World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு

Iran: Election clashes mount as West escalates pressure

ஈரான்: மேற்கு அழுத்தத்தை அதிகரிக்கையில் தேர்தல் பூசல்கள் அதிகரிக்கின்றன.

By Bill Van Auken
16 June 2009

Back to screen version

100,000 க்கும் அதிகமான மக்கள் திங்களன்று தெஹ்ரான் தெருக்களில் கடந்த வார ஜனாதிபதித் தேர்தல்கள் முடிவிற்கு எதிராக தெருக்களில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்; அதே நேரத்தில் அமெரிக்கா மற்றும் மேற்கு ஐரோப்பிய சக்திகள் எதிர்க்கட்சியின் குற்றச்சாட்டான வாக்களிப்பில் தில்லு முல்லு பற்றி விசாரணை நடத்துமாறு தங்களின் சொந்த கோரிக்கைகளை முன்வைத்துள்ளன.

இந்த எதிர்ப்பு ஜூன் 12 நடந்த தேர்தலில் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட்ட மீர் ஹோசைன் மெளசவியின் ஆதரவாளர்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாய் கலகம் உட்பட பல நடவடிக்கைகள் தொடர்ந்து எடுத்ததில் மிகப் பெரியது ஆகும். முன்னதாக அரசாங்கம் அனைத்து ஆர்ப்பாட்டங்களுக்கும் தடை விதித்தது; ஆனால் கூட்டத்தை கலைப்பதற்கு பாதுகாப்பு பிரிவுகள் எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை.

மொத்தத்தில் இது ஒரு அமைதியான ஆர்ப்பாட்டமாக இருந்தாலும், ஜனாதிபதி மஹ்முத் அஹ்மதிநெஜாட்டின் அரசாங்கத்திற்கு விசுவாசமாக இருக்கும் தன்னார்வ குடிப்படைக்குழு பஸிஜிக்கள் உபயோகிக்கும் வளாகத்திற்கு வெளியே பூசல் ஏற்பட்டது. ஒரு ஆர்ப்பாட்டக்காரர் கொல்லப்பட்டதாகவும் பலர் துப்பாக்கிச் சூட்டில் காயமுற்றதாகவும் கூறப்படுகிறது. அவ்விடத்தில் புகைப்படம் எடுக்க நின்றிருந்த புகைப்படக்காரர் செய்தி நிறுவனங்களிடம், கூட்டம் வளாகத்தைத் தாக்கியபின்தான் துப்பாக்கிச்சூடு நடந்தது என்றார்.

திங்கள் இரவு ஒளிபரப்பப்பட்ட பூசல்களைப் பற்றிய வீடியோ காட்சிகள், கூட்டம் கட்டிடத்தின் மீதும் காவல் காக்கும் போராளிகள் மீதும் கற்களை வீசுவதையும் அதற்கு அவர்கள் துப்பாக்கியால் சுட்டதையும் காண்பிகின்றன. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கூட்டம் கட்டிடத்திற்குத் தீ வைத்தது.

இதற்கு முந்தைய இரவு ஆயிரக்கணக்கான தெஹ்ரான் பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர்; "சர்வாதிகாரிக்கு மரணம்" என --அஹ்மதிநெஜாட்டைக் குறிப்பிட்டு--கோஷங்கள் எழுப்பி, கலகப்பிரிவு போலீசுடன் மோதினர். மாணவர்கள் கற்களையும் இன்ன பிறவற்றையும் போலீசார் மீது எறிந்தனர்; போலீசார் கண்ணீர்ப்புகை, பிளாஸ்டிக் தோட்டக்கள் மூலம் பதிலடி கொடுத்தனர்.

ஞாயிறன்றே அஹ்மதிநெஜாட் ஒரு மிகப் பெரிய வெற்றி அணியை தலைநகரத்தின் மையப்பகுதியில் நடத்தினார். மேலைச் செய்தி ஊடகத்தில் இது பற்றி அதிகக் குறிப்பு இல்லை; ஆனால் ஐரிஷ் டைம்ஸின் நிருபர் எழுதினார்: "புதிதாக மறுபடியும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி மஹ்மூத் அஹ்மதிநெஜாட்டின் பல்லாயிரக்கணக்கான ஆதரவாளர்கள் மத்திய தெஹ்ரானில் வெற்றி அணிவகுப்பு நடத்தியபின் வீடு திரும்பிய போது, சில மாவட்டங்கள் உணர்ச்சிப் பெரும் களிப்புடன் இருந்தன." ஈரானிய தலைநகரம் "ஒரு நகரம் என்பதற்குப் பதில் இரு நகரங்கள் என்ற உணர்வைக்காட்டியது". தெற்கு தெஹ்ரானில் வறியவர் இருக்கும் பகுதிகளில் களிப்பும், நகரத்தின் கூடுதல் செல்வம் நிறைந்த வட புறநகர்ப்பகுதிகளில் எதிர்ப்புக்களும் இருந்தன.

வெள்ளியன்று உத்தியோகபூர்வ தேர்தல் முடிவுகள் அஹ்மதிநெஜாட்டிற்கு 63 சதவிகித வாக்குகளையும் மெளசவிக்கு 34 சதவிகிதத்தையும் கொடுத்தன. மெளசவியின் ஆதரவாளர்கள் உடனே முடிவுகளைத் தில்லு முல்லு விளைவு என்று கண்டித்து அஹ்மதிநெஜாட்டையும் அரசாங்கத்தையும் தங்கள் விருப்பத்திற்கேற்ப "ஆட்சி மாற்றம்" செய்ததாகக் குற்றம் சாட்டினர். ஜனநாயக விரோதத் தன்மை அஹ்மதிநெஜாட் தலைமையில் இருந்த அரசாங்கத்தில் இருந்தததால், வாக்கு எண்ணிக்கையில் தில்லு முல்லு உறுதியாக இருந்திருக்கலாம் என்றாலும், மேலை செய்தி ஊடகம் எந்த வித உறுதியான சான்றுகளும் இல்லாமல் எதிர்க்கட்சியின் குற்றச் சாட்டுக்களான தேர்தல் மோசடி என்பதை எதிரொலித்தது.

வாஷிங்டன் போஸ்ட்டில் திங்களன்று வெளியிட்ட கட்டுரை ஒன்றில், வாக்காளர் கருத்தை அறிய ஏற்பாடு செய்த இரு அமெரிக்க அரசாங்கத் தொடர்பு இல்லாத குழுக்கள், அப்பகுதியில் இருக்கும் மதிப்பிற்குரிய கருத்துக் கணிப்பு அமைப்புக்களில் ஒன்றை பயன்படுத்தி, வெற்றி வித்தியாசம் மிகப் பெரிது என்பதால் வாக்கு மொத்தங்களும் மோசடி என்ற வாதங்களை நிராகரித்துள்ளன.

"ஈரான் தேர்தல் முடிவுகள் ஈரானிய மக்களின் விருப்பத்தை நன்கு பிரதிபலிக்கக்கூடும்" என்று, Terror Free Tormorrow Center for Public Opinion உடைய தலைவரான பென் பாலென் மற்றும் American Strategy Program of the New America Foundation ஐச் சேர்ந்த Patrick Doherty இருவரும் எழுதியுள்ளனர்.

மே 11க்கும் மே 20க்கும் இடையே நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பின் முடிவுகள் "அஹ்மதிநெஜாட் இரண்டிற்கு ஒன்று என்ற விகிதத்தை விட அதிகமாக முன்னணியில் இருந்ததாகவும், இது வெள்ளித் தேர்தலில் உண்மையில் கிடைத்த வெற்றியை விட அதிகம்" என்றும் அவர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.

இருவரும், இனவழி அஜேரி என்ற முறையில் கூடுதான அஜேரி வாக்குகளை மெளசவி பெறவில்லை, எனவே மொத்த எண்ணிக்கைகள் தில்லு முல்லு செய்யப்பட்டவை என்னும் அவருடைய ஆதரவாளர்களின் கூற்று ஏற்க முடியாதது என்று குறிப்பாக நிராகரித்துள்ளனர். மெளசவியைக் காட்டிலும் அஹ்மதிநெஜாட்டை அஜேரிகள் இரண்டிற்கு ஒன்று என்ற விகிதத்தில் ஆதரவு காட்டியதாக கருத்துக் கணிப்புக்கள் தெரிவித்தன என்றும் கூறியுள்ளனர்.

"எங்கள் கணக்கெடுப்பு அஹ்மதிநெஜாட்டை விட அதிகமாக ஆதரவு அல்லது போட்டியைக் கொண்ட மக்கள் தொகுப்பு பல்கலைக்கழக மாணவர்களும் பட்டதாரிகளும், உயர்மட்ட வருமானம் உடைய ஈரானியர்கள்தான்" என்று அவர்கள் எழுதியுள்ளனர்.

செய்தி ஊடகம், இளைய ஈரானியர்கள் இணைய தளத்தை "சீர்திருத்த" எழுச்சி என எதிர்பார்க்கப்பட்டதின் இதயத்தானமாக பயன்படுத்துவதாக கூறியிருக்கையில்--NBC News "இணைய தள எழுச்சி" என்று எதிர்ப்புக்களை அழைத்துள்ளது--கருத்துக் கணிப்புக்கள் ஈரானியர்களில் மூன்றில் ஒருவர்தான் இணையதளத்தைப் பயன்படுத்தும் வாய்ப்பு பெற்றிருந்தனர் என்று கூறுகிறது.

இந்த வர்க்கப் பிளவுதான் மிகப் பெரிய முறையில் மேலை செய்தி ஊடகத்தால் புறக்கணிக்கப்பட்டது. மெளசவியின் சீர்திருத்தங்கள் என்று அழைக்கப்பட்ட கருத்துக்கள் ஒப்புமையில் சலுகை பெற்ற, குறுகிய சமூகத் தளத்தை இலக்கு கொண்டவை. சீர்திருத்தங்களே அடிப்படையில் அஹ்மதிநெஜாட் பயன்படுத்திய அலங்காரச் சொற்களின் வேகத்தைக் குறைத்து, வாஷிங்டனுடன் உறவுகளை முன்னேற்றுவித்தல், அமெரிக்க ஆதரவு பொருளாதாரத் தடைகள் நீக்கப்பட வேண்டும் என்று கோரப்பட்டது மற்றும் வெளி முதலீட்டிற்கு நாட்டை திறந்துவிடல் என்று இருந்தன. அதே நேரத்தில் அவை "தடையற்ற சந்தை" முதலாளித்துவத்துடன் அடையாளம் காணப்பட்டு, தொழிலாளர் வர்க்கம் மற்றும் கிராமப் புற வறியவர்களுக்கான சமூக உதவித் திட்டங்களை எதிர்க்கவும் செய்தன. அத்தகைய சிக்கன நடவடிக்கைகள் ஈரானிய மக்களில் பெரும்பாலானவர்களைக் கொண்டிருக்கும் இந்த அடுக்குகளுக்கான ஈர்ப்பின் துருவமுனையாக அரிதாகத்தான் பயன்படும்.

தன்னுடைய பங்கிற்கு அஹ்மதிநெஜாட் இத்திட்டங்களை--ஜனரஞ்சகச் சொற்ஜாலங்கள் மற்றும் சமய பக்தி இவற்றுடன் இணைத்து--ஆட்சிக்கான வெகுஜன அடித்தளமாக ஆதரவைத் தக்க வைத்துக் கொண்டார்.

தேர்தல் பிரச்சாரம் மற்றும் அதற்கு பின்னரும் இருந்த கடுமை ஈரானில் வர்க்க அழுத்தங்கள் அதிகமாகியுள்ளதையும் இஸ்லாமியக் குடியரசின் ஆளும் அரசியல் நடைமுறைக்குள் இருக்கும் பெருகிய உட்பூசல்களின் விளைவையும் காட்டுகிறது. இவை இரண்டுமே அமெரிக்க மற்றும் ஐரோப்பிய சக்திகள் கொடுக்கும் அழுத்தத்தால் அதிகரித்துள்ளன.

தேர்தலில் நின்ற வேட்பாளர்கள் அனைவரும் காவலர் சபையின் மத குருமார்களின் இசைவைப் பெற்றவர்கள், ஒரே அரசியல் நடைமுறையின் உறுப்பினர்கள் ஆவர்.

மேலைச் செய்தி ஊடகத்தால் பெரிதும் உயர்த்திவைக்கப்பட்ட மெளசவி "சீர்திருத்தத்தை" எப்படியும் கொண்டுவரக்கூடிய திறன் அற்றவர். 1981-89 ல் பிரதம மந்திரிப் பதவியை அவர் வகித்த காலத்தில், அரசியல் எதிர்ப்பாளர்களை மொத்தமாக தூக்கிலிட்டதற்கு அவர் தலைமையேற்றார்; அவர்களில் பலர் இடதுசாரிகள் ஆவர்; இதைத்தவிர ஈரான்-ஈராக் போருக்கும் தலைமை தாங்கினார்; அதில் ஈரான் ஒரு மில்லியன் மக்களை இழந்தது, பலர் காயமுற்றனர்.

அக்காலக்கட்டத்தில் "கடின நிலைப்பாடு": உடையவர் என்ற கருதப்பட்ட நிலையில், ஒரு சீர்திருத்த வாதியாகவும், நவீன முறைகளைக் கொண்டுவருபவர் என்றும் ஈரானிய மத்தியதர வர்க்கத்தை ஈர்க்கும் வகையில் இப்பொழுது கூறப்பட்டு வருகிறார். ஆனால் அவருடைய பிரச்சாரத்தின் பின்னணியில் மத அதிகாரப் படிநிலையில் உள்ள வலதுசாரி கூறுபாடுகளும், முக்கியமாக ஈரானிலேயே அதிகம் பணம் படைத்தவர் என்று கூறப்படும் முன்னாள் ஈரானிய ஜனாதிபதி அலி அக்பர் ஹஷேமி ரப்சஞ்சானியும் உள்ளனர்.

மெளசவிக்கு ஆதரவு கொடுக்கும் ஆட்சிப் பிரிவுகளுக்கும் அஹ்மதிநெஜாட் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று ஆதரவு கொடுத்தவர்களுக்கும் இடையே உள்ள வேறுபாடுகள் தந்திரோபாய ரீதியானவைதான் என்றாலும், அவை அதை ஒட்டியே மிகவும் கசப்பாக இருந்தன. இதில் சம்பந்தப்பட்டிருப்பவர்கள் பெரிய நிதிய நலன்களும் வாஷிங்டன் மற்றும் பிற முக்கிய ஏகாதிபத்திய சக்திகளுடனான ஈரானின் உறவுகளை எப்படிச் சிறந்த வகையில் நிர்வகிக்கலாம் என்ற அக்கறை உடையவர்களும் ஆவர்.

தேர்தல்களும் மோசடிக் குற்றச்சாட்டுக்களும், இப்பகுதியில் தங்கள் நலன்களுக்கு ஆதரவு தரும் வகையில் கொள்கையில் ஒரு மாற்றத்தைக் கொண்டுவரும் இலக்கைக் கொண்ட, பெரிய சக்திகளால் ஈரானுக்கு எதிரான அழுத்தப் பிரச்சாரத்தை முடுக்கிவிட பயன்படுத்தப்பட்டுள்ளன.

ஆரம்பத்தில் ஒபாமா நிர்வாகம் துணை ஜனாதிபதி ஜோசப் பிடென், "ஈரானில் அமெரிக்க நலன்கள் தேர்தலுக்கு முன்பும் பின்னரும் மாறாமல் அப்படியே உள்ளன" என்று அறிவித்ததுடன், விவாதங்களில் இருந்து ஓரளவு ஒதுங்கியே இருந்தது.

ஆனால் திங்களன்று பிற்பகலில் அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் மாற்றத்திற்கு அடையாளம் காட்டியது. "வன்முறை, கைதுகள் மற்றும் ஒருவேளை வாக்கு எண்ணிக்கையில் தவறுகள் இருந்திருக்கக்கூடும் என்ற வந்துள்ள தகவல்கள் பற்றி ஆழ்ந்து உளைச்சல் கொண்டுள்ளோம்." என்று வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறினார்: "மக்கள் தங்கள் கருத்துக்களை அமைதியான முறையில் வெளிப்படுத்துவதை மதிக்குமாறு ஈரானிய அதிகாரிகளுக்கு அழைப்பு விடுகிறோம்."

இதைத் தொடர்ந்து ஜனாதிபதி பாரக் ஒபாமாவிடம் இருந்து ஒரு அறிக்கை வெளிவந்தது. "ஜனநாயக வழிவகை, சுதந்திர பேச்சுரிமை, மக்கள் அமைதியான முறையில் கருத்து வேறுபாடுகள் கொள்ளுதல், எங்கும் உறைந்திருக்க வேண்டிய மதிப்புக்கள் நல்ல முறையில் மதிப்புப் பெற வேண்டும் என்று நான் நினைக்கிறேன். அமைதியான முறையில் கருத்து வேறுபாடுகளை தெரிவிக்கும் மக்கள் மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்படுவதை நான் காணும்போது, அமெரிக்க மக்களும் அவற்றைக் காணும்போது, மனதில் வேதனையை நியாயமாகவே பெறுவார்கள் என்றுதான் நினைக்கிறேன்."

இத்தகைய மன நெருடல்கள் ஒன்றும் அமெரிக்க ஆதரவு பெற்ற ஷா 1978-79 களில் ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்களை சுட்டுக்கொன்றபோது வாஷிங்டனால் வெளிப்படுத்தப்படவில்லை. அந்த குருதி சிந்துதலின் உச்சக்கட்டத்தில் அப்பொழுது அமெரிக்காவின் தேசியப்பாதுகாப்பு ஆலோசகராக இருந்த Zbigniew Brezezinski ஷாவிடம் அமெரிக்கா அவரை "இறுதி வரை ஆதரிக்கும்" என்றார் Brezezinksi இப்பொழுது ஒபாமா நிர்வாகத்திற்கு முக்கிய வெளியுறவுக் கொள்கை ஆலோசகராக மீண்டும் வெளிப்பட்டுள்ளார்.

ஜேர்மனிய அதிபர் அங்கேலா மேர்க்கெல், இதற்கிடையில், ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக "முற்றிலும் ஏற்கமுடியாத" வலிமை பயன்படுத்தப்பட்டது பற்றி கண்டித்துள்ளார். "தேர்தல் முடிவு பற்றி வெளிப்படையான மதிப்பீடு வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம். இவை ஒழுங்கீனத்தின் அடையாளங்கள்" என்றார் அவர். ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவு மந்திரிகளும் ஈரானிய அதிகாரிகள் தேர்தல் முடிவுகளை விசாரிக்க வேண்டும் என்று கோரியுள்ளனர்.

ஈரானின் மிகு உயர் தலைவரான அயோதுல்லா அலி காமேனி திங்களன்று வாக்குப் பதிவில் தில்லுமுல்லு பற்றி விசாரிக்க தான் காவலர் சபைக்கு உத்தரவிட்டுள்ளதாக வந்த அறிவிப்பு ஏகாதிபத்திய சக்திகளிடம் இருந்து வந்துள்ள இந்த அழுத்தத்திற்கு சமாதானம் கூறும் வகையிலும் அதே நேரத்தில் ஈரானுக்குள் அழுத்தங்களைக் குறைக்கும் இலக்கையும் கொண்டதாகும்.

இந்த அழுத்தம் ஈரானின் ஜனநாயக உரிமைகளுடன் எந்த தொடர்பையும் கொண்டிருக்கவில்லை; எப்படி ஷா ஆட்சிக்கு ஆயுதங்களும் ஆதரவும் 30 ஆண்டுகளுக்கு முன் உதவவில்லையோ அப்படித்தான் இதுவும். அமெரிக்கா மற்றும் பிற மேலை சக்திகளின் நோக்கம் இப்பகுதியில் தங்களின் மூலோபாய நலன்களை அதிகரிக்கவும் ஈரானின் மகத்தான விசை இருப்புக்களை முற்றாய் சுரண்டவும் ஈரானை முற்றிலும் அடிமைப்படுத்துதல் ஆகும்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved