தினசரி செய்திகள், ஆய்வுகள்
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
|
சிட்னி முற்றுகை
Peter Symonds Use this version to print| Send feedback சிட்னி CBD நகரில் பெரிதும் மனரீதியில் பாதிப்புக்கு ஆளான ஒரு தனிநபரின் ஒரு தனிப்பட்ட சம்பவத்தை, எவ்வித நியாயப்பாடும் கூறாமல், ஆஸ்திரேலிய அரசாங்கம் முழு "பயங்கரவாத-எதிர்ப்பு" எந்திரத்தை முடுக்கிவிடவும், அந்நாட்டின் மையத்தில் அமைந்துள்ள அந்த மிகப்பெரிய நகரின் மீது—துயரகரமான விளைவுகளைக் கொண்ட—முற்றுகை நிலைமையை நடைமுறைப்படுத்தவும் நேற்று பற்றிக் கொண்டது. பொதுவாக ஒரு தீவிர சம்பவமாக ஆனால் ஒப்பீட்டளவில் நேரடியாக பொலிஸ் விவகாரமாக கையாளப்படும் ஒரு சம்பவம்—ஓர் ஆயுதமேந்திய துப்பாக்கிதாரி நகர தேனீர்விடுதியில் இருந்தவர்களைப் பிணைக்கைதிகளாக்கி வைத்த சம்பவம்—பிரதம மந்திரி டோனி அபோட்டின் தலையீட்டுடன், மற்றும் தொழிற்கட்சி மற்றும் பசுமை கட்சி, மாநில அரசாங்கங்கள் மற்றும் ஒட்டுமொத்த ஊடகங்களின் முழு ஆதரவுடன், ஒரு பெரும் தேசிய நெருக்கடியாக தீவிரப்படுத்தப்பட்டது. அபோட் ஒருமுறை அல்ல, இரண்டு முறை நாட்டுக்கு உரையாற்றினார், புதிய தெற்கு வேல்ஸ் (NSW) மாநிலத்தின் அரசாங்கத்திற்கும் பொலிஸிற்கும் எல்லா மத்திய அமைப்புகளின்—பொலிஸ், இராணுவம் மற்றும் உளவுத்துறையின்—முழு ஒத்துழைப்பும் வழங்கப்படுமென உறுதியளித்தார். திட்டமிட்டு தாக்கும் குழுவிலிருந்து (Tactical Assault Team) கனரக ஆயுதமேந்திய துணைஇராணுவ பொலிஸ் உட்பட நூற்றுக் கணக்கான பொலிஸ் மத்திய சிட்னிக்குள் குவிக்கப்பட்டனர். சம்பவ இடத்திலிருந்து கிலோமீட்டர் தூரத்தில் இருந்த கட்டிடங்களும் மூடப்பட்டு, போக்குவரத்து திருப்பிவிடப்பட்டு, சிட்னி புறநகர்களிலும் நாட்டின் தலைநகரான கான்பெர்ரா மற்றும் ஏனைய ஆஸ்திரேலிய நகரங்களிலும் கூட பொலிஸ் ரோந்து அதிகரிக்கப்பட்டன. இந்த பாரிய பொலிஸ் நடவடிக்கைகளுக்கு பகுத்தறிவுபூர்வமான எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. பொலிஸிற்கு நன்கு தெரிந்த ஓர் ஈரானிய அகதியான மேன் ஹாரோன் மோனிஸ் தான் பிணையாளிகளைப் பிடித்து வைத்திருந்தவர் என்பதை ஒப்பீட்டளவில் பொலிஸ் வேகமாகவே தீர்மானித்துவிட்டது. அவருக்கு ஈராக் மற்றும் சிரியாவினது இஸ்லாமிய அரசு (ISIS), அல் கொய்தா அல்லது வேறெந்த இஸ்லாமிய தீவிரவாத அமைப்புடனோ தொடர்பிருக்கவில்லை. அவர் இயல்புக்கு மாறான நடவடிக்கைகளுடன், அவரது முன்னாள்-மனைவியைக் கொன்றதில் சம்பந்தப்பட்டவராக கருதப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டு, மனரீதியில் பாதிப்புக்கு ஆளான ஒரு தனிநபர் ஆவார். அதற்கு தகுந்தாற்போல், இன்று அதிகாலையில் அந்த தேனீர்விடுதிக்குள் நுழைய முடிவெடுத்ததற்கு அவர் எந்த பொருத்தமான விளக்கத்தையும் அளிக்கவில்லை. NSW பொலிஸ் கமிஷனர் அவரது ஆரம்ப அறிக்கையில், கட்டிடத்திற்குள் துப்பாக்கி குண்டு சத்தம் கேட்டதால் அதிகாரிகள் கட்டிடத்திற்குள் நுழைந்ததாக தெரிவித்திருந்தார், ஆனால் பின்னர் அவரது