தினசரி செய்திகள், ஆய்வுகள்
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
|
No to imperialist war! Join the 2015 International May Day Online Rally! ஏகாதிபத்திய போரை எதிர்ப்போம்! 2015 சர்வதேச மே தின இணையவழி கூட்டத்தில் இணையுங்கள்!
The International Committee of the Fourth International Use this version to print| Send feedback சர்வதேச தொழிலாள வர்க்க ஐக்கியத்தின் வரலாற்று தினமான மே தினத்தை குறிக்கும் வகையில், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு மே 3, ஞாயிறன்று, சர்வதேச இணையவழி கூட்டம் ஒன்றை நடத்த உள்ளது. இவ்வாண்டின் மே தினக்கூட்டம் ஆழ்ந்த நெருக்கடி நிலைமைகளுக்கு இடையே நடைபெறவுள்ளது. உலகின் பெரும் பகுதிகள் ஏற்கனவே போரால் சூழப்பட்டுள்ளன. இத்தகைய மோதல்கள் தொழிலாள வர்க்கத்தின் தலையீடு இல்லையென்றால், முன்பினும் கூடுதலாக வன்முறை மற்றும் இரத்தம்தோய்ந்தமுறையில் மனிதகுல நாகரீகத்தின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கும் அணுஆயுத சக்திகளுக்கு இடையிலான ஓர் உலகப் போருக்கு தடுக்கமுடியாதபடி இட்டுச் செல்லும். கிழக்கு ஐரோப்பாவில், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய சக்திகளால் கடந்த பெப்ரவரியில் முடுக்கிவிடப்பட்ட பாசிச தலைமையிலான உக்ரேனிய ஆட்சிக்கவிழ்ப்பு சதியைப் பின்தொடர்ந்து, அந்த ஒட்டுமொத்த பிராந்தியத்திலும் ஒரு பரந்த இராணுவமயமாக்கல் நடந்துள்ளது. ரஷ்ய எல்லையோரங்களில் நேட்டோ துருப்புகள் பெரிதும் ஆத்திரமூட்டும் இராணுவ ஒத்திகைகளில் ஈடுபட்டுள்ளன. நூற்றுக் கணக்கான அமெரிக்க ஆயுதமேந்திய வாகனங்களும், டாங்கிகள், ஹெலிகாப்டர்கள், போர்விமானங்களும் பால்டிக் நாடுகளில் உள்ள வலதுசாரி ரஷ்ய-விரோத அரசாங்கங்களுக்கு உதவியளிக்க நிலைநிறுத்தப்பட்டுள்ளன. மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசிய பிராந்தியத்தில், ஒரு போரிலிருந்து இன்னொரு போரை அமெரிக்கா முடுக்கி விட்டுள்ளது, அவை ஒவ்வொன்றும் குழப்பத்திலும் பேரழிவிலும் போய் முடிந்துள்ளன. கடந்த ஆண்டு, ஒபாமா நிர்வாகம் ஈராக் மற்றும் சிரியாவில் ஒரு புதிய போரைத் தொடங்கியது, அதனைப் பின்தொடர்ந்து ஏமனில், சவூதி அரேபியா மற்றும் எகிப்தின் பிற்போக்குத்தனமான ஆட்சிகளது தலைமையில் அமெரிக்க ஆதரவிலான குண்டுவீச்சு நடவடிக்கை நடந்துள்ளது. அதே நேரத்தில், சீனாவை சுற்றி வளைக்கும் மற்றும் கட்டுப்படுத்தும் நோக்கில் இராணுவ கூட்டணிகள் மற்றும் ஆயுத உடன்படிக்கைகளின் வலையமைப்பைக் கட்டமைத்து, அமெரிக்கா அதன் "ஆசியாவை நோக்கிய முன்னெடுப்பை" விரிவாக்கி, போருக்கான பாதையை தயாரித்து வருகிறது. வாஷிங்டன், ஆபிரிக்காவின் கிழக்கில் சோமாலியாவிற்கு எதிராக கென்யாவை ஆதரித்து வரும் அதேவேளையில், மேற்கில் சாட், நைஜர், நைஜீரியா, காமரூன் உள்ளடங்கிய பாரிய போர் பயிற்சிகளை ஒழுங்கமைத்து வருகிறது. சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதற்குப் பிந்தைய கால் நூற்றாண்டில், முடிவில்லாமல் தீவிரமடைந்து வந்திருக்கும் தொடர்ச்சியான உலகளாவிய மோதல்களுக்கு அமெரிக்க ஆளும் வர்க்கம் முன்னணியில் இருந்துள்ளது. அதன் "ஒரு துருவ சூழலை" (unipolar moment) பிரகடனப்படுத்திக் கொண்ட நிதியியல் பிரபுத்துவம், வன்முறை மற்றும் படையெடுப்பின் மூலமாக அமெரிக்க முதலாளித்துவத்தின் நீண்டகால வீழ்ச்சியை எதிர்கொள்ள முனைந்துள்ளது. உலக மேலாதிக்கத்திற்கான அதன் உந்துதலில், எந்தவொரு முக்கிய பிராந்திய போட்டியாளரும் சகித்துக் கொள்ள முடியாது என்பதை ஒரு கொள்கையாக அங்கீகரித்துக்கொண்டுள்ளது. “இருபத்தியோராம் நூற்றாண்டு போர்கள்" என்று ஜனாதிபதி புஷ் குறிப்பிட்டதில் முதலாவதாக இருந்த ஆப்கானிஸ்தான் படையெடுப்புக்காக செப்டம்பர் 11 சம்பவங்களை பற்றி கொண்டு, சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர், புஷ் நிர்வாகம் "பயங்கரவாதத்திற்கு எதிரான போரைத்" தொடங்கியது. “பயங்கரவாதத்திற்கு எதிரான போர்" என்ற பதாகையின் கீழ், உலகின் ஒவ்வொரு பாகத்தையும் அதன் நலன்களுக்கு அடிபணிய செய்ய அமெரிக்க ஆளும் மேற்தட்டு ஓர் உலகளாவிய நடவடிக்கையை தொடங்கியுள்ளது என்பது இப்போது தெளிவாகி உள்ளது. உலகை துண்டாடுவதை அமெரிக்கா முன்னெடுத்து செல்கின்ற அதேவேளையில், ஏனைய ஏகாதிபத்திய சக்திகளும் அந்த சூறையாடலில் அவற்றின் சொந்த பங்குகளைக் கோரி வருகின்றன. ஐரோப்பா மற்றும் அதற்கு அப்பாலும் மேலாதிக்க சக்தியாக மாறுவதற்கு ஜேர்மனிய ஆளும் வர்க்கம் மீண்டுமொருமுறை முனைந்து வருகின்ற நிலையில், அது இருபதாம் நூற்றாண்டின் உலக போர்களில் அதன் குற்றங்களை மூடிமறைக்க நகர்ந்து வருகிறது. அதே மாதிரியில் ஜப்பானும் இரண்டாம் உலக போருக்குப் பின்னர் நிறுவப்பட்ட இராணுவ ஆக்கிரமிப்புக்கு எதிரான அரசியலமைப்பு தடைகளை வேகமாக அகற்றி வருகிறது. எதிர்கால படையெடுப்பு உத்தேசங்களுக்காக, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் ஐரோப்பா எங்கிலும் உள்ளடங்கிய அனைத்து ஏகாதிபத்திய சக்திகளும், கடந்தகால போர்களில் அவை செய்திருந்த தலையீட்டிற்கு புத்துயிர்ப்பு அளிக்க ஒரு சந்தர்ப்பமாக, முதலாம் உலக போரின் நூற்றாண்டு நிறைவை வரவேற்றுள்ளன. சீனா தலைமையிலான ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியில் (Asian Infrastructure Investment Bank) இணைய மறுக்குமாறு அமெரிக்காவிடமிருந்து வந்த நேரடியான முறையீடுகளை நிராகரித்து கடந்த மாதம் பிரதான ஐரோப்பிய சக்திகள் எடுத்த முடிவு, அமெரிக்க ஏகாதிபத்திய நெருக்கடியில் ஒரு தீர்க்கமான திருப்புமுனையைக் குறித்தது. ஜேர்மன், பிரிட்டிஷ், பிரெஞ்சு மற்றும் இத்தாலிய ஏகாதிபத்தியம் அனைத்தும் ஒரு சுதந்திரமான போக்கை பெரியளவில் திட்டமிட்டு வருகின்றன. அவற்றிற்கு இடையே நடந்த இருபதாம் நூற்றாண்டின் இரண்டு உலக போர்கள், அண்ணளவாக 100 மில்லியன் மக்களை நிர்மூலமாக்கின. அப்போதே மார்க்சிஸ்டுகள் விவரித்ததைப் போல, அத்தகைய போர்கள் முதலாளித்துவ அமைப்புமுறையின் அடிப்படை முரண்பாடுகளான அதிகரித்துவரும் உலகளாவிய பொருளாதாரத்திற்கும் காலங்கடந்த தேசிய அரசு அமைப்புமுறைக்கும் இடையிலான மற்றும் சமூகமயப்பட்ட உற்பத்திக்கும் உற்பத்தி சாதனங்களின் தனிச்சொத்துடைமைக்கும் இடையிலான முரண்பாடுகளில் இருந்து எழுந்தன. 1917 ரஷ்ய புரட்சியில் லெனினுடன் இணை-தலைவராக இருந்த ட்ரொட்ஸ்கி, இரண்டாம் உலக போருக்கு முன்னரே எழுதிய நான்காம் அகிலத்தின் ஸ்தாபக ஆவணத்தில் விளங்கப்படுத்துகையில், உலக முதலாளித்துவம் மனிதகுலத்தை பேரழிவை நோக்கி இட்டுச் சென்று கொண்டிருப்பதாக விவரித்தார். “அதிகரித்துவரும் முதலாளித்துவ உடைவின் பதட்டங்களின் கீழ், தனித்தனியான மோதல்களும் இரத்தந்தோய்ந்த உள்நாட்டு கொந்தளிப்புகளும்… தவிர்க்கவியலாமல் ஓர் உலகப் பரிமாண மோதலாக ஒன்றாக இணையும் ஏகாதிபத்திய விரோதங்கள், உயர்ந்தளவில் ஒரு முட்டுச்சந்தை எட்டுகின்றன. முதலாளித்துவ வர்க்கமோ, நிச்சயமாக, ஒரு புதிய உலகப் போரால் எடுத்துக்காட்டப்படும் அதன் மரணகதியிலான மேலாதிக்க அபாயம் குறித்து நன்கறிந்துள்ளது. ஆனால் அந்த வர்க்கம் 1914 இற்கு முன்னிருந்ததை விட போரைத் தடுப்பதற்கான தகைமையை இப்போது அளவிடமுடியாதளவிற்கு குறைந்தளவிற்கே கொண்டுள்ளது. “ஒரு சோசலிச புரட்சி இல்லையென்றால், அடுத்த வரலாற்று காலகட்டத்தில், ஒட்டுமொத்த மனிதயின கலாச்சாரத்தையும் ஒரு பேரழிவு அச்சுறுத்துமென,” ட்ரொட்ஸ்கி எச்சரித்தார். எழுபத்தைந்து ஆண்டுகளுக்குப் பின்னர், உலக முதலாளித்துவத்தின் நிலை மார்க்சிச இயக்கத்தின் பகுப்பாய்வை முழுமையாக உறுதிப்படுத்துகிறது. 2008 இல் வெடித்த முதலாளித்துவ அமைப்புமுறையின் முறிவு, உலகை மறுபங்கீடு செய்வதற்கான ஏகாதிபத்திய சக்திகளின் சூறையாடும் உந்துதலையும், அத்துடன் தொழிலாள வர்க்கத்தின் மீதான அவற்றின் மூர்க்கமான தாக்குதலையும் பாரியளவில் தீவிரப்படுத்தி உள்ளது. பெருநிறுவன மற்றும் நிதியியல் மேற்தட்டு அதன் ஆட்சியை பேணுவதற்குரிய அதன் முயற்சியில், முன்பினும் கூடுதலாக நேரடியான ரீதியில் அது மிக அடிப்படை ஜனநாயக உரிமைகளையே கூட உதறிவிட்டு, உள்நாட்டில் படை மற்றும் வன்முறையின் மீது தங்கியுள்ளது. இத்தகைய குற்றத்தனம் மற்றும் மடத்தனத்தை முடிவுக்குக் கொண்டு வர தகைமை கொண்ட ஒரே சமூக சக்தி, சர்வதேச தொழிலாள வர்க்கம் மட்டுமே ஆகும். ஏகாதிபத்தியத்தை தோற்கடிக்கக் கூடியது, ரஷ்யாவில் உள்ள புட்டின் ஆட்சியின் பிற்போக்குத்தனமான தேசியவாதமோ, அணுஆயுத போர் முரசறைதலோ அல்லது சீனாவின் செல்வந்த மேற்தட்டின் உபாயங்களோ அல்ல, மாறாக புரட்சிகர அரசியல் போராட்டத்தில் பாரிய பெரும்பான்மையான மனிதயினம் ஒழுங்கமைக்கப்படுவதாலாகும். ஆனால் தீவிரமடைந்துவரும் ஒரு புதிய உலகளாவிய மோதலின் அபாயங்கள் இருக்கின்ற போதினும், எந்தவொரு முக்கிய போர்-எதிர்ப்பு போராட்டங்களோ அல்லது ஆர்ப்பாட்டங்களோ காணமுடியாதுள்ளது. இருப்பினும் வெறுமனே ஒரு தசாப்தத்திற்கு முன்னர், அமெரிக்காவில் நூறு ஆயிரக் கணக்கானவர்கள் உட்பட, உலகெங்கிலும் மில்லியன் கணக்கான மக்கள், நிகழவிருந்த ஈராக் படையெடுப்புக்கு எதிராக பாரியளவில் ஆர்ப்பாட்டங்களில் பங்கெடுத்தனர். இதற்கிடைப்பட்ட காலத்தில், தொழிலாள வர்க்கத்திற்குள் எந்தவொரு போர்-ஆதரவு உணர்வும் வளர்ந்திருக்கவில்லை. அதற்கு மாறாக, ஐக்கிய நாடுகள் சபை மற்றும் அதுபோன்ற அதிகாரங்களின் ஏனைய அடுக்குகளுக்கு எதிராக பயனற்ற போராட்டங்களின் அடித்தளத்தில் 2003 ஆர்ப்பாட்டங்களை ஒழுங்கமைத்த மத்திய தட்டு போலி-இடது அமைப்புகள், அதற்கு பின்னர் ஏகாதிபத்திய அமைப்புமுறைக்குள் தங்களைத்தாங்களே முற்றிலுமாக ஒருங்கிணைத்து கொண்டுள்ளன. கிரீஸில் அரசு அதிகாரத்தின் தலைமைக்கு சிரிசா மேலுயர்த்தப்பட்டுள்ள நிலையில், இத்தகைய சக்திகள் இப்போது தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான சிக்கன தாக்குதலைத் தீவிரப்படுத்துவதற்கு பயன்படுத்தப்படுகின்ற அதே அரசு இயங்குமுறைகளின் பாகமாக மாறியுள்ளன. ஆனால் ஏகாதிபத்திய போரை உருவாக்குகின்ற அதே அடிப்படை முரண்பாடுகள் சோசலிச புரட்சிக்கான புற நிலைமைகளையும் உருவாக்குகின்றன. சர்வதேச தொழிலாள வர்க்கம் ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் இருந்ததை விட இன்று அளப்பரிய சமூக சக்தியாக, கூடுதல் பலத்துடன் உள்ளது. இந்த சமூக சக்திக்கு அரசியல் தலைமை வழங்கப்பட்டு, ஒன்றுதிரட்டப்பட்டு, ஒழுங்கமைக்கப்பட்டாக வேண்டும். ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டம் என்பது சமூக சமத்துவமின்மை, வறுமை, பாரிய வேலைவாய்ப்பின்மை, பொலிஸ் வன்முறை மற்றும் சர்வாதிகாரத்திற்கு எதிரான போராட்டத்துடன் இணைக்கப்பட்டாக வேண்டும். தேசம், இனம் மற்றும் பிராந்தியமென அனைத்து எல்லைக்கோடுகளைக் கடந்து தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்துவதை நோக்கி இப்போது திரும்பியாக வேண்டும். ஒரு புரட்சிகர, சோசலிச மற்றும் சர்வதேச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தை சுயாதீனமாக அரசியல்ரீதியில் அணிதிரட்டுவது என்ற அதே அடிப்படை பிரச்சினை தான் ஒவ்வொரு நாட்டிலும் முன்நிற்கிறது. இந்த இயக்கத்தை முன்னெடுப்பதற்கு, ஓர் அரசியல் தலைமை கட்டமைக்கப்பட வேண்டியுள்ளது. இந்த காரணத்திற்காக தான் நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு 2015 சர்வதேச மே தின இணையவழி கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது. மே 3 அன்று எங்களுடன் இணையுங்கள்! ஏகாதிபத்திய போர் மற்றும் முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை ஒன்றுதிரட்ட போராடுவதில் பங்கெடுங்கள்! மேலதிக தகவல்களுக்கும் மற்றும் இணையவழி மே தின கூட்டத்தில் பதிவு செய்வதற்கும் இங்கே அணுகவும்: internationalmayday.org |
|
|