World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

France: Reports of police beatings at March 19 demonstrations

பிரான்ஸ்: மார்ச் 19 ஆர்ப்பாட்டங்களில் போலீஸ் தாக்குதல் பற்றிய தகவல்கள்

By Frank Dubois
2 May 2009

Back to screen version

CRS எனப்படும் பிரெஞ்சு கலகப் பிரிவு போலீசார் மார்ச் 19 அன்று பொருளாதார நெருக்கடி மற்றும் அரசாங்கத்தின் சிக்கனக் கொள்கைகளுக்கு எதிராக நடந்த தேசிய ஆர்ப்பாட்டங்களின் முடிவில் மேற்கோண்ட மிகக் கடுமையான அடக்குமுறை நடவடிக்கைகள் பற்றி வலைத் தளத்தில் நிறைய தகவல்கள் வெளிக்கொணரப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கைகள் பிரிட்டிஷ் போலீஸ் கடந்த மாதம் G20 க்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் லண்டனில் நடந்த போது கடைப்பிடித்த "kettling" உத்திகளை ஒத்து உள்ளன; அதில் இயன் டோம்லின்சன் என்பவர் இறந்து போனார். ஐரோப்பிய அரசாங்கங்கள் பெருகும் தொழிலாளர்கள், இளைஞர்களின் அரசியல் எதிர்ப்பிற்கு போலீஸ்-அரச வழிவகைகளை கையாள முற்பட்டுள்ளன.

மார்ச் 19ம் தேதி ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசியின் கன்சர்வேடிவ் அரசாங்கத்திற்கு எதிராக பல பிரெஞ்சு நகரங்களிலும் மாபெரும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்ட பின்னர், இணையத் தளக் குறிப்புக்களும் வீடியோக் காட்சிகளும் மிகப் பரந்த முறையில் போலீஸாரின் மிருகத்தனமான அடக்குமுறை ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக வந்ததைக் வெளிக்காட்டி வெளிவந்துள்ளன. இந்தத் தகவல்கள் முக்கிய செய்தி ஊடகங்களினால் இருட்டடிப்பு செய்யப்பட்டுவிட்டன.

சில காட்சிகள் கவிழ்க்கப்பட்ட கார்களையும் குப்பைத் தொட்டி எரிப்புக்களும் ஆர்ப்பாட்டங்களுக்கு அருகே நிகழ்ந்ததை விளக்கின. இவை போலீஸாரால் எடுக்கப்பட்டு ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்த போலிக் காரணமாயின. ஆளும் UMP கட்சியின் அரசியல்வாதிகள் "வன்முறை ஆர்ப்பாட்டங்களை" கண்டித்ததுடன் எதிர்ப்புக்கள் ஒரு "வன்முறை" நிகழ்வு என்றும் சித்தரித்தனர்.

ஆனால் அன்று மிக முக்கியமான போலீஸ் நடவடிக்கை எந்தவித ஆத்திரமூட்டலும் இன்றி நிகழ்த்தப்பட்டது. பாரிசில் மிகப் பெரிய அமைதியான அணிவகுப்பின் முடிவில் அது நடந்தது.

அணிவகுப்பு முடிந்த இடமான Place de la Nation பகுதியில் இருந்து மக்கள் வெளியேற முடியாத அளவிற்கு ஒரு பொறி ஆர்ப்பாட்டத்தின் முடிவில் வைக்கப்பட்டது. இது தென்கிழக்கு பாரிசில் மிகப் பெரிய சதுக்கம் ஆகும்; நகரத்தின் முக்கிய பகுதிகள் அரை டஜனுக்கும் மேலான பாதை சந்தி இங்கு உள்ளது. CRS இந்த சதுக்கத்தை பல மணி நேரம் தடுப்பிற்கு உட்படுத்தி மெட்ரோவிற்கு செல்லும் பாதைகளையும் மூடிவிட்டது. இறுதியில் 300 பேர் கைது செய்யப்பட்டு அவர்களுள் 45 பேர் மீது குற்றங்கள் சாட்டப்பட்டன. இவர்கள் நீதிக் கட்டுப்பாட்டை எதிர்கொள்கின்றனர், இவர்கள் வாடிக்கையாக மாவட்ட நீதிமன்றத்தில் பதிவு செய்து கொள்ளவேண்டும், இன்னும் மற்ற ஆர்ப்பாட்டங்களில் பங்கு பெறவும் முடியாது. தாங்கள் கைது செய்யப்பட்டதை எதிர்த்தவர்கள் போலீஸுக்கு எதிராக "கலகம் செய்தனர் என்று குற்றம் சாட்டப்பட்டனர்.

நேரில் பார்த்தவர் ஒருவர் கூறுவதாவது: "18.30 க்கும் 19.00 க்கும் இடையே ஆர்ப்பாட்டம் Place de la Nation ல் முடிவடைந்தது. மக்கள் மகிழ்ச்சியாக இருந்தனர், அதுவரை எந்தப் பிரச்சினையும் இல்லை; இன்னும் கலையத் தயாராக இல்லை; உத்தியோகபூர்வமாக அவர்கள் 9 மணி வரை இருக்கும் உரிமை கொண்டிருந்தனர். சதுக்கத்தில் எங்கும் இசை முழக்கம் இருந்தது.... புல்தரையில் ஒரு ஹிப்-ஹாப் இசையரங்கு நடந்தது, கொடிகள் சதுக்கத்தின் நடுவில் இருந்த சிலையில் அசைந்தாடின.

"ஆனால் விரைவில் கெடுதலான வகையில் சூழ்நிலை மாறியது... டஜன் கணக்கான CRS போலீசார் சதுக்கத்திற்கு விரைந்து வந்து அதற்கு வரும் முக்கிய சாலைகளைத் தடுத்து ஒருவரும் எங்கும் செல்ல முடியாதபடி செய்தனர். பல போலீஸ் குழுக்கள் படிகளுக்குக் கீழே, நிலத்தடியில் தங்களை நிலைநிறுத்திக் கொண்டனர்; அங்கிருந்து கண்ணீர்ப்புகையை நிலத்தடி இரயிலில் செல்ல விரும்புபவர்கள்மீது அவர்கள் வீச முடியும். ஒரு பக்கப் பாதை மூலம் வெளியேற முற்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் சதுக்கத்தின் மையத்திற்கு CRS போலீசாரால் விரட்டப்பட்டு வந்து சேர்ந்தனர்.

"முகமூடி அணிந்த தனியாட்கள் இரும்புத் தடியை சுழற்றிக் கொண்டு நீல உடையணிந்தவர்கள் மீது [போலீஸார்] பலவற்றை வீசினர்; ஆனால் ஒரு சில நிமிஷங்களில், என்ன ஆச்சரியம்! அவர்கள் ஒரு ஆர்ப்பாட்டக்காரரை சூழ்ந்து அவரை நையப்புடைத்து பின்னர் சில கஜ தூரங்கள் தள்ளி நின்றிருந்த தங்கள் சக ஊழியர்களிடம் இழுத்துச் சென்றனர். சாதாரண உடை அணிந்த போலீசார் சிலரின் வக்கிரத்தன உத்திதான் இது, மிகப் பழைய முறை என்றாலும் அது எப்பொழுதும் வியப்பைத்தான் கொடுக்கும்.

"சதுக்கம் நேர்த்தியான முதல்த்தர பொறியாயிற்று. போலீஸ் சதுக்கத்தில் இருந்து மக்களை அகற்ற முற்படுகையில், மக்கள் சிலைக்கு அருகே, அதைச் சுற்றி இருந்த இடத்தில் புகலிடம் நாடினர் (இச்சிலை "குடியரசின் வெற்றி" என்பதற்கு அடையாளம் ஆகும்-- நல்ல அடையாளம்!), ஒருதலைப்பட்சமாக கைது செய்யப்படுதலை தவிர்க்கம் நோக்கத்துடன். ஆனால் விரைவில் தாங்கள் சூழ்ந்து கொள்ளப்பட்டதை அறிந்தனர், ஒருவரோடு ஒருவர் முண்டியடித்து வெளியே செல்ல வழியில்லாமல் தாங்கள் கண்ட போலீஸ் உத்தியால் அதிர்ச்சி அடைந்தனர். சூழப்பட்ட மக்களுக்கு இடையே மூன்று பேர் திடீரென்று சிறப்புக் கைத்தடியை எடுத்து எதுவும் செய்யாத ஒரு இளைஞரைத் தாக்கி, அவரை அடித்து CRS புறம் தள்ளி இழுத்தனர். சில "அமைதி காப்பவர்கள்" கூட்டத்தை ரப்பர் தோட்டாக்கள் சுட்டு அச்சுறுத்தினர். ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இவ்வாறு சூழப்பட்டபின், போலிசார் அவர்களை விடுவிக்க முடிவெடுத்து, தங்களது கைத்தடிகளை பயன்படுத்தி சிலையைச் சுற்றி மனிதச் சங்கிலி அமைத்திருந்தவர்களை முறித்து, அங்கு இருக்கும் நபர்கள் அனைவரையும் ஒருவர் பின் ஒருவராகத் திட்டி, அடையாளத்தை சோதித்தனர். ஆவணம் இல்லாதவர்கள் நேரடியாக போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பிரான்சு முழுவதுமே போலீஸ் தாக்குதல்கள் இருந்தன. அணிவகுப்பின் இறுதியில் மார்சேயில் இயற்பியல் (physics) முதுகலைப் பட்டதாரி ஒருவரும் வேதியியில் (Chemistry) பேராசிரியர் ஒருவரும் கைது செய்யப்பட்டு, வன்முறைக் குற்றம் சுமத்தப்பட்டு நீதிமன்றத்திற்கு அனுப்பப்பட்டனர். மார்சேயில் உள்ள கூட்டுக் கல்வித் தொழிற்சங்கக்குழு இந்தக் கைதுகளை கண்டித்து இருவரும் அமைதியாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுட்டனர் என்றும் அவர்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என்றும் கோரினர்.

துலூசில் ஒரு மாணவ ஆர்ப்பாட்டக்காரர் ரப்பர் தோட்டா ஒன்றினால் முகத்தில் அடிபட்டார்; ஒரு கண்பார்வையை அவர் இழக்கக்கூடும். இத்தாக்குதல் Toulouse II University Le Mirail இன் பல்கலைக் கழக ஊழியர்கள் பொது மன்றத்தால் கண்டிக்கப்பட்டது (நாட்டில் பல பல்கலைக் கழகங்களை போல் இதுவும் வேலைநிறுத்தத்தில் உள்ளது.)

இதேபோன்ற உத்திகளும் மிருகத்தனமும் ஐரோப்பா முழுவதும் போலீஸ் பிரிவுகளால் நடத்தப்படுகின்றன. இந்த வழிவகைகளின் ஒரு உதாரணம் லண்டனில் நடந்த G20 உச்சி மாநாட்டின்போது காணப்பட்டது. (see "Britain: Calls for public inquiry into police brutality at G20 summit"and "Britain: Third autopsy into G20 victim Ian Tomlinson's death") அதேபோல் உச்சிமாநாடு ஸ்ட்ராஸ்பூர்க் மற்றும் (ஜேர்மனியில் உள்ள) Khel லும் கடைப்பிடிக்கப்பட்டது.

மார்ச் 19 தாக்குதல்கள் அரசியல் மிரட்டல் செயலாகும்; இவை குறிப்பாக இளைஞர்களுக்கு எதிராக இயக்கப்படுகின்றன (பல முறையும் ஆர்ப்பட்டடத்தின் முடிவில் வரும் குழுக்கள் தாக்கப்பட்டன). இவை ஜனநாயக உரிமையான ஆர்ப்பாட்டம் நடத்துதல், மாற்றுக் கருத்துக்களை பகிரங்கமாக தெரிவித்தல் ஆகியவற்றிற்கு எதிரானவை ஆகும். தொழிலாள வர்க்கத்தின் பரந்த தட்டுக்கள், குறிப்பாக தனியார் துறையில் இருந்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வந்து, தொழிற்சங்கத்தின் கட்டுப்பாட்டை விட்டு நிலைமை மீறுமோ என அச்சம் வரும்போது நடத்தப்படுகின்றன; தொழிற்சங்கங்கள்தான் கடந்த தசாப்தம் முழுவதும் பிரெஞ்சு அரசாங்கத்துடன் சேர்ந்து தொழிலாளர் போராட்டங்களை கட்டுப்பாட்டிற்குள் வைத்துள்ளன.

பிரதம மந்திரி பிரான்சுவா பிய்யோன், தொழிலாளர்களின் கூடுதலான முறைபோக்கு நடவடிக்கை வளர்ச்சியை, வேலை போகும் நிலையில் உள்ள தொழிலாளர்கள் "முதலாளிகளை சிறைப்பிடித்தல்" போன்றவற்றை எதிர்கொள்ளுகையில், ஏப்ரல் 17ம் தேதி செய்தி ஊடகத்திடம் கூறினார்: "ஊழியர்களோ மற்ற அதிகாரியோ பிணைக் கைதியாக செய்யப்படுவதை அரசாங்கம் ஏற்காது; இது குடியரசு ஒப்பந்தத்தின் வருங்காலத்திற்கே பெரும் ஆபத்து ஆகும்." அத்தகைய நிலையில் அரசாங்கம் என்ன செய்யும் என்று கேட்கப்பட்டதற்கு, அவர் கூறினார்: "மாவட்ட அளவில் அரசாங்க பிரதிநிதிகளான prefects க்களுக்கு நாங்கள் உத்தரவிட்டுள்ளோம்; அதன்படி அவர்கள் பெரும் விழிப்புடன் இருந்து சட்டத்தை அமலாக்க தேவையானவற்றைச் செய்யலாம்" என்றார்.

கடந்த இரு வாரங்களில் சார்க்கோசி அரசாங்கம் "பாதுகாப்பின்மை" க்கு எதிராக சில சட்டங்களை "வன்முறைக் குழுக்கள்தான்" இதற்கு காரணம் எனக் கூறி இயற்ற முற்பட்டுள்ளது. ஒரு புதிய குற்றத்திற்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்படலாம் என்பது இதில் அடங்கும்: "வேண்டுமென்றே, தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள குழுவில் பங்கு பெற்றாலும், அதன் நோக்கம் மக்களுக்கும் சொத்துக்களுக்கும் ஆபத்து ஏற்படுத்தும் நோக்கம் பெற்றிருந்தால்." என்று அது கூறுகிறது.

அரசாங்கம் "முகமூடிகள்", "மறைப்புக்கள்" ஆகியவை ஆர்ப்பாட்டங்களில் அணியப்படுவதை தடுக்கும் சட்டத்தையும் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளது. 1980களின் ஜேர்மனியில் வந்த சட்டம் ஒன்று ஆர்ப்பாட்டத்தில் பங்கு பெறுபவர்கள் தங்கள் முகத்தை அடையாளம் தெரியாமல் மறைத்துக் கொள்ளுவதை தடுக்கிறது, "ஏனெனில் அவை நபரின் அடையாளத்தை நிர்ணயம் செய்ய முடியாமல் உதவுகிறது". இதைத்தான் பிரெஞ்சு சட்டம் பின்பற்றுகிறது.

ஏப்ரல் 28ம் தேதி வெளிவந்த அதன் ஆண்டு அறிக்கையில், Nantional Commission on Security Practices (CDNS), பாதுகாப்பு நடைமுறைகள் பற்றிய தேசியக் குழு, ஆவணச் சான்றுகள் கொடுத்து கடுமையாக தாக்கியும் எழுதியுள்ளது; மற்ற பிற வழக்கங்களுடன் முறையாக, தேவையற்ற விதத்தில் போலீசார் காவலில் வைப்பது, விலங்குகள் இடுவது, ஆடைகளை களைந்து சோதிப்பது, அதிக வலிமையை தேவையில்லாமல் பயன்படுத்துவது, கூடுதலான நேரம் காவலில் வைப்பது, சில தடுப்பு முறைகளை கையாண்டு காவலில் இருப்பவர்கள் இறக்கும்படி போவது, மற்றும் போலீஸும் பிற காவல்பிரிவுகளும் திட்டிப் பேசுதல், அவமானப்படுத்ததுல் என்பவை இதல் அடங்கியிருந்தன.

சார்க்கோசி அரசாங்கம் CDNS ஐ அகற்றிவிடும் வழிவகையைத் முன்னெடுத்துள்ளது; 2008 ஜூன் மாதம் அரசியலமைப்பு பற்றிய சட்டத்தின்கீழ் இது செய்யப்படுகிறது.

ஏப்ரல் 2ம் தேதி "Public outrage, police officers above the law in France" அதாவது பொதுமக்கள் சீற்றம், பிரான்சில் போலீசார் சட்டத்தைவிட பெரியவர்கள் என நடந்துகொள்ளுவது என்ற தலைப்பில் Amnesty International அறிக்கை ஒன்று போலீசார் பெருகிய முறையில் எதையும் பொருட்படுத்தாது நடந்து கொள்ளுவது பற்றி கவலை தெரிவித்துள்ளது. அந்த அமைப்பின் ஒரு அதிகாரி கூறினார்: "சட்டவிரோதக் கொலைகள், அடித்தல்கள், இனவழித் தூற்றல்கள், கட்டுப்பாட்டு அதிகாரிகள் வன்முறையை அதிகமாக பயன்படுத்துதல் ஆகியவை அனைத்து சூழ்நிலையிலும் சர்வதேச சட்டத்தில் தடுக்கப்பட்டுள்ளன. ஆயினும்கூட, பிரான்சில் அத்தகைய மனித உரிமைகள் மீறல் அபூர்வமாகத்தான் திறமையான விசாரணைக்கு உட்படுகின்றன; அதற்கு காரணமாக உள்ளவர்கள் தண்டிக்கப்படுவதும் அபூர்வம்தான்." இதன் விளைவு "நடைமுறையில் பொருட்படுத்தாத்தன்மை செயல்பாடுதான்."

தேசியத் தொழிற்சங்க கூட்டமைப்புக்கள் எவையும் மார்ச் 19 நடந்த தாக்குதல்களை பற்றி பொதுமக்களின் கவனத்திற்கு கொண்டுவரவும் இல்லை, அவற்றை எதிர்த்துப் பிரச்சாரமும் செய்யவுமில்லை.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved