World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan unions prepare political trap for plantation workers

இலங்கை தொழிற்சங்கங்ள் தோட்ட தொழிலாளர்களுக்கு அரசியல் பொறிக்கிடங்கை தயாரிக்கின்றன

By W.A. Sunil
6 December 2012

Back to screen version

ஜனநாயக மக்கள் முன்னனி மற்றும் அதன் தொழிற்சங்க பிரிவான ஜனநாயக தொழிலாளர் காங்கிரசினதும் (ஜ.தொ.கா) தலைவரான மனோ கனேசன், தான் இலங்கையில் புதிதாக தோட்டத் தொழிலாளர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பு ஒன்றை அமைக்கப்போவதாக அறிவித்துள்ளார்.

இந்த புதிய தொழிற்சங்க கூட்டின் நோக்கம்,தோட்டத் தொழிலாளரின் மத்தியில் பாரம்பரிய பெரும் தொழிற்சங்கமும் அரசாங்கத்தின் பங்காளியுமான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (.தொ.கா.) மற்றும் எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் தொழிற்சங்கப் பிரிவான இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்திடமும் இருந்துதோட்டத் தொழிலாளர்களது உரிமைகளை காப்பதும்அதற்காகப் போராடுவதுமேஆகும்  என்று கூறப்படுகிறது

உண்மையான நோக்கம் இதற்கு மாறானதாகும். இந்த தொழிற்சங்க கூட்டமைப்பு தோட்டத் தொழிலாளர்களின் நலனுக்காகப் போரடுவதற்காக அமைக்கப்படுவது அல்ல. மாறாக அரசாங்கத்திற்கும் கம்பனிகளுக்கும் எதிராக அபிவிருத்தியடைந்து வரும் தொழிலாள வர்க்க இயக்கத்தை தடுத்து வைக்கும் ஒரு பொறிமுறையை அமைப்பதே ஆகும்.

வானளாவ உயரும் வாழ்க்கைச் செலவீனம் மற்றும் ஒடுக்குமுறையான வேலை நிலைமைகளால் ஏற்கனவே தோட்டத் தொழிலாளரிடையே வெடிக்கும் நிலைமை அபிவிருத்தியடைந்து வருகின்றது. எதிர்வரும் மார்ச் 31ம் திகதியுடன் தோட்டத் தொழிற்சங்கங்களுக்கும் கம்பனிகளுக்கும் இடையிலான தற்போதைய சம்பள கூட்டு ஓப்பந்தம் காலாவதியாகின்றது. ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் உட்பட ஏனைய தோட்டத் தொழிற் சங்கங்களின் ஒத்துழைப்புடன், .தொ.கா. திணித்த முந்தைய சம்பள உடன்படிக்கை பற்றி ஏற்கனவே பெரும்பான்மையான தோட்டத் தொழிலாளர்கள் கசப்புற்றுள்ளனர்.

இத்தகைய நிலமைகளின் கீழ், மனோ கணேசன் தொழிலாளர்களுக்கு ஒரு அரசியல் பொறியைத் தயார் செய்கின்றார். அவரும் அவரது ஜ.தொ.கா.வும், நீண்ட துரோக வரலாற்றைக் கொண்ட சங்கங்களுடன் இணைந்துள்ளனர். இவற்றுள், மலையக மக்கள் முன்னணி (..மு.) மற்றும் தேசிய தொழிலாளர் சங்கமும் (NUW) அரசியல் கட்சிகளாகவும் சேயற்படும் அதே வேளை, ஆளும் கூட்டரசாங்கத்தின் பங்காளிகளாகவும் இருக்கின்றன.

இத்தகைய அமைப்புகள், ஜனாதிபதி இராஜபக்ஷ அமுல்படுத்தும் சிக்கன நடவடிக்கைகளுக்கு நேரடியாக அரசியல் ரீதியில் பொறுப்பானவையாகும். உணவு, எரிபொருள் போன்ற அடிப்படை பொருட்களின் விலை உயர்வு மற்றும் போக்குவரத்து கட்டன அதிகரிப்பு மற்றும் சமூக நலனுக்கான செலவு வெட்டுக்களும் இந்த சிக்கன திட்டத்தில் அடங்கும். பண வீக்கத்தால் தொழிலாள வர்க்கத்தின் ஒவ்வொரு பகுதியினரும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஊடகங்களிடம் பேசிய கணேசன், புதிய தொழிற்சங்க கூட்டமைப்பானது இ.தொ.கா.வுக்கு "ஓரு தொளிவான சவாலாகும் என்றும் "தோட்டத் தொழிலாளர்களுக்கு புதிய சம்பளத்தைப் பற்றி பேச்சுவார்த்தை நடத்துவதில் ஒரு பலமான நிலையில் இருந்து தனது கூட்டமைப்பு இலங்கை முதலாளிமார் சம்மேளனத்துடன் கொடுக்கல் வாங்கல் செய்யும் என்றும் கூறினார்.

அதற்கு பிரதிபலித்த இ.தொ.கா. தலைவர்களில் ஒருவரும், அரசாங்க அமைச்சருமான முத்து சிவலிங்கமும், தனது தொழிற்சங்கத்திலேயே பெரும்பாலான தோட்டத் தொழிலாளர்கள் இருக்கின்றனர் என்று கூறியதோடு எவராவது இ.தொ.கா.வை சவால் செய்வாராயின் செய்து காட்டட்டும் பார்க்கலாம்" என்றும் அறிவித்துள்ளார்.

இந்த கருத்து சாதாரன சவால் அல்ல, மாறாக ஒரு அச்சுறுத்தலாகும். இ.தொ.கா. தனது எதிரிகள் மீது மட்டுமன்றி, தோட்டத் தொழிலாளர்களின் எந்தவொரு எதிர்ப்புக்கும் எதிராகவும் முன்னர் உடல் ரிதியான வன் செயல்களை பொலிசாரின் ஒத்துழைப்புடன் பயன்படுத்தியுள்ளது.

எவ்வாறினும் இப்புதிய தொழிற்சங்க கூட்டமைப்பு தொழிலாளர்களுக்கு ஒரு மாற்றீடு அல்ல. கணேசன் தோட்டத் தொழிலாளர்களின் அதிருப்தியை சுரண்டிக்கொள்ள முயற்சிக்கின்றாரே அன்றி, சிறந்த சம்பளம் மற்றும் நிலைமைகளுக்காகப் போராடுவதற்கல்ல. அவர் தொழிலாளர்களை கட்டுப்படுத்தும் ஒரு கருவியாக, முதலாளிமாரின் எதிரில் தனது தொழிற்சங்க அமைப்பை தூக்கி நிறுத்த முயற்சிக்கின்றார்.

இ.தொ.கா.வைப் போல், கணேசனும் சிங்களம் மற்றும் தமிழ் தொழிலாளர்களுக்கு இடையில் பிளைவை ஏற்படுத்தப் பயன்படுத்தப்படும் இனவாத அரசியலில் மூழ்கியுள்ளார். தற்போது இவர் இ.தொ.கா.வுக்கு தனது எதிர்ப்பினை பிரகடனப்படுத்தும் அதே சமயம், அவரது ஜனநாயக தேசிய முன்னணியானது சப்பரவமுக மாகாணசபை தேர்தலுக்காக இ.தொ.கா. மற்றும் மலையக மக்கள் முன்னணியுடனும் தேர்தல் கூட்டு ஒன்றை அமைத்துக்கொண்டது. தமிழ் பிரதிநிதி ஒருவரை தேர்வு செய்துகொண்டாலே தமிழ் மக்களுக்கு உதவ முடியும் என கனேசன் பிரகடனம் செய்தார். இதன் விளைவாக, தொழிலாளர்கள் மீதான அரசாங்கத்தின் தாக்குதல்கள் உட்பட, அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு வாக்களிக்கும் இ.தொ.கா.வின் இரண்டு அங்கத்தவர்கள் தெரிவானார்கள்.

தொழிலாளர்கள் கணேசனது ஜ.தொ.கா. மற்றும் இந்த கூட்டமைப்பில் இணைந்துள்ள ஏனைய தொழிற்சங்கங்களதும் சாதனைகளை பற்றி நன்கு வளங்கிக்கொள்ள வேண்டும். இ.தொ.கா., இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் மற்றும் பெருந்தோட்டத் தொழிற்சங்கக் கூட்டுக் கமிட்டியும் முதலாளிமாருடன் சம்பள வியாபாரத்தை மேற்கொள்ள அரசாங்கத்துடன் கூட்டுச் சேர்ந்துள்ள அதேவேளை, ஜ.தொ.கா., தொழிலாளர் தேசிய சங்கம், ம.ம.மு. ஆகியவை, சீற்றமடைந்துள்ள தொழிலாளர்களை கட்டுப்படுத்துவதன் பேரில் விமர்சகர்களாக காட்டிக்கொள்கின்றன.

2006ல் அரை மில்லியன் தோட்டத் தொழிலாளர்கள் இரண்டு வார காலமாக சம்பள அதிகரிப்பு கோரி வேலை நிறுத்தம் செய்தனர். இ.தொ.கா.வும் அதனோடு ஒத்துழைக்கும் தொழிற்சங்கங்களும் தினசரி 290 ரூபா (2.25 அமெரிக்க டாலர்) நாள் சம்பளத்துக்கு உடன்படிக்கையில் கச்சாத்திட்டதை அடுத்து, உடன்படிக்கைக்கு எதிராகவும் கைச்சாத்திட்ட தொழிற்சங்கங்களை கண்டனம் செய்தும் பத்தாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஜ.தொ.கா., தொழிலாளர் தேசிய சங்கம் மற்றும் மலையக மக்கள் முன்னணியும், மக்கள் விடுதலை முன்னணியின் கட்டுப்பாட்டிலுள்ள அகில இலங்கை தோட்ட தொழிலாளர்கள் சங்கத்துடன் (ACPWU) சேர்ந்து இந்த ஒப்பந்தத்தை எதிர்ப்பதாகக் கூறிக்கொண்டதோடு அதனை இறத்துச் செய்ய போராடுவதாகவும் உறுதியளித்தனர். இரு வாரங்களின் பின்னர், இந்த சங்கங்கள் தமது செயற்பாடுகளை நிறுத்திக்கொண்டன. இ.தொ.கா. காரியாலயத்தை தாக்கியதற்காக டசின் கணக்கான தொழிலாளர்களை கைது செய்ய பொலிசாருக்கு உத்தரவிடப்பட்டது. தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களை பாதுகாப்பதற்கு எதுவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக பொலிசாரில் நம்பிக்கை வைக்குமாறு உபதேசித்தனர்.

2009 செப்டெம்பரில், சம்பள உயர்வுக்கான பிரச்சாரத்தின் மத்தியில், இ.தொ.கா.வும் அதன் கூட்டாளிகளும் 405 ரூபா நாள் சம்பளத்துக்கான கூட்டு ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டனர்.  தொழிலாளர்களின் கசப்பான எதிர்ப்பின் மத்தியில்  ஜ.தொ.கா, தொழிலாளர் தேசிய சங்கம் மற்றும் மலையக மக்கள் முன்னணியும் நிருபர்கள் மாநாட்டை கூட்டி, "கடுமையான நடவடிக்கை" எடுக்கப்போவதாக மீண்டுமொரு முறை உறுதியளித்த போதிலும், ஒக்டோபர் 17 பாரம்பரிய தீபாவளி பண்டிகை நாளின் பின்னரே நடவடிக்கை எடுப்பதாகக் கூறின. அவர்கள் ஒரு கிழமையின் பின்னர் கைச்சாத்திட்ட   தொழிற்சங்கங்களின் பின்னால் சேர்ந்து கொண்டனர்.

2011ம் ஆண்டு, சம்பள அதிகரிப்புக்கான எந்தவொரு பிரசாரத்தையிட்டும் பீதி கொண்டிருந்த தொழிற்சங்கங்கள், போராட்டங்கள் தமது கட்டுப்பாட்டை மீறி சென்று விடும் என்று அச்சமுற்றன. துனிசியா மற்றும் எகிப்தில் தோன்றிய புரட்சிகர  இயக்கங்கள், இலங்கை தொழிலாளர்களிலும் எதிரொலிக்கக் கூடும் என்று தொழிற்சங்க தலைமைகள் நன்கு உணர்ந்திருந்தனர். ஒரு இ.தொ.கா. தலைவரான முத்து சிவலிங்கம், "விடையத்தை உடனடியாக தீர்க்குமாறு தொழிற்சங்கங்களுக்கு ஆலோசனை வழங்கியதோடு, 515 ரூபா நாள் சம்பளத்துக்கு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது.

ஜ.தொ.கா., தொ.தே.ச. மற்றும் ம.ம.மு. மற்றும் அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமும், வேலை நிறுத்தமோ ஆர்ப்பாட்டமோ செய்யவில்லை. ஆனால், தொழிலாளரின் சீற்றத்தைத் தணிப்பதற்காக மெதுவாக வேலை செய்யும் இயக்கத்துக்கு அழைப்பு விடுத்தன. அதே சமயம், இந்த தொழிற்சங்கங்கள் வெட்கமின்றி, தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பள அதிகரிப்பை பெற்றுக்கொள்ள தலையீடு செய்யுமாறு அரசாங்கத்துக்கு வேண்டுகோள் விடுத்தன. ஆனால் ராஜபக்ஷ அந்த ஒப்பந்தத்திற்கு உடன்பட்டதோடு, தொழிற்சங்கங்கள் அதற்கு வளைந்து கொடுத்தன.

தோட்ட உரிமையாளர்கள் அடுத்த ஆண்டில் எந்தவொரு கணிசமான சம்பள அதிகரிப்பையும் கசப்புடன் எதிர்ப்பர் என்பது ஏற்கனவே தெளிவாகியுள்ளது. கென்யா, பங்களாதேஷ் மற்றும் வியட்னாம் போன்ற ஏனைய தேயிலை உற்பத்தி செய்யும் நாடுகளுடனான பலத்த போட்டியின் மத்தியில், உலக பொருளாதார பின்னடைவினால் இலங்கை தேயிலை தொழிற்துறை மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.

இலங்கை பெருந்தோட்ட சங்கம், இலங்கை தேயிலை  உலகில் சிறந்த தேயிலை" என்ற அந்தஸ்திலிருந்து வெளியேறிவிடக் கூடும்என்று அண்மையில் எச்சரித்துள்ளது. ஏனைய தொழிற்துறைகளைப் போன்று, இலங்கை பெருந்தோட்டச் சங்கமும், தொழிலாளர்கள் மீது புதிய சுமைகளைத் திணிக்க முயற்சிக்கின்றது. அது, மொத்த உற்பத்தி செலவில் 70 வீதமாக இருக்கும் உழைப்புச் செலவைகுறைக்க, உற்பத்தித்திறனை அதிகரிக்கக் கோருகின்றது.

புதிய தொழிற்சங்க கூட்டமைப்பு தொழிலாளர் சம்பந்தமான விவகாரங்கள் பற்றி முதலாளிமார் சம்மேளனத்துடன் கூட்டாக செயற்படும் என கூறிய கணேசன், முதலாளிமாருடன் ஒத்துழைக்கும் தனது விருப்பத்தை ஏற்கனவே வெளிப்படுத்தியுள்ளார். இது தொழிலாளர்களின் எந்தவொரு போராட்டத்தையும் இந்த கூட்டமைப்பு காட்டிக்கொடுக்கும் என்பதற்கான தெளிவான சமிக்ஞையாகும்.

வாழ்க்கைத் தரம் மற்றும்  வேலை நிலமைகள் மீதான தற்போதைய தக்குதலை எதிர்ப்பதற்கு, ஏனைய தொழிலாளர்களுடன் ஒருங்கிணைந்த ஒரு போராட்டத்தை தோட்டத் தோட்டத் தொழிலாளர் நடத்துவது அவசியமாகும். ஐக்கியம் என்பது, அரசாங்கத்தினதும் தோட்ட உரிமையாளர்களதும் ஏஜண்டுகளாக செயற்படும் தொழிற்சங்கங்களது ஒருங்கிணைப்பு அல்ல. மாறாக தொழிலாளர்களது சுயாதீனமான இயக்கத்தைக் கட்டியெழுப்புவதே ஆகும். சோசலிச சமத்துவக் கட்சி, சகல தொழிற்சங்கங்களுக்கும் எதிரான ஒரு கிளர்ச்சிக்கும், மற்றும் முதலாளிமாருக்கும் அரசாங்கத்துக்கும் எதிரான ஒரு அரசியல் போராட்டத்தை முன்னெடுக்க சுயாதீனமான நடவடிக்கைக் குழுக்களை அமைக்கவும் அழைப்பு விடுக்கின்றது.

சகலவிதமான இனவாதம் மற்றும் தேசியவாதத்தையும் நிராகரிக்கும் அனைத்துலகவாத சோசலிச வேலைத் திட்டத்தின் அடிப்படையில் மட்டுமே அத்தகைய ஒரு போராட்டத்தை முன்னெடுப்பது சாத்தியமாகும். தெற்காசியாவிலும் மற்றும் உலகம் பூராவும் சோசலிசத்துக்கான போராட்டத்தின் பாகமாக, சோசலிச கொள்கைகளை அமுல்படுத்துவதற்கு தொழிலாளர்களதும் விவசாயிகளதும் அரசாங்கத்துக்கான ஒரு அரசியல் போராட்டத்தில் மட்டுமே, சகல தொழிலாளர்களுக்கும் தரமான சம்பளம் மற்றும் வேலை நிலைமைகளை வெற்றிகொள்ள முடியும். சோசலிச சமத்துவக் கட்சி அத்தகைய ஒரு புரட்சிகர முன்நோக்கிற்கே போராடுகின்றது.