World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு

Israel withdraws from Gaza as evidence of war crimes emerges

யுத்த குற்றங்களின் ஆதாரங்கள் வெளியாவதை அடுத்து இஸ்ரேல் காசாவிலிருந்து வெளியேறுகிறது

By Jerry White
22 January 2009

Back to screen version

பாலஸ்தீன மாகாணங்கள் மீதான இஸ்ரேலின் மூன்று வார தாக்குதலின் போது நிகழ்த்தப்பட்ட யுத்த குற்றங்களின் புதிய ஆதாரங்கள் வெளியானதையடுத்து, புதனன்று காசா பகுதியில் இருந்து அதன் கடைசி துருப்புகளையும் இஸ்ரேல் இராணுவம் முறைப்படி திரும்ப பெற்றது.

காசாவில் இருந்து ராக்கெட்கள் வீசப்பட்டால், பலமான படையுடன் பதிலடி அளிக்க இராணுவம் தயாராக வைக்கப்பட்டிருக்கிறது என்ற எச்சரிக்கையுடன், இஸ்ரேல் துருப்புகள், பாதுகாப்பு அதிகாரி Tzachi Hanegbi உடன் இஸ்ரேலின் எல்லையோரங்களில் தொடர்ந்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

முன்னர் அணுக முடியாமல் இருந்த இடிபாட்டு பகுதிகளிலிருந்து, உடல்கள் வெளியில் இழுக்கப்படுவதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. காசாவின் சுகாதார அமைச்சகத்தின்படி, 410 குழந்தைகள், 104 பெண்கள் உட்பட, டிசம்பர் 27ல் தொடங்கப்பட்ட இஸ்ரேல் தாக்குதலின் இறப்பு எண்ணிக்கை தற்போது 1,300 ஆக உள்ளது. அண்ணளவாக 1,855 குழந்தைகள் மற்றும் 795 பெண்கள் உட்பட 5,300 பாலஸ்தீனியர்கள் காயப்பட்டுள்ளனர்.

பல வாரங்களுக்கு முந்தைய உடல்கள் எரிக்கப்படாமல் இருப்பதாலும், காசாவின் உள்கட்டமைப்பு சீரழிந்திருப்பதால் தெருக்களில் ஓடும் கழிவுநீரும் நோய்களை உண்டாக்க கூடும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. சுகாதார அமைச்சகத்தின்படி, எட்டு மருத்துவமனைகள் உட்பட முப்பத்தி நான்கு சுகாதார அமைப்புகள் குண்டுவீச்சினால் நாசமாக்கப்பட்டன அல்லது அழிக்கப்பட்டன; பணியில் இருந்தபோது 16 சுகாதார தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர், 22 நபர்களுக்கு காயம் ஏற்பட்டது.

தண்ணீர் மற்றும் மின்சார பற்றாக்குறையால் இந்த நெருக்கடி மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான குழு தலைவர், ஜோன் ஹோல்ம்ஸ் கூறுகையில், "400,000 காசா மக்கள் (மக்கள்தொகையில் சுமார் மூன்றில் ஒரு பங்கினர்) இன்னும் தண்ணீர் இல்லாமல் தான் இருக்கிறார்கள்; மின்சாரம் பாதி நாளுக்கும் குறைவாக தான் இருக்கிறது. நூறாயிரக்கணக்கானவர்கள் தங்களின் வீடுகளை விட்டு வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்; குறைந்தபட்சம் 100,000 மக்கள் வீடற்றவர்களாக ஆக்கப்பட்டுள்ளனர்" என்றார்.

காசா பேரழிவுகளை பார்வையிட்ட ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கி-மூன், அது "அதிர்ச்சியூட்டுவதாகவும், எரிச்சரிக்கை விடுப்பதாகவும்" உள்ளது என்று குறிப்பிட்டதுடன், உடனடி உதவியாக சுமார் $330 மில்லியன் டாலர் தேவைப்படும் என்று தெரிவித்தார்.

பாலஸ்தீனிய மற்றும் சர்வதேச கணிப்புகளின்படி, மறுகட்டமைப்புக்கு $2 பில்லியனுக்கு நெருக்கமாக செலவாக கூடும். 5,000த்திற்கும் மேலான கட்டிடங்கள் முழுமையாக அழிக்கப்பட்டுவிட்டன என்பதுடன் இஸ்ரேலிய பாதுகாப்பு படையின் விமான தாக்குதல்கள் மற்றும் ஏவுகணை மற்றும் டாங்கி தாக்குதல்களால் மேலும் 20,000 கட்டிடங்கள் நாசமாக்கப்பட்டோ அல்லது பகுதியாக அழிக்கப்பட்டோ விட்டன.

காசாவின் மக்கள் நெருக்கமாக வாழும் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளை பாஸ்பரஸ் இராணுவ தளவாடங்களை இஸ்ரேல் பயன்படுத்தியதற்காக, இஸ்ரேலின் யுத்த குற்றங்களை குற்றஞ்சாட்டுவதில் Amnesty International (AI) அமைப்பும் வேறு பல மனித உரிமை அமைப்புகளுடன் இணைந்து கொண்டுள்ளது. தோலில் படியக்கூடியதும், ஆக்சிஜன் நீக்கப்படும் வரை தசை மற்றும் எலும்புகள் மூலம் எரியக்கூடியதுமான napalm போன்ற பொருளைக் குறிப்பிட்டு, AIன் ஓர் ஆராய்ச்சியாளரான Donatella Rovera கூறுகையில், "அதன் தாறுமாறான விளைவுகள் மற்றும் பொதுமக்கள் மீதான அதன் பாதிப்புகள் குறித்த ஆதாரங்கள் இருந்த போதினும், இந்த வகையில் அது தொடர்ந்து பயன்படுத்தியது ஒரு யுத்த குற்றமேயாகும்." என்றார்.

ஞாயிறன்று போர்நிறுத்தம் தொடங்கியதை தொடர்ந்து, நான்கு நபர் Amnesty குழுவில் ஒருவராக காசாவிற்கு சென்ற ஒரு பிரிட்டிஷ் ஆயுத வல்லுனர் கிரிஷ் கோப்-ஸ்மித், பெருமளவில் இரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தி இருந்ததை தாம் கண்டதாக தெரிவித்தார். "இஸ்ரேலிய இராணுவத்தால் வீசப்பட்ட குண்டுகள் மற்றும் ஆயுதங்களால் தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கும் மரக்கட்டைகளும், மிச்சம் மீதிகளும் உட்பட, தெருக்கள் மற்றும் சந்துகளில் வெள்ளை பாஸ்பரஸ் பயன்படுத்தியதற்கான ஆதாரங்களை கொட்டி கிடப்பதை நாங்கள் பார்த்தோம்." என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

காசாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மீட்பு முகாம் மற்றும் Works Agencyன் சுவர்களில் இந்த இராணுவ தளவாடங்களை இஸ்ரேல் பயன்படுத்தியது. ஜனவரி 15ல் இந்த முகாம்கள் குண்டுகளால் தாக்கப்பட்ட போது, நூற்றுக்கணக்கான பாலஸ்தீனியர்கள் அகதிகளாக அங்கு இருந்தார்கள். அதே நாளில் நடந்த மற்றொரு சம்பவத்தில், காசா நகரிலுள்ள al-Quds மருத்துவமனையில் வெள்ளை பாஸ்பரஸ் குண்டு ஒன்று வந்து விழுந்தது. இதனால் ஏற்பட்ட தீயிலிருந்து நோயாளிகளைக் காப்பாற்ற, மருத்துவமனை பணியாளர்கள் நோயாளிகளை வெளியேற்ற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர்.

யுத்த குற்றங்களுக்கான குற்றச்சாட்டுகளில் இருந்து இராணுவ அதிகாரிகளைக் காப்பாற்றும் ஒரு நடவடிக்கையாக, Operation Cast Leadல் சம்பந்தப்பட்ட பட்டாலியன் தளபதிகளின் முழு பெயர்கள் மற்றும் புகைப்படங்களை வெளியிட முடியாது என இஸ்ரேலின் இராணுவ ரேடியோ அறிவித்தது. Jerusalem Post செய்தியின்படி, இஸ்ரேலிய பாதுகாப்பு அதிகாரிகளுக்கு எதிராக சர்வதேச யுத்த குற்ற வழக்குகள் பதிவு செய்யப்படும் என்பதற்கு எதிராக இந்த முடிவு எடுக்கப்பட்டது. இவ்வாறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டால், வெளிநாடுகளுக்கு பயணம் செய்யும் போது அவர்கள் வழக்குகளைச் சந்திக்க வேண்டியிருக்கும்.

காசா பகுதியில் நடந்த நடவடிக்கைகள் தொடர்பான ஆதாரங்களைச் சேகரிக்க, புலனாய்வு மற்றும் சட்ட வல்லுனர்களைக் கொண்ட, குற்றவியல் குழு என அழைக்கப்படும் ஒரு குழுவை அமைக்க பாதுகாப்பு மந்திரி எஹூட் பராக் இஸ்ரேல் இராணுவ படைக்கு உத்தரவிட்டு இருப்பதாக அந்த பத்திரிக்கை குறிப்பிட்டது. அது எதிர்கால வழக்குகளிலிருந்து இராணுவ தளபதிகளைக் காப்பாற்ற பயன்படுத்தப்படலாம். மீள்பார்வையிடுவதற்கும், ஆராய்வதற்காகவும் காசா பகுதிக்குள் அனுப்பப்பட்ட இஸ்ரேல் பாதுகாப்பு படையின் புகைப்பட குழுக்களால் எடுக்கப்பட்ட அனைத்து புகைப்படங்களையும் அந்த குழு ஏற்கனவே பெற்று கொண்டு விட்டது.

"Operation Cast Lead நடவடிக்கையைத் தொடர்ந்து இராணுவத்தினருக்கு எதிராக வழக்குகள் தொடரப்படலாம் என்று கடந்த வாரம் நீதி மந்திரி மெனாஹிம் முஜாஜ் எச்சரித்ததை அடுத்து, Operation Cast Leadஐ தொடர்புபடுத்தி சர்வதேச வழக்குகள் மீதான இஸ்ரேல் பாதுகாப்பு படையின் ஆயத்தங்களின் ஒரு பகுதியாக, இந்த குழு அமைக்கும் முடிவு எடுக்கப்பட்டது." என்று Jerusalem Post குறிப்பிட்டது.

கடந்த சில ஆண்டுகளில், காசா பிரிவு தளபதி ப்ரிகேடர் ஜெனரல் Aviv Kochavi மற்றும் முன்னாள் ஷென் பெட் சீஃப் Avi Dichter உட்பட பல இராணுவ மற்றும் புலனாய்வு முக்கியஸ்தர்கள், இங்கிலாந்தில் இறங்கியவுடன் கைதாக்கப்படுவோமோ என்ற அச்சத்தில் அங்கு செல்வதற்கான தங்கள் பயணத்தை இரத்து செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர். பாலஸ்தீனியர்களின் ஆதரவாளர்கள் பிரிட்டனின் சர்வதேச சட்ட விதிமுறைகளை பயன்படுத்தி வருகிறார்கள். அது, யுத்த குற்றங்களுக்கான தனிநபர் குற்றச்சாட்டுக்களை, குறிப்பாக குற்றம் செய்தவர் பிற நாட்டின் குடியுரிமை பெற்றவரானாலும் கூட அல்லது குற்றம் பிரிட்டன் மண்ணில் நடக்காமல் இருந்தாலும் கூட குற்றச்சாட்டுக்களைப் பதிவு செய்ய அனுமதிக்கிறது.

Jawalan.com வலைத் தளத்தை மேற்கோளிட்டு, புதனன்று வெளியுறவுத்துறை மந்திரி Tzipi Livni புரூசல்ஸ் வந்தவுடன், அவரை கைது செய்ய ஒரு பெல்ஜியம் நீதிமன்றத்திற்கு ஐரோப்பிய நீதிபதிகள் மனு செய்திருப்பதாக Haaretz இதழ் குறிப்பிட்டது. பெல்ஜியம் மற்றும் பிரான்ஸ் நாட்டவர்கள் சார்பில் வெளிப்படையாக குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டிருந்தது. தங்களின் உறவினர்கள் காசாவில் காயப்படுத்தப்பட்டனர் அல்லர் கொல்லப்பட்டனர் என்றும், யுத்த குற்றங்களுக்காக Livni கைது செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தியும் இவர்கள் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இஸ்ரேலிய மூத்த அரசாங்க அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு படைகளின் அதிகாரிகளால் நடத்தப்பட்ட குற்றங்களை விவரித்து, பெயரிடப்படாத ஓர் இஸ்ரேலிய மனித உரிமைகள் குழுவும் கூட ஒரு வலைத் தளத்தை (www. wanted.org.il) உருவாக்கி உள்ளது. பாதுகாப்புத்துறை மந்திரி எஹூட் பராக், பிரதம மந்திரி எஹூட் ஓல்மெர்ட், வெளியுறவுத்துறை மந்திரி Tzipi Livni, பாதுகாப்புத்துறை இணை மந்திரி Matan Vilnai, பொதுமக்கள் பாதுகாப்பு துறை மந்திரி Avi Dichter, தேசிய உள்கட்டமைப்பு மந்திரி பென்ஜமின் பென்-எலீஜர், இஸ்ரேலிய பாதுகாப்பு படை தலைவர் Gabi Ashkenazi மற்றும் அவருக்கு முன்னர் அப்பதவியிலிருந்தவர்களான Dan Halutz and Moshe Ya'alon, முன்னாள் விமானப்படை தளபதி Eliezer Shkedy மற்றும் பலருக்குமான "கைது ஆணைகளை" இந்த வலைத் தளம் பதிப்பித்திருந்தது.

எஹூட் பராக் மீதான குற்றச்சாட்டு ஆதாரங்கள் குறிப்பிடுவதாவது:

"2007 ஜூனில், காசாவில் இருந்த 1.5 மில்லியன் மீது பிரதிவாதிகள் (இஸ்ரேலியர்கள்) ஒரு முற்றுகையை ஏற்படுத்தினார்கள். 2009லும் தொடர்ந்து வரும் இந்த முற்றுகையானது, சர்வதேச விதியின்படி ஒட்டுமொத்த தண்டனையாகும். ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேற்பட்ட இந்த முற்றுகை பலத்த உணவு மற்றும் எரிபொருள் பற்றாக்குறையை ஏற்படுத்தியது; தண்ணீர் மற்றும் மின்சார வினியோக தட்டுப்பாட்டையும், கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலைகளுக்கு இடர்பாடுகளையும் ஏற்படுத்தியதுடன் மருந்துகள் மற்றும் முக்கிய மருத்துவ சாதனைகளுக்கும் பற்றாக்குறையை ஏற்படுத்தியது. இதனால் 1.5 மில்லியன் மக்களின் வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இது நான்காவது ஜெனீவா மாநாடு மற்றும் ரோம் நாடாளுமன்ற சட்ட தீர்மான மீறலாகும்."

2008 டிசம்பரில், பிரதிவாதிகள் காசாவில் பொதுமக்கள் வாழும் பகுதிகளில் விமான தாக்குதலுக்கு உத்தரவிட்டார்கள். இந்த தாக்குதலில் ஈடுபடுத்தப்பட்ட நூற்றுக்கணக்கான விமானங்கள், காசா மக்கள் மீது நூற்றுக்கணக்கான தொன் குண்டுகளை வீசின. அதில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என குறைந்தபட்சம் 1,200 மக்கள் கொல்லப்பட்டனர்; 5,300 மக்கள் காயமடைந்தனர். அந்த குண்டுகள் ஆயிரக்கணக்கான வீடுகளை நாசமாக்கின; நூறு ஆயிரக்கணக்கான மக்களை அது அகதிகளாக மாற்றியது.

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, பதவியேற்ற பின்னர் அவரின் முதல் நாளில் இஸ்ரேலிய பிரதம மந்திரி எஹூட் ஒல்மெர்ட்டையும், பாலஸ்தீனிய ஆணைய ஜனாதிபதி மொஹமது அப்பாஸையும் அழைத்து, "ஹமாஸ் மீண்டும் ஆயுதபாணியாவதை தடுக்கும் பொருட்டு கடத்தல் இல்லாத ஒரு சிறந்த ஆட்சி அமைக்க உதவுவதிலும், காசாவில் பாலஸ்தீனியர்களுக்கான மறுசீரமைப்பு முயற்சிகளில் பாலஸ்தீனிய ஆணையத்துடன் இணைந்து வசதிகள் அளிப்பதற்கும்" அவர் தமது விருப்பத்தை தெரிவித்திருந்தார்.

வெளியேறும் புஷ் நிர்வாகத்தால் மத்தியஸ்தம் செய்யப்பட்ட போர்நிறுத்த உடன்பாட்டை வலிமைப்படுத்தவும் ஒபாமா விருப்பம் தெரிவித்திருந்தார். மத்திய கிழக்கில் தொழில்நுட்பம், புலனாய்வு மற்றும் இராணுவ உபகரணங்களை நிறுவுவதிலும், காசாவிற்குள் ஆயுதங்கள் வருவதை குறிப்பாக ஈரானில் இருந்து ஆயுதங்கள் வருவதை தடுக்க நேட்டோ மற்றும் அரேபிய ஆட்சிகளுக்கு உதவுவதிலும் அமெரிக்காவின் வாக்குறுதிகளை அந்த உடன்படிக்கை கொண்டிருந்தது.

2006ல் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற ஹமாஸை ஒதுக்குவதற்கும், அதற்கு பதிலாக காசாவில் அப்பாஸ் தலைமையிலான அமெரிக்க கைப்பாவை அரசாங்கமான பாலஸ்தீனிய ஆணையத்தை மீண்டும் நிறுத்துவதற்குமான அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய முயற்சியின் ஒரு பகுதியாக இருக்கும் எகிப்திய ஜனாதிபதி ஹோஸ்னி முபாரக் மற்றும் ஜோர்டான் அரசர் அப்துல்லாஹ் II ஆகியோருடனும் கூட ஒபாமா பேசினார்.

இஸ்ரேலிய தாக்குதல் ஹமாஸை நசுக்க தவறிவிட்ட போதினும், இந்த இரத்தக்கறையானது ஒரு பாடத்தை ஒட்டுமொத்த பாலஸ்தீனிய மக்களுக்கும் குறிப்பிட்டு காட்டுவதாக இருந்தது. இஸ்ரேலிய துருப்புகளின் வெளியேற்றத்திற்கு பின்னர் காசாவில் அந்த அமைப்பிற்கு ஆதரவாக அங்கு பெரும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. ஓர் இஸ்ரேலிய பத்திரிகையாளர் David Essing, வெளியுறவு கொள்கை மற்றும் பாதுகாப்புத்துறை சார்ந்த வலைத் தளமான Isracastல் பின்வருமாறு எழுதினார்: "தீவிரவாத ஹமாஸினால் காசாவில் கொண்டு வரப்பட்டது போன்று மேற்கு கரை பாலஸ்தீனியர்கள் நிச்சயமாக விபரீதத்தை சந்திக்க வேண்டியிருக்கும். அத்துடன் அங்குள்ள பாலஸ்தீனியர்கள் ஜனாதிபதி அப்பாஸையும், யூத நாட்டுடனான அவரின் விட்டுகொடுக்கப்பட்ட கொள்கையையும் பின்தொடரவில்லை என்றால் காசாவிற்கு ஏற்பட்ட அதே தலைவிதியைத் தான் மேற்கு கரையும் அனுபவிக்கும்."


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved