World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : கலை விமர்சனம்

International protests against arrest of film director Roman Polanski

திரைப்பட இயக்குனர் ரோமன் போலன்ஸ்கியின் கைது நடவடிக்கைக்கு எதிரான சர்வதேச போராட்டங்கள்

By Barry Grey
28 September 2009

Back to screen version

ஆஸ்கார் விருது பெற்ற திரைப்பட இயக்குனர் ரோமன் போலன்ஸ்கி, சனியன்று இரவு கைது செய்யப்பட்டதை அடுத்து, சர்வதேச அளவில் அதிர்ச்சி வெளிப்பாடுகளும், கோபமும் அதிகரித்து வருகின்றன. Rosemary's Baby, Chinatown மற்றும் The Pianist (இந்த படம் 2002ல் அவருக்கு ஆஸ்கார் விருதைப் பெற்று தந்தது) போன்ற திரைப்படங்களின் இயக்குனரான 76 வயது நிரம்பிய போலன்ஸ்கி, சூரிச் திரைப்படவிழாவில் வாழ்க்கை முழுவதற்குமான சாதனையாளர் விருதைப் பெற வந்தபோது, சூரிச் விமானத்தளத்தில் சுவிஸ் போலீசாரால் கைது செய்யப்பட்டார். அமெரிக்க நீதித்துறையின் கட்டளைக்கிணங்க சுவிஸ் அதிகாரிகள் செயல்பட்டிருந்தார்கள்.

போலன்ஸ்கியின் கைது குறித்து, திரைப்பட விழா ஒருங்கிணைப்பாளர்கள் தங்களின் "ஆழ்ந்த அதிர்ச்சியையும், திகைப்பையும்" வெளியிட்டார்கள். இதுவொரு விசித்திரமான கேலிக்கூத்து, மாபெரும் கலாச்சார மோசடி என்று சுவிஸ் இயக்குனர்களின் கூட்டமைப்பு குறிப்பிட்டது. திரைப்பட இயக்குனர்கள் மற்றும் திரைக்கதை எழுத்தாளர்களின் சுவிஸ் கூட்டமைப்பு, "இந்த நடவடிக்கை சுவிட்சர்லாந்தின் ஒட்டுமொத்த கலாச்சார சமூகத்தின் முகத்தில் அறையப்பட்ட ஓர் அறை" என்று கூறியது.

"மோசமான இந்த நடவடிக்கை மொத்தத்தில் அநியாயமானது," என்று பிரான்சின் கலாச்சார மந்திரி பிரடரிக் மிட்டராண்ட் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், "பெருந்தன்மையான ஓர் அமெரிக்காவைத் தான் நாங்கள் விரும்புகிறோம், ஆனால், அச்சுறுத்தும் ஓர் அமெரிக்கா தான் இருக்கிறது, அந்த அமெரிக்கா தான் அதன் முகத்தைக் இப்போது காட்டியிருக்கிறது" என்றார்.

போலந்து வெளியுறவு மந்திரி Radoslaw Sikorski கூறுகையில், அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவிடம் போலன்ஸ்கிக்காக கருணை மனு அளிக்க யோசித்து வருவதாக தெரிவித்தார். பிரான்சின் வெளியுறவு மந்திரி பெர்னார்ட் குஷ்னர் கூறுகையில், போலன்ஸ்கியின் உரிமைகள் முழுவதும் மதிக்கப்படவும், ஒரு "சாதகமான தீர்வை" விரைவில் கொண்டு வரவும், சுவிஸ் அதிகாரியைக் கேட்டு கொண்டிருப்பதாக தெரிவித்தார்.

போலன்ஸ்கியை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன், அமெரிக்க அரசாங்கத்தின் மீதான கோபமும், அமெரிக்காவின் கோரிக்கைகளுக்கு கீழ்படியும் சுவிஸ் அரசாங்கத்தின் மீதான கோபமும் ஒன்று சேர்ந்திருக்கிறது.

போலன்ஸ்கி எங்கு காவலில் வைக்கப்பட்டிருக்கிறார் என்பது குறித்து சுவிஸ் அதிகாரிகள் தெரிவிக்க மறுத்துவிட்டார்கள். அமெரிக்காவிடம் ஒப்படைக்கும் வரை, அவர் "தற்காலிக காவலில்" வைக்கப்பட்டிருப்பதாக அவர்கள் தெரிவித்தார்கள். ஞாயிறன்று, போலன்ஸ்கியின் வழக்கறிஞர் கூறுகையில், அமெரிக்காவிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற அதன் கோரிக்கையை தாம் எதிர்க்கப் போவதாக தெரிவித்தார்.

31 ஆண்டுகளுக்கு முந்தைய கைது ஆணையின் அடிப்படையில், போலன்ஸ்கியை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அமெரிக்கா கோரி வருகிறது. 13 வயதுடைய ஒரு சிறுமி மீதான பாலியல் பலாத்காரம் சம்பந்தமாக, சிறைத் தண்டனை கிடைக்க கூடும் என்ற நிலையில் அமெரிக்காவை விட்டு போலன்ஸ்கி தப்பி சென்ற பின்னர், 1978ல் அந்த கைது ஆணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.

அந்த சிறுமி பருவமடையாதவள் என்று தெரிந்திருந்தபோதிலும், போலன்ஸ்கி குற்றச்சாட்டை மறுத்தார். ஆனால், வழக்கு வாதத்தின் ஒரு பகுதியாக, "வயதுவராத ஒருவருடன் சட்டவிரோதமாக பாலியல் பலாத்காரத்தில்" ஈடுபட்டதற்காக குற்றஞ்சாட்டப்பட்டார். வழக்கு விசாரணையில் நீதிபதி தன்னைக் காப்பாற்ற மாட்டார் மற்றும் ஒரு நீண்டகால சிறைவாசம் ஏற்படும் என்று பயந்து, அவர் நாட்டை விட்டு வெளியேறினார். பிரான்சை சேர்ந்தவரான அவர், பிரான்சில் இடையிடையில் வாழ்ந்து வந்தார், அவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.

லொஸ் ஏஞ்சல்ஸில் உள்ள மாவட்ட நீதிபதி அலுவலகம், அமெரிக்க சட்டத்துறையின் ஆதரவுடன், போலன்ஸ்கியை துரத்திக் கொண்டிருக்கிறது. இதன் மூலம், அமெரிக்காவுடன் குற்றவாளிகளை ஒப்படைக்கும் வலுவான உடன்பாடுகளைக் கொண்ட பிரிட்டன் போன்ற நாடுகளை அவர் தவிர்க்கத் தள்ளப்பட்டார். 2005ல், அமெரிக்கா போலன்ஸ்கிக்கு ஒரு சர்வதேச கைது ஆணையை வெளியிட்டது. இதன் அடிப்படையில் தான் சுவிஸ் அரசாங்கம் வெளிப்படையாக இந்த சட்டரீதியான நடவடிக்கையை எடுத்துள்ளது.

போலன்ஸ்கி மீதான 1978 ம் ஆண்டு வழக்கில், வழக்கு மற்றும் சட்ட நெறியாள்கை தவறாக பயன்படுத்தப்பட்டது என்ற வாதங்களின் அடிப்படையில் கடந்த ஆண்டு முழுவதும், போலன்ஸ்கியின் வழக்கறிஞர்கள் அவருக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்ய விரும்பினார்கள். 2008ல் வெளியான, Roman Polanski: Wanted and Desired என்ற ஆவணப்படத்தில், போலன்ஸ்கிக்கு தண்டனை வழங்கும் வழக்கு தீர்ப்பிற்கு தாம் ஆலோசனை வழங்கி இருந்ததாக லொஸ் ஏஞ்சல்ஸின் வழக்கறிஞர் ஒருவர் பேட்டி அளித்திருந்தார். இந்த ஆண்டு ஆரம்பத்தில், இந்த வழக்கில் தவறுகள் நடந்திருப்பதற்கு உத்தியோகப்பூர்வமாக "கணிசமான" ஆதாரங்கள் இருப்பதாக ஓர் அமெரிக்க நீதிபதி ஒப்புக்கொண்டார். ஆனால், போலன்ஸ்கி அமெரிக்காவிற்கு திரும்பி வந்து நீதிமன்றத்தின் முன் ஆஜரானால் மட்டுமே, தன்னால் தீர்ப்பைச் சொல்ல முடியும் என்று அவர் கூறினார்.

அதே மாதத்தில், 1977ல் போலன்ஸ்கியால் பாதிக்கப்பட்டதாக கூறப்பட்ட அந்த பெண் சமந்தா கிய்மெர், (தற்போது அவருக்கு வயது 44, திருமணம் செய்து கொண்டு மூன்று குழந்தைகளுக்கு தாயாக இருக்கிறார்), பல ஆண்டுகளின் விளம்பரங்கள், அதனோடு வழக்கறிஞர்களின் அருவருப்பான கேள்விகள் இவற்றால் தாமும், தம் குடும்பமும் வேதனை அடைந்திருப்பதாக கூறி, போலன்ஸ்கி எதிராக அபராதங்கள் அளிக்க வேண்டும் என்று வழக்கு தொடர்ந்திருந்தார். ஆனால், வெளிப்படையாகவே அந்த இயக்குனரை மன்னித்துவிட்ட அந்த பெண்மணி, போலன்ஸ்கிக்கு எதிராக அமெரிக்க அரசாங்கம் அதன் வஞ்சத்தைக் கைவிட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

போலன்ஸ்கிக்கு சுவிட்சர்லாந்தில் ஒரு வீடும் இருக்கிறது, அவர் அடிக்கடி அங்கு பயணம் செய்திருக்கிறார். இருந்தும் அவரின் கைது நடவடிக்கை இயல்புக்கு மீறியதாகவும், ஏதோ விருப்பத்திற்குட்பட்டு நடந்திருப்பதாகவும் இருக்கிறது. லொஸ் ஏஞ்சல்ஸ் மாவட்ட நீதிபதி அலுவலகத்தின் ஒரு செய்தி தொடர்பாளர் இதுபற்றி கூறுகையில், போலன்ஸ்கி சூரிச்சிற்கு செல்வார் என்பதை அலுவலகம் அறிந்து கொண்ட உடனே உத்தியோகப்பூர்வமான ஒரு கைது ஆணையை ஒபாமா நிர்வாகத்தின் சட்டத்துறைக்கு அனுப்பியது, அது சுவிஸ் அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டது.

சோகத்தின் பிடியில் மாட்டிக் கொண்ட ஒரு வாழ்க்கையின் சமீபத்திய அத்தியாயம்தான் போலன்ஸ்கியின் கைது நடவடிக்கையாகும். பிரான்சில் பிறந்த போலந்து யூதரான அவர், குடும்பத்துடன் 1936ல் Krakow ற்கு இடம் பெயர்ந்தார். நாஜி ஜேர்மனி போலந்தை ஆக்கிரமித்த பின்னர், அவரும் அவரது குடும்பமும் Krakow Ghetto விற்கு தள்ளப்பட்டார்கள். அவரது தாயும், தந்தையும் நாஜி மரண முகாம்களுக்கு கொண்டு செல்லப்பட்டதை அவர் பார்த்தார். அவரது தாயார் அவுஸ்விட்ஸ் (Auschwitz) சித்திரவதை முகாமில் மரணமடைந்தார். அவரது தந்தையார் Mauthausen-Gusen முகாமில் வாழ்ந்து கொண்டிருந்தார். 1943ல் அவர் Krakow Ghetto வில் இருந்து தப்பி ஓடி, போலந்து கத்தோலிக்க குடும்பங்களின் உதவியால் யுத்தத்தில் இருந்து தப்பித்துக் கொண்டார்.

அவரின் சுய அனுபவங்கள் The Pianist திரைப்படத்தில் முழுமையாக பிரதிபலித்திருந்தது. நாஜி படுகொலைகளில் இருந்து தப்பிப்பதற்கான ஒரு போலந்து யூத கலப்பு பியானிஸ்ட் கலைஞனின் கடுமையான போராட்டத்தை அந்த படம் சித்தரித்திருந்தது.

1969ல், அவரின் கருவுற்றிருந்த மனைவியான நடிகை ஷரோன் டேட், ஹாலிவுட் ஹில்ஸில் இருந்த போலன்ஸ்கியின் வாடகை வீட்டை உடைத்து கொண்டு உள்ளே நுழைந்த சார்லஸ் மேன்சனின் "குடும்பத்தால்" கொடூரமாக கொலை செய்யப்பட்டார். அப்போது போலன்ஸ்கி இலண்டனில் இருந்தார்.

தனிப்பட்ட சோக சூழ்நிலைகள் அவற்றின் கொடூரத்தைக் கொஞ்சமும் குறைக்காத நிலையில், அமெரிக்க அதிகாரிகளும் அந்த திரைப்பட இயக்குனரைப் பின்தொடர்ந்து கொண்டிருந்தார்கள்.

அமெரிக்காவை விட்டு வெளியேறிய பின்னர், போலன்ஸ்கி பிரான்சில் வசித்து வந்தார். போலந்து, ஜேர்மனி மற்றும் பிற நாடுகளுக்கும் அடிக்கடி சென்று வந்த அவர், அங்கெல்லாம் அமெரிக்காவிடம் ஒப்படைப்பதற்கான வாய்ப்புகள் குறைவாக இருப்பதைக் கண்டார். The Pianist படத்தை எடுத்த இடத்திற்கு அருகிலேயே ஜேர்மனியின், பாபல்ஸ்பெர்க்கில் கடந்த வசந்தகாலத்தில் அவர் எடுத்த The Ghost என்ற படம் உட்பட, அவர் படங்களை உருவாக்குவதில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார்.

நியூயோர்க் டைம்ஸ் கருத்துப்படி, இந்த படம் "ஒரு புனை எழுத்தாளரைப் பற்றிய திகல் படமாகும். ஒரு முன்னாள் பிரிட்டிஷ் பிரதம மந்திரியின் வாழ்க்கை வரலாற்றை எழுதி முடிக்கும் போது, அதில் வெளிப்படும் இரகசியங்களால் அந்த எழுத்தாளருக்கு ஏற்படும் இடையூறுகளைப் பற்றியது இந்த படம்". போலன்ஸ்கி கைது செய்யப்பட்டிருப்பதால், அந்த படத்திற்கு தடைகள் விதிக்கப்படக் கூடும்.

கடந்த பல ஆண்டுகளாக போலன்ஸ்கியுடன் பணியாற்றி வரும் ஒரு பிரிட்டிஷ் நாவலாசிரியரும், இரண்டு திரைக்கதைகள் எழுதி வருபவருமான ரோபர்ட் ஹாரிஸ், இந்த இயக்குனரின் கைது குறித்து அவரின் வெறுப்பை வெளிப்படுத்தினார். அவர் ஓர் அறிக்கையில், "நான் அதிர்ச்சி அடைந்து போனேன், 76 வயதான ஒருவரை, கொஞ்சமும் மரியாதை பார்க்காமல், இப்படியா நடத்துவது" என்று குறிப்பிட்டிருந்தார். அவர் மேலும் கூறுகையில், "இந்த நடவடிக்கை ஏதோவொரு வகையில் அரசியல்ரீதியான உள்நோக்கத்தைக் கொண்டிருக்கிறது என்பதை நம்புவது கடினமாக இல்லை," என்றார்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved