World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The Obama recovery

ஒபாமாவின் மீட்பு நடவடிக்கை

Jerry White
6 May 2009

Back to screen version

ஞாயிறு அன்று நியூ யோர்க் டைம்ஸ் ஏட்டில் வெளியிடப்பட்ட ஒரு அசாதாரணப் பேட்டியில் ஜனாதிபதி ஒபாமாவின் அமெரிக்கப் பொருளாதாரத்திற்கான கண்ணோட்டத்தை "பெரு மந்த நிலைக்கு பின்னர்" என்ற தலைப்பில் வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 14ம் தேதி ஜோர்ஜ்டவுனில் ஒபாமா அமெரிக்கப் பொருளாதார மறு கட்டமைப்பு பற்றி ஒரு முக்கிய உரையை நிகழ்த்திய பின்னர் இப்பேட்டி பொருளாதார கட்டுரையாளர் டேவிட் லியோன்ஹார்ட்டால் காணப்பட்டது.

இந்தப் பேட்டியில், வங்கி முறையில் எவ்விதத் தீவிர அமைப்பு முறை சீர்திருத்தமும் இருக்காது என்பதை ஒபாமா தெளிவுபடுத்தியுள்ளார். நிதியச் சரிவை விரைவுபடுத்திய "மிகப் பெரிய செயல்கள் மற்றும் ஆபத்து நிறைந்த நடவடிக்கைகள்" ஆகியவற்றை கட்டுப்படுத்த கொண்டுவரப்பட்ட மாற்றங்கள் "பாதுகாப்பு நிறைந்த பத்திரங்களுக்கான சந்தை உட்பட" நிதியப் பிரிவின்மீது "நம்பிக்கை, பற்று" ஆகியவற்றை மீட்பதற்கான வடிவமைப்பில் இருக்கும் என்றார் அவர்.

முதலீட்டு வங்கி முறைக்கும் வணிக வங்கி முறைக்கும் இடையே 1933ல் Glass-Stegall Act சட்டத்தின்கீழ் கொண்டுவரப்பட்ட தடைகளை மீட்கும் நடவடிக்கையையும் ஒபாமா குறிப்பாக நிராகரித்தார். அந்த நிதியக் கட்டுப்பாட்டுத் திட்டம் பெருமந்த நிலைக் காலத்தின் மிக முக்கியமான சீர்திருத்தம் ஆகும். ஆனால் 1990 களின் கடைசியில் அப்பொழுது ஜனாதிபதியாக இருந்த பில் கிளின்டனுடைய நிதிமந்திரியும், தற்பொழுது ஒபாமாவின் உயர்மட்ட பொருளாதார ஆலோசகர் லோரன்ஸ் சம்மர்ஸினால் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டபோது பாதிக்கப்பட்டவற்றுள் ஒன்றாகும்.

தன்னுடைய பேட்டியில் தன்னுடைய முக்கியப் பொருளாதார ஆலோசகர்கள் அனைவரும் ஒரு உயர்மட்ட கிளின்டன் பொருளாதார ஆலோசகரும், முன்னாள் இணைத் தலைவர் என்று கோல்ட்மன் சாஷ்ஸில் இருந்தவருமான ரோபர்ட் ரூபினின் வழிநடப்பவர்கள் என்பை ஒபாமா ஒப்புக் கொண்டார். சம்மர்ஸ், நிதிமந்திரி டிமோதி கீத்னர் மற்றும் வரவுசெலவுத்திட்ட இயக்குனர் பீட்டர் ஓர்ஷாக் ஆகியோர் இதில் அடங்குவர். இந்த நபர்கள் துவக்கும் எந்த கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் ஊக முறை மற்றும் ஒட்டுண்ணித்தனத்தின் வடிவமைப்பைக் பாதுகாக்கும் வகையில்தான் இருக்கும். அவைதான் வோல் ஸ்ட்ரீட்டிற்கு பெரும் செல்வக் குவிப்பை அளித்ததுடன் 1930 களுக்கு பின்னர் உலகிலேயே மிக மோசமான பொருளாதார நெருக்கடியையும் ஏற்படுத்தின.

தன்னுடைய ஜோர்ஜ்டவுன் பல்கலைக்கழக உரையில் ஒபாமா நிதிய சரிவிற்குப் பின்னர் அமெரிக்க முதலாளித்துவத்தை மறு கட்டமைப்பதில் ஒரு பிற்போக்குத்தன திட்டத்தைத்தான் கோடிட்டுக் காட்டினார். இதற்கு தொழிலாள வர்க்கம் சுரண்டப்படுவது அதிகரிப்படுவதோடு அவர்களுடைய வாழ்க்கைத் தரங்களில் நிரந்தரச் சரிவும் இருக்கும். இதைத்தவிர சமூகநலத் திட்டங்களான சுகாதாரப் பாதுகாப்பு, மருத்துவ உதவி, சமூகப் பாதுகாப்பு ஆகியவற்றில் முன்னோடியில்லாத வகையில் செலவுக் குறைப்புக்களும் இருக்கும். "வளர்ச்சி, செழிப்பு ஆகியவற்றிற்கு நாம் ஒரு புதிய அஸ்திவாரத்தை போடவேண்டும்; அங்கு உள்நாட்டில் குறைந்த நுகர்வைக் கொண்டு கூடுதலாக வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்வோம்" என்றார் அவர்.

இந்தக் கருத்திற்கு தன் பேட்டியில் பழையபடி ஜனாதிபதி வருகிறார்; குறைந்த திறமையை உற்பத்தித் துறையில் பெற்றிருக்கும் தொழிலாளர்களுக்கு "மத்திய தர வகுப்பு" ஊதியங்கள் இருந்த காலம் இனி கிடையாது என்பதைத் தெளிவுபடுத்தினார். ஒவ்வொரு அமெரிக்கரும் "தக்க உயர்நிலைப் பள்ளிக்குப் பிந்தைய பயிற்சியைக்கொண்டு தொழில்நுட்ப தேர்ச்சி இருக்கக்கூடிய துறைகளில் திறைமையுடன் விளங்க வேண்டும்" என்பது முக்கியம் என்றார். அது இல்லாவிட்டால், "ஒரு தரமான ஊதியமுள்ள வேலைகளைப் பெறுவது என்பது மிகவும் கடினமாகும்" என்று அவர் அறிவித்தார்.

இவருடைய கல்வி "சீர்திருத்தத்தின்படி" மழலையர் பள்ளிக்கு முன்பிருந்து பட்டப்பின்படிப்பு வரை பள்ளி முறை என்பது உலகப் பொருளாதாரத்தில் அமெரிக்க பெருநிறுவனங்கள் போட்டியிடுவதற்குத் தேவையான திறமைகளை பயிற்றுவிக்கும் திறன்களின்மீது குவிப்புக்காட்டும். ஆனால் அதிகரித்தளவில் அலுவலகப்பணிகள் வெளிநாடுகளுக்கு செல்வதை சுட்டிக்காட்டிய ஒபாமா கல்லூரிப் பட்டம் பெற்றாலும் அது மட்டுமே பொருளாதாரப் பாதுகாப்பிற்கு உறுதியளிக்காது என்றார்.

ஒபாமா ஒரு "குமிழிக்கு பிந்தைய பொருளாதாரம்", (post-bubble economy) "பொருட்களை உற்பத்தி செய்தல்" மற்றும் நிதியப் பணிகள் ஆகியவற்றிற்கு இடையே இன்னும் சரியான சமசீர் நிலையை பெறும் என்ற தன் நம்பிக்கையை அறிவித்தார். ஆனால் உடனடியாக அவர் சேர்த்துக் கொள்ளுகிறார்: "1940 களின் கடைசிப் பகுதியில் இருந்த அளவிற்கு மிகப் பெரிய சதவிகிதம் உற்பத்திப் பிரிவிற்கு என்ற பொருளாதாரத்திற்கு நாம் ஒன்றும் மீண்டும் திரும்பப் போவதில்லை."

உண்மையில் ஜெனரல் மோட்டார்ஸ் மற்றும் கிறைஸ்லர் பற்றிய அவருடைய மறுசீரமைப்புத் திட்டங்கள் நிரூபித்துள்ளதைப் போல், அவருடைய நிர்வாகம் நாட்டின் உற்பத்தித் தளத்தை இன்னும் கூடுதலாக குறைத்து, கெளரவமான ஊதியங்களைக் கொடுத்து வந்த தொழில்துறை வேலைகளைத் தகர்த்து சிறிய, சுரண்டலுக்கு உட்பட்ட உற்பத்தி நிறுவனங்களை தோற்றுவித்து அவை வங்கிகளுக்கும் பெரு முதலீட்டாளர்களுக்கும் அதிக இலாபத்தைக் கொடுக்கும் இருப்புக்களாக மாறும் விதத்தில் அமைக்கப்படும்.

ஒபாமாவின் கருத்துக்களில் இன்னும் வெளிப்படையானதும், அச்சுறுத்தவைக்கக்கூடியதும் அவருடைய சுகாதாரப் பாதுகாப்பு செலவினங்களைக் குறைத்தல் பற்றியவை ஆகும். அமெரிக்க மக்களுக்கான சிக்கன நடவடிக்கை பற்றிய கொள்கையில் அது மையத்தானத்தைக் கொண்டிருந்தது. நல்ல தரமான சுகாதாரப் பாதுகாப்பை அனைவருக்கும் அளிப்பதற்குப் பதிலாக அவர் தொழிலாளர்களுக்கு சுகாதார பாதுகாப்பை பங்கீடுசெய்வது பற்றிப் பேசுகிறார்.

தானும் தன்னுடைய வரவுசெலவுத்திட்ட இயக்குனரும் "செலவுகளைக் குறைக்கும் வழிகள் பற்றிய ஒப்பீட்டு திறன் " பற்றி கலந்து ஆலோசித்து வருவதாகவும் ஒபாமா கூறிப்பிட்டார். இத்தகைய திட்டத்தின்கீழ் அரசாங்கம் வைத்தியர்கள் அதிக செலவு உடைய பாதுகாப்பு முறைக்கு உத்தரவிட்டாலும்கூட, நோயாளிகளை குறைந்த செலவு உடைய மருந்துகள், சிகிச்சை முறை ஆகியவற்றைப் பயன்படுத்துமாறு வலியுறுத்தும் என்று அவர் விளக்கினார்.

"சுகாதாரப் பாதுகாப்பு, மருத்துவ உதவி" என்று வரும்போது, வரி செலுத்துபவர்களுடைய பணமாக இருக்கும் நிலையில், இந்தச் செலவினங்களைக் கட்டுப்படுத்தும் கட்டாயம் நமக்கு ஏற்பட்டுள்ளது, என்ற நிலையில் இது நமக்குக் குறிப்பாகத் தேவைப்படும் என்றார் அவர்.

இவை அதிக செல்வம் கொழிக்கும் உயர்மட்ட 1 சதவிகிதத்தின்ர் நாட்டின் 40 சதவிகிதத்திற்கும் மேலான செல்வத்தைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டிருக்கும் ஒரு நாட்டின் ஜனாதிபதியிடம் இருந்து வரும் சொற்களாகும். இங்கு தலைமை நிர்வாக அதிகாரிகள் தங்களுக்கு ஆண்டு ஒன்றுக்கு பல மில்லியன் டாலர்களைக் எடுத்துக் கொண்டிருக்கின்றனர். இவருடைய நிர்வாகமும் வோல் ஸ்டரீட்டிற்கு வரி செலுத்துபவர்களின் பணத்தை டிரில்லியன் டாலர் கணக்கில் கொடுத்துக் கொண்டிருக்கிறது.

பேட்டியில் நாம் அறிவது வயதானவர்களின் வாழ்க்கையில் கடைசி கட்டங்கள் செலவிற்கு உகந்த முறையில் இருக்க வேண்டுமா, வேண்டாமா என்பது பற்றிய விந்தையான கருத்துப் பறிமாற்றங்கள் ஆகும். டைம்ஸ் பேட்டியாளர் தற்பொழுது நாடு ஒருவார மேலதிக வாழ்விற்காக $20,000 த்தைச் செலவிடுகிறது என்ற கருத்தைக் கூறுகிறார்.

"ஆம்" என்கிறார் ஒபாமா. பின் தன்னுடைய பாட்டியார் பற்றிய அனுபவத்தை கூறுகிறார். தேர்தல் பிரச்சாரத்தின்போது அவ்வம்மையாருக்கு இறுதிக்கட்ட புற்றுநோய் வந்துள்ளதாக தெரியவந்து, பின்னர் அவர் கீழே விழுந்து இடுப்பு முறிவும் ஏற்பட்டது.

இடுப்பு மாற்றப்படுவதற்கு தன்னுடைய கைகளில் இருந்து பணம் கொடுத்திருப்பேன் என்று கூறிய ஒபாமா, இத்தகைய பாதுகாப்பிற்கு அரசாங்கம் தன் கைகளில் இருந்து செலவழிக்கக் கூடாது என்று தெரிவிக்கிறார். "சமூகம் இத்தகைய முடிவுகளை என்னுடைய பாட்டியாருக்கு எடுக்கிறதா அல்லது பிறருடைய வயதான தாத்தா பாட்டிகள் அல்லது பெற்றோர்களுக்கு எடுத்தாலும், இடுப்பு மாற்றும் என்பது, அவர்கள் இறுதிக்கட்ட நோயில் இருக்கும்போது, தேவையா என்பது மிகக் கடினமாக வினா" என்று அவர் யோசித்தபடி கூறுகிறார்.

"அறவழியில் கடினமான" இப்பிரச்சினைகள் "செலவின உந்துதலில் பெரும் பங்கு கொண்டவை" என்று ஜனாதிபதி குறைகூறுகிறார். "நீடித்து மோசமான நோய்வாய்ப்பட்ட நிலையில் தங்கள் வாழ்வின் இறுதி கட்டத்தில் இருப்பவர்கள் மொத்த சுகாதாரக் பாதுகாப்பு தொகையில் கிட்டத்தட்ட 80 சதவிகிதம் செலவினை கொண்டுள்ளனர்" என்றார் அவர்.

இத்தகைய முடிவுகளை "சாதாரண அரசியல் வழிமுறைகளின் மூலம்" காண்பது மிகவும் கடினமாக இருக்கும் என்று ஒபாமா கூறி. ஜனநயாகக் கட்சியின் கட்டுப்பாட்டில் இருக்கும் காங்கிரஸும் தற்பொழுது இப்பிரச்சினைகளின் "வழிகாட்டி நெறிகளைக்" கொடுக்கக்கூடிய சுதந்திரமான அமைப்பை உருவாக்குவது பற்றி விவாதித்து வருகிறது என்றார்.

மற்ற பிரச்சினைகளைப் போலவே, ஒபாமா நிர்வாகத்தின் சுகாதாரப் பாதுகாப்பு பற்றிய அணுகுமுறையில் சமூகத் தேவைகள் சக்தி வாய்ந்த நிதிய நலன்களுக்கு தாழ்த்தி வைக்கப்படுகிறது. அதில் காப்பீட்டுப் பிரிவு, மருந்துகள், மருத்துவ பெருநிறுவனங்கள் ஆகியவை அடங்கும். இவை அனைத்தும் ஜனநாயகக் கட்சியாயினும், குடியரசுக் கட்சியாயினும் அரசாங்கத்தின் கொள்கைகளை முக்கிய தீர்மானிப்பவையாகும்.

பெருமந்த நிலைக்குப் பிந்தைய அமெரிக்காவில் ஒபாமாவின் கருத்தின்படி ஒரு நிதியப் பிரபுத்துவம் சமூகச் செல்வத்தின்மீதான ஏகபோக உரிமையைத் தொடர்ந்து கொள்ளும். அதே நேரத்தில் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரங்கள் நிரந்தரமாக தாழ்த்தப்பட்டுவிடும். "பெருமந்த நிலைக்கு" பிறகு அமெரிக்கா பற்றிய பேட்டி முழுவதிலும், ஒரு இடத்தில்கூட அமெரிக்க வாழ்வின் அனைத்துக் கூறுபாடுகளிலும் மேலாதிக்கம் செலுத்தும் சமூகச் சமத்துவமின்மை பற்றிய எவ்வித குறிப்பும் இல்லை.

வேலையின்மை, வீடுகள் இன்மை, வறுமை ஆகியவை கிட்டத்தட்ட பெருமந்த நிலைக்கால தரத்திற்கு வந்துள்ள நிலையிலும் வோல் ஸ்ட்ரீட் நல்ல முன்னேற்றம் கண்டிருக்கும் நேரத்தில் வெளிவந்துள்ள இப்பேட்டி ஒபாமா நிர்வாகத்தின் அப்பட்டமான வலது சாரித் தன்மை, அது உதவும் வர்க்க நலன்கள் ஆகியவற்றை நிரூபணம் செய்கிறது. வங்கியாளர்களும் ஊக வணிகர்களும் தங்கள் நலன்களுக்கு பெரிதும் உதவும் நிர்வாகம் பற்றி ஏன் மகிழ்ச்சி கொண்டுள்ளனர் என்பதையும் இது காட்டுகிறது.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved