World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :ஆசியா : கொரியா

Tensions rise on Korean peninsula

கொரியத் தீபகற்பத்தில் அழுத்தங்கள் அதிகரிக்கின்றன

By Peter Symonds
12 March 2013

Back to screen version

இரு பக்கங்களில் இருந்தும் அச்சுறுத்தல்களுக்கு இடையே வட கொரியா நேற்று இரண்டு கொரியாக்களுக்கும் இடையே இருந்தஅவசரத் தொலைபேசித் தொடர்பைத் துண்டித்ததுடன், 1953ம் ஆண்டு கொரியப் போருக்கு முடிவு கட்டிய போர்நிறுத்ததையும் கைவிட்டுவிட்டதாக அறிவித்தது. அமெரிக்கா மற்றும் தென்கொரியத் துருப்புக்கள் கூட்டு இராணுவப் பயிற்சிகளை ஆரம்பித்த நேரத்திலும் மற்றும் வாஷிங்டன் பியோங்யாங்கிற்கு எதிராகப் புதிய பொருளாதாரத் தடைகளை அறிவித்துள்ளபொழுது இந்த நடவடிக்கை வந்துள்ளது.

அதன் மூன்றாம் அணுவாயுதச் சோதனை பெப்ருவரி 12 நடத்தப்பட்டதை அடுத்து கடந்த வாரம் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக்குழுத் தீர்மானம் இன்னும் அபராத நடவடிக்கைகளை வட கொரியா மீது விதித்ததை தொடர்ந்து கொரியத் தீபகற்பத்தில் அதிகரிக்கும் அழுத்தங்கள் வந்துள்ளன. முந்தைய .நா. பொருளாதாரத் தடைகளையும் மற்றும் அமெரிக்கத் தலைமையிலான பொருளாதார, இராஜதந்திர முற்றுகைக்கு கொரியப் போர் முடிவில் இருந்தே வட கொரிய ஆட்சி உட்பட்டு வருகிறது.

வட கொரியாவின் அரசாங்கம் நடத்தும் ஏடான ரோடோங் சின்மன்னில் நேற்று ஒரு ஆசிரியத் தலையங்கம், “போர்நிறுத்த உடன்பாடு கைவிடப்பட்டுவிட்டது”, “அடுத்து என்ன நடக்கும் என எவரும் கூறுமுடியாது.” என்று அறிவித்துள்ளது. 1953 போர் நிறுத்த ஒப்பந்தம் மோதலை நிறுத்தியது, ஆனால் முறையாகப் போரை முடித்துவிடவில்லை. பியோங்யாங் பல தசாப்தங்களாக அமெரிக்காவிடம் ஒரு முறையான சமாதான உடன்படிக்கைக்கு அழுத்தம் கொடுத்து வருகிறது, ஆனால் அவை பலமுறை நிராகரிக்கப்பட்டுள்ளன.

வட கொரியா முன்பு போர்நிறுத்தம் முறையானது அல்ல என்று அறிவித்திருந்தது. மிகச்சமீபத்தில் 2009ல் கூட .நா.மூலம் அமெரிக்க  செயல்படுத்திய முந்தைய சுற்றுப் பொருளாதாரத் தடைகளுக்கு முகங்கொடுக்கையில் அவ்வாறு கூறியது. 2010ல் தென் கொரிய வழித்துணைக் கப்பல் Cheonan மூழ்கடிக்கப்பட்டதை அடுத்து அழுத்தங்கள் பெருகின. இதற்குப் பொறுப்பை வட கொரியா மறுத்துவிட்டது. ஆத்திரமூட்டும் தன்மை உடைய அமெரிக்கத் தென் கொரிய கடற்படைப் பயிற்சிகளுக்கு இடையே, இரு கொரியாக்களும் பீரங்கித்தாக்குதல்களை மேற்கொண்டன. இதில் யியோன்பையியோங் தீவில் பல தென் கொரிய படையினரும் குடிமக்களும் கொல்லப்பட்டனர்.

சனிக்கிழமை அன்று வடகொரியத் தலைவர் கிம் ஜோங்-உன் 2010 குண்டுவீச்சில் பங்கு பெற்ற பீரங்கிப் படைப் பிரிவு ஒன்றிற்கு வருகை புரிந்து, “நீர்ப்பகுதியில் ஒரு குண்டு வீசப்பட்டாலும், விரோதிக்குக் கடுமையான எதிரடி கொடுக்க வேண்டும்என்று வலியுறுத்தினார்.

10,000 கொரியத் துருப்புக்களையும் 3,000க்கும் மேற்பட்ட அமெரிக்க இராணுவத்தினரையும் கொண்ட Key Resolve என்னும் பயிற்சி நேற்று ஆரம்பித்து மார்ச் 21 வரை நடக்கும். போர் பயிற்சிகளின்போது, பென்டகன் தென் கொரியாவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 28,500 அமெரிக்கத் துருப்புக்களுடன் மேலதிக படையினரை சேர்த்துள்ளதுடன், கூடுதல் போர்க்கப்பல்கள், போர் விமானங்களையும் நிலைநிறுத்தியுள்ளது.

இன்றுவரை இரு கொரியாக்களையும் தொடர்புபடுத்தும் இராணுவ நிகழ்வுகளோ, மோதல்களோ நடந்ததாகத் தகவல்கள் இல்லை. மேலும் பல டஜன் தென் கொரிய மேலாளர்கள் தங்கள் அன்றாடப் பயணத்தை Kaesong தொழில்துறை பகுதி, வட கொரியாவிற்குள் தொடர்ந்தனர். அங்கு அவர்கள் கிட்டத்தட்ட 50,000 தொழிலாளர்கள் தென் கொரிய வணிகங்களுக்காக பொருட்களை தயாரிப்பதை மேற்பார்வை செய்கின்றனர்.

ஆனால் இரு திறத்தாரும் சீற்றமுடைய வார்த்தையாடல்களில்  ஈடுபட்டுள்ளன. கடந்த வாரம் .நா.பாதுகாப்புக் குழு இன்னும் கூடுதலான பொருளாதாரத் தடைகளை சுமத்தத் தயாரிக்கையில், பியோங்யாங் நாட்டை பாதுகாக்கத் தான்முன்கூட்டிய அணுவாயுதத் தாக்குதலைச் செயல்படுத்தும் உரிமை கொண்டுள்ளதுஎன எச்சரித்தது. வாஷிங்டன் மீது துல்லியமான தாக்குதலை நடத்தும் திறனும் தன்னிடம் உள்ளது என்றும் கூறியது.

தென் கொரியாவின் பாதுகாப்பு அமைச்சரகம் கடந்த வெள்ளியன்று வட கொரிய அரசாங்கம் அணுவாயுதத்தை எப்பொழுதேனும் பயன்படுத்தினால் நாடு பூமியின் மேற்புறத்தில் இருந்தே  ஆவியாகிவிடும்என்று எச்சரித்தது. தென் கொரிய ஜனாதிபதி பார்க் கியுன்-ஹை அவருடைய முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் நேற்று, “ஒரு வட கொரிய ஆத்திரமூட்டல் ஏற்படும்போது நாம் அதை பலத்துடன்  எதிர்கொள்ள வேண்டும்என்றார்.

பார்க் பாதுகாப்பு அமைச்சராக நியமித்துள்ள கிம் பையுங்-க்வான், அவர் பதவிப்பிரமாணத்தின்போது தென் கொரியா, வட கொரியாவின் பீரங்கித் தாக்குதலை எதிர்கொள்ள அந்நாட்டு ஆட்சியையே அழித்துவிடும் என்றார். முன்பு கூட்டு அமெரிக்கத் தென் கொரிய படைகளின் துணைத் தளபதியாக இருந்த கிம், 1961ல் இருந்து 1979 வரை நாட்டை ஆண்ட தனது தகப்பனரான ஜனாதிபதியும் முன்னாள் தென்கொரிய இராணுவச் சர்வாதிகாரியுமான பார்க் சுங்-ஹீ உடைய புகைப்படத்தை எப்பொழுதும் வைத்திருப்பார் எனக் கூறப்படுகிறது.

மிகவும் உறையவைக்கும் அச்சுறுத்தல் வாஷிங்டனிடம் இருந்து வந்தது. ஒபாமாவின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் டோம் டொனிலன் நேற்று பின்வருமாறு எச்சரித்தார்: “இதில் சந்தேகத்திற்கு இடமில்லை. நமக்கும் நம்முடைய நட்பு நாடுகளுக்கும் வட கொரியா காட்டும் அச்சுறுத்தலுக்கு எதிராகப் பாதுகாக்க, அதற்கு விடையிறுக்க நம் முழுத் திறன்களையும் பயன்படுத்துவோம்.” “முழுத் திறன்கள்என்பது பெரும் அமெரிக்க அணுவாயுதங்களையும் அடங்கியுள்ளது. டோனோலின் எத்தகைய அணுவாயுதங்கள் அல்லது அதையொட்டிய பிற பொருட்கள் வேறு நாடுகளுக்கு மாற்றப்பட்டால் பியோங்யாங்தான் அதற்குப் பொறுப்புஎன்று வாஷிங்டன் கருதும் என்றார்.

அமெரிக்க நிதித்துறை இன்னும் கடுமையான அபராதங்களை நேற்று வட கொரியாவிற்கு எதிராக அறிவித்தது. இவை நாட்டின் முக்கிய வெளிநாட்டுச் செலாவணி வங்கியான வெளிநாட்டு வர்த்தக வங்கியை இலக்கு கொள்கின்றன. அத்துடன் ஒரு மூத்த அதிகாரியான பெக் செ-போங்கும் இலக்கு கொள்ளப்பட்டுள்ளார். இவர் வட கொரியாவின் ஏவுகணைத் திட்டத்துடன் தொடர்புடையவர் எனக் கூறப்படுகிறார். அமெரிக்க வெளிவிவகாரத்துறையும் மற்றும் மூன்று நபர்களின் மீது தடைவிதிக்க பெயரிட்டுள்ளது.

வடகிழக்கு ஆசியாவில் பெருகும் அழுத்தங்களுக்கு ஒபாமா நிர்வாகம் நேரடிப் பொறுப்பைக் கொண்டுள்ளது. இதன்ஆசியாவில் முன்னிலைஎன்பது அப்பிராந்தியம் முழுவதும் சீனாவின் மதிப்பைக் குறைக்க தென் கொரியா உட்பட அப்பிராந்தியத்திலுள்ள அரசாங்கங்களை ஊக்குவிக்கிறது. சீனாவின் கூட்டான வடகொரியா மீது அழுத்தங்களை கொடுப்பதன் மூலம் அமெரிக்கா பெய்ஜிங் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை அதிகமாக்கி வருகிறது.

வட கொரியாவிற்குள் ஒரு அரசியல் உள்வெடிப்பைத் தடுக்கவும் அதன் வடக்கு எல்லையில் ஒரு அமெரிக்க சார்பு ஆட்சியைத் தடுக்கவும் வட கொரியாவிற்கு பொருளாதார அளவில் தொடர்ந்து முட்டுக் கொடுக்கிறது. அதே நேரத்தில் பெய்ஜிங் அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளுக்கு ஆதரவளித்து வாக்களித்து வட கொரியாவைக் கட்டுப்படுத்த முயல்கிறது; பியோங்யாங்கின் அணுவாயுதச் சோதனைகள் தென் கொரியா மற்றும் ஜப்பானுக்கு தங்களுடைய அணுவாயுதங்களை வளர்க்கப் போலிக் காரணம் அளிக்கலாம் என்றும் அஞ்சுகிறது.

தென் கொரிய சட்டமியற்றும் சுங் மோங்-ஜூன், (பார்க்கின் வலதுசாரி சோநுரிக் கட்சியில் Saenuri- இருப்பவர்), ஏற்கனவே நாடு ஒருஅணுவாயுதத் தடுப்புமுறையைக்கட்டமைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். கட்சியின் தேசிய சட்டமன்றத்தின் உறுப்பினர்களிடம் கடந்த மாதம் நடைபெற்ற கூட்டத்தில் தற்போதைய நிலைமை இயந்திரத் துப்பாக்கியை வைத்திருக்கும் ஒரு கும்பல்காரனுடன் சிறு கல்லை வைத்துப் பாதுகாக்க முற்படுவது போல் ஆகும் என்றார். JoongAng Ilbo பத்திரிகை வட கொரியாவின் அணுச்சோதனை உயிருக்கே ஆபத்து கொடுப்பது என்றும் தென் கொரியாவும் அமெரிக்காவை நம்பியிருப்பதற்குப் பதிலாக அதன் அணுவாயுதங்களை வளர்க்கவேண்டும் என்றது.

இத்தகைய கருத்துக்கள் பெய்ஜிங் மீதான அழுத்தங்களை அதிகரிக்கத்தான் உதவும். அங்கு ஆளும் வட்டங்களில் சீனா வட கொரியாவுடன் கொண்டிருக்கும் நட்பு குறித்து விவாதம் ஆரம்பித்துவிட்டது. சீனாவின் உத்தியோகபூர்வ நிலைப்பாட்டில் மாற்றம் ஏதும் இல்லை என்றாலும், மூத்த அதிகாரிகளும் உயர்கல்விக்கூடத்தினரும் பியோங்யாங்கிற்கு எதிராகக் கடுமையான நிலைப்பாடு தேவை, அதில் இரு நாடுகளுக்கும் இடையே உள்ள பாதுகாப்பு ஒப்பந்தம் முடிக்கப்படுவதும் இருக்க வேண்டும் என்று வாதிட்டுள்ளனர்.

அதே நேரத்தில் பெய்ஜிங்கிற்கு அமெரிக்க வட கொரியாவை இன்னும் மேற்கு சார்புடையதாக மாற்றிக் கொள்ள ஊக்கம் கொடுக்கிறது என்பதும் நன்கு தெரியும். அமெரிக்க தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் டோனிலோன் நேற்று பர்மாவுடனான அமெரிக்க உறவுகளில் மாற்றம் குறித்துக் குறிப்பிட்டு, அது மேற்கில் இருந்து உதவி, மூலதனம், கடன் தள்ளுபடி ஆகியவற்றின் மூலம் பில்லியன் கணக்கான டாலர்கள் ஏற்றுள்ளது என்றார். இது பியோங்யாங்கும் ஒதுக்கப்பட்ட நிலையில் இருந்துஜனநாயகத்திற்குமாறினால், வாஷிங்டனுக்கு இணங்கி நடந்தால் ஆதாயங்கள் கிடைக்கும் என்பது குறித்த அதிக இரகசியமில்லாத குறிப்பு ஆகும்.

ஆனால் வட கொரியா அதன் ஏவுகணை, அணுவாயுதத் திட்டங்களைக் கைவிட்டால் ஒழிய எந்த சலுகைகளையும் கொடுக்க அமெரிக்கா மறுத்துவிட்டது. பியோங்யாங் கடந்தகாலத்தில் 1994 ஒப்புக்கொண்ட கட்டமைப்பின் கீழும் 2005 இல் ஆறு நாடுகள் நடத்திய பேச்சின்போதும் அவ்வாறு செய்ய ஒப்புக் கொண்டது. ஆனால் அது வாஷிங்டனிடம் இருந்து முறிக்கப்பட்ட உறுதிமொழிகளையும் புதிய கோரிக்கைகளையும்தான் எதிர்கொண்டது.

அமெரிக்காவில் ஆக்கிரோஷ நிலைப்பாடு கொரிய தீபகற்பம் தீவிர அழுத்தத்தில் இருப்பதை உறுதிப்படுத்தி, ஆசியாவின் முக்கிய வெடிப்புத் தன்மை இடங்களில் ஒன்றில் மோதலுக்கான ஆபத்தை அதிகரித்துள்ளது.