அறிக்கையைத் திரும்ப எடுத்துரைக்க மறுத்துவிட்டார். முடிவு என்னவென்றால் பிணையாளிகளைப் பிடித்து வைத்தவரும், அத்துடன் இரண்டு அப்பாவி மக்களும்—தேனீர் விடுதி நிர்வாகியும், மூன்று குழந்தைகளின் ஒரு தாயும்—கொல்லப்பட்டனர், ஏனைய நான்கு பேர் காயமடைந்துள்ளனர். அபோடின் தலையீடு, பிரச்சினையை அமைதியாக தீர்க்க உதவியாக நிலைமையை சாந்தப்படுத்துவதற்கு மாறாக, ஆரம்பத்திலிருந்தே வேண்டுமென்றே சந்தேகத்திற்குரியதாக பீதியூட்டும் ஒரு சூழலைத் தூண்டுவதாக இருந்தது. சொல்லப்போனால் என்ன நடக்கிறது என்பதை பொலிஸ் இருட்டடிப்பு செய்ததற்கு இடையே, ஊடகங்களோ ஓயாமல் "பயங்கரவாத" தொடர்புகளுடன் ஊகிக்க வசதியாக அரேபிய எழுத்துக்கள் பொறித்த ஒரு கருப்பு கொடியை பற்றிக் கொண்டு, மிதமிஞ்சி போய் கொண்டிருந்தது. தொலைக்காட்சி நிலையங்களோ லிண்ட் காபேயில் (Lindt café) கட்டவிழ்ந்த சம்பவங்களை தொடர்ச்சியாக காட்டுவதற்காக, வழக்கமான நிகழ்ச்சிகளை இரத்து செய்தன. இந்த விஷம பிரச்சாரத்தின் ஒரே நோக்கம் ஆஸ்திரேலியாவை முற்றுகையின் கீழிருக்கும் ஒரு நாடாக சித்தரித்துக் காட்டுவதும், "பயங்கரவாதத்திற்கு எதிரான போரை" போலியாக ஊதிப் பெருக்கச் செய்வதுமே ஆகும். அபோட் அந்த சம்பவத்தை ஒரு போர்கால சூழலை உருவாக்க கைப்பற்றினார், அமெரிக்க இராணுவ நடவடிக்கையில்—குறிப்பாக மத்திய கிழக்கில்—ஆஸ்திரேலியா ஈடுபடுவதை மேற்கொண்டும் தீவிரப்படுத்துவதை நியாயப்படுத்தவும், உள்நாட்டில் பொலிஸ்-அரசு நடவடிக்கைகளை எடுக்கவும் அது சுரண்டிக் கொள்ளப்படும். கடந்த ஆண்டு முழுவதும், உக்ரேன் விவகாரத்தில் ரஷ்யாவுடனான அமெரிக்காவின் மோதலில், ஈராக் மற்றும் சிரியாவில் புதிய போரைக் கொண்டு வருவதில், ஒபாமா நிர்வாகத்தின் "ஆசியாவை நோக்கிய முன்னெடுப்பில்" மற்றும் சீனாவிற்கு எதிராக இராணுவ கட்டமைப்பு செய்வதில் கான்பெர்ரா முன்னணியில் இருந்துள்ளது. செப்டம்பரில், பொலிஸ் முன்பில்லாத அளவில் மிகப்பெரிய "பயங்கரவாத எதிர்ப்பு" நடவடிக்கையை நடத்தியது, அதில் 800க்கும் அதிகமான பொலிஸ் கமாண்டோக்களும் உளவுத்துறை முகவர்களும் சிட்னி மற்றும் பிரிஸ்பேனில் அதிகாலை சோதனைகளில் ஈடுபட்டனர். குடும்ப வீடுகள் சூறையாடப்பட்டன, பெண்களும் குழந்தைகளும் பீதியூட்டப்பட்டனர், 15 நபர்கள் விசாரணைக்காக இழுத்துச் செல்லப்பட்டனர். ஆனால் ஒரேயொரு நபர் மீது மட்டுமே பயங்கரவாதம்-சம்பந்தப்பட்ட நடவடிக்கையுடன், அதுவும் போலியான அடித்தளத்தில், குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. ஈராக்கிற்கு இராணுவ படைகளை அனுப்பவும், ஜனநாயக விரோத புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டங்களை பெருமளவில் கொண்டு வருவதையும் நியாயப்படுத்துவதற்காக, ஆஸ்திரேலிய பிரஜைகளை கழுத்தறுத்து கொல்ல இருப்பதாக ஒரு அச்சமூட்டும் சதித்திட்டம் பற்றிய இழிந்த கூற்றுக்களை தூக்கிப்பிடிக்கின்றது. அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஜோன் கெர்ரி, ஒரு காங்கிரஸ் கமிட்டிக்கு ISIS ஆதரவாளர்கள் "ஆஸ்திரேலியாவில் அதீத