World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

With its state debt ballooning, German government prepares social cuts

அரசாங்கக் கடன்கள் பாரியளவில் அதிகரிக்கையில், ஜேர்மனிய அரசாங்கம் சமூக நலச் செலவினக் குறைப்புக்களுக்கு தயார் செய்கிறது

By Ludwig Weller and Ulrich Rippert
7 May 2009

Back to screen version

ஜேர்மனியின் பெரும் கூட்டணி அரசாங்கத்தில் பங்கு பெற்றுள்ள கட்சிகளான சமூக ஜனநாயக கட்சி (SPD), கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் (CDU) மற்றும் கிறிஸ்தவ சமூக யூனியன் (CSU) ஆகியவை இந்த "மிகப் பெரிய-தேர்தல்" ஆண்டில் தொடர்ச்சியான தேர்தல்களுக்கு தயாரிப்பு நடத்துகின்றன.

இக்கட்சிகள் அனைத்தும் வரவிருக்கும் ஜூன் மாத ஐரோப்பிய தேர்தல் மற்றும் செப்டம்பரில் நடக்க இருக்கும் கூட்டாட்சித் தேர்தலில் பொதுமக்களுக்கு காட்டும் தோற்றம் ஏமாற்றுத்தனம் மற்றும் வாக்காளர்களை திசைதிருப்பும் முயற்சிகள் ஆகியவற்றை கொண்டுள்ளது. சமூக ஜனநாயகக் கட்சி, கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் மற்றும் கிறிஸ்தவ சமூக யூனியன் அனைத்துமே பொருளாதார நெருக்கடியின் உண்மையான அளவினை குறைத்துக் காட்ட முயல்கின்றன.

தேர்தல்களுக்கு முன்பு ஒரு சில பிரச்சார உறுதிமொழிகளைக் கொடுத்து வாக்காளர்களை சமாதானப்படுத்த கட்சிகள் விரும்புகின்றன. சமூக ஜனநாயகக் கட்சி "ஊதிய வரி மேலதிக கொடுப்பனவு" என அழைக்கப்படும் தங்கள் ஊதியத்தைத் தவிர வேறு வழிகளில் வருமானம் ஏதும் இல்லாத மற்றும் வருமான வரி படிவத்தை பதிவு செய்யாதவர்களுக்கு 300 யூரோக்கள் கொடுக்கப்போவதாக உறுதி கூறியுள்ளது. குழந்தைகளுக்கு என கொடுக்கப்படும் நிதி உதவி சிறிது அதிகப்படுத்தப்படும் என்றும் அது கூறியுள்ளது.

குறைந்த பணி நேரம் வேலைபார்க்கும் தொழிலாளர்கள் அதிகமாகப் பெருகியிருப்பது மற்றும் வேலையின்மை அதிகமாக வளர்ச்சியுற்றிருப்பதை கவனித்துள்ள ஓய்வூதிய வல்லுனர்கள் அவற்றை ஒட்டி ஓய்வூதிய நிதிக்கு கொடுக்குமதிகள் குறைவாகின்றன என்றும் இதனால் ஓய்வூதியக் குறைப்புக்கள் தவிர்க்க முடியாதவை என்றும் கொடுத்த எச்சரிக்கையை அடுத்து, சமூக நல மந்திரியான Olaf Scholz (SPD) ஓய்வூதியக் குறைப்பு பற்றிய எந்தப் பேச்சும் அபத்தமானது என்று செய்தி ஊடகத்திடம் கூறினார். ஓய்வூதியங்கள் பாதுகாப்பாக உள்ளன என்றும் வருங்காலத்தில் ஓய்வூதியங்களை குறைக்கும் திட்டத்தைத் தடுக்கும் வகையில் சட்டம் இயற்றப்படும் என்றும் கூடக் கூறினார்.

ஜேர்மனியில் உள்ள 20 மில்லியன் ஓய்வூதியம் பெறுபவர்கள் ஆளும் கட்சிகளுக்கு மிகமுக்கியமான வாக்கு ஆதாரம் ஆகும். எனவே கூட்டாக ஒய்வூதிய நிதிய நெருக்கடியின் உண்மையான அளவு பற்றி வாக்காளர்களுக்கு உண்மையான தகவல் கொடுக்கப்படக் கூடாது என்று அனைத்துக் கட்சிகளும் கூட்டாக உடன்பட்டுள்ன.

கடந்த வாரம் கூட்டாட்சிக் குடியரசு நிறுவப்பட்டு 60 ஆண்டுகள் நிறைவை கொண்டாடிய ஒரு கலைப் பொருட்காட்சியில் ஜேர்மனிய அதிபர் அங்கேலா மேர்க்கெல் (CDU) "நம்பிக்கை" கோட்பாடு பற்றி வெற்றுத்தனமாக உயர்த்திப் பேசினார். இரண்டாம் உலகப் போருக்குப் பின் இருந்த பழைய தலைமுறை அழிவில் இருந்த ஜேர்மனியை மறுகட்டமைக்க தைரியம், தன்னம்பிக்கை, நம்பிக்கை ஆகியவற்றைக் கொண்டிருந்தது என்றார். இது மீண்டும் அத்தகைய ஆற்றலை ஜேர்மானியர்கள் பயன்படுத்தி பொருளாதார நெருக்கடியில் இருந்து தங்களை உயர்த்திக் கொள்ள வழிகாட்டுகிறது எனறார் அவர். பொருட்காட்சியை "கலை என்பதே நம்பிக்கைதான்" என்ற சொற்களுடன் அவர் திறந்து வைத்தார்.

CDU அதன் கூட்டாட்சிக்கான தேர்தல் அறிக்கையை இன்னும் வெளியிடவில்லை; ஆனால் கட்சியின் முக்கிய பிரதிநிதிகள் "மக்களின் மிகப் பெரும் பிரிவினருக்கு" கணிமான நலன்களைக் கொடுக்கும் விதத்தில் வரிக் குறைப்புக்கள் இருக்கும் என்று உறுதியளித்துள்ளனர்.

ஆளும் கட்சிகள் இத்தகைய நேர்த்தியான பிரச்சார முறையைக் கையாண்டு தேர்தல் ஆண்டைத் தொடக்கியிருப்பது அபூர்வமாகும். நம்பிக்கையை வளர்க்க முக்கிய அரசியல் கட்சிகள் முற்பட்டிருக்கையில், உத்தியோகபூர்வக் நெருக்கடிக்குழுக்கள் அவசரக்காலத் திட்டங்களை மேற்கொண்டு சரிந்து கொண்டிருக்கும் வரி வருமானங்கள், உயரும் செலவினங்கள் என்ற பின்னணியில் சமூக பொதுநலத் திட்டத்தை மறுசீரமைக்க முற்பட்டுள்ளன. அனைத்து அமைச்சரகங்களிலும் கடுமையான சமூகச் செலவின குறைப்புக்களுக்கான தயாரிப்புக்கள் நடைபெற்று வருகின்றன.

எந்தக் கட்சி அதிக வாக்குகளைப் பெற்று வந்தாலும், அடுத்த அரசாங்கம் சமூக வாழ்வின் அனைத்து பிரிவுகளிலும் பெரும் வெட்டுக்களை செயல்படுத்தும். தற்பொழுதைய அரசாங்கம் தேர்தல் தினம் வரை தாக்குப் பிடிக்கத்தான் முற்பட்டுள்ளது. இவற்றின் உறுதிமொழிகள் அனைத்தும் அதற்குப் பின் குப்பைத்தொட்டியில் போடப்பட்டுவிடும்.

அதன் சமீபத்திய பதிப்பில் Der Spiegel ஏடு கூறுகிறது: "முப்பதுகளுக்கு பின்னர் வந்துள்ள மிகப் பெரிய சர்வதேசப் பொருளாதார நெருக்கடியின் பின்னணியில், கடந்த வாரத்தில் பெரும் கூட்டணியால் கூறப்பட்ட கருத்துக்கள் குருட்டுத்தனம் மற்றும் பேரம்பேசல் இரண்டையும் சிந்தனையற்ற முறையில் கலவையாக கொடுத்திருப்பது போல் உள்ளது".

அனைத்து முக்கிய பொருளாதார ஆய்வு நிறுவனங்களும் ஜேர்மனிய பொருளாதாரம் வரவிருக்கும் ஆண்டில் 6 சதவிகிதம் சுருக்கம் அடையும் என்று மதிப்பீடு செய்துள்ளன. சமீபத்தில்தான் அரசாங்கப் பிரதிநிதிகள், குறிப்பாக நிதி மந்திரி பீர் ஸ்ரைன்புரூக் (SPD) அத்தகைய கணிப்புக்களை பயத்தை உருவாக்குபவர்கள் என்று கண்டித்தார்.

பல மாதங்களாக ஸ்ரைன்புரூக் ஜேர்மனிய பொருளாதாரம், ஒப்புமையின் பெரும் தொழிற்துறை தளத்தைக் கொண்டது நெருக்கடியின் மாறுதல் விளைவுகளை தாங்கும் சக்தியை மற்ற பொருளாதாரங்களை விடக் கூடுதலாகக் கொண்டுள்ளது என்று கூறிவந்தார். இப்பொழுது இதற்கு முற்றிலும் எதிரிடையான நிலைதான் வந்துள்ளது என்பது தெளிவாகிறது.

ஜேர்மனிய பொருளாதாரம் குறிப்பாக பொறியியல் மற்றும் மின்சார, இரசாயனத் தொழிற்துறைகளில் ஏற்றுமதியை நம்பியிருப்பது அதன் பெரும் பாதிப்படையும் தன்மையானதாக உள்ளது. உலகெங்கிலும் நுகர்வுச் சரிவு உள்ள நிலையில், ஜேர்மனியப் பொருளாதாரம் குறிப்பிடத் தக்க வகையில் உலக மந்த நிலையின் பாதிப்பிற்கு உட்பட்டுள்ளது.

பல பிரிவுகளிலும் உற்பத்தி கேள்விப்பத்திரங்கள் குறைந்துள்ளமை அரசாங்கத்தால் ஒத்துக்கொண்டுள்ள சராசரியைவிடக் கூடுதல் ஆகும். ஒரு சில நாட்களுக்கு முன்புதான் German Machine and Construction Federation (VDNA) தான் மார்ச் மாதத்தில் குறைந்த கேள்விப் பத்திரங்களைத்தான் பதிவு செய்துள்ளதாகவும், ஏற்கனவே பெப்ருவரி மாதத்தில் 50 விகிதச் சரிவை அடுத்து இந்த நிலை என்றும் கூறியுள்ளது.

உற்பத்தியில் சரிவு என்பது குறுகிய நேரப் பணி என்பது இடைவிடாமல் அதிகரிப்பதில் பிரதிபலிக்கிறது. கடந்த ஆண்டு குறுகிய பணி நேரம் வேலை செய்யும் தொழிலாளர்களின் எண்ணிக்கை 102,000 என்று இருந்தது. இந்த ஆண்டு இது குறுகிய காலத்தில் இது 2 மில்லியன் தொழிலாளர்கள் என்று உயர்ந்துவிட்டது.

மார்ச் மாதம் மட்டும் இன்னும் கூடுதலான 700,000 தொழிலாளர்கள் குறைந்த பணி நேரத்திற்கு தள்ளப்பட்டனர். ஏப்ரல் தொடக்கத்தில் ஜேர்மனியில் இந்த மொத்தம் 1.4 மில்லியன் தொழிலாளர்கள் என்று இருந்தது. இரு முறை அரசாங்கம் குறைந்த நேரத் தொழிலாளர் காலத்தை விரிவாக்கியுள்ளது--முதலில் ஓராண்டில் இருந்து 18 மாதங்களுக்கு என்றும் அதன் பின்னர் 24 மாதங்களுக்கு என்றும். இந்த நடவடிக்கை ஒரு தற்காலிக செயல் என்றும் ஏராளமான வேலை குறைப்புக்கள் அலையென விரைவில் ஏற்படும் என்பதும் தெளிவு.

பல ஆலைகளிலும் பணி நீக்கங்களுக்கு பதிலாக குறைந்த நேரப் பணி என்னும் முறை வந்துள்ளது. தொழில்வழங்கும் அமைப்பின் (BA) கணக்கின்படி ஏப்ரல் மாதம் வேலையின்மை 60,000 என்ற எண்ணிக்கையை தொட்டுள்ளது. இந்த ஆண்டுத் ஆரம்பத்தில் இருந்து வேலையின்மை கால் மில்லியன் உயர்ந்துள்ளது. பொருளாதார ஆய்வு நிறுவனங்கள் மொத்த வேலையில்லாதவர்கள் எண்ணிக்கை தற்போதைய 3.5 மில்லியனில் இருந்து 2010ல் 5 மில்லியன் என உயரும் என்று கணக்கிட்டுள்ளனர்.

குறைந்த நேரப் பணி மற்றும் வேலையின்மை என்பவை மத்திய அரசின் வரவுசெலவுத்திட்டத்தில் இரு விதங்களில் நேரடி விளைவைக் கொண்டுள்ளன. முதலில் அரசாங்கம் வரி வருமானங்கள் மூலம் குறைந்த வருவாயைப் பெறுகிறது; இரண்டாவதாக வேலையின்மை மற்றும் குறைந்த நேரத் தொழிலாளர்களுக்கான செலவினங்கள் அதிகமாகின்றன. (ஜேர்மனிய அரசாங்கம் குறைந்த நேர வேலையில் இருப்பவர்களுடைய ஊதியத்தில் ஒரு பகுதியைக் கொடுக்கிறது.)

அதே நேரத்தில் நெருக்கடி தலா நபரின் வருமானத்திலும் குறைப்பை ஏற்படுத்துகிறது. அதுதான் ஓய்வூதியங்களை கணக்கிடுவதற்கு அடித் தரமாக உள்ளது. தற்போதைய ஓய்வூதியத் தரங்களைத் தக்க வைத்துக் கொள்ளுவதற்கு அரசாங்கம் பாரியமுறையில் அரசாங்க ஓய்வூதிய நிதி முறைக்கு மானியஉதவித் தொகையைக் கொடுக்க நேரிடும்.

பொருளாதாரச் சரிவு மற்றும் நேரடி, மறைமுக வேலையின்மையில் ஏற்றம் என்பது அனைத்து சமூகக் காப்பீட்டு நிதியங்களிலும் பில்லியன் கணக்கான யூரோக்கள் பற்றாக்குறைக்கு வகை செய்துள்ளது. இந்த ஆண்டு இறுதிக்கும் வேலையின்மை மற்றும் சுகாதார காப்பீட்டு நிதிகளில் மட்டும் 50 பில்லியன் யூரோக்கள் பற்றாக்குறை இருக்கும் என்று வல்லுனர்கள் கணித்துள்ளனர். தனிநபர்கள் தங்கள் சமூகநலக் காப்பீட்டுக் கட்டணங்களைக் கொடுக்க முடியாத நிலை வரும்போது அரசாங்கம் குறுக்கிட்டு பற்றாக்குறையை சரிசெய்யும் நிலைக்குத் தள்ளப்படும்.

இந்த ஆண்டு தொடக்கத்தில் தொழில்வழங்கும் அமைப்பிடம் 17 பில்லியன் யூரோக்கள் உபரிப் பணம் இருந்தது. இந்த அமைப்பிற்கு இப்பொழுது 2010 முடிவிற்குள் 15ல் இருந்து 20 மில்லியன் யூரோக்கள் கூடுதல் நிதி தேவைப்படும் என்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. 2009ம் ஆண்டில் மட்டும் இந்த அமைப்பு கிட்டத்தட்ட 14 பில்லியன் யூரோக்களை செலவினப் பற்றாக்குறையாகக் கொள்ளும் என்று கூறப்படுகிறது. நாட்டின் சுகாதாரப் பாதுகாப்பு நிதியங்களும் பற்றாக்குறைகள் மிகவும் அதிகரித்துபோகும் என்றும் 2010க்குள் அது 13 பில்லியன் யூரோக்களாகக் கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

செய்தி ஊடகத் தகவல்கள்படி, கருவூல வல்லுனர்கள் அனைத்து பிராந்திய நிர்வாக அமைப்புக்களிலும் (கூட்டாட்சி, மானில, உள்ளூராட்சி என) வருவாய் பற்றாக்குறை வரும் மூன்று ஆண்டுகளில் 300 பில்லியன் யூரோக்களுக்கும் மேலாக இருக்கும் என்று தெரிய வந்துள்ளது.

மத்திய அரசாங்கம் மட்டும் இதுவரை எந்த முந்தைய அரசாங்கமும் வாங்காத அளவிற்கு 50 பில்லியன் யூரோக்கள் கடனை வாங்க நேரிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொருளாதார ஊக்கப் பொதியம் மற்றும் வங்கிகள் மீட்புத் திட்டத்திற்கு அரசாங்கத்தின் முதலீட்டின் பெரும் பகுதி இந்த மொத்தத்தில் சேர்க்கப்படவில்லை. அவை இரண்டும் துணை வரவுசெலவுத் திட்டங்களில் மறைக்கப்பட்டுள்ளன. அடுத்த ஆண்டிற்கு அரசாங்கம் ஏற்கவே புதிய கடன்களாக மொத்தம் 80 பில்லியன் யூரோக்கள் இருக்கும் என்று கருதுகிறது.

இந்த நிலையைப் பற்றிச் சிந்தித்த Süddeutsche Zeitung பத்திரிகை "நெருக்கடியின் மூன்றாம் கட்டம்" என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள கட்டுரையில் பொருளாதார நெருக்கடிக்கும் பொது மக்கள் அது பற்றி அறிந்திருப்பதற்கும் இடையே வினோதமான முரண்பாடு இருப்பதாகக் கூறியுள்ளது. மக்கள் தற்பொழுது நிலைமையை வியப்பான அமைதியுடன் ஏற்றுக் கொண்டுள்ளனர். ஜேர்மனியில் அனைத்தும் அமைதியாக உள்ளது; ஆனால் இந்த அமைதி விரைவில் மறைந்துவிடும் என்று செய்தித்தாள் கணிக்கிறது.

அது எழுதியது: "நெருக்கடி வரவிருக்கும் மாதங்களில் அதன் மூன்றாம் கட்டத்தை அடையும். சமூகப் பாதுகாப்பு முறைகள் பெரும் தடமாற்றத்திற்கு உட்படும். அதுதான் மக்களை நிதிய மற்றும் பொருளாதார நெருக்கடிகள் என்று முன்னதாக வந்ததைவிடக் கடினமாகப் பாதிக்கும்."

ஜேர்மனிய தொழிற்சங்கக் கூட்டமைப்பு (DGB) யின் தலைவர் Michael Sommer ஏப்ரல் இறுதியில் "சமூக கலகங்கள்" வர வாய்ப்பு உள்ளது என்று எச்சரித்தபோது, அரசாங்கத்தால் அவர் முழுமையாக கண்டிக்கப்பட்டார். தன்னுடைய மே தின உரைத் தகவலில் அதிபர் சமூகப் போராட்டங்கள் பற்றி பேசுவது பொறுப்பற்றது ஆகும் என்றார்.

தேர்தல் பிரச்சாரங்கள் ஏற்கனவே தொடங்கியிருந்தாலும், பாராளுமன்றக் கட்சிகள் அனைத்தும் நெருக்கடியின் சமூக, அரசியல் விளைவுகள் பற்றி ஏதும் கூறக்கூடாது என்ற சதியில் இணைந்துள்ளன. ஆனால் அது ஒன்றும் அரசாங்கம் கூடுதலான சமூகப் போராட்டங்களுக்கு எதிரான தயாரிப்புக்களை மேற்கொள்வதை தடுத்துவிடவில்லை.

BND எனப்படும் ஜேர்மனிய உளவுத் துறை சர்வதேச நெருக்கடியின் சமூக விளைவுகளை ஆராய்வதற்கு அதன் சிறப்பு பணிக்குழுவை நிறுவியுள்ளது. பணிக் குழுவிற்கு பொறுப்பேற்றுள்ள கூட்டாட்சி பாதுகாப்புக் கொள்கையின் கல்விக்கூட இயக்குனரான Kersten Lahl, செய்தி ஊடகத்திடம் சமீபத்தில் "இந்த நெருக்கடி உலகம் முழுவதும் பாதுகாப்பிற்கு மிகப் பெரிய ஆபத்தாக வளர்ந்து வருகிறது." என கூறினார்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved