World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Panetta and Washington's endless war

பனேட்டாவும் வாஷிங்டனின் முடிவிலாப் போரும்

By Bill Van Auken
20 May 2009

Back to screen version

CIA க்கும் மன்றத் தலைவர் ஜனநாயகக் கட்சியின் நான்ஸி பெலோசிக்கும் இடையே பிந்தையவருக்கு சித்திரவதை பற்றி என்ன கூறப்பட்டது என்ற கடுமையான மோதல்கள் நடந்த ஒரு வாரத்திற்கு பின்னர், CIA இயக்குனர் லியோன் பனேட்டா இந்த பொது விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் புஷ் நிர்வாகத்தின் அலங்காரச் சொற்களை எதிரொலிக்கும் சொலலாட்சியைப் பயன்படுத்தினார்.

CIA விற்கு தலைமை தாங்க ஒபாமாவால் தேர்ந்தெடுக்கப்பட்டபின், தன்னுடைய முதல் பொது உரையைக் கொடுத்த பனேட்டா, அமெரிக்காவை "ஒரு போரில் ஈடுபட்டிருக்கும் நாடு" என்று விவரித்து, தற்போதைய அமெரிக்க இராணுவ மற்றும் உளவுத்துறையின் நடவடிக்கைகளை திசைதிருப்பும் வகையில் புஷ் நிர்வாகத்தின் குற்றங்கள் இருந்துவிடக்கூடாது என்று வலியுறுத்தினார்.

"அக்காலத்தில் இருந்து படிப்பினைகளைப் பெறும் வாய்ப்பை நான் அவர்களுக்கு மறுக்கவில்லை" என்று லாஸ் ஏஞ்சல்ஸில் இருக்கும் Pacific Council on International Policy அமைப்பினர் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில், பனேட்டா கூறினார். "ஆனால்... தற்போதைய, வருங்காலத்திற்கான பொறுப்பை மறக்கக்கூடாது என்பதில் மிக கவனமாக இருக்க வேண்டும். அந்த உண்மையை ஒவ்வொரு நாளும் எதிர்கொள்ள வேண்டும். கடந்த காலத்தின் படிப்பினைகளை கற்பது முக்கியம் என்றாலும், இனி செய்ய வேண்டியது பற்றியதில் குவிப்புக்காட்டும் திறனை கைவிடாமல் அது செய்யப்பட வேண்டும்... அதுவும் அமெரிக்காவை அச்சுறுத்துபவர்களுக்கு எதிரான குவிப்பு வேண்டும்.".

"நாம் போரில் ஈடுபட்டிருக்கும் நாடு." இந்தச் சொற்றொடர் நூற்றுக்கணக்கில், ஏன் ஆயிரக்கணக்கில் புஷ், செனி, ரம்ஸ்பெல்ட், ரைஸ், கோன்ஸேல்ஸ் மற்றும் பிறரால் ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் நடத்தப்பட்ட இராணுவக் கொடுமைகள், சித்திரவதைகள், அசாதாரணக் கடத்தல்கள், சட்டவிரோத உள்நாட்டு ஒற்று வேலைகள் மற்றும் ஒரு ஏகாதிபத்திய ஜனாதிபதி முறை தனக்கே முன்னோடியில்லாத வகையில் அதிகாரத்தைக் கொடுத்துக் கொண்டது, ஆகியவற்றை எல்லாம் நியாயப்படுத்துவதற்கு கூறப்பட்டது.

இந்த ஆண்டில் முன்தாக, வெள்ளை மாளிகை அதிகாரிகள் ஒபாமா நிர்வாகம் "பயங்கரவாதத்திற்கு எதிரான உலகளாவிய போர்" பற்றிய குறிப்பை கைவிடுவதாக செய்தி ஊடகத்திற்குக் குறிப்புக் காட்டியது. அந்த சொற்றொடர் புஷ் நிர்வாகம் அதன் வெளிநாட்டுப் போர்கள், உள்நாட்டில் ஜனநாயக உரிமைகள் மீது தாக்குதல் என்று எல்லாவற்றையும் நியாயப்படுத்தப் பயன்பட்டது.

ஆனால் இன்னும் தெளிவாக வந்துள்ளது, புஷ் அறிமுகப்படுத்திய வழிவகைகள் மிக அதிக அளவில் ஜனநாயக நிர்வாகத்தால் பெரிதும் மாறுதல் இல்லாமல் தக்க வைத்துக் கொள்ளப்படுகின்றன என்பதுதான்; அதே நேரத்தில் இது அவற்றை நியாயப்படுத்த கூறும் அலங்காரச் சொற்கள் இன்னும் அதிகமான முறையில் முன்னால் பதவியில் இருந்தவர்களுடையதை போல்தால் ஒலிக்கின்றன.

"அமெரிக்க ஒரு போரில் ஈடுபட்டுள்ள நாடு" என்பதின் பொருள் யாது? அமெரிக்க காங்கிரஸ் ஒன்றும் எந்த நாட்டிற்கும் எதிராக போர்ப் பிரகடனத்தை வெளியிட்டுவிடவில்லை.

இதன் இராணுவம் எப்பொழுதும் சட்ட விரோத படையடுப்புக்களை நடத்த பயன்படுத்தப்படுதல், காலனித்துவ வகையில் ஆக்கிரமிப்புக்கள் செய்தல், குண்டுவீசுதல், கொள்ளை முறை டிரோன்களால் படுகொலைகளை செய்தல், இன்னும் இத்தகைய வன்முறையை துரதிருஷ்டவசமாக உலகின் இருப்புக்களையும் சந்தைகளையும் கொள்ளை அடிக்கும் அமெரிக்க முதலாளித்துவ முறையின் கொள்ளை முறைக்கு குறுக்கே வந்துவிட்ட எந்த மக்கள் மீதும் கட்டவிழ்த்துவிடப்படும் என்ற முறையில்தான் "அமெரிக்கா ஒரு போரில் ஈடுபட்டுள்ளது" என்பது குறிக்கும்.

இப்படி முடிவில்லாத நடத்தப்படும் போரின் விரோதி வேண்டுமென்றே தெளிவற்ற முறையில் வைக்கப்பட்டுள்ளது; ஏனெனில் அமெரிக்க இராணுவத்தின் ஆக்கிரமிப்பு இலக்குகள் மாறியவண்ணம் உள்ளன. இவ்விதத்தின் பனேட்டா "அமெரிக்காவை அச்சறுத்துபவர்களை" பற்றித்தான் குறிப்பிடுகிறார்.

இத்தகைய முறையை ஓர்வெல்லிய முறை என்று கூறினால் அது மிகையாகாது. ஓர்வெல்லின் "1984" ல் அடக்கப்பட ஓஷியானா குடிமக்கள்மீது எப்பொழுதும் சுமத்தப்பட்ட போர்க்கால நிலை, புஷ் மற்றும் ஒபாமா நிர்வாகங்களின்கீழ் உள்ள நவீன அமெரிக்க அரசாங்கக் கொள்ளைக்கு ஒப்புமை போல் எழுதப்பட்டிருக்கலாம்.

இத்தகைய போர் நிலைமை பற்றிய அரசியல் உட்குறிப்புக்கள் பற்றி பனேட்டா அதிகம் கற்பனைக்கு ஒன்றும் விட்டுவிடவில்லை.

"அவர்களுக்கு மறுக்க மாட்டேன்" என்று CIA இயக்குனர் கூறினார்: இதன் பொருள் காங்கிரஸ் "அக்காலத்தில் இருந்து படிப்பினைகளைக் கற்கும் வாய்ப்பை மறுக்க மாட்டேன்" என்பதாகும். ஆனால் எந்த விசாரணையும் "மிக கவனமான" முறையில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று எச்சரித்தார். கடந்த காலப் போர்க்குற்றங்களை ஆராய்தல் என்பது தற்போதைய வருங்கால போர்க்குற்றங்களுக்கு குறுக்கே வந்துவிடக்கூடாது.

இவ்விதத்தில் சித்திரவதை பற்றிய எவ்வித விசாரணையின் தன்மையைக் குறைத்துவிடும் எச்சரிக்கை--எல்லாவற்றிற்கும் மேலாக உயர்மட்ட அதிகாரிகள் இக்குற்றத்திற்கு பொறுப்பு என காட்டப்படுவதை தடுத்தல்-- கடந்த வாரம் CIA தன்னிடம் 2002 ல் நீர்மூழ்கடித்தல் முறை காவலில் இருப்பவர்களை விசாரணை செய்யப்படுத்தப்பட்டது பற்றி பொய்கூறியது என்று பெலோசி கூறியதற்கு பகிரங்க மறுப்பு என்றுதான் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.

சித்திரவதைக் கொள்கையில் பெலோசியின் உடந்தை இருந்தது ஒருபுறம் இருந்தாலும், ஜனாதிபதியின் தேர்ந்தெடுக்கப்படாத நியமன அதிகாரியான பனேட்டா மன்றத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவரை, ஜனாதிபதி பதவிக்கே இரண்டாம் வாரிசு என்ற நிலையில் இருப்பவரை, பகிரங்கமாக சாடியது பற்றி மன உளைச்சல் கொள்ளவில்லை என்பது அசாதாரணமானது ஆகும்.

CIA இயக்குனராக பனேட்டா முதலில் நியமிக்கப்பட்டபோது, குடியரசுக் கட்சியினரும் சில ஜனநாயகக் கட்சியினரும் உளவுத்துறையில் அவருடைய அனுபவமின்மையைச் சுட்டிக் காட்டினர். இறுதியில் அவர் செனட்டின் ஒருமித்த இசைவுடன் பதவியில் உறுதி செய்யப்பட்டார்.

அமெரிக்க ஆளும் உயரடுக்கு தனது நலன்களைக்காக்க முற்றிலும் தெளிவாக நம்பியிருக்கும் நபர் இவர். முதலில் நிக்சன் நிர்வாகத்தில் குடியரசுக் கட்சி உதவியாளராக இருந்த அவர் பின்னர் ஜனநாயகக் கட்சி சார்பில் காங்கிரஸுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு அதன் பின் ஜனாதிபதி கிளின்டனின் அலுவலகத்தில் தலைமைப் பொறுப்பைக் கொண்டார். இதன்பின் அவர் பெருநிறுவன, நிதிய சக்திகளின் மையத்துடன் இலாபம் நிறைந்த உறவுகளைத் தொடர்ந்தார்; அதே நேரத்தில் அரசாங்கக் கொள்கைகளுடனும் ஆழ்ந்த தொடர்பைக் கொண்டிருந்தார். 2006ல் இவர் ஈராக் ஆய்வுக்குழுவில் சேர்ந்தார்; இது அமெரிக்கப் போர்க் கொள்கையில் உத்திகரமான மாற்றத்தை ஏற்படுத்த அமைக்கப்பட்டிருந்தது. 2008ல் இவர் $830,000 ஆலோசனைக் கட்டணம், கெளரவ ஊதியம் என்று BP Corporation, Merrill Lynch, Carlyle Group ஆகியவற்றின் மூலம் பெற்றார்.

அரசிற்குள் அரசு என்பதற்கு ஆதரவாக பனேட்டா உள்ளார்; இதுதான் எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் அமெரிக்க அரசாங்கத்தின்மீது ஆதிக்கம் கொண்ட இராணுவம் மற்றும் உளவுத்துறை அமைப்புக்களின் நிரந்தரக் கருவி ஆகும்.

இந்த அடுக்குகள், கடந்த மாதம் புஷ் நிர்வாகத்தின் குற்றங்கள் குறைந்த அளவில் சிந்திரவதைக் குறிப்புக்கள் வெளியிடப்பட்டு அம்பலமானதை அடுத்து, அவ்வாறு செய்தது தவறு என்று வலியுறுத்துபவை. வாஷிங்டன் போஸ்ட்டில் செவ்வாயன்று வால்டர் பின்கஸ் எழுதிய கட்டுரையில் இன்னும் குறிப்பு இது பற்றிக் காட்டப்படுகிறது; அவர் CIA உடன் நெருக்கமான தொடர்பு உடையவர். அக்கட்டுரை "அமைப்பின் ஊழியர்கள்" சித்திரவதைக்கு எதிராக புதிய தடைகள் வந்துள்ள நிலையில் "திறமையுடன் விசாரணைகளை நடத்த முடியாது" என்றும் "ஆப்கானிஸ்தான் மற்றும் பாக்கிஸ்தானில் நடைபெறும் நடவடிக்கைகளும் பரிசீலனைக்கு வரும்பொழுது" அதே நிலைதான் இருக்கும் என்ற அமைப்பின் கவலைகளை மேற்கோளிட்டுள்ளது.

ஜனநாயகக் கட்சியினர் இத்தகைய அழுத்தங்கள் முன் நடுங்கி நிற்கின்றனர். ஒபாமாவின் செய்தித் தொடர்பு செயலாளர் பெலோசிக்கும் பனேட்டாவிற்கும் இடையே உள்ள மோதல் பற்றி ஒரு சொல் கூட கூறவில்லை; அதே நேரத்தில் காங்கிரஸில் இருக்கும் ஜனநாயகக் கட்சியினர் சித்திரவதை பற்றிய விவாதத்தில் ஈடுபடுவதில்லை; அதை பெருகிய முறையில் ஒரு திசைதிருப்பும் செயல் என்று கருதுகின்றனர்.

ஒபாமா நிர்வாகம் புஷ்ஷினால் தொடக்கப்பட்ட குற்றம் நிறைந்த கொள்கைகளை நிரந்தரப்படுத்தி அரசியல் அளவில் நெறிப்படுத்தும் வகையிலும் நடந்து வருகிறது; அதே நேரத்தில் அவற்றிற்கு பொறுப்பானவர்களை பாதுகாக்கிறது. பாரசீக வளைகுடா மற்றும் மத்திய ஆசியாவில் அமெரிக்க மேலாதிக்கத்தை உறுதிப்படுத்த தொடக்கப்பட்ட இரு போர்கள் இரு கட்சி ஆதரவுடன் தொடர்கின்றன; ஒபாமாவும் தன்னுனைடய சொந்த போர்க்குற்றங்களுக்கு பொறுப்பாகிறார்; இதில் இந்த மாதம் ஆப்கானிஸ்தானில் 150 குடிமக்கள் படுகொலைக்கு உள்ளானது அடங்கும். உள்நாட்டு ஒற்றுவேலை, அசாதாரணக் கடத்தல்கள், மற்றும் இராணுவ குழுக்கள் அனைத்தும் இந்த நிர்வாகத்தாலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. சித்திரவதை மீண்டும் வருதல் தவிர்க்க முடியாதது; ஒருவேளை ஏற்கனவே தொடங்கியிருக்கக்கூடும்.

இறுதியில், முழு வழிவகையும் அமெரிக்காவின் இரு கட்சி முறையில் தேர்தல்களின் பயனற்ற தன்மையை அம்பலப்படுத்துகின்றது. அதிகாரத்தை எடுத்துக் கொள்பவர்கள் --புஷ்ஷுக்கு சற்றும் குறையாத விதத்தில் ஒபாமாவும்-- அமெரிக்க மக்களுக்கு பொறுப்பு கூற வேண்டும் என்று இல்லாமல் உண்மையில் அமெரிக்காவை ஆளும் நிதிய தன்னலக்குழு, இராணுவக் கட்டுப்பாடு மற்றும் உளவுத் துறை பிரிவுகள் என்ற குறுகிய தளத்திற்குத்தான் பொறுப்புக் கொண்டுள்ளனர்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved