World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : கலை விமர்சனம்

Brillante Mendoza discusses Lola

Lola திரைப்படம் குறித்து பிரெலெண்ட் மிண்டோசா பேசுகிறார்

By Richard Phillips
10 July 2010

Back to screen version

கடந்த ஐந்து ஆண்டுகளில் The Masseur, Kaleldo, Manoro, Pantasya, Foster Child, Tirador, Serbis, Kinatay ஆகிய ஒன்பது படங்களைப் பிலிப்பைன்ஸ் இயக்குனர் பிரெலெண்ட் மிண்டோசா இயக்கி உள்ளார். சிட்னி திரைப்பட விழாவின் போது, அவருடைய சமீபத்திய திரைப்படமான Lola குறித்து அவர் உலக சோசலிச வலைத் தளத்துடன் பேசினார்.

ரிச்சர்டு பிலிப்ஸ்: உங்களுடைய திரைப்படங்களுக்கும், பிலிப்பைன்ஸின் ஏனைய பிரபலமான சினிமாவிற்கும் இடையிலான வித்தியாசத்தை விளக்குங்களேன்? மேலும் உங்களுக்கென பிரத்யேக அணுகுமுறையை நீங்கள் எப்படி உருவாக்கினீர்கள்?

பிரெலெண்ட் மிண்டோசா: பிலிப்பைன்ஸில் காட்டப்படும் ஒரேமாதிரியான திரைப்படங்களில் இருந்து என்னுடைய படங்கள் முற்றிலும் வேறுபட்டவை. அதாவது பல்வேறு உணர்ச்சிபூர்வமான கதைகளையும், அவை நட்சத்திரங்களோடு தொடர்புடைய முறையையும் நான் குறிப்பிடுகிறேன். தொழில்முறையிலான நடிகர்களை நான் பயன்படுத்தினாலும் கூட, பொதுவாக நான் பிரபலமானவர்களைப் பயன்படுத்துவதில்லை. பிரபலமான நட்சத்திரங்களைப் பயன்படுத்தினால், என்னுடைய திரைப்படங்களில் நான் வளர்த்தெடுக்க முயலும் முயற்சிகளில் அவர்கள் அவர்களுடைய நடிப்பு பாணியைக் கையாள்வார்கள். ஆனால் என்னுடைய பணி முற்றிலும் வேறுபட்டது. மேலும் கதைகளை அணுகும் என்னுடைய அணுகுமுறையும், காட்சியமைப்பு அணுகுமுறையும் ஏதோவொரு வகையில் சாதாரண பார்வையாளர்களுக்கு புதிதாக இருக்கும்.

பிலிப்பைன்ஸில் என்னுடைய திரைப்படங்கள் பிரபலமாக இருக்கின்றனவா என்று நீங்கள் கேட்டால், நிச்சயமாக இல்லை. ஆனால் என்னுடைய படங்களையும், என்னுடைய திறமையையும் அங்கீகரிக்கும் மக்களும் இருக்கிறார்கள். நிச்சயமாக அவற்றை சிலர் பார்த்து வருகிறார்கள். மேலும் என்னுடைய படங்கள் திரையரங்குகளில் வெளியிடப்பட்டால், அவை வெகு குறைந்த நாட்களே ஓடும்.

என்னுடைய படங்கள் பாடசாலைகளில் காட்டப்பட வேண்டும் என்பதே என்னுடைய திட்டம். என்னுடைய திரைப்படங்கள் வெகுஜன சினிமாகூடங்களில் காட்டப்படுவதை விட அவை பாடசாலைகளில் காட்டப்படும்படி செய்வதில் நான் மிகவும் ஆர்வமாக இருக்கிறேன். ஒரு வெகுஜன திரையரங்கத்தில் எந்தவொரு திரைப்படத்தையும் காட்ட, அதன் விளம்பரத்திற்காகவும், ஊக்குவிப்புக்காகவும் உண்மையில் நீங்கள் நிறைய பணம் செலவழிக்க வேண்டியதிருக்கும். இதற்கு நிறைய பணம் தேவை. ஆனால் அது என்னிடம் இல்லை. பிலிப்பைன்ஸ் தரங்களோடு ஒப்பிட்டாலும் கூட, பெரும்பாலான என்னுடைய படங்கள் மிகக் குறைந்த-செலவில் தயாரிக்கப்பட்டவை.

திரைப்பட நட்சத்திரங்களுக்கு காட்டுவதற்கு பதிலாக, பல்கலைக்கழகங்களிலும், உண்மையிலேயே திரைப்படங்களைக் காண வரும் மக்களின் அமைப்புகளுக்கும் காட்டுவதே எனக்கு நிறைவாய் இருக்கிறது. அதன்மூலம் பாராட்டைப் பெறுவதற்குத் தான் நான் முயற்சிக்கிறேன்.

ரிச்சர்டு: Lola திரைப்படத்தில் தொழில்ரீதியான நடிகர்களைப் பயன்படுத்தினீர்களா?

மிண்டோசா: அதில் இடம்பெற்றிருக்கும் lolaகள் [பாட்டிகள்] இருவருமே தொழில்ரீதியான நடிகைகள் தான். அனிதா லிண்டா சுமார் 200 திரைப்படங்களில் நடித்துள்ளார்—அவர் 1940கள் மற்றும் 1950களில் இருந்து நடித்து வருகிறார். மற்றொருவரான ருஸ்டிகா கார்பியோ, 1970களின் போது அதிகளவிலான படங்களில் நடித்து கொண்டிருந்தார். மேலும் இவர் லினா புரோக்காவின் (Lina Brocka) திரைப்படங்களிலும் தோன்றி இருந்தார். உங்களுக்கு புரோக்காவைத் தெரியுமா என்று எனக்குத் தெரியாது. துரதிருஷ்டவசமாக, பிலிப்பைன்ஸிற்கு வெளியே பெரும்பாலும் அவர் அறியப்படாமலேயே இருக்கிறார்.

மேலும் ஏனைய அனைத்து திரைப்படத் துறைகளைப் போலவே, தொலைக்காட்சியில் கிடைக்கும் சில வேடங்களைத் தவிர, வயதான நடிகைகள் வெகு குறைவான வாய்ப்புகளையே பெறுகிறார்கள். Lola இல் செய்திருப்பதைப் போன்று, வயதான பெண்கள் திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க எப்போதாவது தான் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

ரிச்சர்டு: Lolaவைச் செய்ய எது உங்களை உந்தியது?

மிண்டோசா: என்னுடைய கதைகள் அனைத்துமே நிஜ மனிதர்களைப் பற்றியது. எடுத்துக்காட்டாக, நானும் என்னுடைய கதாசிரியரும் ஒரு தொலைக்காட்சி செய்தியைப் பார்த்தோம். யாரோ ஒருவரை எதிர்பாராதவிதமாக கொன்றதற்காக சிறையில் அடைக்கப்பட்ட தன்னுடைய பேரனை விடுவிக்க உதவியைக் கோரும் ஒரு பாட்டியைக் குறித்து அந்த செய்தி குறிப்பிட்டது. பின்னர், இதேபோன்று இன்னொரு விஷயத்தையும் கேள்விப்பட்டோம். அதாவது இறந்துபோன தன்னுடைய பேரனை எரிக்க பிச்சையெடுக்கும் வயதான ஒரு பெண்மணியைக் குறித்தது அது. இந்த இரண்டு கதைகளையும் நாங்கள் ஒன்றிணைத்து, ஒரே திரைக்கதையில் கொண்டு வர முயன்றோம். இவ்வாறு தான் அந்த கதை உருவானது. ஆனால், நிச்சயமாக அவற்றில் சில மாற்றங்களையும் செய்திருந்தோம்.

Lola கதை மூன்று ஆண்டுகளுக்கு முன்னாலேயே உருவாக்கப்பட்டுவிட்டது. ஆனால் அதைப் படமாக்க ஒரு தயாரிப்பாளரும் கிடைக்கவில்லை. அதை நான் பல சர்வதேச திரைக்கதை வளர்ச்சி நிதியத்திடமும் சமர்ப்பித்தேன். ஆனால் [2009இல் வெளியான Kinatayக்காக] கேனஸில் நான் வெற்றி பெறும் வரையில், எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அதற்கு பின்னர் தான், இந்த படத்தை நாம் செய்தே ஆக வேண்டும் என்று என்னுடைய தயாரிப்பாளரை என்னால் ஒப்புக்கொள்ள வைக்க முடிந்தது.

ரிச்சர்டு: அந்த கதையைக் குறித்து இன்னும் கொஞ்சம் விரிவாக கூற முடியுமா?

மிண்டோசா: அது தங்களுடைய இறுதி காலத்தில் வாழும் இரண்டு பெண்களைப் பற்றிய கதை. அதில் அவர்கள் தங்களின் பாசத்திற்குரியவர்களுக்கு உதவ முயற்சிக்கிறார்கள். இது வெறுமனே வறுமையைப் பற்றியது மட்டுமல்ல, மாறாக பெரும் உடல்வலிமை இல்லையென்றாலும், நிறைய மன வலிமையைக் கொண்டிருக்கும் அந்த வயதான பிலிப்பினோ பெண்களின் நெகிழ்ச்சியைப் பற்றியது.

நீங்கள் ஏழையாக இருந்தால், உங்கள் முன்னால் நிறைய வாய்ப்புகள் இருக்காது. இதைத் தான் நீங்கள் இந்த படத்தில் பார்க்கிறீர்கள். குறைந்த அதிஷ்டமும், குறைந்த சலுகைகளும் கொண்டவர்களுக்கு, வாழ்க்கை மிகவும் சிரமமாக இருக்கும். நடைமுறையிலிருக்கும் சமூகம் எதை சரியென்றும், நல்லதென்றும் நம்புகிறதோ அதற்கு எதிராக இருந்தாலும் கூட, இந்த நிஜத்தை என்னுடைய திரைப்படங்களில் நான் காட்ட விரும்புகிறேன்.

நான் உண்மையை நம்புவதால் இது தான் என்னுடைய அணுகுமுறையாக இருக்கிறது. என்னால் முடிந்த வரையில் என்னுடைய படங்களை நான் நேர்மையோடு செய்ய முயல்கிறேன். நடிப்பு மட்டும் உண்மையாக இருக்க வேண்டும் என்றில்லாமல், ஒளிப்பதிவு, தயாரிப்பு வடிவம் மற்றும் ஏனைய பிற விஷயங்களும் இவ்வாறு இருக்க வேண்டும். மேலும் என்னுடைய அனைத்து படங்களிலேயுமே, குறிப்பிட்ட சமூகங்கள் ஒரு பெரும் பங்கு வகிக்குமாறு செய்ய நான் முயற்சிக்கிறேன். உண்மையில் அவர்களுடைய வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்வதற்கு இது அவசியமாக இருக்கிறது. எடுத்துக்காட்டாக, Lolaஇல் மழை குறித்து நிறைய காண்பிக்கப்பட்டிருக்கும். இந்த சமூகங்களுக்கு என்ன மாதிரியான சிக்கல்களை இது உருவாக்குகிறது என்பதைக் காட்டுவதற்காகவே நான் இதைச் செய்தேன். அந்த சூழ்நிலையின் தாக்கத்தையும், தண்ணீரின் தொடர்ச்சியான ஓட்டத்தையும் நான் கொண்டு வர விரும்பினேன். வாழ்விற்கும், சாவிற்கும் மழை ஒரு மறைமுக காரணியாக (metaphor) இருக்கிறது. அது வாழ்விற்கு ஆதாரமாக இருக்கிறது. ஆனால் அதேநேரத்தில் அது பேரழிவிற்கும், நாசத்திற்குமான ஆதாரமாகவும் இருக்க முடியும். இது மணிலாவில் மட்டுமல்ல, மாறாக உலகின் பல பாகங்களில் இவ்வாறு நடக்கிறது.

ரிச்சர்டு: ஒரு நீதிமன்ற தீர்ப்பிற்காக, இரண்டு வயதான பெண்கள் சமுதாய சுழ்நிலைகளால் விரட்டப்படுகிறார்களே, அதுகுறித்து விளக்க முடியுமா?

மிண்டோசா: இது ஏனென்றால், அவர்கள் ஏழைகள்; அவர்களால் வழக்கறிஞர்களை ஏற்பாடு செய்ய முடியாது—ஒரு பாட்டியால் அவருடைய கொலை செய்யப்பட்ட பேரனின் சடலத்தை எரிப்பதற்குத் தேவையான செலவைக் கூட செய்ய முடியவில்லை—ஆகவே அவர்களுக்கு குறைந்த வாய்ப்புகள் தான் இருக்கின்றன. பணக்காரர்களுக்கு, இந்த சிக்கல்கள் ஒரு பிரச்சினையே இல்லை. நான் என்ன கூற முயல்கிறேன் என்றால், நீதி என்றழைக்கப்படுவது கூட, வாழ்க்கையில் உங்களுடைய அந்தஸ்தை வைத்து தான் தீர்மானிக்கப்படுகிறது.

ரிச்சர்டு: நீங்கள் காட்டியிருப்பதில், சிறைச்சாலைகளில் இளைஞர்களின் கூட்டம் மூர்க்கத்தனமாக நிரப்பப்பட்டிருக்கிறதே.

மிண்டோசா: ஆம், அது சரிதான். சிறைச்சாலைகளின் நிலைமைகள் மற்றொரு பெரிய கதை என்பது உண்மை தான். ஆனால் அந்த சூழ்நிலையில் எதை கொண்டு வர வேண்டுமோ, அதன் ஒரு சிறுதுணுக்கை மட்டும் தான் என்னுடைய படம் அளித்திருந்தது.

ரிச்சர்டு: உங்களுடைய சினிமாத்துறை தாக்கங்கள் குறித்து கருத்து கூற முடியுமா?

மிண்டோசா: நேர்மையோடு கூற வேண்டுமானால், நான் எப்போதுமே சிறந்த ஹாலிவுட் திரைப்பட இயக்குனர்களைத் தான் என்முன்னால் பார்ப்பேன். நான் தொலைக்காட்சி விளம்பரங்களில் இருந்து தொடங்கி, ஒரு தயாரிப்பு வடிவமைப்பாளராக முக்கிய வேலைகளையும் செய்திருக்கிறேன். பிரபல இயக்குனர்கள் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர்களிடமிருந்து எனக்கு பயிற்சி கிடைத்தது. ஆனால் The Masseur படமாக்க தொடங்கிய போது தான் நான் என்னுடைய சொந்த பாணியை உருவாக்கினேன். ஒவ்வொரு காட்சிக்கு முன்னரும், “இது செய்யக்கூடிய சரியான விஷயம் தானா, நான் உண்மையாக இருக்கிறேனா, இதைத் தான் நான் திரையில் பார்க்க விரும்புகிறேனா?” என்று என்னை நானே கேட்டுக் கொள்வேன். ஒவ்வொரு படத்திலும் நான் கற்றுக் கொண்டே வருகிறேன் என்பதுடன், என்னுடைய விஷய ஞானத்தாலும், கதாப்பாத்திரங்களாலும் நான் தெளிவடைந்து வருகிறேன்.

நான் எப்போதும் கற்றுக் கொண்டே இருக்க விரும்புவதால், எல்லாவிதமான திரைப்படங்களையும் பார்ப்பேன். ஆனால் 1990களின் பிந்தைய பகுதிக்குப் பின்னர் அது அவ்வாறு இருக்கவில்லை. அதற்குப் பின்னர் இணையத்திலும், டிவிடி-களிலும் பார்த்தேன். அவ்வாறு தான் எங்களால் நல்ல சர்வதேச சினிமாக்களைப் பிலிப்பைன்சில் பார்க்க முடிந்தது. இதன் விளைவாக, நான் [பிரான்கோஸ்] ட்ருஃபாட் மற்றும் [விட்டோரியோ] டி சிகோவைக் காண நேரிட்டது. 400 Blows திரைப்படத்தை மூன்றாவது முறை பார்த்த பின்னர்—முன்னர் பார்த்த போது, நான் போதிய கவனம் செலுத்தவில்லை—அதன் முக்கியத்துவம் குறித்து மிக மிக தெளிவாக புரிந்து கொண்டேன். ஆகவே இந்த திரைப்பட தயாரிப்பாளர்களும், இத்தாலிய நவ-யதார்த்தவாதிகளும் என்னுடைய பணியில் பெறும் தாக்கத்தைக் கொண்டிருக்கிறார்கள்.