World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Americas Summit ends with no agreement on economic crisis

அமெரிக்க உச்சிமாநாடு பொருளாதார நெருக்கடி பற்றி உடன்பாடு இல்லாமல் முடிவுற்றது

By Bill Van Auken
21 April 2009

Back to screen version

ஞாயிறன்று டிரினிடாட் மற்றும் டொபாகோவில் முடிவுற்ற அமெரிக்காவின் உச்சிமாநாடு, செய்தி ஊடகத்தின் பல பிரிவுகளாலும் அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமாவிற்கு மற்றொரு "வெற்றி" எனப் பாராட்டப்பட்டது.

வாடிக்கையான முறையில் நியூயோர்க் டைமஸ் உச்சிமாநாடு பற்றிய அதன் பரபரப்பான தகவலை பின்வருமாறு தொடங்கியது: "ஒரு புதிய அமெரிக்க ஜனாதிபதியினால் ஊக்கம் பெற்ற உலகின் மேற்குப் பகுதி தலைவர்கள், இரு நாட்கள் நடந்த உச்சிமாநாட்டை இப்பகுதியில் முந்தைய காலத்தில் அமெரிக்காவுடன் இருந்த கசப்பான வேறுபாடுகள் இல்லை, உறவுகளில் புதிய உதயத்திற்கான நேரம் வந்துவிட்டது என்றும் அறிவித்து முடித்தனர்."

கூடுதலான தகவல்கள் பலவும் ஒபாமா மற்றும் வெனிஜூலா ஜனாதிபதி ஹ்யூகோ சாவேஸ் கைகுலுக்கல்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தன. இது அமெரிக்க ஜனாதிபதியின் நடைமுறைவாத சிந்தைக்குப் பிந்தைய நிலையை சித்தரித்த அடையாளம் என்று கூறப்பட்டது. குடியரசுக் கட்சியின் வலதுசாரிகள் பொறுப்பற்ற முறையில் ஒரு விரோதிக்கு மரியாதை கொடுக்கப்பட்டது என்று கண்டித்தனர்.

உச்சிமாநாடு அதை நடத்திய டிரினிடாட் பிரதம மந்திரி பாட்ரிக் மன்னிங், இறுதி அறிக்கையில் கையெழுத்திட்டதுடன் முடிவடைந்தது என்பதை இந்த தகவல்களில் இருந்து தெரிந்து கொள்ளுவது கடினம். பல நாடுகளும் அந்த அறிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்தன. ஏனெனில் கியூபா பற்றி குறிப்பு ஏதும் இல்லை என்பது மட்டுமின்றி கடந்த செப்டம்பரில் தயாரிக்கப்பட்ட இந்த அறிக்கையில் உலக பொருளாதார சரிவு பற்றி குறிப்புக்களும் இல்லை. எந்த உடன்பாடும் இல்லாமலும் ஆவணத்தில் கையெழுத்து இடாமலும் அமெரிக்க அரசுகளின் அமைப்பின் (Organization of American States) ஏனைய உறுப்பினர்கள் கலைந்தனர்.

இது போதிய தயாரிப்பு அற்ற ஆவணம் என்ற பிரச்சினை மட்டும் அல்ல. அமெரிக்க கண்டம் முழுவதையும் ஆட்டிப் படைக்கும் பொருளாதார பேரழிவை எதிர்கொள்ளுவதற்கு எந்த உடன்பாடுகளோ கணிசமான திட்டங்களோ முன்வைக்கப்படாமல் உச்சிமாநாடு முடிவுற்றது.

இது உச்சிமாநாடு பற்றிய அதிர்ச்சி தரும் தீர்ப்பு, மற்றும் அதில் பங்கு பெற்ற அரசாங்கங்களுக்கும், இதில் முதலிலும் முக்கியாமானவருமாக இருக்கும் ஒபாமாவுக்கும் பொருந்தும். இலத்தீன் அமெரிக்க நாடுகள் ஆழ்ந்த பிளவில் உள்ளதுடன், நெருக்கடியானது கண்டத்தின் பல தேசிய அரசுகளுக்கும் இடையே மோதல்களை வளர்த்துள்ளநிலையில் உண்மையான பொருளாதார ஒருங்கிணைப்பை அபிவிருத்திசெய்ய முடியவில்லை.

இலத்தீன் அமெரிக்கா நெருக்கடி, இன்னுமொரு 15 மில்லியன் மக்களை இந்த ஆண்டு வறுமையில் தள்ளும் அச்சுறுத்தலை கொண்டுள்ளது; பொருட்களை விலைகள் சரிக்கின்றன, சந்தைகள் சுருங்கியுள்ளன. ஐக்கிய நாடுகள் சபையால் 2009ல் இப்பகுதியின் பொருளாதாரங்கள் கடன் நெருக்கடிகளால் 0.3 சதவிகிதம் சுருங்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

தன்னுடைய பங்கிற்கு ஒபாமா வெறும் கைகளுடன்தான் வந்தார். ஒரே ஒரு புதிய முன்முயற்சியாக சிறு தொழில்வழங்குனர்களுக்கு உதவ அவரால் $100 மில்லியன் "சிறு நிதியத்திட்டம்" அறிவிக்கப்பட்டது. இது ஒரு வாளி நீரில் ஒரு துளிக்கும் குறைவானதுதான். இந்த மாதம் முன்னதாக லண்டன் G20 உச்சிமாநாட்டில் அறிவிக்கப்பட்ட நடவடிக்கைகளை அவர் சுட்டிக் காட்டினார். அவற்றில் பெரும்பகுதி முன்பே எடுத்த நடவடிக்கைகள் அல்லது நிதி ஒதுக்கப்படாத திட்டங்கள் என்ற போலித்தோற்றம் உடையவை ஆகும் .

இலத்தீன் அமெரிக்க பொருளாதாரங்களுக்கு கணிசமான அமெரிக்க உதவி என்ற உறுதிமொழி கொடுக்கப்படவில்லை. மாறாக ஒபாமா அமெரிக்காவில் அவர் கொண்டுவந்துள்ள பொருளாதார ஊக்கப் பொதிக் கொள்கையை இப்பிரதேசத்திற்கு ஒரு வரம் போன்றது என்றார். இதற்குக் காரணம் அது நுகர்வோர் செலவினத்திற்கு ஊக்கம் கொடுக்கும் என்று கருதப்படுகிறது. இதனால் அமெரிக்க சந்தைகளுக்கு பிற நாடுகளில் இருந்து ஏற்றுமதிகள் பெருகக்கூடும்.

சர்வதேச நாணய நிதியத்தின் மொத்த கடன் கொடுக்கும் திறனை மும்மடங்காக்கும் முடிவையும் ஒபாமா சுட்டிக்காட்டினார். உண்மையில் இந்த நிதியத்தின் பெரும்பகுதி அமெரிக்காவிற்கும் ஐரோப்பாவிற்கும் செல்லும்; சர்வதேச நாணய நிதியம் இலத்தீன் அமெரிக்காவிற்கு கொடுக்கும் "உதவி" மரபார்ந்த வகையில் உள்ள கடுமையான விதிகளைக் கொண்டிருக்கும்; அவை தொழிலாளர்களை இன்னும் வறுமையில்தான் தள்ளும்.

வாஷிங்டன் Inter-American Development Bank இலத்தீன் அமெரிக்க நாடுகள், கரிபியனுக்கு கொடுக்கும் கடன்களை அதிகரிக்க வேண்டும் என்று கூறுவதாக ஒபாமா தெரிவித்தாலும் அமெரிக்க நிதி மந்திரி டிமோதி கீத்னர் கடந்த மாதம் கொலம்பியாவில் அதன் ஆண்டுக் கூட்டத்தில் கலந்து கொண்டபோது வங்கிக்கு புதிய நிதிகொடுப்பது பற்றி எதுவும் கூற மறுத்துவிட்டார்.

அமெரிக்க ஜனாதிபதி கொண்டிருந்த முக்கியமான பங்கு இப்பகுதியில் அமெரிக்கா கொண்டுள்ள கொள்கையை புதிய விதத்தில் கூறி, தன்னுடைய அரசாங்கம் புஷ் நிர்வாகத்தின் மோதல் தன்மையில் இருந்து அடிப்படை மாற்றம் கொண்டது எனக் காட்டுவதாகும். உச்சிமாநாட்டிற்கு அமெரிக்கா "கேட்பதற்கு வந்துள்ளது, வெறுமே பேசுவதற்கு அல்ல" என்று அவர் வலியுறுத்தினார். அமெரிக்காவிற்கும் அதற்கு தெற்கே உள்ள நாடுகளுக்கும் இடையே புதிய உறவுகளைப் பிணைக்க வேண்டும் என்றும் அவை "பரஸ்பர மரியாதை மற்றும் சமத்துவம்" என்ற அடிப்படையில் இருக்க வேண்டும் என்றும் கூறினார்.

உண்மை என்னவென்றால் உலகின் அப்பாதியில் உள்ள உறவுகள், ஒபாமா நிர்வாகத்தின் மற்ற கொள்கைகள் போலவே அடிப்படையில் புஷ் செயல்படுத்திய வலதுசாரிக் கொள்கைகளுக்கு ஒரு புதிய முகத்தை அமெரிக்க அரசியல் ஆளும்வர்க்கத்திற்கு கொடுக்கும் முயற்சியாக காட்டிக் கொள்ளுவதுதான்.

உச்சிமாநாட்டில் தன்னுடைய உரையில் ஒபாமா அவருடைய தோலின் நிறமே வாஷிங்டனில் ஏற்பட்டதாகக் கூறப்படும் மாற்றத்தின் மொத்த உருவகத்தின் நிரூபணமும் ஆகும் என்றார். முதல் மூன்று மாதங்களில் இவருடைய அரசாங்கம் வோல் ஸ்ட்ரீட் மற்றும் தேசியப்பாதுகாப்பு அமைப்புகளின் உறுதியான கருவியாக நடந்து கொண்டு வருவதைப் பார்க்கும்போது, வங்கிகளுக்கு பிணை எடுப்பு கொடுத்தல், ஈராக் ஆக்கிரமிப்பு தொடர்தல், ஆப்கானிஸ்தானில் போர் விரிவாக்கம் போன்றவற்றை செயற்படுத்தியுள்ளபோதும், இவருடைய கூற்றுக்களை இலத்தீன் அமெரிக்காவின் இடது எனக் கூறப்படும் பிரிவின் தலைவர்கள் ஏற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்கது ஆகும்.

சாவேஸின் "விவாதத்திற்கான புதிய சகாப்தம்"

இதில் பொலிவிய புரட்சிக்கும், 21ம் நூற்றாண்டு சோசலிசத்திற்கும் ஆதரவாளரான வெனிசூலாவின் தலைவர் ஹ்யூகோ சாவேஸை விட பெரும் ஊக்கத்தை ஜனாதிபதி மீது எவரும் காட்டிவிடவில்லை.

"உங்கள் நண்பராக இருக்க விரும்புகிறேன்." என்று சாவேஸ் அமெரிக்க ஜனாதிபதியிடம் உச்சிமாநாட்டின் வெள்ளியன்று நடைபெற்ற முதல் பேரவை கூட்டத்திற்கு முன்பு கூறினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் ஒபாமாவுடன் அவர் கைகுலுக்கியது "ஒரு நல்ல திருப்பம்" என்றார். "அவர் ஒரு கெட்டிக்காரர்; இளைஞர், கறுப்பரும்கூட. இளவயதாக இருந்தாலும் பழுத்த அனுபவமுடைய அரசியல்வாதி." என்றும் சேர்த்துக் கொண்டார்.

ஒரு ஆவணமோ அல்லது புதிய கொள்கைகளையோ கொண்டுவராத ஒரு உச்சிமாநாடு, தான் பங்கு பெற்றதிலேயே "மிகவும் வெற்றிகரமானது" என்று சாவேஸ் அறிவித்தார். இது "ஒரு புதிய விவாதத்திற்கான சகாப்தத்தை நம் நாடுகளிடையே தோற்றுவிக்கும் கதவுகளை திறந்துள்ளது" என்றார்.

ஒரு மிக நகைப்பிற்கு இடமான கணத்தில் சாவேஸ், ஒபாமாவிடம் இலத்தீன் அமெரிக்காவின் திறந்த நாளங்கள் (The Open Veins of Latin America) என்று 1971 இல் உருகுவே நாட்டு எழுத்தாளர் Eduardo Galeano எழுதிய நூலை அவருடைய "ஒபாமாவிற்கு, பிரியத்துடன்" என்று கையெழுத்திட்டு கொடுத்தார். அமெரிக்க இலத்தீன் அமெரிக்காவுடன் பல நூற்றாண்டுகளாக கொண்டிருக்கும் சுரண்டும் தன்மையுடன் பொருளாதார உறவுகள் பற்றிய வரலாற்றை ஒபாமா படித்தவுடன், "உண்மையை கண்டு" யங்கி ஏகாதிபத்தியம் தன்னுடைய இயல்பை மாற்றிவிடும் என்று சாவேஸ் நம்புகிறாரா?

எவ்வித நப்பாசைகளை இடது தேசியவாத தலைவர்களான சாவேஸ் போன்றவர்கள் கொண்டிருந்தாலும், இன்னும் ஆழ்ந்த புறநிலை சக்திகள் அவர்களை ஒபாமாவைத் தழுவ தள்ளுகின்றன. உலகப் பொருளாதார நெருக்கடி மிகக் கடுமையான முறையில் இந்நாடுகளின் பொருளாதாரங்களை பாதித்து வர்க்கப் போராட்டத்தை கட்டவிழ்த்துவிடும் அச்சுறுத்தலை கொண்டுள்ளது; அவை இந்த ஆட்சிகளையும் சவாலுக்கு உட்படுத்தக்கூடும். சாவேஸ் வெனிசூலாவின் எண்ணெய்க்கு சீன, ஜப்பான் என்று புதிய சந்தைகளை நாட முற்பட்டிருக்கையில், அமெரிக்காதான் அதன் முக்கிய வாடிக்கையாளராக இருந்து, மொத்த எண்ணெய் ஏற்றுமதியில் பாதிக்கும் மேலாக வாங்குகிறது.

அந்த இடத்திலேயே வாஷிங்டனுக்கு ஒரு புதிய தூதரை அனுப்பும் முடிவையும் சாவேஸ் எடுத்தார். அமெரிக்கநாடுகளின் அமைப்பிற்கு வெனிசூலாவின் பிரதிநிதியான Roy Chaderton அமெரிக்கத் தூதராக்கப்பட்டார். மேலும் காரகாஸில் அமெரிக்க தூதரை ஏற்பது என்ற முடிவையும் எடுத்தார். கடந்த செப்டம்பர் மாதம் அமெரிக்கத் தூதரை அமெரிக்கா இரகசியமாக அந்நாட்டிலும் பொலிவியாவிலும் செயல்படுகிறது என்பது அறியப்பட்டவுடன் தூதரக உறவுகள் முறிந்து போயின.

இதேபோல் நிகரகுவாவின் ஜனாதிபதி டானியல் ஒர்ட்டேகா, அப்பகுதியில் அமெரிக்க குறுக்கீடுகள் இருந்த வரலாற்றைக் கண்டித்து உரை நிகழ்த்தியபின், செய்தியாளர்களிடம் ஒபாமா வேறுவிதமாக இருப்பார் எனத் தான் நம்புவதாக கூறினார். "மாற்றத்தை அவர் விரும்புகிறார், அதற்கான விருப்பம் அவரிடம் உள்ளது என்பதை நான் நம்ப விரும்புகிறேன்."

பொலிவியாவின் ஜனாதிபதி ஏவோ மொராலஸ் சற்று நிதானமான பார்வையை ஒபாமா நிர்வாகத்தின் மீது கொண்டார். "நூறு நாட்கள் கடந்துவிட்டன; பொலிவியாவில் உள்ள எங்களுக்கு இன்னும் எந்த மாறுதல்களும் வரவில்லை. சதித்திட்டக் கொள்கைதான் தொடர்கிறது": என்றார் அவர்.

உள்நாட்டில் வலதுசாரி விமர்சனத்திற்கு விடையிறுக்கையில் ஒபாமா உச்சிமாநாட்டின் முடிவில் "எரியூட்டும் வனப்புரைக்காக" சாவேஸை கண்டிப்பதில் உறுதியாக இருந்தார்; அவருடைய அரசாங்கம் "அண்டை நாடுகள் சிலவற்றுள் குறுக்கிட்டுள்ளது" என்று குற்றமும் சாட்டினார்.

செயற்பட்டியலில் இல்லாவிடினும் உச்சிமாநாட்டின் விவாதத்தில் மையப் பங்கு கொண்டிருந்த ஒரு பிரச்சினை கியூபா பற்றியதாகும். இது 1962ல் அமெரிக்க நாடுகளின் அமைப்பில் இருந்து வாஷிங்டன் உத்தரவின்பேரில் வெளியேற்றப்பட்டது. இன்று ஒபாமாவைத் தவிர அனைத்து நாடுகளின் தலைவர்களும் கியூபா மீண்டும் சேர்க்கப்படுவதற்கும் 47 ஆண்டுகளாக அமெரிக்கா செயல்படுத்தி வரும் பொருளாதார முற்றுகை அகற்றப்பட வேண்டும் என்றும் விரும்புகின்றனர்.

உச்சிமாநாட்டிற்கு முன்னதாக ஒபாமா, கியூபா பற்றி அமெரிக்கக் கொள்கைக்கு உள்ள எதிர்ப்பை திசைமாற்றும் முயற்சியாக பொருளாதாரத் தடைகளில் சில கூறுபாடுகளை தளர்த்தினார். கியூப-அமெரிக்கர்கள் கியூபாவிற்கு பயணம் செய்வதில் இருந்த தடைகளையும் அகற்றியுள்ளார். தீவில் இருக்கும் உறவினர்களுக்கு பணம் அனுப்பவதில் இருத்த தடைகளும் தளர்த்தப்பட்டுள்ளன.

அமெரிக்க தொலைத் தொடர்பு நிறுவனங்கள் கியூபாவிற்குள் தொலைபேசி பணிகள், செயற்கைக்கோள் மூலம் தொலைக்காட்சி, வானொலி ஆகியவற்றை நிறுவதற்கு இருந்த தடைகளையும் அவர் நீக்கியுள்ளார்.

இந்த மட்டுப்படுத்தப்பட்ட செயல்கள்கூட கியூபா அரசாங்கத்திடம் இருந்து குறிப்பிடத்தக்க வகையில் நேரிய விடையிறுப்பைப் பெற்றன. வெள்ளியன்று ஜனாதிபதி ரவுல் காஸ்ட்ரோ தான் வாஷிங்டனுடன் "அனைத்தையும், அனைத்தையும், அனைத்தையும்" விவாதிக்கத் தயார் என்று கூறினார். மேலும் "ஜனநாயகம், சுதந்திரம், மற்றும் மனித உரிமைகள்" பற்றியும் மேற்கோளிட்டார். இச்சொற்கள் பொதுவாக அமெரிக்க அரசாங்கம் கியூபாவில் ஆட்சிமாற்றத்தை செய்யப் பயன்படுத்தப்படுபவை ஆகும்.

இப்படி வாஷிங்டனுக்கு கொடுக்கப்பட்டுள்ள சலுகை கியூப ஆட்சியின் பெருகிய பொருளாதார நெருக்கடியின் அடையாளம் ஆகும். அதன் முக்கிய ஏற்றுமதி சம்பாதித்துக் கொடுக்கும் நிக்கலின் விலைச் சரிவினால் இது ஏற்பட்டுள்ளது. இது கடன் பெறுதலைக் கடினமாக்கியுள்ளது. மேலும் தீவில் பல தொடர்ச்சியாக நிகழ்ந்த சூறாவளிகளின் பாதிப்பும் உள்ளது. ரவுல் காஸ்ட்ரோ ஜனாதிபதி பதவியை அவருடைய நோய்வாய்ப்பட்டிருக்கும் சகோதரர் பிடெல் காஸ்ட்ரோவிடம் இருந்து எடுத்துக் கொண்டபின் தான் கியூபாவின் "பொருள்சார்" முன்னேற்றத்தை தொடக்க இருப்பதாக உறுதியளித்தும், சமீபத்திய மாதங்கள் சமூக நல செலவுக் குறைப்புக்கள் மற்றும் கியூப தொழிலாளர்கள் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும்தான் முன்வைத்துள்ளார்.

ரவுல் காஸ்ட்ரோவின் கருத்துக்களுக்கு விடையிறுக்கும் வகையில் ஒபாமா "இன்னும் அதிக நடவடிக்கைகள்" வேண்டும் என்று கோரினார். குறிப்பாக அவர் கியூபாவில் இருக்கும் அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்றார். அவர்களில் பலரும் வாஷிங்டன் நிதியைப் பெற்றுத் தொடக்கப்பட்ட அமைப்பைச் சேர்ந்த எதிர்ப்பாளர்களாவர். மேலும் அமெரிக்காவிடம் இருந்து வரும் பணத்தில் அரசாங்கம் எடுத்துக் கொள்ளும் வரிக்கட்டணம் குறைக்கப்பட வேண்டும் என்றும் கூறினார்.

இரண்டாவது கோரிக்கை முக்கியத்துவம் வாய்ந்தது. பணம் அனுப்புதலின்மீது இருந்த தடைகளை அகற்றும் முடிவு மனிதாபிமான செயல் என்பது மட்டுமின்றி அரசியல் மூலோபாய செயலின் ஒரு பகுதியும் ஆகும். நாட்டில் டாலர்கள் வரத்து என்பது சமூகச் சமத்துவமின்மையை அதிகரிக்க உதவும். இவ்வாறு உருவாக்கப்படும் ஒரு புதிய சிறு வணிகர்கள் அடுக்கு சமூகத்தளமாக இருந்து அமெரிக்க மேலாதிக்கம் மறுபடியும் சுமத்தப்பட உதவும் என்று அமெரிக்கா நினைக்கிறது. அரசாங்கம் இப்பணத்தில் 20 சதவிகிதம் கட்டணமாக எடுத்துக் கொண்டு அதை மறுபங்கீடு செய்தால் அமெரிக்க நோக்கங்கள் குறைமதிப்பிற்கு உட்படும்.

டிரினிடாட்டில் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் ஒபாமா, "50 ஆண்டுகளாக நாங்கள் கொண்டிருந்த கொள்கை செயல்படவில்லை... கியூபா மக்கள் சுதந்திரமாக இல்லை" என்று வலியுறுத்தினார். இக்கருத்தின் உட்குறிப்பு அமெரிக்க மூலதனத்தின் நூற்றுக்கணக்கான மில்லியன்கள் வரத்து, மாதம் $20 ஐயும் விட சராசரியாக சம்பாதிக்கும் தொழிலாளர் தொகுப்பிடம் இருந்து பெரும் இலாபங்களை அடைய முற்படும் என்றும் கியூபாவிற்குள் அமெரிக்கப் பொருட்கள் வரத்து இன்னும் கூடுதலான முறையில் பொருளாதாரத் தடைகள் மற்றும் CIA சதித்திட்டங்களைவிட காஸ்ட்ரோ ஆட்சியை திறமையுடன் அகற்றக்கூடிய கருவி என்பதும் ஆகும்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved