World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

May Day 2009 takes place against the background of a historic crisis of the capitalist system

முதலாளித்துவ அமைப்புமுறையின் வரலாற்று நெருக்கடியின் பின்னணியில் 2009 மே தினம் இடம்பெறுகிறது

By Joe Kishore
1 May 2009

Back to screen version

இந்த நெருக்கடியின் தாக்கம் அனைத்து இடங்களிலும் உணரப்படுகிறது. உலக முதலாளித்துவத்தின் இதயத்தானமாகிய அமெரிக்கா உள்பட பல மில்லியன் கணக்கான மக்கள் உலகெங்கிலும் வேலையில் இருந்து நீக்கப்படுகின்றனர். தங்கள் கடன் அட்டையில் வாங்கிய கடனை மக்களால் திருப்பிக் கொடுக்க முடியவில்லை. வீடுகள் வாங்கவோ, குழந்தைகளுக்கு கல்வி கொடுக்கவோ, சுகாதாரப் பாதுகாப்பு பிற வாழ்வின் அடைப்படைத் தேவைகளை பூர்த்தி செய்யவோ இயலவில்லை. நூற்றுக்கணக்கான மில்லியன் மக்கள் மிகுந்த வறுமையிலும், பட்டினியிலும் தள்ளப்படுகின்றனர்.

இந்நிகழ்வுகளின் பின்னணியில் மே தினத்தின் முக்கியத்துவம் மிகவும் அவசியமான ஒன்றாகின்றது. அதிலும் குறிப்பாக அனைத்து பழைய அமைப்புக்களான சமூக ஜனநாயக கட்சிகள், பழைய கம்யூனிஸ்ட் கட்சிகள், தொழிற்சங்கங்கள், "இடது", மற்றும் "முதலாளித்துவ-எதிர்ப்பு" கட்சிகள் பெருவணிகத்துடனும் வங்கிகளுடனும் ஒத்துழைத்து, தொழிலாள வர்க்கத்தின் மீதும் தொழிலாளர்கள் எதிர்த்துப் போராடும் ஒவ்வொரு சுயாதீன முயற்சியின் மீதும் தாக்குதல் நடத்துகிறன.

மே தினத்தின் முக்கியதுவம் அதன் தோற்றத்திலேயே வேர்களைக் கொண்டுள்ளது. இந்த வரலாற்றுடனான மறுதொடர்பு என்பது எதுவும் செய்ய முடியாது, எதையும் போராடி வெல்ல முடியாது என்று கூறுபவர்கள் அனைவரையும் எதிர்ப்பதற்கும், அதன் பெரும் மரபுகளில் இருந்து தொழிலாள வர்க்கத்தின் நனவை அகற்ற வேண்டும் என்று முற்படுபவர்களுக்கு எதிராகவும் இருப்பது மிகவும் அவசியமாகும்.

மே தினத்தின் தோற்றங்கள் அமெரிக்காவில் தொழிற்துறை தொழிலாள வர்க்கத்தின் ஆரம்ப, மிகக் கடுமையான போராட்டங்களில் உள்ளன; அவை எட்டு மணி நேர வேலைநாள் என்பதை மத்தியமாக கொண்டிருந்தன.

தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியம் மற்றும் பலத்தை நிரூபிக்கும் முயற்சி 1886ம் ஆண்டு மே 1 அன்று அமெரிக்காவில் எட்டு மணிநேர வேலை சட்ட பூர்வமாக வேலைநாளாக இருக்க வேண்டும் என நிறுவுவதற்கான கோரிக்கைக்கு, அனைத்து தொழிலாளர்களுக்கும் வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்ட நாள் ஆகும். கிட்டத்தட்ட 350,000 தொழிலாளர்கள் இதில் பங்கு பெற்றனர். இது தொழிலாள வர்க்கத்தின் அடிப்படை சமூக, பொருளாதார உரிமைகளுக்கான நீண்ட போராட்டத்தில் முக்கியமான கட்டம் ஆகும்.

தொழிலாள வர்க்கத்தின் இத்தகைய ஐக்கிய வெளிப்பாட்டை கண்டு அஞ்சிய ஆளும் வர்க்கம் மிருகத்தனமான எதிர்த்தாக்குதலை விடையிறுப்பாகக் கொடுத்தது. 40,000 தொழிலாளர்கள் பங்கு பெற்றிருந்த மே 1 வேலைநிறுத்த மையமான சிக்காகோவில் இரு நாட்கள் கழித்து நிராயுதபாணிகளான வேலைநிறுத்தம் செய்தவர்கள் மீது போலிஸார் மிருகத்தனமான தாக்குதலை மேற்கொண்டனர். இதில் 6 பேர் இறந்தனர். இதற்கு அடுத்து நாள் ஹேமார்க்கெட் சதுக்கத்தில் நடந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இகழ்வான ஹேமார்க்கெட் படுகொலைக்கு வழிவகுத்தது. ஆர்ப்பாட்டம் முடியும் தறுவாயில், ஒரு குண்டு (ஒரு ஆத்திரமூட்டுபவரால் உறுதியாக போடப்பட்டிருக்க வேண்டும்) வெடித்தது. போலீசார் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பொறுப்பற்று கூட்டத்தின் பல திசைகளிலும் துப்பாக்கிச் சூடு நடத்தி, கணக்கிலா ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளைக் கொன்று குறைந்ததுடன், 200 பேர் காயமடைய செய்தனர்.

ஹேமார்க்கெட் படுகொலைகள் சிக்காகோ வணிக ஆளும் வர்க்கத்திற்கும், முதலாளித்துவ செய்தித்தாள்களுக்கும் "குண்டு வீசும் பெரும் குழப்பவாதிகளுக்கு" எதிராக பிரச்சாரம் தூண்ட வாய்ப்பாயிற்று. மே 1 ஆர்ப்பாட்டங்களின் எட்டு முக்கிய அமைப்பாளர்களான ஆல்பேர்ட் பார்சன்ஸ், ஒகஸ்ட் ஸ்பைஸ், சாமுவேல் பில்டென், யூஜின் ஷ்வாப், அடால்ப் பிஷர், ஜோர்ஜ் ஈங்கல், லூயி லிங், ஆஸ்கார் நீபி ஆகியோர் கைதுசெய்யப்பட்டு ஒரு ஊழல் நலிந்த நீதிபதியால் நீதி என்ற பெயரில் நடத்தப்பட்ட கேலிக்கூத்திற்கு பின் ஏழு பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. ஹேமார்க்கெட் தியாகிகளின் நான்கு பேர் இறுதியில் மரணதண்டனைக்கு உட்பட்டனர். ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். ஒரு சர்வதேச பிரச்சாரத்திற்கு பின்னர் தண்டிக்கப்பட்டவர்களில் இருவருடைய தண்டனை குறைக்கப்பட்டது. எஞ்சியிருந்த மூவர் பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

அமெரிக்க மே 1886 நிகழ்வுகள் உலகெங்கிலும் எதிரொலித்தன. அப்பொழுது சர்வதேச தொழிலாளர் எழுச்சிக் காலத்தை உலகம் கண்டு வந்தது. 1889ல் நடந்த நிறுவன மாநாட்டில் (எதிர்வரும் ஜூலைக்கு 120 ஆண்டுகளுக்கு முன்னதாக) இரண்டாம் (சோசலிஸ்ட்) அகிலம் மே 1ம் தேதியை சர்வதேச தொழிலாள வர்க்க ஐக்கியத்திற்கான தினமாக ஏற்ற ஒரு தீர்மானத்தை இயற்றியது. மே தினத்தின் இதயத்தில் தொழிலாள வர்க்கம் அதன் நலன்களை முதலாளித்துவ வர்க்கத்திற்கு எதிரான அதன் சர்வதேச ஐக்கியத்தின் மூலம்தான் முன்னெடுக்கமுடியும் என்ற கருத்து உள்ளது.

அமெரிக்க ஆளும் வர்க்கம் மே தினக் கொள்கைகளின் தாக்கங்கள் பற்றி பெரும் அச்சம் கொண்டிருந்ததால் 1894ல் அது வேறு ஒரு தினத்தில் தொழிலாளர் தினத்தை (Labor Day) கூட்டாட்சி விடுமுறை நாளாக அறிவித்தது. இந்த முடிவு முக்கிய மே தின ஆர்ப்பாட்டங்கள் நடந்த இரண்டு மாதங்களின் பின்னும், 1893 பெரும் பீதிக்குப் பின்னர் விரைவான வேலையின்மை அதிகரிப்பை ஒட்டியும் நடந்தது.

ஆரம்பகால மே தின ஆர்ப்பாட்டங்களின் முக்கிய கோஷங்கள் எட்டு மணி நேர வேலை நாள், தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கைத்தர முன்னேற்றம், சர்வதேச ஐக்கியம் மற்றும் இராணுவவாதம், போர் ஆகியவற்றிற்கு எதிரான போராட்டம் என இருந்தன.

துன்பியலான வகையில் மே தினக் கொள்கைகள் தொழிலாள வர்க்கத்தின் வெகுஜன அமைப்புக்களால் காட்டிக் கொடுக்கப்பட்டன. முதலிலும் முக்கியமான வகையிலும் இரண்டாம் அகிலமே இதைச் செய்தது. 1914ம் ஆண்டு அகிலத்தின் முக்கிய கட்சிகள் தத்தம் முதலாளித்துவ அரசாங்கங்களுக்கு முதல் உலகப் போரை நடத்த ஆதரவை கொடுத்தன.

ரஷ்ய புரட்சியால் நிறுவப்பட்ட தொழிலாளர் அரசில் முக்கிய தலைவராக இருந்த லியோன் ட்ரொட்ஸ்கி, 1918ல் இந்த அனுபவங்களின் இருப்புநிலைக்குறிப்பை எடுத்து, உண்மையான சோசலிசத்தை, சந்தர்ப்பவாதத்திலிருந்து தனித்துப் பிரித்து எல்லைக் கோடுபோட்டு, மே தினத்தின் நோக்கம், "அன்றைய தினம் அனைத்து நாடுகளிலும் இருக்கும் தொழிலாளர்கள் ஒரே நேரத்தில் நடத்தும் ஆர்ப்பாட்டத்தின் மூலம் அவர்கள் அனைவரும் ஒரு ஒற்றை சர்வதேச தொழிலாளர் அமைப்பில் ஒன்றாக வரவேண்டும், அந்த அமைப்பு ஒரு உலக மையம், ஒரு உலக அரசியல் நிலைநோக்கு என்ற புரட்சிகர செயற்பாட்டைக் கொண்டிருக்கவேண்டும் என்பதாகும்" என்று விளக்கினார்.

"புரட்சிகர நடவடிக்கைகாக ஒரு சர்வதேச தொழிலாளர் வர்க்க அமைப்பு" வளர்ச்சி என்னும் கருத்து வளர்ச்சி இன்றைக்கு மிக முக்கியமான அவசியமாக வெளிப்பட்டுள்ளது. முதலாளித்துவ முறையை பீடித்துள்ள நெருக்கடி ஒரு உலக நெருக்கடி ஆகும்; உலக மக்களின் தலைவிதி என்பது வரலாற்றின் எந்தக் கட்டத்திலும் இல்லாத அளவிற்கு அதிகமாகப் பின்னிப் பிணைந்துள்ளது. மனிதகுலத்தை எதிர்கொண்டுள்ள அடிப்படைப் பிரச்சினைகளில் எதுவும் தேசிய மட்டத்தில் தீர்க்கப்பட முடியாததாகும்.

ஆனால் தொழிலாள வர்க்கம் ஒன்றுதான் உண்மையான சர்வதேச வர்க்கம் ஆகும். இந்த வர்க்கத்தின் நலன்கள்தான் அனைத்து தேசிய எல்லைகளையும் கடந்து நிற்கிறது. பொருளாதார நெருக்கடிக்கு உலகின் ஆளும் வர்க்கங்கள் கொடுத்துள்ள விடையிறுப்பு தங்கள் தேசிய நலன்களுக்கான போராட்டங்களை தீவிரப்படுத்துவது ஆகும்; இப்போராட்டம தவிர்க்க முடியாமல் போரைக் கொண்டு வரும். வரவிருக்கும் ஆண்டுகளில் போருக்கு எதிரான போராட்டம் என்பது, ஒவ்வொரு நாட்டிலும் உள்ள தொழிலாள வர்க்கத்தை எதிர்கொள்ளும் அடிப்படையான வாழ்வா-சாவா என்ற வினாவாக இருக்கும்.

பொருளாதார நெருக்கடி அதனுடன் வர்க்கப் போராட்டத்தின் மறு எழுச்சியையும் கொண்டுவருகிறது. இது அமெரிக்காவிலும் ஏற்படும். ஏற்கனவே தீவிரமயப்படலின் ஆரம்ப அடையாளங்கள் சீனாவில் தொழிலாளர் பிரிவு பூசல்களின் எண்ணிக்கை ஏழு மடங்கு உயர்ந்ததில் இருந்து, பிரெஞ்சு-ஜேர்மனிய கொன்டினென்டல் டயர் தொழிலாளர்களின் கூட்டு ஆர்ப்பாட்டம் மற்றும் பிரெஞ்சு கட்டர்பில்லர் தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களுக்கு எதிராக போராட்டம் செய்ததில், மற்றும் அமெரிக்க கார்த் தொழிலாளிகள் இடையே அவர்கள் வேலைகள், வாழ்க்கைத் தரங்கள் ஆகியவை அரசாங்கங்கள், பெருநிறுவனங்கள், ஐக்கிய கார் தொழிலாளர் சங்கம் ஆகியவை நடத்தும் தாக்குதல்களுக்கு எதிராக ஒருங்கிணைந்த கடுமையான எதிர்ப்பை காட்டுவதின் மூலம் என்று பலவிதத்தில் தென்பட்டுள்ளன.

அவர்கள் போராட்டத்தில் நுழைகையில், ஒவ்வொரு நாட்டிலும் தொழிலாளர்களை எதிர்கொள்ளும் மையப் பிரச்சினை தலைமை மற்றும் அரசியல் முன்னோக்கு என்ற பிரச்சினைதான். வர்க்க பதட்டங்களின் அதீத வளர்ச்சி ஒருகாலத்தில் தொழிலாள வர்க்கத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதாக கூறிய அனைத்து அமைப்புக்களின் திவால்தன்மையுடன் இணைந்து நிற்கிறது.

மே தின மரபுகளைக் கேலிக் கூத்து ஆக்குவது போல், ஏப்ரல் 29ம் தேதி UAW கிறைஸ்லரில் ஒரு ஒப்பந்தத்தை திணித்தது: இது கார்த் தொழிலாளர்களுக்கு எஞ்சியிருந்த சொற்ப கடந்த கால நலன்களையும் அகற்றிவிட்டது. தொழிற்சங்கம் ஏற்றுக் கொண்ட இழப்புக்களுள் நாள் ஒன்றிற்கு எட்ட மணி நேரத்திற்கு மேல் செய்யும் வேலைக்கு கூடுதல் ஊதியம் அகற்றப்பட்டுவிட்டதும் அடங்கும். இச்சமீபத்திய காட்டிக் கொடுப்பு பல தசாப்தங்கள் வர்க்க ஒத்துழைப்பின் உச்ச நிலை ஆகும். அமெரிக்க தொழிற்சங்கங்களில் உலகம் முழுவதும் இருக்கும் நிகழ்வுபோக்கின் மிக அப்பட்டமான வெளிப்பாட்டைத்தான் காண்கிறோம்.

ஆனால் ட்ரொட்ஸ்கி குறிப்பிட்டபடி வரலாற்று விதிகள் அதிகாரத்துவ எந்திரத்தை விட வலிமையானவை ஆகும். முதலாளித்துவ நெருக்கடியின் அழுத்தம் தவிர்க்க முடியாமல் உலகளவில் தொழிலாள வர்க்கத்தின் புதிய எழுச்சியை நோக்கி இட்டுச் செல்கிறது.

இன்று மே தினத்தின் உண்மையான இலட்சியங்களை போற்றிப் பாதுகாக்கும் கட்சி, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு மட்டுமே. நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழுவானது, அதன் நீண்ட வரலாற்றில் தேசியவாதம், ஸ்ராலினிசம் மற்றும் முதலாளித்துவ அமைப்புமுறை ஆகியவற்றிற்கு அடிபணிந்த அனைத்து அரசியல் போக்குகளுக்கு எதிராகவும் கோட்பாட்டு ரீதியிலான போராட்டத்தை நடத்தியுள்ளது. சர்வதேச தொழிலாள வர்க்கப் போராட்டத்தின் வளர்ச்சியையும் மற்றும் உலக சோசலிசப் புரட்சியின் புத்துயிர்ப்பையும் பெரும் நம்பிக்கையுடன் நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழு எதிர்பார்க்கிறது.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved