World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியா

Indian Stalinist leader defends alliances with Congress and rightwing regional parties

இந்திய ஸ்ராலினிச தலைவர் காங்கிரஸ், வலதுசாரி பிராந்தியக் கட்சிகளுடன் கொண்ட கூட்டை சரி என்கிறார்

By Deepal Jayasekera and Arun Kumar
20 May 2009

Back to screen version

உலக சோசலிச வலைத் தள (WSWS) செய்தியாளர்கள் தீபால் ஜெயசேகராவும் அருண் குமாரும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்ஸிஸ்ட்) அல்லது CPM ன் மத்தியக்குழு உறுப்பினரான ஏ.கே. பத்மநாபனை சென்னையில் மே 11ம் தேதி கட்சியின் தமிழ்நாடு மாநில குழு அலுவலகத்தில் பேட்டி கண்டனர்.

CPM என்பது இடது முன்னணியில் மேலாதிக்க பங்கு கொண்ட கட்சியாகும்; மே 2004ல் இருந்து ஜூன் 2008 வரை இது காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (UPA) அரசாங்கத்திற்கு தேவையான பாராளுமன்ற பெரும்பான்மைக்கு ஆதரவைக் கொடுத்தது. இந்தியாவில் இப்பொழுதுதான் முடிந்துள்ள தேசியத் தேர்தலில், இடது முன்னணி ஒரு மூன்றாம் அணியை அமைக்க உதவியது; அதில் வட்டார, சாதி, தளங்களைக் கொண்ட கட்சிகள் இருந்தன. அவை அனைத்துமே முன்பு காங்கிரஸ் அல்லது இந்து மேலாதிக்க வாத பாரதிய ஜனதா கட்சி (BJP) யின் நட்புக்கட்சிகளாக இருந்தன; இது "ஒரு BJP-அல்லாத, காங்கிரஸ்-அல்லாத, "மதசார்பற்ற", "மக்கள் சார்புடைய" அரசாங்கத்தை அமைக்கத் தளமாக இருக்கும் என்று CPM கூறியது.

பத்மநாபனுடன் நடத்திய பேட்டியின் பதிப்பிக்கப்பெற்ற குறிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. (ஜெயசேகரா மற்றும் குமாரின் பதில்கள் "இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்): இந்திய முதலாளித்துவ ஆட்சிக்கு ஒரு முக்கிய முண்டுகோல்" என்பதில் காணலாம். இடது முன்னணியின் பின்னடைவு உட்பட இந்திய தேர்தலின் விளைவுகள் பற்றிய பகுப்பாய்விற்கு (இந்தியா: மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கம் முதலீட்டாளர்கள்-சார்பு "சீர்திருத்தங்களை" விரைவுபடுத்தும்) கட்டுரையைக் காணவும்.

WSWS: CPM மற்றும் இடது முன்னணியை பொறுத்தவரையில், இந்த தேர்தலில் முக்கிய பிரச்சினைகள் எவை?

பத்மநாபன்: இத்தேர்தல் இந்திய அரசியலில் ஒரு முக்கியமான கட்டம் ஆகும். CPMஐ பொறுத்தவரையில், நாங்கள் மூன்று முக்கிய பிரச்சினைகளை எழுப்பியுள்ளோம். இந்தியர்களாகிய நாங்கள் எதிர்கொள்ளும் ஒரு முக்கிய பிரச்சினை வகுப்புவாத பிரிவு ஆகும். நாட்டின் பல பகுதிகளிலும் வலதுசாரி மற்றும் அடிப்படைவாத சக்திகள் செயல்பட்டு வருகின்றன. இந்து அடிப்படைவாதிகள் மற்றும் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் உள்ளனர். இந்திய மதசார்பற்ற தன்மைக்கு அவை முக்கிய அச்சுறுத்தல்கள் ஆகும். இந்த அச்சுறுத்தல்கள் நம் எல்லைகளுக்குள் அடங்கிடவில்லை; அவை எல்லைக்கு வெளியே இருந்தும் வருகின்றன... மக்களிடம் நாங்கள் வகுப்புவாதம் முக்கிய அச்சுறுத்தல், அது தோற்கடிக்கப்பட வேண்டும் என்று கூறுகிறோம்.

அடுத்த முக்கிய பிரச்சினை பொருளாதார கொள்கை பற்றியது ஆகும். பொருளாதார கொள்கையை பொறுத்தவரையில் கடந்த 20 ஆண்டுகளாக நாங்கள் தாராளமயமாக்கும் கொள்கைகள், பூகோளமயமாக்கல் கொள்கைகள் என்று அழைக்கப்படுபவற்றை எதிர்த்துப் போராடுகிறோம். 1991ம் ஆண்டில் இருந்து ஒரு காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கமோ அல்லது BJP தலைமையிலான அரசாங்கமோ இருந்தாலும், ஒரேவித, அநேகமாக மிகச் சிறிய வேறுபாடுகள் மட்டுமே இருக்கும் பொருளாதாரக் கொள்கைகளைத்தான் செயல்படுத்தி வருகின்றன. இந்த மக்கள்-எதிர்ப்பு பொருளாதாரக் கொள்கைகள் தொழிலாளர்களின் அனைத்துப் பிரிவுகளிலும், விவசாயிகளாயினும், தொழிலாளர்களாயினும், சிறு வணிகர்களாயினும், சிறு தொழில்துறை முயல்வோர் ஆயினும், இளைஞர்ள், மாணவர்கள் என எல்லாருக்கும் பேரிடர் கொடுத்துள்ளது. இக்கொள்கைகள் பல தொழில்துறை பிரிவுகள், சுகாதார மற்றும் சுற்றுச் சூழல் பிரிவுகள், சக்தி துறை....என்று எல்லா இடங்களிலும் பேரழிவை ஏற்படுத்தியுள்ளன....

இக்கொள்கைகள் எதிர்த்து நாங்கள் தேர்தல் நேரம் மட்டும் இல்லாமல் தொடர்ந்து கடந்த 20 ஆண்டுகளாக போராடி வருகிறோம். அனைத்துப் பிரச்சினைகள் பற்றியும் விவாதம் எழுப்புகிறோம். வகுப்புவாத சக்திகள் தோற்கடிக்கப்பட வேண்டும் என்று மக்களிடம் கூறுகிறோம். அரசாங்கக் கொள்கைகள் மாற்றப்பட வேண்டும். இக்கொள்கைகளை மாற்றுவதற்கு--வகுப்புவாதம் மற்றும் மக்கள் விரோதக் கொள்கைகளை--இரு அணிகளையும் ஒன்று காங்ரஸின் தலைமையில், மற்றொன்று BJP தலைமையில் இருப்பது, தோற்கடிக்க வேண்டும்.

மூன்றாவது பிரச்சினை ஒரு சுயாதீன வெளியுறவுக் கொள்கையின் தேவை பற்றியது ஆகும். இதை நாங்கள் முக்கியமான பிரச்சினையாக கருதுகிறோம்; துரதிருஷ்டவசமாக இந்நாட்டில் பல கட்சிகள் இப்பிரச்சினையை எழுப்பவில்லை. கூட்டு சேரா இயக்கம் மற்றும் பல சுதந்திரப் போராட்டங்களுக்கு ஆதரவு கொடுத்ததின் ஒரு பகுதியாக--ஏகாதிபத்திய சக்திகளின் தந்திர உத்திகளுக்கு எதிராக இருந்த நாடு என்ற பெருமை இந்தியாவிற்கு இருந்தது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இந்தியா வலதிற்கு நகர்ந்து தன்னை அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நட்பு நாடு என்று அறிவித்துக் கொண்டுவிட்டது. இதை மாற்ற வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.

இவற்றைத் தவிர, சமூக நீதி, மத்திய-மாநில உறவுகள் போன்ற பல மற்ற பிரச்சினைகளும் உள்ளன. இப்பிரச்சினைகள் பற்றி மற்ற கட்சிகளுடன் சில வேறுபாடுகள் இருக்கலாம், ஆனால் பொதுவாக இடதும் அதன் மூன்றாம் அணி நட்புக் கட்சிகளும் ஒரு காங்கிரஸ் அல்லாத, BJP அல்லாத அரசாங்கத்தை நாடுகின்றன; அது ஒரு மதசார்பற்ற அரசாக, புதிய கொள்கைகளுடன் இருக்க வேண்டும். அது இடது தலைமையில் இருக்க வேண்டும் என்று நாங்கள் கூறவில்லை. ஒரு மதசார்பற்ற அரசாங்கத்திற்கு தளம் கொடுக்கும் மாற்றீட்டு கொள்கைகள் தொகுப்பை நாங்கள் வளர்க்க உழைத்து வருகிறோம்.

WSWS: CPM காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கத்தை நான்கு ஆண்டுகளுக்கு ஆதரித்தது. கடந்த ஆண்டு இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை அடுத்து இது தன் ஆதரவை விலக்கிக் கொண்டது. இப்பொழுது CPM காங்கிரஸை கண்டிக்கிறது. இடதுடன் செய்து கொண்ட உடன்பாட்டை காங்கிரஸ் காட்டிக் கொடுத்துவிட்டது என்று நீங்கள் குற்றம் சாட்டியுள்ளீர்கள். காங்கிரஸை ஆதரித்த இடதின் கொள்கை வெற்றிகரமானது என்று இன்னமும் நீங்கள் கருதுகிறீர்களா?

பத்மநாபன்: அது ஒரு தந்திரோபாய முடிவு ஆகும். நாங்கள் ஒன்றும் காங்கிரஸ் அரசாங்கத்திற்கு அழைப்பு விடவிலவ்லை அல்லது 2004 தேர்தல்களில் காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கம் வேண்டும் என்று கூறவில்லை. BJP இன் தோல்விக்கு அழைப்பு கொடுத்தோம்; ஏனெனில் அவர்கள் அதிகாரத்தில் இருந்தனர்; ஒரு மதசார்பற்ற அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும் என்றோம். முக்கியமான பிரச்சினை எப்படி BJP ஐ அகற்றுவது என்பதாகும். இந்த வழிவகைகளில் நாங்கள் எங்கள் பிரச்சாரங்களை 14வது லோக் சபா [2004] தேர்தல்களின் பொழுது நடத்தினோம்.

ஆயினும்கூட, ஒரு BJP தலைமையிலான அரசாங்கமா அல்லது காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கமா என்ற கேள்வி வரும்போது, காங்கிரஸ் என்ன செய்யும் என்பது பற்றிக் கூட தெரியாமல், எந்த மதசார்பற்ற இந்திய நபரும் ஒரு காங்கிரஸ் அரசாங்கத்தைத்தான் தேர்ந்தெடுப்பார்.

2004ம் ஆண்டில் இடது 61 தொகுதிகளில் வென்றது. அவற்றுள் 54 எம்.பி.க்கள் பாராளுமன்றத்திற்கு காங்கிரஸ் வேட்பாளர்களை தோற்கடித்து தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தனர். அப்படியும் நாங்கள் ஒரு காங்கிரஸ் வழிநடத்தும் அரசாங்கத்திற்கு ஆதரவு கொடுக்க முடிவெடுத்தோம். எங்கள் கொள்கைகச்ை செயல்படுத்த ஒன்றும் நாங்கள் அரசாங்கத்திடம் கோரவில்லை; ஒரு பொது குறைந்தபட்ச வேலைத் திட்டத்தை செயல்படுத்துமாறுதான் அரசாங்கத்திடம் கோரினோம்.

அதையடுத்து நான்கு ஆண்டுகளில் CPM மற்றும் இடது முன்னணி கொள்கைப் பிரச்சனைகளில் போராட்டஙளில் முன்னணியில் நின்றன. பாராளுமன்றத்திற்குள் என்றாலும் வெளியே என்றாலும் நாங்கள் வழிகாட்டி நின்றோம். BJP உத்தியோகபூர்வ எதிர்க்கட்சி ஆகும்... ஆனால் அவர்கள் முக்கிய கொள்கை பிரச்சினையை எடுத்துக் கொள்ளவில்லை. அரசாங்கத்தை நாங்கள் ஆதரித்தாலும்கூட, அவை இடதால்தான், முன்வைக்கப்பட்டன.

அதே நேரத்தில் நாங்கள் மக்களுக்கு கொடுத்திருந்த சில உத்தரவாதங்களை செயல்படுத்துமாறும் அரசாங்கத்திடம் அழுத்தம் கொடுத்தோம். சில கொள்கைகள் செயல்படுத்தப்பட்டதில் நாங்கள் வெற்றி அடைந்தோம், அதே போல் சிலவற்றை நிறுத்தியதிலும் வெற்றி அடைந்தோம்.

அரசாங்கம் சிவில் அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதின் மூலம் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நட்பு நாடாக இழுக்கப்பட்டுவிட்டது என்பதை நாங்கள் மிகவும் தெளிவாகக் கூறினோம். அணுசக்தி ஒப்பந்தம் போன்ற உடன்படிக்கையை அரசாங்கம் இடதின் ஆதரவுடன் கையெழுத்திடும் நிலைமையை நாங்கள் விரும்பவில்லை. அது கடைசி துரும்பு போல் இருந்தது.

நாங்கள் என்ன செய்திருந்தாலும், உரிய நேரத்தில் அவற்றைச் செய்தோம். காங்கிரஸுடனும் UPA உடனும் தக்க நேரத்தில் முறித்துக் கொண்டோம். மக்கள் இதை உணர்வார்கள். சிவிலியன் அணுசக்தி உடன்பாட்டை நாங்கள் எதிர்க்கிறோம் என்று மக்களிடம் நாங்கள் கூறினோம்; பல தேசிய அளவிலான போராட்டங்களை அதற்கு எதிராகவும் கூட்டு இந்திய அமெரிக்க இராணுவப் பயிற்சிக்கு எதிராகவும் நடத்தினோம். சென்னையில் இருந்து விசாகப்பட்டினம் வரை நாங்கள் எதிர்ப்பு அணிவகுப்புக்களை நடத்தினோம். மேற்கு வங்கத்தில் காலகுண்டாவில் நாங்கள் நூறாயிரக்கணக்கான மக்களைத் திரட்டினோம்.

காங்கிரஸ் என்ன செய்யும் என்பதை நாங்கள் அறிந்திருந்தோம். ஆனால் கடந்த தேர்தல்களில் வேறுவிதமாகச் செய்திருக்க முடியாது. ஆனால் இந்தத் தேர்தல்களின்போது BJP, காங்கிரஸ் இரண்டையும் எதிர்க்கும் கட்சிகளை ஒன்று சேர்க்கும் வாய்ப்பு உள்ளது. அதை மனதில் கொண்டு நாங்கள் 15வது லோக் சபா தேர்தல்களை காங்கிரஸ், BJP இரண்டையும் எதிர்க்கும் சில அரசியல் கட்சிகளை ஒன்று திரட்டும் வாய்ப்பாகவும் ஒரு மாற்றிட்டு அரசாங்கம் அமைக்கும் வாய்ப்பாகவும் காண்கிறோம். பல மாநிலங்களில் இந்த கட்சிகள் சக்திவாய்ந்த அரசியல் கட்சிகளாக உள்ளன; அவை காங்கிரஸ் மற்றும் BJP இரண்டையும் எதிர்க்கத் தயாராக உள்ளன.

CPM இன் மாற்றீட்டு அரசாங்கம் என்ற கருத்து சற்று வேறுபாடானது. ஆனால் இப்பொழுதுள்ள சூழ்நிலையில் எது முடியுமோ அதைச் செய்து, நமக்கு உதவும் வகையில் இருப்பதைச் செய்து, நம் இலக்கை நோக்கி முன்னேறுவோம்.

WSWS: தேர்தலுக்கு பின் ஒரு காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கத்திற்கு ஆதரவு கொடுப்பதை ஒட்டி, CPM பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத்தும் கட்சியின் மூத்த தலைவர் சீத்தாராம் யெச்சூரியும் அதை முற்றிலும் கைவிடவில்லை. அவர்கள், "மே 16க்கு பின்னர் முடிவு செய்வோம்" என்று அதாவது தேர்தல் முடிவுகள் வந்த பின் என்று கூறியுள்ளனர். அப்படியானால் கட்சியின் உத்தியோகபூர்வ நிலைப்பாடு என்ன?

பத்மநாநாபன்: காரத்தும் யெச்சூரியும் தள்ளிவிட்டனர். ஆனால் செய்தி ஊடகம் தொடர்ந்து வலியுறுத்தியது. எனவே காரத் நாம் மே 16 வரை பொறுத்திருப்போம் என்றார். எல்லாமே முடிவுகளை பொறுத்துத்தான் உள்ளது. ஒரு புதிய அரசாங்கத்தை அமைக்க நாங்கள் போராடுகிறோம் என்பது எங்களுக்குத் தெளிவு. மக்கள் வேறுவித முடிவு எடுத்தால் அது அவர்களுடைய விருப்பம்.....

WSWS: CPM மூன்றாம் அணி ஒரு மதசார்பற்ற மக்கள் சார்பு அரசாங்த்தை அளிக்கும் என்று கூறுகிறது. ஆனால் அதில் உள்ள கட்சிகளைப் பாருங்கள். TDP, AIADMK, BJD -- இவை அனைத்தும் BJP தலைமையிலான அரசாங்கங்களில் சேர்ந்திருந்தன.

பத்மநாபன்: இந்தியாவில் அனைத்து வட்டார அரசியல் கட்சிகளும் இடதைத் தவிர, பல நேரங்களிலும், வேறுபட்ட நேரங்களிலும் BJP அல்லது காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிகளில் இருந்துள்ளன. தமிழ்நாட்டை தளமாககக் கொண்ட இரு முக்கிய கட்சிகளான DMK, AIADMK ஆகியவை இரண்டுமே BJP தலைமையிலான அரசாங்கங்களில் வெவ்வேறு காலத்தில் இருந்துள்ளன. DMK நான்கு ஆண்டு காலத்திற்கு BJP தலைமையிலான அரசாங்கத்தில் இருந்தது. AIADMK தலைவி ஜெயலலிதா தான் காங்கிரஸ், BJP இரண்டையும் எதிர்க்கத் தயார் என்று கூறினார், நாங்கள் அதை ஏற்கிறோம். அவர்களுக்கு அவர்களுடைய சொந்த அனுபவம் உண்டு.

TDP தலைவர் [சந்திரபாபு நாயுடு] உலக வங்கிக் கொள்கைகளுக்கு வெளிப்படையாக வாதிட்டார்; இப்பொழுது அவர் பகிரங்கமாக தான் செய்தது தவறு என்று கூறுகிறார். முன்பு அவர் BJP உடன் கூட்டு சேர்ந்தார்; இப்பொழுது BJP க்கு எதிராகப் போராடுகிறார். நாங்கள் அதை ஒப்புக் கொள்ளுகிறோம். மக்கள் அனுபவத்தில் இருந்து கற்றுக் கொள்ளுகின்றனர். சில சமயம் அவர்கள் மாறுகிறார்கள், சில சமயம் மாறுவதில்லை. நாங்கள் மாற்றம் வேண்டும் என்கிறோம். அந்த மாற்றத்தின் கிரியா ஊக்கியாக இருக்க விரும்புகிறோம்.

இடது எல்லா பிற கட்சிகளும் தவறு என்று கூறி நிராகரித்தால், அது உதவுமா? இடது தனியேதான் நிற்கும். அது வகுப்புவாத சக்திகளுக்குத்தான் உதவும். மக்கள் விரோதக் கொள்கைகளை ஏற்கத்தான் அது உதவும்.

இக்கட்சிகள் அனைத்தும் காங்கிரஸையும் BJP யையும் எதிர்த்து போராடத் தயார் என்றால், நாங்கள் அதை ஏற்கிறோம். DMK, AIADMK இரண்டும் வகுப்புவாதக் கட்சிகள் அல்ல என்றுதான் நாங்கள் கருதுகிறோம். இந்திய நிலைமையில் ஒரு எம்.பி. இருக்கும் கட்சி கூட மத்திய அரசாங்கத்தில் செல்வாக்குப் பெற முடியும். "முடியாது, நாங்கள் உங்களுடன் எத்தொடர்பையும் கொள்ள முடியாது, ஏனெனில் நீங்கள் கடந்த ஆண்டு குறிப்பிட்டதை செய்தீர்கள்" என்று பேசுவதில் பயனில்லை.

எங்கள் வரம்புகள் எங்களுக்குத் தெரியும். நாங்கள் மூன்று மாநிலங்களில் அதிகாரத்தில் உள்ளோம். புறசூழ்நிலைகள் தக்க முறையில் கவனிக்கப்பட வேண்டும். இப்பொழுது BJP தலைமையில் இருக்கும் NDA, காங்கிரஸ் தலைமையில் இருக்கும் UPA ஆகியவற்றுடன் இருக்கும் ஜனநாயக சக்திகள் திரட்டப்பட முடியும் என்பதை நாங்கள் தெளிவாகக் காட்டியுள்ளோம்.

WSWS: மூத்த CPM தலைவர்கள், மேற்கு வங்க முன்னாள் முதலமைச்சர் ஜோதி பாசு, தற்பொழுதைய முதல் மந்திரி புத்ததேப் பட்டாச்சார்ஜி போன்றவர்கள் சோசலிசம் இப்பொழுது செயற்பட்டியலில் இல்லை என்று கூறியுள்ளனர். பாசு, "சோசலிசம் ஒரு தொலைதூரக் கனவு" என்று கூறியுள்ளார். சோசலிசத்திற்கான போராட்டத்தை இன்று நீங்கள் எப்படிக் காண்கிறீர்கள்?

பத்மநாபன்: சோசலிசத்திற்கான போராட்டம், சோசலிசம் செயற்பட்டியலில் -- இவை இரண்டும் வெவ்வேறு விஷயங்கள். எங்கள் கட்சித் திட்டத்தில் நாங்கள் அது எங்கள் மூலோபாய இலக்கு என்று கூறினோம். நாங்கள் ஒரு மக்கள் ஜனநாயகப் புரட்சிக்கு உழைக்கிறோம்; அது எங்களை அந்த இலக்கிற்கு அழைத்துச் செல்லும். மக்கள் ஜனநாயகப் புரட்சி கூட இப்பொழுது எங்கள் செயற்பட்டியலில் இல்லை. அதில் ஒன்றும் குழப்பம் இல்லை. அந்த நிலைமையை இன்னும் நாங்கள் அடையவில்லை.

சோசலிசம் செயற்பட்டியலில் உள்ளது என்று எவர் கூறமுடியும்? நாங்கள் எங்கு இப்பொழுது உள்ளோம்? தொழிலாள வர்க்கத்தில் மிகச் சிறிய பிரிவுதான் ஒழுங்குற அமைக்கப்பட்டுள்ளது. பல கட்டங்களைக் குதித்துக் கடக்க முடியாது. ஒரே நாளில் மக்கள் மாறுவர் என்று நினைக்கப்பட்டது. அத்தகைய கற்பனைகள் இந்திய இடது இயக்கத்திற்கு போதுமான சேதத்தைக் கொடுத்துவிட்டன. அவர்கள் ஆயுதமேந்தினர். இருக்கும் நிலைமை சரியாக உணரப்பட வேண்டும். அந்த இலக்கை நோக்கி நீங்கள் செல்ல வேண்டும். இதற்கு இடையில், ஜனநாயக சக்திகளிடம் இருந்து என்ன உதவி கிடைத்தாலும் அதைப் பெற்றுக் கொள்ள வேண்டும். வேறு விருப்பத்தேர்வு இல்லை. எங்கள் கட்சித் திட்டத்திலும் இதைத் தெளிவாகக் கூறியுள்ளோம். இப்பொழுது NDA அல்லது UPA உடன் இருக்கும் ஜனநாயக சக்திகள் திரட்டப்பட வேண்டும்.

தொழிற்சங்கங்களில் எத்தனை தொழிலாளர்கள் அணிதிரட்டப்பட்டு உள்ளனர்? இந்தியாவில் தற்பொழுதைய நிலைமை என்ன? சில பகுதிகள் இன்னும் முதலாளித்துவத்திற்கு முந்தைய கட்டத்தில்தான் உள்ளன.

1957ம் ஆண்டில் கூட CPI தலைவர் [பின்னர் CPM நிறுவனர்] E.M.S. நம்பூத்திரிபாத் செய்தியாளர்களிடம் அவர் கேரளாவில் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்ட மறுநாள் கூறினார்: "சோசலிசம் செயற்பட்டியலில் இல்லாத அரசாங்கத்தை நாங்கள் அமைக்க விரும்புகிறோம்." அந்த அறிக்கை, இந்தியாவில் மட்டும் இல்லாமல் எல்லா இடங்களிலும் பொருந்தும். பொலிவியாவில் இன்னும் பல நாடுகளிலும் கூட பொருந்தும்.

சோசலிசம் ஒரு மூலோபாய இலக்கு. இதை அடைய அதிக காலம் பிடிக்கும். மக்கள் அதற்காக போராட வேண்டும். மேற்கு வங்கத்திலும் கேரளாவிலும் நாங்கள் கொண்டிருப்பது நிர்வாக அதிகாரம், அரசியல் அதிகாரம் அல்ல. அரசியல் அதிகாரம் இன்னும் ஆளும் வர்க்கத்திடம்தான் உள்ளது. கூட்டாட்சி முறையில் மாநில அரசாங்கங்களுக்கு போதுமான நிதியங்கள் கிடையாது. உலகளாவிய முறையின் பாதிப்பு இன்னும் கூடுதலான பிரச்சினைகளை எழுப்பியுள்ளது. நிதியங்கள் இழக்கப்பட்டு விட்டன. மாநில அரசாங்கங்கள் மீது நிதிய வரம்புகள் உள்ளன; இதைத்தவிர இந்திய அரசியலமைப்பின் வரம்புகளும் உள்ளன.

WSWS: சமீபத்தில் CPM மற்றும் இடது முன்னணியும் மேற்கு வங்கத்தில் தேர்தல்களில் பின்னடைவு பெற்றது, ஒரு சட்டமன்ற துணைத் தேர்தலில், பின் பஞ்சாயத் தேர்தல்களில் மற்றும் இந்திய தொழிற்சங்க கிளைகள் Exide, Mitsubishi, Kolkata Port Trust ஆகியவற்றிற்கான தேர்தல்களில். மேற்கு வங்க இடது முன்னணியின் முதலீட்டு சார்புக் கொள்கைகளுக்கு எதிரான மக்கள் விடையிறுப்பு இல்லையா இது? நந்திகிராமில் சிறப்பு பொருளாதாரப் பகுதிகளை அமைக்க நிலத்தை எடுத்துக் கொள்ளுவதற்கு எதிராக 2007ல் விவசாயிகள் எதிர்ப்பை அடக்குவதற்கு குறிப்பாக போலீஸ் மற்றும் குண்டர்களைப் பயன்படுத்தியது?

பத்மநாபன்: ஒரு வானவில் கூட்டணி போல் நக்சலைட்டுக்கள் [மாவோவிச எழுச்சியாளர்கள்], இடது என்று அழைக்கப்படுபவர்கள், வலது மற்றும் வகுப்புவாத சக்திகள் எல்லாம் சேர்ந்து இவை அனைத்தும் இடது முன்னணிக்கு எதிராக ஒன்றாக உள்ளனர். ஜார்கண்டில் தேர்தல்களைப் புறக்கணிக்க அழைப்பு விடும் மாவோவிஸ்ட்டுக்கள்கூட மேற்கு வங்க மக்களை இடது முன்னணியைத் தோற்கடிக்கும் வகையில் வாக்களிக்குமாறு கோரியுள்ளனர். அவர்களை நாங்கள் அரசியல் அளவில் எதிர்த்துப் போராடுகிறோம். ...

மேற்கு வங்கத்தில் இருக்கும் அமெரிக்க வணிகத்தூதரகம் கூட இடதிற்கு எதிராகத்தான் உள்ளது. அவர்கள் ஒரு வங்க மொழி பேசும் Consular அதிகாரியைக் கொண்டுள்ளனர்.

WSWS: மூன்றாம் அணியில் உங்கள் நட்புக் கட்சிகளில் ஒன்று, தெலுங்கான ராஷ்ட்ர சமிதி (TRS) லூதியானாவில் நேற்று ஒரு BJP/NDA பேரணியில் கலந்து கொண்டது. பற்றி..

பத்மநாபன்: TRS தலைவர் யார் அதிகாரத்திற்கு வந்தாலும் அவருடன் பேரம் பேச முற்படுவார். நான் போக வேண்டும். ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பேசிவிட்டேன்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved