World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The stock market bonanza

பங்குச் சந்தையும் செல்வக்கொழிப்பும்

Barry Grey
6 March 2013

Back to screen version

ஜனாதிபதி பாரக் ஒபாமா சமூகநலத் திட்டங்களில் மிருகத்தனமான வெட்டுக்களைக் கட்டவிழ்த்துவிட்ட வரவு-செலவுத் திட்ட ஒதுக்குதல்  உத்தரவில் கையெழுத்திட்டு நான்கு நாட்களுக்குப் பின்னர், 2007 இல் அளவிடப்பட்ட அதன் முன்னைய உயர்ச்சியைவிட கூடுதல் அளவை அடைந்ததால் செய்தி ஊடகத்தில் பொதுவான களிப்பு காணப்பட்டது.

இந்த இடைப்பட்ட காலம் அமெரிக்காவில் உள்ள ஏராளமான தொழிலாளர்கள் உட்பட பெரும்பாலான மனிதகுலத்திற்கு சற்றும் கடுமை குறைவற்ற பேரழிவுக் காலம் ஆகும். சமூக வீழ்ச்சி மற்றும் துன்பங்கள் எல்லா இடங்களிலும் உள்ளன. வேலையின்மை கிட்டத்தட்ட மந்தநிலை மட்டத்திற்கு அண்ணளவாக உள்ளது. வறுமை, பட்டினி, வீடின்மை ஆகியவை அதிகரித்துக்கொண்டிருக்கின்றன. வேலையில் இருக்கும் தொழிலாளர்களும் இன்னும் குறைந்த ஊதியங்களுக்கும், குறைவான நலன்களுக்கும் கடினமாகவும், அதிகமாகவும் உழைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. புதிதாக வேலைக்கு எடுக்கப்பட்டுள்ள கார்த்தயாரிப்புத்துறை தொழிலாளர்களின் சம்பளங்களின் வாங்கும் சக்தி, 1930களில் இருந்த நிலைமை அல்லது அதற்கும் குறைவாகத்தான் உள்ளது.

ஆயிரக்கணக்கான பள்ளிகள் மூடப்பட்டுவிட்டன, நூறாயிரக்கணக்கான ஆசிரியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுவிட்டனர், பொதுக் கல்வி முறை குப்பையில் போடப்பட்டு, இலாப முறை பட்டயப் பள்ளிகளுக்கு இடமளிக்கப்பட்டுள்ளது.

உலகின் கார்த்தயாரிப்புத் துறையின் மையமாகவும் ஒருகாலத்தில் வசதியாக இருந்த பெருநகரமான டெட்ரோயிட் வறிய, பாழான நிலைக்கு மாற்றப்பட்டு அதன் குடிமக்கள் மூன்றாம் உலக நாட்டு நிலைமைகளை எதிர்நோக்குகின்றனர். இது இப்பொழுது வங்கியாளர்களின் சர்வாதிகாரத்தின் கீழ் இருத்தப்பட உள்ளதுடன், அநேகமாக திவால்நிலைக்கும் தள்ளப்படலாம்.

செவ்வாயன்று நியூயோர்க் பங்குச்சந்தை புதிய உயர்வுகளைக் காண்கையில், வீடற்றோருக்கான நியூயோர்க் கூட்டணி வேறுவித அதிகரிப்பைத்தான் காட்டியுள்ளது. ஜனவரி மாதம் சராசரியாக 50,000க்கும் மேற்பட்ட மக்கள் ஒவ்வொரு நாளும் நகரத்திலுள்ள வீடற்றோர் புகலிடத்தில் உறங்கினர். இதில் நகரத்தின் இளையவர்களில் 1%க்கும் மேற்பட்ட 21,000க்கும் மேற்பட்ட குழந்தைகளும் இருந்தனர்.

இப்பொழுது அமெரிக்க அரசாங்கம், வெட்டுக்களில் ஒதுக்கப்பட்ட நிதியை முன்பணமாக வைத்துக் கொண்டு, முக்கிய சமூகநலத் திட்டங்களை அகற்றத் தயாரிப்பு செய்கின்றது. இவை 1930கள், 1960 களின் சீர்திருத்தங்களான Medicare, Medicaid, சமூகப்பாதுகாப்பு ஆகியவற்றில்  எஞ்சியிருப்பதையும் அகற்றும்.

மாபெரும் அளவிலான நிதிய மோசடி மற்றும் குற்றத்தின் விளைவான செப்டம்பர் 2008ன் வோல் ஸ்ட்ரீட் சரிவு சமூக எதிர்ப்புரட்சியைத் தொடக்கியது. ஆயினும்கூட, அவை கட்டவிழ்த்துவிட்ட சமூக சுனாமியின் இடிபாடுகள் இன்னும் வந்து கொண்டிருக்கும் நிலையில், இன்று நிதியப் பிரபுக்கள் அவர்களுடைய மிகப் பெரிய இலாபங்களைக் கொண்டாட முடிகின்றது.

இதை எப்படி விளக்குவது?

செய்தி ஊடகம் இதற்கு விளக்கம் ஏதும் கொடுக்கவில்லை. இணைய தள விமர்சகர்கள், தங்கள் 6, 7 இலக்கு ஊதியங்கள், பெருகும் பணப்பைகளுடன், புதிய பங்குச் சந்தை உயர்வை ஒரு தேசிய சாதனை போல் பாராட்டுகின்றனர். அனைவருமே ஒன்றாக களிக்கின்றனர்!

உண்மையில், வோல் ஸ்ட்ரீட்டில் காணப்படும் உயர்மட்டங்கள் நிதியச் சரிவிற்குக் காரணமான அதே ஒட்டுண்ணிகள் அன்றிலிருந்து நடத்திய சமூக வளங்களின் திருட்டின் அளவிற்கு ஓர் மதிப்பீடுதான்.

பெருநிறுவனங்கள் மற்றும் வங்கிகள் அடையும் வெறுப்பூட்டும் இலாபங்கள், தலைமை நிர்வாகிகள் தமக்கே வழங்கிக்கொள்ளும்  பாரிய ஊதியத் தொகைகளும், பெரும் வேலையின்மை, சிக்கனம் இவற்றிற்கு மத்தியில் நிதியச் சொத்துக்களை திரிப்பதின் மூலம் நாணமற்ற முறையில் பெரும் செல்வங்களை அடைவது பற்றி தீவிரமாக எழுப்பப்படவோ, வினாவிற்கு உட்படுத்தப்படவோ இல்லை. உத்தியோகபூர்வ கூற்றான சமூகத் தேவைகளுக்குபணம் இல்லைஎன்பதற்கும் வோல் ஸ்ட்ரீட்டிற்கு வழங்கப்படும் பெரும் தொகைகளுக்கும் இடையே உள்ள வெளிப்படையான முரண்பாடு பற்றிச் சிறு குறிப்புக்கள்கூட இல்லை.

எந்த முக்கிய வங்கியாளரோ, தனியார் முதலீட்டு ஊகவணிகரோ அவர்கள் கொண்டுவந்த வறுமைத்தரத்திற்காக, சிறையில் தள்ளப்படுவது ஒருபுறம் இருக்கட்டும் குற்றவாளி எனக் கூட குற்றம் சாட்டப்படவில்லை. அதேபோல் அவர்கள் ஏற்படுத்தியுள்ள ஏழ்மையும் அழிவும் இறப்பும் கணக்கிலடங்காதவை ஆகும் என்பது உண்மையே. மாறாக ஒபாமா நிர்வாகம், இரு அரசியல் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் உட்பட முழு உத்தியோகபூர்வ நிறுவனங்களின் பிரிவுகள் அனைத்தும், சரிவின்போது நிதியப் பிரபுத்துவும் இழந்த ஒவ்வொரு டாலரும் பல மடங்கு திருப்பிக் கொடுக்கப்பட வேண்டும் என்பதை உறுதிப்படுத்த செயல்பட்டன.

யாரால் இது திருப்பிக் கொடுக்கப்பட்டது? வரலாற்றில் அதனது  வாழ்க்கைத்தரங்கள் மீது நடத்தப்பட்ட மிகப் பெரிய தாக்குதல்கள் மூலம் அமெரிக்காவிலும் உலகெங்கிலும் உள்ள தொழிலாள வர்க்கத்தாலாகும்.  

இந்த ஆண்டுத் தொடக்கத்தில் இருந்து சிறுதடை கூட இல்லாமல் உயர்ந்துள்ள பங்குச் சந்தையின் சமீபத்திய ஏற்றம் ஒதுக்கப்பட்ட வெட்டுக்கள் நடத்தப்படும் என்ற உத்தரவாதத்தை வெள்ளை மாளிகையும் காங்கிரஸும் உறுதிப்படுத்தியுள்ளது என விவரம் அறிந்தவர்கள் கொடுத்துள்ளனர் என்ற உண்மையுடன் பிணைந்துள்ளது. பாங்க் ஆப் அமெரிக்காவின் முக்கிய நிர்வாகி நியூ யோர்க் டைம்ஸிடம் இந்த வாரம் கூறியதுபோல், “சந்தைக்கு இன்னும் சிக்கனம் தேவை.”

இன்னும் பரந்த அளவில், நெருக்கடியின் முதல் நாளில் இருந்தே அரசாங்கம் வங்கிகளுக்கு வரம்பற்ற நிதியங்களைக் கொடுத்து வந்துள்ளது. பல டிரில்லியன்கள் ரொக்கமாக வழங்கப்பட்டதைத் தவிர, கிட்டத்தட்ட வட்டியில்லாத கடன்களும் வழங்கப்பட்டது. கடன் உத்தரவாதங்களும் புஷ் மற்றும் ஒபாமா நிர்வாகத்தாலும் மத்திய வங்கிக்கூட்டமைப்பாலும் செப்டம்பர் 2008 சரிவை உடனடியாகத் தொடர்ந்து கொடுக்கப்பட்டன. மத்திய வங்கிக்கூட்டமைப்பு நிதியச் சந்தைகளின் இன்னும் பல டிரில்லியன்களை உட்செலுத்தியது. இதற்கு அதுபணப்புழக்கத்தை அதிகரிப்பதுஎன்ற பெயரில் டாலர் நாணயங்களை அச்சிட்டு வழங்கியது. இது தற்பொழுது மாதம் ஒன்றிற்கு 85 பில்லியன் டாலர்கள் என்ற அளவிற்கு உள்ளது. அதாவது ஆண்டிற்கு 1 டிரில்லியன் டாலருக்கும் மேலாக. இது மத்திய அரசாங்கத்தின் தற்போதைய  வரவு-செலவுத் திட்ட பற்றாக்குறையை தீர்க்க போதுமான நிதியாகும்.

மத்திய வங்கிக் கூட்டமைப்பு கடமையை பேணும் முறையில் மறுப்புக்களை தெரிவித்தாலும்கூட, அது உலக வரலாற்றில் மிகப் பெரிய நிதியக் குமிழிற்கு நிதி அளித்துவருகிறதுபங்குகள், பத்திரங்கள் இன்னும் பிற நிதியச் சொத்துக்கள் வடிவமைப்பில் மிகப் பெரிய பண்வீக்க விலைகள் அளவில். வெள்ளை மாளிகையும் காங்கிரஸும் உண்மையான வங்கிச் சீர்திருத்தங்களை சுமத்த மறுக்கையில், மத்திய வங்கிக்கூட்டமைப்பு நிதியச் சரிவிற்குத் தூண்டுதல் கொடுத்த பரபரப்பான ஊகவழிவகைகள் மூலம் ஏற்பட்ட இழப்பை ஈடு செய்ய இன்னும் பரந்த அளவில் நிதி கொடுக்க பச்சை விளக்கு காட்டியுள்ளது.

மற்றும் ஒரு, கூடுதலான பேரழிவைத் தரும் சரிவு வருவதற்கான நிலைமைகள் தோற்றுவிக்கப்படுகின்றன. ஆனால் நிதியப் பிரபுக்கள் அவர்கள் மீண்டும் பிணையெடுப்பைப் பெறுவர் என்ற நம்பிக்கையில் உறுதி கொண்டு நாட்டைக் கொள்ளையடிப்பதை தொடர்கின்றனர்.

2008 நிகழ்வுகள் அரசாங்கம் நிதியப் பிரபுத்துவத்திற்கு முற்றிலும் தாழ்ந்து நிற்பதை உறுதியாக அம்பலப்படுத்தியுள்ளன. அதற்கு பின்னரான இப்போக்குகள் அந்த உண்மையை உறுதிப்படுத்தத்தான் செய்கின்றன.

வோல் ஸ்ட்ரீட்டின் பெரும் ஏற்றங்கள் என்பது மக்களின் சமூகத் தேவைகளுக்கு இருக்கும் பொருளாதார, அரசியல் முறைக்கும் இடையே உள்ள சமரசத்திற்கு இடமில்லாத விரோதப் போக்கைத்தான் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. ஒவ்வொரு தொழிலாளிக்கும்  இளைஞருக்கும் கௌரவமான ஊதியத்தில் ஒரு வேலைக்கு உத்தரவாதமும், உயர் கல்வியறிவும், வசதியான வீட்டுவசதியும், ஊட்டச்சத்தான உணவும், கலாச்சார வசதிகளும் மற்றும் ஒரு பாதுகாப்பான ஓய்வும் பெறுவதற்குக் கொடுக்க நிறைய வளங்கள் உள்ளன. இவை ஒவ்வொரு நபரும் அனுபவிக்க உரிமை பெற்ற அடிப்படைச் சமூக உரிமைகளாகும்.

ஆனால் அவை தொழிலாள வர்க்கத்தின் வெகுஜனப் போராட்டங்கள் நடத்தப்படாமல் அடையப்பட முடியாது. நிதிய ஒட்டுண்ணிகளின் முறைகேடான செல்வங்கள் அபகரிக்கப்பட்டு வேலைகள், பள்ளிகள், வீடுகள் வழங்கப்படுவதற்கு பயன்படுத்தப்பட வேண்டும். நிதியத் தன்னலச் சிறுகுழு உற்பத்திச் சக்திகள் மீது கொண்டிருக்கும் பிடியை முறிப்பதற்கும் அவற்றை உழைக்கும் மக்களின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவதற்கும் ஒரு புரட்சிகரப் போராட்டம் தேவையாகும். அதுதான் சோசலிசத்திற்கான போராட்டமாகும்.