பிற நிறுவனங்களும் தங்கள் "கடன்களைத் திருப்பி அளிக்க முடியாமல்" திவாலாயின. நிதி கூத்தாட்டம் முடிவிற்கு வந்த நிலையில், ஊக ஏற்றத்திற்கு காரணமாக இருந்த குற்றம் சார்ந்த தன்மை வெளிப்பட்டது. மிகச் சிறந்த வல்லுனர் வாரன் புபேயின் (Warren Buffett) குறிப்பிடத்தக்க சொற்கள் கூட, "நீர் பின்னோக்கிச் சென்றபின்தான் எவர் நிர்வாணமாக குளிக்கிறார்கள் என்பது தெரியும்." என்று குறிப்பிட்டன. தற்பொழுது பல நிதி நிறுவன உரிமையாளர்கள் நிர்வாணமாக அலைந்து கொண்டிருக்கின்றனர். முன்னாள் நஸ்டாக் பங்குச் சந்தையின் தலைவரான பெர்னி மடாப் செயல்படுத்திய $50 பில்லியன் திட்டம் நிதியச் சரிவில் (இதுகாறும்) வெளிவந்துள்ள ஊழல் அம்பலங்களில் மிகவும் இழிந்ததாக உள்ளது.

18. அமெரிக்க வீட்டு விலைகளின் பொறிவு, உண்மை ஊதியங்களின் சரிவுக்கு இடையிலிருந்த மில்லியன் கணக்கான அமெரிக்க குடும்பங்களின் நிகர செல்வத்தை அழித்துள்ளது. மேலும் இது வீட்டு மூலதனத்தை, அடிப்படை தேவையான உணவு, சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் கல்வி ஆகியவற்றிற்கு நம்ப வேண்டியதாயிற்று. பெருமந்த கால நிலையில் இருந்ததை விட அமெரிக்காவில் வீடுகளின் மதிப்புக் குறைவு ஏற்கனவே இருமடங்கு அதிகமாகிவிட்டது. JP Morgan டிசம்பர் 2008ல் கொடுத்துள்ள அறிக்கை அமெரிக்க மக்களிடையே இதன் தாக்கத்தை காட்டும் ஒரு குறிப்பாக இருக்கிறது: "அமெரிக்க வீடுகளின் இருப்புநிலைக் குறிப்பு சமீபத்தில் மிகப் பெரிய முறையில் செல்வம் அழிந்துள்ள அனுபவத்தைத்தான் காட்டுகிறது." என்று அது குறிப்பிட்டுள்ளது. "பங்கு விலைகளில் மிகப் பெரும் சரிவு (401 k ஓய்வூதிய சேமிப்புக்கள் உட்பட), வீடுகளின் விலைகளில் தற்போது ஏற்பட்டுள்ள சரிவுடன் இணைந்து கடந்த சில ஆண்டுகளில் சேகரிக்கப்பட்டிருந்த செல்வ நலன்கள் பெரும்பாலானவற்றை தகர்த்துவிட்டன. மூன்றாம் காலாண்டு பகுதியில் மட்டும் செல்வம் $2.8 டிரில்லியன் அல்லது 4.7 சதவிகிதம் சரிந்தது. கடந்த ஆண்டு மூன்றாம் காலண்டில் மிக உயரத்தை எட்டியபின், அதன் உச்சபட்ச நிலையிலிருந்து 11.1% அதாவது 1.7 டிரில்லியன் டாலர் செல்வம் அழிக்கப்பட்டது "

19. நிதிய நெருக்கடி "உண்மை" பொருளாதாரத்தில் கொண்டிருக்கும் பாதிப்பு இப்பொழுதுதான் உணரப்படத் தொடங்குகிறது. ஏற்கனவே அமெரிக்காவில் மிகக் குறைவான மட்டத்திலிருந்த உற்பத்தி பயங்கரச் வீழ்ச்சியில் உள்ளது. Institute for Supply Managerment குறியீடு, அமெரிக்க உற்பத்தியை பொறுத்தவரையில், டிசம்பர் மாதம் 32.4 என்று 1980க்கு பின்னர் மிகக் குறைவான நிலையை காட்டியது; அதே நேரத்தில் புதிய தேவைகளுக்கான குறியீடுகள், நீடித்து உழைக்கும் பொருட்களுக்கான தேவைகள், ஆலைகளுக்கான தேவைகள் ஆகியவை 2008 கடைசிப் பகுதியில் தீவிர சரிவை அடைந்தன. வேலை இழப்புக்கள் பெருகிய வண்ணம் (2008 கடைசி இருமாதங்களில் நிகரமாக இழக்கப்பட்ட மில்லியனுக்கும் மேலான வேலைகள் உட்பட) காணப்பட்டன; பெருநிறுவனங்கள், ஊதியங்கள் மற்றும் நலன்கள் மீது தாக்குதலை ஆரம்பித்துவிட்டன. அமெரிக்காவில் விடுமுறை காலத்திற்கான விற்பனை புள்ளிவிவரங்கள் மிக மோசமாகிவிட்டன; இவை அமெரிக்க மக்கள் எதிர்கொண்டுள்ள பெருகிய பொருளாதார உறுதியற்ற தன்மையை வெளிப்படுத்துகின்றன.

20. இத்தகைய பாதிப்பைக் காண்பதில் அமெரிக்கா மட்டும் தனியே இல்லை. சர்வதேச நாணய நிதியம் (International Monetary Fund) உலக மொத்த உள்நாட்டு உற்பத்தி அடுத்த ஆண்டு 2 சதவிகிதம்தான் விரிவாகும் என்று கணித்துள்ளது; இது ஒரு உலக மந்த நிலையை எடுத்துக்கூறும் மரபார்ந்த 3 சதவிகிதத்தைவிட குறைவு ஆகும். அக்டோபர் மாதத்தில் உலகப் பொருளாதார கண்ணோட்டம் பற்றிய அதன் நவம்பர் கணிப்பில் சர்வதேச நாணய நிதியம் அதன் 2009க்கான மொத்த உள்நாட்டு உற்பத்திக் கணிப்பில் "முன்னேற்றம் அடைந்த நாடுகளில்" 0.5 சதவிகித வளர்ச்சி என்பதில் இருந்து மாறாக 0.25 வளர்ச்சியாக குறைத்துவிட்டது. இரண்டாம் உலக யுத்த முடிவிற்கு பின்னர் முன்னேறிய முதலாளித்துவ நாடுகளில் முதன்முறையாக வருடாந்த சுருக்கம் என்பது இப்பொழுதுதான் ஏற்படுகிறது.

21. ஐரோப்பா ஏற்கனவே மந்த நிலையில் உள்ளது. கடந்த மாதம் ING வங்கியின் ஐரோப்பிய பொருளாதார வல்லுனர் Casten Brzeski 2008 நான்காம் காலாண்டுப் பகுதி, "ஜேர்மன் தொழில்துறையில் மிக மோசமான சரிவு என்பதைக் காட்டக்கூடும்" என்று கூறியுள்ளார். கண்டம் முழுவதும் தொழில்துறை உற்பத்தி தீவிரமாகச் சரிந்துள்ளது. கிழக்கு ஐரோப்பாவும் முன்னாள் சோவியத் முகாம் நாடுகளும் குறிப்பிடத்தக்க வகையில் பேரழிவைக் கண்டுள்ளன; இதற்குக் காரணம் கடந்த ஆண்டு இரண்டாம் அரைப்பகுதியில் பொருட்கள் விலை பெரும் சரிவுற்றதுதான். ரஷிய பங்குச் சந்தைக் குறியீடான RTS, 2008ல் 72 சதவிகித சரிவைக் காட்டியது; மத்திய அரசாங்கங்கள் நாட்டின் வெளிநாட்டு நாணய இருப்புக்களைப் பெரிதும் பயன்படுத்துகின்றன. ஆசியாவில், அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக உலகின் இரண்டாம் மிகப் பெரிய பொருளாதாரமாக இருக்கும் ஜப்பான் மாதந்தோறும் 8 சதவிகித சரிவு என்பதை நவம்பர் மாத உற்பத்தியில் கண்டது; இது அதன் வரலாற்றிலேயே மிகப் பெரிய சரிவாகும்; ஏற்றுமதிகளில் 27 சதவிகித சரிவும் இதற்கு ஓரளவு காரணம் ஆகும்.

22. பொருளாதார நெருக்கடி ஆசிய, இலத்தீன் அமெரிக்காவில் இருக்கும் "எழுச்சி பெற்று வரும் சந்தைகள் வளர்ந்து வரும் சந்தைகள்" முன்னேற்றம் அடைந்துள்ள முதலாளித்துவ நாடுகளின் விதியில் இருந்து தனித்து பாதிப்பிற்கு உட்படாமல் இருக்கும் என்ற "விலகியிருக்கும்" கோட்பாட்டின் கற்பனையை தகர்த்து விட்டது. அமெரிக்காவில் நுகர்வோர் செலவினச்சரிவானது சீனாவில் ஏற்றுமதி வளர்ச்சியை அதிர்ச்சிக்கு உட்படுத்தும் விதத்தில் குறைத்துவிட்டது. சீன உற்பத்தியாளர்கள் விரைவாக வேலைக் குறைப்புக்களை செய்து கொண்டிருக்கின்றனர்; 2009ல் வளர்ச்சி விகிதம் நாட்டின் அதிகரித்துவரும் தொழிலாளர் பிரிவின் வளர்ச்சிக்கு ஈடுகொடுக்க முடியாத அளவில் உள்ளது. ஒரு சமூக வெடிப்பிற்கு சீனா கனிந்துள்ளது. சீனத்தொழிலாளர்கள் ஆலைகள் மூடலுக்கும் சமூக நலன்கள் இழப்பிற்கும் எதிராக ஆர்ப்பாட்டம் செய்வதால் சமீபத்திய மாதங்களில் அங்கு தீவிர சமூக கொந்தளிப்புக்கள் இருப்பதாக தகவல்கள் வந்துள்ளன.

இலத்தீன் அமெரிக்கா விலக்கியிருக்கும் என்பதின் பொய்த்தோற்றங்கள் பிரேசிலிய ஜனாதிபதி லூயி இனாசியோ லூலா டி சில்வாவினால் சுருக்கிக் கூறப்பட்டது. செப்டம்பர் மாதம் நிதிய நெருக்கடி வெளிப்பட்டுள்ளதை பற்றி கேட்கப்பட்டதற்கு அவர் விடையிறுத்தது: "புஷ்ஷைக் கேளுங்கள், இது அவருடைய நெருக்கடி, என்னுடையது அல்ல." இந்த தைரியமான சொற்கள் சாவோ பாலோவின் பங்குச் சந்தை சில வாரங்களில் 50 சதவிகித மதிப்புக் குறைவைக் கண்ட அளவில் கரைந்து போயிற்று. பொருட்களின் விலைகள் சரிவு, ஊக வணிக மூலதனம் மறைந்தது மற்றும் வெளிநாட்டு நேரடி முதலீடு வரண்டது ஆகியவை உலக நிதிய நெருக்கடியின் பாதிப்பை இலத்தீன் அமெரிக்கா முழுவதும் பரப்பியது; இது "இடதிற்கு திரும்புக" எனக்கூறிய முதலாளித்துவ அரசாங்கங்களான வெனிஜூலாவின் சாவேஸ் அரசாங்கம், பொலிவியாவின் மோரேல்ஸ் அரசாங்கம் மற்றும் ஈக்வடாரில் இருக்கும் கோரியா அரசாங்கம் ஆகியவற்றின் பொருளாதார அஸ்திவாரங்களை குழிபறித்துள்ளது. இது வர்க்கப் போராட்டத்தில் ஒரு புதிய வெடிப்பிற்கு அரங்கு அமைத்தது.

வர்க்க ஆட்சியின் நெருக்கடி

23. செப்டம்பர் 2008ல் இருந்து அமெரிக்க ஆளும் வர்க்கத்தால் தொடரப்பட்ட கொள்கைகள் நடைமுறைரீதியான கூட்டு புதியமாற்றங்களைத்தான் கொண்டிருந்தன. ஒரு முழுச் சரிவை தடுக்கும் நோக்கத்துடன், அதே நேரத்தில் சக்திவாய்ந்த, அரசியலில் நல்ல தொடர்புடையவர்கள் தனிப்பட்ட முறையில் செல்வக் கொழிப்பு அடைவதற்கான வாய்ப்புக்கள் எவை இருந்தாலும் அவை பயன்படுத்தப்பட்டன. அழிவிற்குட்பட்ட ஆளும் வர்க்கத்தின் இயல்பான கூறுபாடான தனியார் பொருளாதார நலன்கள் மற்றும் சலுகைகளை இடைவிடாமல் தொடர்வது சமூகத்திற்கு பகுத்தறிவார்ந்த கொள்கைகளை செயல்படுத்தவதை இயலாததாக்கிவிடுகிறது. ஒரு சமூகத்தை காப்பாற்ற புரட்சியை தவிர வேறு வழி ஏதும் இல்லை. தனியார் செல்வத்தை செழிக்கச் செய்யும் இடைவிடாத முயற்சிகளை அடுத்து அமெரிக்க ஆளும் வர்க்கத்தினர், பிரான்சில் 1789ற்கு முன்னர் இருந்த பிரபுத்துவத்தின் பேராசை மற்றும் ஊழலுக்கு சமமாக அல்லது அதையும் விஞ்சிய தன்மையைக் கொண்டனர். அதிகரித்தளவில் இது பற்றி அறிந்துகொண்டதும், ஆளும் வர்க்கத்தின் கோரமான, தன்னை வளமாக்கிக் கொள்ளும் முயற்சி பற்றி எதிர்ப்பு உணர்வும் பெருகிய முறையில் மக்களுடைய அரசியல் தீவிரமயமாக்கலுக்கும் கணிசமான காரணியாக ஆகியுள்ளது.

24. "பணத்தை ஒரு பிரச்சினையின் மீது வீசுவதால் மட்டும்" அதை தீர்த்துவிட முடியாது என்பதே அமெரிக்க அரசியல் அமைப்பின் விருப்பமான எதிர்கால கணிப்புகளில் ஒன்றாக உள்ளது. அப்படி இருந்தும் பொருளாதார நெருக்கடி பாரியமுறையில் பொதுமக்களின் இருப்புக்களை சூறையாட பயன்படுத்தப்பட்டுள்ளது; மிக அதிகமான நிதியங்கள் நேரடியாக வங்கிகளுக்கும் பெருநிறுவனங்களுக்கும் கொடுக்கப்பட்டுள்ளன. TARP என்று கூறப்படுவதின் முக்கிய நோக்கமே இதுதான்; இதற்கு ஜனநாயகக் கட்சியின் முழு ஆதரவும் உள்ளது. அமெரிக்க அரசாங்கம் இப்பொழுது 8 டிரில்லியன் டாலருக்கும் மேலாக நிதிய முறைக்கு முட்டுக் கொடுக்க முன்வந்திருக்கிறது. வட்டிவிகிதங்களை அது கிட்டத்தட்ட பூஜ்யத்திற்கு குறைத்து பணத்தை வட்டியின்றி வங்கிகளுக்கு வழங்கியுள்ளது. ஆண்டின் இறுதியில் அரசாங்கம் "புதிய பணத்தை புகுத்துதல்" (Quantitative easing) என்ற கொள்கையை அறிவித்துள்ளது. இதன்படி பணப்பற்றாக்குறை அச்சுறுத்தலையும் ஓரளவு சமாளிக்கும் விதமாக மத்திய வங்கிக்கூட்டமைப்பு தேவையான பணத்தை அச்சடிக்கும்.

25. தன்னுடைய பங்கிற்கு பாரக் ஒபாமா தான் கிட்டத்தட்ட 750 பில்லியன் டாலர் மதிப்புடைய "ஊக்கப் பொதியை" செயல்படுத்த இருப்பதாக அறிவித்துள்ளார் -- இதில் 150 பில்லியன் டாலர் பெருநிறுவன வரிக்கான கடன்களும், சாதாரண மக்களுக்கு மிகச் சிறிய வரிக்கான கடனும், தனியார் துறைக்கு ஊக்கம் கொடுக்கும் வகையில் ஏராளமான உள்கட்டுமான செலவினத் திட்டங்களும் உள்ளன. இந்நடவடிக்கைகள் நெருக்கடியின் விகிதத்திற்கு முற்றிலும் பொருந்தாதவை என்பதுடன் நெருக்கடியை தோற்றுவித்த சமூக நலன்களை எவ்விதத்திலும் அறைகூவலுக்கும் உட்படுத்தவில்லை. அதே நேரத்தில் ஒபாமா சமூகநல திட்டங்களை தான் தாக்கவிருக்கும் திட்டங்களை தெளிவுபடுத்தியுள்ளார்; இதில் சமூகப் பாதுகாப்பு மற்றும் மருத்துவப் பாதுகாப்பு ஆகியவை அடங்கியுள்ளன. தொழிலாள வர்க்கத்தின் சமூக நிலைமைமீது இது ஒரு பாரிய தாக்குதலின் ஒரு பகுதி ஆகும்; இத்திட்டத்தை செயல்படுத்த இரு கட்சிகளும் முற்றிலும் உறுதியாக உள்ளன.

26. திட்டமிடப்பட்டுள்ள எந்த நடவடிக்கையும் எவ்விதத்திலும் பிரச்சினைகளின் அடித்தளத்தை சரி செய்யவில்லை; உண்மையில் இவை முரண்பாடுகளை அதிகரிக்கத்தான் செய்யும். தான் விரும்பும் அளவிற்கு வங்கிகளுக்கு அரசாங்கம் பணத்தை கொடுக்கலாம், ஆனால் இப்படி நிதியம் உட்செலுத்தப்படுதல் எப்படி இலாபத்தன்மையை மீட்கப்போகிறது என்பது பற்றி ஒருவரும் விளக்க முற்படவில்லை. ஒவ்வொரு வங்கியையும் அது பிணை எடுக்கும்போது, எழும் வினா இதுதான்; அமெரிக்க அரசாங்கத்தை எவர் பிணை எடுப்பார்? சமீபத்திய நியூயோர்க் டைம்ஸ் கட்டுரை ஒன்று குறிப்பிட்டுள்ளபடி, சீன அரசாங்கம் ஏற்கனவே அமெரிக்க கருவூல பத்திரங்களை தான் வாங்கிவருவதை குறைக்க தொடங்கிவிட்டது. இத்தகைய கடன் பெறுதல் வரண்டுபோனால் என்ன ஆவது? பெரும் களிப்பாக நடத்தப்படும் பிணை எடுப்புக்கள் பாரிய டாலர் நெருக்கடிக்குத்தான் வழிவகுக்கின்றன.

27. மற்றொரு முரண்பாடும் பரிசீலிக்கப்படாமல் உள்ளது. உலகப் பொருளாதார வளர்ச்சியின் அடித்தளத்தில் இருக்கும் "குறையற்று செலவு செய்தல்" என்பதற்கு ஊக்கம் கொடுப்பதற்கு அமெரிக்க நுகர்வோரின் நம்பிக்கையை மீட்பது தேவை என்பது பற்றி அதிகம் கூறப்படுகிறது. ஆயினும்கூட பெருநிறுவனங்கள் இப்பொருளாதாரச் சரிவை எதிர்கொள்ளும் வகையில் பாரிய ஊதியக் குறைப்புக்கள் மற்றும் ஆலை மூடல்களைத்தான் செய்து வருகின்றன. இப்படி தொழிலாள வர்க்கத்தின் மீதான தாக்குதல் அமெரிக்க கார்த் தொழில்துறையில் தொடக்கப்பட்டுள்ளது; இதற்கு ஜனநாயகக் கட்சியினர் மற்றும் குடியரசுக் கட்சியினர் இருவரும் அரசாங்கக் கடன் வேண்டும் என்றால் பல ஆயிரக்கணக்கான வேலைகள் தகர்க்கப்பட வேண்டும் என்றும் கார் தொழிலாளர்களுக்கு குறைந்த ஊதியங்கள் என்ற நிலை வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். இத்தகைய நடவடிக்கைகள் "நிறுவனம் செயல்படுவதை மீட்க", அதாவது இலாபம் அடைவதை மீட்கத் தேவை என்று கூறப்பட்ட அவை பொருளாதாரம் முழுவதும் கையாளப்படுகிறது. ஆனால் இந்த வழிவகை இன்னும் கூடுதலான வகையில் நுகர்வோர் செலவினங்களை அமெரிக்காவில் இல்லாதொழிக்கின்றது; மேலும் பொருளாதார சரிவு என்ற தீய வட்டத்தைத்தான் ஏற்படுத்துகிறது. அமெரிக்க பொருளாதாரத்தின் அஸ்திவாரங்களை மீட்கும் எந்த முயற்சியும் எதிர்கொள்ளும் உண்மை ஆளும் உயரடுக்கு கடந்த 30 ஆண்டுகளாக முறையாக உற்பத்தி சக்திகளைத் தகர்த்து வந்துள்ளது என்பதாகும். மேலே குறிப்பிட்டுள்ள கட்டுரையில் Martin Wolf ஒரு கூடுதலான முன்னுணர்வுக் கருத்தையும் தெரிவித்துள்ளார்; "அமெரிக்காவும் பல பிற பொருளாதார பற்றாக்குறை இருக்கும் நாடுகளும் தற்பொழுது கட்டுமான ரீதியால் வணிகப் பொருட்கள், சேவைகளை பொதுமான அளவு உற்பத்தி செய்யும் திறமை அற்று இருக்கின்றன." என்று அவர் கூறியுள்ளார். அதாவது அமெரிக்காவின் உற்பத்தி தகமை பற்றாக்குறை சீனா போன்ற ஏற்றுமதி நாடுகளுடன் வர்த்தக சமநிலையை பேணிக்கொள்ளகூடியதாக இல்லை என்று பொருள் ஆகும்.

28. உலகப் பொருளாதார நெருக்கடி முக்கிய முதலாளித்துவ சக்திகளின் அரசியல் அதிகாரத்திற்கு குழிபறித்துவிடுவதோடு, தற்போதுள்ள ஏகாதிபத்திய பூகோள-அரசியல் உறவுகளின் வடிவமைப்புக்களையும் சிதைப்பதற்கும் வழிவகுக்கும். முன்னாள் துணை கருவூலச் செயலர் ரோகர் அல்ட்மன் Foreign Affairs இல் எழுதியுள்ளதாவது;

''75 ஆண்டுகளில் மிக மோசமான 2008ம் ஆண்டின் நிதிய, பொருளாதார வீழ்ச்சி, அமெரிக்காவிற்கும் ஐரோப்பாவிற்கும் ஒரு மிகப்பெரிய பூகோள அரசியல் பின்னடைவு ஆகும். எதிர்வரும் ஆண்டில் எந்த ஒருநாடும் நிதிய நெருக்கடி மூலம் பயன் அடைய முடியாது; ஆனால் ஒரு சில நாடுகள் --குறிப்பாக சீனா--ஒப்புமையில் வலுவான பூகோள நிலையை அடையும்... மற்ற நாடுகளுக்கு நிதிய முறையில் உதவக்கூடிய நிலையில் பெய்ஜிங் இருக்கும்; அத்தோடு முக்கிய முதலீடுகளை, உதாரணமாக மேற்கு நாடுகளால் செய்யமுடியாத நிலையில், இயற்கை வளங்களில் முதலீடு செய்யமுடியும்''.

29. அமெரிக்க முதலாளித்துவ வர்க்கத்தின் கூட்டுத்தலைமையில் களிநடனம் புரிந்த "ஒருமுகப்பட்ட நிலை" என்ற பார்வை இப்பொழுது வெறும் பொய்த்தோற்றம் என்று வெளிப்பட்டுவிட்டது. இந்த உண்மை ஆளும் வர்க்கத்தின் முக்கிய பிரிவுகளுக்குள்ளேயே நன்கு அறியப்பட்டுள்ளது. Global Trends 2025 இன் 2008 நவம்பர் மாத அறிக்கையில், அமெரிக்க தேசிய உளவுத்துறைக் குழுவின் A Transformed World கொடுத்துள்ள எச்சரிக்கையாவது: "இரண்டாம் உலகப் போருக்குப் பின் கட்டமைக்கப்பட்ட சர்வதேச அமைப்புமுறை எழுச்சி பெற்றுவரும் சக்திகளின் காரணமாக 2025 ஐ ஒட்டி கிட்டத்தட்ட அறியப்படாத நிலைக்கு சென்றுவிடும். இதற்கு காரணம், பூகோளந்தழுவிய பொருளாதாரம் மற்றும் ஒப்புமையில் செல்வமும் பொருளாதார சக்தியும் மேற்கில் இருந்து கிழக்கிற்கு வரலாற்றுரீதியாக மாற்றப்பட்டுவிடும் என்பதாலும், அரசற்ற அமைப்புகளின் அதிகரிக்கும் செல்வாக்கும் ஆகும்."

30. அமெரிக்காவின் பலம் வீழ்ச்சியடைந்து, பொருளாதார நெருக்கடி தீவிரமாகுகையில், இந்தச் சரிவை ஈடுசெய்யும் பொருட்டு இராணுவ சக்தியை பயன்படுத்தும் முயற்சி தீவிரமாகத்தான் செய்யும். தன்னுடைய பூகோள-அரசியல் மேலாதிக்க இழப்பை அமெரிக்க ஆளும் வர்க்கம் அமைதியான முறையில் ஏற்காது. ஏற்கனவே இந்த நூற்றாண்டின் முதல் தசாப்தத்தில் அமெரிக்க நவ காலனித்துவ வகைச் செயற்பாடுகளை ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் உலகின் முக்கிய பூகோள மூலோபாய பகுதிகளில் தன் கட்டுப்பாட்டை அதிகரிக்கும் ஒரு முயற்சியாக ஆரம்பித்திருக்கிறது. அமெரிக்க ஏகாதிபத்தியம் தன் செல்வாக்கை கிழக்கு ஐரோப்பாவிலும் முன்னாள் சோவியத் நாடுகளிலும் விரிவாக்க முயல்கிறது --2008ம் ஆண்டு இந்த குறிக்கோளானது, ஆகஸ்டில் அமெரிக்கா ஆதரவுடன் ஜோர்ஜியா தெற்கு ஒசேஷியா மீது தாக்குதலை நடத்தியதானது கிட்டத்தட்ட ரஷ்யாவுடன் ஒரு நேரடி மோதலுக்கு கொண்டுவந்துவிட்டது. மத்திய ஆசியா, ஆபிரிக்கா, இலத்தீன் அமெரிக்கா நோக்கிய சீனாவின் நாட்டத்தினை அமெரிக்க முதலாளித்துவம் பதட்டத்துடன் பார்த்துக்கொண்டிருப்பதுடன், சீன மூலதனத்தின் உள்வரவில் தான் தங்கியிருப்பது குறித்து மிகவும் ஆத்திரமுற்றுள்ளதுடன், ஆழமாக நனவடைந்துமுள்ளது. வட துருவமுனை உட்பட உலகின் எந்தப் பகுதியும் பரந்த பூசலைத் தோற்றுவிக்கக்கூடிய சாத்தியத்திலிருந்து இருந்து விதிவிலக்கு பெறவில்லை.

31. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் வெடிப்பு, பூகோள உற்பத்தி மற்றும் தேசிய அரசு அமைப்புமுறை ஆகியவற்றிற்கு இடையே இருக்கும் முரண்பாட்டின் மிக ஒன்று பெருத்த வெளிப்பாடாகும். உலகப் பொருளாதாரம் ஒரு மில்லியன் வணிக, நிதிய இழைகளால் ஒருமைப்பட்டிருந்தாலும்கூட, உலகம் இன்னமும் மூலதனத்தின் மாறுபட்ட, போட்டித்தன்மை கொண்ட பிரிவுகளை பிரதிநிதிப்படுத்தும் தேசங்களாக பிளவுபடுத்தப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு தேசமும் அதனுடைய சொந்த முதலாளித்துவ வர்க்கத்தின் நலன்களை பாதுகாக்க இப்போது தலையிடுகின்றது. "உன்னுடைய அண்டை நாட்டை பிச்சைக்கார நாடாக்கு" என்னும் கொள்கையை கடைபிடிப்பதாக ஜேர்மனியை ஐரோப்பிய விமர்சகர்கள் கண்டித்துள்ளனர். அமெரிக்காவில் தொழில்துறை பொருளாதார ஊக்கப் பொதியின் ஒரு விதியாக "அமெரிக்கப் பொருட்களை வாங்குக" என்பதற்கு அழைப்புவிடப்படுகிறது. செப்டம்பர்-அக்டோபர் பொருளாதார சரிவில் இருந்து நடைபெறும் பல கூட்டங்களில் உலகின் முக்கிய சக்திகளால் பொருளாதார நெருக்கடி தொடர்பாக ஒரு ஒருங்கிணைந்த மூலோபாயத்தை முன்வைத்து இதற்குள்ளிருந்து வெளியே வரமுடியவில்லை. தேசிய சுயநலத்தின் ஒருங்கிணைப்பு மற்றும் சர்வதேசரீதியாக ஒன்றில்ஒன்று தங்கியுள்ள தன்மை, முதலாளித்துவத்திற்குள் போர் மூலம்தான் தீர்க்கப்படமுடியும். அதே நேரத்தில் பெருகிவரும் இந்த பதட்டங்களே உலகப் பொருளாதாரத்தில் மொத்த உறுதியற்ற தன்மையில் ஒரு முக்கிய காரணியாகிவிடும்.

32. உலக மக்களுக்கு இதன் தாக்கங்கள் பாரியளவிலானவை. பாலஸ்தீனிய மக்கள்மீது இஸ்ரேல் நடத்தும் கொடூரத் தாக்குதல் சியோனிச திட்டத்தின் பிற்போக்குத் தன்மையை அம்பலப்படுத்துவது மட்டும் அல்லாமல், சர்வதேச தொழிலாள வர்க்கம் மற்றும் அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் ஓர் எச்சரிக்கையாகவும் உள்ளது. சர்வதேச சட்டம் தகர்ந்துபோதல், வெளியுறவுக் கொள்கையில் அப்பட்டமான குற்றம் சார்ந்த தன்மை இருப்பது, பொதுமக்கள் மீது வழமையாக கொடுமைகளை நடத்துவது ஆகியவை அரசியல் வாழ்வின் மத்திய கூறுபாடுகளாகி வருகின்றன. இராணுவ ஏடுகளில் அமெரிக்கா பல்லுஜாவிலும், இஸ்ரேல் காசாவிலும் நடத்தும் அந்த வகையான நடவடிக்கைகள் வரவிருக்கும் காலங்களில் இன்னும் சாதாரணமாக அதிகரிக்கும் என வலியுறுத்திக் கூறப்பட்டுள்ளது.

ஒபாமா நிர்வாகம்

33. பராக் ஒபாமா அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்க உள்ள நிலைமை ஆழ்ந்த சமூக மற்றும் அரசியல் அதிருப்தியின் பின்னணியில் நிகழ்கிறது. ஏற்கனவே இருக்கும் போருக்கு ஏதிரான ஆழ்ந்த மக்கள் எதிர்ப்பை தவிர பொருளாதார நெருக்கடியும் ஜனாதிபதித் தேர்தலில் ஒரு முக்கிய பங்கைக் கொண்டிருந்தது. பொருளாதார மந்தநிலை ஆழமாகி போகும் நிலையில், மில்லியன் கணக்கான மக்கள் நவம்பர் 4ம் தேதி ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் நடக்கும் போர்களுக்கு ஒரு முற்றுப்புள்ளி வேண்டும் என்ற விருப்பத்துடன் வாக்களித்தனர்; சித்திரவதைகள் நிறுத்தப்பட வேண்டும், ஜனநாயக உரிமைகள் அழிக்கப்படுவது நிறுத்தப்பட வேண்டும், செல்வந்தர்களையும் பெருநிறுவனங்களின் உயரடுக்குகளை மட்டும் ஆதரிக்கும் பொருளாதாரக் கொள்கைகள் மாற்றப்பட வேண்டும் என்றும் விரும்பினர். ஜனநாயகக் கட்சி இந்தக் கொள்கைகள் அனைத்தையும் செயல்படுத்தப்படுவதில் முக்கியபங்கை கொண்டிருப்பதாக பாசாங்கு செய்தாலும், அமெரிக்க இரு கட்சி முறையின் பிரத்தியேக தன்மையின் அர்த்தமானது சமூக எதிர்ப்பு ஜனநாயகக் கட்சியின் வேட்பாளரை தேர்ந்தெடுப்பதனூடாக வடிவமெடுக்கின்றது.

34. ஆனால் ஆளும் உயரடுக்கின் நிலைப்பாட்டில் இருந்து, ஒபாமாவின் அரசியல் அதிகார ஏற்றம் முற்றிலும் மாறுபட்ட செயலுக்கு உதவியது. அரசியல் மற்றும் வெளியுறவு கொள்கை நிறுவுதலில் ஒரு முக்கியமான பிரிவு ஒபாமாவின் தேர்தலில் ஒரு தந்திரோபாயமான மாற்றத்திற்கான வாய்ப்பைக் கண்டது. புஷ் நிர்வாகத்தின் வெளியுறவுக் கொள்கையின் செயற்பாடு அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நலன்களுக்குப் பேரழிவு தரக்கூடியதாக இருந்ததெனக் கருதப்பட்டது. ஒரு மறு-ஸ்திரப்படுத்தல் தீவிரமாக தேவைப்பட்டது. முதல் ஆபிரிக்க அமெரிக்க ஜனாதிபதி என்ற ஒபாமாவின் அந்தஸ்துத்திறன் வெகுஜனசெய்தி ஊடகங்கள் உதவியுடனும் மற்றும் சிறந்த எழுத்தாக்கங்களுடைய சந்தைப்படுத்தல் பிரச்சாரத்தின் மூலமும், அமெரிக்க உள்நாட்டு அல்லது வெளிநாட்டுக் கொள்கைகளின் அஸ்திவாரங்களுக்கு எந்த சவாலும் இல்லாமல் "மாற்றம்" என அவரை விற்கப்பட முடியும் என்று கருதப்பட்டது.

35. தேர்தல் பிரச்சாரக்காலம் முழுவதும் சோசலிச சமத்துவக் கட்சி ஒபாமாவும் ஜனநாயகக் கட்சியும் புஷ் நிர்வாகத்திற்கு எந்த உண்மையான மாற்றீட்டையும் கொடுக்கும் என்ற போலித்தோற்றத்திற்கு எதிராகத்தான் எச்சரித்தது. தேர்தலில் தன்னுடைய வேட்பாளர்களையே நிறுத்தி வைத்து ஒரு சுயாதீன சோசலிச முன்னோக்கையும் கொடுத்து தேர்தலில் தலையிட்டது. ஒபமாவிற்கு வாக்களிக்க வேண்டும் என்று கூறப்பட்ட போக்குகள் அனைத்தையும் கடுமையாக எதிர்த்தது; அதே போல் மக்களுடைய எதிர்ப்பு அவரை இறுதியில் இடதிற்கு நகர்த்தும் என்ற நப்பாசைகளை முன்னெடுப்பதையும் நிராகரித்தது.

36. தேர்தல் முடிந்த பின் உலக சோசலிச வலைத் தளம், தொழிலாள வர்க்கத்திடம் பொருளாதார நெருக்கடி ஒரு சமூக எதிர்ப்பை தூண்டும் என்று விளக்கியது; அது புதிய அரசாங்கத்துடன் இன்னும் ஒரு அதிகரித்த வகையில் நேரடி மோதலுக்கும் வழிவகுக்கும் என்றும் கூறியது.

தன்னுடைய சமூக நலன்களுக்காக போராட தொழிலாள வர்க்கம் ஆரம்பித்து ஒபாமா நிர்வாகத்துடன் மோதலுக்கு வந்தால் என்ன நடக்கும்? ஒபாமா நிர்வாகத்தின் வர்க்கத்தன்மை வெளிப்பட்டு தொழிலாளர்கள் அதை எதிர்க்க முன்வந்தால் என்ன நடக்கும்? பின் தாராளவாதத்தின் வர்க்க அடிப்படையானது ஒரு பிரிவான முதலாளித்துவ வர்க்கத்தினதும் குட்டி முதலாளித்துவ வர்க்கத்தினதும் ஓர் அரசியல் நிலைப்பாடு என்பது வெளிப்படுத்தப்பட்டுவிடுவதோடு; இவற்றையொட்டி அதன் அடிப்படைப் பிற்போக்குத்தன்மை அம்பலப்படுத்தப்பட்டுவிடும்.

ஒபாமா வெற்றி பற்றிய ஆரம்ப களிப்பு எப்படி இருந்தாலும், ஆழமடைந்து கொண்டிருக்கும் பொருளாதார நெருக்கடி தாமதமாக அல்லாது விரைவாக பல மில்லியன் அமெரிக்கர்களுடைய வாழ்வில் உணரப்படுவதுடன், புதிய நிர்வாகத்தின் அடித்தளத்தில் இருக்கும் வர்க்க நலன்களை தெளிவுபடுத்த தொடங்கும். அதையொட்டி அமெரிக்காவில் ஒரு புதிய வர்க்கப் போராட்டத்திற்கான காலத்திற்கு அரங்கு அமையும். ("One week since the election of Obama").

37. இப்பகுப்பாய்வு விரைவிலேயே உறுதி செய்யப்பட்டது. "சுதந்திர உலகின் தலைவர்" என்று தன்னுடைய நிலைப்பாட்டை அவர் முறையாக ஏற்பதற்கு முன்னரே, தன்னுடைய மந்திரிசபைத் தேர்ந்தெடுப்புக்களில், தன்னுடைய திட்டமிட்டுள்ள பொருளாதார "ஊக்கப் பொதியில்", காசா மீதான இஸ்ரேல் தாக்குதலில் தன்னுடைய மெளனத்தில், ஒபாமா பெருநிறுவன உயரடுக்கின் மிகச் சக்திவாய்ந்த பிரிவுகளுக்கு தன்னுடைய விசுவாசத்தை நிரூபணம் செய்து கொண்டு இருக்கிறார். தந்திரோபாயத்திலும் பேச்சுக்குறிப்புக்களிலும் என்னவிதமான மாற்றங்கள் இருந்தபோதிலும், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உலகளாவிய நலன்களின் குறிக்கோள்களில் இருந்து பின்வாங்குதலை கைவிடாமல் ஒருபுறம் இருக்க, அமெரிக்க இராணுவ இயந்திரத்தை அப்புறப்படுத்தல் என்பதுகூட இராது. ஒபாமா, புஷ்ஷின் பாதுகாப்பு மந்திரியாக இருந்து "படைகள் விரிவாக்க" கருத்திற்கு உருக் கொடுத்த, ரொபேர்ட் கேட்ஸை பதவியில் தக்க வைத்துள்ளார்; அவர் புதிய நிர்வாகத்தின் வெளியுறவுக் கொள்கையின் போக்கு பற்றி Foreign Affairs ன் சமீபத்திய இதழில் தெளிவாக்கியுள்ளார்: அவையாவன, ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் போர்கள் தொடரப்படும்; சீனா, ரஷ்யா உட்பட எதிர்கால எதிரிகளாகக்கூடிய நாடுகளின் மீது அமெரிக்கா மரபார்ந்த இராணுவ மேலாதிக்கத்தை தக்க வைத்துக் கொள்ளுதல்; மற்றும் கூடுதலான ஆக்கிரமிப்புகளுக்கு தயாரித்தல் மற்றும் "எதிர்-கிளர்ச்சி நடவடிக்கைகளுக்கும்" தயாரிப்பு செய்தல். நிதி மந்திரி பதவிக்கு ஒபாமா போல்சன் மற்றும் பெர்னன்கேயுடன் வோல் ஸ்ட்ரீட் பிணை எடுப்புக்களுக்கு முக்கிய உருக்கொடுத்தவர்களில் ஒருவரான டிமோதி கீத்னரை தேர்ந்தெடுத்துள்ளார். வங்கிகளுக்கு பாரியளவில் நிதியங்கள் வழங்கும் கொள்கையை அவருடைய நிர்வாகம் தொடரும் என்பதையும் ஒபாமா தெளிவாக்கியுள்ளார். தன்னை தேர்ந்தெடுத்த வாக்களார்கள் விருப்பத்தை விசமத்தனமான முறையில் அவர் நிராகரித்துள்ளது கிட்டத்தட்ட ஒரு ஆத்திரமூட்டும் தன்மையைக் கொண்டுள்ளது. அவருக்கு வாக்களித்த மில்லியன் கணக்கான மக்களின் அரசியல், அறநெறி உணர்வை பற்றி அசட்டைசெய்யும் தன்மையை அவர் கொண்டிருப்பதை நிரூபிக்கும் வாய்ப்பு எதுவும் தவறவிடப்படவில்லை. ஒரு சமீபத்திய பேட்டியில் ஒபாமா தான் முன்னாள் துணை ஜனாதிபதி சென்னியின் "நல்ல ஆலோசனையான", புதிய ஜனாதிபதி "முழுமையற்ற தகவல் அல்லது பிரச்சார வனப்புரையின் அடிப்படையில் தீர்ப்புரைகளை மேற்கொள்ளக்கூடாது", அதாவது அமெரிக்க மக்களுக்கு கொடுத்த உறுதிமொழிகளின் அடித்தளத்தில் இருக்கக் கூடாது என்று ஒபாமாவின் சொந்த வார்த்தைகளில் தான் நன்றியறிதலுடன் இருப்பதாகக் கூறினார். புஷ் நிர்வாகத்தின் சித்திரவதை உட்பட சட்டவிரோத செயல்கள் பற்றி தான் விசாரணை நடத்த இருப்பதாக இல்லை என்றும் ஒபாமா கூறினார். "பின்னோக்கி பார்ப்பதற்கு மாறாக, நாம் முன்னோக்கி பார்க்க வேண்டும்" என்று அவர் அறிவித்தார்.

38. தன்னுடைய பிரச்சார உறுதிமொழிகளை வியப்புத் தரும் வகையில் ஒபாமா ஒதுக்கிவிட்டது இவருடைய சொந்த நேர்மையற்ற தன்மை, வெறுப்பு மனப்பான்மை பற்றி மிக அதிகம் கூறுகிறது. அமெரிக்க ஜனநாயக முறையில் இருக்கும் ஆழ்ந்த நெருக்கடியை இது பிரதிபலிக்கிறது. தற்போதுள்ள அமைப்புகளும் அரசியல் வடிவமைப்பும் மக்களின் விருப்பத்தின் ஜனநாயக வெளிப்பாட்டைப் நடைமுறைப்படுத்தக்கூடியவையல்ல. ஒரு ஜனநாயகக் கட்சிக்காரர் அல்லது குடியரசுக் கட்சிக்காரர் என்று எவர் பதவியில் இருந்தாலும், அது அரசாங்கக் கொள்கையின் அடிப்படை திசையில் எந்த பாதிப்பையும் கொள்ளுவது இல்லை. "இரு கட்சி" முறை இன்னும் அப்பட்டமான முறையில் ஆளும் நிதியத் தன்னலக் குழுவின் கருவியாகத்தான் அரசியல் அதிகாரத்தை செயல்படுத்தி நாட்டை கட்டுப்படுத்தல் நடைபெறுகிறது. இந்த அடிப்படை அரசியல் உண்மையில் இருந்து ஒபாமா நிர்வாகத்தின் போக்கு மக்கள் அழுத்தத்தையொட்டி "இடதுபுறம்" செல்லும் என்று சில பலவித இடது-தாராள, குட்டி முதலாளித்துவ எதிர்ப்பு அமைப்புக்கள், ஜனநாயகக் கட்சியுடன் சார்பு உடையவை கூறுவது போல் மாறாது என்பது தெரியவரும். போர் மற்றும் சமத்துவமற்ற நிலைக்கு ஒரு முற்றுப்புள்ளி, அமெரிக்க ஏகாதிபத்திய குற்றங்களுக்கு பொறுப்புக் கூறவைத்தல் ஆகியவை ஒரு இழிந்த முதலாளித்துவ-ஏகாதிபத்திய ஆட்சியின் வடிவமைபிற்குள் அடையப்பட மாட்டாது. ஒபாமா பிரச்சாரத்தின்போது பயன்படுத்தப்பட்ட வெற்று மந்திரமான "மாற்றம்" ஒன்றும் தேவை இல்லை, தேவைப்படுவது ஒரு சமூகப் புரட்சிதான்.

39. ஒபாமாவின் தேர்வில் ஒரு காத்திரமான தாக்கம் இருந்தது என்றால், அது வர்க்கப் போராட்டம் மற்றும் முதலாளித்துவ சமூகத்தின் அடக்குமுறை, சுரண்டும் தன்மையில் இருந்து திசை திருப்பும் ஒருவழிவகையாக "அடையாள அரசியல்" முறையை பயன்படுத்துவதையும் மற்றும் ஜனநாயகக் கட்சியையும் மதிப்பிழக்கசெய்வதாகும். தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியமே தேவைப்படும் சமூக சமத்துவத்திற்கான போராட்டம் பல சிறுபான்மை மற்றும்/அல்லது ஒடுக்கப்பட்ட பிரிவுகளுக்கு சமூகச் சலுகைகளை கொடுப்பதால் பிரதியீடு செய்யப்பட்டது. பல தசாப்தங்களாக அமெரிக்க தாராளவாதத்திற்காக குரல் கொடுப்பவர்கள் பல குட்டி முதலாளித்துவ முற்போக்கு குழுக்களின் ஆதரவுடன் இனம், பால் மற்றும் ஆண் பெண்பால் வேறுபாடுகள்தான் அமெரிக்க சமூகத்தின் அடிப்படை பிரிவுகளை என உயர்த்திப்பிடிக்க முற்பட்டதுடன், அதே நேரத்தில் வேண்டுமேன்றே வர்க்கத்தின் முக்கியத்துவத்தை மறைக்கின்றனர். அடையாள அரசியலின் உயர்ச்சி ஜனநாயகக் கட்சி வலதிற்கு தீவிரமாக நகர்ந்ததுடன் இணைந்து வந்துள்ளது. எவ்வாறிருந்தபோதிலும், பாதிக்கப்பட்டவர்களுக்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதும், அத்துடன் இணைந்துவந்த அதேபோன்ற கொள்கைகளும் சமூக சமத்துவமின்மையை ஆழப்படுத்தித்தான் உள்ளன; இதில் கறுப்பு இன மக்களிடையே சமூக சமத்துவமின்மை பாரியளவில் அதிகரித்துள்ளதும் அடங்கும். ஒபாமா தேர்ந்தெடுக்கப்பட்டபின், இனரீதியான அரசியல் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும். அமெரிக்காவிலும் ஒவ்வொரு நாட்டிலும் தீர்மானகரமான சமூகப் பிரிவு வர்க்கம் என்பதாகவே உள்ளது. வர்க்கப் போராட்டங்கள் வெடிக்கையில் இவை தாமதமாக அல்லாது மாறாக விரைவிலேயே புதிய ஒபாமா அரசாங்கத்திற்கு எதிராக தோன்றும்.

சோசலிசமும் தொழிலாள வர்க்கமும்

40. ஒவ்வொரு வரலாற்று நெருக்கடியும் முக்கிய வர்க்கங்களை ஒரு சுயாதீன நிலைப்பாட்டை கொண்டு கூடுதலான அல்லது குறைவான தெளிவுத்தன்மையுடன் ஒரு வர்க்கத் தீர்வைக் காண பலவந்தமாக நிர்ப்பந்திக்கின்றது. தேசிய ஐக்கியம், பொதுத் தியாகம் என்று ஆரம்பத்தில் கொடுக்கப்படும் அழைப்புக்கள் ஒன்றையொன்று எதிர்குற்றச்சாட்டுவதினுள் விரைவில் கரைந்து, விரோதத் தன்மை மற்றும் வெளிப்படையான பூசல்களும் அதிகரிக்கும். இந்த நிகழ்போக்கு எப்படி வெளிப்படும் என்பதை துல்லிய கால அட்டவணை மூலம் வெளிப்படுத்த இயலாது. 1929 சரிவின் பல ஆண்டுகள் கடக்கப்பட்ட பின்னர்தான் தொழிலாள வர்க்க இயக்கத்தால் அதற்கு பதிலளிக்கப்பட்டது. ஆனால் அந்த இயக்கம் முதலில் 1932 மேலதிக ஊதியங்களுக்கான ஆர்ப்பாட்டங்களுடன், வேலையின்மை உதவிநிதி கோரி வந்தது; பின்னர் 1934ம் ஆண்டு மின்னியாபோலிஸ், டொலிடோ, சான் பிரான்ஸிஸ்கோ ஆகிய இடங்களில் எழுச்சிப் போராட்டங்கள் வெடிப்பாக வெளிப்பட்டன. இவற்றைத் தொடர்ந்து 1935ம் ஆண்டு CIO அமைக்கப்பட்டு 1936-37 ம் ஆண்டு உள்ளிருப்பு வேலைநிறுத்தங்கள் வெடித்தெழுந்தன.

41. இந்த நெருக்கடி இப்பொழுது இன்னும் விரைவில் வெளிப்படக்கூடும் என நம்புவதற்கு பல காரணங்கள் உள்ளன. முதலில், நெருக்கடி தொடங்குவதற்கு முன்பே அமெரிக்க தொழிலாள வர்க்கம் ஒரு நீடித்த தேக்க நிலை மற்றும் அதன் வாழ்க்கைத் தரங்களில் சரிவு ஆகியவற்றை கண்டுள்ளது. கடந்த 35 ஆண்டுகள் அதிகரித்தளவிலான சுரண்டல் இருப்பது புறநிலையாக புலனாகியுள்ளது. மேலும் ஆளும் உயரடுக்கின் அனைத்து போலிப்பேச்சும் அகந்தையும் இருந்தாலும், அமெரிக்க முதலாளித்துவ அமைப்பு முறையின் நிலைமை 1930 களின் ஆரம்ப ஆண்டுகளில் இருந்ததை விட வரலாற்று நிலையில் மோசமாகத்தான் இருக்கிறது. "அச்சத்தைத் தவிர அச்சப்படுவதற்கு ஒன்றும் இல்லை" என்று ரூஸ்வெல்ட் கூறியபோது ஒருவித வரலாற்று நம்பிக்கைத்தன்மை அதன் அடித்தளத்தில் இருந்தது. ட்ரொட்ஸ்கி சிறப்பாக குறிப்பிட்டுள்ளது போல், "அமெரிக்காவின் செல்வக் கொழிப்பு ரூஸ்வெல்ட்டை அவருடைய சோதனைகளை செய்ய அனுமதிக்கிறது." இன்றைய நிலைமை முற்றிலும் மாறுபட்டதாகும். பல தசாப்தங்களாக கீழ்நோக்கிய வீழ்ச்சியில் இருக்கும் அமெரிக்க முதலாளித்துவத்தின் போக்கு இப்பொழுது ஒரு மலையுச்சியில் இருந்து விழுவது போல் உள்ளது.

42. அமெரிக்க முதலாளித்துவத்தின் புறநிலை நெருக்கடி தொழிலாள வர்க்கத்தின் சமூக நனவு மற்றும் அரசியல் சார்பு ஆகியவைகளின் அபிவிருத்தியில் தொலைநோக்கான விளைவுகளை கொண்டுள்ளது. இறுதிப் பகுப்பாய்வில், அமெரிக்காவில் சோசலிச நனவின் வளர்ச்சியில் உள்ள பெரிய பிரச்சினை, தொழில்துறை போராட்டக்குணம் மற்றும் வன்முறையிலான வர்க்கப் போராட்டக் காலப்பகுதியில்கூட அமெரிக்க முதலாளித்துவத்தின் சக்தி மற்றும் பொருளாதார சிறப்பு நிலை ஆகியவைகளை பெற்றிருந்த நிலையைத்தான் பிரதிபலித்தன. இந்த புறநிலை "அமெரிக்க விதிவிலக்குத் தனத்தின்" அஸ்திவாரம் --தனித்தன்மையான முறையில் அமெரிக்க முதலாளித்துவம் சோசலிச அறைகூவலை எதிர்கொண்டவிதம்-- கடந்த காலத்திற்குத்தான் பொருந்தும். பலமுறை வரலாறு காட்டியுள்ளது போல், உலகச் சரிவு மற்றும் பொருளாதார நெருக்கடி இணைந்து வந்திருப்பது, ஒரு புரட்சிக்கான உந்துதலாக உள்ளது.

43. சோசலிச சமத்துவக் கட்சியின் பணிகள் அமெரிக்க, உலக முதலாளித்துவத்தின் சமூக, பொருளாதார, அரசியல் நெருக்கடியின் தர்க்கத்தில் இருந்து முன்னெடுக்கப்படுகின்றன. இந்த ஆழ்ந்த நெருக்கடி அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் தொழிலாள வர்க்கம் சமூக, அரசியல் தீவிரமயப்படுத்தப்படுதலுக்கு செல்ல வகை செய்யும் என்று கட்சி எதிர்பார்க்கிறது. இந்த தீவிரமயப்படுத்தப்படுதலானது பிற்போக்குத்தன தொழிற்சங்கங்களின் அதிகாரத்துவ தளைகளில் இருந்து முறித்துக் கொள்ளும் முயற்சிகள் கொண்ட பரந்துபட்ட போராட்டங்களின் வளர்ச்சியின் மூலம் வெளிப்பாட்டை கண்டுகொள்வதுடன், அதிகரித்தளவில் அரசியல் மற்றும் முதலாளித்துவ எதிர்ப்பு பரிமாணங்களைக் கொள்ளும். இப்போக்கு ஏற்கனவே 2008 நிகழ்வுகளில் தெரியவந்துள்ளது. Republic Windows and Doors நிறுவன ஆலை ஆக்கிரமிப்பு ஒரு முக்கிய முற்போக்கான அடியாகும்- --இது பொருளாதார நெருக்கடிக்கு தொழிலாளர்களின் ஒரு பிரிவு எடுத்த முதல் சுயாதீன நடவடிக்கை ஆகும். கிரேக்கத்தில் ஒரு இளைஞர் கொல்லப்பட்டது மக்கள் எதிர்ப்பு அலைகளால் எதிர்கொள்ளப்பட்டது; அது நாட்டின் சமூக நெருக்கடியுடன் இணைந்து ஐரோப்பா முழுவதும் பரவத் தொடங்கியது. இவை ஆரம்ப அடையாளங்கள்தான். நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும், உலகம் முழுவதும் பரந்துபட்ட போராட்டங்கள் வளர்ச்சியுறும், சோசலிச சமத்துவக் கட்சியின் பணிகள் மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழுவின் பல பிரிவுகளின் பணி இவற்றில் தலையிட்டு தலைமை வழங்குவதாகும்.

சோசலிச சமத்துவக் கட்சியின் அரசியல் தயாரிப்பு

44. 2008 ம் ஆண்டில் சோசலிச சமத்துவக் கட்சி வர்க்கப் போராட்டம் மற்றும் எமது இயக்கத்தின் பெருகிவரும் செல்வாக்கு இவற்றை முன்னறிந்துகொண்டு எழுச்சியை எதிர்பார்த்த நடவடிக்கைகளை மேற்கொண்டது. நிதிய நெருக்கடி வெடிப்பதற்கு ஒரு சில வாரங்களுக்கு முன்பு ஆகஸ்ட் மாதம் சோசலிச சமத்துவகட்சி அதன் நிறுவன மாநாட்டை நடத்தியது. இந்த மாநாடு நான்காம் அகில வரலாற்றில் ஒரு மைல்கல் ஆகும்; அமெரிக்க மற்றும் சர்வதேச அளவில் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக நடைபெற்ற கோட்பாட்டு, அரசியல், அமைப்புப் பணிகளின் விளைவு ஆகும். பரந்த விவாதங்களுக்கு பின்னர், எமது போக்கு மற்றும் மரபினையும், முக்கிய வரலாற்று நிகழ்வுகளையும், நான்காம் அகிலத்தின் அனைத்துலக்குழுவினதும் சோசலிச சமத்துவகட்சியினதும் வேலைத்திட்டரீதியான அடையாளம் மற்றும் முன்னோக்கு ஆகியவற்றை நிர்ணயித்த அரசியல் போராட்டங்கள் மற்றும் கோட்பாட்டு மோதல்களை ஆகியவற்றை ஆய்வுசெய்த சோசலிச சமத்துவக் கட்சியின் வரலாற்று மற்றும் சர்வதேசிய அடித்தளங்கள் அகல்பேரலையில் ஏற்றுக் கொள்ளப்பட்டது. "ஒரு புரட்சிகர போராட்டம் என்பது கடந்தகாலப் போராட்டங்களின் அடிப்படையில்தான் வளர்க்கப்பட முடியும். எல்லாவற்றிற்கும் மேலாக சோசலிஸ்ட்டுக்களை பயிற்றுவிப்பது நான்காம் அகிலத்தின் வரலாறு பற்றிய விரிவான அறிவு பற்றி திருப்பப்படவேண்டும்" என்று நாம் வலியுறுத்தினோம். மார்க்சிசத்தை "இன்றைய நிலைக்கு கொண்டுவருவதற்கு" பல குட்டி முதலாளித்துவ கருத்துத் தழுவல்கள் தேவை எனக் கூறிய அனைத்து கருத்துக்களுக்கும் எதிராக, "ஸ்ராலினிசம், சீர்திருத்தவாதம், பப்லோவாத ட்ரொட்ஸ்கிச திருத்தல்வாதம் மற்றும் பலவித அரசியல் சந்தர்ப்பவாத வடிவங்களுக்கு எதிராக 1938ல் அது நிறுவப்பட்டதில் இருந்து நான்காம் அகிலம் நடத்திய போராட்டங்களில் சோசலிசப் புரட்சிக்கான கோட்பாட்டு, அரசியல் பார்வையின் வளர்ச்சியிலும் மார்க்சிசம் தனது மிக முற்போக்கான வெளிப்பாட்டை கொண்டுள்ளது." என்றும் நாம் வலியுறுத்தினோம்.

45. அம்மாநாட்டில் ஏற்கப்பட்ட சோசலிச சமத்துவக் கட்சியின் கோட்பாடுகள் பற்றிய அறிக்கை, கட்சியின் அரசியல் அடித்தளங்கள் பற்றிய தெளிவான முன்வைப்பு திரட்டாக இது இருக்கிறது. எமது அடிப்படை இலக்கை அது எடுத்துரைக்கிறது: "சோசலிச சமத்துவக் கட்சியின் வேலைத்திட்டம் தொழிலாள வர்க்கத்தின் நலன்களை வெளிப்படுத்துகிறது; தற்கால முதலாளித்துவ சமூகத்தில் இதுதான் முக்கிய, உறுதியான சர்வதேச புரட்சிகர சமூக சக்தியாக உள்ளது. சோசலிச சமத்துவக் கட்சியின் முக்கிய பணி சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்திற்கு அமெரிக்க தொழிலாளர்களின் ஆதரவை வெற்றிகொள்வது ஆகும்." முதலாளித்துவ கட்சிகளில் ஒன்றிற்கு அழுத்தம் கொடுக்கும் நோக்கத்தையுடையவர்களுக்கு எதிராக, "இந்த வேலைத்திட்டத்தின் அடிப்படையில் சோசலிச சமத்துவக் கட்சி தொழிலாள வர்க்கத்தை அரசியல் சக்தியாக அணிதிரட்டுவதற்கும் அமெரிக்காவில் ஒரு தொழிலாளர் அரசாங்கத்தை அமைப்பதற்கும் ஐக்கியப்படுத்தி அணிதிரட்டப்பட வேண்டும் என்று முயல்கிறது." என்று நாம் வலியுறுத்தினோம். இதையொட்டி ஒரு உண்மையான, ஜனநாயக, சமத்துவ, சோசலிச சமூகத்தின் வளர்ச்சிக்கான புறநிலை முன்னிபந்தனைகளை அது தோற்றுவிக்கும்." சோசலிசத்திற்கு ஒரு தேசியவகை வழி இல்லை என்றும் இந்த உண்மை உலகந்தழுவிய முதலாளித்துவ அமைப்புமுறை நெருக்கடி வெடிப்பினால் நன்கு தெளிவாகியுள்ளது. "இந்த இலக்குகள் ஒரு சர்வதேச மூலோபாயத்தின் வடிவமைப்பினுள்தான் அடையப்பட முடியும்; அதன் இலக்கு அனைத்து நாடுகளின் தொழிலாளர்கள் உலகந்தழுவிய முறையில் ஐக்கியப்படுத்தலும், உலக ஐக்கிய சோசலிச அரசுகளை உருவாக்குவதாகும்." மாநாடு ஒரு புதிய அமைப்பு யாப்பையும் ஏற்றது; அது கட்சிக்குள் புதிய சக்திகளை ஒருங்கிணைந்த வகையில் அமைப்புரீதியான வடிவங்களை உருவாக்குவதற்கும், கட்சி அதன் வரலாற்றுத் தொடர்ச்சி மற்றும் ஜனநாயக மத்தியப்படுத்திய அமைப்பு முறை ஆகியவற்றை தக்க வைத்துக் கொள்ளவும் வழிவகுக்கிறது.

46. சோசலிச சமத்துவக் கட்சியின் நிறுவன மாநாடு, தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர இயக்கத்தில் ஒரு புதிய கட்டத்தின் நனவான வெளிப்பாடும், நான்காம் அகிலத்தின் வளர்ச்சியில் ஒரு வரலாற்று மைல்கல் என்பதையும் பிரதிநிதித்துவப்படுத்தியது. அதன் அரசியல் சார்பு மற்றும் வர்க்க சார்பில், சோசலிச சமத்துவக் கட்சியின் மாநாடு ட்ரொட்ஸ்கிசத்திற்கு எதிரான பப்லோவாத அமைப்புக்களின் முயற்சிகளுக்கு முற்றிலும் எதிரான சமரசத்திற்கு இடமில்லாத நிலைப்பாட்டைக் கொண்டது; அவைகளை ஒரு புரட்சிகர சோசலிச வேலைத்திட்டத்தில் இருந்து முழுமையாக தொடர்பற்றவை எனக் காட்டுவதற்கும் முயன்றது. பிரெஞ்சு பப்லோவாத அமைப்பான Ligue Communiste Revolutionnaire (LCR) தன்னைக் கலைத்துவிட்டு "முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி" (NPA) என்று மாற்றிக் கொள்ள எடுத்துள்ள முடிவு 1953ல் நான்காம் அகிலத்துடன் கொண்ட ட்ரொட்ஸ்கிசத்துடனான முறிவின் உச்சக்கட்ட நிலையாகும். தன்னுடைய புதிய கட்சி ஒரு ட்ரொட்ஸ்கிச கட்சியாக இருக்காது என்றும், மேலும் அதன் வேலைத்திட்டம் தேசிய நிலைமைக்குள் வரையறுக்கப்படும் என்றும் LCR வெளிப்படையாக கூறியுள்ளது. இந்த பாசாங்குத்தன, இழிந்த, உண்மையை தவிர்க்கும் சொல்லாட்சி பப்லோவாத அமைப்புக்களால் தங்கள் பிற்போக்கு சார்பை மறைக்கப் பயன்படுத்துகிறது; LCR தலைவர்கள் "NPA ஒரு சர்வதேச அமைப்பாக இருக்கும் என்றும் சர்வதேச விஷயங்களின் சொந்த கொள்கையை கொண்டிருக்கும்" என்றும் கூறியுள்ளனர். வேறுவிதமாகக் கூறினால், புதிய கட்சியின் "சர்வதேசியம்" என்பது NPA இன் தேசிய நலன்களினால் தீர்மானிக்கப்படும். இத்தகைய வகைப்பட்ட "சர்வதேசியவாதம்தான்" பிரெஞ்சு வெளிவிவகார அமைச்சினதும் (Quay d' Orsay) மற்றும் பிரெஞ்சு முதலாளித்துவ அரசாங்கத்தின் இராஜதந்திர முறைகளுக்கு முற்றிலும் ஏற்கத்தக்க விதத்தில் இருப்பவை ஆகும்.

47. NPA இன் சர்வதேச வேலைத்திட்டம் இயற்றப்பட்டதானது, LCR கலைப்பிற்கு உந்துதல் கொடுத்த சமூக சக்திகளினதும், அரசியல் நலன்களினதும் அடையாளங்களை காட்டும் திறவுகோலைக் காட்டுகிறது. NPA மற்றும் அதேபோன்ற அமைப்புக்கள் நிறுவப்படுத்துல் (பிரிட்டனில் துரதிருஷ்டவசமான Respect Party என்னும் கட்சி போன்ற) ஓர் ஆழ்ந்த சமூக, அரசியல் நெருக்கடிக் காலத்தில் முதலாளித்துவ தேவைகளுக்கு முற்றிலும் நனவுடன் முக்கிய பப்லோவாத தலைவர்கள் (கிறிவின், சபாடோ, ஆகியோர்) காட்டும் நேரடி பிரதிபலிப்பாகும். ட்ரொட்ஸ்கி தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது போல், சமூக அதிருப்தியின் அதிகரிப்பை முதலாளித்துவம் எதிர்கொள்ளுகையில் "பல பாதுகாப்பு தடுப்புகளையும் மற்றும் பாதுகாப்பு செலுத்திகளையும்" தோற்றுவிக்கிறது; அதைத்தொடர்ந்து "எதிர்க்கட்சிகள் தோற்றுவிக்கப்படும், அவை நாளையே மறைந்து போகும், ஆனால் மத்தியதர கீழ் வகுப்பு முதலாளித்துவத்தை பகைத்துக்கொள்ளாமல் தன் எதிர்ப்பை வெளிப்படுத்தும் வாய்ப்பை உருவாக்கி கொடுப்பதன் மூலம் இன்று தங்கள் பணியை அவை செய்துமுடித்துவிடும்." (Terrorism and Communism [London: New Park, 1975], p. 53) NPA மற்றும் அதேபோன்ற பிற்போக்குத்தன முயற்சிகளுடைய முக்கிய நோக்கம் எப்படியும் ஒரு உண்மையான புரட்சிகர மார்க்சிச வேலைத்திட்டம் அதாவது ட்ரொட்ஸ்கிச தலைமை தொழிலாள வர்க்கத்திற்குள் வளரவிடாமல் தடுப்பது ஆகும்.

உலக சோசலிச வலைத் தளம்

48. சோசலிச சமத்துவக் கட்சி அகல்பேரவை முடிவடைந்த மூன்று மாதங்களுக்குள், அக்டோபர் 22 அன்று அனைத்துலகக் குழு உலக சோசலிச வலைத் தளத்தின் புதிய வடிவத்தை அறிமுகப்படுத்தியது. முற்றிலும் தொழில்நுட்ப, எழில்வண்ணத்தில் இந்த மறுவடிவம் ஒரு முக்கிய முன்னேற்றத்தை பிரதிபலிக்கிறது. ஆனால் இந்த மறுவடிவமைப்பின் முக்கிய நோக்கம் அரசியல் தன்மையுடையதாகும். அதாவது புறநிலை நிலைமைகள் முன்வைக்கும் தேவைகளை பூர்த்தி செய்யும் விதத்தில் உலக சோசலிச வலைத் தளத்தை வளர்த்து அதை அதிக வாசகர்கள் பெருகிய முறையில் படிக்குமாறு செய்தல் என்பதாகும். புதிய வலைத் தளம், முன்னோக்கு என்னும் ஒரு பிரிவை அறிமுகப்படுத்தியுள்ளது; இது நாளாந்தரீதியில் முக்கிய அரசியல், கோட்பாட்டு மற்றும் பண்பாட்டு பிரச்சினையை எடுத்துக் கொள்கிறது. வலைத் தள மறு வடிவமைப்பை அறிமுகப்படுத்துகையில், ஆசிரியர் குழு விளக்கியது:

உலக சோசலிச வலைத் தளத்தின் அரசியல் நிலைநோக்கு மற்றும் கடமைகள், விரிந்தெழும் நெருக்கடியின் புறநிலை தாக்கங்களை மதிப்பீடு செய்வதில் இருந்து ஆரம்பிக்கிறது. சுருக்கமாக கூறினால், சர்வதேச ஆசிரியர் குழு கீழ்க்காணும் கருத்துக்களில் உறுதியாக உள்ளது:

1. அமெரிக்காவில் மையம் கொண்டுள்ள உலகந்தழுவிய நிதிய நெருக்கடி உலக முதலாளித்துவ அமைப்பு முறையின் வரலாற்று நெருக்கடியில் தீர்க்ககரமான திருப்புமுனையைக் குறிக்கிறது. முதலாளித்துவ உற்பத்தி முறையின் இயல்பான, தீர்க்க முடியாத முரண்பாடுகளை மார்க்சிச ஆய்வு செய்வது மாபெரும் நிரூபணத்தை பெற்றுள்ளது.