காட்டுமிராண்டித்தனத்தை அரங்கேற்ற" திட்டமிட்டிருப்பதாக பொய்யாக உரைத்து, அந்த சதித்திட்டம் என்று கூறப்பட்டதை உடனடியாக மத்திய கிழக்கில் அமெரிக்க போருக்கு சாக்காக கைப்பற்றிக் கொண்டார். நேற்றும் இன்றும் ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் நடவடிக்கைகள் சர்வதேச அளவில் வழக்கமாகி இருக்கும் போக்கில், ஆக்கிரமிப்பு போர் குற்றங்களை நியாயப்படுத்தவும் உள்நாட்டில் பொலிஸ்-இராணுவ எந்திரத்தை கட்டமைப்பதை நியாயப்படுத்தவும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான வடிவம் 9/11 தாக்குதலில் அமைக்கப்பட்டது, அந்த சம்பவத்தை புஷ் நிர்வாகம் "பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தை" அறிவிக்கவும், ஆஸ்திரேலியா போன்ற அமெரிக்க கூட்டாளிகளுடன் சேர்ந்து ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் மீது படையெடுப்புகளைத் தொடங்கவும் சுரண்டி கொண்டது. கடந்த ஆண்டு ஏப்ரலில், போஸ்டன் தொடர் ஓட்டபோட்டியின் எல்லைக்கோட்டிற்கு அருகில் இரண்டு வெடிகுண்டுகள் வெடித்ததைத் தொடர்ந்து, ஒட்டுமொத்த போஸ்டன் நகரமும், நடைமுறையில் இராணுவ சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது. மக்கள் வீடுகளிலேயே இருக்குமாறு உத்தரவிடப்பட்டார்கள், அதேவேளையில் கனரக-ஆயுதமேந்திய பொலிஸ் மற்றும் தேசிய பாதுகாப்பு படைகள், ஆயுதமேந்திய வாகனங்கள் மற்றும் ஹெலிகாப்டர் துப்பாக்கிகளுடன், உத்தரவாணை இல்லாமல் வீடு வீடாக சோதனைகளை நடத்தியதோடு, வீதிகளை ஆக்கிரமித்தன. இந்த அக்டோபரில், கனேடிய அரசாங்கம் ஒட்டாவாவின் நாடாளுமன்ற கட்டிடத்திற்கு அருகில் ஒரு சிப்பாய் கொல்லப்பட்டதற்கு விடையிறுப்பாக, அதைச் சுற்றியிருந்த பகுதிகளில் பெரும்பகுதியை சுற்றி வளைத்தும், வீதிகளை அடைத்தும், ஆயிரக் கணக்கான அரசு தொழிலாளர்கள், கடைக்காரர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளைக் கைது செய்தும் விடையிறுப்பு காட்டியது. மீண்டும், மனரீதியில் பாதிப்புக்கு ஆளான ஒரு தனிநபரின் தனிப்பட்ட நடவடிக்கைகள், மத்திய கிழக்கின் அமெரிக்க போரில் கனடா ஈடுபடுவதற்கு உள்ளடங்கலாக, வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு கொள்கையில் ஒரு வலதுசாரி மாற்றத்தை நடைமுறைப்படுத்தும் வகையில் ஒரு அச்சமூட்டும் சூழலை உருவாக்குவதற்காக பயன்படுத்திக் கொள்ளப்பட்டன. அபோட் அரசாங்கமும் அதே உத்தியைக் கையாண்டு வருகிறது. வேகமாக ஆழமடைந்துவரும் பொருளாதார நெருக்கடியை முகங்கொடுத்து வருகின்ற நிலையில், அது ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் ஆசியாவில் அமெரிக்க யுத்த உந்துதலுக்கு முக்கிய ஒரு நாடாக செயல்படுவதன் மூலமாக, கூர்மையடைந்துவரும் சமூக பதட்டங்களை திருப்பிட முனைந்து வருகிறது. அதே நேரத்தில், அது சிட்னி முற்றுகையை பாரிய பொலிஸ் நடவடிக்கைகளுக்கு ஒரு முன்னோட்டமாக நடத்தி உள்ளது, அது எதிர்காலத்தில் தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக திருப்பிவிடப்படும். |
|
|