தினசரி செய்திகள், ஆய்வுகள்
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
|
Obama green lights weapons sales to Egypt, Pakistan எகிப்து, பாகிஸ்தானுக்கான ஆயுத விற்பனைக்கு ஒபாமா அனுமதி அளிக்கிறார்By
Thomas Gaist Use this version to print| Send feedback வெள்ளை மாளிகை மற்றும் பெண்டகனில் இருந்து வெளியான அறிக்கைகளின்படி, அமெரிக்க அரசாங்கம் இந்த வாரம் எகிப்து மற்றும் பாகிஸ்தானுக்கு அதிநவீன ஆயுத உபகரணங்களை விற்க உள்ளது. வெள்ளைமாளிகை செய்தியின்படி, எகிப்திற்கு சுமார் 60 மில்லியன் டாலர் மதிப்பிலான ஹெல்பயர் II ரக ஏவுகணைகளின் ஓர் ஆரம்ப பரிவர்த்தனையானது, ஒரு "பாதுகாப்பான மற்றும் நிலையான எகிப்தை" உறுதிசெய்யும் நோக்கத்துடன், எகிப்திய இராணுவ தளவாடங்களை "நவீனமயமாக்கும்" அமெரிக்காவின் புதிய முயற்சிகளது தொடக்கத்தை குறிக்கும். மட்டுப்படுத்தப்பட்ட விதத்தில் ஒருசில ஆயுத அமைப்புமுறைகளின் மீது, அக்டோபர் 2013 இல் அமெரிக்க நிர்வாகத்தால் கொண்டு வரப்பட்டிருந்த "கூடுதல் அதிகாரத்தின் கீழ் நிறுத்திவைப்பை" அவர் முடிவுக்குக் கொண்டு வருவதாக தகவல் வழங்க, ஒபாமா எகிப்திய இராணுவ ஆட்சியாளர் அப்தெல் பத்தாஹ் அல் சிசி உடன் மார்ச் 31 அன்று தொலைபேசியில் பேசினார். அமெரிக்க இராணுவ உதவியைப் பெறுவதில் உலகளவில் இரண்டாவது இடத்தில் உள்ள எகிப்திய ஆட்சிக்கு, ஆண்டுதோறும் இராணுவ உதவி பொதிகளாக 1.3 பில்லியன் டாலர் தொடர்ந்து வழங்குவதற்கு முயற்சிப்பதாகவும் தனிப்பட்டரீதியில் ஜெனரல் அல் சிசிக்கு ஒபாமா உறுதியளித்தார். வெள்ளை மாளிகையின் ஒரு செய்திக்குறிப்பின்படி, “வரவிருக்கும் வாரங்களில் மற்றும் மாதங்களில்" அவ்விரு நாடுகளும் "தொடர்பில் இருக்கும்" என்பதையும் அமெரிக்க ஜனாதிபதி உறுதிப்படுத்தினார். ஒபாமாவின் அறிக்கையைத் பின்தொடர்ந்து உடனடியாக, 20 ஹார்பூன் (Harpoon) ஏவுகணைகள், 125 M1A1 ஆப்ராம்ஸ் பிரதான போர் டாங்கிகளின் "மேம்படுத்தும் உட்பொருட்கள்", மற்றும் 12 F-16 போர்விமான ஜெட்கள் என நிலுவையிலிருக்கும் இவற்றின் விற்பனையை அமெரிக்கா முன்னெடுக்க நகர்ந்தது. புதனன்று ஒப்புதல் வழங்கப்பட்ட மற்றொரு ஆயுத உடன்பாடு, 350க்கும் மேலான அமெரிக்க தயாரிப்பு ஹெல்பயர் ஏவுகணைகளை எகிப்திற்கு அனுப்பும். வெள்ளை மாளிகையுடன் நெருக்கமான தொடர்பு கொண்டுள்ள வாஷிங்டன் சிந்தனை குழாம் புரூகிங்ஸ் பயிலகத்தின் மத்திய கிழக்கு கொள்கை இயக்குனர் தமாரா கோஃப்மேன் விட்டஸின் தகவல்படி, அந்த தடை நீக்கத்தோடு சேர்ந்து, அந்த இராணுவ சர்வாதிகாரத்திற்கு அமெரிக்கா "உயர்தர, அதிநவீன, விலையுயர்ந்த உபகரணங்களை" தடையின்றி அனுப்புவதையும் தொடரும். அமெரிக்க வெளியுறவுத்துறை மற்றும் அமெரிக்க பாதுகாப்புத்துறையால் ஒழுங்குபடுத்தப்பட்டுவரும் இந்த ஆயுத விற்பனைகள், ஏமனுக்கு எதிரான சமீபத்திய போரின் "நடைமுறை தேவைகளைப்" பூர்த்தி செய்ய வடிவமைக்கப்பட்டவை என்று Defense Newsக்கு அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார். எகிப்து, சவூதி அரேபியா, ஜோர்டான் மற்றும் வளைகுடா முடியாட்சிகளின் படைகளால், அமெரிக்காவின் ஆதரவோடு, மார்ச் 25 அன்று ஏமனுக்கு எதிராக "Decisive Storm” நடவடிக்கை தொடங்கப்பட்டது. “தற்போதைய நடைமுறை தேவைகளுடன் சேர்ந்து, கூட்டு படைகளுக்கு பாதுகாப்பு உதவிகளைத் துரிதப்படுத்துவதற்கு நாங்கள் அனைத்து முயற்சியும் மேற்கொண்டு வருகிறோம்,” என்று அந்த அதிகாரி தெரிவித்தார். “பாதுகாப்புத்துறை உடன் பங்காண்மையில் உள்ள, எமது வளைகுடா பங்காளிகளிடமிருந்து வரும் இராணுவ தகைமைகளுக்கான முறையீடுகள் மீது வெளியுறவுத்துறை உடனடியாக செயல்பட்டு வருகிறது,” என்பதையும் அவர் சேர்த்துக் கொண்டார். முன்னதாக 1960களின் போது ஏமனில் இராணுவ நடவடிக்கைகளை நடத்திய எகிப்து, ஏமன் கடலோரத்தில் குறைந்தபட்சம் நான்கு போர்கப்பல்களை நிறுத்தி உள்ளது. ஓர் அமெரிக்க வெளியுறவுத்துறை அறிக்கையின்படி, “வளைகுடா பிராந்தியத்தில் உள்ள சவூதி அரேபியா மற்றும் ஏனைய பங்காளிகளோடு வேகமாக, நீண்டகால பாதுகாப்பு உறவுகளின்" ஒரு நீட்சியே, எகிப்திற்கான சமீபத்திய ஆயுத விற்பனைகளாக உள்ளன. பெண்டகனின் இராணுவ பாதுகாப்பு கூட்டு-ஒத்துழைப்பு அமைப்பிடமிருந்து (DSCA) வந்த ஓர் அறிக்கையின்படி, “மத்திய கிழக்கில் அரசியல் ஸ்திரப்பாடு மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கான ஒரு முக்கிய சக்தியாக இருந்து வந்துள்ள மற்றும் இருக்கக்கூடிய ஒரு நேச நாட்டின் பாதுகாப்பை மேம்படுத்த உதவும் வகையில்,” எகிப்திற்கு கனரக ஆயுதங்களை அனுப்புவது, "அமெரிக்காவின் வெளியுறவுத்துறை கொள்கை மற்றும் தேசிய பாதுகாப்புக்கு" பங்களிப்பு அளிக்கும். அக்டோபர் 2013இல் ஆயுத விற்பனைகளை ஒபாமாவின் “கூடுதல் அதிகாரத்தின் கீழ் நிறுத்திவைத்தமை", அல் சிசி தலைமையிலான இராணுவ ஆட்சிக்கவிழ்ப்பு சதிக்கு சுமார் ஆறு மாதங்களுக்குப் பின்னர் வந்தது. மேலும் அது விரல்விட்டு எண்ணக்கூடிய ஆயுத தளவாடங்களுக்கு மட்டுமே பொருந்தியிருந்ததுடன், முக்கிய இராணுவ உதவிகள் தொடர்ந்து கொண்டிருந்தன. ஜூலை 2013 ஆட்சிக்கவிழ்ப்பு சதியை அடுத்து உடனடியாக, எந்தவொரு தடைகளையும் விதிக்க ஒபாமா நிர்வாகம் மறுத்திருந்ததுடன், அந்த ஆட்சி கைமாற்றம் குறித்து வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் ஜே கார்னே அப்போது அறிவிக்கையில், “எகிப்திற்கான எங்களின் உதவி திட்டங்களை உடனடியாக மாற்றுவது அமெரிக்காவின் நலன்களுக்கு சிறப்பாக அமையாது,” என்றார். அந்த "ஆயுத முடக்கத்தின்" போதே கூட, அமெரிக்கா, உதவிகளைப் பல்வேறு வடிவங்களில் இராணுவ ஆட்சிக்குழுவிற்கு தொடர்ந்து அனுப்பி வந்தது. அமெரிக்க அரசு புள்ளிவிபரங்களின்படி, 2014 இன் போது, அமெரிக்கா சுமார் 35 மில்லியன் டாலர் மதிப்பிலான தளவாடங்களை எகிப்திய ஆயுத படைப்பிரிவுகளுக்கும் மற்றும், சுமார் 45 மில்லியன் டாலர் மதிப்பிலான தளவாடங்களை எகிப்திய விமானப்படை பிரிவுகளுக்கும் வழங்கியது, அத்துடன் 70 மில்லியன் டாலருக்கு அண்மித்தளவில் மதிப்புடைய துல்லியமாக இலக்கைத் தாக்கும் ஏவுகணைகளையும் (guided missiles) வழங்கியது. அக்டோபர் 2014 இல், அமெரிக்கா, 170 மில்லியன் டாலருக்கும் அதிகமாக மதிப்புடைய துப்பாக்கி ஏந்திய 10 அப்பாச்சி ஹெலிகாப்டர்களின் ஒரு தொகுப்பையும் வழங்கியது. இந்த காலப்பகுதியின் போதுதான், அல் சிசி இன் அரசாங்கம் வரலாற்று படுகொலைகளை, பாரிய வழக்குகள் மற்றும் சுற்றிவளைப்புகளை முடுக்கிவிட்டது, அது நூற்றுக் கணக்கான அப்போதைய அரசியல் எதிராளிகளுக்கு எதிராக மரண தண்டனை விதித்ததுடன், ஆயிரக் கணக்கான அரசியல் கைதிகளை இராணுவ சிறைச்சாலைகள் மற்றும் சித்திரவதை முகாம்களின் ஓர் அமைப்புமுறைக்குள் அடைத்தது. அல் சிசி இன் இராணுவ ஆட்சிக்குழு அரசியல் எதிர்ப்புக்கு தடைவிதித்துள்ளதுடன், சுதந்திர ஊடகங்களை இழுத்து மூடியுள்ளது, மேலும் இதழாளர்களை துன்புறுத்தி பீதியூட்டி உள்ளது. Human Rights Watch சித்தரித்த, "முன்னாள் ஜனாதிபதி ஹோஸ்னி முபாரக் ஆட்சியின் இருண்ட காலங்களை திரும்ப நினைவுபடுத்தும் பாரிய கைதுகள் மற்றும் சித்திரவதைகளை" அது நடத்தி வருகிறது. ஆகஸ்ட் 2013 இல், ராபாவுக்கு அருகே ஓர் எதிர்ப்பு முகாமில் சுமார் 1,000 மக்களை எகிப்திய பாதுகாப்பு படைகள் படுகொலை செய்தன, அதில் சுமார் 4,000க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். சிசி அரசாங்கத்தினது கட்டளையின் கீழ், படைகள் "பாரபட்சமின்றி வேண்டுமென்றே படுகொலை படைகளது பிரயோகத்தை" நடத்தியது, அது "சமீபத்திய வரலாற்றில் உலகிலேயே ஒரே நாளில் ஆர்ப்பாட்டக்காரர்களின் மிகப்பெரிய படுகொலைகளில் ஒன்றுக்கு" இட்டுச் சென்றதாக Human Rights Watch குறிப்பிட்டது. குடிமக்கள் ஆட்சிக்குத் திரும்பிய பின்னரே முடிவுக்குக் கொண்டு வரப்படுமென வெள்ளை மாளிகையால் வலியுறுத்தப்பட்ட ஆயுத தடை, இப்போது ஒரு பகிரங்கமான இராணுவம் சர்வாதிகாரம் முன்பினும் உறுதியாக இடத்தில் அமர்ந்திருக்கையிலேயே நீக்கப்பட்டுள்ளது. இந்தவொரு முரண்பாட்டுக்கு விளக்கமளிப்பதற்கு கூட அமெரிக்க அதிகாரிகள் அக்கறை கொள்ள வில்லை. அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் எகிப்திய தேசிய முதலாளித்துவ மேற்தட்டின் கூட்டு நலன்களைச் செயலாக்குவதற்காக, "உலகளாவிய பயங்கரவாதத்திற்கு எதிரான போர்" என்ற மோசடியான பெயரில், வடக்கு ஆபிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு முழுவதிலும் இராணுவரீதியில் தலையீடு செய்யும் வகையில் எகிப்தின் தகைமைகளை விரிவாக்குவதற்கு, ஒபாமா வெள்ளை மாளிகை அல் சிசி மற்றும் அவரது அதிகாரிகளுடன் ஒத்துழைத்து வருகிறது. அமெரிக்க ஆயுதங்களுடன் புதிதாக ஆயுதமேந்தி உள்ள எகிப்திய இராணுவம் "ஒருங்கிணைந்த அரபு இராணுவப்படையின்" பாகமாக மத்திய கிழக்கு எங்கிலும் அதன் தலையீடுகளை விரிவுபடுத்துவதற்கு தயாரிப்பு செய்து வருகிறது. இது அரபு கூட்டு போர்விமானங்கள் ஏமன் மீது குண்டுவீச தொடங்குவதற்கு ஒரு நாள் முன்னதாக, மார்ச் 26 இல் அரபு லீக் மாநாட்டில், ஜெனரல் அல் சிசியினாலேயே முன்மொழியப்பட்டு, உத்தியோகபூர்வமாக ஒப்புதல் வழங்கப்பட்டது. 15 வைபர் தாக்குதல் ஹெலிகாப்டர்கள் மற்றும் 1,000 அதிநவீன ஹெல்பயர் II ஏவுகணைகள் மற்றும் அமெரிக்க அரசு பணியாளர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களிடமிருந்து ஐந்தாண்டுகளுக்கு கூடுதலான பராமரிப்பு, ஒத்துழைப்பு மற்றும் பயிற்சி ஆகியவை உட்பட பாகிஸ்தானுக்கு 950 மில்லியனுக்கு கூடுதலான இராணுவ உதவிகளையும் அமெரிக்கா இந்த வாரம் அறிவித்தது. பெண்டகனின் அறிக்கை ஒன்று திட்டவட்டமாக குறிப்பிடுகையில், வடக்கு வஜிரிஸ்தான் மற்றும் ஏனைய பழங்குடியினப் பகுதிகளில் உள்ள போராளிகள் குழுக்களை இலக்கில் வைக்கும் பாகிஸ்தானின் முயற்சிகளை இந்த தாக்குதல் ஹெலிகாப்டர்கள் அதிகரிக்குமென குறிப்பிட்டது. ஸ்டாக்ஹோம் சர்வதேச சமாதான ஆராய்ச்சி அமைப்பின் (SIPRI) ஒரு மார்ச் மாத அறிக்கையின்படி, 2005 மற்றும் 2014க்கு இடையே பெரியளவிலான அமெரிக்க ஆயுத ஏற்றுமதிகள் சுமார் 25 சதவீதம் அதிகரித்தன. ஒரு காங்கிரஸ் அறிக்கையின்படி, 2011 இல், அமெரிக்கா ஏறத்தாழ 67 பில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுதங்களை விற்றது. ஒபாமா நிர்வாகத்தின் முதல் ஐந்தாண்டுகளின் போது, பெண்டகன் சுமார் 170 பில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுதங்களை அன்னிய நாடுகளுக்கு விற்க ஒப்புதல் வழங்கியது, இது புஷ் நிர்வாகத்தின் ஒட்டுமொத்த எட்டு ஆண்டுகளில் விற்கப்பட்ட தொகையை விட மொத்தத்தில் 30 பில்லியன் டாலர் அதிகமாகும். |
|
|