2. பொருளாதார நெருக்கடி ஆழமடைகையில் ஏற்கனவே முக்கிய ஏகாதிபத்திய, முதலாளித்துவ சக்திகளுக்கு இடையே இருக்கும் நெருக்கடிகள் கணிசமான அதிகரிக்கும். சர்வதேச அளவில் ஒருங்கிணைக்கப்பட்ட உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி மற்றும் தேசிய அரசுமைப்பு முறைக்கு இடையில் உள்ள அடிப்படை வரலாற்று முரண்பாடு என்பது மீண்டும் வெளிப்படையாக உலகப் போர் என்ற ஆபத்தை எழுப்பும். உலகப் பொருளாதார நிலைமையில் தன்னுடைய சரிவை ஈடுகட்டுவதற்காக அமெரிக்கா மேற்கொண்டுள்ள முயற்சி வியத்தகு முறையில் இருக்கும் நெருக்கடியை அம்பலப்படுத்தியுள்ளது; இது பெருகிய முறையில் பொறுப்பற்ற மற்றும் தடையற்ற இராணுவத் தன்மையை கொள்ளும்.

3. பொருளாதார நிலை மோசமாதல் என்பது தவிர்க்க முடியாமல் உலகளவில் வர்க்கப் போராட்ட எழுச்சிக்கு புத்துயிர் கொடுக்கும். தொழிலாள வர்க்கம் தீர்மானகரமான உறுதியுடன், தன்னுடைய போராட்டத்தை தடுத்து, காட்டிக் கொடுக்க முற்படும் பழைய அதிகாரத்துவ அமைப்புக்களான அரசியல் கட்சிகளையும் தொழிற்சங்கங்களின் முயற்சியை எதிர்க்கும்.

4. மார்க்சிச கோட்பாடு மற்றும் முன்னோக்கு, புரட்சிகர சோசலிச வேலைத்திட்டம் என்று நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு முன்வைத்து பெறப்பட்டுள்ள புதிய வாசகர் வட்டம் புதிதாக தீவிரமயப்படும் தொழிலாளர்கள், மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் அறிஜீவிகள் மத்தியிலிருந்து வெளிப்படுவர். மார்க்சிச கோட்பாட்டை தளமாகக் கொண்ட கட்சி ஒன்றுதான், அதாவது ட்ரொட்ஸ்கிச மரபை குழப்பத்திற்கு இடமின்றிக் காக்கும் கட்சி ஒன்றுதான் புதிய புரட்சிகர சகாப்தத்தின் அறைகூவல்களை எதிர்கொள்ள முடியும்.

அதிகரித்துவரும் நெருக்கடி பற்றிய மதிப்பீட்டின் அடிப்படையில் சர்வதேச ஆசிரியர் குழு, உலக சோசலிச வலைத் தள மறு வடிவமைப்பு மற்றும் மறு பதிப்பை தொழிலாளர் சக்தியின் போராட்டம் மற்றும் சோசலிசம் நிறுவப்படுதல் ஆகியவற்றில் ஒரு முக்கியமான முன்னேற்றப் படியாக கருதுகிறது.

49. அனைத்துலகக் குழுவும் சோசலிச சமத்துவக் கட்சியும் உலக சோசலிச வலைத் தளத்தின் வாசகர் எண்ணிக்கையில் கணிசமான வளர்ச்சி தொடர்ந்து இருக்கும் என்று எதிர்பார்க்கின்றன. ஏற்கனவே இது உலகில் மிகவும் பரந்தளவில் வாசிக்கப்படும் சோசலிச வலைத் தளம் ஆகும். எங்கள் நோக்கம் இந்த வலைத் தளத்தை சோசலிசத்திற்கான போராட்டத்திற்காக அமெரிக்க, சர்வதேச தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டும் அரசியல், அறிவார்ந்த தன்மை மற்றும் அமைப்புரீதியான மையமாக்க வேண்டும் என்பதே.

50. சோசலிசத்திற்கான போராட்டத்தில் அமெரிக்க மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தை பரந்துபட்ட அளவில் பிரதானமான புரட்சிகர சக்தியாக ஆக்குவதே எமது நிலைநோக்காகும். இந்த முன்னோக்கு, சர்வதேச ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் வரலாறு மற்றும் மரபியங்களில் வேர் கொண்டது, உலகில் வேறு எந்த அரசியல் போக்கில் இருந்தும் முற்றிலும் தனித்தன்மை கொண்டது ஆகும். 2009 ம் ஆண்டில் சோசலிச சமத்துவக் கட்சி தன்னுடைய நடவடிக்கைகளை தொழிலாள வர்க்கத்தினுள் வளர்த்து பெருகிய முறையில் வேலையின்மை, ஊதியக் குறைப்புக்கள், சமூக நிலைமை மீதான தாக்குதல்கள் ஆகியவற்றிற்கு எதிராக நடக்கும் போராட்டங்களுக்கு தலைமை கொடுக்கும் என்பதுடன், அனைத்துலகக் குழுவுடன் ஐக்கியம்கொண்டு அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இராணுவவாதக் கொள்கைகளுக்கு எதிராகவும் நிற்கும். சர்வதேச சமூக சமத்துவத்திற்கான மாணவர் அமைப்பு ஆனது (ISSE) சோசலிச சமத்துவக் கட்சி, நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழுவுடன் இணைந்து இளைஞர் இயக்கத்தின் பணியையும் நாம் விரிவுபடுத்துவோம்; இளைஞர்கள் எதிர்கொள்ளும் அழுத்தம்மிக்க சமூக அரசியல் பிரச்சினைகளுக்கு எமது முன்னோக்கு ரீதியான பிரதிபலிப்பை காட்டுவோம்; பெருகும் கடன், கெளரவமான வேலைகள் கிடைக்காமை, போர் ஆபத்து, கட்டாய இராணுவ சேவை என்ற பிரச்சினைகள் எதிர்கொள்ளப்படும். மாணவர்களை தொழிலாள வர்க்கத்தின்பால் முற்றிலும் இணைப்போம். தொழிலாள வர்க்கத்தை நோக்கி திரும்புவது என்பது மார்க்சிச போராட்டத்துடன் நெருக்கமாக பிணைந்தது; சடப்பொருள் பகுப்பாய்வுடன் பிணைந்தது; மேலும் ஒரு புதிய தலைமுறை தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு, எமது இயக்கத்தின் காலம் முழுவதும் அதற்கு வழிகாட்டிய கோட்பாட்டுக் கருத்துக்களை அறிய வைக்கப்பட வேண்டும்.

51. 2009ம் ஆண்டு சோசலிச சமத்துவக் கட்சி சோசலிசத்திற்கான விவாதத்தில் ஈடுபடும். தொழிலாளர்களுக்கு அவர்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் தீவிர பிரச்சினைகளான பொருளாதார நெருக்கடி, மிகப் பெரிய வேலையில்லாத் திண்டாட்டம், வறுமை, உலகப் போர் என்ற ஆபத்து, புதிய நவ காலனித்துவ குற்றங்கள், சர்வாதிகார ஆட்சி அச்சுறுத்தல் ஆகியவை முதலாளித்துவத்தின் வடிவமைப்பிற்குள் தீர்க்கப்படமுடியாது என்பதை விளக்குவோம். இதற்கு மதிப்பிழந்த, நெருக்கடி நிறைந்த முதலாளித்துவத்திற்கு பதிலாக உலகந்தளுவிய ஒருங்கமைந்த பொருளாதார திட்டத்துடன், தனியார் இலாபத்திற்கு அல்லாமல் சமூகத் தேவை நலன்களுக்காக செயல்படும் மகத்தான உற்பத்தி சக்திகள் ஜனநாயகரீதியாக கட்டுப்படுத்தப்படும், உலக சமூகத்தை புரட்சிகரமாக மாற்றியமைக்கும் நோக்கத்தை கொண்ட தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீன அரசியல் கட்சியை கட்டியமைப்பது தேவையாகவுள்ளது.

52. வரலாறு மீண்டும் ஒரு தீவிர திருப்புமுனையில் உள்ளது. கடந்த 12 மாதங்கள் அசாதாரண முறையில் புறநிலை மாற்றத்தைக் கண்டுள்ளது. மனித இனம் உலகரீதியாக மனித சமுதாயத்தின் தலைவிதியை தீர்மானிக்கும் ஒரு புதிய அரசியல் கொந்தளிப்பினுள்ளும், சமூகப் போராட்டங்களினுள்ளும் நுழைகிறது. உலக சோசலிசப் புரட்சிக்கான புறநிலை முன்நிபந்தனைகள் மிக விரைவாக வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அகநிலை காரணியான ஒரு புரட்சிகர கட்சியின் பங்கு ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வடிவத்தை எடுக்கின்றது. புறநிலை கனிந்த தன்மைக்கும் தற்போதைய தொழிலாள வர்க்கத்தின் நனவிற்கும் இடையே இருக்கும் பிளவு கடக்கப்பட வேண்டும். இதற்கு எல்லாவற்றிற்கும் மேலாக, சோசலிச சமத்துவக் கட்சியில் தொழிலாளர்களும் இளைஞர்களும் அணிதிரட்டப்பட்டு, அவர்களுடைய அரசியல் கல்வி மார்க்சிச கோட்பாடு மற்றும் நான்காம் அகிலத்தில் வரலாறு ஆகியவற்றின் அடிப்படையில் இருக்க வேண்டும். இதுதான் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பணியாகும்; சோசலிச சமத்துவக் கட்சி 2009 இல் தன் முயற்சிகள் அனைத்தையும் இந்த திசையை நோக்கி திருப்பவேண்டும்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved