World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

What is the United States preparing in Pakistan?

அமெரிக்கா என்ன தயாரிப்புக்களை பாக்கிஸ்தானில் மேற்கொள்கின்றது?

By Keith Jones
5 May 2009

Back to screen version

இவ்வாரம் ஜனாதிபதி ஒபாமாவுடனும் ஆப்கானிய ஹமித் கர்சாயுடனும் வாஷிங்டனுக்கு முத்தரப்பு உச்சிமாநாட்டிற்கு செல்லுகையில் பாக்கிஸ்தானிய ஜனாதிபதி ஆசிப் அலி ஜர்தாரி அமெரிக்க இராணுவப் படைகள் பாக்கிஸ்தானுக்குள் போர் நடத்துவதற்கு அனுமதிக்குமாறு நிட்சயமாக பாரிய அழுத்தத்திற்கு உள்ளாவார்.

பல வாரங்களாக உயர்மட்ட அமெரிக்க அரசியல் மற்றும் இராணுவ ஆளும்வர்க்கமும் அமெரிக்க செய்தி ஊடகமும் பெருகிய முறையில் இஸ்லாமாபாத்தை அமெரிக்க ஆணைகளை முற்றிலும் செயல்படுத்துவதற்கு உரத்த குரலில் அச்சுறுத்தும் பிரச்சாரத்தை செய்கின்றன. வாஷிங்டன் இதை AfPak போர் (ஆப்கானிஸ்தான்-பாக்கிஸ்தான் போர்) என்று புதிதாக வரையறுத்துள்ளது.

அமெரிக்கா கேட்டுக் கொண்டதற்கு இணங்க, பாக்கிஸ்தானிய இராணுவம் கடந்த 10 நாட்களாக இரத்தம் சிந்தும் தாக்குதலை பாக்கிஸ்தானிய தலிபான் போராளிகளுக்கு எதிராக வட மேற்கு எல்லைப்புற மாகாணத்தில் (NWFP) யில் நடந்தி வருகிறது. இதில் விமானங்கள் மூலம் தாக்குதல் மற்றும் கனரக பீரங்கித் தாக்குதல் ஆகியவை பயன்படுத்தப்படுகின்றன. இத்தாக்குதல் மிகப் பரந்த அளவில் குடிமக்கள் இறப்புக்களை ஏற்படுத்தி பல்லாயிரக்கணக்கான ஏழை கிராமவாசிகளை இருக்கும் அவ்விடங்களை விட்டு ஓடவும் வழி செய்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ஆக்கிரமிப்பை அதிகரிக்க உதவ வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தையும் மற்றும் நாட்டின் மரபுரீதியாக சுயாட்சி மத்திய நிர்வாகத்திற்கு உட்பட்ட பழங்குடிப் பகுதிகளை (Federally Administered Tribal Areas) அமைதிப்படுத்துதல் என்ற பாக்கிஸ்தான் அரசாங்கத்தின் உந்துதலில் 60,000க்கும் ஒரு இலட்சத்திற்கும் இடையேயிலான பாக்கிஸ்தானியர்கள் அகதிகளாக மாற்றப்பட்டுவிட்டனர்.

அமெரிக்க ஆளும் உயரடுக்கு சமீபத்திய தொடர் இரத்தம் சிந்தலை வரவேற்றுள்ளது. ஆனாலும் அதற்கு அதிக திருப்தி ஏற்படவில்லை. ஜார்தாரி வாஷிங்டன் வருகைக்கு முன்னதாக பாக்கிஸ்தானுக்கும், அதன் மக்களுக்கும் மற்றும் அரசாங்கத்திற்கு எதிரான மறைமுகமானதும் வெளிப்படையானதுமான அச்சுறுத்தல்கள் குறைவின்றித் தொடர்கின்றன.

ஏப்ரல் 29ம் தேதி நடந்த செய்தியாளர் கூட்டத்தில் ஒபாமா பாக்கிஸ்தானின் சிவில் அரசாங்கம் "மிகவும் உடைந்துபோகும் நிலையில்" உள்ளது என்றும் அதன் மக்களுக்கு "அடிப்படைப் பணிகளை வழங்கும் திறனற்றிருக்கிறது" என்றும், மக்களுடைய "ஆதரவு மற்றும் விசுவாசத்தைப் பெறும்" திறனைக் கொண்டிருக்கவில்லை என்றும் கூறினார். ஆனால் அவர் பாக்கிஸ்தான் இராணுவம், மற்றும் அமெரிக்க பாக்கிஸ்தானிய "இராணுவ ஆலோசனைகள் மற்றும் ஒத்துழைப்பு" வலுவானது என்றும் புகழ்ந்தார்.

இஸ்லாமாபாத்தில் இராணுவ சர்வாதிகாரங்கள் தொடர்ந்து வந்ததை நிலைநிறுத்திய வாஷங்டனின் முக்கிய பங்கைக் கருத்தில் கொள்ளுகையில், ஒபாமாவின் அறிக்கை பரந்த அளவில் பாக்கிஸ்தான் மற்றும் அமெரிக்க அரசியல் ஆளும்வர்க்கங்களுக்குள்ளேயே வாஷிங்டன் ஒரு இராணுவ சதிக்கு ஆதரவு கொடுக்குமோ என்ற அடையாளத்தைக் காட்டுவதாக கருதப்படுகிறது.

இதுதான் அமெரிக்க மத்தியக் கட்டுப்பாட்டு தலைவர் தளபதி டேவிட் பெட்ரீயஸ் ஜார்தாரி அரசாங்கம் அடுத்த இரு வாரங்களில் அது நாட்டின் வட மேற்கில் தலிபான் எழுச்சியை நசுக்கவில்லை என்றால், அமெரிக்க "அடுத்த கட்ட நடவடிக்கையை" நிர்ணயிக்கும் என்று கூறியதாக வந்துள்ள அறிக்கைகளில் அடிக்கோடிட்டுக் காட்டப்படுகிறது. பாக்கிஸ்தானின் இராணுவம் நாட்டின் சிவில் அரசாங்கத்தைவிட "உயர்ந்தது" என்றும் பெட்ரீயஸ் கூறினார்.

இஸ்லாமாபாத் இருவார கால கெடுவை எதிர்நோக்கியுள்ளது என்பதை தொடர்ந்து பாக்கிஸ்தானில் இதற்கு எதிராக எழுந்த கூக்கூரல்களை ஒட்டி, வெளிவிவகாரத்துறை செய்தித் தொடர்பாளர் ரோபர் வுட் வெள்ளியன்று அக்கருத்தை மறுக்கும் கட்டாயத்திற்கு உள்ளானார். ஆயினும்கூட, அவர் பாக்கிஸ்தான் ஒரு "110 சதவிகித முயற்சியை" தலிபானுக்கு எதிராக எடுப்பதை வாஷிங்டன் எதிர்பார்க்கிறது என்றும், "இரு நாட்கள், இரு வாரங்கள், இரு மாதங்கள்" என்று இல்லாமல் இது காலவரையறையற்ற எதிர்காலத்திலும் எடுக்கப்பட வேண்டும் என்றும் கூறினார்.

ஆப்கானிஸ்தானத்திற்கும் பாக்கிஸ்தானுக்கும் ஒபாமாவின் சிறப்பு தூதரான ரிச்சர்ட் ஹோல்ப்ரூக் பாக்கிஸ்தானிய செய்தி ஊடகத்தில் வந்துள்ள கவலை தரும் கருத்துக்களான, கடைசியாக அமெரிக்கா ஆதரவு பெற்றிருந்த சர்வாதிகாரி தளபதி பர்வேஸ் முஷாரப் பாக்கிஸ்தானிய ஜனாதிபதி பதவியை விட்டு விலகும் கட்டாயத்திற்குட்பட்டு 9 மாதங்களுக்குள்ளாக வாஷிங்டன் ஒரு இராணுவத் தலைமையிலான அரசாங்கத்தை பரிசீலிக்கிறது என்று கூறியிருப்பவற்றை கண்டித்தார். "இது செய்தியாளர்களின் குப்பை கிளறல்... செய்தியாளர்களின் பிதற்றல்" என்று ஹோல்ப்ரூக் அறிவித்தார்.

ஒபாமா நிர்வாகம் பாக்கிஸ்தானில் புதிய குற்றத்தைத் தயாரிக்கிறது என்பதற்கான சான்று, மத்திய ஆசியாவில் அதன் போரை முடுக்கிவிடக்கூடும் என்பதற்கான பெரும்பான்மையான சான்றாக வந்துள்ளது.

ஜார்தாரி மீது அழுத்தத்தை தீவிரப்படுத்தும் வெளிப்படை நோக்கத்தில், வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் மற்றும் நியூயோர்க் டைம்ஸ் இரண்டும் கடந்த வாரம் உயர்மட்ட நிர்வாக அதிகாரிகளை மேற்கோளிட்டுக் கூறிய கூற்றின்படி, ஒபாமா நிர்வாகம் இப்பொழுது அவருடைய முக்கிய விரோதியாக இருந்த முன்னாள் பிரதம மந்திரியும் பாக்கிஸ்தான் முஸ்லிம் லீக் (N) தலைவருமான நவாஸ் ஷெரிப்புடன் பெரும் இணக்கத்தை காட்டுகிறது.

தன்னுடைய கடந்த வார செய்தியாளர் கூட்டத்தில் ஒபாமா அமெரிக்கா பாக்கிஸ்தானின் இறைமையை மதிக்க விரும்புகிறது என்று கூறினார். "ஆனால் பாக்கிஸ்தான் உறுதியாக இருக்க வேண்டும் என்பதில் நமக்கு மகத்தான மூலோபாய நலன்களும், மகத்தான தேசியப் பாதுகாப்பு நலன்களும் உள்ளன என்பதை நாம் அறிவோம்" என்றார்.

வேறுவார்த்தைகளில் கூறினால் தனது விருப்பத்தின்படி அமெரிக்கா பாக்கிஸ்தானின் இறைமையை மீறும். கடந்த ஆகஸ்ட்டில் இருந்து அமெரிக்கா பாக்கிஸ்தானுக்குள் டஜன் கணக்கான ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளது. அதைத்தவிர ஒரு சிறப்புப் படைகள் பிரிவின் தரைவழித் தாக்குதலையும் நடத்தியுள்ளது.

கடந்த வாரம் பாதுகாப்பு மந்திரி ரோபர்ட் கேட்ஸ் ஒபாமா நிர்வாகம் அமெரிக்க காங்கிரஸை பென்டகனுக்கு பாக்கிஸ்தானுக்கான இராணுவ உதவியைப் பொறுத்தவரையில் ஈராக் மற்றும் பாக்கிஸ்தான் கைப்பாவை அராங்கங்களுக்கு இராணுவ உதவி அளித்தலின் தன்மையையே கொடுக்க வலியுறுத்தப் போவதாக கூறினார். இந்த முன்னோடியில்லாத ஒழுங்கின்கீழ் பாக்கிஸ்தானுக்கான இராணுவ உதவி வெளிவிவகாரத்துறையினூடாகவோ அல்லது வெளிநாட்டு உதவி சட்ட வரையறைக்கு உட்படாது பென்டகனால் நேரடியாக கட்டுப்படுத்தப்படும்.

இதைத்தவிர நேற்று நியூ யோர்க் டைம்ஸில் "பாக்கிஸ்தான் பூசல் அணுவாயுதங்கள் பற்றிய அமெரிக்காவின் சந்தேகங்களை எழுப்புகிறது" என்ற தலைப்பில் வந்துள்ள அசாதாரண கட்டுரை உள்ளது. செய்தித்தாளின் வெள்ளை மாளிகை நிருபரான David Sanger ஆல் எழுதப்பட்டுள்ள இக்கட்டுரை ஒரு CIA அல்லது பென்டகனால் கொடுக்கப்பட்ட பணி போல், பொது மக்கள் கருத்தை திரிக்கும் நோக்கத்தையும் பாக்கிஸ்தானில் பெரிய அளவில் அமெரிக்க அரசியல் மற்றும் இராணுவக் குறுக்கீடு பெருகுவதை நியாயப்படுத்தவும் நோக்கம் கொண்டுள்ளது.

இக்கட்டுரை முற்றிலும் பெயரிடப்படாத "மூத்த அமெரிக்க அதிகாரிகளின்" அறிக்கைகளை ஆதாரமாக கொண்டுள்ளது. கடந்த வாரம் ஒபாமா பாக்கிஸ்தானின் இராணுவம் நாட்டின் அணுவாயுதங்கள் மீது கட்டுப்பாடுகொண்டிருப்பது பற்றி அறிக்கை கொடுத்திருந்தாலும், தலிபான் அல்லது அல்கொய்தா ஆதரவாளர்கள் பாக்கிஸ்தானின் அணுவாயுதத்தை கைப்பற்றிக்கொள்ள முடியும் அல்லது பாக்கிஸ்தானின் அணு நிலையங்களில் ஊடுருவ முடியும் என்ற பெருகிய, உண்மையான அச்சம் உள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

பாக்கிஸ்தானிய இராணுவம் அமெரிக்க உதவியுடன் அதன் அணுவாயுதங்கள் மீது கொண்டிருக்கும் விரிவான கட்டுப்பாட்டை இஸ்லாமிய அடிப்படைவாதிகள் எப்படித் தகர்க்க முடியும் என்பதை விளக்கும் வகையில் கட்டுரை ஒரு பயங்கரக் காட்சி நிறைந்த திரைப்பட வகை தோற்றத்தை முன்வைக்கிறது. இஸ்லாமிய அடிப்படைவாதிகள் முதலில் இந்தியாவிற்கும் பாக்கிஸ்தானுக்கும் இடையே மோதலைத் தூண்டி அதன் பின் பாக்கிஸ்தான் அவ்வாயுதங்களை அதன் கிழக்கு அண்டைநாட்டின் எல்லைக்கு அருகே நகர்த்தும்போது கைப்பற்றிகொள்ளலாம் என்கிறது.

அமெரிக்க மக்கள் கருத்தை ஈராக் படையெடுப்பிற்கு ஆதரவாகத் திரட்டுவதில் டைம்ஸ் பெரிய பங்கு கொண்டிருந்தது என்பது நினைவில் கொள்ளப்பட வேண்டும். இப்பிரச்சாரத்தின் முதலிலும் மையத்திலும் ஈராக் அரசாங்கம் அல்கொய்தாவுடன் பிணைப்பு கொண்டிருந்தது என்றும் சதாம் ஹுசைன் தயாரித்துவரும் அணுவாயுதங்கள் அதற்கு கொடுக்கப்படும் என்ற பொய்யும் இருந்தது.

டைம்ஸின் கட்டுரை ஒரு ஒருங்கிணைந்த பிரச்சாரத்தின் பகுதி என்பது ஒபாமாவின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகரான தளபதி ஜேம்ஸ் ஜோன்ஸ் திங்களன்று, டைம்ஸில் கட்டுரை தோன்றிய அன்றே BBC க்கு கொடுத்த போட்டி ஒன்றின்மூலம் அடிக்கோடிட்டுக் காட்டப்படுகிறது.

பாக்கிஸ்தானின் அணுவாயுதங்கள் பாதுகாப்பு அமெரிக்காவிற்கு பெரும் கவலை என்பதை ஜோன்ஸ் சுட்டிக்காட்டி, பாக்கிஸ்தானிய அரசாங்கத்திற்கு சற்று வெளிப்படையான அச்சறுத்தல் கொடுக்கும் விதத்தில் கூறினார்: "இப்பொழுது சென்று கொண்டிருக்கும் திசையில் தொடர்ந்து பாக்கிஸ்தானால் செல்லாவிட்டால், அங்கு நாம் வெற்றிபெறவில்லை என்றால், பின்னர் அணுவாயுதப் பிரச்சினை பரிசீலனைக்கு வரும் என்பது வெளிப்படைதான்."

பாக்கிஸ்தானிய அணுவாயுதங்கள் தலிபான்களிடம் சிக்கிவிட்டால், அது "மிக, மிக, மோசமான நிலையாகிவிடும்" என்று அவர் தெரிவித்தார்; தன்னுடைய அடுத்த சொற்களை கவனத்துடன் தேர்ந்தெடுத்து சுட்டிக் காட்டினார்: "எமது இரு தரப்பு உறவுகளின் வரம்பிற்குள் எதையும் செய்வோம், பல தரப்பு உறவுகளையும் பயன்படுத்தி அத்தகைய செயல் நடந்து விடாமல் உறுதி செய்வோம்."

ஒபாமா நிர்வாகமும் பென்டகனும் பாக்கிஸ்தான் மற்றும் மத்திய ஆசியாவின் எண்ணெய் வளம் கொழிக்கும் பகுதியில் அமெரிக்கா பெறவிரும்பும் பூகோள-அரசியல் மூலோபாயத்தின் அதன் பங்கு ஆகியவற்றைப் பற்றி தெளிவாக தங்கள் விருப்புரிமைகளை பரிசீலிக்கின்றன. ஒன்று உறுதியாகத் தெரிகிறது. இவர்கள் தயாரிப்பது அப்பகுதியில் உள்ள மக்களுக்கு இன்னும் கூடுதலான வன்முறை மற்றும் கஷ்டங்களை கொடுக்கும் என்பதோடு பாக்கிஸ்தானிய மக்களின் ஜனநாயக உரிமை, விருப்புகள் ஆகியவற்றை இன்னும் தாக்குதலுக்குள்ளாக்கும்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved