World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Families of dead Sri Lankan soldiers speak with WSWS

இலங்கையில் உயிரிழந்த சிப்பாய்களின் குடும்பத்தினர் உலக சோசலிச வலைத் தளத்துடன் பேசினர்

By our correspondents
14 May 2009

Back to screen version

இலங்கையின் வடக்கில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான அரசாங்கத்தின் "இறுதித் தாக்குதலில்" ஆயிரக்கணக்கான தமிழ் சிவிலியன்கள் கொல்லப்பட்டும் காயமடைந்துமுள்ளதோடு மேலும் இலட்சக்கணக்கானவர்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.

படையினர் "கடுமையான எதிர்த் தாக்குதல்களை" சந்திப்பதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவிக்கும் அதேவேளை, அது அந்தப் பிரதேசத்திற்கு எந்தவொரு பத்திரிகையாளரையும் அனுமதிக்க மறுப்பதோடு கடந்த அக்டோபரில் இருந்து உயிரிழக்கும் சிப்பாய்களின் எண்ணிக்கையை வெளியிடுவதை நிறுத்தி விட்டது. இந்த எண்ணிக்கையை வெளியிடுவதில் பாதுகாப்பு பிரச்சினை உள்ளதாக அரசாங்கம் கூறிக்கொண்ட போதிலும், உண்மையான காரணம், உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதானது யுத்தம் தொடர்பான வெகுஜன சீற்றத்தையும் அதிருப்தியையும் மேலும் அதிகரிக்கச் செய்யும் என அது பீதிகொண்டுள்ளதேயாகும்.

கடந்த மாதம் பூராவும், உயிரிழந்த நூற்றுக்கணக்கான சிப்பாய்களின் சடலங்கள் தெற்கில் உள்ள பின்தங்கிய கிராமங்களில் உள்ள அவர்களது குடும்பங்களிடம் வந்து சேர்ந்துள்ளன. பெருந்தொகையான காயமடைந்த சிப்பாய்கள் கொழும்பிலும் ஏனைய பிரதேசங்களிலும் உள்ள அரசாங்க ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுகின்றனர். இந்த மிதமிஞ்சிய எண்ணிக்கையானது இலங்கை அரசாங்கத்தின் குற்றவியல் யுத்தத்தின் மறுபக்கமாகும்.

பெரும்பாலான சிப்பாய்கள் பொருளாதாரத்துக்காக இராணுவத்தில் சேர்ந்தவர்கள். அவர்கள் வறுமையின் காரணமாக இனவாத யுத்தத்தில் பீரங்கிக்கு இரையாகத் தள்ளப்பட்டுள்ளனர். அரசாங்கத்தின் யுத்தத்தின் இனவாத குறிக்கோள்களுக்கு ஆதரவளிப்பதற்கு மாறாக, அவர்கள் தமது குடும்பத்துக்கு நிதி வழங்க இராணுவத்தில் இணைந்தனர். உள்நாட்டு யுத்தத்தின் "வீரர்கள்" பற்றி ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ இடைவிடாமல் பேசும் அதே வேளை, அவர்களது வாழ்க்கையின் மற்றும் சாவின் உண்மையான கதைகள் சொல்லப்படுவதில்லை.

தீவின் வடகிழக்கில் கடந்த மாதங்களில் மோதல்களில் கொல்லப்பட்ட பல சிப்பாய்களின் பெற்றோர்களையும் உறவினர்களையும் உலக சோசலிச வலைத் தள (WSWS) நிருபர்கள் அண்மையில் சந்தித்தனர்.

***

வர்ணகுலசூரிய அமித் மதுசங்க, கொழும்பில் இருந்த 57 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஹத்தினியவைச் சேர்ந்த 19 வயது சிப்பாயாவார். இவர் ஏப்பிரல் 29 வடக்கில் புதுக்குடியிருப்பில் கொல்லப்பட்டார். அவரது பெற்றோர்களுக்கு கொடுக்கப்பட்ட தகவல்களின்படி, அன்றய தினம் உயிரிழந்த கஜபா படைப்பிரிவின் ஒன்பது சிப்பாய்களில் இவரும் ஒருவராவார்.

ஆயிரக்கணக்கான இலங்கை சிப்பாய்களை போலவே, அமித்தும் வறுமையின் காரணமாக இராணுவத்துக்குள் ஈர்க்கப்பட்டார். பத்தாம் தரத்தில் பாடசாலையை விட்டு வெளியேறிய அவர், தனது குடும்பத்துக்கு உதவுவதற்காக கட்டுமான மற்றும் தச்சு வேலைகளில் ஈடுபட்டு, பின்னர் 2008 ஜனவரியில் இராணுவத்தில் சேர்ந்துகொண்டார்.

 

அமித் மதுஷங்கவின் பெற்றோர்

அமித்தின் பெற்றோரான அஜித் ஜோசப்பும் கிருஷாந்தி மெனிகேயும் தனது மகனின் இழப்பு பற்றி திகைப்படைந்துள்ளனர்.

39 வயதான அஜித் ஜோசப், 20 வருடங்களாக தேங்காய் சேகரிப்பதில் ஈடுபடுகிறார். அமித்தின் ஒரே சகோதரி மணம்முடித்துள்ளார். அனைவரும் மிகவும் வறியவர்கள். மரப் பலகைகளாலான ஒரு சிறிய வீட்டிலே அவர்கள் வசிப்பதோடு அதன் கூறை தென்னை ஓலைகளால் வேயப்பட்டுள்ளது.

அஜித் ஜோசப் விளக்கியதாவது: "எனது மகன் இராணுவத்தில் சேர்வதற்கான பிரதான காரணம் எமது குடும்பத்திற்கு ஒரு வீட்டைக் கட்டுவதற்கு பணம் சேகரிப்பதே. எங்களுக்கு நிலமோ வீடோ கிடையாது. நாங்கள் அடுத்தவர்களின் நிலத்தில் அமைக்கப்பட்ட ஒரு சிறிய வீட்டில் வசிப்பதோடு ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு தள்ளப்படுகிறோம்.

"எமது நிலையைப் பற்றி மகன் மிகவும் கவலையடைந்தார். அவர் எங்களுக்கென்று ஒரு நிலத்தை வாங்க விரும்பிய போதிலும் அவரால் அதை செய்ய முடியவில்லை. கடந்த இரு ஆண்டுகளாக நாங்கள் அவரது தாயின் பெற்றோரின் வீட்டிலேயே வசிக்கின்றோம். அருகில் உள்ள தென்னந் தோட்டத்தில் வேலை செய்வதால் இந்த சிறு துண்டு நிலத்தை அவளுடைய அப்பாவுக்கு கொடுத்துள்ளார்கள்."

அரசாங்கத்தின் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறித திஸேராவும் மற்றும் ஏனைய பல உள்ளூர் அரசியல்வாதிகளும் மரணச் சடங்கிற்கு வருகை தந்திருந்ததோடு அருகில் உள்ள சிறிய நிலத்துண்டில் ஒரு வீட்டைக் கட்ட முடியும் என அஜித் ஜோசப்பிடம் தெரிவித்துள்ளனர். அந்த நிலத்தில் அஜித் ஜோசப் தனது மகனின் மரணச் சடங்கிற்காக இராணுவத்தில் இருந்து அவரது குடும்பத்திற்குக் கிடைத்த சில பணத்தை பயன்படுத்தி ஒரு பலகை வீட்டைக் கட்டிக்கொண்டிருக்கின்றார்.

ஆயினும், அந்த நிலம் அரசாங்கத்திற்குச் சொந்தம் என்பதால் அங்கு வீடு கட்ட முடியாது என உள்ளூர் அரசாங்க அதிகாரிகள் கடந்த வாரம் அஜித் ஜோசப்புக்குத் தெரிவித்துள்ளனர். "நான் 15,000 ரூபா [127 அமெரிக்க டொலர் அல்லது இரு மாத சம்பளத்துக்கும் அதிகமான] செலவிட்டு அந்த வீட்டை கட்ட முயற்சித்துக்கொண்டிருந்தேன். இப்போது எல்லாவற்றையும் இழந்து விட்டேன்," என அஜித் ஜோசப் ஆத்திரத்துடன் தெரிவித்தார்.

ஊர்வலத்தில் முன்னணியில் பல பாராளுமன்ற உறுப்பினர்களும் தோன்ற, அமித்தின் மரணச் சடங்கில் பலபேர் கலந்துகொண்டனர் என அஜித் ஜோசப் எமக்குத் தெரிவித்தார். "அவர்களுக்கு யுத்தத்துக்குத்தான் சிப்பாய்கள் தேவை," என அவர் கூறினார். அரசாங்கத்தைப் பற்றி கேட்ட போது, "தற்போதைய தாங்க முடியாத நிலைமையின் கீழ் எங்களால் வாழ முடியாது" என அவர் சாதாரணமாகத் தெரிவித்தார்.

கொழும்பின் புறநகர் பகுதியான பன்னிபிட்டியவைச் சேர்ந்த நிரோஷா பெரேராவுக்கு, அவரது இளம் சகோதரரான, புத்திக சன்ஜீவ கொல்லப்பட்டதாக ஏப்பிரல் 9 அன்று உள்ளூர் பொலிசார் அறிவித்தனர். ஒரு நாள் முன்னதாக, அவருக்கு புத்திக இருக்கும் புதுக்குடியிருப்பு இராணுவ முகாமில் இருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. சன்ஜீவவின் பெற்றோர்கள் உயிருடன் இருக்கும் போது, அவரது பாதுகாவலராக உங்களது பெயரைக் குறிப்பிட்டிருப்பது ஏன் என அந்த அழைப்பில் கேள்வியெழுப்பப்பட்டது.

"நானே எனது குடும்பத்தில் மிகவும் வறியவள் என்பதால், அவரது நன்கொடைகள் எனக்குக் கிடைக்கச் செய்வதற்காக அவர் என்னை பாதுகாவலராக பெயர் குற்றிட்டிருந்தார்," என நிரோஷா WSWSக்குத் தெரிவித்தார். அவளது அப்பாவின் சகோதரியின் மகனும் சகோதரனின் மகனும் இராணுவத்தில் உயிரிழந்துள்ளனர். "இப்போது எனது அப்பாவும் அவரது 22 வயது மகனை இழந்துவிட்டார்," என அவள் கூறினாள்.

புத்திக்கவின் 56 வயது தந்தை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வேலை செய்கின்றார். அவர் இருதய நோயால் துன்பப்பட்ட போதும் தனது குடும்பத்துக்காக அவர் வேலை செய்ய வேண்டியுள்ளது. அவரது மணம் முடிக்காத மூத்த மகன் முச்சக்கர வண்டி ஓட்டுகிறார். நிரோஷாவின் கனவர் அன்றாட தொழிலாளி, ஆனால் அவருக்கு முறையான வருமானம் கிடையாது. அவர்கள் அனைவரும் அரைவாசி கட்டப்பட்ட வீட்டிலேயே வசிக்கின்றனர்.

புத்திக அரசாங்கத்தின் வாழ்க்கைத் தொழில் பயிற்சி நிறுவனத்தில் வெல்டிங் வேலையில் பயிற்றப்பட்டவர். அவர் வீட்டில் ஒரு வெல்டிங் வேலைத் தலத்தை ஸ்தாபிக்க முயற்சித்த போதிலும் மூலதனம் போதவில்லை. குடும்பம் எதிர்கொள்ளும் பொருளாதாரச் சுமைகளைப் பற்றி கவலை கொண்டு, ஒரு சுமையாக இருக்க விரும்பாத புத்திக இராணுவத்தில் இணைய முடிவு செய்தார்.

"அவர் இணைவதை தடுக்க நானும் எனது தாயும் அவரது பாடசாலையில் இருந்து விலகிய சான்றிதழை கிழித்துவிட்டோம். ஆனால் அவர் இரகசியமாக இன்னுமொரு பிரதியை எடுத்து இராணுவத்தில் இணைந்துகொண்டார்," என நிரோஷா கூறினார்.

புத்திகவுக்கு நான்கு மாத பயிற்சி வழங்கப்பட்டு மோதல்களத்துக்கு அனுப்பப்பட்டார். இரு மாதங்களின் பின்னர் அவரது பூதவுடல் வீட்டுக்கு அனுப்பப்பட்டது. இதுபோன்ற பல மரணச் சடங்குகளுக்கு செல்லவேண்டியிருந்ததால், பூதவுடலை கொண்டுவந்த இராணுவ அலுவலர்களால் புத்திகவின் மரணச் சடங்கில் பங்குகொள்ள முடியாமல் போனது என குடும்ப உறவினர்கள் எங்களுக்குத் தெரிவித்தனர்.

புத்திகவின் தாய்

கண்ணீரைத் துடைத்துக்கொண்டு, சோகத்தில் உறைந்து போன அந்தத் தாய் தெரிவித்ததாவது: "வெறுமனே ஒரு துப்பாக்கியை பிடிக்கக் கூடிய இளைஞர்களை இவர்கள் முன்னரங்குகளுக்கு அனுப்புகின்றனர். அரசாங்கம் பொறுப்புச் சொல்ல வேண்டும் என்பதை நான் வெளிப்படையாக சொல்ல வேண்டும். எனக்கு அவன் அன்புக்குரிய மகன், ஆனால் அவர்களுக்கு வெறும் சிப்பாய் தானே. யுத்தம் ஒரு மாதத்தில் முடியும் என அவர்கள் முதலில் சொன்னார்கள். அதனால் நான் எனது மகன் ஒரு மாதத்தில் வீட்டில் இருப்பான் என நினைத்தேன். ஆனால் இல்லை. பின்னர் அவர்கள் 48 மணித்தியாலத்தில் முடியும் என சொன்னார்கள். ஆனால் எனது மகன் இன்னும் வரவில்லை. இப்போது அவன் எப்படி வந்திருக்கிறான் பாருங்கள்."

நலின் மதுரங்க புதுக்குடியிருப்பு மோதலில் கொல்லப்பட்டார். அவரது வீடு கொழும்பில் இருந்து 50 கிலோமீட்டர் தென் கிழக்காக அவிஸ்ஸாவலையில் உள்ளது. அங்கு அவர் 53 வயது கொத்தனார் எம்.கே. சுனில் என்ற மாமாவுடன் வாழ்ந்தார்.

மாமனாரிடம் வளர்ந்த மதுரங்க மார்ச் 29 அன்று கொல்லப்பட்டார். அதே தினம், பல இராணுவ அலுவலர்களால் அவரது சீல்வைக்கப்பட் சவப்பெட்டி வீட்டுக்கு கொண்டுவரப்பட்டது. அரசாங்கம் 30,000 ரூபாவை (260 அமெரிக்க டொலர்) மரணச் சடங்கு செலவுக்காக வழங்கியது

சுனிலின் குடும்பம்

சுனிலின் குடும்பம், அவரது மகனின் குடும்பம், மகளது குடும்பம் உட்பட மூன்று குடும்பங்கள் ஒரே வீட்டில் வசிக்கின்றன. அது ஒரு சிறிய நிலத்துண்டில் அமைந்திருந்தது. சுனில் இருதய நோயாளியாக இருந்தாலும், தனது பெரிய குடும்பத்துக்கு வருமானம் தேட தொடர்ந்தும் வேலை செய்துகொண்டிருக்கின்றார்.

மதுரங்கவின் மாமி கண்ணீருடன் தெரிவித்ததாவது: "எனது மருமகன் எப்போது உயிரிழந்தார் என்பது இராணுவத்துக்கே தெரியாது மற்றும் அந்த சவப்பெட்டியில் மதுரங்கவின் பூதவுடல் தானா இருந்தது என்பது எங்களுக்கும் தெரியாது. ஒரு இராணுவ அலுவலர் அடக்கம் முடியும் வரை கடமையில் இருந்ததோடு பெட்டியை திறக்க வேண்டாம் என எங்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. நாங்கள் அனைவரும் மதுரங்க திரும்பி வீட்டுக்கு வரலாம் என எதோவிதத்தில் எதிர்பார்க்கிறோம்."

1987ல் அவிஸ்ஸவலையில் பிறந்த மதுரங்க, கொழும்பில் இருந்து சுமார் 220 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மஹியங்கன மத்திய கல்லூரியில் கல்வி கற்றார். நிரந்தரமாக கல்வியைக் கைவிடத் தள்ளப்பட்ட மதுரங்க, 11 வயதில் ஒரு உள்ளூர் கடையில் உதவியாளராக வேலை செய்யத் தொடங்கினார். கோயிலுக்கு வழங்கப்பட்ட மதுரங்கவின் இளம் சகோதரர் ஒரு பிக்குவாக இருக்கிறார்.

வறுமையின் காரணமாக மதுரங்கவின் பெற்றோர் அவரை பராமரிக்குமாறு அவரது மாமா சுனிலிடம் 13 வயதில் ஒப்படைத்தனர். சுனிலின் வீட்டுக்குச் சென்ற அவர் அங்கு தச்சுவேலை பயின்றார். தனது சொந்த குடும்பத்தின் பாசத்தில் வளர முடியாமல் இருந்ததையிட்டு கவலையடைந்திருந்த மதுரங்க, கடுமையான மனத்தளச்சியின் காரணமாக ஒரு முறை தற்கொலை செய்துகொள்ளவும் முயற்சித்ததாக அவரது மச்சான் எங்களிடம் தெரிவித்தார்.

2007 நவம்பரில் மதுரங்க இராணுவத்தில் இணைந்தார். யுத்தத்தில் உயிர்பிழைத்தால் அவரால் பெற்றோருக்கும் மாமா குடும்பத்துக்கும் உதவ முடியும் எனவும், கொல்லப்பட்டால் இரு குடும்பங்களுக்கும் நட்ட ஈடு கிடைக்கும் என்றும் அவர் எதிர்பார்த்தார்.

விரைவில் வெறுப்படைந்த மதுரங்க, விடுமுறையின் போது இராணுவத்தில் இருந்து ஓடி வந்து பஸ் நடத்துனராக வேலை செய்யத் தொடங்கினார். ஓடி வந்ததற்காக உள்ளூர் பொலிசாரால் கைது செய்யப்பட்ட அவர், மீண்டும் இராணுவத்தில் சேர முடிவெடுத்தார். மீண்டும் இணைந்து சில மாதங்களுக்குள், மதுரங்கவின் பூத உடல் வீட்டுக்கு வந்தது.

WSWS உடன் பேசிய சுனிலின் மகள் திலினி, தானும் ஒரு இராணுவ வீரனை மணம் முடித்திருப்பதாகவும் இப்போது அவரது உயிரைப் பற்றி பயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். "யுத்தத்தில் ஈடுபடும் சிப்பாய்களின் குடும்பங்களின் மனப் பீதி எந்தளவு பயங்கரமானது என்பது எனக்குத் தெரியும்," என அவர் கூறினார்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved