World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியா

Home of Slumdog Millionaire child actor destroyed by Mumbai authorities

Slumdog Millionaire பட குழந்தை நட்சத்திரத்தின் வீடு மும்பை அதிகாரிகளால் இடிக்கப்பட்டது

By Hiram Lee
15 May 2009

Back to screen version

அக்கடமி விருது பெற்ற Slumdog Millionaire படத்தில், சிறுவன் சலீமாக தோன்றிய மும்பை சேரியைச் சேர்ந்த 10 வயது சிறுவன் அஜாருதீன் மொஹம்மது இஸ்மாயிலின் வீடு, இந்தியாவின் மும்பை உள்ளூர் அதிகாரிகளால் இடிக்கப்பட்டுள்ளது.

குடிசை போன்ற அல்லது மட்டமான தார்பாய் மேற்கூரையுடன் கரீப் நகர் சேரிகளில் இருந்த அந்த வீடு, வருகிற மழைகாலத்திற்கான முன்நடவடிக்கைக்கு கழிவுநீர் குழாய் அமைப்பதற்காக வியாழனன்று புல்டோசர்களால் இடிக்கப்பட்டது. இஸ்மாயில் வீட்டுடன் அண்ணளவாக மேலும் 30 வீடுகளும் இடிக்கப்பட்டன, Slumdog Millionaire படம் எடுக்கப்பட்டு கொண்டிருந்த போது, அவர்களின் முந்தைய வீடுகளும் இதே போன்ற பாணியில் இடிக்கப்பட்டன.

வீடுகள் இடிக்கப்பட்டவர்களுக்கு முன்கூட்டி எவ்வித எச்சரிக்கையும் அளிக்கப்படவில்லை. இஸ்மாயிலின் தாய் பத்திரிகையாளர்களிடம் கூறுகையில், "எங்கள் உடமைகளை எடுக்கவும் கூட எங்களுக்கு ஒரு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. இன்றிரவிலிருந்து எங்களுக்கு ஒரு மேற்கூரை கூட இல்லாமல் நிறுத்தப்பட்டிருக்கிறோம், இத்துடன் இன்னும் ஒருசில வாரங்களில் மழைகாலம் தொடங்க இருக்கிறது. இங்கு நாங்கள் 15 ஆண்டுகளாக வசித்து வருகிறோம். அடுத்து நாங்கள் என்னசெய்வதென்றே எனக்கு தெரியவில்லை" என்று தெரிவித்தார்.

வீட்டை இடிக்க புல்டோசர்கள் வந்த போது வீட்டில் தூங்கி கொண்டிருந்த 10 வயது நிரம்பிய அந்த நடிகர் பத்திரிகையாளர்களிடம் தெரிவிக்கையில், "ஒரு போலீஸ் அதிகாரி என்னை அடிக்க ஒரு மூங்கில் கழியை எடுத்தார், நான் மிகவும் பயந்து விட்டேன்" என்று தெரிவித்தார்.

சந்தேகத்திற்கு இடமின்றி, இந்த நிகழ்வு திடீரென பகிரங்கமானதால் - இதில் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரின் புகழ் செய்திகளில் வந்த அளவிற்கு கொடிய மனிதாபிமற்ற முறையில் அவரின் வீடு இடிக்கப்பட்டது ஒருபோதும் அந்த அளவிற்கு செய்தியில் வரவில்லை - திணறி போன அதிகாரிகள், இஸ்மாயில் குடும்பத்திற்கு வசிப்பிடம் அளிப்பதாக உறுதியளித்தனர், ஆனால் இதுவரை அவர்கள் தங்கள் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை.

ஆஸ்கார் விருது பெற்ற படத்தின் இளம் கதாபாத்திரமாக இருக்க நேர்ந்த இஸ்மாயில் குடும்பத்தின் வீடு இடிக்கப்பட்டதானது, இரண்டாவது பிரபல சோகமாகும். கடந்த மாதம், 9 வயது நிரம்பிய Slumdog நடிகை ரூபினா அலியின் ஏழை தந்தை, தமது மகளை ஒரு செல்வவளம் மிக்க குடும்பத்திற்கு சட்டவிரோதமாக விற்க முயன்றார். தங்களின் படம் முடிந்த பின்னரும் அதில் நடித்த குழந்தை நட்சத்திரங்களின் பாதுகாப்பிற்காக Slumdog Millionaire படக்குழுவினரால் ஏற்படுத்தப்பட்ட ஜெய் ஹோ அறக்கட்டளை, அதுமுதல், அலியை பாதுகாப்பாக பார்த்து கொள்ள ஒரு சமூக சேவகரை பணியில் அமர்த்தி இருக்கிறது.

சிறுவன் இஸ்மாயில் மற்றும் சிறுமி அலி இருவருக்கும் அவர்கள் 18 வயது நிரம்பும் வரை வசிப்பிடம் மற்றும் கல்வியை அளிப்பதையும், அவர்கள் வயது நிரம்பிய பின்னர் அவர்களின் வாழ்க்கைக்கு உதவியாக வெளியில் தெரிவிக்கப்படாத ஒரு தொகையை வழங்குவதையும் ஜெய் ஹோ அறக்கட்டளை ஏற்றுக் கொண்டிருக்கிறது. பெருமளவிலான மும்பை சேரி குழந்தைகளின் நலனுக்காக அந்த திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள் அந்த அறக்கட்டளைக்கு 747,500 டாலரை உதவித்தொகையாக அளித்துள்ளார்.

அவர்களின் முயற்சிகள் இருந்தபோதினும், திரைப்பட தயாரிப்பாளர்கள் அவர்களின் குழந்தை நடிகர்களின் நிலையான, ஆரோக்கியமான வாழ்விற்கு பாதுகாப்பளிக்க இயலவில்லை. இஸ்மாயில் மற்றும் அலி இருவருமே தொடர்ந்து சேரிகளில் சிரமப்படுகிறார்கள். இஸ்மாயிலுடன் அவர்கள் குடும்பத்தாரும் தற்போது வீடற்ற நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். இறுதியாக, இதுபோன்ற தனிப்பட்ட அறக்கட்டளையின் நடவடிக்கைகள், நல்ல அர்த்தத்தைக் கொண்டிருந்த போதினும், அவை போதுமானதல்ல.

மும்பையில் சுமார் 18 மில்லியன் மக்கள் வாழ்கிறார்கள். அதில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் சேரிகளில் தான் அடைக்கலமாகி உள்ளனர்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved